படிக்க வேண்டியவை

<< >>

மங்குனி இயக்குநர்களும் மகாதேவனும்

முன்குறிப்பு: இந்தத் தலைப்பை வைத்துத்தான் கட்டுரையை ‘நிழல்’ இதழுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் கைகூடவில்லை. எனவே இங்கே இந்தத் தலைப்பு வைக்கப்படுகிறது! –   இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும். (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்.) இந்தக் கட்டுரையின் முதல் வரி அல்ல இது. இதுதான் புத்தகத்தின் பெயரே. எழுதியவர் பி.ஆர். மகாதேவன். இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் தமிழ் இயக்குநர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, என்ன நேர்ந்தாலும் டென்ஷன் ஆகக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு [...]

Share

க்ரியா, சிக்ஸ்த் சென்ஸ், சவுக்கு வெளியீடு புத்தகங்களை ஆன்லைனில்/ஃபோன் மூலம் வாங்க

  இனி (சும்மா இருக்கும் என் வலைத்தளத்தில்) என்.எச்.எம் ஆன்லைன் பற்றி அப்டேட் செய்யலாம் என்றிருக்கிறேன். விளம்பரமாக வருகிறது என்று நினைக்கும் நண்பர்களை கொஞ்சம் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவ்வப்போது எதாவது எழுதினாலும் எழுதுவேன். அஞ்ஞாடி நாவலை ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/100-00-0000-208-0.html க்ரியாவின் தற்கால தமிழ் அகராதி, குட்டி இளவரசன் உள்ளிட்ட முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கும் க்ரியாவின் முக்கிய புத்தகங்களை என்.எச்.எம் ஆன்லைனில் வாங்கலாம். சிக்ஸ்த் சென்ஸ் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/home.php?cat=378 ’இந்தப் புத்தகத்தை வாங்கதீங்க’ விற்பனையில் சாதனை [...]

Share

மங்குனி இயக்குநர்களும் மகாதேவனும்

முன்குறிப்பு: இந்தத் தலைப்பை வைத்துத்தான் கட்டுரையை ‘நிழல்’ இதழுக்கு அனுப்ப நினைத்தேன். ஆனால் கைகூடவில்லை. எனவே இங்கே இந்தத் தலைப்பு வைக்கப்படுகிறது!

 

இங்கே திரைக்கதைகள் பழுது நீக்கித் தரப்படும். (ஆர்டரின் பேரில் புதிதாகவும் செய்து தரப்படும்.) இந்தக் கட்டுரையின் முதல் வரி அல்ல இது. இதுதான் புத்தகத்தின் பெயரே. எழுதியவர் பி.ஆர். மகாதேவன். இந்தப் புத்தகத்தைப் படிக்கப்போகும் தமிழ் இயக்குநர்கள் கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு, என்ன நேர்ந்தாலும் டென்ஷன் ஆகக்கூடாது என்று உறுதி எடுத்துக்கொண்டு படிப்பது நல்லது. ரத்த அழுத்தத்துக்காக குளிகைகளை விழுங்கும் இயக்குநர்கள் இந்தப் புத்தகம் அருகில் வராமல் இருப்பதே நல்லது. தமிழகம் போற்றும் எந்த ஒரு வணிகப்பட இயக்குநருக்கும், கலை இயக்குநருக்கும் இது பொருந்தும். விமர்சனம் என்று வந்துவிட்டால் யாரை விமர்சிக்கிறோம் என்பதல்ல பொருட்டு. நேர்மையாக விமர்சிக்கிறோமா, நாம் விமர்சிப்பதில் ஓர் அடிப்படை நியாயம் ஒரு தார்மிகமும் உள்ளதா என்பது மட்டுமே பொருட்டு என்று வைத்துக்கொண்டு, யாரையும் விட்டுவைக்காமல் எவ்வித சமரசமும் இல்லாமல் வெளுத்து வாங்குகிறார் மகாதேவன்.

இங்கே பதிவு செய்யப்படவேண்டிய ஒரு முக்கியமான விஷயம், இந்த மகாதேவன் திரையுலகத்துக்குள் புக விரும்புகிறார் என்பது. இந்தப் புத்தகம் அதற்கு உதவும் என்று அவர் நம்புவதாகவும் தெரிகிறது. ஆனால் எனக்கென்னவோ இந்தப் புத்தகமே அவருக்கு எதிரியாக இருக்கும் என்றே தோன்றுகிறது. இதுவும் ஒரு கொடுப்பினையே. மகாதேவனுக்கு வாழ்த்துகள்.

எட்டு முக்கியமான திரைப்படங்களை எடுத்துக்கொண்டு, அவற்றின் பிரச்சினைகள் என்ன என்ன, அவை எப்படி திரைக்கதையாக்கம் செய்யப்பட்டிருக்கவேண்டும் என்று விளக்குகிறார். ஒரு சிறிய காட்சியைக்கூட விட்டுவைப்பதில்லை. கதையையே மாற்றவேண்டுமானாலும் சிறிதும் தயங்குவதில்லை. (தான் எந்த விதத்திலும் கதையை மாற்றவில்லை என்று தன் நிலையை நியாயப்படுத்த அவர் முனையக்கூடும்.) முக்கியமான விஷயம், தான் விமர்சிக்க எடுத்துக்கொள்ளும் ஒவ்வொரு படத்துக்கும் மேம்பட்ட தனது திரைக்கதையையும் பதிவு செய்கிறார்.

