எல்லாம் அம்மா செயல்

என்றைக்கு கருணாநிதி வந்து ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டாரோ அன்றே தொடங்கிவிட்டது அக்கோயிலின் மீதான ஓர் ஆர்வமின்மை. அதிலும் அக்கோயில் 250 கோடி பட்ஜெட்டில் கட்டப்பட்ட கோவில் என்றபோது அதன் மீதான ஆர்வமின்மை வெறுப்பை நோக்கி நகரத் தொடங்கியது. இதனாலேயே இக்கோவிலுக்குப் போகலாம் என்கிற பேச்சு வந்தபோதெல்லாம், சில எதிர்மறையான காரியங்களைச் சொல்லி தவிர்த்தே வந்தேன். நேற்று அக்கோவிலுக்குச் செல்லவேண்டிய சந்தர்ப்பம் வந்தது. சரி போவோம் என்று போனேன்.

வேலூருக்கு அருகில் இருக்கிறது கோவில். ஸ்ரீபுரம் தொடக்கத்தில் இருந்து எங்கே பார்த்தாலும் நாராயணியும் அம்மாவும் காட்சி தருகிறார்கள். உண்மையில் நான் ஸ்ரீ அம்மா என்று சொல்லியிருக்கவேண்டும். மரியாதையின்மையின் உச்சம் நான் அம்மா என்று மட்டும் சொல்வது. மேல் மருவத்தூரில் அம்மன் முன்பு அம்மா (இது வேறு அம்மா) நின்று அருள் சொல்வதுபோல, நாராயணியின் முன்பு நின்று அம்மா அருள் பாலிக்கிறார். அம்மா என்று அழைக்கப்படுபவர் கிட்டத்தட்ட 32 வயதான ஒரு ஆண். ’அவர் பிறக்கும்போது அவர் முகத்தில் நாமம் இருந்தது. பின்னர் அவர் கடவுளின் குழந்தையாக இல்லாமல் வேறு யாராக இருக்கமுடியும்? அவரைப் பார்த்த சிலர் கண்மூடிக் கண் திறந்தபோது அவர் சிங்கத்தின் மீதிருக்கும் நாராயணியாகக் கண்டார்கள். அவர் நாராயணியின் அம்சம்.’

திருப்பதியை மனதில் வைத்துக்கொண்டு உருவாக்கியிருக்கிறார்கள். கொஞ்சம் அதிகமாக உருவாக்கிவிட்டார்கள்! திருப்பதியில் வரும் சின்ன சின்ன எரிச்சல்களெல்லாம் பெரிய அளவில் வருகிறது இங்கே. உள்ளே நுழைந்ததும் கேமரா, செல்ஃபோன் என எல்லாவற்றையும் வாங்கி வைத்துக்கொண்டுவிட்டார்கள். வரிசையில் நின்று, வரிசை மெல்ல மெல்ல நகன்று செல்ல, ஒரு அறையை அடைந்தோம். அங்கே அடைத்துவைத்தார்கள். கொளுத்தும் வெயிலில் நான்கே நான்கு ஃபேன்கள். அங்குள்ள ஒரு டிவியில் அம்மா செய்த யாகங்கள், வேத மந்திர முழக்கங்கள் என எல்லாவற்றையும் வரிசையாகக் காட்டிக்கொண்டிருந்தார்கள். அம்மா ஒரு காவி சால்வையைப் போர்த்திக்கொண்டு, கைகளைக் குறுக்காக கட்டிக்கொண்டு மிடுக்காக நடந்துகொண்டே இருக்கிறார்.

