கிரிக்கெட் – ஆஸ்திரேலியாவில் இந்திய வெற்றி

ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை இந்தியா வென்றிருக்கிறது.

முதல் இன்னிங்கிஸில் 500க்கும் மேல் எடுத்த அணி தோற்பது 108 ஆண்டுகளுக்கு பின்னர் என்கிறது புள்ளிவிவரம். திராவிட் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மூன்று மாதங்களில் இரண்டு இரட்டைச் சதங்களை அடித்து, தனது திறமையை அழுத்தமாக நிரூபித்திருக்கிறார் திராவிட்.


வெற்றிக்களிப்பில் ராகுல் திராவிட்

வரலாற்றின் பின்னே சென்று பார்க்க வேண்டும். ஒரு காலத்தில் எந்தவொரு காரணமும் இல்லாமல் திராவிட்டைத் தூக்கி வெளியில் வைத்தது இந்தியத் தேர்வாளர்கள் குழு. திராவிட்டின் ஆட்டத்தின் மீது அவர்கள் சொன்ன குற்றச்சாட்டு, “பந்துகளை வீணாக்குகிறார்” ஊடகங்கள் வழியாகப் பரவியது இந்தக்குற்றச்சாட்டு. திராவிட் என்றாலே பந்துகளை வீணாக்குபவர் என்கிற குற்றச்சாட்டு அவர் மேல் விழுந்தது.

அப்போது அவர் பந்துகளை வீணாக்கத்தான் செய்தார். ஆனால் தவறு அவர் மீதில்லை; இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் மீது.

ஐம்பது ஓட்டங்களுக்கு நான்கு அல்லது ஐந்து விக்கெட்டுகள் பறி கொடுத்த நிலையில் இந்தியா தத்தளித்துக்கொண்டிருக்கும்போது இந்திய அணியின் விக்கெட்டுகளைக் காப்பாற்றவேண்டிய பெரும் பொறுப்பு திராவிட்டுக்கு வந்து சேரும். தத்தளித்துக்கொண்டிருக்கும் ஓர் அணியைக் காப்பாற்றவேண்டிய நபர் அடித்து ஆட முடியாது. கொஞ்சம் பந்துகளைச் சாப்பிட வேண்டித்தானிருக்கும். இதுதான் நேர்ந்தது திராவிட்டுக்கு.

அவர் விக்கெட் காப்பாற்றியதையெல்லாம் மறந்து, பந்துகளை மட்டுமே வீணாக்கியதாகக் குற்றம் சாட்டி அவரை அணியிலிருந்து நீக்கியது இந்தியத் தேர்வாளர்கள் குழு. இத்தனைக்கும் அப்போதைய கேப்டன் அசாருதீன், ஆட்டக்காரர்கள் சச்சின், கங்கூலி உள்ளிட்டோர் எல்லோரும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். அவரது நீக்கத்தைக் கண்டித்து ஹிந்து நாளிதழ் ஒரு கவர்ஸ்டோரி வெளியிட்டது. அவர் எந்தெந்த ஆட்டங்களில் பந்துகளை வீணடித்தார்; அந்த ஆட்டங்களில் திராவிட் மைதானத்திற்குள் வரும்போது இந்திய அணியின் நிலைமை என்னவாக இருந்தது என்ற புள்ளிவிவரங்களை உள்ளிட்ட அந்தக் கட்டுரை தேர்வாளர்களின் நியாயமற்ற நடவடிக்கையை மிக அழகாக எடுத்துக்காட்டியது.

சில மாதங்களுக்குப் பிறகு திராவிட் ‘டெஸ்ட் பந்தயங்களுக்கு மட்டும்’ என்ற “தலைவிதியோடு” அணிக்குள் வந்தார். அவரது ஆட்டம் பலமுறை இந்திய அணியின் தோல்வியைத் தவிர்த்தது. மெல்ல மெல்ல திராவிட் ஒருநாள் அணியிலும் இடம்பிடித்தார்.

