ஓட்டம் – கவிதை

மனத்தின் கீழே
மெல்லிய கசப்புப் போர்வைகளை அடுக்கி
மேலே படுக்க வைத்திருந்தான்
இன்சொல் என்னும் கடவுளை

அவளது கவனம்
எப்போதும் அந்தப் போர்வையில்தான்

கடவுளை விரட்டிவிட்டு
போர்வைகளுக்குள் திக்கின்றி அலையும்
பூனைக்குட்டிகளை
காதைப் பிடித்துத் தூக்கி வருவதில்
அவள் மிடுக்கி

கடவுளிலும் கசப்பிலும்
தன்னைக் காணும்தோறும்
நிர்வாணம் கூசி ஓடுவான் அவன்
வேட்டை நாயின் மூச்சிரைப்போடு

திரும்பிப் பார்க்க அஞ்சி
நிற்காது ஓடுகிறான்
யுகம் யுகமாக
கையில் ஒரு கல்லுடனும்
ஒரு முயலின் கலவரத்தோடும்.

Share

Comments Closed