ஒருத்திக்கே சொந்தம், தடை செய்யப்பட்ட துக்ளக்

இந்த வருடத்தில் முதலில் வாசித்த கதை – ஒருத்திக்கே சொந்தம். ஜெயலலிதா எழுதியது. இதை நாவல் என்று சொல்வது நாவல் கோட்பாடுகளுக்கு எள்ளு இறைப்பதற்கு ஒப்பானது என்பதால் கதை என்கிறேன். அடுத்த பஸ் ஐந்து நிமிடத்தில் வருவதற்குள் நிறுத்தத்தில் காத்திருக்கும் சக பெண்ணுக்குக் கதையைச் சொல்லி முடிக்கும் வேகத்தில் ஜெயலலிதா இக்கதையைச் சொல்லி இருக்கிறார். 1960களில் உள்ள திரைக்கதைகளை நகலெடுத்து எழுதப்பட்ட கதை.
oruthi_3101048h
இதை 60களில் ஜெமினிகணேசனை ஹீரோவாக வைத்து படமாக எடுத்திருந்தால் இன்னுமொரு சூப்பர்ஹிட் உணர்ச்சிகர காவியம் தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும். இதன் முடிவுக்காக சிலரால் புரட்சிகர சினிமா என்று போற்றப்பட்டிருக்கும் என்பதோடு, இரண்டு மனைவி கலாசாரத்தைப் புகுத்துகிறாரா என்று பலரால் தோரணமும் கட்டப்பட்டிருக்கும். இதை ஏன் ஜெயலலிதா இப்படி எழுதினார் என்பதை ஒட்டி ஜெயலலிதாவின் பின்னாளைய அரசியல் வாழ்க்கைக்கான அடிப்படைகளும் விவாதிக்கப்பட்டிருக்கும். நாவலாக வந்துவிட்டதால் இந்நாளைய தமிழர் மரபுக்கு இணங்க பெரும்பாலானோர் இதை வாசிக்கவே இல்லை. குடும்ப நாவல் இந்த மாதம் இதை வெளியிட்டதால் இதைப் படிக்க முடிந்தது. இது போக இன்னும் ஒரு நாவல் ஜெயலலிதா எழுதி இருக்கிறார் போல. அதையும் வாசிக்கவேண்டும். இந்த நாவலைப் படிக்கும்போது ஜெயலலிதாவை நினைத்து ஏனோ வருத்தமாக இருந்தது.
 
 
இன்று புத்தகக் கண்காட்சிக்கு கொஞ்சம் தாமதமாகச் செல்லலாம் என்ற எண்ணத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலைக் கையில் எடுத்தது தவறாகப் போய்விட்டது!
Jpeg

Jpeg

 
துக்ளக் சோவை இன்னும் மறக்கமுடியவில்லை. இவரது நினைவுக்காக அல்லயன்ஸ் பதிப்பகத்தில் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ நூலை இரண்டு நாளுக்கு முன்னர் வாங்கினேன். விலை ரூ 120. பொக்கிஷம் என்ற க்ளிஷேவை இதற்குச் சொல்லலாம். பொக்கிஷம். கருணாநிதி மற்றும் எம்ஜியாரைத் துவைத்து எடுத்திருக்கிறார். 71ல் ஈவெரா ராமரை செருப்பால் அடித்தது போன்ற போஸ்டரை வெளியிட்டதற்காக தடைசெய்யப்பட்ட துக்ளக் இதழ் மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களும்; 1985ல் பி.எச். பாண்டியன் சட்டசபையில் ரகுமான் கானிடம் ‘தன்மையாகப்’ பேசியதை துக்ளக் இதழில் வெளியிட்டு (என நினைக்கிறேன்) உரிமைப் பிரச்சினைக்கு ஆளான பிரச்சினை மற்றும் அதை ஒட்டிய விவகாரங்களையும் முழுமையாக இந்தப் புத்தகத்தில் வாசிக்கலாம். அதுவும் கிட்டத்தட்ட துக்ளக் வடிவமைப்பில். பல இடங்களில் சோவைப் பற்றிய நினைவுகள் என்னைக் கலங்கடித்துவிட்டன. என்னவெல்லாம் செய்திருக்கிறார். 15.7.85 அன்று சோ துக்ளக்கில் எழுதியிருக்கும் தலையங்கத்தில்தான் எத்தனை தெளிவு, என்ன துணிவு. வாய்ப்பே இல்லை. அதன் கடைசி வரி, “என்ன நடந்தாலும் சரி, ஆனது ஆகட்டும், நானும் பார்க்கிறேன்.”
 
சோவின் கடைசி காலங்களில் அவரது வேகம் மிகவும் மட்டுப்பட்டுவிட்டது என்பதையும் ஜெயலலிதாவை அவர் தீவிரமாக ஆதரித்தார் என்பதையும் ‘தடை செய்யப்பட்ட துக்ளக்’ இதழைப் படிக்கும்போது புரிந்துகொள்ளமுடிகிறது. ஜெயலலிதா மீது வைக்கப்பட்டும் பல குற்றச்சாட்டுகளுக்குத் தொடக்கப்புள்ளி எம்ஜியார் என்பதை இப்புத்தகம் பின்னணியில் உங்களுக்கு உணர்த்திக்கொண்டே இருக்கும். நெடுஞ்செழியன், பி.எச். பாண்டியன் போன்றவர்களுக்கு எதிர்விதத்தில் நேர் செய்யும் விதமாக வருகிறார்கள் ‘வணிக ஒற்றுமை’ பத்திரிகை ஆசிரியர் பால்ராஜும், பாளை சண்முகமும்.
 
இந்நூலில் உள்ள ஒன்றரைப் பக்க நாளேடு ஓர் உச்சம். தலைவர்களின் தீபாவளி வாழ்த்து கற்பனை அதகளம். கடவுளைக் கற்பித்த்வன் முட்டாள், காட்டுமிராண்டி என்று ஈவெராவின் சிலைக்குக் கீழ் உள்ள வாசகங்களை ஒட்டிய பிரச்சினைக்கு பதில் கூறும் முகமாக எழுதப்பட்ட கட்டுரையில், சென்னை ஆர்ச் பிஷப் பூஜ்யர் ஸ்ரீ அருளப்பாவின் கருத்தைச் சரியாகச் சேர்த்திருப்பது அட்டகாசமான சோ-த்தனம். ஐ லவ் சோ. ஐ மிஸ் ஹிம். 🙁
Share

Comments Closed