இடையில் சில மேட்சுகளில் பந்துகளை வீணடிக்கிறார் என்ற குற்றச்சாட்டு மீண்டும் எழுந்தது. முதலில் வெறுமனே சுமத்தப்பட்ட குற்றச்சாட்டை நிஜமாகச் செய்துவிடுவாரோ என கிரிக்கெட் உலகம் அஞ்சிய போது அதிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டார் திராவிட். டெஸ்ட் மேட்சுகளுக்கும் ஒருநாள் ஆட்டங்களுக்கும் ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறமையை வளர்த்துக்கொண்டார்.

தற்போது இந்தியாவின் மிகப்பொறுப்பான ஆட்டக்காரர்களில் ஒருவர். இந்திய ஆட்டக்காரர்களில் மேட்ச் வின்னர்கள் மூன்று பேர். அதிலொருவர் திராவிட். உலகத் தரம் வாய்ந்த ஆட்டக்காரர்களில் ஒருவர். டெஸ்ட் பந்தயங்களில் அவரது பொறுமை அசாத்தியமானது. கோட்டை விட்டுத் தவறும் பந்துகளை ஓட்டங்களாக்கும் வித்தையை லாவகமாகச் செய்கிறார்.

22 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆஸ்திரேலிய மண்ணில் ஆஸ்திரேலியாவை வென்றதில் மிக முக்கியப் பங்கு திராவிட்டுக்கு இருக்கிறது. அவர் பெருமைப்படவேண்டிய ஒரு இன்னிங்ஸ் இது. இதுவே அவரது வாழ்க்கையின் மிகச்சிறந்த இன்னிங்ஸாகவும் அமையலாம். இதைவிட இன்னுமொரு சிறந்த இன்னிங்க்ஸையும் தரலாம். ஓர் இந்தியனாக, கிரிக்கெட் இரசிகனாக இரண்டாவது சொன்னதை எதிர்பார்க்கிறேன்.


“இந்தக் காட்சைத் தவறவிடாமல் பிடித்து ராகுல் திராவிட்டை அவுட்டாக்கியிருந்தால் ஆட்டத்தின் போக்கு மாறியிருக்கலாம்”

அஜித் பாலசந்திர அகர்க்கர்.

கபில்தேவுக்குப் பிறகு என்னை அதிகம் கவர்ந்த வேகப்பந்து வீச்சாளர் அகர்க்கர்தாம். அகர்க்கரைக் கபில்தேவுடன் ஒப்பிட முடியாது என்பது வாஸ்தவம்தான். இந்தியாவிலிருந்து வந்த உலகத்தரம் வாய்ந்த ஒரே பந்துவீச்சாளர் கபில்தேவ் மட்டுமே. ஆனாலும் அகர்க்கர் வசீகரிக்கிறார்.

இனி நான் சொல்லப் போவதெல்லாம் நினைவிலிருந்து மட்டுமே. புள்ளிவிவரங்களில் சில தவறுகள் இருக்கலாம். இணையத்தில் சரிபார்த்து எழுத நேரமில்லை. அதுவரை எழுதாமல் இருக்கவும் முடியவில்லை.

முதல் நான்கைந்து மேட்சுகளில் அத்தனைத் தூரம் அசத்தவில்லை என்றாலும் அவரது வேகம், மிதமான பந்துகள், சில இன் ஸ்விங்கர்கள், இந்தியப் பந்து வீச்சாளர்கள் மனோஜ் பிரபாகருக்குப் பிறகு மறந்து போயிருந்த யார்க்கர் என எல்லாவற்றையும் வீசி, கிரிக்கெட் நோக்கர்களின், விமர்சனர்களின் கவனத்தை ஈர்க்கத்தவறவில்லை
அந்த இளைஞர். வந்தது நியூசிலாந்து ஆட்டம். அகர்க்கர் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பார்வையில் பட்டார்.