இந்தப் புத்தகத்தில் அலச அவர் எடுத்துக்கொண்டிருக்கும் திரைப்படங்கள்: நந்தலாலா, அங்காடித் தெரு, ஆடுகளம், அழகர்சாமியின் குதிரை, தெய்வத் திருமகள், ஏழாம் அறிவு, எங்கேயும் எப்போதும், நான் கடவுள். இந்தத் திரைப்படங்களை அலச அவர் எடுத்துக்கொள்ளும் மிக முக்கியமான விதி – எல்லாப் படங்களையும் கலைப்படங்களாக மாற்ற முனைவதில்லை. கலைப்படங்களே தமிழின் மிக முக்கியமான படங்களாக இருக்கவேண்டும் என்றுதான் மகாதேவனும் விரும்புகிறார். என்றாலும் வணிகப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றில் ஏன் கலைத்தன்மை இல்லை என்று விவரிக்கத் தொடங்கி இல்லாத ஊருக்குப் போகாத வழியை அவர் காண்பிப்பதில்லை. வணிகப்படங்களின் மேம்பாடாக அவர் சொல்லும் திரைக்கதையும் வணிகப்படங்களை ஒத்ததாகவே உள்ளது. அடிப்படையில் வணிகப்படங்களை அவர் ஏற்காவிட்டாலும், அவற்றின் அடிப்படைக் கதையையும் அதற்கேற்ற பிசகாத ஒரு திரைக்கதையையும் முன்வைப்பதன்மூலம் மேம்பட்ட வடிவத்தைக் கொடுக்க இயலும் என்பதுதான் அவர் சொல்ல வருவது. இதனைப் புத்தகம் நெடுகிலும் எவ்வித சறுக்கலும் இன்றிக் கடைப்பிடிக்கிறார் என்றே சொல்லவேண்டும்.

அதேபோல் எவ்விதக் கவனிப்பும் இன்றிக் கேட்பாரற்ற திரைப்படங்களை எடுத்துக்கொண்டு அவற்றின் குறைகளைச் சொல்ல முனையவில்லை. ஓரளவுக்கு மக்கள் வரவேற்பையும் ஓரளவுக்கு இலக்கியக் கவனிப்பையும் பெற்ற படங்களை மட்டுமே எடுத்துக்கொண்டு அவற்றின் மேம்பாட்டுத் திட்டங்களை முன்வைக்கிறார். இதனால் மிக எளிதாக தனது திரையறிவு பற்றிய அஸ்திவாரத்தை நிறுவிக்கொள்கிறார். தான் ஓர் இலக்கியவாதியாகத் திரைப்படத்தை அணுகுகிறோம் என்கிற பெருமிதம் இருப்பதை முன்னுரையிலேயே உணர்ந்துகொண்டுவிடமுடிகிறது.

ஆனால் ஒருவகையில் முன்னுரையே இவருக்கு எதிரான அஸ்திரமாகத் திரும்பக்கூடும். முன்னுரையில் இவரது வாதங்கள் எல்லாமே ஒரு படைப்பு எப்படிக் கலையாக வேண்டும் என்பதன் பொருட்டே உள்ளது. ஆனால் திரைப்பட அலசல்கள் என்று வரும்போது வணிக ரீதியான படங்களை அதே அலைவரிசையில் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுகிறார். முன்னுரையைப் படித்துவிட்டு திரைப்பட அலசல்களை எதிர்கொள்ளும் வாசகன் மிக எளிதாக ‘கலையை அடிப்படையாக கொண்ட விமர்சகரின் திரைக்கதை ஏன் மீண்டும் வணிகக்குப்பைக்குள் செல்கிறது’ என்ற கேள்விக்குள் சென்றுவிடமுடியும். இதற்கான பதிலை மகாதேவனின் தொடர் திரைக்கதை அலசல்கள்தானே தருகின்றனவே ஒழிய, முன்னுரை தரவில்லை.

இந்த நூலின் வழியாக மகாதேவன் எதிர்கொள்ளப் போகும் இன்னொரு விமர்சனத்தைப் பற்றிப் பார்க்கலாம். ஒரு படைப்பை ஒரு இயக்குநர் எடுக்கிறார். அது அவரது படைப்பு. அதில் நிறை குறைகள் இருக்கலாம். ஆனால் அந்தப் படைப்பு அப்படைப்பாளியின் சுயம் சார்ந்தது. (காப்பி அடிக்கப்படும் படங்களுக்கு இது பொருந்தாது.) அவரது சுதந்திரம் சார்ந்தது. இதை விமர்சிக்கும் உரிமை எவருக்கும் உண்டு. இதே உரிமையில்தான் மகாதேவன் செயல்படும் இடமும் இருக்கிறது. ஆனால் அப்படைப்பாளி அப்படி எடுக்கக்கூடாது, இப்படி எடுக்கக்கூடாது என்று சொல்லும் உரிமை விமர்சகனுக்கு இல்லை. அதேபோல் படைப்பாளியின் திரைக்கதையில் உள்ள ஓட்டையை தன் திரைக்கதை மூலம் எப்படிச் சரி செய்யலாம் என்று சொல்ல முனையும்போது, ஒட்டுமொத்தக் கதையையே எப்படி மாற்றுவது என்று சொல்ல முனைவதும் சரியானதல்ல என்றே தோன்றுகிறது. திரைக்கதைகளின் பழுது நீக்கம் ஒரு கட்டத்தில் கதையின் பழுது நீக்கமாகிறது.

இந்தப் பிரச்சினையைப் புத்தகத்தில் அலசப்படும் ஒவ்வொரு திரைப்படத்தின் மேம்பட்ட திரைக்கதையிலும் காணமுடிகிறது. நந்தலாலாவின் கதையில் யார் யாரைத் தேடவேண்டும் என்று முடிவெடுக்கிறார். அங்காடித் தெருவின் கதையே மாறிப் போகிறது. ஆடுகளத்திலும் இப்படியே. அழகர்சாமியின் குதிரையில் கதையைக் கொஞ்சம் மாற்றினாலும், பாஸ்கர் சக்தியின் மூல சிறுகதையோடு அதை ஒட்ட வைப்பதன்மூலம், தனது கதை மாற்றலுக்கு ஒரு நியாயத்தைக் கற்பித்துக்கொள்கிறார் நூலாசிரியர். தெய்வத்திருமகள் கதையிலும் இதனை அதன் மூல வடிவோடு ஒப்பிட்டு மேம்படுத்த முனைந்துவிடுகிறார். நான் கடவுளின் கதையே மாற்றம் பெறுகிறது. இதன் அடிப்படையாக மகாதேவன் சொல்வது, ஒவ்வொரு கதையின் அடிப்படையையும் நான் மாற்றவில்லை, மாறாக அதன் போக்கில் செய்யும் மாற்றம் மூலம் அதை எப்படி மேம்படுத்துவது என்பது பற்றியே பேசுகிறேன் என்பது. அதாவது ஒவ்வொரு கதையும் என்னதான் ஒரு படைப்பாளியின் சுதந்திரம் என்றாலும், அதன் அடிப்படை ஒரு விதிக்குள் கட்டுப்பட்டதே என்றும், விதியை மீறிய ஆட்டம் கதைக்கு ஆகாது என்றும் வாதிடுகிறார்.

