அன்புள்ள ரஜினிகாந்த்

அன்புள்ள ரஜினிகாந்த்

இவை ஒரு சாமானியனின் கருத்துகள். நீங்கள் வெல்வீர்கள் என்று நம்பும் ஒரு சாமானியன். உங்களால், ‘ஈவெரா மண்’ என்று திராவிடக்காரர்களால் சொல்லிக்கொள்ளப்படும் ஆன்மிக தமிழ் மண்ணில், திராவிடச் சார்பற்ற, இந்திய தேசிய நம்பிக்கை உடைய, ஹிந்து வெறுப்பற்ற, போலி மதச்சார்பின்மை பேசாத ஒரு கட்சி ஆட்சிக்கு வரும் என்று எதிர்பார்க்கும் ஒருவனின் எண்ணங்கள். பிஜேபி உடனே ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை என்பதால் கடவுள் உங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்கிறார் என்றுகூட யோசிக்கும் ஒருவரின் கருத்துகள். 🙂 (இனிமே படிக்கத் தேவையில்லை என்பவர்கள் ஓடிப்போய்விடலாம் என்பதற்காகவே இவ்வரி எழுதப்பட்டது.)

அரசியல் மேடை அல்ல, அரசியல் பேச விரும்பவில்லை என்று சொன்னாலும் மிகத் தெளிவான செய்திகளை அரசியல் அரங்கில் உலவ விட்டிருக்கிறீர்கள். மிகத் தெளிவாகவே, அரசியல் பேசும் தேவை ஏற்படலாம் என்கிற தயாரிப்போடு வந்திருக்கிறீர்கள்.

எம்ஜியாரை அளவுக்கு மீறிப் புகழ்ந்தது ஒரு நல்ல அரசியல் தேர்வாக இருக்கலாம். அதிமுக கூடாரத்தைக் கலைக்கப் பயன்படலாம். ஓட்டு விழலாம். எல்லாம் சரி. ஆனால் மாற்று வேண்டும் என்று எதிர்பார்க்கும் மக்கள் உங்களிடம் எதிர்பார்ப்பது எம்ஜியாரின் ஆட்சியை அல்ல. அதற்கும் மேலே. எம்ஜியாரைப் புகழ்வது ஓட்டுக்காக மட்டும் என்ற தெளிவு உங்களிடம் இருந்தால் நல்லதுதான். கருணாநிதியையும் ஜெயலலிதாவையும் புகழ்வதெல்லாம் ரொம்பவே ஓவர். இதில் நேர விரயம் செய்யாமல் இருப்பது நல்லது. மேலும் இதையெல்லாம் சகித்துக் கொள்ளவும் முடியவில்லை. அதே சமயம் அவர்கள் கட்சியைக் காப்பாற்றினார்கள் என்று சொன்னதில் உண்மையிலேயே தெளிவான உள்குத்து இருந்திருக்குமானால் அதைப் பாராட்டவே வேண்டும்.

ஊடகங்கள் உங்களுக்கு எதிராக எதாவது பேசிக்கொண்டே இருப்பார்கள். ஒவ்வொன்றுக்கும் பதில் சொல்லும் தேவையோ அவசியமோ இல்லை. பொதுவாகவே ரஜினி ஏன் கருத்தே சொல்வதில்லை என்று ஊடகங்கள் கதறும் வகையிலேயே அவர்களை வைத்திருங்கள். ஒவ்வொன்றுக்கும் கருத்து சொல்வதால் உங்களுக்குப் பிரச்சினைகளும் மீம்ஸுகளும்தான் வந்து சேரும். எதாவது ஒரு பிரச்சினைக்கு விளக்கம் சொல்வதாக இருந்தாலும், இப்படி கேக்கறாங்க என்றெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் சொல்லும் நிலையிலும் ஊடகங்கள் நீங்கள் சொல்வதைக் கேட்டுக்கொள்ளும் நிலையிலும் இருக்கிறார்கள் என்பதை உணர்த்திக்கொண்டே இருங்கள். உங்கள் எளிமை நேரடியாக மக்களிடம் இருக்கட்டும். மக்களிடம் மட்டும் இருக்கட்டும்.

இனியும் சினிமா உலகம் என்று உணர்ச்சி வசப்படாதீர்கள். அதைவிடப் பெரிய உலகம் உங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறது. திரை உலகத்துக்கு நீங்கள் செய்யவேண்டியதை, அப்படி நீங்கள் நினைப்பதைப் பின்னர் செய்யுங்கள். மூன்றாவதாகத் திரைப்படம் அறிவித்ததையே இன்னும் ஜீரணித்துக்கொள்ளாத பலர் இருக்கிறார்கள். எனவே திரையுலகம் பற்றிய கருத்துகளை அரசியல் மேடைகளில் விலக்கி வையுங்கள்.