இந்தியா முதலில் பேட் செய்து ஏறத்தாழ 230 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது. அடுத்து ஆடத்தொடங்கிய சிம்பாப்வேயின் ஆரம்பம் இந்த ஓட்டங்களை எளிதாக எட்டிவிடும் என்கிற எண்ணத்தைத்தான் இந்தியர்களுக்குக் கொடுத்தது. ஆனால் அகர்க்கரின் இரண்டாவது சுற்று அந்த எண்ணத்தை முற்றிலுமாகத் தகர்த்தது. நான்கு
விக்கெட்டுகள் எடுத்து ஆட்டநாயகனானார் அகர்க்கர். அசாருதீன் அகர்க்கரை மிக அதிகமாக நம்பத்தொடங்கியதும் அப்போதுதான். அந்த ஆட்டத்தில் வர்ணணையாளர் டோனி க்ரெய்க் Its agarkkar, agarkkar, agarkkar என்று புகழ்ந்தார். அது மிகச் சில புதிய ஆட்டக்காரர்கள் மட்டுமே பெற்ற கிரெடிட்.

நினைவிலிருக்கும் அகர்க்கரின் இன்னொரு ஆட்டம் இலங்கையுடனானது. முதலில் பேட் செய்த இந்தியாவின் துவக்கம் மிக மோசமானதாக இருந்தது. அடுத்தடுத்து முன்னணி விக்கெட்டுகள் சரிய தத்தளித்துக்கொண்டிருந்த இந்தியாவைத் தோளில் சுமக்க ஆரம்பித்தார்கள் ராபின்சிங்கும், ஜடேஜாவும். இந்த மாதிரி விஷயங்கள் அவர்கள் இருவருக்கும் புதியதல்ல. ஏற்கனவே பல ஆட்டங்களைத் தங்கள்
தோளில் தூக்கி சுமந்திருக்கிறார்கள் அவர்கள் இருவரும். இந்தமுறையும் அவர்கள் அப்படிச் செய்ய நினைத்துத்தான் ஆடினார்கள். ஆக்ரோஷமான வாசின் பந்துவீச்சை அவர்கள் சமாளித்து, எடுக்கமுடிந்த ஓட்டங்கள் 173 மட்டுமே. அப்போது இலங்கை சிம்ம சொப்பனமாக விளங்கிய நேரம். டிசில்வாவும் ஜெயசூர்யாவும் கலுவிதரனேயும் ரணதுங்காவும் – நான்குபேரும் ஒரே மேட்சில் ·பார்மில் இருபபர்கள் – ·பார்மில் இருந்த நேரம். இந்த இலக்கு ஓர் இலக்கே அல்ல என்றுதான் நாங்கள் பேசிக்கொண்டோம். ஆனால் இந்தியப் பந்து வீச்சு இலங்கை ஆட்டக்காரர்களைத் தகர்த்தது. முதல் ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை இழந்தது இலங்கை. முதல் ஓவரில் அகர்க்கர், இரண்டாவது ஓவரில் ஸ்ரீநாட் என மாறி மாறி விக்கெட்டுகள் எடுத்து முதல் ஆறு ஓவர்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். ஒரு வழியாகத் தாக்குப்பிடித்து ஆடிய இலங்கை 95 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்த அகர்க்கர் ஆட்ட நாயகனானார். அன்றைக்கு அவரது பந்துவீச்சிலிருந்த ஆக்ரோஷம் இன்னும் கண்ணில் இருக்கிறது. அரவிந்த் டி சில்வா ஒரு பந்தை மறிக்கும்போது, பேட்டின் விளிம்பில் பட்ட பந்து கீப்பரின் கையில் தஞ்சம் புகுந்தது. அகர்க்கர் உள்ளிட்ட இந்தியர்கள் அரவிந்த டி சில்வாவின்
அவுட்டென நினைத்து சந்தோஷப்பட, அரவிந்த டி சில்வா அம்பயரின் அறிவிப்பிற்காகக் காத்திந்தார். அம்பயர் அவுட் தரவில்லை. மூன்றாவது அம்பயரிடம் கேட்க மறுத்துவிட்டார். அகர்க்கார் சோர்ந்துபோனார். ரீப்ளேவில் டி சில்வா அவுட்டானது தெளிவாகத் தெரிந்தது. இதையெல்லாம் கணக்கில் கொண்டு அகர்க்கருக்கு ஆட்டநாயகன் விருது அளிக்கப்பட்டது. (அன்றைக்கு ஸ்ரீநாத்தும் மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார்)