விதியை மீறும் ஆட்டம் என்பதே ஒரு கலையின் முன்னகர்வைக் கொண்டுவரும். இந்த இடத்தில் நான் மகாதேவனுடன் கடுமையாக வேறுபடுகிறேன். உதாரணத்துக்கு ஆடுகளம் படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் எப்படி ஒரு குருவை அப்படிச் சித்திரிக்கலாம் என்றும், ஒரு குரு என்பவர் அப்படிச் செயல்படமாட்டார் என்றும் வாதிட்டு குரு சார்ந்து ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கும் அக நம்பிக்கைகளுக்குள் இறங்கிவிடுகிறார். ஆனால் ஒரு குரு என்பவரை ஒரு படைப்பாளி எப்படிப் படைக்கவேண்டும் என்பது அவரது சுதந்திரம் அல்லவா. துரோகம் செய்யாத குரு உலகத்தில் இல்லையா என்ன? அல்லது அப்படி ஒரு கற்பனையை உருவாக்கக்கூடாதா? இது போன்ற உளச்சிக்கல்களே இந்நூலாசிரியரின் பிரச்சினைகளாக உள்ளன. இன்னொரு மனப்பதிவு, இந்நூலில் தொடர்ந்து பதிவு செய்யப்படும் கிராமத்து மனிதர்கள் பற்றியது. கிராமத்து மனிதர்கள் பற்றிய ஒரு பதிவை இவராக மனத்தில் உருவாக்கிக்கொண்டு, ஒரு திரைப்படத்தில் வரும் கிராமத்து மனிதர்கள் பற்றிய காட்சி அந்தப் பதிவுக்கு மாறானதாக இருக்குமானால், அதனை விமர்சிக்கத் தொடங்கிவிடுகிறார். எல்லா மனிதர்களையும் போல கிராமத்து மனிதர்களும் எல்லா நிறங்களும் கலந்த கலவைகளே. அங்காடித் தெரு பற்றிய விமர்சனத்தில், முலையைக் கசக்கும் கங்காணியைப் பொறுத்துக்கொண்டு எப்படி ஒரு கிராமத்துப் பெண் அமைதியாக இருப்பாள் என்கிறார். அதே திரைப்படத்துக்கு இவர் முன்வைக்கும் மேம்பட்ட திரைக்கதை வடிவத்தில் வரும் காட்சியில், கிராமத்து அம்மா முன்பு அதே கங்காணியால் திருடனாக நிற்க வைக்கப்படும் மகனைப் பார்த்தும், அந்தக் கிராமத்துப் பெண் சீறாமல் தலையைக் கவழ்ந்துகொண்டு, தன் நிலையை நினைத்துக்கொண்டு போகிறாள். அது எப்படி ஒரு கிராமத்தில் இருந்து வந்த இரு பெண்கள் இரு மாதிரியாகச் செயல்படமுடியும்? இதிலேயே இருக்கிறது மகாதேவனுக்கான விடை. ஒவ்வொரு படைப்பாளியும் தன் மனிதர்களைத் தன் தர்க்கத்துக்குள்ளே படைத்துக்கொள்ள முடியும். அது அவனது சுதந்திரம். அந்த சுதந்திரம் என்பது வாழ்க்கையின் மிக ஆதாரமான யதார்த்தத்தை மீறக்கூடாது என்பது மட்டுமே. மாறாக, இந்த யதார்த்தம் எந்தவித குண இயல்புகளையும் கட்டுப்படுத்தாது. கட்டுப்படுத்த முடியாது.

இந்தப் புத்தகத்தில் வரும் அனைத்துக் கட்டுரைகளையும் மகாதேவன் தனது வலைப்பதிவில் எழுதியிருக்கிறார். அக்கட்டுரைகளின் தொகுப்பே புத்தகமாக்கப்பட்டுள்ளது. வலைப்பதிவின் கட்டற்ற சுதந்திரம் இல்லையேல், இது போன்ற கட்டுரைகள் எந்த இதழில் வந்திருக்கும் என்ற ஆச்சரியம் தோன்றாமலில்லை. கட்டற்ற சுதந்திரமே இணையத்தின் வரமும் சாபமும். வரம் என்று இக்கட்டுரைகளை எடுத்துக்கொண்டால், சாபம் என்று இக்கட்டுரைகளில் வரும் சில வார்த்தைப் பிரயோகங்களைக் குறிப்பிடவேண்டும். தணிக்கை செய்யப்படாத பச்சை எழுத்து தரும் அதிர்ச்சி, வலைப்பதிவைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு ஏற்படாது. அதனையே தொடர்ந்து எழுதும் வலைப்பதிவர்களுக்கும் ஏற்படாது. ஏனென்றால் அதில் என்ன தவறு என்ற மனப்பதிவு ஆழமாக ஏற்பட்டிருக்கும். அடிமையில் மோகம் போல. அதிலிருந்து விலகி ஒரு புத்தகமாகப் படிக்கும்போது அந்த மொழி தரும் அதிர்ச்சி சொல்லமுடியாதது. இந்த அபாயத்தை முன்வைத்தே பல இயக்குநர்கள் இந்தப் புத்தகத்தைப் புறக்கணிக்கவோ பழிக்கவோ கூடும். இதனை இந்நூலாசிரியர் தவிர்த்திருக்கலாம்

இந்நூலில் வரும் இன்னொரு எளிமையான தவறு – தனது தர்க்கத்தை ஓர் எடுத்துக்காட்டு மூலம் விளக்கிக் காட்டுவது. எடுத்துக்காட்டுகள் வெறும் எடுத்துக்காட்டுகளே அன்றி அவை உண்மை அல்ல. இதனாலேயே ஒரு மிகப்பெரிய விஷயம் ஒன்று ஓர் எளிமையான எடுத்துக்காட்டு மூலம் விளக்கப்படும்போது அதன் உணர்ச்சிகரமான மூலம் எல்லாவற்றையும் இழந்து வெறும் வார்த்தையாகிவிடுகிறது. இதனை எதிர்கொள்பவர்கள் இன்னொரு எடுத்துக்காட்டின் மூலம் எதிர்கொள்ளத் தொடங்கிவிடுவார்கள். இதனால் விவாதம் என்பது மூலத்தின் கருவிலிருந்து விலகி எங்கேயோ சம்பந்தமற்ற ஒரு வெளியில் நிகழ்ந்துகொண்டிருக்கும். பட்டிமன்றங்களில் நாம் அடிக்கடி இதனைப் பார்க்கலாம். எதை விவாதிக்கவேண்டுமோ அதனை விட்டுவிட்டு அது தொடர்பாகச் சொல்லப்பட்ட எடுத்துக்காட்டுகளில் முட்டி மோதிக்கொண்டிருப்பார்கள். இதனையும் நூலாசிரியர் தவிர்த்திருந்திருக்கலாம்.

