செக்யூலரிசம் ஓர் எளிய அறிமுகம்

http://www.tamilhindu.com/2010/05/secularism-an-simple-introduction/

* ஒரு திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி வரும். இஸ்லாமியரை வெட்டுவது போலக் காட்டுவார்கள். அடுத்த காட்சியிலேயே ஒரு ஹிந்துவை வெட்டுவது போல் காட்டினால் அதுதான் செக்யூலரிசம்.

* அதே சினிமாவிலோ வேறொரு சினிமாவிலோ, ஹிந்து கடவுள்களைத் தொடர்ந்து நிந்திப்பார்கள். இஸ்லாமிய, கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போல காட்சி வைக்கமாட்டார்கள். இது பாதி செக்யூலரிசம். அதே சினிமாவில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களைப் பாராட்டி காட்சி வைப்பார்கள். இது முக்கால் செக்யூலரிசம். அதே படத்தில், இஸ்லாமிய கிறிஸ்துவ கடவுளர்களை நிந்திப்பது போலக் காட்சி அமைத்து, அதை ஹீரோ எதிர்த்து வீராவேச வசனம் பேசி, திட்டியவரைத் திருத்துவது போலவும் காட்சி அமைப்பார்கள். இதுதான் முழு செக்யூலரிசம்.

* ஹிந்துக் கடவுளர்களைப் பற்றி அரசியல் மேடைகளில் கடுமையாக முழங்குவார்கள். ஐயப்பன் எப்படி பிறந்தார் என்பார்கள். ஆனால் இஸ்லாமிய, கிறித்துவ கடவுளர்கள் பற்றிக் கேள்வி கேட்கமாட்டார்கள். அதுவே செக்யூலரிசம்.

* அல்லா, நபி, ஏசு பற்றி ஏதேனும் கேள்விகளை ஹிந்துத்துவவாதிகள் எழுப்பினால், ‘இது காலம் காலமாகச் சொல்லப்படும் மோசடி’ என்று பதில் சொல்லவேண்டும். இதெல்லாம் பிற்போக்குக் கூச்சல் என்று சொல்லவேண்டும். மத நம்பிக்கையாளர்களைப் புண்படுத்தாதீர்கள் என்று சொல்லவேண்டும். இதுவும் செக்யூலரிசமே.

* கருப்புச்சட்டைக்கு ஆதரவான நடிகர் என்று சொல்லிக்கொண்டு, படத்தில் நல்ல விஷயங்களைச் செய்பவர்களை கிறித்துவ ஊழியர்களாகக் காட்டவேண்டும். வில்லன்களை ஹிந்துக்களாகக் காட்டவேண்டும். இது செக்யூலரிசத்தின் இன்னொரு விளக்கம்.

*ஹிந்து மதத்தைச் சாடும் திரைப்படம் வந்தால் ஹிந்துத்துவவாதிகள் அதனைத் தடை செய்யப் போராடும்போது, நீங்கள் கலைக்காகவும், அடிப்படை உரிமைக்காகவும் போராடவேண்டும். இது பாதி செக்யூலரிசம். அதுவே மற்ற மதங்களைச் சாடும் படம் வந்தால், கலையையும் அடிப்படை உரிமையையும் காற்றில் பறக்கவிட்டுவிட்டு, மத நம்பிக்கையாளர்களின் மனம் புண்படுகிறதே என்று அவர்களுக்கு ஆதரவாகப் போராட வேண்டும். இது முழு செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். பிராமணர்களைத் திட்டும் பிராமணரல்லாதவரை விடக் கடுமையாக, பிராமணர்களைத் திட்டுவார். இது செக்யூலரிசம்.

* பிராமணராகப் பிறந்திருப்பார். உலகெங்கும் இருக்கும் அடித்தட்டு மக்களுக்காகக் குரல் கொடுப்பார். தமிழ்நாட்டில் இருக்கும் ஏழை எளிய மக்களுக்காகப் போராடும்போது, நினைவாக பிராமணர்களை ஒதுக்கிவிடுவார். இதுதான் செக்யூலரிசம்.

* தீர்க்கமுடியாத பிரச்சினை வந்தால், இது பிராமணியத்தின் சதி என்றோ ஹிந்து மதத்தின் சதி என்றோ சொல்லிவிட்டால், நீங்கள் செக்யூலர்.

* மிகப் பெரிய இலக்கியவாதியாக இருப்பார். உலகெங்குமுள்ள நல்ல எழுத்துகளை, புராணங்களைத் தேடிப் படிப்பார். ஹிந்து மத சாஸ்திரங்களை மட்டும் நிந்திப்பார். இந்தப் பிழைக்கத் தெரிந்த வழியின் பெயரும் செக்யூலரிசமே.

* ஊர் ஊராகக் கோவிலுக்குப் போவார்கள். வீட்டில் உள்ள நஞ்சு குஞ்செல்லாம் சாமி கும்பிடும். ஆனால் அவர் பெரிய பகுத்தறிவாளராகத் தன்னைக் காண்பித்துக்கொள்வார். பெரியாரிஸ்டுகளைவிட அதிகமாகப் பெரியாரை மேற்கோள் காண்பிப்பார். இது செக்யூலரிசத்தின் முக்கிய பாடங்களுள் ஒன்றே.

