வீர சிவாஜி

கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘வீர சிவாஜி’ புத்தகத்தைப் படித்தேன். 104 பக்கங்களே உள்ள, இரண்டு மணி நேரத்தில் படித்து முடிக்க இயலும் மிகச் சிறிய புத்தகம். சிவாஜியைப் பற்றிய கதைகள் பலவற்றை நாம் சிறு வயதில் இருந்தே படித்திருப்போம். அதில் எவற்றுக்கு ஆதாரம் உண்டு எவற்றுக்கு இல்லை என்பதே இன்றுவரை நமக்குத் தெரியாது. ஆனால் அந்தக் கதைகள் தரும் சுவாரஸ்யமும் சிவாஜிக்கு அவை கொண்டு வரும் ஒரு பிம்பமும் அசாதாரணமானது. இத்தனை கதைகளும் பல ஆதாரத்துடன் கூடிய நிகழ்வுகளும் உள்ள ஒரு முக்கியமான அரசனைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஏன் இத்தனை சிறிய புத்தகமாக நூலாசிரியர் கே.ஜி.ஜவர்லால் எழுதியிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ளமுடியவில்லை.

HQ-TCgAAQBAJ

இப்புத்தகத்தின் முக்கியத்துவ என்பது – மிக முக்கியமான தகவல்கள் பலவற்றை மிகச் சுருக்கமாகச் சொல்கிறது. சிவாஜியின் அப்பா தாத்தா காலத்தில் உள்ள முக்கியமான நடைமுறைகள், அன்று இருந்த நிலப்பகுதியைப் பற்றிய முக்கியமான விளக்கங்கள், அதோடு தொடர்புடைய சிவாஜியின் நிகழ்வுகள், சுல்தான்கள்-முகலாயர்களுக்கு இடையே இருந்த பிரச்சினைகள், இவற்றை சிவாஜி கையாண்டவிதம் என எல்லாமே தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. ஆனால் இவையெல்லாம் மிக வேகமாக, இன்றிரவே இக்கதையைச் சொல்லி முடிக்கவேண்டும் என்ற வேகத்தில் சொல்வது போன்ற ஒரு தோற்றத்தில் சொல்லப்பட்டுள்ளன. இன்னும் கொஞ்சம் நிதானமாக விளக்கமாக எழுதி இருந்தால் இப்புத்தகம் இன்னும் முக்கியமானதாக ஆகியிருக்கும்.

சிவாஜி ராம்தாஸ் உறவு, சிவாஜி அப்சலைக் கொன்ற விதம், சிவாஜி முகலாயர்களின் சிறையில் இருந்து தப்பிப்பது, சிவாஜியின் கோட்டையிலிருந்து தன் மகனுக்கு உணவளிக்க தப்பித்த ஒரு தாய், துண்டாகிப் பறக்கும் சாயிஷ்டா கானின் கட்டைவிரல் எனப் பல்வேறு கதைகள் இப்புத்தகத்தில் உள்ளன. இவையெல்லாம் நம் சிறுவயது நினைவுகளைக் கிளறுகின்றன. பல இடங்களில் இக்கதைகளுக்கான மாற்று ஏதேனும் இருந்தால் அதையும் பதிவு செய்கிறார் ஆசிரியர். இந்த வகையில் சிறுவர்களுக்கான மிக முக்கியமான நூலாக இதைச் சொல்லலாம். இந்த விடுமுறையில் இதை என் மகனிடம் கொடுத்துப் படிக்கச் சொல்லப் போகிறேன். ‘சரித்திரத்தை மாற்றிய சதி வழக்குகள்’ என்ற புத்தகத்தை சிறுவயதில் படித்த நண்பர் ஒருவர் இப்போதும் அதைப் பற்றிப் பெருமையாகச் சொல்வதை நினைவுகூர்கிறேன். உண்மையில் அது முக்கியமான புத்தகமே. ஒருவித மயிர்க்கூச்செறியும் நடையில் எழுதப்பட்ட புத்தகம் என்றாலும் பல்வேறு தகவல்கள் அதில் உண்டு. அதேபோன்ற ஒரு புத்தகம் இது.

இப்புத்தகத்தில் சொல்லாமல் விடப்பட்ட, சொல்லி ஆதாரம் இல்லாத விஷயங்கள் என்று முக்கியமாக நான் கருதுபவை மட்டுமே இங்கே.

* அப்சல் கானைக் கொல்ல உதவி புரிந்தவர் ஒரு பிராமணர் என்று ஒரு தியரி உண்டு. அவர் சிவாஜியிடம் தூதாக வந்ததாகவும், சிவாஜி பாரத உணர்வை பாரத மேன்மையை எடுத்துச் சொல்லி அவரை மாற்றியதாகவும் ஒரு பார்வை உண்டு. அதைப் பற்றிய குறிப்பு இப்புத்தகத்தில் இல்லை.

