சாதேவி – சிறுகதை

ப்பாவின் மரணம் தந்த தீவிரமான யோசனையில் மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்தது அப்பாவின் வெகுளித்தனமான உள்ளமே. அப்பாவை நிச்சயம் ஒரு குழந்தை என்று சொல்லிவிடலாம். மற்ற ஆண்களுக்கு இருக்கும் வல்லமையும் திறமையும் அப்பாவுக்கு இருந்ததாகச் சொல்லமுடியாது. அப்பாவின் உருவத்தை ஒரு ஏமாளிக்குரிய உருவமாகத்தான் நான் யோசித்து வைத்திருந்தேன். ஆனால் அவரது மரணத்திற்கு வந்த கூட்டம் அவர் கோமாளியல்ல என்று எனக்கு உணர்த்தியது. அப்பா உயிரோடு இருந்த காலங்களிலெல்லாம் அவரது வெகுளித்தனத்தை அம்மா எப்போதும் வைவாள். அப்பா சின்ன வயதாக இருந்தபோது அற்ப காரணங்களுக்காக கிடைத்த நல்ல வேலையை உதறியது முதல் கடைசி வரை அவர் செய்த குழந்தைத்தனமான காரணங்களை அம்மா எப்போதும் வசவாக்கிக்கொண்டே இருப்பாள். அப்பா இறந்தபோது கணவன் இறந்துவிட்டான் என்பதைவிட தனது குழந்தை ஒன்று இறந்துவிட்டதாக அம்மா உணரத் தொடங்கினாள். அது அவளை ஆற்றாத துயரத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டது.

அப்பாவின் ஈமக்கிரியைகள் மடமடவென நடந்தன. எட்டாம் நாள் காரியத்திலிருந்து சுபம் வரை செய்ய ஸ்ர்ரங்கத்தில் கூடியிருந்தோம். கூட்டமாக சொந்தக்காரர்கள் சேர்ந்ததில் அப்பா இறந்த சோகம் பின்னுக்குத் தள்ளப்பட்டு எங்கள் குடும்பத்தின் இயல்பான உற்சாகம் முன்னுக்கு வந்துவிட்டிருந்தது. நானும் அம்மாவும் திடீரென்று அப்பாவை நினைத்துக்கொண்டு அழுவோம். அப்போதும் அம்மா இப்படியும் ஒரு மனுஷன் இருந்துட்டுப் போகமுடியுமா என்று சொல்வாள். இந்தக் காலத்தில் அப்பாவைப் போல வெகுளியாக இருந்து வாழ்க்கையை வெல்லவே முடியாது என்பது அம்மாவின் தீர்மானமான எண்ணம். எனக்கும் அதில் கொஞ்சம் ஒப்புதல் இருக்கவே செய்தது. அப்பாவிற்கு வீட்டுக்கு வெளியில் இருக்கும் தொடர்புகள், நட்புகள் பற்றி நான் அதிகம் யோசித்ததே இல்லை. அவரை ஒரு குழந்தையாகவும் வெகுளியாகவும் கோமாளியாகவும் பார்த்துப் பழகிவிட்டதால் அவருக்கும் ஒரு நட்பு இருக்கும், அவர்களுக்குள் அவர் கொண்டாடப்படுவார் என்றெல்லாம் நான் நினைத்துப் பார்க்கவில்லை. சில சமயங்களில் அவர் நட்பு வட்டத்தில் அவர் கிண்டலுக்கான ஒரு சந்தர்ப்பமாகவே மிஞ்சுவார் என்றுதான் நினைத்திருக்கிறேன். ஒரு மஞ்சள் பையைக் கையில் வைத்துக்கொண்டு மாநகராட்சி அல்வா கடைமுன் அவர் நின்றிருக்கும் காட்சி எனக்கு எப்போதும் வெறுப்பை அழிக்கக்கூடியது. மூச்சுக்கு முன்னூறு தடவை மந்திரம் போல வருமா என்பார். மந்திரம் 8வது கூட படிக்கமுடியாமல் பெட்டிக்கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக்கொண்டிருந்தான். அவன் எப்படி அப்பாவைக் கவர்ந்தான் என்பது கடைசிவரை பிடிபடவே இல்லை.

அப்பா இறந்து அவரை வீட்டில் கிடத்தியிருந்தபோது மாநகராட்சிக் கடைக்காரரும் மந்திரமும் ஓடியாடி எல்லா வேலைகளையும் செய்தார்கள். அப்போதுதான் அவர்களுக்குள் அப்பாவிற்கு இருந்த இடம் எனக்கு புரியத் தொடங்கியது. ஒருவேளை அன்றுதான் அவர்களுக்கும் புரிந்ததோ என்னவோ. அம்மா ரொம்ப வியந்து போனாள் என்பது மட்டும் உண்மை. உண்மையில் தன் கணவனுக்கு கம்பீரமளிக்கும் அந்தக் கணத்தில் அவள் தன் கணவனின் மரணத்தை விரும்பியிருக்கக்கூடும்.

ஸ்ர்ரங்கத்தின் கொள்ளிடக் கரையில் என்னை 9 முறை மூன்று மூன்று முறையாக முங்கிக் குளிக்கச் சொன்னார்கள். நான் 27வரை எண்ணிக்கொண்டு குளித்தேன். நீர் அதிகம் இல்லை. முழங்கால் வரைக்கும் இருந்த நீரில் மண் தெளிவாகத் தெரிந்தது. மண்ணில் சிறிய சிறிய எலும்புத்துண்டுகள் புதைந்து கொண்டு நின்றன. யாரோ எப்போதோ வீசிய மாலையின் நார் ஒன்று புதைந்துகொண்டு அந்த இடத்தில் சிறிய அலையைத் தோற்றுவித்திருந்தது. அப்பா கூட இப்படித்தான். சிறிய அலையைத் தோற்றுவித்துவிட்டுப் போய்விட்டார்.