* புராதன ஹிந்துப் பாரம்பரியத்தைக் கடைபிடிக்கும் குடும்பத்தில் பிறந்திருப்பார். ஆனால் பேசுவதெல்லாம் ’பகுத்தறிவுத்தனமாக’ இருக்கும். மறக்காமல், தனது திருமணத்தையோ, மகள் கல்யாணத்தையோ, ஜாதி பார்த்து, மதம் பார்த்து, குலம் பார்த்து, கோத்திரம் பார்த்து நடத்திக்கொள்வார். இவரே நம் நாட்டின் சிறந்த செக்யூலர். மற்ற செக்யூலர்களும் இந்த செக்யூலரைப் பார்த்துத் தலையாட்டும்.

* கடவுளே இல்லை என்பார். நோன்புக் கஞ்சி குடிப்பார். ‘நான் பிழைத்தது எல்லாம் வல்ல இயற்கையின் சக்தி’ என்று சொல்லிவிட்டு, இயற்கையை வழிபடுவர்களைக் கிண்டல் செய்வார். இவரும் செக்யூலரே.

* புராணங்களின் புரட்டுக் கட்டுரைகள் என்று நெடிய நெடிய புத்தகங்கள் எழுதுவார். குரானைப் பற்றியோ, பைபிள் பற்றியோ பேசமாட்டார். இவரும் செக்யூலர்தான்.

* ஜாதிக் கட்சித் தலைவராக இருப்பார். மதச்சார்பின்மை பற்றி முழங்குவார். மதமாற்றம் குறித்து ஆதரவு தெரிவிப்பார். மதம் மாறிய மன்னன்கள் மறக்காமல் கல்யாணத்துக்குப் பெண் தேடும்போது ஜாதியோடு தேடுவார்கள். கட்சித் தலைவர் மொய் வாங்கிவிட்டு திருமணத்துக்குச் சென்றுவிட்டு அரசியல் பேசிவிட்டு மொய் வைத்துவிட்டு வருவார். இதுவும் செக்யூலரிசத்தின் பாடங்களுள் ஒன்று.

* தமிழுணர்வையும் தமிழனைப் பற்றியும் மேடையாக மேடையாக முழங்கவேண்டும். ஊரில் உள்ள வடமொழிப் பெயர்களையெல்லாம் மாற்றித் தரவேண்டும். உங்கள் பெயரை மாற்றக்கூடாது. இது தமிழுணர்வுதானே என நினைப்பீர்கள். தமிழுணர்விலிருந்து பக்தி வழியாக ஹிந்து மதத்துக்கு வந்து அதனை சாடிவிட்டால், நீங்கள் செக்யூலர்தான்.

* சங்ககாலத் தமிழனுக்கு எல்லாமே தெரியும் என்று ஒரு பக்கம் சொல்லவேண்டும். ஆனால் அவன் சிந்தித்த ஹிந்து மத பக்தியை இகழவேண்டும். இதை முக்கியமான வேலையாகச் செய்யக்கூடாது. எப்போதெல்லாம் பொழுது போகவில்லையோ அப்போதெல்லாம் செய்யவேண்டும். இது செக்யூலரிஸத்தின் பிற்சேர்க்கைகளில் ஒன்று.

* ஊரிலுள்ள எல்லாக் கோவிலுக்கும் செல்லவேண்டும். ஏனென்றால் ஒரு செக்யூலரின் மனைவி நிச்சயம் கடவுள் பக்தி உள்ளவராகத்தான் இருப்பார். ஆனாலும் அசரக்கூடாது. கோவிலுக்குச் செல்வதே அங்கிருக்கும் சிலைகளைப் பார்க்கத்தான் என்ற பாவத்துடன் செல்லவேண்டும். என்னே தமிழனின் கைவண்ணம் என்று பேட்டியும் கொடுக்க உங்களுக்கு வக்கிருக்குமானால், உங்களுக்கு செக்யூலர் மாலைதான். (காலையில் சாப்பிடும்போது இட்லிக்கு உங்களுக்குப் பிடித்த வெங்காய சட்னிக்கு பதிலாக தனக்குப் பிடித்த தேங்காய் சட்னி செய்துவிட்ட மனைவியை கண்டமேனிக்குத் திட்டியதை சுத்தமாக மறந்துவிட்டு, எனக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்றாலும் என் மனைவியின் கடவுள் நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுத்து, அடுத்தவர் சுந்தந்திரத்தை மனதில் வைத்து கோவிலுக்குச் சென்றேன் என்றும் சொல்லிக்கொள்ளலாம். இதுவும் செக்யூலர் இமேஜையேதான் தரும்.)

விதி 1: இத்தனை விதிகளில் பாதியைக் கடைப்பிடித்தால், நீங்கள் முற்போக்காளர். நான் மிகவும் போராடி இந்த இடத்துக்குத்தான் வந்துகொண்டிருக்கிறேன்.

விதி 2: முழுவதையும் கடைப்பிடித்தால்… கங்கிராட்ஸ். தமிழகத்தின் முதல்வராகவே உங்களுக்கு வாய்ப்பிருக்கிறது.

Share

Comments Closed