Annamalai on inter caste love marriage

கம்யூனிஸ்டுகள் இப்படி அறிவிப்பு செய்யவும் பலர் கம்யூனிஸ்ட்களை மாமா என்றும் புரோக்கர் என்றும் திட்டித் தீர்ப்பதைப் பார்த்தேன். பலவிதமான கிண்டலான கமெண்ட்டுகள். ஆனால் கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்தது மிக முக்கியமான விஷயம். அதை அவர்கள் செய்கிறார்கள் செய்யவில்லை என்பதல்ல பிரச்சினை. கோட்பாட்டு ரீதியாக எந்தப் பக்கம் நிற்கிறார்கள் என்பது முக்கியமானது.

கம்யூனிஸ்டுகளின் அறிவிப்பை பார்த்ததும் என் மனதுக்குள் தோன்றியது, பாஜக இதைச் செய்ய வேண்டும் என்றுதான். கம்யூனிஸ்ட்கள் அறிவிப்பு செய்த பிறகு செய்தாலும் கூட பரவாயில்லை. கட்டாயம் இதை ஓர் அறிவிப்பாகச் செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

நேற்றே இதைப்பற்றி எழுத நினைத்தேன். ஆனால் பல பாஜக ஆதரவாளர்கள் கம்யூனிஸ்டுகளைக் கட்டம் கட்டித் திட்டிக் கொண்டிருக்க, அந்த நேரத்தில் எழுதினால் நான் அவர்களைச் சொல்வதாக நண்பர்கள் தவறாக நினைத்து விடக் கூடும் என்பதால் எழுதவில்லை.

இன்று பார்த்தால் இந்த அறிவிப்பு. இது உண்மையாகத்தான் இருக்கும் என்று நினைத்து இப்பதிவை எழுதுகிறேன். ஒருவேளை இந்தப் படத்தில் உள்ளது உண்மையல்ல என் நிலைபாடு இதுவே.

கம்யூனிஸ்ட் கட்சி அறிவித்திருப்பது வரவேற்கப்பட வேண்டியது. பாஜக இதை அறிவிப்பதோடு முன்னால் நின்று செய்ய வேண்டும். சட்ட ரீதியான உதவிகளையும் தர வேண்டும். உண்மையில் எந்த ஒரு கட்சியும் இதைச் சொல்வதைவிட ஹிந்துத்துவக் கட்சி என்று சொல்லிக் கொள்ளும் பாஜக இதைச் செய்வதும் அதன் ஆதரவாளர்கள் இதை வரவேற்பதும் முக்கியமான ஒன்று.

அப்டேட்: அண்ணாமலை சரியாக என்ன சொன்னாரோ அதை இணைத்து இருக்கிறேன். நான் முதலிலேயே சொன்னது போல, அண்ணாமலை சொல்லவில்லை என்றாலும் என் நிலைப்பாடு இதுதான்.

சிலர் அரசியல் கட்சிக்கு இதுவா வேலை, வேறு வேலை இருக்கிறது என்கிறார்கள். இப்படிச் சொல்வதே தவறு. அரசியல் கட்சி ஒரு வேலையை முடித்துவிட்டுத்தான் அடுத்த வேலைக்கு வர வேண்டும் என்றால் அது அரசியல் கட்சியாக இருக்கவே லாயக்கில்லை. ஓர் அரசியல் கட்சி எல்லா நேரங்களிலும் எல்லா விஷயங்களிலும் சரியான நிலைப்பாடுகளைக் கொண்டிருக்க வேண்டும். அதைச் செய்யாவிட்டால் அது அரசியலுக்குப் பொருந்தாது என்று பொருள்.

கல்யாணம் செய்த பிறகு பிரச்சினை என்றால் வாருங்கள் என்று அண்ணாமலை சொன்னதாகச் சொல்கிறார்கள். இதைச் சொல்ல அண்ணாமலை எதற்கு? வீட்டை எதிர்த்து ஓடிவருபவர்களுக்கு முடிந்தால் உதவ வேண்டும். பெற்றோர்களை அழைத்துச் சொல்வது என்ன நியாயம்?

ஆனால் அண்ணாமலை சொன்னது அது அல்ல.

அண்ணாமலை தெளிவாகவே சொல்கிறார். நாம் அதை நாம் விருப்பம் போல் புரிந்து கொள்கிறோம். அண்ணாமலை சொன்னது கம்யூனிஸ்ட் கட்சி என்ன சொன்னதோ அது சரி என்பதையும் அதை பாராட்டும் விதமாகவும்தான். மேலும் அதை பாஜக பலகாலமாக செய்கிறது என்பதையும்தான். அடுத்து, கூடுதலாகப் பெற்றோர்களிடமும் இன்ஸ்பெக்டரிடமும் சொல்கிறோம் என்று சொல்கிறார். ஆனால் அதையே முழு முடிவாக அவர் சொல்லவில்லை.

அண்ணாமலை பேசியதின் வீடியோ. Thanks: Thanthi tv

Share

Vedaa Hindi Movie

வேதா (H) – தலித் கொடுமைகளுக்கு எதிரான ஒரு ஹீரோயிஸத் திரைப்படம். இந்த வரிக்குள்தான் ஒரு படமாக இந்தப் படத்தின் தோல்வியும் அமைகிறது. தலித் திரைப்படங்களுக்கே உரிய யதார்த்தம் படம் நெடுக மனதை உலுக்கும் வகையில் இருக்கிறது. ஆனால் அதை முறியடிக்கும் விதமோ, கொஞ்சம் கூட யதார்த்தமே இல்லாத ஹீரோயிஸ பாணியில் அமைகிறது.

Spoilers alert.

ஜான் ஆப்ரஹாம் சுடுகிறார் சுடுகிறார் சுட்டுக்கொண்டே இருக்கிறார். யாராக இருந்தாலும் அடித்துப் போட்டு துவம்சம் செய்கிறார். இவர் இதையெல்லாம் செய்யக் கூடியவர்தான் என்று பார்வையாளர்களை நம்ப வைப்பதற்காக, பக்காவாக முதல் காட்சியை வைத்திருக்கிறார்கள். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தனியாளாகச் சென்று, இந்திய ராணுவ உதவியுடன், பயங்கரவாதிகளைப் போட்டுத் தள்ளுகிறார். எனவே இவர் என்ன வேண்டுமானாலும் செய்யக் கூடியவர்தாம் என்று வலுக்கட்டாயமாக நம்மை நம்பச் சொல்கிறார்கள்.

தலித் பெண் பாக்ஸிங் கற்றுக் கொள்ள நினைப்பதை, எப்படி உயர்ஜாதிக்காரர்கள் எதிரிக்கிறார்கள், எப்படி அந்தப் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கும் ஜாதிய வன்கொடுமைக்கும் ஆளாக்கப்படுகிறார்கள் என்பதுதான் மையக் கதை.

ராஜஸ்தானில் நடக்கும் கதை. ராஜஸ்தானின் கிராமங்களையும் அங்கே நடக்கும் அநியாயங்களை ஒளிப்பதிவு அத்தனை அட்டமாசமாக நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்துகிறது. இவையே படத்தின் பலம்.

ஜான் ஆப்ரஹாம் மொத்தமாக ஒரு பக்கம் வசனம் பேசினால் அதிகம். வழக்கம்போல பார்க்கிறார். சிரித்தால் விருது நிச்சயம் என்பது போலவே இருக்கிறார். தாலி கட்டும்போது மறந்து போய் சிரிக்கிறார்.

படத்தின் சுவாரஸ்யம் என்ன? படம் முடிந்த பின்பு சில சுவாரஸ்யங்கள் இருக்கின்றன. இறுதிக் காட்சியில், இந்தக் கதை உண்மைக் கதைகளை மையமாக வைத்து எடுத்தது என்று சில சிலைடுகளைக் காட்டுகிறார்கள்.

நம் ஊரில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக ஜாதிய வன்கொடுமை ஏதேனும் நடக்காவிட்டால்தான் நாம் ஆச்சரியப்படவேண்டும். எனவே ஆதாரம் இல்லாமல் இருக்க வாய்ப்பே இல்லை. இருந்தாலும், இந்த ஆதாரங்களை ஆராய்ந்தேன். அங்கேதான் சில சுவாரஸ்யங்கள் கிடைத்தன.

இந்தப் படம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிராக நடக்கும் கட்டப் பஞ்சாயத்துகளுக்கு எதிரான படம். இதற்காக உண்மை நிகழ்வுகளைத் தங்களுக்கு வசதியாக, ஒரு திரைப்படத்துக்காக வளைத்துக் கொண்டிருக்கிறார்கள். தவறில்லை. ஆனால் உண்மை நிகழ்வுகளைப் பற்றியும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

2015ல் மீனாக்‌ஷி குமாரி மற்றும் அவரது தங்கை இருவரையும் அந்த ஊர்ப் பஞ்சாயத்து பாலியல் பலாத்காரம் செய்ய உத்தரவிட்டதாகச் சொல்லப்படுகிறது. ஏன் சொல்லப்படுகிறது என்று சொல்கிறேன் என்றால், வழக்கில் இதற்கான ஆதாரம் தரப்படவில்லை. பெண்கள் சொன்ன வாக்குமூலத்தை வைத்தே வழக்கு பதியப்படுகிறது. காரணம் என்ன?

2011ல் இந்த இரு பெண்களின் சகோதரன், உயர்ஜாதிப் பெண், அதுவும் திருமணமான பெண்ணுடன் ஓடிப் போகிறான். இதன் காரணமாகவே இப்படி ஒரு தீர்ப்பு. இதை எதிர்த்து வழக்கு 2015ல் பதியப்படுகிறது.

இந்தியாவை மட்டுமல்ல, உலகம் முழுவதும் இந்த வழக்கு, அதாவது இரு பெண்களுக்கு எதிராகச் சொல்லப்பட்ட ஊர்ப் பஞ்சாயத்தின் தீர்ப்பு பேசப்பட்டதாக கூகிள் சொல்கிறது. காரணம், ஆம்னெஸ்டி அமைப்பு இந்த வழக்கைக் கையில் எடுக்கிறது. உத்தரப்பிரதேசத்தில் இருக்கும் சகோதரிகளைப் பாதுகாக்கச் சொல்லி இந்தியாவுக்குச் சொல்லுங்கள் என்ற பிரசாரம் உலகம் முழுக்க வலுக்கிறது. வழக்கம் போல சி என் என், பிபிசி எல்லாம் களத்தில் குதிக்கின்றன.

திரைப்படத்தில், இரு பெண்களின் சகோதரன், திருமணமாகாத ஒரு பெண்ணைக் காதலித்து ஓடிப் போவதாகக் காட்டுகிறார்கள். திருமணமான பெண்ணுடன் ஓடிப் போவதாகக் காட்டி இருந்தால், ஒட்டுமொத்த படத்தின் ஆதாரமும் சிதைந்து போயிருக்கும். இப்படிச் சொல்வதால், பஞ்சாயத்து சொன்னது சரி என்பதல்ல. உண்மையில் பஞ்சாயத்துக்கு இப்படி எல்லாம் தீர்ப்புச் சொல்ல அதிகாரம் இருந்தது என்பதே அசிங்கம்.

சின்ன கவுண்டர் திரைப்படத்தில் இந்தப் பஞ்சாயத்து முறையை எப்படி ரொமாண்டிசைஸ் செய்தோம் என்று நினைத்துப் பார்க்கிறேன். இதில் ஒரு நீதிபதியை கார் ஓட்டுநர் கேள்வி கேட்டு அசிங்கம் வேறு செய்வார். திரைப்படம் என்பது எதை நாம் காட்டுகிறோம் என்பதுதான்!

இந்தப் படத்தில் சுட்டிக் காட்டப்படும் இன்னொரு வழக்கு, 2007 மனோஜ் பாப்லி வழக்கு. இருவரும் காதலித்து ஓடிப் போய் கல்யாணம் செய்கிறார்கள். இருவரும் ஒரே ஜாதி. ஜாட். ஆனால் இவர்களது கல்யாணம் செல்லாது என்று ஊர்ப் பஞ்சாயத்து அறிவிக்கிறது. பெண்ணின் உறவினர்கள் போலிஸ் உதவியுடன் பெண்ணையும் பையனையும் தூக்குகிறார்கள். இருவரையும் சித்திரவதை செய்து, கொன்று, குட்டையில் வீசுகிறார்கள்.

பெண்ணின் குடும்பத்தினர் ஐந்து பேருக்கும் தூக்குத் தண்டனை விதிக்கிறது விசாரணை நீதிமன்றம். பஞ்சாயத்துத் தலைவருக்கு ஆயுள் தண்டனை. போலிஸுக்கு 7 வருடம் சிறை. ஆனால் உச்ச நீதி மன்றம் வரை சென்று போராடி, 2018ல் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்படுகிறது.

இந்த இரண்டு வழக்குகளும் ஊர்ப் பஞ்சாயத்து முறைகளைக் கடுமையாகக் கேள்விக்கு உட்படுத்துகின்றன. இதை அடிப்படையாக வைத்துத் திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஜாதியில் திருமணம். பெண் வீட்டார் ஏன் கொலை வரை சென்றார்கள்? இருவரும் ஒரே கோத்திரம். ஒரே கோத்திரத்தில் திருமணம் செய்யக்கூடாது என்பதால் கொலைக்கு உத்தரவிட்டிருக்கிறது ஊர்ப் பஞ்சாயத்து! இதை பையன் வீட்டார் எதிர்க்க, அவர்கள் மீதும் கடும் கோபத்தில் இருந்திருக்கிறது பஞ்சாயத்து.

இப்படி ஒரே கோத்திரத்தில் கல்யாணம் செய்துகொண்டவர்களுக்காக ஹீரோ போராடினால் யார் பார்ப்பார்கள்? எனவே திரைப்படத்தில் தங்களுக்குத் தேவையானதை மட்டும் எடுத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தில் மூன்றாவதாகக் காட்டப்பட்ட வழக்கு விவரம் நடந்தது தமிழ்நாட்டில்.

2011ல் ஆறுமுகம் சேர்வை வழக்குத் தீர்ப்பு. 1999ல் மதுரையில் ஜல்லிக்கட்டு சமயத்தில் தாழ்த்தப்பட்டவர்களை அவர்களது சாதியைச் சொல்லித் திட்டப்பட்ட வழக்கு. 500 ரூபாய் அபராதம், ஆறு மாதக் கடுங்காவல் தண்டனை தீர்ப்பு.

மேலே சொன்ன மூன்று வழக்கையும் வைத்துக்கொண்டு திரைக்கதை அமைத்திருக்கிறார்கள்.

கதாநாயகி நீதிமன்றத்தை நம்பி ஓடுகிறாள். நீதிமன்றமே தாக்கப்படுகிறது. ஜாதியின் கைகளுக்குப் பயந்து நீதிபதிகள் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஓடுகிறார்கள். ஆனாலும் நீதி கேட்டு நிற்கிறாள் கதாநாயகி.

இந்தத் திரைப்படத்தில் ஹீரோவின் பெயர் அபிமன்யு. கடைசியில் ஜாதியவாதிகளின் வியூகத்தில் சிக்கித் தோற்கவேண்டும். ஆனால் அவன் யதா யதா ஹித்தர்மஸ்ய என்று சொல்லி, திரௌபதி வெல்லாமல் விடமாட்டாள் என்று நம்பிக்கையோடு கூறி, வில்லனைக் கொல்கிறான்.

நல்ல படமாக வந்திருக்கவேண்டியது, ரஜினி பாணி ஹீரோயிஸக் காட்சிகளால் கீழிறங்குகிறது. ஆனாலும் பார்க்கலாம்.

Share

Tehran Hindi Movie

Tehran (H) – ஜான் ஆபிரஹாமுக்கு எப்போதுமே ஒரு துரதிர்ஷ்டம் உண்டு. அவரது திரைப்படங்களுக்கு நிச்சயம் ஒரு மினிமம் கேரண்டி இருந்தாலும், ஏனோ அவை அதைத் தாண்டி மிகப் பெரிய வெற்றியைப் பெறாமல் போகும். அவரது திரைப்படங்கள் பெரும்பாலும், நம்ம ஊர் அர்ஜூன் / விஜய்காந்த்தின் திரைப்படங்கள் போல, நம் நாட்டுப் பற்றை ஒட்டியதாகவே இருக்கும். ஆனால் தரம், இவர்களின் படம் போல சப்பையாக இருக்காது. நிச்சயம் நன்றாகவே இருக்கும்.

டெஹ்ரான் அதற்குச் சிகரம் வைத்தது போல வெளியாகி இருக்கிறது. மேக்கிங்கைப் பொருத்தவரை இது ஹிந்திப் படம் என்ற பெயரில் வந்திருக்கும் ஆங்கிலப் படம்.

கதையெல்லாம் அதே நாட்டுப் பற்றுதான். ஆனால் அதை இந்தியாவில் நடந்த ஓர் பயங்கரவாத் தாக்குதல் முயற்சியுடன் முடிச்சுப் போட்டதிலும், அதை ஒட்டி அந்தக் கால அரசியலை மறைமுகமாக, உள்ளுறையாக விமர்சித்துக் காட்டியதிலும்தான் கவர்கிறது.

2012 வாக்கில் உலகின் மூன்று பகுதிகளில் ஒரே நாளில் இஸ்ரேலிய உயரதிகாரிகள் குறிவைக்கப்படுகிறார்கள். ஜார்ஜியா, தாய்லாந்து, மூன்றாவதாக இந்தியா. அதில் சம்பந்தமே இல்லாமல் பூ விற்கும் சிறுமி அநியாயமாகக் கொல்லப்பட, ஜான் அப்ரஹாம் இதற்குப் பின் உள்ள பின்னலைக் கண்டறிய முற்படுகிறார். இது சர்வதேசச் சதி என்று தெரிந்துகொண்டு, அதை முறியடிக்கக் கிளம்புகிறார்.

ஆனால் அவர் இந்தியாவால் கை விடப் படுகிறார். ஏன்? எண்ணெய் மற்றும் ஊழல் அரசியல். இஸ்ரேலால் புறந்தள்ளப்படுகிறார். ஈரானால் குறி வைக்கப்படுகிறார்.

இவற்றை எல்லாம் சமாளித்து எப்படி ஒட்டுமொத்த கும்பலையும் கண்டறிந்து சர்வர்தேச வலைப் பின்னலை முறியடிக்கிறார் என்பது மீதிக்கதை.

தொடக்கத்தில் வரும் சேஸிங் காட்சிகள் கொஞ்சம் சலிப்பைத் தந்தாலும், இந்திய அரசு ஆபரேஷனைக் கைவிடச் சொல்லியும் தன் திட்டப்படி ஜான் ஆப்ரஹாம் ஈரான் செல்ல முடிவெடுக்கும் காட்சியில் இருந்து இறுதி வரை படம் விறுவிறுப்பு குறையாமல் செல்கிறது. அபுதாபி மற்றும் ஈரான் காட்சிகள் கலக்குகின்றன.

வில்லனாக வரும் நடிகர் கலக்கிவிட்டார்.

மொத்தத்தில் தரமான படம். உண்மைச் சம்பவத்தில் எப்படிக் கற்பனையைக் கலந்து சிறப்பாக எடுக்கலாம் என்று பாடம் சொல்லும் இன்னுமொரு திரைப்படம்.