மந்திரம் சொல்லி காரியங்கள் செய்துவைக்கும் ஆச்சார் வேகமாக வரச்சொன்னார். ஒரு வாளியில் கொள்ளிடத்தின் நீரை மொண்டுகொண்டு படியேறினேன். 9ஆம் தினத்திற்கான காரியங்கள் நடந்தன. சிலைக்கு [#1] தண்ணீர் ஊற்றி மந்திரங்கள் சொன்னேன். அம்மா சிறிய விசும்பலுடன் ஸ்வாமி என்றாள். எனக்கும் கண்ணீர் வந்தது.

அன்று உணவு உண்ண ஒரு மணி ஆகிவிட்டது. மடி ஆசாரங்களைத் தீவிரமாகப் பின்பற்றும் மடம் இது. பொதுவாகவே இதுபோன்று காரியங்கள் நடக்கும் மடத்தின் ஆசாரத்தன்மை நாங்கள் அறிந்ததுதான். ஆனால் ஆசாரங்களை வீட்டில் பேணாத எங்களுக்கு அது பெரிய சவாலாக இருந்தது. ஒவ்வொருமுறையும் ஏதாவது ஒரு ஆச்சார் எதற்காகவாவது முறைத்துவிட்டுச் செல்லுவார். என் அண்ணா திருநெல்வேலி சம்பிரதாயம் இப்படித்தான் என்பார். நாங்கள் எல்லாரும் சிரிப்போம். அம்மா சும்மா இருங்கடா என்று அதட்டுவாள். உண்மையில் அது ஒரு வித்தியாசமான உலகம். மடத்தில் எப்போதும் தொலைபேசி ஒலித்துக்கொண்டே இருந்தது. யாராவது ஒருவரைப் பற்றிய மரணச் செய்தி வந்துகொண்டே இருந்தது. ஆச்சார்கள் மதுரைக்கும் திருச்சிக்கும் தாராபுரத்திற்கும் பயணமாகிக்கொண்டே இருந்தார்கள். ஆளுக்குத் தகுந்த மாதிரி பணம் பெறப்பட்டது. சிலருக்கு இலவசமாகச் செய்து வைத்ததாக தலைமை ஆச்சார் யாரிடமோ சொல்லிக்கொண்டிருந்தார். மடத்தினுள் ‘மடி மடி தள்ளிக்கோங்க’ என்று கன்னடத்தில் யாராவது யாரையாவது பார்த்துச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். ஒரே சமயத்தில் ஒரு குடும்பத்திற்கு எட்டாவது நாள், இன்னொரு குடுமத்திற்கு 9 வது நாள், இன்னொரு குடும்பத்திற்கு சுபம் என்று விஷேஷம் நடந்துகொண்டே இருந்தது. “பூணூலை வலக்க போட்டுக்குங்க, பூணூலை இடக்க போட்டுக்கோங்க, ஆவாகம் பண்ணுங்க” என்று ஆச்சார் சொல்லச் சொல்ல கர்த்தா அதை செய்துகொண்டிருந்தார். சிலர் எப்போதும் காய்கறி நறுக்கிக்கொண்டிருந்தார்கள். இதுமாதிரி விஷேஷங்களுக்கு எதை எதைச் செய்யவேண்டும் எதைச் செய்யக்கூடாது என்பது அவர்களுக்கு அத்துப்பிடி. வீட்டில் இதுமாதிரி காரியங்கள் வரும்போது அம்மாவுக்கும் அப்பாவுக்கும் சண்டை வலுக்கும். அப்பா எப்போதும்போல ஒன்றுமே தெரியாமல் எதையாவது சொல்லிவைப்பார். அம்மா வைவாள். “இவ்ளோ வருஷமாகியும் எது எது செய்யணும் எது எது செய்யக்கூடாதுன்னு தெரியலையே, எப்படித்தான் வாழ்ந்தீங்களோ” என்பாள். கூடவே “15 வயசுல உங்க அம்மா உங்களைப் பெத்தா, அந்த 15 வயசு உள்ளவளுக்குள்ள புத்திதான் உங்களுக்கும் இருக்கும்” என்பாள். இன்னும் இரண்டு பேர் மடத்தின் பக்கத்தில் இருக்கும் ராகவேந்திர மடத்தில் பூஜை செய்துகொண்டே இருப்பார்கள். கடுமையான ஆச்சார அனுஷ்டானங்கள். பகல் இரண்டு மணிக்கு இந்த உலகம் ஓயும். அதுவரை அப்படி ஒரு பரபரப்பு. இப்படி ஒரு உலகம் இருப்பதாகவோ அது இவ்வளவு தீவிரமாக இயங்கிக்கொண்டிருப்பதாகவோ நான் அறிந்திருக்கவில்லை. என் தாத்தாவும் பாட்டியும் இறந்தபோது அனைத்துக் காரியங்களை திருநெல்வேலியில் வீட்டிலேயே செய்துவிட்டோம். இந்தமுறைதான் ஸ்ர்ரங்கத்தின் மடம். மிகவும் ஆச்சரியமாக இருந்தது.

