5 கவிதைகள்

01. வழி

நிர்ணயிக்கப்பட்ட
சாலைகளில்
பயணம்
அலுப்பாயிருந்தது
வழி தப்பிய தட்டான்
பேருந்துக்குள்
நுழையும்வரை

02. கவிதையைக் கற்பித்தல்

“குழலினிது”
“குழலினிது”
“யாழினிது”
“யாழினிது”
“என்பர்தம்”
“என்பர்தம்”
“மக்கள்”
“மக்கள்”
“மழலைச்சொல்”
“மழலைச்சொல்”
“கேளா”
“கேளா”
“தவர்”
“தவர்”

03. எதிர்பாராத கவிதை

சூரியனருகே
சுற்றிக் கொண்டிருக்கும் பறவை
கீழே நதியோடும்
பாலமொன்றில்
காற்றிலாடும்
கூந்தல் முகம்
சாரல் போல் தெறிக்கும்
நதிநீர்த் திவலைகள்
பேரிருளுக்குள்
கனன்று கொண்டிருக்கும்
கங்கு…
பெரும்பட்டியலில்
தன்னிடத்திற்குக்
காத்திருக்கவில்லை
திடீர் முற்றத்துச் சத்தம்
படபடக்கும் தாளில்
சின்ன சின்ன நீர்த்துளிகள்

04. அமைதி

குழந்தைகள்
காடுகளைப் பற்றி
படித்துக்கொண்டிருந்தார்கள்
அங்கு வந்தன மரங்கள்
கொடிகள் செடிகள்
புதர்கள் விலங்குகள்
பறவைகள் இன்ன பிற
சீறிக்கொண்டோடியது
வேகப் பேருந்து
குழந்தைகள் திடுக்கிட

05. வீடுவிட்டு விளையாட்டு

வீட்டிலிருந்து வெளியேற
உடன் வாங்கிக்கொண்டது
உலகம்
ஆயிரம் பாம்புகள்
கனவெங்கும் துரத்த
மீண்டு
வீடு வந்த போது
புன்னகையுடன்
காத்திருந்தது
கடவுள்

Share

Comments Closed