நேரமும் பொறுமையும் இருப்பவர்கள் நிச்சயம் பார்க்கலாம். ஸீ 5ல் கிடைக்கிறது.

Share

Paranthu Po Review

பறந்து போ

ஒருவகையில் முக்கியமான படம். எந்த வகையில் என்றால், ஒரு குழந்தையை எப்படி வளர்த்து நாசமாக்கக் கூடாது என்பதை இந்தப் படத்தின் தொடக்க நொடி முதல் இறுதி வரை பார்க்கலாம்.

புதிய வாழ்வில் முறைகள் நம் மரபான வாழ்வியல் முறைகளை மொத்தமாக நசுக்கி, இப்படித்தான் பிள்ளைகளை வளர்க்க வேண்டும் என்று மேலை நாட்டுச் சட்டத்தின் வழியாக நம்மைப் பார்க்கச் சொல்லும். அதை மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் ஒரு திரைப்படம் இது.

குழந்தைகளின் மீதான வன்முறை, வீட்டில் பள்ளியில் குழந்தைகளை அடிப்பது போன்றவை எல்லாம் சரி என்று யாரும் வாதாடவில்லை. அது நம் மரபில் அதீதமாக இருந்தது என்பதும் உண்மைதான். அது இப்போது குறைந்து இருக்கிறது. இன்னும் குறைய வேண்டும்.

அதே சமயம் குழந்தைகள் சொல்வதை எல்லாம் கேட்டுத் தலையாட்டிக்கொண்டு செல்லம் கொடுத்து அவர்களைக் கொஞ்சம் கூட கண்டிக்காமல் வளர்ப்பது, அந்தச் சிறுவர்களைக் கேடு கெட்டவர்களாகத்தான் மாற்றி வைக்கும். நாளையே அந்தப் பையன்/பெண் வளர்ந்த பிறகு, என்னைக் கண்டித்திருந்தால் நான் இப்படி நாசமாகப் போய் இருக்க மாட்டேன் என்று ஒரு பெற்றோரைப் பார்த்து சொல்லாமல் இருக்க மாட்டான். இருக்க மாட்டாள்.

பொதுவாக, இப்படிக் குழந்தைகளை கண்டிக்கவே கூடாது என்று நினைப்பவர்கள், குழந்தைகளைக் கூட போங்க வாங்க என்று சொல்ல வேண்டும் என்று செயற்கையான ஒன்றைத் திணிப்பார்கள். அதை மட்டும் ஏனோ ராம் மறந்து விட்டார் போல. இப்படிக் குழந்தைகளை போங்க வாங்க என்று அழைப்பவர்கள் தங்கள் தொழில் நிறுவனங்களில் மற்றவர்களை எப்படி அழைப்பார்கள் என்பது தனிக்கதை.

ராம் இத்தனை தட்டையாக சிந்திப்பார் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். 9/11 பயங்கவாதத் தாக்குதலுக்கு அமெரிக்காவே காரணம், அதற்குக் காரணம் அந்த டவர்களின் கீழே இருக்கும் கோடி கோடியான தங்கம் என்றெல்லாம் அவர் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தது நினைவிருக்கிறது.. இப்பேற்பட்டவர்களின் சிந்தனைகளில் இவ்வளவுதான் வரும்.

இந்தத் திரைப்படமும் அப்படித்தான் வந்திருக்கிறது. இக்கரைக்கு அக்கரை பச்சை என்பதைப் பிள்ளைகளிடம் புரிய வைக்க வேண்டும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசைப்படாதே என்பதையும் புரிய வைக்க வேண்டும். எப்போது கண்டிக்க வேண்டுமோ அப்போது கண்டிக்க வேண்டும். எப்போது செல்லம் கொடுக்க வேண்டுமோ அப்போது செல்லம் கொடுக்க வேண்டும். கஷ்டத்தைச் சொல்லிக் கொடுத்து வளர்க்க வேண்டும். எல்லாவற்றிலும் ஒரு சமநிலை முக்கியம். அந்தச் சமநிலையைப் பற்றிய பிரக்ஞை கொஞ்சம் கூட இல்லாமல், அதை ஒட்டுமொத்தமாகப் புறக்கணித்துவிட்டு இந்தப் படம் கிறுக்குத்தனமாக எடுக்கப்பட்டிருக்கிறது.

உண்மையில் நல்ல குழந்தைகளை வளர்க்க விரும்புவர்கள் இந்தப் படத்தை உங்கள் குழந்தைக்குக் காண்பிக்கவே காண்பிக்காதீர்கள்.

அப்படியானால் இந்தப் படம் யாருக்கானது? அதீதப் பணம், இரவு நைட் கிளப், தினம் தினம் பீஸா பர்கர் என வாழ்பவர்களுக்கானது. இவர்கள் தங்கள் குழந்தைகளை எப்படி வளர்க்க வேண்டும் என்று நினைப்பார்களோ அந்த மேலை நாட்டுச் சிந்தனையை, இலைட் வளர்ப்பை அப்படியே காட்சிப்படுத்தி இருக்கும் ஒரு திரைப்படம் இது. இயக்குநர் அதை ஒரு மிடில் கிளாஸ் வழியாகச் சொன்னதுதான் அராஜகம்.

இதில் மதம் மாறிக் கல்யாணம் செய்து கொண்டவர்கள் என்ற எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் வேறு. கிறித்துவப் பெண் தனது சகோதரி கிறித்துவப் பெண்ணைச் சாபமிட்டுப் போகிறார். அந்தக் காட்சி ஓரளவு நேர்மையாக எடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஹீரோயின் ஹீரோவை அன்பாகச் சாத்தான் என்று அழைப்பது நெருடவே செய்கிறது. அவர்களுக்குள் இருக்கும் அன்னோன்யத்தில் அப்படி அழைப்பது தவறில்லை என்பதை ஏற்றுக் கொள்கிறேன். ஆனால் அவன் பதிலுக்கு  அந்தப் பெண்ணை பிணத்தைக் கும்பிடுறவங்க என்றெல்லாம் ஒரு வார்த்தை கூட அழைப்பதில்லை. ஸூடோ இயக்குநருக்கு அப்படித் தோன்றாது.

திரைப்படமாகவும் ஒரே போன்ற காட்சிகள் மீண்டும் மீண்டும் வந்து எரிச்சலை ஏற்படுத்துகின்றன. அதீதமாகச் சொல்லப்படும் எதுவும் எரிச்சலைத்தான் தரும். அதிலும் கடைசிக் காட்சிகள் போதும்டா உங்க படம் என்று சொல்ல வைத்து விடுகிறது. அதேசமயம் சில காட்சிகள் மனம் விட்டுச் சிரிக்க வைக்கின்றன என்பதும் உண்மைதான். குறிப்பாக, மிர்ச்சி சிவா மரத்தின் மேல் படுத்திருக்கும் காட்சி.

இந்தப் படத்தின் ஆச்சரியம் என்ன? மிர்ச்சி சிவாவுக்கு இத்தனை இயல்பாக சீரியஸாகவும் நடிக்க வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அசத்தி விட்டார். அதைவிட அ ந்த மலையாளப் பெண் ஹீரோயின் படம் நெடுக அப்படி ஒரு நடிப்பு. மற்ற அனைத்து நடிகர்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். நடிகர்களுக்காகப் பார்க்கலாம். அப்போது கூட குழந்தைகளுடன் பார்க்காதீர்கள்.

நான் இப்படிச் சொல்வதற்கு முக்கியமான காரணம் இருக்கிறது. நாம் இளம் வயதில் திரைப்படங்களில் காதல் காட்சிகளைப் பார்க்கும்போது ஒரு எண்ணம் தோன்றும். நாம் இப்படி ரொமான்ஸாக ஒரு பெண்ணிடம் பேசினால் எப்படி இருக்கும் என்று. லஞ்சம் வாங்கும் ஒருவனைக் கதாநாயகன் போலீசில் பிடித்துக் கொடுக்கும் போது நமக்கு ரத்தம் முறுக்கேறும். ஆனால் எதார்த்தத்தில் அது அத்தனை எளிதல்ல என்பது நமக்குத் தெரியும். சிறு குழந்தைகளுக்குப் பிற குழந்தைகளுடன் ஒப்பிட்டுச் சிந்திக்கும் எண்ணம் மிக எளிதில் தொற்றிக் கொள்ளும். அதை இந்தப் படம் ஆயிரம் மடங்கு தூண்டிவிடுகிறது. அதற்காகத்தான் சொல்கிறேன், உங்கள் குழந்தைகளைப் பத்திரமாகப் பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

***

வடிவேலிடம் ஒரு பைத்தியம் கேட்குமே, இசைனா என்னனு தெரியுமா என்று. அதற்கு இணையாக ராம் இரட்டைக் கோபுரம் தாக்குதல் பற்றிப் பேசும் வீடியோவைக் கண்டு களியுங்கள்.

Share

Theatres of Tirunelveli in 1990s

தாமிரபரணி பாயும் – ஓடும் அல்ல – நிஜமாகவே பாயும் சேரன்மகாதேவிக்கு அருகில் உள்ள சின்ன கிராமம் கூனியூர். ‘கூனியூருக்குப் போகணும்னா குனிஞ்சிக்கிட்டே போகணுமா’ என்னும் பழமொழியில் இந்த ஊரின் பேரை நீங்கள் கேட்டிருக்கலாம். எப்படியும் பல இடங்களில் இந்தப் பெயரில் ஊர்கள் நிச்சயம் இருக்கும். இது சேரன்மாதேவியின் கூனியூர்.

சேர்மாதேவியில் இருந்து பொடிநடையாக நடந்தால் அரைமணி நேரத்தில் கூனியூருக்குப் போய்விடலாம். அப்படித்தான் நடப்போம். ஓரளவுக்குப் பெரிய கிராமமான சேரன்மாதேவிக்கு இல்லாத ஒரு பெருமை கூனியூருக்கு வந்துவிட்டிருந்தது. டூரிங் டாக்கீஸ்.

அந்த தியேட்டரின் பெயர் கூட நினைவில்லை. மாலை ஆறு மணி ஆகிவிட்டால் கூட்டம் கூட்டமாக ஜனங்கள் அந்தச் சாலையில் நடக்கும். ‘விநாயகனே வினை தீர்ப்பவனே’ பாடல் கேட்டுவிட்டால், அத்தனை கூட்டமும், ஆரம்பிச்சிட்டான் அரம்பிச்சிட்டான் என்று வெரசலாக நடக்கத் தொடங்கும். ஆம், ‘டிக்கெட் கொடுக்கப் போகிறோம்’ என்பதற்கான சமிக்ஞையே அந்தப் பாடல்.
கூனியூரில் மூன்று நாளைக்கு ஒரு படம் மாற்றிவிடுவான். ஒரு வாரம் ஒரு படம் ஓடிவிட்டால் அது வெள்ளிவிழா திரைப்படம். சிவாஜி, எம்ஜியாரெல்லாம் வரிசையாக வந்து கல்லா கட்டுவார்கள். புதிய கலர்ப் படம் வந்துவிட்டால் சேர்மாதேவி, கூனியூர், வீரவநல்லூர் என எல்லா ஊர்களும் வண்ணம் கொண்டு விடும். திரைப்படம் ஓர் அனுபவம் என்றால், திரைப்படத்துக்குப் போய்விட்டு வருவதே ஓர் அனுபவம்.

அனைவரும் ஒரே சாலையில் ஒன்றாக நடந்துவந்தாலும், காதில் ‘விநாயகன்’ விழுந்தவுடன், யாருக்கு டிக்கெட் கிடைக்குமோ கிடைக்காதோ என்பதில் ஒரு வேகம் இருக்கும். மண் தரை ஏழைகளுக்கு. உடைந்து போன மர பெஞ்சு பணக்காரர்களுக்கு. டிக்கெட் வித்தியாசம் ஐம்பது பைசா இருக்கும்.

இடைவேளை ஒரு தடவைதான் என்றாலும், கார்பன் தேய்ந்துவிட்டால், கூடுதலாக இரண்டு இடைவேளைகள் வரும். அந்த சிறிய இடைவேளைகளில், கண்ணாடி போட்டிருக்கும் டின் டப்பாக்களில் வைத்து முறுக்கு விற்பார்கள். சோள மாவு முறுக்கின் மணம் இப்போதும் உங்கள் நாக்கில் எட்டிப் பார்த்தால், நீங்களும் ஏதோ ஒரு கிராமத்தில் படம் பார்த்திருப்பீர்கள் என்றே அர்த்தம்.

அந்த டூரிங் தியேட்டருக்கு லைசன்ஸ் மூன்று வருடங்கள்தான் என்ற செய்தி ஊரெங்கும் நெருப்புப் போல பரவியது. எப்படியோ இன்னொரு மூன்று வருடங்களுக்கு லைசன்ஸ் வாங்கிவிட்டார் அதன் உரிமையாளர்.

வாரத்துக்கு இரண்டு படங்கள் எனப் பார்த்துக் குவித்த படங்களின் எண்ணிக்கையைச் சொல்ல முடியாது. வேறு பொழுது போக்குகளே இல்லாத நிலையில், ஊரில் இருந்த ஒரே டூரிங் தியேட்டர் மட்டுமே மன அமைதி பெற ஒரே வழி.
டூரிங் தியேட்டர் என்பதால் மாலைக் காட்சியும் இரவுக் காட்சியும் மட்டுமே. மாலைக் காட்சி, இரவு கவியும்போதுதான் தொடங்கும். மூன்று இடைவேளைகள் விட்டு இரவு பத்து மணிக்குத்தான் முடியும். ஆதிபராசக்தி படத்திற்கும், சம்பூர்ண ராமாயணம் படத்திற்கும் கூடுதலாக ஒரு இடைவேளை என்று ஊரெல்லாம் சந்தோஷமாகப் பேசிக்கொண்டோம்.

இந்த டூரிங் தியேட்டர் வருவதற்கு முன்பு சேரன்மகாதேவிக்கார்களுக்கு வீரவநல்லூரே கதி. இல்லையென்றால் திருநெல்வேலிக்குப் போகவேண்டும். அது செலவு பிடிக்கும் வேலை. ஆனாலும் இதையே ஒரு திருவிழாக மாற்றிவிடுவோம். அதிகாலை எழுந்து குளித்து காலை சிற்றுண்டி சாப்பிட்டுவிட்டு மதியச் சாப்பாட்டையும் கட்டிக்கொண்டு காலைக் காட்சிக்கு திருநெல்வேலிக்குப் போய்விடுவோம். பாப்புலர், ராயல், ரத்னா, பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி அத்தனை தியேட்டர்களும் இரண்டு கிலோமீட்டர்களுக்கு உள்ளாகத்தான். காலைக்காட்சி பார்த்துவிட்டு, அடுத்த தியேட்டருக்கு நடந்தே போய், அவன் டிக்கட் கொடுப்பதற்குள் அந்த தியேட்டரிலேயே ஓர் ஓரமாக உட்கார்ந்துகொண்டு நாம் கொண்டு போன சாப்பாட்டைச் சாப்பிட்டுவிட்டு, படம் பார்த்துவிட்டு, அங்கேயே பஸ் பிடித்தால் இரவு 7 மணிக்கு சேர்மாதேவிக்கு ஹாயாக வந்துவிடலாம். ஒருநாளில் இரண்டு படங்கள், அடுத்தடுத்த காட்சியில்!

அதிலும் ரத்னா தியேட்டரும் பார்வதி தியேட்டரும் எதிரெதிர் வீட்டுக்காரர்கள். அப்படி இரண்டு படம் பார்ப்பதென்றால் மிகவும் எளிது என்பதால், பெரும்பாலும் அப்படி இருக்கும்படிப் பார்த்துக்கொள்வோம்.

இந்த வசதி இல்லாதவர்களுக்கு வீரவநல்லூரே கதி, கூனியூர் டூரிங் தியேட்டர் வரும் வரை. வீரவநல்லூருக்குள் நுழைவதற்கு முன்பாகவே மெய்ன்ரோட்டில் காந்திமதி தியேட்டர் இருந்தது. ஊருக்குள் சண்முகா தியேட்டர். இரண்டிலும் மூன்று நாளைக்கு ஒரு தடவை படம் மாற்றுவார்கள். எந்த நாளில் படம் மாற்றுவது என்பதில் அவர்களுக்குள் ஒரு புரிதல் இருந்தது. காந்திமதியில் போட்ட படம் சண்முகாவில் வராது. விதிவிலக்காகச் சில சூப்பர் டூப்பர் ஹிட் படங்கள் மட்டும் வரும். அப்படி காந்திமதியிலும் வந்து சண்முகாவிலும் வந்த படம், புதுக்கவிதை. இரண்டு தியேட்டரிலும் பார்த்தவர்கள் அதைப் பெருமையாகச் சொல்லிக்கொண்டார்கள்.

கூனியூர் டூரிங் தியேட்டர் வரவும் சேர்மாதேவிக்காரர்கள் வீரவநல்லூர்ப் பக்கம் ஒதுங்குவதைக் கைவிட்டுவிட, சண்முகா தியேட்டர் நலிந்து போனது. ஒரு கட்டத்தில் கூனியூர் தியேட்டரின் லைசன்ஸும் முடிய, சேரன்மகாதேவியிலேயே ஒரு தியேட்டர் எட்டிப் பார்த்தது. டூரிங் தியேட்டர் அல்ல, சிமிண்ட் கட்டட தியேட்டர்!

ஊருக்குள் போலிஸ் ஸ்டேஷன் கிடையாது, தியேட்டர் கிடையாது என்னும் பெருமைகள் பறந்து போக, ஊருக்குள்ள தியேட்டரே இருக்கு என்கிற புதிய பெருமை சேரன்மகாதேவிக்கு ஒட்டிக்கொண்டது. ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு சேரன்மகாதேவியில் நடந்தபோது ஊரில் தியேட்டர் இல்லை, அந்தப் படம் வரும்போதும் தியேட்டர் இல்லை, தியேட்டர் வந்த பின்பு அந்தப் படம் அங்கே திரையிடப்பட்டபோது, நம்ம ஊர்ல எடுத்த படம் என்று மக்கள் விழுந்து விழுந்து பார்த்தார்கள். ‘ஒருவர் வாழும் ஆலயம்’ படப்பிடிப்பு எல்லாம் கடைசிச் சொட்டு உயிர் இருக்கும் வரை எனக்கு மறக்காது.

பின்னர் நான் கல்லுப்பட்டிக்குப் போய்விட்டிருந்தேன். அங்கே ஒரு தியேட்டர் இருந்தது, லட்சுமி தியேட்டர். பதினெட்டுப் பட்டி கிராமத்துக்கும் ஒரே சின்ன தியேட்டர் லட்சுமி தியேட்டர். பேரையூரில் ஒரு தியேட்டர் இருந்த நினைவு. நான் போனதில்லை. அல்லது அந்த தியேட்டர் அப்போது இல்லை. லட்சுமி தியேட்டருக்கு மாட்டு வண்டி கட்டிக்கொண்டு, டிராக்டரில் கும்பலாக ஏறிக்கொண்டு படம் பார்க்க வருவார்கள்.

