சில கவிதைகள்

புதுஎழுத்து

நீண்ட வாக்கியங்களில்
நம்பிக்கையற்றுப் போனபோது
வார்த்தைகளில் விழுந்தேன்
அவையும் அதிகமென்றானபோது
எழுத்துகளைப் பிடித்துக்கொண்டேன்
ஒற்றையெழுத்துகளும் சலித்தபோது
மொழியின் போதாமையில்
என்னை புதைத்துக்கொண்டது மௌனம்
மௌனத்தின் வசதியின்மையில்
உருவாகிறது என் மொழி

யாருமற்ற தனிமை

அடைந்து கிடந்த அறையினுள்ளிருந்து
முதலாமவன் வெளியேறினான்
அவன் சொன்ன வார்த்தைகளை நினைவூட்டி
அவனுக்கு முகமன் கூறினார்கள் மற்றவர்கள்
இரண்டாமவன் போனபோது
அவன் நற்செய்கைகளை காட்டி
வாழ்த்து சொல்லி அனுப்பிவைத்தார்கள்
மூன்றாமவன் போனபோது
சந்தோஷமான நிமிடங்களை
நான்காமவன் நினைத்துக்கொண்டான்
கடைசியாக அவனும் விடுவித்துக்கொண்டபோது
தனித்து விடப்பட்டது அந்த அறை

அடைந்து கிடந்தபோது
அவர்கள் பரிமாறிக்கொண்ட
அன்பான வார்த்தைகளை விட்டுவிட்டு
அவர்களைச் சொல்லி
திட்டிக்கொண்டிருந்தது அறை

சின்னஞ்சிறு கவிதைகள்

சிதைப்புகையை
ஆழ்ந்து உள்ளிழுக்க,
இனியென்னை
வாழ்வெங்கும்
துரத்தப்போகும்
மணம்

-oOo-

ஒரு பூனையின் நிமிடங்கள்
ஒரு எலியின் நிமிடங்கள்
ஒரு பூனை மற்றும் எலியின் நிமிடங்கள்
முடிந்துவிடுகிறது பேருலகம்

-oOo-

தன் முதல் எழுத்தை எழுதும்
பிஞ்சு விரல்களில்
குடிகொள்கிறது உலகின் குரூரம்

-oOo-

வீடெங்கும் தவழும்
இசையில் இருப்பதில்லை
ஆயத்தமற்ற
நொடிக்கோபத்தில் விளையும்
அமைதியின் குறிப்புகள்

-oOo-

Share

Comments Closed