தெருக்கள் – கவிதை

தெருக்கள்
இப்படியில்லாமல்
‘ப’ – வாகவோ
‘ட’ – வாகவோ இருந்திருக்கலாம்
ஒரு தொடக்கத்துடனும்
ஒரு முடிவுடனும்
மனிதர்கள்
இப்படி அப்படி எப்படியும்
நடந்து நடந்து
அவர்களைப் போலவே
மாறிவிட்டதோ என்னவோ
ஒரு தெருவிலிருந்து
எந்த வித முகமுமில்லாமல்
திடீரென வளைகிற
இன்னொரு தெருவின்
தோற்றவாயிலில்
கலங்கி நின்றிருக்கிறேன்,
இரண்டு தெருக்களும்
அப்புள்ளியில்
தம்மை இழந்து விட்ட
சோகத்தை நினைத்து.

Share

Comments Closed