வழக்கு எண் அறிவுமதி காமெடி

 

அறிவுமதி மனுஷ்யபுத்திரன் கடும் விவாதம் என்றார்கள். கடைசியில் பார்த்தால் மனுஷ்யபுத்திரன் மட்டுமே விவாதிக்கிறார். அறிவுமதி கெஞ்சுகிறார். பின்பு கோபப்படுகிறார். இந்தக் கெஞ்சலும் கோபமுமே  மனுஷ்யபுத்திரனின் கருத்துகளில் உள்ள உண்மைக்கு அச்சாரமாக அமைந்துவிடுகிறது.

ஒரு திரைப்படத்தை ஒருவர் விமர்சிக்கிறார் என்றால், அது மிகவும் சுதந்திரமானதாகவும், நேர்மையானதாகவும் இருக்கவேண்டும். ஆனால் அறிவுமதி சொல்வதென்ன? இந்த ஃபீல்டுக்குள்ள வந்துட்டீங்க, இங்க ரொம்ப கஷ்டப்படறோம், கொஞ்சம் பார்த்துப் போடுங்க என்பது போன்ற வாதங்களை. கறாரான விமர்சகர் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்ளத் தேவையே இல்லை. அதிலும் மனுஷ்யபுத்திரன் குத்து படத்தையோ தூள் படத்தையோ விமர்சிக்கவில்லை. தமிழர்களால் உச்சி மோந்து கொண்டாடப்படும் ஒரு படத்தின் போலித் தன்மையைச் சுட்டிக் காட்டவேண்டியது அவசியம் என்ற அளவில் இதனைச் சொல்கிறார். இணைய விமர்சகர் மகாதேவன் செய்வதும் (சுரேஷ்கண்ணன் இப்ப அவுட் ஆஃப் பார்ம்) இதையே. ஆனால் அறிவுமதி சொல்வது என்ன? இப்போதுதான் படம் எடுக்கிறோம், இப்போதுதான் கதை எழுதுகிறோம், இனிமே சரியா வரும் என்பது போன்ற சப்பைக்கட்டுகளை.

இளையராஜாவும் பாரதிராஜாவும் இல்லையென்றால் நாங்கள் வந்திருக்கவே முடியாது என்கிறார் அறிவுமதி. இது சாதிய பின்புலத்திலும் சமூகப் பின்புலத்திலும் புரிந்துகொள்ளத் தக்கது. இதனையும் அடிப்படையாகக் கொண்டு ஒரு விமர்சனத்தை முன்வைக்கவேண்டுமானால், அது கலையை நீக்கிவிட்டு, அந்தக் கலையை யார் பயன்படுத்தினார்களோ அவர்களது சாதிக்காகவும் அவர்களது சமூக நிலைக்காகவும் தாராள மனப்பானமையுடன் பேசப்பட்டதாகிவிடும். அறிவுமதி விரும்புவதை அதைத்தான். அது அவரது கொள்கை நிலைப்பாடு. அதற்கும் விமர்சனத்துக்கும் தொடர்பு இருக்கவேண்டிய தேவை இல்லை.

ஆனால் மனுஷ்யபுத்திரனோ காலச்சுவடோ இப்படிச் செயல்படக்கூடாது. அழகர்சாமியின் குதிரையைக் கிழித்துவிட்டார்கள் என்கிறார் அறிவுமதி. அந்தக் குப்பையைக் கிழிக்கத்தான் முடியும். நல்ல முயற்சி என்று சொல்லிவிட்டுப் போய்விட்டால் நல்லது என்று நினைப்பவர்கள் இருக்கக்கூடும். ஆனால் அதை மட்டுமே சொல்லிவிட்டுச் சென்றுவிடமுடியாது என்பதுதான் உண்மை. எடிட்டர் மோகன் தெளிவாகச் சொல்கிறார், விமர்சனம் கலெஷனைப் பாதிக்கக்கூடாது என்று. அறிவுமதியும் இதே வியாபாரத்தைத்தான் வேறு வேறு மொழிகளில் சொல்கிறார். எடிட்டர் மோகனின் நேர்மை முக்கியமானது. வியாபாரமே குறிக்கோள் என்பதை ஒப்புக்கொள்வதில் சலனமில்லை. ஆனால் அறிவுமதி இலக்கியத்துக்கும் வியாபாரத்துக்கும் ஒரு நிலைக்கோட்டை வரையவேண்டிய கட்டாயத்திலிருக்கிறார். எனவே தத்தளிக்கவும் செய்கிறார். எடிட்டர் மோகன் தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுச் சொல்லுங்க என்கிறார். இது இன்னும் மோசமானது. ஒவ்வொரு இயக்குநரும் இப்படி தனிப்பட்ட முறையில் கூப்பிட்டுத் திட்டப்பட்டால் என்னாகும் என்பதை வியாபாரி எடிட்டர் மோகன் யோசிக்கவேண்டும். கொஞ்சம் கருணை காட்டுங்கள் மோகன். அறிவுமதியும் மனுஷ்யபுத்திரனைத் தனியே கூப்பிட்டுச் சொல்லியிருக்கலாம் என்பதை சொல்லாமல் எடிட் செய்துவிட்டீர்களே மோகன்!

கமலை மனுஷ்யபுத்திரன் விற்றார் என்பதால் அவருக்கு விமர்சனம் செய்யத் சொல்லத் தகுதியில்லை என்றும் சொல்கிறார் அறிவுமதி. இதை காமெடி என்று தாண்டிச் செல்வதைத் தவிர வேறு வழியில்லை. மனுஷ்யபுத்திரனை எதிர்கொள்ளத் திராணியில்லாமல் எதையாவது சொல்லவேண்டிய பதற்றத்தில் அறிவுமதி உளறிக்கொட்டியதாக மட்டுமே இதனைச் சொல்லமுடியும். எஸ்ராவின் விழாவில் ரஜினியை அழைத்தது நிச்சயம் வியாபாரமே. ஆனால் அவர் வியாபாரம் செய்கிறார் என்பதற்காகவே இலக்கிய ரீதியிலான முக்கியமான கருத்தை முன்வைக்கத் தகுதியில்லாமல் ஆகிறார் என்பது சரியல்ல. 

வழக்கு எண் போன்ற ஒரு சாதாரண படத்தை சாதாரண படம் என்று மக்களுக்குச் சொல்லவேண்டிய கடமை விமர்சகர்களுக்கு உள்ளது. இதைப் பார்த்து வருத்தப்படுபவர்கள் படம் எடுக்காமல் இருக்கட்டும் அல்லது விமர்சனத்தைப் பொருட்படுத்தாமல் இருக்கட்டும். விமர்சகர்களே பொங்கி எழுங்கள். 🙂 தமிழின் விடிவுகாலமே வழக்கு எண் என்ற லொட்டை படம்தான் என்னும்போதும் விமர்சகர்கள் வாய்மூடிக்கொண்டிருக்க அது என்ன ரஜினி படமா? கூல்!

Share

Comments Closed