மறுநாள் பத்தாம் நாள். அன்றுதான் முக்கியமான நாள். தீவிரமான, மனதை உலுக்கக்கூடிய சம்பிரதாயங்கள் நிகழப்போகும் நாள். ஆச்சார் என்னை அழைத்து மறுநாள் செய்யவேண்டிய காரியங்களைப் பற்றிச் சொன்னார். அவரது கன்னடம் வித்தியாசமாக இருந்தது. தமிழ்க்கன்னடம் பேசிப் பேசியே நாங்கள் பழகிப்போனதால் உண்மையான கன்னடம் எனக்கு அந்தத் தோற்றத்தைத் தந்திருக்கலாம். “காலேல நீங்களும் உங்க அம்மாவும் அஞ்சு மணிக்கெல்லாம் வந்துடுங்க. அவங்களை நல்லா குளிப்பாட்டி, மஞ்சள் பூசி குளிக்கச் சொல்லுங்க, பூ வெச்சிக்கிட்டு, குங்குமம் வெச்சிக்கிட்டு, வர்ற வழியில சாப்பிட்டுட்டு வரச் சொல்லுங்க. வெறும் வயிறோடு வரக்கூடாது. சுமங்கலி முகம் பார்க்க வர்றவங்க நாளைக்கே வந்து பார்த்துரட்டும். கமகம் [#2] ஆயாச்சுன்னா விளக்கு வைக்கிற வரைக்கும் யாரும் எந்த சுமங்கலியும் பார்க்கக்கூடாது. இங்கயே ஒரு ரூம் இருக்கு. அங்கயே இருக்கச் சொல்லுங்க. சரியா அஞ்சு மணிக்கு வந்துடுங்க. நிறைய காரியம் இருக்கு ஸ்வாமி. உங்க அம்மாதானே அது… அவ கூட இருக்கிறதுக்கு ஒரு சாதேவியோ சக்கேசியோ இருக்காளா? அதுக்கும் ஏற்பாடு பண்ணிடுங்க. அம்பட்டயனுக்கு நாங்களே ஏற்பாடு செஞ்சிடுவோம். காலம் ரொம்ப மாறிடுச்சு. அம்மாவை ரொம்ப கலவரப்படுத்தவேண்டாம். எல்லாம் சிம்பிளா வெறுமனே சாஸ்திரத்துக்கு செஞ்சா போதும். பாவம் வயசான ஜீவன்.”

“சரி நா பார்த்துக்கறேன்.” உள்ளூர பதட்டம் எழுந்தது.

எப்போதும் என் மகனுடன் விளையாடிக்கொண்டிருக்கும் அம்மா எதையோ பறிகொடுத்ததுபோல் விட்டத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் இருந்து நீர் வழிந்துகொண்டே இருந்தது. எதையோ பறிகொடுத்தவள் என்று நான் நினைத்தது கூடத் தவறு. அவள் இந்த பத்து நாள்களில் தன் வாழ்க்கையையே பறிகொடுத்துவிட்டதாகத்தான் எண்ணினாள். இத்தனைக்கும் அப்பாவின் மரணம் எதிர்பார்க்காத ஒன்றல்ல. நான்கு வருடங்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கவேண்டியது. மருந்துகளின் புண்ணியத்தால்தான் அவர் உயிர்வாழ்ந்தார். அவருக்கு அளிக்கப்பட்ட மருத்துவம் எங்கள் குடும்பம் அவர்களின் வாழ்நாளில் பாராதது என்றே சொல்லலாம். அப்படி ஒரு ராஜ கவனிப்பு அவருக்கு. அதிலெல்லாம் என் மீதும் என் அண்ணா மீதும் அம்மாவுக்கு ரொம்பவே பெருமை. எங்களுக்கு அதில் கொஞ்சம் கர்வம் இருந்தது. அப்பா தன் 72 வயது வரை உயிர் வாழ்ந்ததே ஒரு அதிசயம் என்றுதான் நான் நினைத்திருக்கிறேன். அப்படி ஒரு பூஞ்சை உடம்பு. அதிகம் நடக்கமுடியாது. சுறுசுறுப்பு அதிகம் கிடையாது. சிறிய வயதிலிருந்து கணக்குப்பிள்ளையாக இருந்துவிட்டதால், ஏவி ஏவியே காரியம் செய்யும் கலை மட்டுமே தெரிந்ததிருந்தது. தான் இறங்கி ஒரு வேலையை செய்து முடித்ததாக எனக்கு நினைவில்லை. இப்படி அப்பாவின் 72 வயது ஆண்டு வாழ்வே பெரிய கொண்டாட்டத்திற்குரிய விஷயமாகவே இருந்தது. அவர் கடைசி வரையில் தான் இறப்போம் என்று நம்பவே இல்லை. என்ன ஆனாலும் தன் இரு மகன்கள் தன்னைக் காப்பாற்றி வழக்கம்போல வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வந்துவிடுவார்கள் என்றுதான் நம்பினார். அவர் நினைத்ததுபோலத்தான் ஆரம்பத்தில் நடந்தது. ஆனால் ஒரு சென்ற வாரம் வந்த சந்திர கிரஹணம் கொண்ட ஞாயிறு காலையில் அப்பா விழிக்க இயலாத மரணப் படுக்கையில் வீழ்ந்தார். அவர் கடைசிவரை ஏதோ சொல்ல வாயெடுத்தார். எங்கள் குடும்பத்தின் ஒவ்வொருவரும் அதை ஒன்றாகச் சித்திரப்படுத்திக்கொண்டார்கள். நான் இப்படி. “கடைசியில என்னை விட்டுட்டீங்க போல இருக்கேடா.”

15 மாதம் மட்டுமே வயதான என் பையன் ஓடிப்போய் அவ்வா என்று அம்மா மடியில் விழுந்தான். நான் அதட்டினேன். அம்மா இப்படி எதுவும் நடந்ததாகக் காட்டிக்கொள்ளாமல் குழந்தையின் தலையைத் தடவிக் கொடுத்தாள். அவனது மெல்லிய தலைமுடி அம்மாவின் கையில் பட, அவனுக்கு கூச்சம் எழுந்தது. முகத்தை நாணிக் கோணிச் சிரித்தான். அம்மா அணிச்சையாக, அப்பாவுக்கும் இப்படித்தான், தலைல எங்க தொட்டாலும் கூச்சம் என்றாள். அவர் உயிரோடு இருந்தவரை அவர் அறியாமல் அவர் தலையின் பின்புறத்தைத் தொட்டு அவருக்குக் கூச்சமேற்படுத்துவோம். தலையில் உள்ள கூச்சத்துக்கு எங்கள் குடும்பத்திலேயே பிரசித்தி பெற்றவர் அவர். எனக்கும் கொஞ்சம் கூச்சம் இருந்தது. ஆனால் அப்பாவின் அளவிற்கு அல்ல. அம்மா ஏதோ திடீரென்று எண்ணம் தோன்றியவளாக, “நா சொல்றத கூச்சல் போடாம கேளு. நா நாளைக்கு மொட்டை போட்டுக்கறேனே” என்றாள். அவள் சொல்வது எனக்குப் பிடிபட இரண்டு நிமிடங்கள் ஆனது. என்னால் அதை எடுத்துக்கொள்ளவே முடியவில்லை. கடுமையாகக் கூச்சலிட்டேன். பக்கத்து அறையில் பேசிக்கொண்டிருந்த அண்ணா, அண்ணி, அக்கா, பாவா (அத்தான்), சித்தப்பா சித்தி என சகலரும் ஓடிவந்தார்கள். என்னைப் போலவே அது எல்லாருக்கும் கடுமையான அச்சமும் பதற்றமும் தருவதாக இருந்தது.

