அருவி – திரைப்படம்

சரவண கார்த்திகேயன், எல்லாவற்றையும் சொல்லி இருக்கிறீர்கள். இதே சந்தேகங்கள்தான் நான் படம் பார்த்த நாளிலும் இருந்தது. பலரிடம் தொலைபேசியிலும் சொன்னேன். இந்தப் பெண் பழிவாங்குவது என்பது அபத்தம். சம்மதத்துடன் நடந்த உடலுறவு இது. அதுவும் எய்ட்ஸ் வந்த பெண் உடலுறவுக்கு ஒத்துக்கொள்வது, அந்தப் பெண் பழிவாங்குவது போலத்தான் உள்ளது.

இதில் அந்தப் பெண்ணுக்கு எய்ட்ஸ் பரவும் விதமே சரியானதுதானா என்பதில் எனக்கு சந்தேகம் உள்ளது.

படத்தில் வரும் ‘சொல்வதெல்லாம் உண்மை’ தொடர்பான காட்சிகளில் தரமில்லை. ஆனால் மக்கள் கைதட்டி ரசித்தார்கள் என்பது உண்மை.

ஒன்றுமே இல்லாத விஷயத்துக்கு மாவோயிஸ்ட்டா என்றெல்லாம் போலிஸ் துறையே கலங்கியது என்பதெல்லாம் சுத்தமாக நம்பவே முடியாதவை.

ஆனால் இத்தனையையும் மீறி இந்தப் படம் ஒரு பாதிப்பைச் செய்தது என்பதும் உண்மை. இரண்டு நாள் இந்தப் படம் பற்றிய நினைப்பாகவே இருந்தது. அதிலும் முதல் இருபது நிமிடங்கள் (நான் படம் பார்த்த அன்றே இதைக் குறிப்பிட்டு எழுதி இருந்தேன்) அழகோ அழகு.

நடிகையின் நடிப்பு மிக அனாயாசம்.

எனக்குள்ள இன்னொரு பிரச்சினை: படத்தில் ஏமாற்றுபவர்களை கடவுள் நம்பிக்கை உள்ளவர்களாக வேண்டுமென்றே சித்திரிப்பது. ஒருவர் உபன்யாசம் செய்பவர். இன்னொருவர் உதவி செய்யும்போது பின்னணியின் அடிகளாரின் படம் பார்த்த நினைவு. டிவி ஷூட் தொடங்கும்போது பிள்ளையாரை வணங்குவதுபோன்ற ஒரு ஷூட். இதிலெல்லாம் எனக்குப் பிரச்சினை என்பது, இப்படி எடுக்கக்கூடாது என்பதல்ல. ஆனால் ஏமாற்றுபவர்கள் எல்லாருமே இப்படித்தான் என்பது போன்ற ஒரு செய்தி வருவதைச் சொல்கிறேன். ஏனென்றால் ஏமாற்றுவது என்பது ஒரு பொதுவான செயல்! அப்படியானால் கடவுள் நம்பிக்கை தந்தது என்ன என்பது பெரிய அளவில் யோசிக்கவேண்டிய தத்துவார்த்தப் பிரச்சினை.

சிலர் இப்படம் பிராமணர்களை இழிவுபடுத்துவதாகச் சொன்னார்கள். நான் ஏற்கவில்லை. பல போலிஸ்காரர்களின் குரல்களும், நியாயம் பேசும் நபர்களின் குரல்களும் இப்படத்தில் பிராமண வழக்கிலேயே ஒலித்தன என்பது நினைவுக்கு வருகிறது.

இப்படம் நன்றாக வந்திருக்கவேண்டிய ஒரு படம் என்பதே என் நிலைப்பாடு.

இந்த சின்ன வயதில் ஒரு இயக்குநர் இந்தப் படம் எடுத்திருப்பது நிச்சயம் பாராட்டப்படவேண்டியது, நம்பிக்கையைத் தருவது.

Share

Comments Closed