பவர் பாண்டி

பவர் பாண்டி பார்த்தேன். மஞ்சள் பை தந்த பயம், கிழவர்களின் காதல் என்ற பிரயோகங்கள் தந்த அச்சம் காரணத்தால் இயன்றவரை இப்படத்தைப் பார்ப்பதைத் தவிர்த்தே வந்தேன். மகளிர் மட்டும் திரைப்படத்தில் இருந்து ரேவதி மீது உருவான இனம்புரியாத எரிச்சல் இன்னுமொரு காரணம். சுத்தமாக முக பாவங்கள் காட்ட வராத ராஜ்கிரண் வேறு. இத்தனை எரிச்சலுடன் பார்த்தும், இந்தப் படம் பிடித்துவிட்டது. இன்னும் சொல்லப்போனால், தனுஷின் காதல் காட்சிகள் முடியும் வரை படம் அட்டகாசமான ஃபீல் குட் மூவி. அதற்குப் பின்பு கொஞ்சம் சொதப்பல். ஆனால் அந்த சொதப்பல் காட்சிகளில் ரேவதியின் நளினமான நடிப்பு – அருமை. ரேவதி மிதமிஞ்சிப் போனால் படத்தில் பதினைந்து நிமிடங்கள் வந்திருக்கலாம். ஆனால் அந்த சிரிப்பு, அந்த கண்களில் காட்டும் நுணுக்கம் என ஒட்டுமொத்த படத்தையும் ஹைஜாக் செய்துவிட்டார். ரேவதியின் முன்பு ராஜ்கிரண் பூனையாகிப் போனது பெரிய மைனஸ். தனுஷை அந்த அளவுக்கு ரசிக்கும்விதமாகக் காட்டிவிட்டு, ரேவதியின் முன்பு ராஜ்கிரண் இறங்கிப் போனதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இதுதான் படத்தின் மைனஸ் என நினைக்கிறேன்.

படத்தில் எனக்குப் பிடித்துப் போன இன்னும் சில விஷயங்கள்: அலட்டாத மிகவும் சீரியஸான யதார்த்தமான பிரசன்னாவின் நடிப்பு. பிரசன்னாவின் வாழ்நாள் படம் இது என நினைத்துக்கொண்டேன். அடுத்து தனுஷின் ஃபிரண்டாக வரும் அந்த பீர் பார்ட்னர். என்ன ஒரு யதார்த்தம். இளையராஜா இசையமைத்திருக்கலாமே என்று படம் முழுக்க தோன்றிக்கொண்டே இருந்தது.

தேவையற்ற அந்த கடைசி சண்டைக் காட்சியை நீக்கி, ராஜ்கிரணை இறுதிக்காட்சிகளில் கொஞ்சம் கெத்தாகக் காட்டி இருந்தால், படம் இன்னும் நன்றாக இருந்திருக்கும்.

தனுஷின் முதல் பட இயக்கம் மிகவும் நன்றாகவே வந்துள்ளது. தனுஷின் இயக்கம் என்று சொன்னபோது நான் எதிர்பார்த்த திரைப்படம் வேறு. தனுஷ் தந்ததோ முற்றிலும் வேறானது. ஆனாலும் ரசிக்கும்படியாகவே இருந்தது. இந்த வயதான காதல் வகைத் திரைப்படங்களில் தமிழின் ஒரே முத்து கேளடி கண்மணி மட்டுமே என்பது என் எண்ணம். இப்போதும் கேளடி கண்மணியே முதன்மையில் உள்ளது. துணை படம் (துரை இயக்கியது) இதை கொஞ்சம் தொட்டுப் பார்த்தது. (துணை படத்தில் சிவாஜியைத் தூக்கிச் சாப்பிடும் ராதாவின் மிரட்டல் நடிப்பு இன்னும் கண்ணில் நிற்கிறது.) இப்போதைய டீஸண்ட் வரவு பவர் பாண்டி.

முதல் மரியாதையை மிஸ் செய்துவிட்டேன். முதல் மரியாதை வேற லெவல்.

Share

Comments Closed