சித்திதான் பதவிசாகப் பேசத் தொடங்கினாள். “பாருங்க மன்னி, உலகம் எங்கயோ போய்க்கிட்டிருக்கு. நீங்க என்ன இப்படி பேசறீங்க. உங்களை அப்படி எங்களால பார்க்க முடியும்னு நினைக்கிறீங்களா? எங்களுக்கெல்லாம் அது பெரிய தண்டனை மாதிரி இல்லையா. பாவாதான் கல்லைத் தூக்கிப் போட்டுட்டுப் போயிட்டார். ஒருவகையில அது எதிர்பார்த்ததுதான். நீங்க அதைவிட பெரிய கல்லை போட்றாதீங்க மன்னி. குடும்பத்துக்கே அது தாங்காது.”

“இங்க பாரு, நான் யோசிச்சுதான் சொல்றேன். எனக்கு மட்டும் என்ன சந்தோஷமா இதைச் செய்றதுல.” அம்மா அழுதாள். கண்ணைத் துடைத்துக்கொண்டு, “அவர் போயிட்டார். அதுக்கு பின்னாடி மத்ததெல்லாம் எனக்கெதுக்கு?” என்றாள்.

அடுத்து அத்தை பேசினாள். “என்ன அண்ணி ஒளர்ற? ஒனக்கு என்ன பைத்தியம் பிடிச்சிருச்சா? அண்ணா போயிட்டா ஒனக்கு வேற ஒண்ணுமே இல்லியா? உங்கிட்ட இவ்ளோ பேசறதே தப்பு. அதெல்லா ஒண்ணும் வேணாம்டா பத்மா” என்றாள் என்னைப் பார்த்து.

மீண்டும் அனைவரும் சொன்னோம். அம்மா சொன்னாள். “ஏன் இப்படி ஆளாளுக்கு பதட்டப்படறீங்க? ஊரு உலகத்துல செய்யாததை நான் செய்யச் சொல்லலை. இது எப்பவும் நடக்கறதுதான்” என்றாள். நான் கேட்டேன், “என்னம்மா ஒளர்ற? நாம சுமங்கலி பூஜை செஞ்சப்ப நம்ம பாட்டியோட நினைவா ஒரு சாதேவி வேணும்னு எவ்ளோ அலைஞ்சோம்? ஒருத்திகூட கிடைக்கலை. காலம் அவ்ளோ மாறிக்கிட்டிருக்கு. நீ என்னடான்னா இப்பவும் நடக்கறதுன்னு கதை சொல்லிக்கிட்டு இருக்க.”

“உன் பேசிலேயே பதில் இருக்குடா பத்மா. எப்படி அலைஞ்சோம் ஒரு சாதேவிக்கு? அதை யோசிச்சுத்தாண்டா இந்த முடிவுக்கு வந்தேன். இது நம்மவங்களுக்கு நாம செய்ற உதவி இல்லையா?”

“என்ன மண்ணாங்கட்டி உதவி? ஊருல சாதேவி கிடைக்கலைன்னா உலகம் அழிஞ்சிடுமா? அன்னைக்கு நாம என்ன பண்ணோம்? சாதேவிக்குக் கொடுக்கவேண்டியதை தாமிரபரணியில விடலை? அதுமாதிரி செஞ்சிக்குவாங்க. யாரும் திருநெல்வேலியில ஒரு சாதேவி இருக்கான்னு உன்னைத் தேடிக்கிட்டு வரமாட்டாங்க”

அண்ணா ஒரே அடியாக, “இவ்ளோ எதுக்கு பேச்சு? அம்மாவுக்கு யோசிக்கமுடியலை. அப்பா போன பதட்டம். என்னவோ ஒளர்றா. அதை பெரிசாக்கவேண்டாம். நம்மளை மீறி என்ன நடந்துடப் போகுது?” என்றார். அம்மா அழத் தொடங்கினாள். அதற்கு மேல் என்ன பேசவென்று தெரியாமல் எல்லாரும் அவரவர் அறைக்குச் சென்றுவிட்டார்கள். என் மனைவியில் அண்ணியும் பேசிக்கொண்டபோது, “அத்தையோட பிடிவாதம் இருக்கே, அப்பப்பா ரொம்ப மோசம்” என்று சொல்லிக்கொண்டார்கள். அக்காவும் தலையாட்டினாள். பாவா என்னையும் என் அண்ணாவையும் தனியாக அழைத்துக்கொண்டு போனார். “என்னடா ஆச்சு உங்கம்மாவுக்கு? இங்க பாருங்கடா, அவங்க அழறாங்கன்னு சரின்னு சொல்லிடாதீங்க. மொதல்ல பாவம். ரெண்டாவது ஊர்ல எல்லாரும் நம்மளை காறித் துப்பிடுவாய்ங்க. பார்த்துக்கோங்க.” நாங்கள் சரி பார்த்துக்கறோம் என்றோம். “இன்னொரு முக்கியமான விஷயம், இதை மடத்து ஆச்சாருங்ககிட்ட சொல்லிடாத. இதுதான் சரின்னு அம்மாவை ஏத்திவிட்டாலும் ஏத்திவிட்டுருவாய்ங்க” என்றார். பாவா சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்றுதான் நான் நம்பினேன். உள்ளிருந்து அக்கா அழைத்தாள். அழுதுகொண்டே சொன்னாள். “அம்மாவுக்கு சகேசியா இருந்தா எந்தவொண்ணும் ஆகாம போயிடுவோம்னு பயம். சாம்ப்ளோர் வந்தா சமைச்சு போடணும்னே முத்திரை வாங்கிக்கிட்டவங்க அவங்க. இப்ப சகேசியா இருந்தா அவங்க எதையும் செய்யக்கூடாது. திதி கிதி வந்தா சமைக்கக்கூடாது. சாம்ப்ளோர் வந்தா அந்தப் பக்கம்கூட போகக்கூடாது. அம்மா மாதிரி சகேசியா இருக்கிறவங்களை சாம்ப்ளோர் பார்த்துட்டா அவங்க அன்னைக்கு முழுதும் சாப்பிடக்கூடாதாம். அவ்ளோ தோஷமாம். அன்னைக்கு ராத்திரி பௌர்ணமி வர்ற வரைக்கும் காத்து இருந்துட்டு, பௌர்ணமி தரிசனம் முடிஞ்ச பின்னாடிதான் சாப்பிடணுமாம்.” அண்ணா கேட்டார், “இதெல்லாம் யார் சொன்னா?” “நேத்து வந்தாளே அந்த கமலா அத்தை, சாதேவி..” “யார் அந்த மொட்டைப் பாட்டியா?” “அவ தாண்டா, அம்மாகிட்ட ரொம்ப நேரம் என்னவோ பேசிண்டிருந்தா. அடிக்கடி அம்மாவ ஒண்ணத்துக்கும் ஆகாம போயிட்டயேடின்னு சொல்லிக்கிட்டு இருந்தா.. அவதாண்டா எல்லாத்துக்கும் காரணம்.” நான் பெருமூச்சு விட்டேன்.

