ஞாநி – கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம் – பொழுதுபோக்கின் உச்சகட்டம்


எவ்வித சம்பிரதாயமும் இல்லாமல் தொடங்கிய கிழக்கு மொட்டைமாடிக் கூட்டத்தை, ஞாநி கலந்துரையாடலாக்கினார். மும்பை தீவிரவாதத் தாக்குதலைப் பற்றி அவர் ஏற்கெனவே எழுதி, அதை அனைவரும் படித்திருப்பார்கள் என்று கருதியதால், கூட்டடத்தை ஒரு கலந்துரையாடலாக்கலாம் எனச் சொன்னார். கலந்துரையாடல் தொடங்கியது. பல்வேறு கருத்துகளைச் சொன்ன ஞாநியின் சில கருத்துகள் பற்றி மட்டும் இங்கே. (மொத்த ஒலித்துண்டு பத்ரியின் பதிவில் வெளிவரும்.) மீண்டும் ஒருமுறை ஒலித்துண்டைக் கேட்டுவிட்டு எழுத நினைத்தேன். ஆனால் இப்போது நினைவில் இருந்து எழுதுகிறேன். வேறுபாடுகள் இருந்தால், அது என் தவறாக இருக்கலாம். சிறிய வேறுபாடுகள் இருக்கலாமே அன்றி, பெரும் கருத்து மாற்றம் இருக்க வாய்ப்பில்லை என்றே நினைக்கிறேன்.

ஞாநியின் முக்கியமான குற்றச்சாட்டுகள்.

01. ’இன்று இந்தியாவில் நிலவும் இஸ்லாம் இந்துப் பிரச்சினைக்கு பாப்ரி மசூதி இடிப்பே காரணம். அதற்கு முன்பு எங்கும் இந்தியாவில், ஜம்மு காஷ்மீரைத் தவிர, மதக் கலவரங்கள் நிகழ்ந்ததே இல்லை.’

இது ஒரு ஸ்வீப்பிங் ஸ்டேட்மெண்ட் இல்லையா என்று கேட்டேன். மீண்டும் அவர் சொன்னதை சரி என்று உறுதி செய்தார். அதற்கான தரவுகளைப் பார்த்துவிட்டே இதைச் சொல்வதாகச் சொன்னார். இது எவ்வளவு தூரம் உண்மை என்பதற்கான தரவுகள் தற்போது என்னிடம் இல்லை. அதைப் பார்த்தால்தான் தெரியும். அரவிந்தன் நீலகண்டன், நேசகுமார், ஜடாயு, திருமலை உள்ளிட்ட தீவிர ஹிந்துத்துவ ஆதரவாளர்கள் இதற்கான தரவுகளைத் தரவேண்டும். இல்லையென்றால் ஞாநி சொன்னதை ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆனால் எல்லா பிரச்சினைகளுக்கும் பாப்ரி மசூதி இடிப்பு மட்டுமே காரணம் என்பது ஒரு எஸ்கேப்பிஸம் என்றுதான் நான் நினைக்கிறேன். இதை வைத்து இஸ்லாமிய அடிப்படைவாத தீவிரவாதத்தை ஞாநி ஆதரிக்கவில்லை என்பதும் உண்மை. அதுவே பிரச்சினையின் வேர் என்கிறார். 47 ஆண்டுகளாக இந்தியாவின் எப்பகுதியிலும் இல்லாத மதத்தீவிரவாதம், அதற்குப் பின் தலைதூக்கியது பாப்ரி மசூதி இடிப்பினால் மட்டுமே என்பது ஞாநியின் கருத்து. அதற்கு முன்பு இந்தியாவில் அல், உல் எனத் தொடங்கும் எந்த இயக்கமும் இல்லை என்றார். கூடவே, அப்படி ஒருவேளை பாபர் மசூதி இடிப்புக்கு முன்னர் கலவரங்கள் நடந்திருக்குமானால், அது தேர்தல் ஆதாயத்திற்காக ஆர்.எஸ்.எஸ். தூண்டிவிட்ட கலவரமாக இருந்திருக்கும் என்றார்.

02. ’பாகிஸ்தானில் இருந்து இந்தியா தீவிராவாதிகளைக் கோருவதற்கு நூற்றுக்கு நூற்றம்பைது சதவீதம் உரிமை இருக்கிறது. ஆனால் அதற்கு முன்னதாக இந்தியாவில் இருக்கும் தீவிரவாதிகளான அத்வானி, தொக்காடியா, மோடி ஆகியோரை இந்தியா விடுவிக்கவேண்டும்.’