ரஜினி படம் என்றால் திருவிழா என்று அர்த்தம். எந்தப் படம் வந்தாலும் கூட்டம் வரும். விக்ரம் படம் பார்க்க பெருங்கூட்டம் வரிசையில் நின்றது இப்போதும் நினைவில் இருக்கிறது. டிக்கெட் விலை அறுபது பைசாவோ என்னவோ. அதற்கு மேல் பத்து பைசா கூடச் செலவழிக்காமல் பெண்கள் படம் பார்த்துவிட்டு வீட்டுக்கு வந்துவிடுவார்கள். ‘சம்சாரம் அது மின்சாரம்’ இருபத்து ஐந்து நாள்களுக்கு மேல் ஓடி சாதனை கண்டது.

எங்கேயும் பார்க்க முடியாத ‘பொம்மை’ போன்ற திரைப்படங்களை எல்லாம் மதியக் காட்சியாகப் போடுவார்கள். தூர்தர்ஷன் திரைப்படங்களை ஒளிபரப்ப ஆரம்பித்ததும், பழைய சிவாஜி எம்ஜியார் படங்களைப் பார்க்க மக்கள் வருவது குறைய ஆரம்பித்தது. தூர்தர்ஷனில் வருவதற்கு முன்பாகத் திரைப்படங்களைத் திரையிடவேண்டிய கட்டாயம் வந்தது. இதனால் தொடர்ந்து புதிய படங்கள் (படம் வெளியாகி மூன்று வருடங்கள் கழித்தும் எங்களுக்கு அவை புதுப்படங்கள்தான்!) பார்க்கும் வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது.

கல்லுப்பட்டியில் இருந்து மதுரை அழகரடிக்குப் போனேன். அழகரடியில் எங்கள் தெருவில் இருந்து இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் பரமேஸ்வரி தியேட்டர். டிக்கெட் விலை ரூ 1.10. ஒன்னு பத்து தாம்மா என்று கேட்டாலே அது படம் பார்க்க என்று அர்த்தம். ஒன்னு அறுபது என்றால் ஹை க்ளாஸ். அங்கே ஒரு ரூபாய்க்கு ஒரு தேங்காய் பப்ஸ் விற்பார்கள். அது மிகவும் பிரசித்தம். அங்கே பார்த்துத் தள்ளிய படங்களுக்குக் கணக்கே இல்லை.

இரண்டு தெரு தள்ளி இருந்த தியேட்டர் என்பதால் சாவதானமாக நடந்து போய் பார்த்துவிட்டு வந்துவிடலாம். காலையில் சாம்பார் செய்துவிட்டு, பொடி நடையாக தியேட்டருக்குப் போய் காலைக்காட்சி பார்த்துவிட்டு மதியம் வந்து உலை வைத்து மூன்று மணிக்குச் சாப்பிடுவது பெண்களின் வழக்கமாக இருந்தது. இளையராஜாவின் பாடல்கள் திரும்பும் இடமெல்லாம் கேட்கும். தொடர்ந்து படங்கள் வந்துகொண்டே இருக்கும். இப்போது போல் அல்லாமல், அதிகம் அரசியல், மண்டை பிளக்கும் ஆய்வு என எதுவும் இருக்காது. படம் பார்க்கப் போவதே ஜாலிக்கு என்று இருந்த நேரம். ‘கேளடி கண்மணி’ போல எப்போதாவது சீரியஸ் படங்கள் வரும். அவையும் ஹிட்டடிக்கும்.

பரமேஸ்வரி தியேட்டரை இன்னொரு காரணத்துக்காகவும் மறக்கமுடியாது. நடிகர் சிவாஜியின் மகள் திருமணம் அந்தத் திரையரங்கில்தான் நடந்தது. யார் வேண்டுமானாலும் போகலாம், சாப்பிடலாம் என்று கேள்விப்பட்டு, பள்ளி நண்பர்கள் அனைவரும் பரமேஸ்வரி தியேட்டர் பக்கம் போய் எட்டிப் பார்த்தோம். உள்ளே நுழைய முடியாத அளவுக்குக் கூட்டத்தைப் பார்த்துப் பயந்து போனோம். அங்கே வெளியில் வைக்கப்பட்டிருந்த தொலைக்காட்சிகளில், நேரலையாக தியேட்டருக்குள் இருந்த சிவாஜியைப் பார்த்துவிட்டுச் சாப்பிடாலேயே பள்ளிக்கு ஓடினோம்.

என் வாழ்க்கையின் பொற்காலம் என்றால் இங்கே இருந்த இந்த மூன்று வருடங்களைத்தான் சொல்வேன். மனம் இரண்டாகப் பிரிந்து கிடந்த நேரம். ஒரு பக்கம் முழுக்க படிப்பு, இன்னொரு பக்கம் முழுக்க திரைப்படங்கள். இப்படித்தான் பத்தாவது முடித்து ஓரளவுக்கு நல்ல மதிப்பெண்கள் வாங்கி மீண்டும் நெல்லைக்குப் போனேன்.

நெல்லையே தியேட்டர்களின் சொர்க்கம் என்பதை என் பதின்ம வயதில் புரிந்துகொண்ட போது நான் அடைந்த சந்தோஷத்துக்கு அளவே இல்லை. மதுரை, கல்லுப்பட்டி, வீரவநல்லூர், சேரன்மகாதேவியில் எல்லாம் நடந்து போகும் தூரத்தில் ஒரே ஒரு தியேட்டர். ஆனால் நெல்லையில் ஆறு தியேட்டர்கள்! அப்போதுதான் புதியதாக அருணகிரி தியேட்டரைத் திறந்திருந்தார்கள்.

அங்கே சின்னதம்பி 175 நாளாக ஓடியது. நான் பத்தாவது படிக்கும்போது வெளியான படம், 11ம் வகுப்புப் படிக்கும்போதும் ஓடிக்கொண்டிருந்தது. ஏற்கெனவே பார்த்த படத்தை மீண்டும் பார்க்கவேண்டுமா என்று தோன்றினாலும், அப்போதைக்குப் பெரும் புகழ் பெற்றிருந்த அந்தப் புதிய ‘அருணகிரி’யைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே ‘சின்னத்தம்பி’க்கு மீண்டும் போனேன். படம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. ஏதோ தொழில்நுட்பக் கோளாறு. ஊர் முழுக்க இதே பேச்சுதான்.

அன்று அந்தக் காட்சிக்கு வந்தவர்களுக்கு மட்டும் ஒரு டோக்கன் தரப்பட்டு மறுநாள் மீண்டும் இலவசக் காட்சி திரையிடப்பட்டது. ஊர் இப்போது இரண்டு மடங்காகப் பேசியது, ‘சே… நமக்கு இப்படி ஒரு பிரைஸ் அடிக்காம போயிட்டே!’ ஆம், நான் தியேட்டரில் ‘சின்னத்தம்பி’யை ஒன்றரை தடவை பார்த்திருக்கிறேன்!

திருநெல்வேலிதான் தியேட்டர்களின் சொர்க்கம். வீட்டுக்கு அப்பால் பெண்களின் ஒரே புகலிடம் தியேட்டர்களே. 11.30க்குக் காலைக் காட்சி. 11.25க்குத்தான் பவுடர் அப்புவார்கள் பெண்கள். 11.30க்குத்தான் டிக்கெட் எடுப்பார்கள். தியேட்டருக்குளிருந்து கேட்கும், ‘மனைவி வீட்டின் மருமகளானாள்’.

ஆரம்கேவியின் உலகப் புகழ் பெற்ற விளம்பரம். ‘சே ரெண்டு நிமிஷம் முன்னாடி வந்திருந்தா இந்த விளம்பரத்தை பாத்துருக்கலாமே’. நிஜமாகவே வருத்தப்படுவார்கள். அந்த விளம்பரத்தின் நாதஸ்வர ஓசைக்குக் கைத்தட்டு விழுவதை இப்போதும் என் காதில் கேட்கிறேன். புல்லரிக்கிறது.

தியேட்டரே வாழ்வாக, வாழ்வே தியேட்டராக திருநெல்வேலி வாழ்ந்தது. ஐம்பதுகளில், அறுபதுகளில் தொடங்கிய அப்பழக்கம் தொண்ணூறுகளின் இறுதி வரை இருந்தது. சிவாஜி கணேசன் ஒரு வார இடைவெளியில் நான்கு திரைப்படங்களை வெளியிட, நெல்லையின் பத்து தியேட்டர்களில் நான்கு தியேட்டர்களின் சிவாஜி கணேசன் படம் ஓட, எம்ஜியார் ரசிகர்கள் காண்டானதெல்லாம் வரலாறு. எத்தனை முறை படகோட்டி படம் போட்டாலும் கூட்டம் அம்முதுப்பா என்று சிவாஜி ரசிகர்கள் எரிச்சலானதும் வரலாறுதான்.

செண்ட்ரல் தியேட்டர்

ரஜினி புதிய சகாப்தத்தைத் தொடங்கி வைத்தார். ஆனால், இது பாதி உண்மைதான். திரையரங்க வரலாற்றில் திருநெல்வேலி இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது. வேறெங்கும் பார்க்கவே முடியாத வினோதங்களை திருநெல்வேலி செய்து காண்பித்தது.

ஒவ்வொன்றாகச் சொல்கிறேன்.

ஏதேனும் ஒரு காட்சி, ஹீரோயிஸக் காட்சி வந்துவிட்டால், வெள்ளித்திரையைச் சுற்றி பளபள பல்புகள் மின்னும். சில சமயம் முழுப் பாடலுக்கும் வெள்ளித்திரை பல்புகள் மட்டுமல்ல, தியேட்டர் முழுக்க இருக்கும் பல்புகளும் மின்னும். ‘ஆட்டமா தேரோட்டமா’ பாடலுக்கு தியேட்டரின் பல்புகள் அப்படி மின்னின. நான் வாயைப் பிளந்து பார்த்துக்கொண்டிருந்தேன். ‘செம்பருத்தி’ படத்தில், ஒரு பைக்கைத் தாண்டி பிரசாந்த் குதிக்கும் காட்சியில், திரையைச் சுற்றி பல்புகள் மின்ன, அது அந்தக் காட்சியை விட அழகாக இருந்தது. ‘வசந்த காலப் பறவை’ படத்தில் நீதிமன்றக் காட்சியில் பல்பு மின்னியது நினைவிருக்கிறது. ‘கறவை மாடு மூனு காளை மாடு ஒன்னு’ பாடலுக்கு ஒட்டுமொத்த தியேட்டரும் டான்ஸ் ஆட, கூடவே வெள்ளித்திரை பல்புகளும் தியேட்டர் பல்புகளும் ஆடின. ஏ.ஆர்.ரஹ்மானின் புயலில் ‘முக்காலா’ பாட்டுக்கும் ‘ஊர்வசி’ பாட்டுக்கும் ‘பேட்ட ராப்’புக்கும் தியேட்டர் இடிந்து விழாமல் இருந்தது ஆச்சரியம்தான்.

சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு வந்து வேலை பார்த்த நண்பன் ஒருத்தன் என்னுடன் திருநெல்வேலியில் படம் பார்க்க வந்து, இந்த பல்புகளின் ஆட்டத்தைப் பார்த்துவிட்டு, ‘சை, சரியான பட்டிக்காடு’ என்றான். அப்போதுதான், ‘ஓ… இதெல்லாம் பிடிக்காத ஒரு கூட்டமும் இருக்கா’ என்று எனக்கு உறைத்தது. அப்படி ரத்தத்தோடு எங்களுக்கு ஊட்டி வளர்த்து வைத்திருந்தது திருநெல்வேலி. இப்போதும் கூட நெல்லையில் ஏதேனும் ஒரு தியேட்டரில் ஒரு முக்கியமான காட்சியில் பல்புகள் மின்னிக் கொண்டிருக்கக் கூடும்.

ரஜினியின் ‘அண்ணாமலை’ மிகப்பெரிய எதிர்பார்ப்பில் வெளி வந்தது. இளையராஜாவின் இசை இல்லாமல் தேவாவின் இசையில் வெளிவந்த படம் என்பதால் கொஞ்சம் எதிர்மறைப் பேச்சுகள் இருந்தன. ரஜினி வெளிப்படையாகச் சொன்னார், ‘இந்தப் படம் என் படங்களிலேயே மிகப்பெரிய வெற்றி பெறும்’ என்று.

அது உண்மையானது. ரஜினிக்கும் ஜெயலலிதாவுக்கும் இருந்த மோதலை ஒட்டி திரைப்படத்தின் சில வசனங்கள் புரிந்துகொள்ளப்பட்டன. எனவே ரஜினியே எதிர்பாராத ஒரு வெற்றி அண்ணாமலைக்குக் கிடைத்தது. அண்ணாமலை திருநெல்வேலி திரை வரலாற்றில் இன்னொரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைத்தது.

பூர்ணகலாவில் வெளியான இத்திரைப்படத்துக்கு வந்த கூட்டம், மேம்பாலத்தையும் தாண்டி இரண்டு கிலோமீட்டருக்கு நீண்டது. ஜெயலலிதாவின் போலிஸ் கையைப் பிசைந்துகொண்டு நின்றது. இதைப் பணமாக்க நினைத்த திரையரங்க உரிமையாளர், முதலிலேயே இந்த வெற்றியை யோசித்து ஒரு விஷயத்தைச் செய்தார். ஆம், முதல் காட்சி அதிகாலை நான்கு மணிக்கு. அதற்கு டிக்கெட் வாங்க, முந்தைய நாள் இரவு குவிந்த மக்கள் விடிய விடிய தியேட்டரில் கிடந்தார்கள். இதைக் கண்டுகொண்ட அனைத்து தியேட்டர்களும் அடுத்து வந்த எல்லாம் சூப்பர்ஹிட் படங்களுக்கும் இதை வழக்கமாக்கின.

வழக்கமாக்கும்போது அப்படியே செய்தால் அதில் என்ன சந்தோஷம் இருக்கிறது? மெல்ல மெல்ல நேரத்தைக் குறைத்துக்கொண்டே போனார்கள். ஒரு கட்டத்தில் அதிகாலை ஒரு மணிக்கு முதல் காட்சி. அதாவது நள்ளிரவுக் காட்சி. இதுவும் தியேட்டர்களுக்கு பத்தல! இன்னொன்றைச் செய்ய ஆரம்பித்தார்கள். உலகில் எங்கேயும் கேள்விப்பட்டிருக்காத விஷயம். மாலை ஆறு மணிக் காட்சிக்கு மதியம் ஒரு மணிக்கு டிக்கெட் தருவார்கள். இரண்டு மணிக்குத் தியேட்டருக்குள் விட்டு அடைத்துவிடுவார்கள். இரண்டு மணிக் காட்சி அப்போதுதான் தொடங்கி இருக்கும். ஆறு மணிக்காட்சிக்கு ஹவுஸ்ஃபுல் என்று போர்ட் தொங்க விட்டிருப்பார்கள். ஆறு மணிக்காட்சியைக் காண நான்கு மணி நேரம் தியேட்டருக்குள் அடைபட்டிருப்போம். நாங்கள் ஆறு மணிக் காட்சிக்குப் படம் பார்க்க தியேட்டருக்குள் போகும்போது, எங்கள் இடத்தை இரவு பத்து மணிக் காட்சிக்காரன் பிடித்துக்கொண்டிருப்பான். அங்கே வந்து தண்ணீர், போண்டா எல்லாம் வேறு விற்பார்கள். திருப்பதியின் மாடலைத் தியேட்டருக்குள் புகுத்தி வைத்தார்கள்.

விழித்துக்கொண்ட மாவட்ட அரசு நிர்வாகம், அத்தனைக்கும் ஒரேடியாகத் தடை விதித்தது. அதிகாலை நான்கு மணிக்கு முன்பாக அன்றைய காட்சிகள் தொடங்கக் கூடாது, உள்ளே அடைத்து வைக்கக் கூடாது என்று அறிவிப்புகள் வந்தன.

மதியம் இரண்டு மணிக் காட்சி என்று நினைத்து, படையப்பாவுக்கு இத்தனை ஈஸியா டிக்கெட் கிடைக்குதே என்று கிண்டல் செய்தபடி என்னுடன் படம் பார்க்க வந்த சென்னையைச் சேர்ந்த கமல் ரசிகன் ஒருத்தன், டிக்கெட் கிடைத்தது ஆறு மணிக் காட்சிக்கு என்றும், அதுவரை தியேட்டரில் அடைப்பட்டுக் கிடைக்கவேண்டும் என்று தெரிந்து கிட்டத்தட்ட மூர்ச்சையாகிப் போனான். ‘இந்த ஊர் உருப்படவே உருப்படாது’ என்று சாபமிட்டுவிட்டு பஸ் ஏறினான்.

திருநெல்வேலியும் தியேட்டர்களும் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்தவை. தேவர்மகனுக்கு போலிஸில் அடி வாங்காமல் படம் பார்த்தவர்கள் குறைவு. திருநெல்வேலியின் ஒரே பொழுதுபோக்கு தியேட்டர்களே. மூன்று கிலோமீட்டர் நீளமான பெரிய சாலைக்குள்ளாக பத்து தியேட்டர்கள். பேருந்து நிறுத்தமே தியேட்டர்களின் பெயர்கள்தான். ஒரு ரத்னா, ஒரு ராயல், ஒரு செண்ட்ரல், ஒரு சிவசக்தி இப்படித்தான் டிக்கெட்டே வாங்குவோம்.
இன்று காணாமல் போன தியேட்டர்களை எண்ணினால், இருக்கும் தியேட்டர்களைவிட அதிக எண்ணிக்கை வருகின்றது. பாப்புலர் (ஸ்ரீ கணேஷ்), லக்ஷ்மி, ராயல், பார்வதி, செண்ட்ரல், சிவசக்தி, ஸ்ரீ செல்வம் என அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. இவையெல்லாம் வெறும் தியேட்டர்கள் அல்ல. வரலாறுகள்.

இது போக, இளமை வரலாறு ஒன்றிருக்கிறது, கலைவாணி தியேட்டர். இந்த இளமை வரலாற்றைத் தனியேதான் சொல்லவேண்டும். அந்த தியேட்டரும் இன்றில்லை. இழந்தவற்றின் வலியும் அங்கே பெற்றவற்றின் சந்தோஷமும் ஒன்றுக்கொன்று முட்டி நிற்கின்றன. இதுதான் வாழ்க்கை. மீண்டும் பெறவே முடியாமல் இழந்தவற்றின் சுகமான தொகுப்புகளே மீதமிருக்கும் வாழ்க்கை.

2022 செப்டம்பரில் மெட்ராஸ் பேப்பர் வலைத்தளத்தில் வெளியான கட்டுரை.

Share

Ila Ganesan – Om Shanthi

இல கணேசன் – ஆழ்ந்த அஞ்சலி. 90களில் சன் டிவியில் இல கணேசன் மிக அழகான தமிழில் எந்தத் திராவிடக் கட்சிக்கும் ஆதரவு இல்லாமல் அதிரடியாகப் பேசுவார். அவர் பேச்சில் அத்தனை ஈர்ப்பு இருக்கும். அதை இப்போது நினைத்துக் கொள்கிறேன்.