பத்தாம் நாள் அதிகாலையில் அம்மாவுக்கு வெந்நீ£ர் வைத்துக் கொடுத்தாள் சித்தி. அம்மா குளித்துவிட்டு அலங்காரம் செய்துகொண்டு வந்தாள். அவளை எந்த சுமங்கலியும் வெறும் வயிற்றுடன் பார்க்ககூடாது என்பதால் நான் தனியறையில் அவளை இருக்கச் சொன்னேன். மற்ற சுமங்கலிகள் எல்லாம் கடையில் கிடைத்த இட்லியை ஆளுக்கொரு துண்டாக வாயில் போட்டுக்கொண்டு, முந்தானையில் மஞ்சள் முடிந்துகொண்டு அம்மாவைப் பார்க்கவந்தார்கள். அம்மாவும் வெறும் வயிற்றுடன் இல்லாமல் ஒரு இட்லி சாப்பிட்டிருந்தாள். அவளைப் பார்த்தவுடன் அந்த இடமே அழுகையால் சூழ்ந்துகொண்டது. எனக்கு படபடப்பு ஏறிவிட்டிருந்தது. அண்ணா, “இதெல்லாம் என்ன சம்பிரதாய எழவோ” என்றார். அம்மாவை அழைத்துக்கொண்டு மடத்திற்குப் போனேன். அங்கு அவளைத் தனி அறையில் இருக்கச் சொல்லிவிட்டார்கள். நான் அவளுடன் இருந்தேன். சுமங்கலி முகம் பார்க்க வந்தவர்கள் வரிசையாக வந்தார்கள். வரிசையாக அழுதார்கள். சம்பிரதாயங்கள் முடிந்த பின்பு கொள்ளிடக் கரைக்குப் போனோம்.

அப்பா இறந்த மறுநாள் செய்த கிரியைகள் அனைத்தையும் மீண்டும் செய்தோம். பலிக்கு அனைவரையும் நமஸ்காரம் செய்யச் சொன்னார் ஆச்சார். ஒட்டுமொத்த குடும்பமும் விழுந்து வணங்கியது. அம்மா விடாமல் “ஸ்வாமி காப்பாத்துங்க” என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். பெண்கள் அனைவரையும் அம்மாவின் கண்ணில் படாதவாறு செல்லச் சொன்னார் ஆச்சார். அண்ணா இனி நடக்கப்போகும் கொடுமையைப் பார்க்கமுடியாது என்று சொல்லி குளிக்கப் போய்விட்டார். அம்மாவின் உடன் பிறந்தவர்கள் ஓலமிட்டுக்கொண்டே பிறந்தவீட்டுப் புடைவையைச் சார்த்திவிட்டுப் போனார்கள். அம்மாவுடன் இருந்த சாகேசி தூரத்து அத்தை. அவள்தான் கமுகம் செய்தாள். அம்மாவின் தாலியை அறுக்கவே முடியவில்லை. அம்மா அழுதுகொண்டே, “இது கட்டியா இருக்கு. அவர் இல்லையே” என்று சொன்னாள். அந்தக் காட்சியை யாரும் பார்த்துவிடக்கூடாது என்று புடைவையை விரித்துப் பிடித்திருந்த நான் கதறினேன். எல்லாவற்றின் மீதும் வெறுப்பாக இருந்தது. ஆச்சார், “அதை அறுக்கெல்லாம் வேண்டாம். கழட்டி வெச்சிடுங்க. ரொம்ப படுத்தவேண்டாம். வளையலையும் உடைக்கவேண்டாம். கழட்டி வெச்சா போதும்” என்றார். அம்மா ஆச்சாரிடம் “சாதேவி ஆகணும்” என்றார். நான் இரைந்தேன். “ஒனக்கென்ன பைத்தியமா? ஏன் இப்படி நினைச்சதை சாதிக்கணும்னு நினைக்கிற?” ஆச்சார் கொஞ்சம் அதிர்ச்சியுடன் சொன்னார், “இங்க பாருங்கம்மா. நீங்களும் எனக்கு அம்மா மாதிரிதான். எனக்குத் தெரிஞ்சு யாருமே இதை செஞ்சிக்கிறதில்லை. இதெல்லாம் வேண்டாம்” என்றார். அம்மா, “அதனாலதான் நான் செஞ்சிக்கணும்”னு சொல்றேன் என்றாள். நான் கையாலாகாமல் “அண்ணா” என்று கத்தினேன். தூரத்தில் கொள்ளிடத்தின் போக்கை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அண்ணாவின் செவிகளைனென் குரல் அடையாமல் காற்றில் கரைந்தது.