அதேபோல் நூலாசிரியர் செய்யும் இன்னொரு தவறு, யதார்த்தம் என்ற ஒன்றை தனக்கு நேரும் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்து கட்டமைப்பது. இதில் உண்மை இருக்கலாம். ஆனால் தனிப்பட்ட அனுபவங்களிலிருந்தே யதார்த்தமின்மைக்குட்பட்ட பல நிகழ்வுகளும் உருவாகின்றன என்ற இன்னொரு எளிய உண்மையை வைத்துப் பார்த்தால், தனிப்பட்ட அனுபவங்கள் என்பவை எப்படி வெறும் தனிப்பட்ட அனுபவங்களாகவே எஞ்சிவிடுகின்றன என்பதைப் பார்க்கலாம். தனிப்பட்ட அனுபவங்கள் பொதுக் கருத்தாக முகிழவேண்டுமானால், அது யாரால் சொல்லப்படுகிறது என்பதும் முக்கியம். மகாதேவன் பாணியிலேயே ஓர் எடுத்துக்காட்டு மூலம் சொல்லவேண்டும் என்றால், காந்தி அல்லது அம்பேத்கரின் தனிப்பட்ட அனுபவத்தின் முக்கியத்துவத்தை யோசிக்கச் சொல்வது ஓர் எளிய வழி. ஒரு தனிப்பட்ட சாதாரண மனிதனுக்கு ஏற்படும் அனுபவமும், அனுபவம் என்ற அளவில் அதற்கு இணையானதே என்றாலும், அதன் வீச்சு எப்படித் தேங்குகிறது என்பதை அறியலாம். இந்த எடுத்துக்காட்டைச் சொல்வதுகூட, ஓர் எடுத்துக்காட்டு என்பதும், தனிப்பட்ட அனுபவமும் பொதுக்கருத்து என்ற பொதுவெளியில் (சில சந்தர்ப்பங்களைத் தவிர்த்துப் பெரும்பாலான நேரங்களில்) எத்தனை உள்ளீடு அற்றது என்பதைச் சொல்லவே.

மகாதேவன் எழுதியிருக்கும் ஒவ்வொரு திரைப்பட விமர்சனத்துக்கும் மேம்படுத்தப்பட்ட திரைக்கதைக்கும் பதிலாக சில விஷயங்களைச் சொல்லமுடியும். பல இயக்குநர்கள் அப்படி விரும்பவும் கூடும். இப்படி ஒரு விவாதம் உருவாவதும் நல்லதே. ஒரு புத்தகத்தின் தேவையும் இதுதான்.

ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் இந்நூலில் பலம் என்ன? இந்நூலின் பலம், நூலாசிரியரின் நேர்மை. இன்னொன்று, நூலாசிரியரின் சுயம். இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை உயிர்ப்புள்ளதாக்குகின்றன. இந்த இரண்டுமே இந்தப் புத்தகத்தை ஓர் இலக்கியப் பிரதியாக்குகின்றன. இந்த இரண்டும்தான் இந்தப் புத்தகம் குறித்த விவாதத்தை முன்னெடுக்கப்போகும் காரணிகளாகவும் இருக்கும். ஒருவகையில், மகாதேவன் திரைப்பட விமர்சனத்தை முன்வைக்கும்போது இலக்கியவாதியாகவும், திரைக்கதை எழுதும்போது திரைப்படவாதியாகவும் மாறுவதைப் பார்க்கமுடிகிறது. ஓர் எழுத்தாளரின் சுயமான சிந்தனை என்பது மிகவும் முக்கியமானது. சுயத்தோடு கூடிய கடும் உழைப்பு மிகப்பெரிய வாசல்களைத் திறக்கக்கூடியது. இதுவே ஓர் எழுத்தாளனுக்கு இலக்கிய முக்கியத்துவத்தை அளிக்கவல்லது. நேர்மையுடன் கூடிய சுயம் என்பது எல்லாவித நிறை குறைகளுடனும் வசீகரம் மிக்கது. இந்த வசீகரமே இந்நூல்.

இந்நூல் விடுக்கும் செய்தி என்று பார்த்தால், இப்படித் தொகுக்கலாம். தமிழில் நான்கைந்து படங்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால் [வீடு, சந்தியா ராகம், உன்னைப் போல் ஒருவன் (கமல் படம் அல்ல! ஜெயகாந்தனின் படம்), ஹே ராம் (இது கமல் படம்தான்!)] உலக அளவிலான திரைப்படங்கள் வந்ததில்லை என்றே சொல்லவேண்டும். கொஞ்சம் கறார்தன்மையை விட்டுவிட்டுப் பார்த்தால் இன்னொரு 10 படங்கள் தேறலாம். முள்ளும் மலரும், உதிரிப்பூக்கள், அழியாத கோலங்கள் போன்றவை. ஆனால் நமக்கிருக்கும் திறமைக்கு நாம் கொஞ்சம் முனைந்தால் சிறப்பான படங்களை மிகச் சிறப்பான படங்களாக மாற்றலாம். இதுதான் மகாதேவன் சொல்ல வருவது. சொன்னவிதம் கொஞ்சம் கவலரப்படுத்துவதாக இருந்தாலும், அதிலிருக்கும் உண்மை நம்மை அமைதிப்படுத்துகிறது. மெல்லச் சொன்னால் புரிவதில்லை என்பதையும் நாம் மறுப்பதற்கில்லை. இதனை ஒரு வாசகன் புரிந்துகொள்ளக்கூடும். இயக்குநர்கள் புரிந்துகொள்ள கொஞ்சம் திறந்த மனம் வேண்டும். அந்த திறந்த மனத்தை நோக்கிய முதன்மைப் புள்ளிகளில் ஒன்றாக இப்புத்தகமும் அமையவேண்டும். அமையும் என்றே நம்புகிறேன்.