கிழக்குப் பதிப்பகம் சார்பாக அவரது நூல் ஒன்றைக் கொண்டு வர நானும் மருதனும், உடன் ஒரு நண்பரும் (அவர் பெயர் மறந்து விட்டது) அவர் வீட்டுக்குச் சென்று அவருடன் பேசினோம். அன்று அவர் வீட்டில் பூஜை. எங்களையும் நமஸ்காரம் செய்யச் சொல்லிப் பிரசாதம் கொடுத்தார். தொடர்ந்து அவரது வாழ்க்கை அனுபவங்களை நண்பர் ஒலிப்பதிவு செய்து கொண்டார். ஆனால் ஏனோ அந்த முயற்சி முழுமையாகக் கைகூடவில்லை. அந்தப் புத்தகம் வெளிவரவில்லை.

பின்னர், வலம் இதழில் செப்டம்பர் 2018ல் அபாகி (ப்ரவீன்குமார்) இல கணேசனை ஒரு பேட்டி எடுத்திருந்தார். சில தவிர்க்க முடியாத காரணங்களினால் அந்தப் பேட்டி வெளிவராமல் போனது. எத்தனையோ முயன்றும் இல கணேசனின் பரபரப்பான அன்றைய சூழலில் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், இறுதி வடிவத்தை அவர் பார்க்க இயலாமல் போனதால் வெளிவரவில்லை.

இந்த அருமையான பேட்டி வெளிவராமல் போனதில் எனக்குப் பெரிய வருத்தம் இருந்தது.

அந்த நீண்ட பேட்டி இப்போது இங்கே…

***

நேர்காணல்: இல.கணேசன் | அபாகி

ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் மூத்த ஸ்வயம்சேவகர், பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயற்குழு உறுப்பினர், ராஜ்யசபையின் முன்னாள் எம்.பி., பொற்றாமரை இலக்கிய அமைப்பின் தலைவர் எனப் பல்வேறு அடையாளங்களுக்குச் சொந்தக்காரர் இல.கணேசன். சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் உரையாடினோம். ‘வலம்’ இதழில் இருந்து வந்திருப்பதாகச் சொன்னவுடன், “வாங்க… வாங்க… நான் ஏராளமான பத்திரிகைகளைப் படிக்கிறேன். ஆனால், இரண்டு பத்திரிகைகளை மட்டுமே சேகரித்து வைக்கிறேன். அதில் ‘வலம்’ இதழும் ஒன்று’’ என்றபடியே நேர்காணலுக்குத் தயாரானார்.

நீங்கள் எப்போது ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் சேர்ந்தீர்கள்?

எங்க குடும்பமே ஆர்எஸ்எஸ் குடும்பம்தான். எங்க அப்பா, அம்மாவுக்கு 9 குழந்தைகள்; அதில் அண்ணன் – தம்பிகள் 6 பேர். நான் 5வது பையன். எங்க மூத்த அண்ணன் இல.சேஷன், அவருக்கு அடுத்தவர் இல.நாராயணன். இவங்க ரெண்டு பேரும்தான் முதன் முதல்ல ஷாகா போனவங்க. காந்தி கொலைக்குப் பிறகான முதல் தடைக் காலத்தில் பிரசாரக்காக இருந்தவர் இல.நாராயணன். எங்க குடும்பத்துக்கு எப்போ ஆர்.எஸ்.எஸ். பழக்கம் வந்தது, எந்த பிரசாரக் தொடர்பு கொண்டார் என்பதெல்லாம் தெரியாது. ஆனா, எங்க அண்ணா சங்கத்தை தமிழகத்தில் தொடங்கிய தாதாராவ் பரமார்த்திடம் கூடப் பேசுவார். தமிழகத்தில், குறிப்பாக தஞ்சாவூரில் சங்கம் வந்தபோதே எங்க குடும்பத்துக்கு சங்கத் தொடர்பு வந்துவிட்டது. மறைந்த அண்ணாஜி (ஆர்.எஸ்.எஸ். முன்னாள் மாநிலச் செயலாளர், மதுரையில் வசித்த வழக்கறிஞர்) ‘கொத்து கொத்தா’ என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார். அதாவது, அப்பா-மகன், அண்ணன் – தம்பி எல்லோரும் ஷாகா வருவது. ‘இதுதான் சங்கத்தோட விசேஷம்’ என்பார். நானும், எனக்கு ரெண்டு வயது மூத்த அண்ணன் கோபாலனும் சேர்ந்து முதன்முதலா ஷாகா போனோம். என்னை ரொம்ப சின்ன வயசிலேயே தூக்கிக்கொண்டு ஷாகா போயிருக்காங்க. எனக்கு நினைவு தெரிஞ்சு முதன் முதலா, என்னோட ஐந்து வயதுல, சுதந்திரத்துக்கு முன்னாடி, தஞ்சாவூர் அரண்மனை இடிக்கப்படாதபோது வந்ததுதான் ஞாபகம் இருக்கு. 50, 60 பேர் ஷாகாவுல விளையாடுவாங்க. நான் சின்ன பையங்கறதுனால, கிணத்துப் பக்கத்துல வந்தவங்களோட பொருட்களை பத்திரமா பார்த்துக்க சொல்லிடுவாங்க. அங்க உட்கார்ந்து மத்தவங்க விளையாடறத ரசிப்பேன். இப்பவும் ஷாகான்னா, தஞ்சாவூர் அரண்மனை சுவர்கள்ல ‘நமஸ்தே சதா வத்ஸலே’ன்னு கணீர்னு பாடறதுதான் ஞாபகத்துக்கு வருது. பிறகு, அங்கே கண்காட்சி நடத்தப் போறோம், ஷாகா நடத்த வேணாம்னு சொல்லிட்டாங்க. அப்புறம் சில வருஷம் கழிச்சு சீனிவாசபுரத்துல ஷாகான்னு சொன்னாங்க. அப்ப 7ஆவது, 8ஆவது படிச்சிட்டிருந்தேன். தனியாவே ஷாகா போக முடியும். அப்புறம், நடுநடுவுல ஷாகா போவேன், அப்பப்போ நிக்கும். அது 1968ல் மிகவும் தீவிரமாகி, அப்புறம் வாழ்க்கையே இனி சங்கம்தான்னு முடிவு பண்ணி, 1970ல் பிரசாரக்கா வந்தேன்.

உங்களுக்கு ஆதர்ஷமா இருந்த பிரசாரக்குகள் யார்?

மரியாதை எல்லார் மேலயும் இருக்கு. ஆதர்ஷம்னு பார்த்தா… ராம்ஜி-னு ஒரு பிரசாரக் தஞ்சாவூர்ல இருந்தார். உயரமா கம்பீரமா இருப்பார். அவர் சங்கத்தின் சீருடையை அணிந்தால் ரொம்ப அழகா இருக்கும். அப்புறம், கு.இ.ராமசாமின்னு ஒரு பிரசாரக். சங்கத்தோட பத்திரிகை ‘தியாகபூமி’க்கு (விஜயபாரதம்- முந்தைய வடிவம்) சந்தா சேகரிக்கறதுக்காக தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போ எனக்கு 13, 14 வயசு. கொஞ்சம் விவரம் தெரிய ஆரம்பிச்சது. தஞ்சாவூர்ல ஸ்ரீபால்னு ஒரு வழக்கறிஞர் இருந்தார். சீனிவாசபுரத்துல வீடு. அவர்கிட்ட சந்தா சேகரிக்கணும்னு என்னைக் கூட்டிட்டு போனார். வழக்கறிஞரோட வீட்டு வாசல்ல நின்னுட்டு, ‘சார்… சார் இருக்காரா?’ன்னு குரல் கொடுத்தார். எனக்கு பயம் வந்தது. “ஏண்டா பதட்டப்படறே… நான் என்ன தப்பா சொல்லிட்டேன்?’’ன்னார். உள்ளே இருந்து, “யாரு….?”ன்னு வக்கீலோட மனைவி குரல். “நான்தான் ராமசாமி. சார் இருக்காரா?”ன்னு திரும்ப கேட்டார். “வெளியே போயிருக்கார். வந்துருவார்”னு சொன்ன அந்த அம்மா, உள்ளே உட்கார வச்சிட்டாங்க. காபி கொடுத்தாங்க. ‘அய்யயோ.. வக்கீல் வரப்போறார். நாம மாட்டினோம்’னு நடுங்கினேன். அதுக்குள்ள வக்கீல் வந்துட்டார். “வாங்க… வாங்க… எப்போ வந்தீங்க?”ன்னு கேட்டார். அவர், தன் மனைவிய பார்க்க வந்தவங்கன்னு நெனைச்சுட்டார். “வந்து அரை மணி நேரமாச்சு”ன்னார் ராமசாமிஜி. அந்த அம்மா வந்தாங்க. வக்கீலுக்கு ஏற்கெனவே தெரிஞ்சவங்கன்னு முடிவு பண்ணிட்டாங்க. (சிரிப்பு) பிறகு, தியாகபூமி சந்தா பத்தி சொன்னார். வழக்கறிஞர் ஸ்ரீபால் ஒரு வைஷ்ணவர். நாமம் போட்டுருப்பார். உடனே, அப்போ போட்ட ராமானுஜர் மலரை காண்பிச்சார் ராமசாமிஜி. “அதுக்கென்ன, பண்ணா போச்சு”ன்னு சந்தா கட்டிட்டார், அந்த வக்கீல்.

அதே மாதிரி, நாராயணசாமி ஐயர்னு ஒரு வக்கீல். அவரைப் பார்க்க போனோம். “தியாகபூமின்னு பேர் இருக்கே. இது ஏதாவது தேசபக்தி பத்திரிகையா?”ன்னு கேட்டார். “அதெல்லாம் இல்ல சார்”. “இது ஆர்.எஸ்.எஸ். பத்திரிகையா?”ன்னார் திரும்பவும். “இல்ல. யாராவது ஆர்.எஸ்.எஸ். பத்தி எழுதுவாங்க. ஆனா, ஆர்.எஸ்.எஸ். பத்திரிக்கை இல்ல”ன்னோம். உடனே பத்திரிகையை அப்படியே வச்சிட்டார். “பிரயோஜனமில்ல சார். இந்த நாடு ஹிந்து நாடுன்னு சொல்றவங்க அவங்க ஒருத்தங்கதான். அவங்க பத்திரிக்கை இல்லேன்னா பிரயோஜனமில்ல”ன்னார் வக்கீல். எங்களுக்கு ஒரே ஆச்சரியம். இந்த காலத்துல அப்படிப்பட்ட வார்த்தை சர்வ சாதாரணம். அப்போ அபூர்வம். உடனே, தடால்னு மாத்திட்டார் ராமசாமிஜி. “என்ன இப்படி சொல்லிட்டீங்க. இந்தப் பையனோட குடும்பமே ஆர்எஸ்எஸ் குடும்பம். இவர் தினசரி ஷாகாவுக்குப் போகறவர். நான் ஆர்எஸ்எஸ்ஸுக்காகவே வாழற பிரசாரக்”ன்னார். (சிரிப்பு) “அப்படி சொல்லுங்க சார்”ன்னு சந்தா கட்டினார் அந்த வக்கீல். அப்புறம்தான் தெரிஞ்சது. வக்கீல் நாராயணசாமி ஏற்கெனவே ஹிந்து மகா சபாவுல தீவிரமா இருந்திருக்கார்.

அதுக்கு அப்புறம் சுப்பராவ். இளைஞர்களைக் கவர அவரை மாதிரி முடியாது. ஒருமுறை ஒரு பையன் சைக்கிள்ல வந்திருந்தான். அவனை ஷாகாவுக்குக் கொண்டு வரேன்னு சவால் விட்டார். அந்தப் பையனுக்கு 14, 15 வயசு இருக்கும். சுப்பராவ்க்கு வயசு அதிகம். அவரோட சைக்கிளை எடுத்துட்டு நேரா, அந்தப் பையனோட சைக்கிள்ல மோத, பையன் கீழே விழுந்துட்டான். “தம்பி. மன்னிச்சிருப்பா. அடியெதுவும் படலையே?”ன்னு கேட்டுட்டே அவனைப் பத்தி விவரத்த வாங்கிட்டார். “அட ராமசாமி யையனா நீ?”ன்னு சகஜமா பேசி அனுப்பிட்டார். திரும்பவும், சாயுங்காலம் அவனோட வீட்டுக்கே போயிட்டார். “தம்பி.. அடி எதுவுமில்லையே?” உடனே அந்தப் பையனோட அம்மா, “என்னப்பா அடி, கிடின்னு” பதறிட்டாங்க. அந்தப் பையன் வீட்டுல கூட சொல்லல. “ஒண்ணும் ஆகலை அம்மா.” “ஒண்ணும் ஆகலை அம்மா.” இப்படிப் பேசி பேசியே அந்தப் பையன் ஷாகா வந்துட்டான்.

எப்படி பிரசாரக்கா வந்தீங்க?

ஒரு லட்சியத்து மேல பிடிப்பு உண்டாக்குறது ஒரு தொடர் வேலை. முதல்ல, லட்சியத்து நெருப்பை மூட்டறது. பிறகு, அந்த நெருப்பைத் தூண்டி விடறது. பிறகு, அந்த நெருப்பை எரிய விடறது. பிறகு, வீசி வீசி பிரகாசமா எரிய விடறது. இப்படி எனக்கு முதல்ல நெருப்புப் பொறியை மூட்டி விடறது கோபால்ஜி. 1958ல் எனக்கு 13 வயசுதான் இருக்கும். அப்போ என்னை சங்க சிக்ஷா வர்க முதலாமாண்டு அழைச்சிட்டு போனாங்க. அப்போ எங்க வீட்டுல முகாம் அனுப்ப வசதி கிடையாது. அப்போ ஹரிஹரன்ஜி தஞ்சாவூர்ல சங்கசாலக்கா இருந்தார். கு.இ.ராமசாமிஜி என்னைப் பத்தி சொல்ல, ‘நம்ம எல்.நாராயணன் தம்பிதானே. கூட்டிட்டு போ. நான் பார்த்துக்கறேன்னு’ சொல்லிட்டார். இதெல்லாம் எனக்குப் பிற்காலத்துலதான் தெரியும். ஆனா, அப்போ எனக்கு 14 வயசு ஆகாததால முகாம்ல அனுமதி இல்ல. பிரபந்தக் (முகாம் ஏற்பாட்டாளர்) ஆக்கிட்டாங்க. அப்போ முகாம் தமிழ்நாடு, கேரளா சேர்ந்து நடக்கும். அதனாலயோ என்னவோ அப்பல்லாம் முகாம்ல கேண்ட்டீன் இருக்கும். நான்தான் அதுக்கு இன்சார்ஜ். ஹரியேட்டன்ஜி, பாஸ்கர்ராவ் களம்பி எல்லாம் சிக்ஷக். அதுக்கு அடுத்த வருஷம் நமக்கே உற்சாகம் வந்தது. 1959ல் முதலாமாண்டு பயிற்சி முடித்தேன். பண்டித தீனதயாள் உபாத்தியாயா வந்திருந்தார். பொது நிகழ்ச்சிக்கு சிருங்கேரி சங்காராச்சாரியார் வந்திருந்தார். அதுக்கப்புறம் படிப்பு முடிஞ்சு வேலை, பட்டுக்கோட்டைக்கு பணிமாற்றம் பண்ணிட்டாங்க. அங்க ஷாகா இல்ல. சு.வெ. என்பவரிடம் தமிழ் இலக்கணம் கத்துண்டேன். இப்படி தீவிரம் குறைஞ்ச காலமும் இருக்கு. அப்புறம், திருச்சிக்கு டிரான்ஸ்ஃபர். திருச்சி காரியாயலத்துலதான் தங்கினேன். அங்க கு.இ.ராமசாமிஜிய திரும்ப சந்திச்சேன். திரும்ப ஷாகா வர ஆரம்பிச்சேன்.

1967 டிசம்பரா, 1968 ஜனவரியான்னு நினைவில்ல. அப்போதான், திருச்சி மலைக்கோட்டைக்கு எதிரே ஒரு வீட்டு மாடியில பைட்டக் (கூட்டம்). கோபால்ஜி (இராம.கோபாலன்ஜி) வந்திருந்தார். அற்புதமான பைட்டக் அது. என் அண்ணன் இல.நாராயணனும் வந்திருந்தார். காலைலேர்ந்து மாலை வரை. முதல்ல, “திருச்சி, தஞ்சாவூர்ல கிருஸ்துவ மதமாற்றம்?”னு கேட்டார். எனக்கு எழுந்து பதில் சொல்றது பிடிக்கும். எழுந்து சொன்னேன். எதுவும் சொல்லாம குறிச்சிண்டார். மத்தவங்களும் சொன்னாங்க. அடுத்து முஸ்லிம்களோட வேலைகள். சொன்னோம். மதிய உணவுக்குப் பிறகு, “தஞ்சாவூர், திருச்சி மாவட்டங்கள்ல கம்யூனிச வேலைகள்?”னு கேட்டார். அப்பல்லாம் நக்ஸல்னு தனியா இல்ல. எல்லாம் கம்யூனிசம்தான். வழக்கம் போல எழுந்து சொன்னேன். அடுத்து கடைசி பைட்டக். “சங்கம், மத்த ஹிந்து அமைப்புகளோட வேலைகள்?”னு கேட்டார். யாரும் பதில் சொல்லலை. இருபது நிமிஷங்களுக்குப் பிறகு ஆரம்பிச்சார். கோபால்ஜிக்குன்னு ஒரு ஸ்டைல் இருக்கு. “என்ன சொல்ல வேண்டியிருக்கு? மத்த வேலைகள் பத்தி உங்களுக்கு நல்லாவே தெரிஞ்சிருக்கு. நான் சொல்லிதான் தெரியணுமா? அதுக்கு மாற்று சங்க வேலைதான்னு தெரியும்ல? ஏன் செய்யல?” இப்படிதான் கிடுகிடுன்னு ஏறும். “இதோ பாரு. நான் இரக்கமில்லாதவன். நாட்டுக்காக என்ன வேணும்னாலும் கேட்பேன். எனக்கு என் குடும்பத்தைப் பத்தி கவலையில்ல. கல்யாணம் பண்ணிக்காம, வேலைய விட்டுட்டு நாட்டுக்காக முழுநேரமா வருவேன்னு நினைக்கறவங்க கை தூக்குங்க”ன்னார். அப்போதான் எனக்குள்ள நெருப்புப் பொறி. ஆனா கை தூக்கலை. “அப்புறம் முதலாமாண்டு முடிக்காதவங்க முதலாமாண்டு போகணும்; இரண்டாமாண்டு போக வேண்டியவங்க அதுக்குப் போகணும்”ன்னார்.

1968ம் வருஷம் இரண்டாமாண்டு பயிற்சி போனேன். அப்போ வேலைக்குப் போனதால பைசா பிரச்சினை இல்ல. வீட்டுல சொல்லிட்டு கேம்ப் போயிட்டேன். நடுவுல, திருவானைக்காவல்ல குளிர்கால முகாம். பரமபூஜனீய ஸ்ரீ குருஜி வந்திருந்தார்.