எல்லாரும் கரையேறிய பின்பு நானும் அம்மாவும் அம்மாவுடன் இருந்த சாகேசி அத்தையும் குளித்துவிட்டு மடத்தின் தனியறைக்குச் சென்றோம். அரசல் புரசலாக அம்மா செய்த காரியம் எல்லாருக்கும் தெரிந்துவிட்டது. ஆளாளுக்கு சத்தம் போடுவது கேட்டது. சித்தி அத்தை அக்கா எல்லாரும் இனிமேல் அம்மாவை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்று சொல்லிச் சொல்லி அழுதார்கள். அண்ணாவும் மாமாவும் கடும் கோபத்துடன் அறைக்குள்ளே வந்தார்கள். அம்மாவைப் பார்த்த மறுகணத்தில் அவர்கள் கோபம் எல்லாம் போய் பெரும் ஓலமிட்டு அழுதார்கள். நான் அம்மாவின் மடியில் படுத்து விசும்பிக்கொண்டிருந்தேன். விஷயம் மெல்ல மெல்லப் பரவி அங்கிருக்கும் ஆச்சார்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து வந்துவிட்டார்கள். அதில் ஒரு முதியவர், “இது சாதாரண காரியமில்லம்மா. நீ இப்படி பண்ணியிருக்க வேண்டாம். பண்ணிட்ட. உன் புருஷன் மேல நீ வெச்சிருக்கிற பாசத்தைக் காண்பிச்சிட்ட. எனக்கு என்ன பேசறதுன்னே தெரியலை. ஆனா இது ஒரு அசாதாரண காரியம்னு மட்டும் தெரியுது. உன் குடும்பமே வாழையடி வாழையா நல்லா இருக்கும்” என்றார். அம்மா சொன்னாள், “நீங்க பார்க்க என் மாமனார் மாதிர் இருக்கீங்க. அவரே நேர்ல வந்து சொல்றதா இதை எடுத்துக்கறேன். சரியோ தப்போ எனக்கு இப்படி செய்யணும்னு தோணிச்சு. அவர் இருக்கிறவரைக்கும் அவருக்காக இதை நான் செய்வேன்னு யாரும் சொல்லியிருந்தா நானே நம்பியிருக்க மாட்டேன். அவர் போனதுக்கப்புறம்தான் அவரோட இருப்பு தெரியுது. எல்லாம் அவன் செயல்.” எனக்குள் பலப்பல எண்ணங்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அம்மா எப்படி இப்படிச் செய்தாள்? இந்த அம்மா புதியதல்ல. தான் நினைத்ததைத் தவிர எதையும் செய்யாதவள் அவள். இன்றைக்கு வரை அது அவளுக்கு அனுமதிக்கப்பட்டே வந்திருக்கிறது. நானும் என் அண்ணாவும் சொல்லி அவள் சில முடிவுகளை மாற்றிக்கொண்டிருக்கிறாள். மற்றபடி யார் சொல்லியும் எதற்காகவும் அவள் தன்னை மாற்றிக்கொண்டதாக எனக்கு நினைவுக்கு வரவில்லை. அப்படி வந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவள் தன் முடிவுக்காக சகல சொந்தக்காரர்களையும் இழக்கத் தயாராக இருந்தாள். இந்த விஷயத்தில் என்னையும் என் அண்ணாவையும்கூட இழக்கத் தயாராகிவிட்டாளோ என்னவோ. நேற்று ஆச்சார் ஒரு கதை சொல்லிக்கொண்டிருந்தார். ஒரு கணவனின் சிதையில் விழுந்த ஒரு பெண்ணைப் பற்றிய வர்ண்னை. அது நடந்து ஐம்பது வருடங்கள் இருக்கும். இன்றைக்கும் அந்த வெம்மை அவரைத் தாக்குவது போல அவர் சொன்னது அவர் எவ்வளவு தூரம் அதனால் வேதனைப்பட்டார் என்பதை உணர்த்தியது. அந்தப் பெண்ணின் பையன் பைத்தியமாக அலைந்து கொள்ளிடத்தின் கரையில்தான் உயிர் துறந்திருக்கிறான். ஒருவேளை நானும் என் கண்முன்னே நடந்த இந்த விஷயத்தை நினைத்து நினைத்து பைத்தியமடைந்து இந்தக் கொள்ளிடத்தின் கரையில் மடியக்கூடும். என் கண்ணீர் அம்மாவின் தொடையை நனைத்தது. அம்மா என் கண்களை துடைத்துவிட்டாள். நான் எழுந்து அம்மாவை நோக்கினேன். “ஏம்மா இப்படி செஞ்சிட்ட?” “ஒரு காரணமும் இல்லைடா. தோணிச்சு செஞ்சேன்.” “ஏன் இப்படியெல்லாம் தோணிச்சு?” “அப்பா முன்னாடி ஒரு தடவை சொல்லியிருக்றார். புருஷன் போனா மொட்டை அடிச்சிக்கிட்டு தன் அழகையே கெடுத்துக்கிறவதான் புருஷனுக்காவே வாழ்ந்தவன்னு. அதுதான்னு வெச்சிக்கோயேன்” “அப்படின்னா அப்பா வெகுளி இல்லையாம்மா?” “நீ உன் பொண்டாட்டிகிட்ட இப்படி சொல்லுவியா? அவர் சொல்லியிருக்கார். அதுலேர்ந்தே தெரியலையா அவர் வெகுளின்னு?” அம்மாவை பேச்சில் ஜெயிக்கவே முடியாது. வெளியிலிருந்து யாரோ அழைத்தார்கள். வெளியே சென்றேன். “நாஸ்வன் காசு வாங்க வந்திருக்காண்டா” என்றார் மாமா. நானும் மாமாவும் மடத்திற்கு வெளியே சென்றோம். நாவிதர் என்னைப் பார்த்தது எனக்கு என்னவோ போலிருந்தது. மாமாவிடம் அவர் கேட்டார், “என்னை ஞாபகம் இருக்கா சாமி?” “ஏண்டா ஞாபகம் இல்லாம? திருப்பதில பார்த்தோமே. மணிதானே நீ?” “ஆமா சாமி” என்றார். அடுத்து அவர் கேக்கப்போகும் வார்த்தைகளுக்காகக் காத்துக்கொண்டிருந்தேன். நான் நினைத்தவாறே கேட்டார். என்னைப் பார்த்து, “என்ன சாமி அவ்ளோ படிச்சவங்கன்னு சொல்லிக்கிறீங்க, ஊர் ஞாயம் உலக ஞாயமெல்லாம் பேசிக்கிறீங்க, இதை தடுக்க முடியலயா? திருப்பதில எத்தனையோ பொம்பளேங்களுக்கு நானும் மொட்டை போட்டுருக்கேன். இது… முடியல சாமி. கையெல்லாம் நடுங்கிருச்சு…” அதற்குமேல் அங்கு நிற்கமுடியாமல் மாமாவிடம் ரூபாயைக் கொடுத்துவிட்டு அம்மா இருந்த அறைக்குள் சென்றேன். மாமா என்னவோ அவரிடம் சொல்லிக்கொண்டிருந்தார்.

