தீப்பெட்டிக்குள்…

தீப்பெட்டிக்குள்…
–ஹரன்பிரசன்னா

மரக்குச்சிகள் சுமந்து
மரத்துப் போயிருந்த தீப்பெட்டி
உயிர்த்திருக்கிறது

சிணுங்கிவிட்டுக் காணாமல் போன தூறலில்
நிமிர்ந்த பசுந்தளிர்களின் வழியே
நடந்து, நனைந்து
சுகித்திருக்கவேண்டிய பொன்வண்டு
சிறையிடப்பட்டிருக்கிறது

படுத்துக்கொள்ளப் புல்மெத்தை
எப்போதும் போர்த்தியிருக்கும் மேலட்டை
அவ்வப்போது வானம்
இது போதாதா?

திறக்கவும்
முன்னிரு கொம்புகள் அலையவும்
பிஞ்சு முகம் சிரிக்கவும்
இலக்கியமென்க

விடுதலை வேண்டும் வண்டு
இணைகூடாமல்
மூச்சுமுட்டி இறக்குமானால்
சொர்க்கம் சேரும்
நிச்சயம்.

Share

Comments Closed