இரண்டாமாண்டு போனேன். நான், ஆர்.பி.வி.எஸ்.மணியன், இப்போ பி.எம்.எஸ்.ல இருக்கற சுகுமாரன்னு பிரச்சாரக்கா வர வேண்டியவங்களுக்கு இருபது நாளும் கோபால்ஜியே சர்ச்சா (கலந்துரையாடல்) எடுத்தார். ஆனா, எங்கயும் பிரச்சாரக் பத்தி பேசலை. சங்க சிக்ஷா வர்கன்னா தனி உற்சாகம்தான். முகாம் முடிஞ்சு, எல்லோரும் கோபால்ஜி கிட்ட சொல்லிட்டுப் போகணும். சினிமாவுல நடக்கற மாதிரியே சம்பவம். நான் ‘வரேன் கோபால்ஜி’ என்றேன். ‘நீ வர போறேன்னு தெரியுமே? எப்போ வருவேன்னுதானே கேட்கறேன்’ன்னார். எங்க அப்பா நான் ஏழாவது படிக்கும்போது காலமாயிட்டார். எனக்கு ரெண்டு அக்கா. ஒரு தங்கை. முதல் அக்காவுக்கு மாமா வீட்டுலயே கல்யாணம் நடத்திட்டோம். அப்புறம் எல்லோரும் சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டோம். என் ரெண்டாவது அக்கா ராஜேஸ்வரிக்கு அப்போ 24 வயசு. வரன் அமையல. எங்க குடும்பம் பத்தி என்னை விட கோபால்ஜிக்கு நல்லா தெரியும். “எங்க ராஜேஸ்வரி அக்காவுக்கு கல்யாணம் நடக்கணும்ஜி. உங்களுக்கே தெரியும்”ன்னேன். “நல்லா தெரியும் டா. அவளோட கல்யாணத்துக்கு அப்புறம்தான் நீ பிரச்சாரக்கா வர போறே. அதுவும் தெரியும்”ன்னார் உரிமையோடு. முதல் தடவை அப்போதான் வாய் திறந்து சொன்னேன், “வரேன்ஜி”.

அதுக்கப்புறம், திரும்ப வேலைக்கு வந்துட்டேன். அப்பவே எனக்கு உடற்பயிற்சியில ஆர்வம் இல்ல. பௌத்திக், (அறிவுசார் துறை) தொடர்பு கொள்வதில்தான் ஆர்வம். தஞ்சாவூர் ஜில்லா பௌத்திக் பிரமுக் பொறுப்பு தந்தாங்க. அப்போ, தஞ்சாவூர் கலெக்டர் ஆபிஸ்ல வேலை செஞ்சேன். அஞ்சு மணிக்கு ஆபிஸ் முடியும். 4.55க்கு ஃபைலை மூடி வச்சிடுவேன். சரியா 5 மணிக்கு வேலை முடிஞ்சதும், ஆபிஸ் பின்னாடி இருக்கற கோயிலுக்கு வந்து, காக்கி நிக்கர் மாட்டிட்டு, கலெக்டர் ஆபிஸ் வளாகத்தில் சைக்கிள் மிதிச்சிட்டுப் போவேன். நான் யாருன்னு அங்க எல்லோருக்கும் தெரியும்.

ஒருநாள் கோபால்ஜிக்கு லெட்டர் போட்டேன். “உங்களை அவசரமா பார்க்கணும்”னு. “எப்போ பார்க்கலாம்”ன்னு கேட்டு பதில் கடிதம். திருச்சியிலேர்ந்து தஞ்சாவூருக்கு ரயில்ல ரெண்டாம் வகுப்புல போகறதா சொன்னார். முதல் தடவையா ரெண்டாம் வகுப்புல போறேன். “ஜி, எப்பவும் சங்க ஞாபகமாவே இருக்கு. ஆபிஸ்லயும் அதே ஞாபகம். ஒரு ஸ்வயம்சேவக் அரசாங்கத்தை ஏமாத்தக்கூடாது. நான் ராஜிநாமா பண்ணிட்டு பிரச்சாரக்கா வந்திடுடறேன்”ன்னேன். “முடியாது டா.. ஒழுங்கா போய் ஆபிஸ்ல வேலை செய். நீ ராஜிநாமா பண்ணிட்டு வந்தாலும் நான் ஏத்துக்க மாட்டேன்”ன்னார். அதுக்கப்புறம் சொன்னார், “ராஜேஸ்வரிக்கு கல்யாணம் பண்ணனுங்கறது உன் கவலையில்லடா. எங்க கவலை. ஆனா, கல்யாணம் முடிஞ்சு நாலாவது நாள் பைய தூக்கிட்டு வந்திடணும்”ன்னார். நடுவுல, 1969ல் நாகபுரியில் மூன்றாமாண்டு பயிற்சி முடிஞ்சது. தஞ்சாவூருக்கு கோவிந்தன்ஜி பிரச்சாரக்கா வந்தார். அவர் ஒரு ஆதர்ஷ பிரச்சாரக். அவர்கிட்ட என்னைப் பத்தி கோபால்ஜி சொல்லியிருப்பார் போல. என்னை தஞ்சாவூர் காரியாலயத்துலயே தங்க சொன்னார் கோவிந்தன்ஜி. என்னோட சட்டை, வேட்டினு ஒவ்வொண்ணா காரியாலயத்துல வைக்க ஆரம்பிச்சுட்டேன். பிப்ரவரி 9ம் தேதி ராஜேஸ்வரி கல்யாணம். பிப்ரவரி 13லேர்ந்து 16 வரைக்கும் அந்த ஆண்டு மே மாதம் நடைபெறும் சங்க சிக்ஷா வர்க தயாரிப்பு பைட்டக். போனதும், கோபால்ஜியிடம் ‘ஜி… ராஜிநாமா பண்ணிட்டு வந்துட்டேன்’னு சொன்னேன். “அப்படியா… சரி”ன்னார். நாலு நாள் எதுவும் சொல்லலை. அப்போதைய அகில பாரத ஷாரீரிக் ப்ரமுக் மோரோபந்த் பிங்களே வந்திருந்தார். நாலாவது நாள் முடியும்போது என்னைப் பத்தி “தஞ்சாவூர் காரியகர்த்தர். அரசு வேலைய ராஜிநாமா பண்ணிட்டு வந்திருக்கார். இன்னைலேர்ந்து நாகர்கோவில் நகர் பிரச்சாரக்கா இருப்பார்”னு அறிவிச்சார் பிங்களே ஜி. இதுக்குள்ளே ஒருநாள் காலைல ஆளை காணோமேன்னு எங்க அம்மா தேடியிருக்காங்க. கொஞ்சம் கொஞ்சமா வீட்டுல புரிஞ்சது. என்னதான் சங்கம் நல்ல இயக்கம்னு தெரிஞ்சாலும், மகன் பிரச்சாரக்கா  போகறது எந்தத் தாய்க்கும் கவலையைத் தரும். “விவேகானந்தா நினைவுப் பாறையில 45 நாள் வேலை செய்யப்போறேன்”னு மட்டும்தான் வீட்டுல சொன்னேன்.

எப்படி இருந்தது நாகர்கோவில் பிரச்சாரக் அனுபவம்?

அப்போ விபாக் (மூன்று, நான்கு மாவட்டங்கள் சேர்ந்த ஏற்பாடு) சிஸ்டம் இல்ல. ஜில்லாதான். மத்தவங்க ஒரு ஜில்லா. சுப்பராவ்ஜி மட்டும் கன்னியாகுமரி ஜில்லா, இப்போதைய திருநெல்வேலி, தூத்துக்குடி சேர்ந்து திருநெல்வேலி ஜில்லா-னு ரெண்டு ஜில்லா பிரச்சாரக். அவரை எனக்கு முன்னாடியே தெரியும். தமிழ்நாட்டுலேர்ந்து கோவா விடுதலை போராட்டத்துல கலந்துண்டவர். என்னை விட வயதில் பெரியவர். மரியாதைக்குரியவர். எனக்கு அவரைப் பிடிக்கும், அவருக்கு என்னைப் பிடிக்கும். நகைச்சுவையா பேசிப்போம். அவர் கீழேதான் நாகர்கோவில் நகர் பிரச்சாரக்.

சுப்பராவ்ஜி புதுசு, புதுசா நிகழ்ச்சி நடத்துவார். நான் நாகர்கோவில் நகர் பிரச்சாரக்கா இருந்தாலும் என்னை ராஜபாளையம் கேம்ப்புக்கு அழைச்சிட்டுப் போவார்.

ராஜபாளையத்துல ஒரு நிகழ்ச்சி. ராத்திரி சாப்பிட்டுட்டு 9 மணிக்கு வரணும். வீட்டுலேர்ந்து சாப்பாடு கொண்டு வரணும். ராத்திரி முழுக்க நிகழ்ச்சிகள். காலையில புறப்பட்டுப் போகணும்.

ஒருநாள் கன்னியாகுமரில ஒரு நிகழ்ச்சி. சாப்பிட்டுட்டு 8 மணிக்கு நாகர்கோவில் காரியாலயம் வரணும். 9 மணிக்கு பதசஞ்சலன். விடிய, விடிய நடக்கணும். நம்பிநாதன்னு ஒருத்தர். அப்போ சின்ன வயசுதான். சுப்பராவ்ஜிக்கு பிடிச்ச காரியகர்த்தர். “ஒண்ணுக்கு வந்தா…”னு கேட்டார். “வந்தா வரிசைலேர்ந்து விலகி போயிட்டு ஒண்ணுக்கு போயிட்டு ஓடி வந்து வரிசையில சேரணும். நடக்கறது நிக்காது”ன்னார். முதல் வரிசையில சுப்பராவ், கடைசியா நானும், நம்பிநாதனும். முதல் நாளே அவர் எல்லா இடத்துக்கும் நடந்து பார்த்து வந்துருக்கார். குளைச்சல், மண்டைக்காடு கடலோரங்கள் எல்லாம் போயிட்டு திரும்ப வரணும். திரும்பும்போது கலைய சொல்லிட்டார். ஆனா, நடக்கறது நிக்கக்கூடாது. அது சனிக்கிழமை இரவு. மறுநாள் காலை 6 மணிக்கு சாங்கிக். நேரா சாங்கிக் போயிட்டு வந்து, குளிச்சிட்டு, இட்லி சாப்பிட்டுட்டு வந்தா, தூக்கம் வந்தது.

அதேபோல, ராஜபாளையத்துல ஒரு சாங்கிக். பக்கத்து ஊருலேர்ந்து அறிமுகமில்லாத ஒரு ஸ்வயம்சேவகரை அழைச்சிட்டு வந்து கைலி கட்ட வச்சார். திடீர்னு சாங்கிக் மேல தாக்குதல். சண்டை உக்கிரமானப்போ, “ஸ்தபோ”னு கட்டளை போட்டு நிறுத்தினார். அந்த ஸ்வயம்சேவகரை அறிமுகப்படுத்தி வச்சார். அப்போ சொன்னார், “தாக்குதல் நடந்தது. பால ஸ்வயம்சேவக் கூடப் பயப்படலை. கையில கிடைச்சதை வச்சி அடிக்க வந்தாங்க. வேடிக்கை பார்த்த மக்கள், பெண்கள் உட்பட ஓடி வந்தாங்க. இதை சோதிக்கத்தான் இந்தப் பயிற்சி.” இதுதான் சுப்பராவ்.

சூரியநாராயண ராவ்ஜியிடம் பழகியதைப் பற்றி?

தாயன்புக்கு கோபால்ஜின்னா, தந்தையன்புக்கு சூரிய நாராயண ராவ். எப்பவும் என் வழிகாட்டின்னா சூரிஜியைதான் சொல்லுவேன். அன்பு காட்ட வேண்டிய இடத்துல அன்பு. கண்டிப்பு காட்ட வேண்டிய இடத்துல கண்டிப்பு. எல்லோரும் என் பௌத்திக் நல்லா இருந்ததுன்னு பாராட்டுவாங்க. சூரிஜி முகத்தை உர்ன்னு வச்சிட்டு, “என்ன பௌத்திக்கெல்லாம் குடுத்தீங்க”ன்னு ஆரம்பிப்பார். ஏதோ சொல்ல வர்றார்னு அர்த்தம். அதே நேரத்துல நல்லது செஞ்சா பெரிசா பாராட்டுவார். எனக்கு கூச்சமா இருக்கும்.

ஈவெரா இறந்தப்போ அவரோட உடம்புக்கு தேசியக்கொடி போர்த்தி மரியாதை பண்ணாங்க. எனக்குத் தாங்கலை. “ஒருவர் ஆரம்பத்துல எப்படி வேணும்னாலும் இருக்கலாம். கடைசி காலத்துல எப்படி இருக்கார்ங்கறதுதான் முக்கியம். ஈவெரா ஆரம்பத்துல சுதந்திரத்துக்குப் பாடுபட்டிருக்கலாம். ஆனா, அவரோட கடைசி காலத்துல தேசியக்கொடியை எரிச்சவர். திராவிடஸ்தான் கேட்டவர்”னு எழுதி, ‘தேசவிரோதிக்கு தேசியக்கொடி மரியாதையா’ன்னு ஒரு கட்டுரை விஜயபாரதத்துல எழுதினேன். காரியாலயத்துல சூரிஜி, ‘என்ன… விஜயபாரதத்துல கட்டுரை…?’ன்னார். அத்தனைக்கும் அப்போ அவருக்கு தமிழ் படிக்கத் தெரியாது. “ஒருத்தர் இறந்துபோகும்போது, அவரைப் பத்தி விமர்சிப்பது பண்பாடு இல்ல. ராமாயணத்துல ராவணனை ராமன் கொன்றான். வானரங்கள் குதித்தன. ராமனுக்கு கோபம் வந்தது. என்ன இருந்தாலும் ராவணன் இலங்கை வேந்தன். அவனுக்கு உரிய மரியாதை தரணும்ன்னார். அதேபோல, ஒருத்தர் இறக்கும்போது அவரோட நல்ல விஷயங்களைத்தான் சொல்லணும்”ன்னார். சில வருஷங்களுக்கு அப்புறம் கண்ணதாசன் மறைந்தார். அவர் கடைசியா இயேசு காவியம் பாடினார். எனக்கு அது தாங்கலை. பிறகு இயேசு காவியம் அவரது கடைசி படைப்பு அல்ல என்று தெரிந்து கொண்டேன். ஹிந்து தெய்வங்களை எழுதும்போது புகழ் பெற்றார். இயேசு காவியம் எழுதியதும் மறைந்துவிட்டாயேன்னு கவிதை எழுதினேன். அப்பவும் சூரிஜி, “இந்த மாதிரி எழுதாதேன்னு முன்னாடியே உங்கிட்ட சொல்லியிருக்கேனே?” என்றார்.

அதேபோல, பாராட்டும் போது எல்லார்கிட்டயும் பாராட்டுவார். தென் தமிழகத்துல இருந்ததால எனக்குப் பல புதிய அனுபவங்கள் கிடைத்தன. கோயில் நிகழ்ச்சிகள்ல பேச கூப்பிடுவாங்க. சொற்பொழிவாளர்கள் மாதிரியே சின்ன மேஜை போட்டு, அதுல மைக் வச்சி, உட்கார்ந்துட்டு பேசணும். நானும் `நம பார்வதி பதயே நமஹ`ன்னு ஆரம்பிப்பேன். அப்புறம் எல்லோரும் சங்க பௌத்திக்தான். நான் அப்ப ஜிப்பா போட்டிருப்பேன். அதனால சுகி சிவம் மாதிரியே இருப்பேன்னு சொல்வாங்க. ஒருமுறை சுகி சிவம் ராஜபாளையம் வந்திருந்தார். அவரைப் பார்க்க போயிருந்தேன். “நான் உங்களைப் போலவே இருக்கறதா சொல்றாங்க. அதனாலதான் பார்க்க வந்தேன்”ன்னு சொன்னேன். “நீங்கதான் இல.கணேசனா?”ன்னு கேட்டார். ஆச்சரியமா, “எப்படி தெரியும்?”ன்னு கேட்டேன். “என்னை எல்லோரும் இல.கணேசன் போலவே இருக்கீங்கன்னு சொல்றாங்க”ன்னார். ஒரு கூட்டத்துல ‘தென்பாண்டிச் சிங்கம்’ இல.கணேசன்னு நோட்டீஸ்ல போட்டாங்க. எனக்கு எப்பவும் பட்டப் பெயர் பிடிக்காது. இல.கணேசன் மட்டும்தான். அதுக்கப்புறம், சூரிஜிய பார்க்க சென்னை காரியாலயம் போயிருந்தேன். சூரிஜி அறையில யாரோ பேசிக்கிட்டிருந்தாங்க. தயங்கி நின்னேன். உள்ளே வர சொன்னார். “இவர்தான் இல. கணேசன். இவரை தெற்குப் பக்கம் தென்பாண்டிச் சிங்கம்னு கூப்பிடுவாங்க”ன்னு சொன்னார். கூனிக் குறுகிப் போயிட்டேன்.

ஒருமுறை ஆர்எஸ்எஸ்ஸின் இரண்டாவது சர்சங்கசாலக் ஸ்ரீகுருஜி சென்னைக்கு வந்திருந்தார். அவரோட ஒரு பைட்டக் ஏற்பாடாகியிருந்தது. சங்கத்தின் கூட்டங்கள் குறித்த நேரத்தில் ஆரம்பிக்கும். அதுவும், சர்சங்கசாலக் கலந்துகொள்ளும் பைட்டக். அதுக்கு நாங்க புறப்படும்போது பஸ் ஓடலை. கல்லூரி மாணவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் சண்டை. கூட்டத்துக்கு நடந்து போனோம். அரை மணி நேரம் தாமதம். எங்களைப் பார்த்தார் குருஜி. தாமதத்துக்கான காரணத்தைச் சொன்னோம். தாமதமானதுக்கு அவர் கோபிக்கலை. ஆனா, மாணவர்களுக்கும் கண்டக்டர்களுக்கும் சண்டைனு கேள்விப்பட்டு வருத்தத்தோடு சொன்னார், “சிங்கம் தன்னோட முகத்தை தன்னோட நகங்களால பிறாண்டிக்கற மாதிரி கோரமான காட்சி என் கண்ணு முன்னாடி தெரிகிறது.” அவர் சொன்னது என் மனசுல அப்படியே தங்கியிருந்தது. ஒரு பைட்டக். காலையில குளிக்கறதுக்கு முன்னாடி என் துணிகளை  ஊற போட்டுட்டு பேப்பர் படிச்சிட்டிருந்தேன். அப்போ அந்தக் காட்சி திரும்ப ஞாபகம் வந்து ஒரு பாட்டு பிறந்தது. “நாட்டின் உடைமையை நாமே கற்றால் நஷ்டம் யாருக்கு.”இதுதான் முதல் வரி. அடுத்து, “தொழில் செய்தாலும் கல்வி கற்றாலும் தேசத்தின் நன்மைக்கே”. இப்படியே முழு பாட்டையும் ராகம் போட்டேன். எழுதி வைக்கல. சூரிஜியிடம் சொன்னேன். அவர் உற்சாகப்படுத்தினார். அது சங்க சிக்ஷா வர்க பைட்டக். பாடல் பத்தி சர்ச்சை வரும்போது “கணேசன் ஒரு பாட்டு எழுதியிருக்கான்”ன்னு சொன்னார். நான் பாடிய பாடல் அந்த வருடம் சங்க முகாம் பாடலானது. அதுதான் ‘பாரதத் தாயைப் பணிந்து வணங்கும் வீர மைந்தர் நாம்’. அதுதான் நான் எழுதிய முதல் பாடல். அதுக்கப்புறம் அடிக்கடி “என்ன ஏதாவது புதுப் பாட்டு எழுதினயா?”னு கேட்டு உற்சாகப்படுத்துவார்.