Share

க்ரியா, சிக்ஸ்த் சென்ஸ், சவுக்கு வெளியீடு புத்தகங்களை ஆன்லைனில்/ஃபோன் மூலம் வாங்க

 

இனி (சும்மா இருக்கும் என் வலைத்தளத்தில்) என்.எச்.எம் ஆன்லைன் பற்றி அப்டேட் செய்யலாம் என்றிருக்கிறேன். விளம்பரமாக வருகிறது என்று நினைக்கும் நண்பர்களை கொஞ்சம் உஷாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன், ஏனென்றால் அவ்வப்போது எதாவது எழுதினாலும் எழுதுவேன். :-)

அஞ்ஞாடி நாவலை ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/100-00-0000-208-0.html

க்ரியாவின் தற்கால தமிழ் அகராதிகுட்டி இளவரசன் உள்ளிட்ட முக்கியமான புத்தகங்களை வெளியிட்டிருக்கும் க்ரியாவின் முக்கிய புத்தகங்களை என்.எச்.எம் ஆன்லைனில் வாங்கலாம்.

சிக்ஸ்த் சென்ஸ் புத்தகங்களையும் ஆன்லைனில் வாங்கலாம். https://www.nhm.in/shop/home.php?cat=378

இந்தப் புத்தகத்தை வாங்கதீங்க’ விற்பனையில் சாதனை படைத்த புத்தகம் என்கிறது சிக்ஸ்த் சென்ஸ். அந்தப் புத்தகம் வெளியான புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகமே அதிகம் விற்ற புத்தகம்! அதையும் ஆன்லைனில் வாங்கலாம். நீயா நானா கோபிநாத்தின் ‘நேர் நேர் தேமா’புத்தகமும் கிடைக்கிறது. சுப வீரபாண்டியனின் புத்தகங்களும் கிடைக்கின்றன.

சவுக்கு வெளியிட்டிருக்கும் ‘விடுதலைப் புலிகளுக்கு அப்பால்’ புத்தகத்தையும் ஆன்லைனில் வாங்கலாம்.

மேலே குறிப்பிடப்பட்ட புத்தகங்களை ஃபோன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 94459 01234 | 9445 97 97 97

திநகர் ராமேஸ்வரம் தெருவில் (ரங்கநாதன் தெரு அருகில் உள்ளது) உள்ள டயல் ஃபார் புக்ஸ் புத்தகக் கடையில் மேலே உள்ள புத்தகங்கள் விற்பனைக்குக் கிடைக்கும்.

புத்தகக் கடை இருக்குமிடம்:

 

 

இந்தச் சேவை இனி தொடரும்!

Share

காலப்பெட்டகம் – புத்தக விமர்சனம்

75 ஆண்டுகாலம் என்பது எந்த ஒரு வகையிலும் மிகப் பெரிய கால அளவுதான். இத்தனை பெரிய கால அளவுகளில் நாடுகள் பிரிந்து போயிருக்கின்றன. நதிகள் காணாமல் போயிருக்கின்றன. மனிதர்கள் மறக்கப்பட்டிருக்கிறார்கள். கட்சிகள் நீர்த்துப் போயிருக்கின்றன. உலகமே ஒட்டுமொத்தமாக மாறிப் போயிருக்கிறது. இந்தப் பின்னணியில் ஒரு தமிழ்ப் பத்திரிகை தொடர்ந்து 75 வருடம் வந்துகொண்டிருக்கிறது என்பது அதனளவிலேயே மிகப் பெரிய சாதனைதான். இந்தச் சாதனையை முரசு கொட்டிச் சொல்கிறது ஆனந்தவிகடன் வெளியிட்டிருக்கும் ‘காலப்பெட்டகம்’ புத்தகம்.

வாரா வாரம் தோராயமாக 100 பக்கங்களுக்கு மேல் வந்திருக்கும் பத்திரிகை ஒன்றின் 75 கால சித்திரத்தை 368 பக்கங்களுக்குள் அடக்குவது மிகவும் சிரமமான காரியமே. இப்படி 'காலப்பெட்டகம்' நூலை மட்டுமே முன்வைத்து ஆனந்தவிகடனை அணுகினால் நாம் எத்தனையோ நுண்மையான விஷயங்களை இழக்கவேண்டியிருக்கும். அதேசமயம் ‘காலப்பெட்டகம்’ வழியாக நாம் காணும் பிம்பமே ஆனந்தவிகடனின் பிம்பமாக பெரும்பாலும் இருக்கும் என்பதுவும் உண்மையே. இந்த இரண்டுக்கும் இடையில்தான் நாம் ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை வாசிக்க இயலும்.

ஆரம்பகால இதழ்களில் ஆனந்தவிகடனின் எழுத்து நடை அந்தக் காலத்துக்கே உரிய மணிப்பிரவாள நடையில் இருக்கிறது.உதாரணத்துக்கு ஒரு தலைப்பு: ‘வியாசம் அனுப்புவோருக்கு விஞ்ஞாபனம்.' ஆண்டுகள் போகப் போக அதன் நடையும் மாறுகிறது. இப்படித்தான் அரசியலில், திரையுலகில், ஆனந்த விகடனில் இடம்பெற்ற கார்ட்டூன்களில் நடந்த மாற்றங்களை நாம் பார்த்துக்கொண்டே போகமுடிகிறது. பொதுவாகவே நாம் ‘அந்தக் காலம்’ என்று சொல்லும் காலத்துக்கும் இப்போது நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்துக்கும் இடையேயான காலத்தில் ஒரு தார்மிக வீழ்ச்சியைப் பார்க்கமுடியும். இதற்கு ஆனந்தவிகடனும் தப்பவில்லை. செய்திகளின் தரத்திலிருந்து, எந்த மாதிரியான செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும்என்பதுவரையில் இந்த மாற்றத்தைப் பார்க்கமுடிகிறது. ஒரு சில சமயங்கள் தவிர, மாற்றம் பெரும்பாலும் வீழ்ச்சியாகவே இருக்கிறது.