* சிவாஜியின் முடிசூட்டு விழாவுக்கு மறுத்த பிராமணர்கள் பற்றிய குறிப்பு இல்லை. ஒருவேளை, இவற்றுக்கு ஆதாரம் இல்லை என்று ஆசிரியர் நினைத்தால், மற்ற விவரங்களை குறிப்பிடுவதுபோல இவற்றைக் குறிப்பிட்டுவிட்டு இவற்றுக்கான ஆதாரம் இல்லை என்றாவது சொல்லி இருக்கலாம்.

* அப்சல் கான் கொன்ற தன் 64 மனைவியர் பற்றிய குறிப்பு இல்லை.

* 84ம் பக்கத்தில் இப்படி ஒரு பத்தி வருகிறது. “என்னதான் இந்து மதத்துக்காகப் போராடினாலும் சிவாஜி காலத்து செக்யூலரிஸமும் இப்போது போலத்தான் இருந்தது. ஒரு முஸ்லிம், ஒரு இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அவருக்கு நீதித்துறை தண்டனை தரக்கூடாது என்று சட்டமே போட்டிருந்தாராம்.”

மேலே உள்ள பத்தியில் உள்ள முதல் வரி சற்றேறக்குறைய உண்மையே. இதற்கான ஆதாரங்கள் தரப்பட்டுள்ளன. ஆனாலும் அதை இக்காலத்து போலி செக்யூலரிசத்துடன் ஒப்பிடமுடியாது. உண்மையான ஹிந்து ராஜ்ஜியம் என்பது முஸ்லிம்களையும் உள்ளடக்கியது என்ற சிவாஜியின் நினைப்பே இதற்குக் காரணமாக இருந்திருக்கவேண்டும். ஹிந்து வேல்யூ என்பதை சிவாஜி பல இடங்களில் மெய்ப்பிக்கிறார். குறிப்பாக போரில் கைது செய்யப்படும் இஸ்லாமியப் பெண்களை அவர் கண்ணியமாக நடத்திய விதம் தொடர்பாக ஏகப்பட்ட ஆதாரங்கள் உள்ளன. அவை இந்நூலிலும் தரப்பட்டுள்ளன. எனவே சிவாஜியின் நடத்தையை இக்காலத்து செக்யூலரிஸத்துடன் ஒப்பிடமுடியாது. அது உண்மையான செக்யூலரிஸம்.

இதைவிட முக்கியமானது அடுத்த வரிகள். ஒரு முஸ்லிம் இந்துவிடம் தவறாக நடந்துகொண்டால் அதற்கு தண்டனை தரக்கூடாது என்பது நிச்சயம் இக்கால போலி செக்யூலரிஸம்தான். ஆனால் இப்படி சிவாஜி சொன்னதற்கான ஆதாரம் இந்நூலில் தரப்படவில்லை. அதற்கான ஆதாரத்தை நூலாசிரியர் வழங்கியிருக்கவேண்டும். இது மிகத் தெளிவாக சட்டமாகச் சொல்லப்பட்டதா, அல்லது சிவாஜி வேறு யாருக்கேனும் எழுதிய கடிதத்தில் இருந்து ஊகித்து அறியப்பட்டதா என்பதைப் புரிந்துகொள்ளாமல் இதை மேலும் அர்த்தப்படுத்திக்கொள்ள முடியாது. இந்நூலின் மிகப்பெரிய சறுக்கல் என்று நான் நினைப்பது, இவ்வரிகளுக்கான ஆதாரங்கள் தரப்படாததையே.

இந்நூலின் இன்னொரு குறை – வரலாற்று சம்பவங்களை நாவல் பாணியில் உரையாடலாகச் சொல்வது. பெரும்பாலும் இது இந்நூலில் தவிர்க்கப்பட்டிருக்கிறது என்பது உண்மைதான். ஆனாலும் சில இடங்களில் இப்படி வருவது இப்புத்தகத்தின் நம்பகத்தன்மையையும் சீரியஸ்நெஸ்ஸையும் கடுமையாகக் குறைக்கிறது. அல்லது இப்படி பேசியதற்கான நேரடி தன்குறிப்பு ஆதாரங்கள் இருந்தால் அதைக் கொடுக்கவேண்டும். இல்லாவிட்டால் விவரணைகளாக மட்டுமே இவற்றைச் சொல்லவேண்டும். அதேபோல் தேவையற்ற உதாரணங்கள், அதிலும் குறிப்பாக நடிகர் நடிகைகள் அல்லது தற்கால நிகழ்வுகளோடு இணைவைத்துச் சொல்லப்படும் உதாரணங்கள் போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும் அல்லது மிகக் கவனமாகக் கையாளவேண்டும். இவை ஒன்றிரண்டு இடங்களில்தான் வருகின்றன என்றாலும் இதில் கவனம் கொள்வது அவசியமானது.

மற்றபடி வீர சிவாஜியைப் பற்றித் தெரிந்துகொள்ள உருப்படியான முக்கியமான நூலாகவே இதைக் கருதுகிறேன்.

ஆன்லைனில் வாங்க: http://www.nhm.in/shop/9789351351726.html

இபுத்தகம் வாங்க: கூகிள் புக்ஸ்

Share

Comments Closed