என்னவோ தெரியலை. வடக்குல சண்முகநாதன், மேற்குல பத்மநாபன், தெற்குல நான். எங்க மூணு பேரையும் சொந்த பிள்ளைகள் போலவே பாராட்டி, கண்டிப்பு காட்டி வளர்த்தார் சூரிஜி. இதுல மறைந்த பத்மநாபன், சிவராம்ஜி போல சட்டை, வேட்டியைத் துவைத்து இஸ்திரி போடாமல் அணிந்து கொள்வார். ஆனா, பொள்ளாச்சி மகாலிங்கம், தற்போதைய தென் தமிழக சங்கசாலக் ஆர்.வி.எஸ்.மாரிமுத்து போன்ற பல தொழிலதிபர்களை சங்கத்துக்கு கொண்டு வந்தவர்.

நெருக்கடி நிலை போராட்டம் பற்றி?

என்னைப் பொருத்தவரை நெருக்கடி நிலை நமக்குக் கிடைத்த நல்ல வாய்ப்பு. வெறும் சங்கம், சங்கம் சார்ந்த நபர்களோட இருந்த எனது தொடர்பு வெளி நபர்களுக்குச் சென்றது நெருக்கடி நிலையில்தான். பழ.கருப்பையா, பழ.நெடுமாறன் போன்றவர்களைச் சந்தித்தது அப்போதான். கம்யூனிஸ்ட் கட்சி ஆபிசுக்கும் போனேன். பாலசுப்பிரமணியம், ராமமூர்த்தி போன்றவர்கள் இருந்தாங்க. அங்கிருந்த ஒருத்தரிடம் “என்னோட பெயர் சொல்ல மாட்டேன். தலைமறைவுப் பெயர் ராமானுஜம். நான் ஆர்எஸ்எஸ்காரன். நாமல்லாம் சேர்ந்து வேலை செய்யணும்”னு சொன்னேன். அவங்க பேசிட்டு, “நாங்க உங்களோட வேலை செய்ய முடியாது தம்பி. எங்க வழி வேற. தனியா செஞ்சிக்கறோம். நீங்களும் உங்க வழியில செய்யுங்க. வாழ்த்துக்கள்”னு சொல்லி அனுப்பி வச்சாங்க. அதுக்கப்புறம் அவங்களைச் சந்திக்கலை. ஏன்னா, சிபிஐ எமர்ஜென்சியை ஆதரிச்சது. சிபிஎம் ஆதரிக்கலை. ஆனா, எதிர்க்கவும் இல்ல.

பழ.கருப்பையாவை மதுரையில அவரோட வீட்டுக்குப் போய் பார்த்தேன். அவர் தீவிரத் தமிழ்ப் பற்றாளர். ஜ,ஸ மாதிரி எழுத்துக்களைப் பயன்படுத்தமாட்டார். “ஆச்சி குளம்பி (காபி) கொண்டு வா”ன்னு சொன்னார். திருக்குறள் படிச்சதால சைவம் மட்டுமே சாப்பிட ஆரம்பிச்சிட்டார். என்னைப் பொருத்துவரை அவர் சிந்தனையில் குழப்பம். ஆனா, என்னைக் கண்டால் அவருக்குப் பிடிக்கும்; அவரைக் கண்டால் எனக்கும் பிடிக்கும். நல்ல நண்பர்.

அதேபோல, பழ.நெடுமாறனையும் பார்த்தேன். அப்போ அவர் பழைய காங்கிரசுல இருந்தார். அப்பவே அவர் பெரிய தலைவர். நானோ சங்க பிரச்சாரக். அவரிடம் போய், “எமர்ஜென்சிக்கு எதிரா நோட்டீஸ் போட்டிருக்கோம். அதை எங்க வைக்கிறதுன்னு தெரியல. யாராவது வீட்டுல வச்சா மாட்டிக்குவோம். அதனால, அந்த நோட்டீஸை பத்திரமா வைக்க ஏதாவது இடம் பண்ணி தரணும். அதுதான் என் கோரிக்கை” என்றேன். அவரை முதல் தடவையா அப்போதான் பார்த்தேன். உடனே நோட்டீஸை எடுத்துட்டு அவரோட கார்ல உட்கார சொன்னார். ஒரு பழைய பேப்பர் கடைக்கு முன்னாடி காரை நிறுத்தினார். அந்த கடைக்காரரிடம், “இந்த நோட்டீஸை செல்ஃப் அடியில ஓரமா போட்டு வை. இந்தப் பையனோ, இவர் கை காட்டற ஆளோ சொல்லற மாதிரி நடந்துக்கோ. கொஞ்சம் ஜாக்கிரதை!” என்றார்.

அப்போ தலைமறைவா பெயரை மாத்திட்டு இருந்தாலும், வழக்கம் போல எல்லார் வீட்டுக்கும் போவேன். அப்படி மதுரையில எனக்கு தெரிஞ்ச, நல்லா பழகிய காரியகர்த்தரோட வீட்டுக்குப் போயிருந்தேன். போனதும் வழக்கம் போல நேரா உள்ளே போயிட்டேன். “யார் நீ? என்ன சொல்லாம திடீர்னு உள்ளே வந்துட்ட?”னு கத்தறார். முதல்ல எனக்கு ஒண்ணும் புரியல. அதிர்ச்சியாயிட்டேன். அப்புறம்தான் காரணம் புரிஞ்சது. நான் மாறுவேஷத்துல இருந்தேன். அதுக்குள்ள அவரோட மனைவி, “ஸ்ஸ்ஸ்…. எல்.ஜி… எல்.ஜி..”னு சைகை காட்டினாங்க. காரணம், நல்லா பழகியிருந்தாலும் அவர் என் உருவத்தை மட்டுமே தெரிந்து வைத்திருந்தார். ஆனா, அவரோட மனைவியோ, என்னை சில தடவை பார்த்திருந்தாலும், குரல் அடையாளம் தெரிஞ்சிருக்கு.

எமர்ஜென்சி அமலில் இருந்தாலும், சங்க வேலை தொடர்ந்து நடந்தது. பைட்டக், குருபூஜா எல்லாம் நடந்தது. மதுரையில ஒரு ஷிபிர் கூட ஏற்பாடு பண்ணியிருந்தோம். கோபால்ஜி வந்திருந்தார். இன்னொண்ணு, எமர்ஜென்சிய எதிர்கொள்ள சங்கத்துல எந்த விசேஷப் பயிற்சியும் தரலை. நாடு நல்லா இருக்கணும், ஜனநாயகம் காப்பாற்றப்படணும்னு சொல்லப்பட்டது அவ்வளவுதான்.

எமர்ஜென்சி முடிஞ்சதும் அப்போ இருந்த காரியாலயத்தை காலி பண்ணினோம். வீட்டு ஓனருக்கு 19 மாசம் வாடகை தர முடியல. இடம் தேடி அலைந்தோம். ஒரு வக்கீல் வீட்டு மாடியில இடம் இருக்குனு தெரிஞ்சு நான் தங்கறதுக்கு வீடு வேணும்னு கேட்டோம். அப்போ பேசும்போது ஆர்எஸ்எஸ் காரியாலயத்துக்குதான் கேட்கறோம்னு தெரிஞ்சதும் அந்த வக்கீலுக்கு ரொம்ப சந்தோஷம். “சார்… எனக்கு ஆர்எஸ்எஸ் பிடிக்கும் சார். எமர்ஜென்சில நல்லா வேலை செஞ்சீங்க. உங்க சங்கத்துல இருக்கற அண்ணாஜி மதுரையில மூத்த வழக்கறிஞர். அவரை நல்லாவே தெரியும்” என்றவர், “எமர்ஜென்சியில உங்க நோட்டிஸைப் படிச்சிருக்கேன். இல.கணேசன்றவர் நல்லா பேசுவார்னு சொல்வாங்க. அவரைப் பார்க்கும்போது நான் விசாரிச்சேன்னு சொல்லுங்க சார்” என்றார். நான்தான் இல.கணேசன்னு சொன்னேன். அவருக்கு ரொம்ப சந்தோஷம். அப்புறம், ஷாகா வரணும்னு கேட்டார். காலை ஷாகாவுல 5, 10 பேர்தான் வருவாங்க. அதுல, அந்த வக்கீலை எப்படி கூப்பிடறதுன்னு தயக்கம். “நாங்க ஷாகாவுல ரொம்ப சில பேரைத்தான் சேர்ப்போம். எல்லாரையும் சேர்த்துக்கறதில்ல. நீங்க விழாவுக்கு வாங்க” என்றேன். அவர் வற்புறுத்தினார். அடுத்த முறை பார்க்கும்போது “நாங்க பேசிட்டோம். நீங்க ஷாகாவுக்கு வரலாம்”ன்னேன். மதுரை சிம்மக்கல் ஷாகாவுக்கு வந்தார். அந்த பத்து பேருல அண்ணாஜியும் ஒருத்தர். அந்த வக்கீலுக்கு ரொம்ப சந்தோஷம். அப்புறம் கோபால்ஜி ஆள் கேட்டாரேன்னு இந்து முன்னணிக்கு அனுப்பினேன். அதோட மாவட்ட தலைவர், அப்புறம் மாநில தலைவரா இருந்தார். ஆர்எஸ்எஸ்ஸின் அப்போதைய அகில பாரத இணை செயலாளர் யாதவராவ் ஜோஷிஜி அவர் வீட்டுல தங்கியிருக்கார். அவர்தான் படுகொலை செய்யப்பட்ட இந்து முன்னணி மாநிலத் தலைவர் ராஜகோபாலன்.

மீனாட்சிபுரம் மதமாற்றம் குறித்து?

மீனாட்சிபுரம் விவகாரம் வேற, ஆனால் அவங்க நோக்கம் வேற. சில இளைஞர்கள் கள்ளநோட்டு அடிச்சிட்டு காவல்துறையிடம் மாட்டிண்டாங்க. அந்த விவகாரத்தைத் திசை திருப்பறதுக்காக தீண்டாமையால் பாதிக்கப்பட்ட ஹிந்து அரிஜனங்கள் கும்பலா முஸ்லிம் மதத்துக்கு மாற போறதா கிளப்பினாங்க. அது ஊடகங்களில் பரவி, பெரிய அளவில் விளம்பரம் தேடித் தந்தது. அந்தச் செய்தியை படிச்ச உடனே ஒரு பொறுப்பாளரைக் கூட்டிட்டு அந்த ஊருக்குப் போயி சேர்ந்தேன். அங்க ஒருத்தர் “வாங்க… வாங்க… ஆர்எஸ்எஸ்காரங்க உடனே வந்துருவாங்கன்னு நேத்துதான் சொல்லியிருந்தேன்”னு சொன்னார்.

இந்த நேரத்துல, கரூரில் சங்கத்தோட மாநிலக்குழுக் கூட்டம் நடந்தது. அந்த பைட்டக்கில்தான் கோபால்ஜியை ஹிந்து முன்னணி ஆரம்பிக்க சொல்லி அனுப்பினாங்க. அப்போ, புது இயக்கத்துக்கு என்ன பெயர் வைக்கலாம்னு விவாதம் நடந்தது. தனுசுஜிதான் “ஹிந்து முன்னணினு பெயர் வைக்கலாம்”னு யோசனை சொன்னார். அந்தக் கூட்டத்துக்கு சங்கத்தோட அப்போதைய அகில பாரதப் பொது செயலாளர் சேஷாத்திரிஜி வந்திருந்தார். அவர் கையில் கர்நாடகத்துலேர்ந்து வெளிவந்த ஒரு ஆங்கில நாளிதழ் இருந்தது. அதில், ‘மதுரைக்கு அருகே மீனாட்சிபுரம் என்ற கிராமத்தில் 1,000 அரிஜனங்கள் முஸ்லிம் மதத்துக்கு மாறத் திட்டம் போட்டிருக்கிறார்கள். அதே கிராமத்தைச் சேர்ந்த டாக்டர் மனோகர் என்பவர் ஏஜண்ட்டாக செயல்பட்டு மதம் மாற்றி வருகிறார்’னு எழுதியிருந்தது. “இது பற்றிய விவரம் தெரியுமா?”னு சேஷாத்திரிஜி கேட்டார். “தெரியாது” என்றோம். கூட்டம் முடிந்தது. கோபால்ஜி ஹிந்து முன்னணி தொடங்க அனுப்பப்பட்டு விட்டார். நானும், சங்கத்தின் அப்போதைய மாநிலத் தலைவர் ரங்கசாமி தேவரும் மீனாட்சிபுரம் போக முடிவாச்சி. ரங்கசாமி தேவரோட மகள் டாக்டர். அவருக்கு இந்த டாக்டர் மனோகரைத் தெரிந்திருந்தது. அங்க போறதுக்குள்ள அவர் மதம் மாறியிருந்தார்.

நாங்க சங்கத்தின் பெயரை சொல்லலை. ‘தியாகபூமி’னு ஒரு பத்திரிகையிலேர்ந்து வர்றதா சொன்னோம். முதல்ல மதம் மாறாம இருந்தவங்களையும், அப்புறம் மதம் மாறினவங்களையும் பார்த்தோம். “முஸ்லிம் மதத்துல சேரும் எண்ணம் எப்போ வந்தது”ன்னு கேட்டோம். ”முஸ்லிம் மதத்துல சேரும் எண்ணமெல்லாம் இல்லீங்க. ஆனா, ஹிந்து மதத்தை விட்டு வெளியே போற எண்ணம் ரொம்ப நாளா இருந்துச்சுங்க” என்றனர். ஆனா, மதமாற்றத்தைப் பெருமளவு தடுத்துட்டோம். ராமநாதபுரம் மாவட்டம்தான் அவங்க இலக்கு. அப்போ நமக்கு கிடைச்ச சொத்துதான் இப்போதைய மாநில துணைத் தலைவர் சுப.நாகராஜன்ஜி, சங்கத்தின் முன்னாள் மாவட்டத் தலைவர் ஆத்மநாதசுவாமி போன்றவர்கள். கோவிந்தன்ஜியை ராமநாதபுரம் அரண்மனையில் ஒரு அறையில் தங்க வைத்தோம். அவர் உள்ளூர்ப் பிரமுகர்களை நம் பக்கம் கொண்டு வந்தார்.

பொதுவா, முஸ்லிம்தான் முரடர்கள்; கிறிஸ்துவர்கள் அப்படியில்லைன்னு ஒரு எண்ணம் இருந்தது. அதையும் உடைக்கற மாதிரி கன்னியாகுமரி மண்டைக்காடு கலவரம். இப்போ யோசிச்சு பார்த்தா, இதெல்லாம் தமிழகத்தில் சங்கம் வளர இறைவன் ஏற்படுத்திய வாய்ப்புனு தோணுது.

நிறைய தேசபக்தி பாடல்களை எழுதியிருக்கீங்களே?

தமிழகம் ஒரு காலத்தில் உடைக்க முடியாத பாறைனு சொல்வாங்க. கும்பகோணத்தில் ஒரு பைட்டக். யாதவராவ் ஜோஷிஜி வந்திருந்தார். “தமிழகத்தில் 100 ஷாகா”னு வலியுறுத்தினார். பின்னாடி, கன்னியாகுமரி ஜில்லாவுல மட்டும் 100 ஷாகா. அதை வச்சி, “வெறும் கல்லாக இருந்தது தமிழகம் இன்றொரு வில்லாக வளைந்ததைக் காண்போமய்யா… யாரு வந்து பேசினாலும் 100 தாண்டி காட்டு என்பார். 600ஐத் தாண்டியாச்சு. ஆயிரத்த தாண்டப் போறோம்”னு ஒரு பாடல் எழுதினேன்.

டாக்டர்ஜியோட நூற்றாண்டு விழா 1989ல் நடந்தது. ஒரு பைட்டக்கில் “மாநிலத்துக்கு ஒரு பாடல் எழுதணும்”னு சூரிஜி சொன்னார். அன்னைக்கு மதியத்துக்குள்ள “ஜி… ரெண்டு பாரா எழுதியிருக்கேன்”னு சொன்னேன். “ஆனா பாட்டுதான் முஸ்லிம் சாயல்ல இருக்கும்”னு இழுத்தேன். “எங்கே பாடு”ன்னார். “கேசவனை நாம் வணங்குவோம். அவர் பாதையிலே நாமும் செல்லுவோம்”னு பாடினேன். அடுத்த ரெண்டு பாரா-வ ஜெயமணி (சங்கத்தின் மூத்த பிரச்சாரக்) எழுதினார். ராகமும் போட்டு, நாகபுரியில நடந்த டாக்டர்ஜி நூற்றாண்டு விழாவுல பாடினோம். சில பஞ்சாப் ஸ்வயம்சேவக் எங்கயிருந்தோ ஓடி வந்து டான்ஸ் ஆட ஆரம்பிச்சிட்டாங்க. முடிஞ்சதும், “எங்க ஊர் ராகத்தை எங்க இருந்து பிடிச்சீங்க”ன்னு கேட்டாங்க.

ஒரு தடவை மதுரையிலேர்ந்து திருவேடகம் பஸ்ஸுல போயிருந்தேன். அப்போ, ஜயப்ப பக்தர்கள் பாடிட்டு வந்த ராகம் அப்படியே பதிஞ்சிடுச்சு. வரிகளை மனசுல நினைச்சி ராகம் போட்டுட்டே வந்தேன். ”மலையில மகுடம் வச்சி”னு ஒரு பாடல். கரூர்ல ஒரு பொறுப்பாளர். கரகம் ஆடறவர். அவர்கிட்ட சொல்லியிருந்தேன். அவர் கேட்டார், “எங்க கரகத்துல ஆடற ‘சந்தனப் பொட்டு வச்சி’னு பாடல் இது”ன்னார். ஒரு ராகம் எப்படியெல்லாம் பயணிக்கறது பாருங்க.

ஒருமுறை யாதவராவ் ஜோஷிஜியும் நானும் நடைப்பயிற்சி போயிருந்தோம். அவர் பிறவியிலேயே பெரிய பாடகர். அது மூலமாதான் சங்கத்துக்கு வந்தார். ஆனா, இங்க வந்ததுக்கு அப்புறம் பாடறதில்லனு விரதம் பூண்டவர். “எல்லா ஹிந்தி பாட்டையும் ஏன்யா அப்படியே தமிழில் மொழிபெயர்க்கறீங்க. நீ எழுதற பாடல்களை தமிழ்நாட்டு மெட்டுலயே எழுது. அதுதான் அழகு” என்றார்.

சங்கப் பாடல்களை வைத்தே வரலாறு சொல்லிடலாம். கோபால்ஜி எழுதின பாட்டு எல்லாம் மந்திரம். பாரதியாருக்குப் பிறகு தமிழில் அதிகளவு தேசபக்தி பாடல்களை எழுதினவர் கோபால்ஜிதான். ஆனா, சங்கத்துல பாடல்களுக்கு யாரும் பெயர் போட்டுக்கறதில்ல.