இன்னொரு ஆட்டம் நியூசிலாந்துடனானது. இந்த முறை அகர்க்கர் “அதிரடியைக்” காட்டினார். ஒருகாலத்தில் தேவையான ஓட்ட விகிதம் (Req. Run Rate) எட்டை எட்டி, இந்தியா ஜெயித்தது ரொம்பக் குறைவு. போராடித்தோற்கும் ஓரணியாகத்தான் இந்தியா இருந்தது. ராபின் சிங்கின் வரவிற்குப்பின்னர்தான் இந்தியா போராடி ஜெயிக்க ஆரம்பித்திருந்தது. அன்றைக்கும் அப்படி ஒரு நிலைமைதான். ஏறத்தாழ பத்து பந்துகளில் 13 ரன்களை எடுக்க வேண்டிய நிலைமை. எல்லோரும் இராபின்சிங்கை நம்பியிருக்க, அவரோ பந்து மட்டையில் சிக்காது போராடிக் கொண்டிருந்தார். யாரும் எதிர்பார்க்காத ஒரு விதமாக, மூன்று இரண்டுகள் ஒரு ஆறு எடுத்து இரண்டு பந்துகள் மீத மிருக்கும் நிலையில் ஆட்டத்தை முடித்துவைத்தார் அகர்க்கர். “அட.. பேட்டிங்க் கூட வருமா” என்று சொல்ல வைத்தார். பின்னொரு சமயத்தில் 21 பந்துகளில் 70 ரன்கள் எடுத்துச் சாதனை படைத்தார். இன்றைக்கும் குறைந்த பந்துகளில் ஐம்பது எடுத்த இந்தியச்சாதனை அகர்க்கர் செய்ததுதான். அந்த ஆட்டத்தில் முதல் ஆறு பந்துகளில் அவர் எடுத்த ஓட்டங்கள் ஒன்றோ இரண்டோ. (இது பற்றிய சரியான புள்ளிவிவரத்தை பத்ரி தருவாரா?) இல்லையென்றால் பந்துவீச்சில் செய்த சாதனையைப் போலவே பேட்டிங்கிலும் ஒரு சாதனை நிகழ்த்தியிருப்பார் அகர்க்கர். பந்துவீச்சில் அவர் செய்த சாதனை, குறைந்த ஆட்டங்களில் (24 ஆட்டங்கள்) முதல் ஐம்பது விக்கெட்டுகளை எடுத்தது. இது ஒரு உலகச்சாதனை.


“எப்போதும் இதே போல் எறிவாரா அகர்க்கர்?”

அகர்க்கரின் பலவீனம் எனப் பார்த்தால் சில சமயம் லைன் கிடைக்காமல் திண்டாடுவது. ஒரு நாலோ ஆறோ போய்விட்டால் அடுத்த பந்தில் லைனுக்குள் வருவது ஒரு சிறந்த பந்துவீச்சாளரின் தேவை. இந்தப் பண்பு அகர்க்கரிடம் இல்லை. தொடர்ந்து நான்கோ, ஆறோ கொடுத்த வண்ணம் இருப்பார். ஸ்லோ யார்க்கரின் போது கொஞ்சம் கவனம் சிதறினால் ·புல்டாஸாகிவிடும். அந்தப் பந்து எல்லைக்கோட்டிற்குப் போவது உறுதி. ஸ்ரீநாத் அடிக்கடிச் செய்யும் தவறை அகர்க்கரும் செய்கிறார். அகர்க்கரின் பலம் என்று பார்த்தால் எந்தவொரு சூழ்நிலையிலும் டென்சன் ஆகாதது.

கொஞ்சம் ஆலோசனைகள் வழங்கப்பட்டு சீர் செய்ய முடிந்தால், இந்தியாவிலிருந்து இன்னொரு உலகத்தரம் வாய்த்த ஆல்ரவுண்டர் வருவார், கபிலுக்குப் பிறகு.

Share

Comments Closed