நிழல் – கவிதை

ஒரு மனிதனின் பல புறவடிவங்களை
கேள்விக்குள்ளாக்கி
நிழல்களின் வடிவங்கள்
பட்டியலிட முடியாததாய்
சிறுத்தும் ஒடுங்கியும் நீண்டும், ஆனாலும்
கருமை மட்டும் பொதுவாய்

வெளிச்சமற்ற பொழுதிலும் கூட
நிழல்கள்
கூடவே இருக்கின்றன
இதை உருவேற்றிக்கொள்ளும்போது
தனிமையிலும்,
கேள்விகளுக்கு அப்பாற்பட்டதாய்
நாம் விரும்பாதபோது
புறந்தள்ளக்கூடியதாய்
விரும்பும்போது
ஏற்படுத்திக்கொள்ளக்கூடியதாய்
இலகுவான தோழமை

ஏதோ இருவரின் நிழல்கள்
சங்கமித்துக்கொள்ளும்
எது எவரது என்று இனம் காண இயலாதவாறு
காற்றுச் செல்லும் இடைவெளி
இருவருக்குமிருந்த போதும்

நிழலுருவத்தை வரையும் ஒருவனால்
நிழலை மட்டுமே வரைய முடியாது
வரைய வரைய
அது நிஜமாகிக்கொண்டே இருக்கும்

நினைவுகளினூடே
என்னைக் கடந்து
தன் திசைமாற்றி
என் கைப்பிடிக்குமோ
நான் முன்னகர முன்னகர
பின் நீளும்
என்
நிழல்?

[எனது இந்தக் கவிதை பிப்ரவரி கணையாழியில் வெளியாகியுள்ளது.]

Share

Comments Closed