ராஜபாளையத்துல சங்கத்தோட முகாம். முதல் தடவையா நான் முகாம் செயலாளர். ஆனா, முகாம் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி நாள் எனக்கு கடுமையான ஜுரம். படுத்த படுக்கையா ஆயிட்டேன். முதல் நாள் அப்போதைய சர்சங்கசாலக் பாளாசாகேப் தேவரஸ் வந்தார். அவரும், கோபால்ஜியும் என்னைப் பார்க்க நான் படுத்துருந்த அறைக்கே வந்துட்டாங்க. அப்புறம், பௌத்திக் (சிறப்புரை) க்கு முன்னாடி பாடல் பயிற்சி நடக்குது. கோபால்ஜி எழுதின பாடல்களை அவரே பாடி அரங்கேற்றுவார். ‘என் ஜன்மபூமி தாயே’ பாடல் அந்த முகாமில்தான் அறிமுகமாகுது. கோபால்ஜி பாடறார். “உனக்காகவே என் வாழ்வு, உனக்காக சாவும் ஏற்போம்” என்று உச்சஸ்தாயியில் போயிட்டு வரும். அந்த வரிகளைக் கேட்டதும், முகம் கை கால் அலம்பி கொண்டு போய் உட்கார்ந்துட்டேன். பிறகு, அந்த முகாமில் ஒருநாள் கூட படுக்கவே இல்ல.

எப்போது பா...வுக்கு வந்தீங்க?

1991-ல. சங்கத்தோட அகில பாரத அதிகாரிகள் ஒவ்வொரு பரிவார் இயக்கத்தின் வேலைகளுக்கு வழிகாட்டுவது வழக்கம். அதேபோல, சங்கத்தின் அப்போதைய அகில பாரத இணை பொதுச் செயலாளர் பாவுராவ் தேவரஸ்ஜி பி.ஜே.பி.யின் அமைப்பு வேலைகளுக்கு வழிகாட்டுவார். அவர் ஒருமுறை கோயம்புத்தூருக்கு ஒரு சிகிச்சைக்காக வந்திருந்தார். சங்கத்தின் மாநில இணை அமைப்பாளரான எனக்கு தென் தமிழகம் பொறுப்பு. எனவே, பாவுராவ் தேவரஸ்ஜியை சந்திக்கப் போயிருந்தேன். “தமிழ்நாட்டுலேர்ந்து பி.ஜே.பி.க்கு எப்போ ஆள் தர போறீங்க?” என்றார். “தர்றோம் ஜி” என்றேன். “எவ்வளவு நாள் இப்படியே சொல்லிட்டிருக்க போறீங்க?” என்றார். அந்த வருடம் அதற்காக உண்மையிலேயே யோசனை செய்திருந்தோம். நானல்ல, வேறொரு நபர். சங்கத்தின் முடிவுகளை அறிவிப்பதற்கு முன்னால் சொல்வதில்லை. “இப்போ இங்கே ஆட்கள் இருக்காங்க. அப்புறம் ஒருநாள் வந்து சொல்றேன்” என்றேன். என்னை ஏற, இறங்க பார்த்து விட்டு, “நீ ஏன் பி.ஜே.பி.க்கு வரக்கூடாது?” என்றார். எனக்கு அதிர்ச்சி. கனவிலும் அந்த நினைப்பு எனக்கு வந்ததில்லை. “நானோ சங்க பிரச்சாரக். நான் எப்படி தீர்மானிக்க முடியும்?” என்று ஏதோ சமாளித்துவிட்டு வந்துட்டேன்.

பிறகு, சூரிஜியை பார்க்கும்போது விஷயத்தை சொன்னேன். “நீ என்ன சொன்னே? சம்மதமா?” என்றார். “என்ன ஜி சொல்றீங்க? உங்க கிட்ட அப்படி கேட்டா என்ன சொல்வீங்க?” என்றேன் உரிமையுடன். “இல்ல. உன்னை பி.ஜே.பி.க்கு அனுப்பணும்னு ஏற்கெனவே யோசனை பண்ணியிருந்தோம். சேஷாத்திரிஜி உன் கிட்ட பேசறதுன்னு முடிவாயிருக்கு. அவர் பாவுராவ் தேவரஸ்ஜியிடம் சொல்லியிருப்பார். அவருக்கு பணிகள் வளரணுமேன்னு ஆதாங்கம். உன் கிட்ட நேரடியா கேட்டுட்டார்” என்றார் சூரிஜி.

அறிவிப்பதற்கு முன்னாடியே ஈரோட்டில் நடந்த மாநில செயற்குழுவுக்குப் போனேன். அந்த வருடம் நடந்த தேர்தலில்தான், அத்வானிஜி வேண்டுகோளுக்கிணங்க சங்கம் பல ஆண்டுகளுக்குப் பிறகு வேலை செய்தது. சங்கத்தின் சார்பில் என்னைத் தேர்தல் பணிக்கு அனுப்பியிருந்தார்கள். அதனால, என்னை செயற்குழுவில் பார்த்ததும் சிலருக்கு சந்தேகம் வந்தது. அதற்கு முன்னாடியே அப்போதைய மாநிலத் தலைவர் விஜயராகவலுஜிக்கும், மாநில பிரபாரிக்கும் மட்டும் தெரியும். பிறகு, முறைப்படி பி.ஜே.பி. மாநில அமைப்புப் பொதுச் செயலாளர்னு சங்கத்தால் அறிவிக்கப்பட்டேன்.

அப்போதைய தமிழக பி.ஜே.பி.யின் செயல்பாடு எப்படி இருந்தது?

ஜனா கிருஷ்ணமூர்த்திஜி, சங்கர்ஜி எல்லாம் அமைப்பு வேலை பார்த்திருக்காங்க. சில காரியகர்த்தர்களும் தமிழகம் முழுவதும் சுற்றி கட்சியை வளர்த்திருக்காங்க. ஒரு குடும்பம் மாதிரி இயல்பா இருந்தது. பேசிட்டே இருப்பாங்க, திடீர்னு செயற்குழு ஆரம்பிச்சிருக்கும். திடீர்னு எழுந்து போவாங்க, செயற்குழு முடிஞ்சிருக்கும். 16 மாவட்டங்களில் கட்சி வேலை இருந்தது. கொஞ்சம் கொஞ்சமா வேலை அதிகமாச்சி. எனக்கு வாழப்பாடி ராமமூர்த்தி ஒரு இன்ஸ்பிரேஷன். தினசரி அவரோட அறிக்கை பத்திரிகைகளில் வரும். ‘அவரைப் போலவே நாமும் தேசிய கட்சிதானே? நாம ஏன் அறிக்கை தரக்கூடாது’னு எண்ணம். சூரிஜிகிட்ட சொன்னேன். “நீயே அறிக்கை கொடு” என்றார். “நல்லா இருக்காது”. “அப்போ விஜயராகவலு பெயரில் அறிக்கை கொடு” என்றார். அப்படியே கொடுக்க ஆரம்பித்தேன். ஏதோ 7-வது பக்கத்துல சின்னதா ‘பாஜக கருத்து’னு வரும்.

ஒருநாள், காலையில எங்கயோ போயிட்டு அலுவலகம் திரும்பினேன். என் அறைக்குப் பக்கத்துல விஜயராகவலுஜி அறை. சில பேர் இருந்தாங்க. அப்பல்லாம் கட்சி அலுவலகத்துக்கு எப்பவாவதுதான் ஆட்கள் வருவாங்க. என்னனு பார்த்தா, காலையில வந்த அறிக்கைக்கு விளக்கம் கேட்டு வந்திருக்காங்க. விஜயராகவலு மத்த விஷயத்துல நல்ல விவரமான ஆள்தான். ஆனால், ஊடகங்களுக்குp பேச வராது. அப்போதைக்கு ஏதோ சமாளிச்சிட்டார்.

திரும்பவும் சூரிஜி, கோவிந்தாச்சார்யா கிட்ட பேசினேன். “உன பெயருலயே அறிக்கை விடு” என்றார். அப்போ கோவிந்தாச்சார்யா சொன்னார், “பேச ஆள் இல்லேன்னா நீதான் பேசணும். வேலை செய்ய ஆள் இல்லேன்னா நீதான் வேலை செய்யணும்”. அப்புறம் கொஞ்சம், கொஞ்சமா இல.கணேசன்னு வெளியே தெரிஞ்சது. முதல்முதலா என்னோட முழுமையான பேட்டி சன் டி.வி. நேருக்கு நேர் நிகழ்ச்சில வந்தது. என்னை பிரபலப்படுத்ததான் அந்த பேட்டி எடுத்ததா, அவரே பின்னாடி சொன்னார். இதனால, பி.ஜே.பி.யும் வளர்ந்தது.

நான் மாநில அமைப்புப் பொதுச் செயலாளராக இருந்தபோது, நிறைய பிரபாரிகள் வந்திருக்கிறார்கள். அதில் பிரபாரிகளுக்கு உதாரணம் என்றால் ஆந்திராவைச் சேர்ந்த ராமராவை சொல்வேன். காரியகர்த்தர்கள் வளர்ச்சி, அமைப்பு வேலைகளில் மிகுந்த அக்கறை கொண்டவர். அவர்தான், “தேசிய பொதுச் செயலாளர் வெங்கைய நாயுடு தென் பகுதியிலிருந்து அகில பாரத பொறுப்புக்கு ஆள் கேட்டார். உங்கள் பெயரைச் சொல்லியிருக்கேன்” என்றார். என் திறமை, தகுதி பற்றி எனக்குத் தெரியும். மாநில அளவில் பொறுப்பு வகிப்பது சரி, ஆனால் அகில பாரத அளவில் பொறுப்பு வகிக்குமளவு ஹிந்தி மொழியறிவு குறைவு. ஆனால், வெங்கைய நாயுடு தலைவரானதும் என்னை அகில பாரதச் செயலாளராக நியமித்தார். பிறகு, ராஜ்நாத் சிங் தலைவரானதும் அகில பாரதத் துணைத் தலைவரானேன்.

பிறகு, என்னை மாநிலத் தலைவராக இருக்கச் சொன்னார்கள். என்ன காரணம்னு எனக்குத் தெரியும். என்னைப் பொருத்தவரை நான் சங்க பிரச்சாரக். சங்கம் சொல்வதைக் கேட்பேன். மற்றபடி பிஜேபி தலைவர்கள் சொல்வதைக் கேட்பேன். மூன்றாண்டுகள் முடிவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்னாடி எனக்கு மாரடைப்பு ஏற்பட்டது. பைபாஸ் சர்ஜரி செய்தாங்க. அப்போது துணைத் தலைவராக இருந்த பொன்.ராதாகிருஷ்ணன், அடுத்து மாநிலத் தலைவரானார்.

எனக்கு சர்ஜரி பண்ணதாலேயே, அடுத்து எனக்கு எந்தப் பெரிய பொறுப்பும் தரலை. பிஜேபி வந்ததுலேர்ந்து இப்போது வரை தேசிய செயற்குழு உறுப்பினர். அதில் தொடருகிறேன். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பார்கள். அது இல்லாமல், முன்னாள் தேசியப் பொறுப்பாளர்கள், முன்னாள் மாநிலத் தலைவர்கள் கொண்ட நிரந்தரச் செயற்குழு பட்டியலும் உண்டு. அதில் நானும் இருக்கிறேன். அதேபோல, தேசிய அளவில் பயிற்சி முகாம்களுக்கான குழுவிலும் இருக்கிறேன். அகில பாரத பொறுப்பு தரவில்லை என்றாலும் பிற மாநிலங்களுக்கான பிரபாரி பொறுப்பு கொடுத்தாங்க. கேரளம், ஆந்திரப் பிரதேசம், அந்தமான் நிகோபர் தீவுகளுக்கு பிரபாரியா போட்டாங்க.

பிற மாநில பிரபாரியாகப் பணியாற்றிய அனுபவம்?

கேரளத்தில் மலையாளம் பேச வேண்டும். ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்தியில் பேச வேண்டும். அந்தமான், நிகோபரில் ஹிந்திதான் மொழி. ஒருமுறை அங்கே தேர்தல் பிரசாரத்துக்குக் கூப்பிட்டாங்க. ஒரு பகுதியில் “இங்கே தமிழர்கள் அதிகம். தமிழிலேயே பேசுங்க” என்றார்கள். தமிழில் பேச ஆரம்பித்ததும் சிலர் ஹிந்தியில் பேசுங்கன்னு சத்தம் போட்டாங்க. அப்படியே ஏதோ ஹிந்தியில பேசிட்டேன். அடுத்து பஞ்சாபிகள் வசிக்கும் பகுதி. “முன்ன பேசினது மாதிரியேதான் ஜி. இங்கயும் பேசுங்க” என்றார்கள். இந்த அனுபவம்தான் என்னை ராஜ்யசபையில் ஹிந்தியிலேயே சொற்பொழிவாற்றும் தைரியத்தைத் தந்தது.

கருணாநிதி, ஜெயலலிதா இருவரிடம் பழகியிருக்கீங்க. அவர்கள் பற்றி?

இருவரிடமும் பழகியிருக்கேன். ஜெயலலிதாவிடம் பழகியது குறைவு. பாபர் மசூதி இடிப்புக்கு முன்னாடி கரசேவை நடந்தது. அதைக் கண்டித்து தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் தீர்மானம் போடுறதா இருந்தாங்க. அந்தக் கூட்டத்துல ஜெயலலிதா கரசேவையை ஸ்ட்ராங்கா ஆதரிச்சி பேசினாங்க. நாம கூட அப்படி வலுவா பேசியிருக்க முடியாது. நல்ல பக்திமான் என்பதைத் தாண்டி சில விஷயங்களில் தெளிவாகவும் இருந்தார். அத்வானியிடமும், மோடியிடமும் நல்ல நட்பு. வாஜ்பாயிடமும் மரியாதை உண்டு. அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் வந்திருக்கலாம். ஒருமுறை அவங்க வீட்டுல அத்வானிஜி, அவரோட உதவியாளர் சோப்ரா, அப்போதைய பிரபாரி ரவிசங்கர் பிரசாத், நான், சுகுமாரன் நம்பியார் எல்லோரும் மதிய விருந்துக்குப் போயிருந்தோம். அந்த அம்மா மட்டும்தான். கலகலன்னு ஒரு மணிநேரம் போனது. சுகுமாரன் நம்பியாரும், அவங்களும் பள்ளித் தோழர்கள். ஒருமையில பேசிப்பாங்க. வருடாவருடம் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்து வரும். ஒரு வருடம் ‘அண்ணா, மன்னி, காயத்திரியை விசாரித்ததாகச் சொல்லவும்’ என்று பச்சை இங்க்கில் எழுதிக் கையெழுத்து போட்டிருந்தார்.

அடுத்து கருணாநிதி. நமக்கு எதிர்க் கருத்தா இருந்தாலும், நட்பு பாராட்டுவார். அவரை விட நான் ரொம்ப சின்னவன். ஆனால், நல்லா இருந்தவரைக்கும் மாடிலேர்ந்து கீழே வரைக்கும் வந்து வழியனுப்புவார்.

அவர்கள் இருவரிடம் சங்கத்தைப் பற்றி பேசியிருக்கீங்களா?

ஜெயலலிதாவிடம் பேசியதில்லை. கருணாநிதியிடம் நிறைய பேசியிருக்கிறேன். ஒருமுறை கோயில்களில் தமிழில் அர்ச்சனை செய்வதற்குத் தடை விதிக்கக் கோரி ஒரு வழக்கு. ஆர்எஸ்எஸ் சென்னை சங்கசாலக் வக்கீல் சம்பத்குமார்ஜிதான் வழக்கு போட்டவங்க தரப்பில் ஆஜரானார். அப்போ சங்கத்துலயே என்னை கருணாநிதியிடம் பேச சொன்னாங்க. “நாங்க எந்த மொழிக்கும் எதிரானவங்க இல்ல. தமிழிலேயே தேவாரம், திருவாசகம் பாட்டுகளை கோயில்களில் பாடுறோமே? ஆனா, ஆகம விதிகள் மீறக்கூடாது என்பதுதான் எங்கள் கவலை” என்றேன். அதுபோல, சில விஷயங்கள் பத்தி பேசியிருக்கேன்.

தமிழ்நாட்டில் பா...வை அறிமுகப்படுத்தியது திராவிடக் கட்சிகள்தான் என்று குற்றம்சாட்டப்படுகிறதே?

அவங்க வாதத்துல உண்மையில்லேனு சொல்ல மாட்டேன். விழுப்புரம் பக்கத்துல ஒரு கிராமம். அங்க இருந்து எங்க ஊர்ல ஆர்எஸ்எஸ் ஆரம்பிக்கணும்னு கேட்டு இரண்டு ஆசிரியர்கள் சங்கத்தோட காரியாலயத்துக்கு வந்திருந்தாங்க. அப்போல்லாம் அப்படி கேட்டு நேரில் வருவது ரொம்ப அபூர்வம். என்ன விஷயம்னு கேட்டா, “எங்க ஊர்ல கம்யூனிஸ்டுகாரன் மீட்டிங் போட்டான். ஒரு மணி நேர கூட்டத்துல 50 நிமிஷம் ஆர்எஸ்எஸ்ஸையே திட்டினான். எங்களுக்கு கம்யூனிஸ்டு பிடிக்காது. சரின்னு, ஆர்எஸ்எஸ் ஆபிஸை தேடி அலைஞ்சோம். அப்புறம் யாரோ சொன்னாங்க, சென்னை சேத்துப்பட்டுல ஆர்எஸ்எஸ் ஆபிஸ் இருக்குனு. அதனால இங்க வந்துருக்கோம்”னாங்க. அதனால, தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் வளர கம்யூனிஸ்டு கூடக் காரணம் சொல்லிக்கலாம்.

தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் பரவலா வளர ஒரு காரணம், துக்ளக்கில் சோ வெளியிட்ட சூரிஜியோட பேட்டி. நெருக்கடி நிலைக்கு அப்புறம், சூரிஜியை பேட்டி எடுத்து, ஐந்து மணி நேரம் வந்த பேட்டியை நாலு பக்கத்துல சுருக்கி வெளியிட்டார். சங்க காரியாலயத்துக்கும், துக்ளக் ஆபிசுக்கும் ஏராளமான கடிதங்கள். அதை நாங்க மாநில குழுவுல பிரிச்சு, எல்லா மாவட்டங்களிலும் கூட்டம் போட்டோம். மதுரை மாதிரி சில கூட்டங்களுக்கு தாணுலிங்க நாடாரும் வந்திருந்தார். அந்தக் கூட்டங்களில் ஷாகா பத்தி முதல்ல சொல்லிடுவேன். அப்புறம் இந்து முன்னணி, பிஜேபி பத்தியெல்லாம் சொல்லிட்டு யாருக்கு எங்கே போகலாம்னு தோணுதோ போங்கன்னு சொல்லுவேன். சிலர் ஷாகாவுக்கே வந்துருவாங்க.

