எதுவுமே நிகழவில்லை

எவ்விதப் பதட்டமும்
இல்லை என்ற பாவனையில்
புத்தகத்தைப் பிரித்து வைத்துக்கொண்டேன்
இரண்டு வரிகளுக்குள்ள
வெற்றிடத்தில் நிலைகுத்தி நின்ற பார்வையில்
ஓர் புதிய உலகம் விரிந்தது
மாயக் கண்ணன்
தன் வாய் திறந்தபோது
உள்ளே உருண்ட உலகத்தைக் காட்டிலும்
விரிந்ததொரு பிரபஞ்சம்
எல்லாவற்றையும் தன்னுள் அடக்கி
நான் வெளியே
தனியொரு பிரபஞ்சமாக
புத்தகத்தை பட்டென்று மூடி வைக்க
பறந்து சென்ற எல்லாம்
அதனதன் இடத்தில் வந்து அமர்ந்துகொண்டது
ஒன்றுமே நிகழாதது போல

Share

Comments Closed