இஸ்லாமிய அடிப்படைத் தீவிரவாதிகள் ஜனநாயகத்தில் நம்பிக்கை உடையவர்கள் அல்ல. அவர்களையும் இந்திய அரசியல்வாதிகளையும் ஒப்பிடுவது, கேட்பதற்கு இனிமையாக இருந்தாலும், அதில் உண்மை இல்லை. வீரப்பன் காட்டில் செய்த அக்கிரமங்களைவிட ஜெயலலிதா செய்தது அதிகம் என்ற திண்ணைப் பேச்சுக்கும் ஞாநியின் பேச்சுக்கும் அதிக வித்தியாசங்கள் இல்லை. மோடியோ, அத்வானியோ, தொக்காடியாவோ ஓடி ஒளிந்துகொள்ளவில்லை. சட்டம் அவர்களை எந்நேரத்திலும் எதிர்கொள்ளமுடியும். இந்திய அரசு அவர்களைப் பாதுகாக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், இவர்கள் சரியான விதத்தில் மாட்டினால், இந்திய காங்கிரஸ் அரசு இவர்களை விட்டுவைக்கப்போவதும் இல்லை. இப்படி இவர்கள் மேல் நடவடிக்கை எடுக்கமுடியக்கூடிய அனைத்துவகை சாத்தியங்கள் உள்ள நிலையில், இவர்களை இஸ்லாமிய அடிப்படை பயங்கராவதிகளுடன் ஞாநி ஒப்பிடுவது குழந்தைத்தனமானது. அத்வானி, தொக்காடியா விஷயங்களில் ஞாநி முன்வைப்பது பாப்ரி மசூதி இடிப்பை. கூட்டத்தில் ஒருவர் இந்த விஷயத்தில் நரசிம்மராவின் பங்கைப் பற்றிக் கேட்டபோது, அவர் செத்துப்போயிட்டாரே நான் என்ன பண்ணட்டும் என்றார் ஞாநி. ஞாநி சொதப்பிய பதில்களுள் இதுவும் ஒன்று. மனு தர்மம் குறித்த பேச்சை பேசும் ஞாநிக்கு நரசிம்மராவுக்கு முன்பே மனு இற்ந்துவிட்டார் என்பது நிச்சயம் தெரிந்திருக்கும். ஆனால் ஏன் இன்று மனுதர்மம் பற்றி பேசுகிறோம். அவர் சொல்வதுபோலவே பிரச்சினையின் வேரைப் பற்றிப் பேச விரும்பினால், இறந்தவரையும் பற்றிப் பேசவேண்டும்.

03. ’மும்பை தீவிரவாதத் தாக்குதலில் ஊடகங்களின் பங்கு வர்க்க பேதத்தை அடிப்படையாகக் கொண்டது. தாஜ் ஹோட்டலில் இறந்தவர்கள் பணக்காரர்கள் (வெளிநாட்டுக்காரர்கள்) என்பதால்தான் ஊடகங்கள் இதை இப்படி காண்பித்தன. ஆனால் ரயில்வே ஸ்டேஷனில் நடந்த தாக்குதல்கள் குறித்து ஊடகங்கள் வாய் திறக்காதது அருவருப்பானது.’

ஞாநி சொல்வதில் எனக்கு நிறைய வேறுபாடுகள் உண்டு. ஆனால், ஊடகங்களுக்கு மேல்தட்டு, கீழ்த்தட்டு குறித்த வித்தியாசமான பார்வைகள் அடிப்படையிலேயே உண்டு என்பதை நான் ஏற்கிறேன். ஊடகங்களின் பார்வையில் அடித்தட்டு மக்கள் என்பவர்கள் என்றாவது ஒருநாள் கவரேஜுக்குப் பயன்படும் நிகழ்ச்சிகளாக மட்டுமே தெரிகிறார்கள். ஆனால் தாஜ் ஹோட்டல் விஷயத்தில் அப்படி மட்டுமே என்று சொல்லிவிடமுடியாது. ரயில்வே ஸ்டேஷன் விஷயம் என்பது அங்கே உடனே முடிந்துவிட்ட சம்பவம். ஆனால் தாஜ் ஹோட்டலில் இரண்டு நாள்கள் முழுக்க முழுக்க தீவிரவாதிகளின் பிடியில் மக்கள். இதனால் இயல்பாகவே அங்கு ஊடகங்கள் ஓடியது எதிர்பார்க்கக்கூடியதே. இதுவே மறுதலையாக, தாஜ் ஹோட்டலில் மக்கள் கொல்லப்பட்டு, ரயில்வே ஸ்டேஷனில் பிணைக்கைதிகள் பிடிக்கப்பட்டிருந்தால், ஊடகங்கள் அங்கு குவிந்திருக்கும். (அதியமான் இதைச் சொன்னார்.) ஏனென்றால் ஊடகங்களின் பெரிய எதிர்பார்ப்பு ஒரு பரபரப்பு. ஆனால் இதை ஞாநி அடியோடு மறுக்கிறார். அவருக்குள் இருக்கும் கம்யூனிஸ்ட் வெளிக்குதிக்கும் தருணம் இதுவாக இருக்கலாம்.

