ஹர்ஷர் மற்றும் கடைசிக் கோடு

இரண்டு புத்தகங்களைப் படிக்க எடுத்திருக்கிறேன். அடுத்த ஒரு மாதத்துக்கு அதிகம் படிக்க விருப்பம். எல்லாம் புத்தகக் கண்காட்சிக்கான ஏற்பாட்டுக்காகத்தான். 

இப்போது எடுத்திருக்கும் புத்தகங்கள்: கடைசிக் கோடு – ரமணன் எழுதியது, கவிதா வெளியீடு. இன்னொன்று, ஹர்ஷர், ஆனந்த விகடன் வெளியிட்டது. 

கடைசிக் கோடு இந்தியாவின் வரைபடம் பிறந்த கதையைச் சொல்லும் புத்தகம். கொஞ்சம் ஜனரஞ்சகமான நடையில் எழுதப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட கிழக்கு பாணி. தனிப்பட்ட ரசனையில் எனக்கு கிழக்கு பாணி புத்தகங்கள் உவப்பானவை அல்ல என்றாலும், இந்தப் புத்தகம் படிக்க ஓரளவுக்கு சுவாரஸ்யமாகவே உள்ளது. கண்கள் பனித்தன, மீசை துடித்தது வகையறாக்களைத் தாண்டிவிட்டால், நிறையவே ரமணன் புத்தகத்துக்காக உழைத்துள்ளது தெரிகிறது. இந்தப் புத்தகத்துக்கு மாலன் முன்னுரை எழுதியுள்ளார். அவர் அதைப் பொதுவில் பகிர்ந்தால், நிறைய பேர் இந்தப் புத்தகத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள உதவியாக இருக்கும்.

படிக்கப்போகும் இன்னொரு புத்தகம் ஹர்ஷர் பற்றியது. இந்திய வரலாற்றில் ஹர்ஷர், கனிஷ்கர், ஔரங்கசீப் பற்றிய புத்தகங்கள், எளிய தமிழில் இருப்பவை நல்லது. அதை விகடன் புரிந்துகொண்டுள்ளது. இந்தப் புத்தகங்களின் உள்ளடக்க விஷயங்களின் தரம் பற்றித்தெரியவில்லை. படித்தபின்பு சொல்கிறேன். வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கசீப், ஔரங்கசீப்பின் புகழ்பாடும் புத்தகமாக இருக்கவேண்டும். இதையும் விகடன் வெளியிட்டுள்ளது. ஹர்ஷர் பற்றிய புத்தகத்தை மேலோட்டமாகப் புரட்டியதில், நன்றாக எழுதப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. முழுவதும் படித்தால் தெரியும்.

வரலாற்றுப் புத்தகங்களுக்குத் தமிழில் நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால் இதை மெனக்கெட்டு எழுத எழுத்தாளர்கள் கிடைப்பது கஷ்டம். அதுதான் பெரிய சவால். விகடன் இந்த வகையில் சில புத்தகங்களைத் தொடர்ச்சியாகக் கொண்டுவந்துகொண்டே இருக்கின்றது. போஜ ராஜன் நான் படிக்க விரும்பும் இன்னொரு புத்தகம். இதையும் விகடன் வெளியிட்டுள்ளது.

கடைசிக் கோடு புத்தகம் பற்றி கல்கி வெளியிட்டுள்ள விமர்சனம் இங்கே.

போஜ ராஜன் புத்தகம் பற்றி விகடன் வெளியிட்டுள்ள குறிப்பு:

போஜன், பெரும் புலவன், மொழி, இலக்கியம், சமயம், தத்துவம், இசை, விஞ்ஞானம், சிற்பம், கட்டக்கலை, மருத்துவம், போர்க்கலை என அனைத்துத் துறைகளிலும் அவனுக்கு இருந்த புலமைக்கு அவன் இயற்றிய நூல்களே சான்று. கவிகளை ஆதரித்துப் போற்றினான்.

இலக்கியத் துறையில் சம்பூராமாயணத்தை இயற்றினான். சிருங்கார மஞ்சரி கதா என்ற கதையைஎழுதினான். போஜன் எழுதிய நூல்களில் கட்டக்கலை பற்றிப் பேசும் சமாரங்கண சூத்ரதாரா என்ற நூல் நகர நிர்மாணம் பற்றிப் பேசுகிறது. போஜன் கட்டியதாகச் சொல்லப்படும் 104 கோயில்களில், சைவக் கோயில்களே பெரும்பாலானவை.

வரலாற்றின் வெளிச்சத்தில் ஔரங்கசேப் புத்தகத்துக்கு ஜூனியர் விகடனில் புத்தகன் எழுதியிருக்கும் விமர்சனம் இங்கே

இதையெல்லாம் சொல்லக் காரணம், இதைப் படிப்பவர்கள் உடனே www.nhm.in/shop சென்று இந்தப் புத்தகங்களையும் வேறு பலப்பல புத்தகங்களையும் வாங்கத்தான். நன்றி!

இன்னும் படிக்க எடுத்து வைத்திருக்கும் சில புத்தகங்கள்: நெல்லை ஜமீன்கள் (சமஸ்தானங்களும் சரிவுகளும்) – விகடன் வெளியீடு; தமிழ்நாட்டுப் பாளையக்காரர்களின் தோற்றமும் வீழ்ச்சியும் (கருத்து=பட்டறை வெளியீடு); ஆர். எஸ். எஸ். (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) – சஞ்சீவ் கேல்கர் எழுதியதின் மொழிபெயர்ப்பு – கிழக்கு பதிப்பகம்; நேரு (உள்ளும் புறமும்) – நயந்தாரா செகல் எழுதியதின் மொழிபெயர்ப்பு – கிழக்கு பதிப்பகம், குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம் – கிழக்கு வெளியீடு.

ஆர் எஸ் எஸ்  (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) – சஞ்சீவ் கேல்கர் எழுதியதின் மொழிபெயர்ப்பும் நேரு (உள்ளும் புறமும்) புத்தகமும் இன்னும் வெளியாகவில்லை. வெளியானதும் சொல்கிறேன்.

ஆர் எஸ் எஸ் (கடந்து வந்த பாதையும் செய்யவேண்டிய மாற்றங்களும்) புத்தகத்தின் விளம்பரம்:

rss ad

Share

Comments Closed