அந்த அறையிலிருந்து திறந்து விட்டார்கள். நடக்க ஆரம்பித்தோம். (உண்மையில் நான் இரண்டு மணிநேரம் கழித்துதான் அடுத்த வரி எழுதவேண்டும். அத்தனை நேரம், அத்தனை தூரம் நடந்தோம்.) நடைபாதை சூரிய சக்கரம், சந்திர சக்கரத்தை உத்தேசித்துக் கட்டப்பட்டதாம். நடந்தோம். நடுவில் தங்கத்தில் கோயில் ஜொலிக்க, நாங்கள் அதை அடைய நடந்தோம். நேரடியாக சடுதியில் அடைந்திருக்கவேண்டிய கோவிலை, சுற்றிச் சுற்றி ஸ்டார் வடிவத்தில் இருக்கும் நடைபாதை வழி நடந்தோம். வழியெங்கும் கற்சிலைகள் அழகழாகப் பூத்திருக்க, திரும்பிய பக்கமெல்லாம் பசும்பூல் போட்டு அதை ஆள் பராமரித்துக்கொண்டிருக்க நடந்தோம். ஒவ்வொரு ஒரு கிமீ தொலைவிற்குள்ளும் நன்கு பராமரிக்கப்பட்ட கழிப்பறைகள். கழிப்பறை சுட்டி அட்டைகள் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி என எல்லா மொழிகளையும் கொண்டிருந்தன. மலையாளம் காணவில்லை. ஒருவேளை மலையாளிகள் அறிவாளிகளோ என நினைத்துக்கொண்டே நடந்தோம். இன்னும் நடந்தோம். மேலும் நடந்தோம். திடீர் திடீரென நிறுத்தினார்கள். நின்றோம். போகச் சொன்னார்கள், நடந்தோம். வெயில் சுட்டெரித்தது. என் அம்மாவிற்கு மூச்சு முட்டியது. ஆஸ்துமா கேஸ். ஆனாலும் ஆர்வம் குறையவில்லை. தங்கக்கோவிலை அவள் தரிசிக்கும் தருணம் அவளுக்கு முக்கியமானது. எங்களுடன் பல நூறு மக்கள், பல்லாயிரக் கணக்கான மக்கள் நடந்தார்கள். எல்லாருக்கும் ஒருவித ஆர்வம், ஆச்சரியம். மிகக் குறைந்தவர்களுக்கு மட்டுமே பக்தி. இது சுற்றுலாத்தலமா இல்லை கோவிலா என்று தோன்றிவிட்டது. ஒருவழியாக நடந்துமுடிந்து தங்கத்தாலான கோவிலைக் காண உள்ளே நுழைந்தோம்.



தங்கத் தூணையும், தங்கச் சிற்பங்களையும் நீங்கள் எட்டி நின்று பார்க்கலாம். மூல ஸ்தானத்தில் உள்ள தங்க அம்மனை நெருங்க முடியாதபடி நீர் சேர்ந்து நிற்கும் அகழி இருந்தது. நீர் ஆடி ஆடி நீரில் இருந்து வெளிப்படும் சூரிய ஒளி தங்கக்கோவிலின் சுவர்களில் ஒளிக்க, கோவிலின் சுவரே ஆடுவதுபோன்ற அழகும். வெகு அழகுதான். அங்கேயும் சுற்றி சுற்றிப் போகச் சொன்னார்கள். போனோம். திடீரென நிறுத்தி, திடீரென அனுப்பி ஒருவழியாக சந்நிதியை அடைந்தோம்… என்றால், கிட்டத்த மூலஸ்தானத்திலிருந்து 75 அடி தள்ளி நின்று பார்த்துவிட்டுப் போகச் சொல்லிவிட்டார்கள். என் அம்மாவிற்கு வந்த ஏமாற்றம்தான் என்னால் தாங்கமுடியாமல் இருந்தது. மற்றபடிக்கு நான் ஓர் ஆர்வமில்லாமல்தான் நடந்துகொண்டிருந்தேன்.


கடவுளை தரிசித்துவிட்டு வெளியில் வரும்போது ஒரு செயற்கை நீரோட்டம் ஏற்படுத்தியிருக்கிறார்கள். அதில் பெண்கள் தங்கள் வளையலை போட்டுக்கொண்டிருக்கிறார்கள். ஏனென்று தெரியவில்லை. இப்போதே கூட்டம் குவியத் தொடங்கியிருக்கிற நிலையில், இன்னும் சில வருடங்களில் கூட்டம் குவியப்போகிற நிலையில், வளையல்களை அள்ள தனி காண்டிராக்ட் விட்டாலும் விடுவார்கள்.

