ப்ரீ கே ஜி சேர்க்கலாம் வாங்க

நான் என் பையனை ப்ரீகேஜி சேர்த்தபோது எனக்குத் தேவையாகத் தோன்றியவற்றை இங்கே பதிகிறேன். இப்போது இதே அடிப்படையில்தான் என் மகளுக்கும் பள்ளியைத் தேடி இருக்கிறேன்.

* வீட்டிலிருந்து அதிகபட்சம் 2 கிமீ தொலைவுக்குள் இருக்கும் பள்ளி.

* நார்மலான கட்டணம். (வருடத்துக்கு அதிகபட்சம் 10,000. இதுவே மிக அதிகம்தான்! ஆனாலும் இப்படி ஆகிவிட்டது.) மிக அதிகக் கட்டணம் கொடுத்து எக்காரணம் கொண்டு ப்ரீகேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்க வைக்கத் தேவையில்லை. 6ம் வகுப்பிலிருந்து நல்ல அரசுப் பள்ளி (ஆங்கில வழிக் கல்வி) போதும்.

* தமிழ், ஆங்கிலம் மற்றும் ஹிந்தி – இந்த மூன்றுக்கும் இணையான முக்கியத்துவம் வேண்டும்.

* ஓரளவு நல்ல பள்ளி போதும். அந்த வட்டாரத்திலேயே சிறப்பான பள்ளி தேவையில்லை. ஏனென்றால்,

* அந்த வட்ட்டாரத்திலேயே மிக நல்ல பள்ளி என்றால் குழந்தைகளைப் பாடாய்ப் படுத்துவார்கள் என்பது என் மனப்பதிவு. எனவே வேண்டாம்.

* குழந்தைகள் என்றால் ஒழுக்கம் இல்லாமலும் சேட்டை செய்துகொண்டும்தான் இருப்பார்கள். அவர்களை அதற்காகத் தண்டிக்க கூடாது. சேட்டை எல்லை மீறும்போது மிகக் குறைவாகத் தண்டிக்கலாம்.

* ஹோம்வொர்க் செய்யாமல் ஒரு பையன் வருவது இயல்பு. அதற்கு பெரிய தண்டனை எல்லாம் கூடாது.

* பொய் சொல்வது குழந்தைகளின் உரிமை. அதற்காக கடுப்பாகக் கூடாது.

* 70 மார்க் வாங்கினாலும் போதும், ஏன் 90 வாங்கவில்லை என்று படுத்தக்கூடாது.

* குறைந்த பட்சம் 5ம் வகுப்பு வரையாவது சனி ஞாயிறு விடுமுறை அளிக்கவேண்டும். உண்மையில் 9ம் வகுப்பு வரையில் சனி ஞாயிறு விடுமுறை கொடுத்தாலும் ஒன்றும் குடி முழுகிப் போய்விடாது.

* அதிகம் ஹோம் வொர்க் கொடுத்து கையை உடைக்கக் கூடாது.

* புரிந்துகொண்டு படிப்பது நல்லதுதான். முக்கியமானதும் தேவையானதும் கூட. ஆனால் மனனம் செய்ய பள்ளி வற்புறுத்தவேண்டும். மனனம் என்பது ஒரு கிஃப்ட். அதை சிறந்த முறையில் குழந்தைகளுக்கு வசப்படுத்தக் கற்றுத்தர வேண்டும்.

* பெற்றோர்களை வரச் சொல்லி துன்புறுத்தக்கூடாது. பரிட்சை முடியும்போது பேப்பர் திருத்தித் தரும் நாள் மட்டும் வரச் சொன்னால் போதும். அதுவும் அப்பாவோ அம்மாவோ வந்தால் போதும் என்றிருக்கவேண்டும். இரண்டு பேரும் வரவேண்டும் என்று படுத்தக்கூடாது.

* எவ்வளவு முடியுமோ அவ்வளவு குழந்தைகளை பள்ளியில் விளையாட அனுமதிக்கவேண்டும். 6ம் வகுப்புக்குப் பிறகு ஒழுக்கத்தைப் போதித்தால் போதும்.

* எப்போதும் பாடப் புத்தகத்தை மட்டும் படிக்கச் சொல்லாமல், பள்ளியில் உள்ள நூலகத்தை உண்மையாக பயன்படுத்தச் சொல்லி மாணவர்களை வற்புறுத்தவேண்டும்.

* கடவுள் வழிபாடு மிக முக்கியம். தினமும் பள்ளியில் வழிபாடு நடக்கவேண்டும்.

* இந்தியா குறித்த பெருமிதம் மிக முக்கியம். அதனை மாணவர்களுக்குத் தவறாமல் ஊட்டவேண்டும்.

* கடைசியாக எனக்கே எனக்கான ஒன்று – அது ஹிந்துப் பள்ளியாக இருக்கவேண்டும்.

இப்படித்தான் மகளையும் சேர்க்கப் போகிறேன். நாளை என் மகளுக்கு இண்டர்வியூ. வயசு 2.5 ஆகுது.

ஏ பி சி டி
உங்கப்பந்தாடி
வந்தா வாடி
வராட்டி போடி

என்று அழகாகச் சொல்லுவாள். என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.

Share

Comments Closed