பள்ளியின் ஜன்னல் – கவிதை

வெறிச்சோடிக் கிடக்கும் மைதாங்களில்
சுருட்டி எறியப்பட்ட காகிதக் குப்பைகள் இல்லை
சிறுநீர் படாமல் கொஞ்சம் செழித்திருக்கிறது சிறுசெடி
மணிச்சத்தம் கேட்காமல்
‘மாசில் வீணையும்’ கேட்காமல்
நிம்மதியாய் உறங்கிக்கிடக்கிறது கடுவன் பூனை
வறாண்டாக்களின் தவம்
மாடிப்படிகளிலேறி
வகுப்பறைகளில் முடிவடைய
சொட்டும் தண்ணீரின் சத்தம்
பூதாகரமாகி குலுக்கிப் போடுகிறது கட்டடத்தை
குறுக்குச் சந்தில்
திருட்டுத்தனமாய் தம்மடித்த சரவணனும்
சத்துணவுக்கூடத்துப் பின்பக்கம்
அவசரம் அவசரமாய்
முத்தமிட்டுக்கொண்ட பிரான்சிஸும் கோமதியும்
பள்ளியை மறந்துவிட்டிருக்க
திறந்திருக்கும் ஜன்னல் காத்திருக்கிறது
காணாமல் போய்விட்டவர்களை எதிர்நோக்கி.

Share

Comments Closed