ஒரு குழந்தையின் நிமிடங்கள் – கவிதை

ஏதோ காரணத்துக்காக அழுதது
சுவரில் அசையாமல் அமர்ந்திருக்கும்
வண்ணத்திப் பூச்சியின்
மெல்ல அசையும் சிறகையும்
ஆயிரம் எறும்புகள்
ஊர்ந்து செல்லும் ஆச்சரியத்தையும்
அதிசயமாய் நோக்கி மலர்ந்தது குழந்தை
சிறிய சறுக்கில் ஒருமுறை சறுக்கி சிரித்தது
தெருவில் செல்லும் ஜவ்வுமிட்டாய்க்காரன்
எதிரே நின்று காசில்லாமல் கைநீட்டியது
கைதட்டிக்கொண்டிருக்கும் பொம்மையின்
அசையும் கைகளுக்குள்
சிறைப்பட்டுப்போனது அதன் உலகம்

என் தலைமீது கவிழக்
காத்துக்கொண்டிருக்கும் வானத்தை
பார்வையிலேயே நிறுத்தி வைத்தேன்.

Share

Comments Closed