அரசியல் என்று எடுத்துக்கொண்டால் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களை இந்திய தேசியத்தை மையமாக் கொண்ட தமிழ் இதழ்களாக வரையறுக்கலாம். (1930ம் வருடத்திய இதழ்கள் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறது விகடன். ஆழ்ந்த தேசபக்தி, அதிரடி நகைச்சுவை இரண்டும் விகடனுக்கு இரண்டு கண்கள் போல்.) ஆனால் இன்றோ ஆனந்தவிகடன் இடதுசாரி சித்தாந்தவாதிகளின் இந்திய வெறுப்பைப் பின்னணியாகக் கொண்ட கட்டுரைகளை முன்வைக்கும் இதழாக் காட்சியளிக்கிறது. இந்த இந்திய வெறுப்பு மிகவும் திறமையாக, நடுநிலைமை என்ற போர்வையில் கட்டுரையாளர்களால் எழுதப்படுகின்றது என்பதுதான் அதில் முக்கியமாகக் கவனிக்கவேண்டியது. வெளிப்படையாக ஆனந்தவிகடன் இந்திய தேசியத்தைக் கைவிட்தாக அறிவிக்கவில்லை என்றாலும், தொடர்ந்து ஆனந்தவிகடனை வாசிக்கும் எவரும் விகடன் கட்டுரைகளில் தெரியும் பின்-தொனியையும், மாற்றங்களையும் தெளிவாக உணரமுடியும். எது சரி, எது தவறு என்பதல்ல, எப்படி ஆனந்தவிகடன் மாறியிருக்கிறது என்பதுதான் இதிலுள்ள செய்தி. சில காலம் ஆனந்தவிகடனின் இதழ்கள் பாரத மாதா லோகோவாகத் தாங்கி வந்திருக்கின்றன என்பதை நம்பமுடிகிறதா உங்களால்.

கார்ட்டூன்கள் என்று எடுத்துக்கொண்டால், ஆண்டுகள் போகப் போக, கார்ட்டூன்களில் வரும் வார்த்தைகள் மிக் கூர்மையாகியிருக்கின்றன. நீண்ட வரிகளைக் கொண்டுவரும் ஆரம்பகால இதழ்களின் கார்ட்டூன்களிலிருந்து, மிகக் குறைந்த வார்த்தைகள் அல்லது வார்த்தைகளே இல்லாமல் வெறும் குறிப்புகளை மட்டும் கொண்டு வெளிவரும் இன்றைய இதழ்களின் கார்ட்டூன்கள் வரை இந்த மாற்றத்தை நாம் ஓரளவுக்கு இந்நூலில் நாம் காணமுடியும்.

இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால், இதனை இரண்டு வகைகளில் அணுகவேண்டும். வணிக இதழ்களில் வரும் தொடர்கதைகளை தீவிர இலக்கியமாக் கருத இயலாது. வெகுஜன வாசகர்களை ஈர்க்கும் பல்வேறு கதைகள் தொடக்ககால ஆனந்தவிகடனிலிருந்து தொடர்ச்சியாக வெளியாகியிருக்கின்றன. ஆனந்தவிகடனில் முத்திரைக் கதை வருவது என்பது தனிப்பட்ட தகுதியாகவே இருந்திருக்கிறது. தொடர்கதைகளைத் தொடர்ந்து எழுதுபவர்கள் ஹீரோக்களாகவே அறியப்பட்டார்கள். ஆனால் தீவிர இலக்கியவாதிகளின் பங்களிப்பைத் தொடக்க கால இதழ்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. பிற்கால இதழ்களில் மிக முக்கியமான இலக்கியவாதிகள் ஆனந்தவிகடனில் பங்கெடுத்திருக்கிறார்கள். இந்தவகையில் இந்த மாற்றம் ஒரு நேர்மறையான மாற்றமே.

பொதுவாகவே தொடர்கதை வாசிப்பில் நேர்ந்த தொய்வு ஆனந்தவிகடனிலும் பிரதிபலித்திருப்பதைப் பார்க்கமுடிகிறது. அதனால்தானோ என்னவோ ஆனந்தவிகடன் உருவாக்கும் ‘நாவல்’ ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைந்து போயிருக்கிறது. நாவல் என்பது தொடர்கதை அல்ல என்பது முக்கியமான விஷயம். இப்படி ஒரு விஷயம் பெரும்பான்மை மக்களுக்குத் தெரியாமல் போனதற்கு ஆனந்தவிகடனின் வீச்சும், அதன் தொடர்கதைகள் தந்த மயக்கமும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை.

காலப்பெட்டகம்’ இதழ் வருட வாரியாக ஆனந்த விகடனில் வந்த முக்கியமான நிக்ழ்வுகளை வைத்துத் தொகுக்கப்பட்டிருக்கிறது. இதனால்தானோ என்னவோ, ஒட்டுமொத்தமாக வரிசையாக அஞ்சலிகளாகப் படிக்கிறோம். அலுப்பை ஏற்படுத்தும் அளவுக்குதொடர்ச்சியாக அஞ்சலிக் குறிப்புகளாக வருவதைத் தவிர்த்திருந்திருக்கலாம். அதிலும் இசையோடு தொடர்புடையவர்கள் பலரின் அஞ்சலிக் குறிப்புகள் வெளியாகியிருக்கின்றன. தொகுத்தவர் இசைப்பிரியராக இருந்திருக்கவேண்டும்.

தொகுப்பின் மற்றொரு குறை என்னவென்று பார்த்தால், பல விஷயங்கள் தேவையற்றதாக இருக்கின்றன. பல தேவையான விஷயங்கள் தொகுக்கப்படவில்லையோ என்ற எண்ணமும் தோன்றுகிறது. ரஜினிகாந்த் ராகவேந்திரா மண்டபத்தைத் தொடங்கி வைத்து இலவச திருமணம் நட்த்தப் போவதாகப் பேட்டி தந்திருப்பது (1989), 75 ஆண்டுகால ஆனந்தவிகடன் இதழ் வரலாற்றில் எப்படி முக்கியமானதாக மாறுகிறது என்பது புரிவதில்லை. அதே சமயத்தில், 76ல் தமிழ்நாட்டின் முகத்தையே மாற்றியமைத்த இளையராஜாவைப் பற்றியோ, 91ல் இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்த ஏ.ஆர். ரஹ்மான் பற்றியோ குறிப்புகளைப் பார்க்கமுடியவில்லை.