அம்மா தலையை தன் முந்தானையால் மறைத்துக்கொண்டிருந்தாள். தாலி, கருகமணி எதுவுமே இல்லை. சித்தி கொடுத்த தங்க செயினை மட்டும் போடிருந்தார். ஏற்கனவே எடுப்பாக இருக்கும் பற்கள் இன்னும் விகாரமாகத் தெரிந்தன. கையாலாகாத ஒரு பாவப்பட்ட தெருநாயின் பிம்பம்தான் தெரிந்தது. அம்மா என்று மனதுக்குள் கூவிக்கொண்டே அம்மாவின் மடியில் முகம் புதைத்து அழுதேன். இந்த அம்மா ஏனிந்த தீராத வலியில் என்னைத் தள்ளினாள்? உண்மையில் ஒரு பெண்ணின் விஸ்வரூபத்திற்கு முன்னால் ஆணால் எடுபடவே முடியாதோ? பெண்கள் ஆணின் அடிமை போல இருப்பதெல்லாம், இதோ இந்த முந்தானையில் மறைந்துகிடக்கும் ஒரு பெரிய ரணம் போல, பெண்ணுள்ளே மறைந்துகிடக்கிறதோ? ஒரு பெண்ணின் தீவிர எழுச்சி என்று நினைத்தாலே எனக்கு பயமாக இருந்தது. அம்மா என் தலையை வருடினாள். நான் எழுந்து அம்மாவைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன என்பதுபோல அம்மா பார்த்தாள். அவள் தலையை மெல்ல வருடினேன். மொழுமொழுவென்றிருந்தது. என் மகனுக்கு மொட்டை போட்டுவிட்டு தடவிப் பார்த்தபோது இப்படித்தான் இருந்தது. ஒரு குறுகலான பார்வையில் அவனுக்கும் அம்மாவுக்கும்தான் என்ன பெரிய வித்தியாசம் இருந்துவிடப் போகிறது?

-oOo-

குறிப்புகள்:

குறிப்பு #1: சிலை: இறந்தவர்களை எரித்த பின்பு, எரித்த இடத்தில் மறுநாள் சாந்தம் (குளிர்வித்தல்) செய்வார்கள். பின்பு அவரைப் போன்ற ஒரு உருவத்தை மண்ணில் வரைந்து அதற்குப் பூஜை செய்வார்கள். அங்கிருக்கும் ஒரு சிறிய கல்லை எடுத்து, ஆவாஹம் செய்து, அதையே இறந்தவராக நினைத்து பூஜை செய்வார்கள். இதுவே சிலை என்று அழைக்கப்படுகிறது. இந்த கல்லை பத்திரமாக வைத்திருந்து 13-ஆம் நாள் பூஜை முடிந்தவுடன் ஆற்றில் எறிய வேண்டும்.

குறிப்பு #2: கமகம் (அல்லது கமுகம்): தாலி அறுக்கும் சடங்கு.

மேலும் சில அடிக்குறிப்புகள்:

* கன்னடம் பேசும் மாத்வ சமூகத்தில் கணவர் இழந்தவர்களை இரண்டு வகைகளாகச் சொல்கிறார்கள். சாதேவி என்பவர்கள் கூந்தலை மழித்துக்கொண்ட கைம்பெண்கள். சகேசி என்பவர்கள் கூந்தலை வைத்துக்கொண்டிருக்கும் கைம்பெண்கள்.

* தீவிர மரபுகளைக் கடைப்பிடிக்கும் சில மாத்வ குடும்பங்களில் சாதேவி பெண்கள் மட்டுமே தவசம், சாம்ப்ளோர்கள் வரும்போது அவர்களுக்கு சமையல் செய்து பரிமாறுவது போன்ற காரியங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். சகேசி என்பவர்களை சாம்ப்ளோர்கள் காண்பதேகூட தவிர்க்கப்படுகிறது. கூந்தலை மழித்துக்கொள்வது என்பது முற்றிலும் அருகிவிட்ட காலம் என்றாலும் சகேசி பெண்கள் எதற்கும் அனுமதிக்கப்படுவதில்லை என்கிற மரபு தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது.

