பொம்மைகள் – கவிதை

ஆடும் பொம்மைக்கு
தான் சாவி கொடுக்கவில்லை என்றான் என் மகன்
பொம்மைக்கும் தனக்கும்
சம்மந்தமே இல்லை என்கிற பாவனையில் என் மனைவி
அம்மாவிடம் கேட்டால்
தான் அந்த பொம்மையை கண்டதே இல்லை என்பாள்
எப்போது நம் வீட்டிற்கு வந்தது என்று
எதிர்க்கேள்விகூட கேட்கலாம்
மூன்று பேரும் சத்தியம் செய்யவும் தயாராக இருக்கிறார்கள்.
அப்பா ஃபோட்டோவில் இருப்பதால்
அவரை கேள்விகள் கேட்க நியாயம் இல்லை.
நானே என்னைச் சந்தேகப்பட முடியாது.
மௌனச் சிரிப்புகளுக்கிடையில்
சத்தமெழுப்பி
ஆடும் பொம்மைகள் ஆடிக்கொண்டிருக்கின்றன.

Share

Comments Closed