ஏகப்பட்ட வளைவுகள். ஏகப்பட்ட நுழைவாயில்கள். ஜொலிக்கிறது கோவில். ஆனால் பக்தர்கள் வெயிலில் அவஸ்தைப் படாமலிருக்க எவ்வித ஏற்பாடுமில்லை. நவதிருப்பதி செல்வோம். அங்கேயும் இப்படித்தான். எவ்வித ஏற்பாடும் இருக்காது. ஆனால் அது குறையாக உறுத்தியதே இல்லை. காரனம் அவையெல்லாம் ஏழைக் கோவில்கள். நாம் பாரம்பரியத்தையும் மரபையும் தொடர்ந்து காப்பாற்றிக்கொண்டு, தன் பெருமையை பறைசாற்றிக்கொண்டு நிற்பவை. அவை கோவில்கள் என்பதைவிட மனசாந்தி தரும் இடங்கள். ஆனால் இது கார்ப்பொரேட் நிறுவனம். கோவில் ஸ்டலில் கட்டப்பட்டிருக்கிறது. அங்கே 250 கோடி செலவளிக்க தகுதி இருக்கிறது. அப்போது மக்களின் கஷ்டத்தையும் நினைவில் வைத்திருக்கலாம். சுட்டெரிக்கும் வெயிலில் கால்கள் பொசுங்க ஓடினோம். பிரசாதமாக சாம்பார் சாதம் தந்தார்கள். அதை வாங்கிக்கொண்டு ஓடினோம். வெளியில் வரும்போது கடும் எரிச்சல் மட்டுமே மிச்சமிருந்தது. கோவில் மனதிற்குத் தந்திருக்கவேண்டிய அமைதி இல்லை. ஒரு கடவுளை தரிசித்த நிலையில் கிடைக்கவேண்டிய ஆனந்தம், புல்லரிப்பு இல்லை. கோவிலில் குங்குமம் கூடவா கொடுக்கமாட்டார்கள்? 250 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால், 50 அடி தொலைவில் அம்மனை தரிசித்துவிட்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம், 500 ரூபாய் கொடுத்து டிக்கட் வாங்கினால் அம்மனை மிக அருகில் கண்டு குங்குமம் பெற்றுக்கொள்ளலாம்.

எப்படி திருப்பதி இக்கோவிலிருந்து வேறுபடுகிறது? உண்மையில் திருப்பதியோடு இக்கோவிலை ஒப்பிடுவதே நான் பெருமாளுக்கு செய்யும் துரோகம். இருந்தாலும், இக்கோவில் திருப்பதி போன்று வரவேண்டும் என்கிற நினைப்பில் கட்டப்பட்டிருப்பதால் இது தேவையாகிறது.

திருப்பதி கோவில் ஏற்படுத்தப்பட்டதல்ல. மக்கள் அக்கோவிலுக்கு எளிதாகச் சென்றுவர பல்வேறு வழிகளைச் செய்துவைத்திருக்கிறார்கள். இக்கோவில் ஏற்படுத்தப்பட்டது. கூட்டம் வருவதே எண்ணம் என்ற நினைப்பில் செய்திருக்கிறார்கள்.

திருப்பதியில் பெருமாள் மட்டுமே முக்கியம். இங்கே நாராயணியோடு அம்மாவும் முக்கியம். சில சமயங்களில் நாராயணியைவிட அம்மா முக்கியம்.

திருபப்தியிலும் ஸ்பெஷல் தரிசனங்கள் உண்டு. ஆனால் எல்லாரும் ஒரே இடத்தில் இருந்து மட்டுமே கடவுளைக் கும்பிடமுடியும். பணம் என்பது அங்கு நேரத்தைக் குறைக்கமட்டுமே. அன்றி, வழிபாடு செய்யும் இடம் எல்லோருக்கும் பொதுவானதே. இங்கே அப்படி இல்லை. பணம் கூட கூட நீங்கள் நின்று வழிபடப்போகும் இடம் மாறும்.

திருப்பதியில் நீங்கள் எங்கேயும் பக்தியை மட்டுமே தரிசிக்கமுடியும். இங்கே பக்தியைக் கொஞ்சமாகவும், பகட்டையும் ஆடம்பரத்தையும் மட்டுமே தரிசிக்கமுடியும். திரும்பிய பக்கமெல்லாம் அம்மாவின் அருள்வாக்குகள் பல வண்ண fluxகளில் உங்களைத் துரத்துகின்றன. என்னுடன் வந்த பெரும்பாலான மக்கள் ஆச்சரியத்தைப் பற்றி மட்டுமே பேசினார்கள்.

திருப்பதியில் கோவில் என்பது நம் மனதோடு சம்பந்தப்பட்டது. இங்கே கோவில் என்பது ஆடம்பரத்தோடு சம்பந்தப்பட்டது.