04. கஷ்டப்படும் பிராமணர்கள் பற்றி, ஏழை பிராமணர்கள் பற்றி ஒரு வரியாவது எழுதியிருக்கிறீர்களா என்று கேட்டேன். பதிலுக்கு என்னிடம் எந்த பிராமணர்கள் பற்றி என்றார். 1978ல் பிராமண சங்கம் தொடங்கப்பட்ட போது, அதை ஆதரித்து எழுதியதாகச் சொன்னார். ஆனால் அப்போதும் அது எந்த பிராமணர்களுக்கு உதவப்போகிறது என்று கேள்வி எழுப்பியதாகவும் சொன்னார். ஏழை பிராமணர்களுக்கா அல்லது செல்வாக்குள்ள பிராமணர்களுக்கா என்பது அவர் கேள்வி. நான் ’இது எல்லா ஜாதியிலும் உள்ள பிரச்சினை’ என்றேன்.

பொதுவாகவே இன்று பொருளாதார ரீதியாக வர்க்கப் போராட்டத்தைப் பற்றிப் பேசும் யாரும், பொருளாதார ரீதியாகப் பிந்தங்கிப் போயிருக்கும் பிராமணர்களைப் பற்றிப் பேசுவதில்லை. (நான் இங்கு பிராமணர்கள் என்று எழுதுவது ஒரு குறியீட்டுக்காக மட்டுமே. அது, முற்படுத்தப்பட்ட எல்லா ஜாதிகளுக்கும், அதிலிருக்கும் பொருளாதார ரீதியாக ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பொருந்தும்.) தீட்டு ஒட்டிண்டும் பாருங்கோ. எத்தீண்டாமையும் தவறு. ஆனால் முற்போக்கை ஒட்டிவிடும் பிராமணத் தீண்டாமை பெரும் துன்பம் தரக்கூடியது. உங்கள் முகமூடிகள் உடைந்து விழுந்துவிட்டால் என்னாவது. பிச்சை எடுக்கும் நிலையிலிருக்கும் பிராமணர்களைப் பற்றி எழுதிவிட்டால் அத்தீட்டு ஒட்டிவிடும். அடுத்த வேளை சோற்றுக்கு வழியில்லாத, முற்படுத்தப்பட்ட சாதியிலிருக்கும் ஏழைகளைப் பற்றி எழுதிவிட்டால், இருக்கவே இருக்கிறது பிராமணியத் தீட்டு. 31 வருடங்களில் ஒரு தடவை ஞாநி எழுதியதை நினைவு வைத்துச் சொன்னாரா அல்லது அதுதான் முதல் தடவையாக எழுதியதா என்று தெரியவில்லை. ஞாநி போன்றவர்களுக்கு பிராமணர்கள் என்றதும் நினைவுக்கு வருவது சோ, என்.ராம், குருமூர்த்தி, இல.கணேசன் வகையறாக்கள்தான். அடித்தட்டு மக்கள் நினைவுக்கு வருவதில்லை.

05. மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பிடிபட்டிருக்கும் தீவிரவாதிக்க்கு ராம்ஜெத்மலானி வாதாட முன் வந்ததற்கு ஞாநி பூச்செண்டு கொடுத்திருக்கிறார். மாலேகான் குண்டுவெடிப்பில் இதே போன்றதொரு பூச்செண்டு கொடுக்கப்படுமா என்றேன். நிச்சயம் என்றார். அதுமட்டுமன்றி, தான் தீவிரவாதிகளாக முன்வைக்கும் தொக்காடியா, மோடி உள்ளிட்டவர்கள் நாளை நீதிமன்றத்தில் நிற்கும்போது அவர்களுக்காகவும் சட்ட வக்காலத்து தரவேண்டும் என்றும் சொல்லுவேன் என்றார்.