* சுமங்கலி பூஜையின் போது மாத்வ குடும்பங்களில் ஒவ்வொரு குடுமத்திற்கு ஒரு வழக்கம் இருக்கிறது. இருக்கும் உட்பிரிவுகளுக்கேற்ப இந்த வழக்கங்கள் மாறுபடும். சில மாத்வ குடும்பங்களில் இந்த சுமங்கலி பூஜையின்போது சுமங்கலிகளுக்கு உணவாக பழங்களையே பரிமாறுவார்கள். அசி ஹூ ஹுள்ள என்று இதற்குப் பெயர். இதில், இரண்டு கன்னிப் பெண்களும் அடங்குவர். இவர்களோடு, ஒரு சாதேவி பெண்ணுக்கும் இதைச் செய்யவேண்டும். (இந்த எண்ணிக்கையெல்லாம் ஒவ்வொரு குடும்பங்களுக்கு ஏற்ப வேறுபடும்.) அதாவது அசி ஹூ ஹுள்ள பழக்கம் உள்ள குடுமங்களில் சாதேவி பெண்களுக்குப் படைப்பதும் ஒரு வழக்கம். இந்த சுமங்கலி பூஜை என்பது வருடா வருடம் வரும் சுமங்கலி பூஜையிலிருந்து முற்றிலும் வேறுபட்டது. இதை கன்னடத்தில் முத்தைத என்கிறார்கள். முத்தைத என்றால் சுமங்கலி என்று அர்த்தம். (அதனால் சுமங்கலி பூஜை என்று மொழிபெயர்த்தேன்.) இந்த முத்தைத எனப்படும் சுமங்கலி பூஜை எப்போதெல்லாம் செய்யப்படுகிறது என்றால், வீட்டிலிருக்கும் பெண்கள் திருமணமாகிச் செல்கிறார்கள் என்றால் அவர்களின் திருமணத்திற்கு முன்பும், ஆண்களுக்குத் திருமணம் ஆகி வீட்டிற்கு புதுப்பெண் வருகிறாள் என்றால் அந்தப் புதுப்பெண் வீட்டிற்கு வந்தபிறகும் இதைச் செய்கிறார்கள். இந்தப் பழக்கமும் காலமாற்றத்திற்கேற்ப வழக்கொழிந்து வருகிறது. கடந்த 50 வருடங்களில் எங்கள் குடும்பங்களில் ஒரேயொரு முறைதான் இந்த முத்தைத நடந்ததாகச் சொல்கிறார்கள். 50 ஆண்டுகளில் எத்தனை திருமணங்கள் நடந்திருக்கின்றன. ஆனாலும் முத்தைத செய்யவில்லை. என் திருமணத்திற்குப் பிறகுதான் மீண்டும் முத்தைத செய்தார்கள். அவ்வளவு அருகிவிட்டது இந்த வழக்கம். இன்னும் சொல்லப்போனால் இப்போதிருக்கும் மாத்வ இளைஞர்களுக்கு இவையெல்லாம் சுத்தமாகத் தெரியாது என்றுகூடச் சொல்லிவிடலாம்.

* சாம்ப்ளோர்கள் என்பவர்கள் மாத்வ குடும்பங்களில் இருக்கும் பல பிரிவுகளின் தலைமை குரு போன்றவர். கிட்டத்தட்ட தமிழ்நாட்டின் சங்கராச்சாரியர்களை ஒத்தவர்கள். மாத்வர்களுக்குள் பல பிரிவுகள் இருக்கின்றன. ஒவ்வொரு பிரிவுக்கும் ஒரு சாம்ப்ளோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் வரும்போது அவர்களுக்கு உணவு செய்து பரிமாற பெண்கள் முத்திரை பெற்றிருக்கவேண்டும். பெண்கள் முத்திரை பெறுவது என்பது கூட எளிதானதல்ல. சுமங்கலிகளுக்கு மாதவிலக்கு முழுவதுமாக நின்ற பிறகு, ஏழு வருடங்களுக்கு பின்பு இந்த முத்திரை வழங்கப்படுகிறது. கணவன் இழந்த பெண்கள் என்றால் அவர்கள் சாதேவியாய் இருக்கும்பட்சத்திலேயே இந்த முத்திரையைப் பெறமுடியும். ஏற்கனவே முத்திரை பெற்ற சுமங்கலிகள் கணவனை இழக்கும் பட்சத்தில், அவர்கள் சாதேவியாய் மாறும் பட்சத்தில் அந்த முத்திரை அவர்களுக்குத் தொடரும். அவர்கள் சகேசியாக இருக்கும் பட்சத்தில் அந்த முத்திரை செல்லாது.

* முத்திரை என்பது சங்கு அல்லது சூரியன் போன்ற வெள்ளியானால் ஆன முத்திரையை கரி அடுப்பில் சூடு செய்து முத்திரை போன்று கையில் வைப்பார்கள். இதை செய்ய அனுமதி பெற்றவர்கள் சாம்ப்ளோர்கள் என்றழைக்கப்படும் சமூகப் பெரியவர்களே. இப்போது இவையெல்லாம் அருகிக்கொண்டு வந்தாலும், ஆங்காங்கே சில மாத்வ சங்கங்கள் இந்த முத்திரை பெறுவதற்காக அவரவர் சாம்ப்ளோர்களை அழைக்கிறார்கள். நான் மூன்றாவது படிக்கும்போது சேரன்மகாதேவியில் சாம்ப்ளோர் வருகிறார் என்று எங்கள் வீடே அல்லோலப்பட்டது மட்டும் எஞ்சிய நினைவுகளாக எனக்கு ஞாபகம் இருக்கிறது. அதற்குப்பிறகு இத்தனை வருடங்களில் எங்கள் குடும்பங்களைச் சார்ந்த சமூகங்களில் சாம்ப்ளோர் என யாரும் வரவில்லை.

* தமிழ்நாட்டில் இருக்கும் மாத்வர்கள் வீட்டில் கன்னடம் பேசிக்கொள்வதற்கு இணையாக தமிழே பேசுகிறார்கள். அப்படி அவர்கள் தமிழ் பேசும்போது வழக்குத் தமிழில்தான் பேசுகிறார்களே ஒழிய பிராமணத் தமிழில் பேசுவதில்லை.

Share

Comments Closed