எங் கதெ

எங் கதெ என்னும் கதையைப் படித்தேன். ஆம், இது முதலில் நாவலல்ல. சிறிய கதை. சிலாகிக்க ஒன்றுமே இல்லாத மிகச் சாதாரணமான கதை. பலமுறை பல விதங்களில் சலிக்கப்பட்டுவிட்ட ஆண் பெண் முறை மீறிய உறவின் இன்னொரு புலம்பல். சரியான வார்த்தை, புலம்பல் என்பதுதான். கதையின் நாயகன் முதலில் இருந்து கடைசி வரை புலம்பிக்கொண்டே இருக்கிறான். ஒரே புலம்பலை எத்தனை முறை கேட்பது? கதை நெடுகிலும் முறை மீறிய உறவை வித விதமான எடுத்துக்காட்டுகளோடு சொல்லும் மாந்தர்கள் வந்து போகிறார்கள். “காப்பி குடிக்கலாம், கடையை வாங்கலாமா” ரக உதாரணங்கள். சகிக்கவில்லை. ஆண் பெண் உறவின் சிக்கலின் எந்த ஒரு அம்சத்தையும் நுணுக்கமாக சித்திரிக்க முடியாததாலேயே, மிகத் தெளிவாக நாயகன் தன்மொழியில் சொல்லிச் செல்கிறார் எழுத்தாளர் இமையம். கதை முழுக்க பெண்களைத் திட்டித் தீர்க்கும் ஆண் வன்மம். அதற்கு ஒரு சமன்குரல்கூட கிடையாது. கள்ள உறவு, வெறி, கழிவிரக்கம், கொலை செய்ய முயற்சி, பின்பு திடீர் ஞானோதயம். இத்தகைய புத்தம் புதிய கருத்துடன் இக்கதையைப் படிப்பேன் என நினைத்தும் பார்க்கவில்லை! நாவலின் மொழி பல இடங்களில் வைரமுத்துவை நினைவூட்டுகிறது. தேவையே இன்றி வரும் திடீர் கவிதைத்தனமான வரிகளுக்காகவே நாயகனை கவிதை வாசிப்பவன் என்று ஆக்கிவைத்துவிட்டார் புத்திசாலி எழுத்தாளர். நான் ரசித்த ஒரே பகுதி, நாயகனின் தங்கைகள் அவன் மேல் காட்டும் அன்பை விவரிக்கும் வரிகளை மட்டுமே. மற்றபடி இந்நாவலில் ஒன்றுமே இல்லை.

Share

Comments Closed