06. குமுதத்தைக் கடுமையாக விமர்சித்துவிட்டு, மீண்டும் அதில் சேருவது சரியா, இதையே ஓர் அரசியல்வாதி செய்திருந்தால் நீங்கள் சும்மா விட்டிருப்பீர்களா, இப்போது உங்களை நீங்கள் எப்படி விமர்சிப்பீர்கள் என்றேன்.

நீண்ட விளக்கம் ஒன்றைக் கொடுத்தார். ஓரளவு நியாயமான கோபமும், ஏற்றுக்கொள்ளக்கூடிய காரணங்களும் இருந்தன. ஆனால் இன்னும் விடையிறுக்கப்படாத கேள்வி ஒன்றிருக்கிறது. குமுதம் படைப்பாளிகளின் உரிமத்தின் மீது கைவைக்கிறது. ஞாநி எதிரிக்கிறார். விமர்சிக்கிறார். ஆவியில் எழுதுகிறார். ஆவியில் பிரச்சினை வருகிறது. விலகுகிறார். குமுதம் எழுத அழைக்கிறது. இவர் நிபந்தனைகள் சொல்கிறார். குமுதம் ஏற்கிறது. இது முன்/பின்கதைச் சுருக்கம். நிபந்தனைகளில்தான் பிரச்சினை. தன் படைப்புகளின் மீதான் உரிமத்தை குமுதம் கட்டுப்படுத்தாது என்ற நிபந்தனை அது. உண்மையில் எல்லா படைப்பாளிக்காகவுமான கேள்வியாக அதை ஏன் ஞாநி எழுப்பவில்லை. பா.செயப்பிரகாசம் ஞாநியின் படைப்பாளிகளின் உரிமம் தொடர்பாக ஆதரவைத் தந்துவிட்டு, அடுத்த சில மாதங்களில் குமுதத்தில் எழுதிவிட்டார். கொஞ்சம் பார்த்தால், ஞாநி எழுதுவதற்கு நான்கு வருடங்களும், செயப்பிரகாசம் எழுதுவதற்கு நான்கு மாதங்களும் மட்டுமே தேவைப்பட்டிருக்கின்றன. பிரேக்கிங் பாயிண்ட். தன் நிபந்தனை தன்னளவில் மட்டும் ஏற்கப்பட்டால் போதுமென்றால், ஞாநி குமுதத்தை எதிர்த்து இத்தனை தீவிரமாகச் செயல்பட்டது தேவையற்றதாகிறது.

07. வடபழனியில் இருந்து வந்திருந்த கோபு என்பவர் கடுமையான கேள்விகளைக் கேட்டார். கடும் கோபம் அவர் முகத்தில் இருந்தது. மோடியைத் தீவிரவாதி என்று சொல்லும் ஞாநி, கம்யூனிஸ்ட் கொலைகாரர்களைப் பற்றி என்ன சொல்கிறார் என்றார். கம்யூனிஸ்ட் பிராடு என்றார். பதிலுக்கு ஞாநியும் ‘நீங்க இங்கேருந்து என்ன பிடுங்குறீங்க’ என்று என்னவோ கேட்டார். கோபு தான் ஹிந்துத்வா இல்லை என்றும், தான் சுதந்திரா கட்சியின் ஆதரவளானகவே இருக்கமுடியும் என்றும் குறிப்பிட்டுக்கொண்டார். அவர் ஞாநியை கம்யூனிஸ்ட் என்றதற்கு, ஞாநி தான் எவ்வாறெல்லாம் கம்யூனிஸ்ட்டுகளை விமர்சித்திருக்கிறேன் என்று சொன்னார். அதன் பின்பும் கோபுவின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்த வண்ணமே இருந்தது. முக்கியமாக, மண்டல் கமிஷன் பற்றி ஞாநி பேசியபோது, கோபு ‘மண்டல் கமிஷனுக்கும் மனுதர்மத்திற்கும் என்ன வித்தியாசங்கள்’ என்றார். மீண்டும் பிரச்சினையின் வேருக்குப் போய்விட்ட ஞாநி, மனு செய்த பிரச்சினையின் தீர்வு மண்டல் கமிஷன் என்றார். இன்றைய தீர்வு, நாளைய வர்ணமாக எப்படி மாறாமல் இருக்கும் என்ற கோபுவின் கேள்விக்கு, ஞாநி இன்றையத் தீர்வைப் பற்றித்தான் சொன்னார்.

