பின்னோக்கி நகரும் பெருங்காலம் – கவிதை

ஆலமரத்தின் பரந்த கருநிழலும்
மஞ்சள் வெளிர் மஞ்சள் படர்வுகளும்
கண் எல்லையிலிருந்து மறைய
பின்னோக்கி நகரும் பெருங்காலம்

எப்போதோ அமிழ்ந்தொளிந்த
ஆழ்மனக் காட்சிகள்
கண்ணை மறைத்துப் பெருங்காட்சியாய் விரிய
ஒரு நொடி பேரமைதி,
அப்போதே அத்தையின் மரணம்.
ஒரு வருடத்திலெல்லாம் மாமா.
வீட்டில் கருமை சூழ்ந்த ஒரு தினத்தில் அம்மா
அப்பாவுக்காகக் காத்துக்கொண்டிருந்தபோது
ஒலித்தது புதிய குரல்

யாராலும் தடுக்கமுடியாத
காலத்தின்
பின்னோக்கியப் பெரும்பயணத்தில்
ஓரடி முன்னேயென
தொடர்ச்சியாய்ப் புதிய குரல்கள்,
வீடெங்கும் வாசற்படிகள்.
காலத்தின் வெளியெங்கும்
பரவிக்கிடக்கும் தடங்கள்
மென்மையாய் புதியதாய்
பாவங்களற்றதாய்
பூவினொத்ததாய்.

Share

Comments Closed