திருப்பதியில் நீங்கள் மூலஸ்தானத்தை அடைய நடக்கும்போது, உங்கள் மேல் வெயிலே படாது. ஒரு அறையில் அடைக்கப்படும் நீங்கள், அங்கிருந்து நடக்கத் தொடங்கினால், பின்பு நிற்கவேண்டியது இருக்கவே இருக்காது. இங்கே அப்படி அல்ல. செல்லும் வழியெல்லாம் வெயிலே உங்களை வழி நடத்துகிறது. திடீர் திடீரென நிறுத்துகிறார்கள். நின்று நின்று கால்வலித்து, பின்பு நடந்து கால் வலித்து, எப்போதுடா வெளியில் வருவோம் என்கிற எண்ணம் வந்துவிட்டது. ஜனநாயகத்தில் நம்பிக்கை உள்ளவர்கள், உள்ளே இருந்து எப்போது வேண்டுமானாலும் வெளியில் செல்லலாம் என்கிற நுழைவாயில்களை வைப்பது குறித்துப் போராடலாம். இப்போது நீங்கள் உள்ளே வந்துவிட்டால், சாமி பார்க்காமல் எச்சமயத்திலும் வெளியில் வரவே முடியாது.

இன்னும் சில காலங்களில் அம்மாவின் புகழ் எங்கும் பரவக்கூடும். அவர் பல்வேறு மருத்துவமனைக்கூடங்கள் எல்லாம் கட்டி அக்கிராமத்தையே தன் வசப்படுத்தக்கூடும். ஆனாலும் 250 கோடியில் ஒரு கோவில் இப்போது தேவையா என்கிற கேள்வியை புறக்கணிக்கமுடியாமல்தான் போகும். அம்மாவின் அருள்வாக்குகளில் ஒன்று, இக்கேள்விக்கும் பதில் சொல்கிறது. ‘250 கோடி செலவில் ஒரு கோவிலுக்கு பதிலாக ஏன் மருத்துவமனை கட்டக்கூடாது என்று கேட்கிறார்கள். இப்படி ஒரு கோவில் மூலம் ஆயிரம் ஆயிரம் மருத்துவமனைகள் சாத்தியமாகும்’ என்கிறது அது. எப்படியோ, 250 கோடியில் கோவில் என்பது அம்மாவையே உறுத்தியிருக்கிறது.

250 கோடி எங்கிருந்து வந்தது? யார் பணம்? எனக்குத் தெரியாது. யாருக்குத் தெரியும் என்பதும் தெரியாது. அரசியல் அம்மா ஆட்சிக்கு வந்தால் என்னாகும் என்பதும் தெரியவில்லை. ஆனால் கூட்டம் என்னவோ வந்துகொண்டேதான் இருக்கிறது. அது பக்திக்கான கூட்டமா, தங்கத்தைப் பார்க்கும் கூட்டமா என்று பார்த்தால், இப்போதைக்கு தங்கத்தைப் பார்க்கும் கூட்டம்தான் அதிகம் என்று தோன்றுகிறது. நாளை மாறலாம். இதைக் கொஞ்சம் உருப்படியாக்கி, ஒரு நல்ல கோவிலாக மாற்றலாம். அது அம்மாவின் கையில் இருக்கிறது. தன் புகழை அதிகம் அம்மா நாடிவிட்டால், கோவில் பிந்தங்கிவிடும். அம்மாவை மட்டும் கண்டால் கோவில் கிடையாது என்பதை அம்மா புரிந்துகொள்ளவேண்டும். 250 கோடி முதலீட்டில் எக்காலகட்டத்திற்குமான நிரந்தர வருமானம் என்பது எண்ணமாக இருந்தால், நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும். ஆடம்பரமெல்லாம் இருந்தாலும் கடவுள் என்பது எதாலும் தீண்டப்படமுடியாத ஒரு உருதான். அதனுடன் விளையாடுவது பற்றி அம்மாதான் முடிவெடுக்கவேண்டும்.

கோவிலுக்குள் இருந்து வெளியே வருபவர்கள் மனதில் இருக்கவேண்டியது பக்தியும் ஆன்மிகமும். இது இல்லாவிட்டால் கோவில் என்கிற கான்செப்ட்டே அடிபட்டுப்போகும். இப்போதிருக்கும் நிலையில், மதமாற்றக்காரர்கள் அக்கோவிலின் வாசலில் ஒரு கடைபோட்டால், செம விற்பனை ஆகும் என்றுதான் தோன்றுகிறது. எல்லாவற்றையும் நாராயணிதான் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Share

Comments Closed