08. நாடெல்லாம் இஸ்லாமிய அடிப்படைவாதத் தாக்குதல்கள் நடக்க, சென்னை மட்டும் அமைதியாக இருப்பதன் காரணம் தமிழ்நாட்டில் பெரியார் இருந்ததுதான் என்று ஒருவர் திடீரென புல்லரிக்க வைக்க, ஞாநி ஒரு டிப்ளமேடிக்கான பதிலைச் சொன்னார். இன்று பேசும்போது, சென்னையில் குண்டு வெடிக்காததற்கு பெரியாரே காரணம் என்று சொன்னால், அதைக் கேட்பவர்கள் சந்தோஷப்படக்கூடும்; ஆனால் நாளையே குண்டு வெடித்தால் பெரியார் தவறு என்றாகிவிடுமா என்றார். பெரியாருக்கும் இந்த தீவிரவாதச் செயல்களுக்கும் தொடர்பில்லை என்றார். சென்னை அமைதியாக இருப்பதற்குக் காரணம், எல்லா பயங்கரவாத ஆதரவும் சென்னையிலிருந்து செல்வதால் இருக்கலாம் என்றேன். நான் நகைச்சுவையாகப் பேசுவதாக நினைத்துக்கொண்டு பலர் சிரித்தார்கள். இதிலிருக்கக்கூடிய அரசியல் அவர்களுக்குப் புரிந்தால் நல்லது.

இரண்டு மூன்று இடங்களில் சொதப்பினாலும், மொத்தத்தில் ஞாநி எல்லாக் கேள்விகளையும் நிதானமாகவும் அவரது கருத்தியலுக்கு வலுச்சேர்க்குமாறும் எதிர்கொண்டார். மும்பை குண்டுவெடிப்பில் இறந்த காவல்காரர்கள், முக்கியமாக துக்காராம் பற்றி மிக உயர்வாகப் பேசியவர், இவர்களை நினைவில் வைத்து மும்பையெங்கும் போஸ்டர்கள் ஒட்டி அஞ்சலி செலுத்தியவர்கள், சிவசேனை உள்ளிட்ட கட்சிகளே என்று அரசியல்வாதிகளுக்கு பூச்செண்டு கொடுத்தார். ஞாநியிடம் கேட்பதெல்லாம் ஒன்றுதான். உலகளாவிய இஸ்லாமிய பயங்கரவாதம் என்பது மதத்தோடு தொடர்புடையதல்ல என்றும், அது பொதுவான பயங்கராவதம் என்றும், இந்து முற்படுத்தப்பட்ட சாதிகளில் இருக்கும் அடிமட்ட ஏழைகளைப் பற்றி எழுதுவது முற்போக்குக்குத் தீட்டு என்றும் கருதாமல், இதிலிருக்கும் உண்மையை அவர் பார்க்கமுன்வரவேண்டும் என்பதே. பிரச்சினையின் வேர்கள் நமக்குத் தெரிந்துவிட்டதாலேயே நாம் அவ்விஷயத்தை அப்படியே விட்டுவிடமுடியாது. ஒரிஸாவில் கிறித்துவர்கள் மீதான கலவரங்கள் என்பது இந்து சாமியாரின் கொலைக்கு எதிரானது என்று வேரைக் கண்டுவிட்டு, அதை அப்படியே விட்டுவிடச் சொன்னால் விட்டுவிடுவீர்களா என்ன?

முக்கியமான பிகு: கருணாநிதியைக் கடுமையாக ஏசி ஞாநி ஒன்றுமே பேசாதாததால், லக்குலுக் மனம் வெறுத்துப்போனதாகக் கேள்விப்பட்டேன். உண்மையா எனத் தெரியவில்லை.

தொடர்புடைய சுட்டிகள்:

http://www.writerpara.net/archives/319

http://prathipalipaan.blogspot.com/2008/12/blog-post_16.html

http://www.writermugil.com/?p=202

Share

Comments Closed