பயணம் – கவிதை

–எப்போதும் வறண்டு கிடக்கும் ஏரியில்

நிறைந்திருந்த நீரில்

காத்திருந்தன

இரண்டு வெள்ளை நிற நீர்ப்பறவைகளும்

ஒரு சாம்பல் நிற நீர்ப்பறவையும்.

–வழியெங்கும்

குட்டைப் புதர்ச்செடியில் பூத்திருந்தன

வண்டுகள் சுற்றாத

மணமற்ற

சிறிய

மஞ்சள் நிறப்பூக்கள்.

–பெருங்காற்றில்

கிழிந்திருக்கும் வாழை இலைகளில்

காய்ந்திருக்கிறது பறவையின் எச்சம்.

–பிளந்திருந்த மரமொன்றில்

உயிர்த்திருக்கிறது காளான்

இப்படியாக

குறித்து வைத்த படிமங்கள் போக

ஒரு பயணக்கவிதை எப்போது பேசப்போகிறது

இடப்புறச் சன்னலினூடாக

கண்ணுக்கு வராமல்

தொலையும் கவிதைகளை.

Share

Comments Closed