பாரதியார் பற்றிய குறிப்புகள் முதலிலிருந்தே ‘காலப்பெட்டகம்’ நூலில் இடம்பெறுகின்றன. பாரதியார் பற்றியும் காந்தி பற்றியும் தொடர்ந்து கல்கியும் ராஜாஜியும் எழுதியிருக்கிறார்கள். ஜெயேந்திரர் உபதேசம் ஏற்றது (1954), விஜயேந்திரர் உபதேசம் ஏற்றது (1983)எல்லாம் ‘காலப்பெட்டகம்’ நூலில் வருகின்றன.

இத்தனையையும் மீறி நம்மை ரசிக்க வைப்பது, ஆனந்தவிடனின் நகைச்சுவைத் துணுக்குகளே. வார இதழ்களில் கைச்சுவையில் என்றுமே முதலிடம் ஆனந்தவிகடனுக்குத்தான் என்பது என் கருத்து. ‘காலப்பெட்டகம்’ அதனை உறுதி செய்கிறது. ஆரம்பம் முதலே அட்டகாசமான நகைச்சுவைத் துணுக்குகள். (1927ல் வெளியான ஒரு துணுக்கு. ‘அகஸ்மாத்தாய் லக்ஷாதிபதியான ஒருவர் கீழ்வருமாறு ஒரு புஸ்தக வியாபாரிக்குக் கடிதம் எழுதினார்:- அன்பர்ந்த ஐயா, வால்மீகி ராமாயணம், வில்லிபுத்தூரார் பாரதம் முதலிய புத்தகங்கள் கிடைக்கப் பெற்றேன். அவைகள் மிகவும் நன்றாக இருக்கின்றன. இந்த ஆசாமிகள் புதியதாக எதாவது புஸ்தகங்கள் எழுதினால், உடனே எனக்கு வி.பி – யில் அனுப்பி வையுங்கள்.’) அவற்றுடன் போட்டி போடும் கார்ட்டூன்கள். இன்றுவரை ஆனந்த விகடன் இதில் முதலிடத்தில் உள்ளது என்றே சொல்லவேண்டும்.

திரைப்படங்களின் விமர்சனங்கள் அதிக அளவில் ‘காலப்பெட்டகம்’ இதழில் இடம்பெறவில்லை. குறைந்தபட்சம், அதிக மதிப்பெண்கள் பெற்ற முதல் 20 படங்களின் பட்டியலோடு அவற்றின் விமர்சங்களை மட்டுமாவது தந்திருக்கலாம். அதேபோல் ஆரம்பகால ஆனந்தவிகடன் இதழ்களின் கட்டுரைகளை அக்காலத் தமிழ் எழுத்துகளிலேயே பதிப்பித்திருக்கலாம். என்னவோ தெரியவில்லை, சீர்திருத்த எழுத்துகளையே பயன்படுத்திவிட்டார்கள். ஐம்பது ஆண்டுகால ‘காலபெட்டகம்’ இதழ் 1979ல் (1928 முதல் 1978 வரையிலான ஐம்பதாண்டு காலத் தொகுப்பு) வெளிவந்தபோது, அதில் அக்கால நடைமுறையான, சீர்திருத்தத்துக்கு முந்தைய எழுத்துகளே இடம்பெற்றிருந்தன. அதில் இருந்த இயல்புத் தன்மை இந்த 75 ஆண்டுகால ‘காலப்பெட்டகம்’ நூலில் இல்லை. இப்போதைய காலப்பெட்டகத்தைவிட, அது அதிகம் விவரங்கள் கொண்டதாகவும், சிறப்பாகத் தொகுக்கப்பட்டதாகவும் தோன்றுகிறது. இத்தனைக்கும் ஒவ்வொரு வருடத்தையும் ஒவ்வொரு பிரபலம் தொகுத்திருந்தார்கள்.

காலப்பெட்டகம்’ நூலில் அக்காலத்தில் இடம்பெற்ற சில விளம்பரங்களையும் கொடுத்திருக்கிறார்கள். ஆரம்ப கால விளம்பரங்கள் எப்படி இருக்கின்றன என்று பார்ப்பதே பெரிய சுவாரஸ்யமாக இருக்கிறது. (பக்கம் 14)

 சில விஷயங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. தில்லானா மோகனாம்பாள் கதை வந்தபோது, எந்த எந்த கதாபாத்திரத்துக்கு எந்த எந்த நடிகர்கள் நடிக்கவேண்டும் என்று ஒரு வாசகர் மடல் (1956) அனுப்பியிருக்கிறார். கிட்டத்தட்ட அதே நடிகர்கள் நடித்து படம் வருகிறது. அண்ணா மேம்பாலத்துக்குக் கீழே உள்ள குதிரை வீரன் சிலை வருவதற்கு முன்பே அதைப் பற்றி ஒரு நகைச்சுவைத் துணுக்கு வருகிறது. அதில் ‘கிண்டி ரேஸை ஒழிச்சதுக்கு குதிரைச் சின்னம்’ (1974) என்று நகைச்சுவையாக எழுதுப்பட்டுள்ளது. எட்டு மாதங்கள் கழித்து (1975) ‘வந்தியத்தேவன்’ குதிரை சிலைக்குக் கீழே அதே வாக்கியங்கள். இப்படிப் பல சுவாரஸ்யங்கள் புத்தகம் நெடுகிலும்.

சுபாஸ் சந்திர போஸுக்கு ஆதரவளிக்கும் விகடன் காந்தியை எதிர்க்கிறான். காந்தியின் தோல்வி (1939) என்றே அதனைச் சொல்கிறான். ஓட்டுப் போடுவதற்கு பணம் தருவது பற்றிய துணுக்குகள் அப்போதே வந்துள்ளன. வேட்பாளர்கள் (அபேட்சகர்கள்!)திருடர்கள் என்று சொல்லும் விகடம் 1934ல் விகடனில் வந்துள்ளது. விகடன் தாத்தாவுக்கு 35ல் கொம்பு முளைக்கிறது. ஹரிஜன ஆலயப் பிரவேசத்தை முழுமையாக ஆனந்த விகடன் ஆதரித்திருக்கிறது. எஸ் எஸ் வாசனின் தாயார் மறைந்தபோது அதற்கு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது விகடன் – 1949ல்! 1950ல் வாசனின் மகள் கல்யாணம் பற்றிச் செய்தியும் வெளியிடப்பட்டிருக்கிறது!! காங்கிரஸின் தீவிர ஆதரவு இதழான விகடன் அண்ணாத்துரையை வரவேற்று (1957) கட்டுரை தீட்டுகிறது. அண்ணாத்துரை 1958ல் விகடனில் தனது சட்டசபை அனுபவங்களை எழுதுகிறார்.

