அய்யனார்

அய்யனார்
–ஹரன் பிரசன்னா

அய்யனார் கோயிலின்
ஆலமரத்துக்குக் கீழே
அன்று பிறந்த குழந்தை ஒன்று
பசியில் அழுதபடி

பிடதியில் இருகைகளையும் கோர்த்து
ஒட்டப்பட்டிருக்கும் புதிய சுவரோட்டியில்
பிதுங்கி வழியும் மார்பை
கள்ளத்தனமாய் இரசிக்கும் விடலைகள்
ஒருகாலத்தில்
இப்படி அழுதவர்கள்

பூட்டப்பட்டிருக்கும் வீட்டின்
கதவுகளுக்குள்
ஏதோ ஒன்றில்
முலை சுரந்துகொண்டிருக்கும்.

முன்னங்கால்கள் காற்றில் பாவ
புடைத்திருக்கும் திமிலின் கர்வம்
கண்ணில் தெரிய
பாதி பறக்கும் குதிரையின் மேலே
விரித்த விழி
முறுக்கிய மீசை
கையில் தூக்கிய வாளுடன்
உக்கிரமாய்
அமைதியாயிருக்கிறது
அய்யனார் சிலை

Share

Comments Closed