சங்கம், ஷாகா போகற எல்லா இடத்துக்கும் இந்து முன்னணி, பிஜேபியும் போகும். அப்புறம் ஷாகா போகாத இடங்களில் கூட இந்து முன்னணி போச்சு. அப்படியே ஷாகா, பிஜேபியும் போச்சு. இப்போ பிஜேபிக்கு நிறைய இடத்துல கிளை இருக்கு. அப்படியே ஷாகா, இந்து முன்னணியும் போகுது. இது மூணுக்குமே தொடர்பு இருக்கு. இப்போ எங்க அடையாளம் நரேந்திர மோடி. ஊடகங்கள் மூலமா மக்களுக்கு அவரைத் தெரிஞ்சிருக்கு. ‘மோடி தெரியுமா’னு கேட்டுட்டே நாங்களும் போறோம்.

பொற்றாமரை கலை இலக்கிய அமைப்பு பற்றி?

1960களின் துவக்கத்தில், தஞ்சாவூர் மாவட்டத்துல எங்கே கூட்டம் நடந்தாலும் நண்பர்கள் சேர்ந்து சைக்கிள்ல போயிடுவோம். பட்டுக்கோட்டையில வேலை செய்திருந்தப்போ தமிழ் இலக்கியங்களைப் படித்திருக்கேன். ஆனா, சங்கத்தில் பிரச்சாரக்கா வந்ததும் கடிவாளம் கட்டியது மாதிரி ஒரே மாதிரியான வேலை. பாஜகவுக்கு அனுப்பின பிறகு, சென்னைக்கு வந்தேன். மாலை நேரங்களில் கட்சி நிகழ்ச்சிகள் பெரும்பாலும் இருக்காது. அந்த நேரங்கள்ல கம்பன் விழா மாதிரி இலக்கியக் கூட்டங்களுக்கு போய் ரசிக்க ஆரம்பிச்சேன். சில சமயங்களில், ஈவெரா, திராவிட இயக்கம் பத்தி சில பேரு பேசுவாங்க. ‘கம்பர் ஒரு தேசியவாதி, அவருக்கு எப்படி திராவிட சம்பந்தம்?’னு யோசிப்பேன். அப்புறம்தான் புரிஞ்சது, அவங்க பக்கம் பயிற்சி பெறுகிறான், இங்கே வந்து பேசுகிறான். இதுபத்தி மறைந்த பத்திரிகையாளர் மலர்மன்னன், ஆ.சொ.முத்துகண்ணன் கூட அடிக்கடி பேசுவோம். ‘நாமும் ஒரு இலக்கிய அமைப்பு ஆரம்பிக்கலாம்’னு முடிவு செய்தோம். “நீங்க யாராச்சும் ஆரம்பிங்க, நான் பின்னாடி இருக்கேன்”னு சொன்னேன்.  கட்சி நடத்தறதுக்கே காசு இல்ல, தனியா ஒரு அமைப்பு நடத்த ஏது பணம்? “இல.கணேசன்ங்ற பெயர் யாருக்கும் இல்ல. உங்க பெயரும் பிரபலமா ஆயிட்டிருக்கு. நீங்களே இருங்க”ன்னு சொன்னாங்க. எனக்கு தெரிந்து ‘இல’ என்ற இனிசியல் யாருக்கும் இல்ல, குறைந்தபட்சம் அரசியலில் இல்லை. ஆ.சொ.முத்துகண்ணன் பெயரில் ஆர்வமானவர்களைக் கூப்பிட்டோம். 26 பேர் வந்திருந்தாங்க. அப்படியே, முதல் கூட்டம் ஒரு பள்ளிக்கூட வளாகத்தில் நடந்தது. பாலகுமாரன் கலந்து கொண்டு வாழ்த்தினார். இந்த 13 வருடங்களில் ஆண்டுக்கு 10 கூட்டங்கள் என்று வைத்துக்கொண்டாலும் கூட, 130 கூட்டங்கள் நடந்திருக்கு. நிறைய தமிழறிஞர்களுக்கு விருது கொடுத்துருக்கோம். சில மறைந்த தமிழறிஞர் குடும்பங்களுக்கு  முடிந்தளவு நிதியுதவி தந்திருக்கோம். இளைஞர்களுக்கு வாய்ப்பு தருகிறோம். இயல், இசை, நாடகம் என்று மூன்று பிரிவுகளுக்கும் இடம் தருகிறோம். கடைசியாக நடைபெற்ற 14வது ஆண்டு விழா எல்லா வகையிலும் நிறைவாக இருந்தது.

தமிழகத்தில் ஆரியம்-திராவிடம்னு பிரிச்சு பேசுறாங்க. இந்தியாவில் வசிப்பவர்கள் அனைவரும் திராவிட இனம்தான். ஆரியம் என்பது குணத்தை குறிப்பது. இதற்கு சங்க இலக்கியகளில் இருந்து ஆதாரம் எடுத்து ‘சங்கப் பலகை’ என்ற பெயருல 30, 40 கூட்டங்கள் மூணு, நாலு வருஷம் நடத்தியிருக்கோம்.

இப்படியெல்லாம் முயற்சி பண்ணாலும், தமிழ் படிக்கறவங்களோட எண்ணிக்கை குறைஞ்சிட்டே வருது. பிறகு பேசுறவங்களோட எண்ணிக்கை குறையும். அப்புறம் தமிழ் புரிகிறவர்களோட எண்ணிக்கையும் குறையும். இதைத் தடுக்க இலக்கிய அமைப்புகளும், அரசும் முயற்சி எடுக்கணும். இதுதான் இப்போ என்னோட கவலை.

பாஜகவில் இருப்பவர்கள் அரசியல் நாகரிகத்தைக் கடைப்பிடிப்பவர்கள் என்ற கருத்துண்டு. ஆனால், அது தற்போது குறைந்து வருவதாக எதிர்க்கட்சிகள் சொல்கிறார்களே?

நீங்க யாரையோ மனசுல வச்சிட்டு இந்த கேள்விய கேட்கறீங்க. என்னைப் பொருத்துவரை, பிஜேபியில உறுப்பினரா சேரும் படிவத்தோட பின்பக்கத்துல ஐந்து விஷயங்கள் போட்டிருக்கு. அதுல ஒண்ணு, ‘நாங்க தூய்மையான அரசியலைக் கடைப்பிடிப்போம்’. ஆனா, சமீபத்துல மக்களவையில் நம்பிக்கை இல்லாத் தீர்மானத்துல எதிர்க்கட்சித் தலைவர்கள், காங்கிரஸ் தலைவர் ராகுல் உட்பட எப்படி அவதூறு பேசினாங்க. அப்போ நரேந்திர மோடி அந்த அடி அடிக்கலேன்னா என்ன ஆகியிருக்கும்? கர்ணன் கிட்ட கிருஷ்ணர் கேட்கிறார், “யாரிடம் தர்மம் பத்தி பேசுறே? திரௌபதியை துகிலுரியும் போது அந்த தர்மம் எங்கே போச்சு?” என்கிறார்.

சுதந்திரப் போராட்டத்துல காந்திஜி அகிம்சா வழியில் போராடினார். காந்திஜி தி கிரேட். ஆனா, திலகர் வெள்ளைக்காரனை அடிச்சு விரட்டணுங்கற கட்சி. அவரோட அணியிலதான் நம்ம தமிழ்நாட்டுலேர்ந்து பாரதியார் இருந்தார், வ.உ.சி. இருந்தார், வ.வே.சு.ஐயர், நீலகண்ட பிரம்மச்சாரினு பல பேர் இருந்தாங்க. அவங்க தேசபக்தியில இம்மியளவும் குறைந்தவர்களில்லை.

என்னைப் பொருத்தவரை, பெண்களைச் சொல்லும்போது ஜாக்கிரதையா இருக்கணும். அது மட்டும்தான் என்னோட யோசனை. எனக்கு ஒரு சுபாவம். எவ்வளவு கோபப்பட்டாலும் நகைச்சுவையா ஒரு கருத்து சொல்லிடுவேன். என்னைப் போலவே மத்தவங்களோட சுபாவமும் இருக்குமா? நீங்க யாரை மனசுல வச்சி கேட்கறீங்களோ, அவங்க பேச்சுல உண்மை இருக்கறதாலதான், அவங்களுக்கு மக்கள் ஆதரவு இருக்கு.

PARTY WITH DIFFERENCE என்பதுதான் பாஜகவின் பெயர். தற்போது பாஜகவும் காங்கிரஸ் போலவே மாறிவிட்டது என்று பேசுகிறார்களே?

அது ராஜ தர்மம், ராஜ நீதி. தமிழில் அரசியல். இன்னைக்கு அரசியல்ங்கறதே கெட்ட வார்த்தையாகிப் போச்சு. உண்மையில் அரசியலில் இருக்கும் ஒவ்வொருவரும் மூணு புத்தகங்களைப் படிக்கணும். மகாபரதம், கிருஷ்ணரோட வாழ்க்கையைச் சொல்லும் பாகவதம், சத்ரபதி சிவாஜியோட வாழ்க்கை வரலாறு. இந்த மூணு வரலாறையும் படிச்சிட்டா, நாங்க பிஜேபில பண்றதை யாரும் குறை சொல்ல மாட்டாங்க. நேர்மை, நியாயம் எல்லாம் தர்மத்தின் வழியில் நிற்பவர்கள் பேசுவது. பேசக்கூடாதவங்க கிட்ட தர்மத்தைப் பேசக்கூடாது. அப்படி பேசக்கூடாதவங்களிடம் பேசினா அதுக்கு பெயர் சத்குண விருக்தினு சாவர்க்கர் சொல்வார். கர்ணன் ஆயுதம் இல்லாம இருக்கும்போது கிருஷ்ணர், ‘அர்ஜுனா, இதுதான் சரியான நேரம். அம்பு விடு’ என்கிறார். இதே கிருஷ்ணர் தானே ராமனா இருக்கும்போது ‘இன்று போய் நாளை வா’ என்கிறார். ராமனே மாறும்போது நாங்க மாறக்கூடாதா? மோடிக்காகவோ, அமித் ஷாவுக்காகவோ, இல.கணேசனுக்காகவோ நாங்கள் செயல்படுவதில்லை. இந்த தேசம் நல்லா இருக்கணும்ங்கறதுக்காக எது பண்ணாலும் அது தர்மம். இன்னைக்கு தேசவிரோத சக்திகளெல்லாம் ஒண்ணா இருக்குது. நாங்க தனியா போராடுறோம். அது கவலையில்லை. கௌரவர்கள் நூறு பேர், பாண்டவர் அஞ்சு பேர்னாலும் தர்மம்தான் ஜெயிக்கும்.

Share

Janaki V Vs Kerala State Review

Jaanaki V Vs Kerala State (M) – கிறித்துவரான சுரேஷ் கோபியின் கதாபாத்திரம், ‘கன்னியாஸ்திரிகளுக்கத் தொல்லை கொடுக்கும் பாதிரியாருக்கு எதிரான வழக்கை நடத்தாமல் விடமாட்டேன், நேர்மையே முக்கியம்’ என்பதாக அறிமுகம் ஆகிறது. இதுதான் கதை என்று நினைத்தால் கதை வேறு ஒரு பக்கம் நகர்கிறது.

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட ஒரு பெண் தனக்கு நீதி வேண்டும் என்று போராடுகிறாள். அவளது தந்தை இறந்ததற்கு ஒரு வகையில்  ஹீரோவின் பிரபலம் காரணமாக இருக்க, பிரச்சினை பெரிதாகிறது‌. அந்தப் பெண்ணுக்கு எதிராக ஹீரோ சகட்டுமேனிக்கு வாதாட, அந்தப் பெண் கற்பழிக்கப்படவே இல்லை என்று நீதி வழங்கப்படுகிறது.

முன்பு ‘மன்னிக்க வேண்டுகிறேன், என்று ஒரு திரைப்படம் வந்தது. டப்பிங் திரைப்படம். டாக்டர் ராஜசேகரின் திரைப்படம்‌. மேக்கிங் வகையில் மொக்கையாக இருந்தாலும், கதையாக எனக்கு அந்தத் திரைப்படம் அந்த வயதில் பெரிய ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

தன் மனைவி மீது சந்தேகப்பட்டு அவளைக் கொலை செய்வதற்காகத் தான் இறந்ததாக உலகை நம்ப வைத்து விடும் ஹீரோ, அவளை கொல்லச் செல்லும் போது அவள் நிரபராதி என்பதைப் புரிந்து கொள்கிறான். தான் இறந்தது போல ஊரை நம்ப வைப்பதற்காக அவன் ஆடிய நாடகம் அவனுக்கே எதிராகிறது. தன்னை நல்லவன் என்று நம்ப வைக்க மீண்டும் போராட ஆரம்பிப்பான். குன்ஸாக இதுதான் திரைக்கதை.

அப்படிப்பட்ட ஒரு திரைப்படம் போல இந்தத் திரைப்படம் நகரும் என்று நினைத்தேன். அதே மாதிரிதான் ஆனது.

ஆனால் பெரிய மைனஸ் பாயிண்ட் என்னவென்றால், சுரேஷ்கோபி தான் முன்பு வாதாடியதற்கு எதிராக வாதாடுவதற்குப் பதிலாக தனது தங்கை வாதாடுவார் என்று சொல்லிவிடுகிறார்.  படத்தின் தலைப்பான ஜானகி வெர்ஸஸ் கேரளா ஸ்டேட் என்பதற்குள் அப்போதுதான் வருகிறார்கள்.

எத்தனையோ மலையாளிகள் திரைப்படத்தில் இருக்க, படத்தின் கருவுக்கான பழியை ஒரு ஹிந்திக்காரன் மேல் போட்டு விடுகிறார்கள். அவன் இந்திக்காரன்தானா என்பதிலும் ஒரு சந்தேகம் இருக்க, எத்தனையோ தேடிப் பார்த்தேன். யாரும் எங்கேயும் அதைப்பற்றி எழுதவே இல்லை. அவன் திடீரென்று பெண் போல மாறுவேடம் போட்டுக் கொண்டு நம்ம ஊர் குலசேகரப்பட்டினம் திருவிழா போல கேரளக் கிராமம் ஒன்றில்  ஆடுகிறான். அங்கே சென்று ஹீரோ பந்தாடி அவனைத் தூக்கிக்கொண்டு வர, படம் முடிவடைந்து விடும் என்று நினைத்தால், படத்தின் ஆதாரக் கேள்வி அப்போதுதான் ஆரம்பமாகிறது.

பலாத்காரம் மூலம் உருவான குழந்தையை தான் ஏன் சுமக்க வேண்டும் என்பதுதான் கதாநாயகியின் கேள்வி. அதற்காகத்தான் அந்தப் பெண் அரசை எதிர்த்துப் போராடுகிறார்.

ஜானகி எதிர் கேரள மாநிலம் என இந்தப் படம் வெளியாவதற்கு முன்பே பல சிக்கல்கள் உண்டாகி இருக்கின்றன. ஜானகி என்பது சீதையைக் குறிக்கும் சொல் என்பதால் இந்தப் படம் ஹிந்து மதத்தினைப் புண்படுத்தக் கூடும் என்று சென்ஸாரில் பெயரை மாற்றச் சொல்லி விடுகிறார்கள். அதற்கு எதிராக தயாரிப்பாளர்கள் கேரள ஹை கோர்ட் செல்ல, நீதிபதி படத்தைப் பார்த்துவிட்டு, அப்படி ஒன்றும் இல்லை ஜானகி என்பது சாதாரணப் பெயர்தான் என்று தீர்ப்பு சொல்லி, இருந்தாலும் ஜானகி வி அதாவது அவரது தந்தை பெயர் வித்யாதரன் எதிர் கேரள மாநிலம் என்ற பெயரில் வெளியாகி இருக்கிறது.

இப்படி மூன்று கதைகளை வைத்துக்கொண்டு எடுக்கப்பட்ட படம் ரொம்ப சுமார். மிக மோசமான நடிப்பு, சுரேஷ் கோபி உட்பட. ஹீரோயினாக வரும் பெண் மட்டுமே மிக நன்றாக நடிக்கிறார். நீதிமன்றக் காட்சிகள் பிடிப்பவர்களுக்கு இந்தப் படம் சுமாராகவாவது தோன்றலாம். மற்றபடி இந்தப் படத்தில் பார்க்க ஒன்றுமே இல்லை.

பார்க்க ஒன்றுமே இல்லாத படத்திற்கு எத்தனை பெரிய விமர்சனம் என்று நீங்கள் நினைக்கலாம். என் வாழ்க்கை உங்களுக்காகத் தியாகம் செய்யப் பட்டது என்பதை நான் ஏன் மீண்டும் சொல்ல வேண்டும்? இனி தியாகம்.

மலையாளப் படங்களுக்கே உரிய கிறித்துவத்தன்மை போலப் படம் முழுக்க கிறிஸ்தவ மயம். ஹீரோ உட்பட பல கதாபாத்திரங்கள் கிறித்துவர்கள். ஒரு முஸ்லிம் கதாபாத்திரம் வருகிறது. அட்டகாசமாக அந்தக் கதாபாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார்கள். ஒரு மரணத்திற்குத் தான் நேரடியாகக் காரணம் இல்லை என்ற போதும், தானும் அதற்கு ஒரு காரணம் என்று நினைக்கும் அந்தக் கதாபாத்திரம் மிக அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் பிரச்சினைக்குரிய ஹிந்திக்காரன் மதம் இந்து மதமாக இருக்கிறது.

Share

Anirudh and Resonance

நான் பத்தாம் வகுப்பு (அல்லது பன்னிரண்டு) படிக்கும்போது முதன்முதலில் அந்த வார்த்தையைக் கேள்விப்படுகிறேன். ஒத்ததிர்வு. அதாவது resonance என்னும் வார்த்தைக்கான தமிழ் வார்த்தை.

அதற்கு ஓர் உதாரணம் கொடுக்கப்பட்டிருந்தது. மேம்பாலங்களில் நடக்கும் போது ராணுவ வீரர்கள் மார்ச் பாஸ்ட் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஏனென்றால் அவர்களின் நடை அதிர்வெண்ணும் மேம்பாலத்தின் இயல் அதிர்வெண்ணும் ஒன்றாக ஒரு புள்ளியில் இயைந்து, ஒத்ததிர்வு ஏற்பட்டு, பாலம் இடிந்து விட சாத்தியக்கூறு இருக்கிறது. இதுதான் நான் படித்தது.

மொபைல் ஃபோனை வைப்ரேஷன் மோடில் நெஞ்சருகே வைக்கும் போதெல்லாம் எனக்கு ஓர் எண்ணம் தோன்றிக் கொண்டே இருக்கும். நெஞ்சமும் மொபைலும் ஒத்ததிர்வில் ஈடுபட்டால் என்னாகும் என்று. உடனே மொபைலைத் தள்ளு வைத்து விடுவேன்.

இதை எதற்கு இப்போது சொல்கிறேன் என்றால்…

அனிருத் இசை அமைக்கும் திரைப்படங்களைப் பார்க்கும் போதெல்லாம், என்றாவது ஒருநாள் நிச்சயம் ஒரு பத்து பேருக்காவது திரையரங்கில் ஒத்ததிர்வு ஏற்படத்தான் போகிறது. அனிருத் இப்போதே முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

Share