நடிகர்கள் எவ்வப்போது புயல் நிவாரண நிதிகள் கொடுத்தார்கள் என்பது காலப்பெட்டகத்தில் பதிவு செய்யப்படுகிறது! கிட்டத்தட்ட சிவாஜி கணேசனின் ரசிகனாகவே விகடன் செயல்பட்டதாக ‘காலப்பெட்டகம்’ நூலைப் படிக்கும்போது எனக்குத் தோன்றியது. வாஷிங்டனில் திருமணம் தொடரின் கடைசி பாகத்தில்தான் அதை எழுதியவர் பெயர் (1963) சாவி என்று வெளியிடப்படுகிறது. கிட்டத்தட்ட உண்மை போன்ற திருமணப் பத்திரிகையும் அக்கதைக்கு ஏற்றவாறு இடம்பெறுகிறது!

திமுகவின் வெற்றியை விசித்திரம் என்று சொல்லும் (1967) விகடன், திமுகவின் வெற்றியை வாழ்த்துகிறது. முத்தக் காட்சியில் நடித்தேனா என்று ஜெயலலிதா 1970ல் விளக்கம் அளிக்கிறார். ஜெயலலிதாவின் விளக்கத்தை ஒப்புக்கொள்ளும் விகடன், அதற்கு ஒரு சால்ஜாப்பு சொல்கிறது. அப்போதே ஜெயலலிதா அதிரடிதான். இவரது இந்த அதிரடி பின்னர் ஸ்ரீதருடன் ஏற்படும் கருத்துவேறுபாடு (1996) வரையில் தொடர்கிறது. ஸ்ரீதருக்கு ஜெயலலிதா எழுதியிருக்கும் பதில் – அட்டகாசம். நான் ஏன் பிறந்தேன் தொடரை எழுதுகிறார் எம்ஜியார் (1970) விகடனில் எழுதுகிறார்.

சோவும் சுரதாவும் 1971ல் கம்பாஸிடர் கவிதையில் மோதிக்கொள்கிறார்கள். சோ இந்திராவைக் கிண்டல் செய்து 1974 பொங்கலன்று துக்ளக் விழாவில் பேசிய, டெல்லியில் புதைக்கப்பட்ட டைம் காப்ஸ்யூல் பற்றிய அட்டகாசமான குறிப்பு இடம்பெற்றிருக்கிறது. பாசிப்பயறு ஒன்றின் புதிய வகைக்கு அஞ்சுகம் என்ற பெயர் (கருணாநிதியின் அம்மாவின் பெயர்) வைக்கப்படுவதைப் பற்றிய ஒரு குறிப்பு உள்ளது. ஜெயலலிதாவின் முதல் மேடைப்பேச்சு பற்றிய (1982) குறிப்பு உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஜெயேந்திரர் தண்டம் விட்டுச் சென்றது பற்றிய அவரது பேட்டி (1987)ல் வெளிவந்துள்ளது.

1993ல் முதன்முதலாக ஒரு சினிமா ஸ்டில் அட்டைப்படமாக வெளியாகியிருக்கிறது. குமரியில் வைக்கப்பட்ட வள்ளுவர் ஏன் வளைந்து நிற்கிறார் என்று கருணாநிதி கேட்டதற்கு உப்புச்சப்பில்லாமல் ஒரு பதில் சொல்லியிருக்கிறார் (2000) கண்பதி ஸ்தபதி. (நாங்கள் எங்கள் உள்வட்டத்தில் இதனை சிம்ரன் சிலை என்றே சொல்லுவோம்.) மொத்தத்தில் இந்த ஒட்டுமொத்த ‘காலப்பெட்டகம்’ புத்தகத்தை சிவாஜி கணேசனுக்கு சமர்ப்பணம் செய்யலாம் ஆனந்தவிகடன். அடுத்ததாக கருணாநிதிக்கு!

பொதுவாக ஓர் இதழின் இலக்கிய மதிப்பு, அதன் தார்மிக நெறிகள் – இப்படி எல்லாவற்றையும் பின்னுக்குத் தள்ளிவிடுகிறது அதன் மீது வெகுஜன மக்கள் காட்டும் ஆர்வம். அதுவும் 75 வருடங்களுக்குத் தொடர்ந்து மக்கள் ஓர் இதழைக் கொண்டாடுகிறார்கள் என்றால், அது நிச்சயம் அதிர்ஷ்டத்தால் வாய்த்த ஒன்றோ அல்லது புறந்தள்ளத்தக்க ஒன்றோ அல்ல. அப்பத்திரிகையின் வெற்றிதான் அது. காலம் மாற மாற காலத்துக்கேற்ப ஓர் இதழ் மாறவேண்டியது கட்டாயம். அந்த மாற்றம் இல்லையென்றால் அப்பத்திரிகை நிச்சயம் அழியும். இதைப் புரிந்துகொண்டிருப்பதே அனந்த விகடனின் பலம். மக்கள் திரைப்படத்தைத்தான் கொண்டாடுகிறார்கள் என்பதற்காக, ஓர் இதழும் அதனையே கொண்டாடிக்கொண்டிருக்க வேண்டியதில்லை. மாற்றம் என்பது வீழ்ச்சியுடன் மட்டுமே சாத்தியமாகும் என்பது உண்மையல்ல. இப்போது ஆனந்த விகடன் புரிந்துகொள்ளவேண்டியது இது மட்டுமே.

(காலப்பெட்டகம் – 1924 முதல் 2000 வரை, விகடன் பிரசுரம், பக்கம் 368, விலை 180 ரூ)

புத்தகத்தை ஃபோன் மூலம் வாங்க: Dial for books – 94459 01234 | 9445 97 97 97

நன்றி: ஆழம் மாத இதழ்.

Share