சின்னச் சின்னக் கவிதைகள் – 1

[1]

கட்டுகளின்றி எழுதப்போகிறேன்

கவிதையாக இல்லாமல்

கட்டுரையாகவோ கதையாகவோ இல்லாமல்

யாருக்கேனும் பதில்களாய் இல்லாமல்

சுவரில் கிறுக்கும் சிறுகுழந்தைபோல

மருதாணி, கருநாவல்பழம்

புல்லாங்குழல், சிப்பி என

ஒன்றுக்கொண்டு தொடர்பில்லாத

வார்த்தைகளாய்.

[2]

காற்றுவெளியில்

வெயிலில் மழையில் நனைந்தபடி

அலைந்துகொண்டிருக்கிறது

இன்னும்

புரிந்துகொள்ளப்படாத

என் அன்பு

என்னைப் போலவே தனிமையாய்

எதிர்நிற்க முடியாத அகங்காரத்துடன்

தீச்சுவாலையென எரியும் ஆணவத்துடன்

மிகுந்து ஒலிக்கும் தன் ஆகிருதியுடன்.

[3]

இரண்டு கூழாங்கற்கள்

உரசி உண்டாகும் நெருப்புப்பொறியின்

சந்தோஷத்தைத் தருவதில்லை

அரற்றி எரியும் தீப்பந்தம்

ஒரு மின்மினிக்கு ஈடாவதில்லை

சூரியன்

சோப்புக்குமிழி

மறையுமுன்

சொக்க வைத்துவிடுகிறது

இப்படியாக

இவ்வுலகில்

என் சிறிய ஆளுமை

அதற்கான மகோன்னதத்துடன்.

[4]

பிஞ்சுக்குழந்தையின் உள்ளங்கைச் சூட்டை

சேமித்துவைத்து

பின்னொருநாளில் வழங்கமுடிந்தால்

அப்போது புரியும்

தொலைத்தவற்றின் பட்டியல்

தொலைத்தவற்றின் தொன்மை

-oOo-

Share

Comments Closed