தமிழ் – தமிழன் குறித்த உங்கள் கருத்து தைரியமானது. ஆனால் இதெல்லாம் இங்கே காலம் காலமாக எதிர்கொள்ளப்பட்டுவிட்டது. இதெற்கெல்லாம் தூக்கத்தில் கூடப் பதில் சொல்லும் அளவுக்குத் தமிழ்த் தேசியவாதிகள் தயாராக இருக்கிறார்கள். அதையெல்லாம் தெரிந்தே இதைப் பேசுங்கள். ஒரு மேடையில் ஆங்கிலம் பேசுங்கள் என்று சமீபக் காலங்களில் எந்தத் தமிழ்நாட்டு அரசியல்வாதியும் இவ்வளவு பகிரங்கமாக மேடையில் சொன்னதில்லை. ரகசியமாகச் சொல்லிக்கொள்வார்கள் போல. அந்தத் தைரியத்தை நிச்சயம் பாராட்டவேண்டும். நீங்கள் தமிழ் பற்றியோ தமிழன் பற்றியோ ஒரு வரி பேசினால் இவர்கள் ஒரு மாதத்துக்கு அதற்கு விதம் விதமாகப் பதில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். தமிழ் என்பதையும் தமிழன் என்பதையும் ஒட்டுமொத்தமாகப் பிரிப்பதில் எவ்விதப் பொருளும் இல்லை. தமிழ் வளர்ச்சியும் தமிழன் வளர்ச்சியும் ஒரு சேரவே முக்கியமானதுதான். அதேபோல் இப்படி எதாவது சொல்லி தமிழ்த் தேசியவாதிகளையும் திமுகவினரையும் அதைப் பற்றி மட்டுமே பேசவிடுவதும் நல்லதுதான். 🙂

நேரடியாக மக்களுடன் பேசுவது போன்ற எளிதான மொழி உங்களது பலமாக இருக்கும். ஆனாலும் கூட அதில் ஒரு கோர்வையைக் கொண்டு வருவது நல்லது. மிக முக்கியமாக, ஆங்கில வார்த்தைகளைக் குறைத்துக்கொண்டு தமிழில் மட்டுமே பேசுவது மிக நல்லது, முக்கியமானது. டெஃபனட்லி சொல்றேன் போன்றவை தவிர்க்கப்படவேண்டும். உங்கள் பின்னால் உள்ள அணி திறமையாகவே காய் நகர்த்துகிறது. இன்னும் கவனம் கூடட்டும்.

எம்ஜியார் சிலை திறப்பு விழாவில் திமுகவினருக்கு ஊமைக்குத்தும் அதிமுகவினருக்கு மரணக்குத்தும் விழுந்திருக்கிறது. ரஜினி மற்றும் கமல் என்று ஊடகங்கள் பரபரப்பாகிவிட்ட நிலையில் ஸ்டாலின் பற்றி மக்கள் மறந்துவிட்டார்கள் என்பது போன்ற தோற்றம் கிட்டத்தட்ட வந்துவிட்டது. காத்திருந்தவன் பொண்டாட்டியை இரண்டு பேர் தூக்கிக்கொண்டு போக முயன்று, நீங்கள் வெல்லப் போகிறீர்கள். எனவே அத்தரப்பிலிருந்து கடுமையான கருத்துகள் பிரவாகமெடுக்கும். அதிகம் பயப்படத் தேவையில்லை. இவர்களது அரசியலே இப்படிப் புலம்புவதுதான். எம்ஜியார் இருந்தபோதும் ஜெயலலிதா இருந்தபோதும், ஜெயலலிதா இறந்த பின்பும். இன்றுவரை,கடந்த தேர்தலில் ஜெயலலிதாவுக்கு ஓட்டு போட்டவர்களை அவர்கள் சபிப்பதைக் காணலாம். தமிழ்நாட்டின் நிலைக்காக மட்டும் அவர்கள் பொங்கவில்லை, இனி ஆட்சி வருமா என்ற நிலைக்கு அவர்களைக் கொண்டு வந்ததற்காகவும் புலம்புகிறார்கள். அதேசமயம் தேர்தல் அரசியலில் ரஜினிகாந்த் எதிர்கொள்ளவேண்டியது நிச்சயம் திமுகவாகவே இருக்கும். அதிமுக இப்போதே தங்கள் எதிர்காலத்தை ஏற்றுக்கொண்டுவிட்டது.

ஊடகங்கள் அனைத்தும் பேனர்கள் பிரச்சினை பற்றிப் பேசிக்கொண்டிருக்க, எடுத்த எடுப்பில் பேனர் பற்றிப் பேசியது, மக்களிடம் மன்னிப்பு கேட்டதெல்லாம் சிக்ஸர். ஆனால் இது வாய்ப்பேச்சாக நின்றுவிடக்கூடாது. இந்த பேனர் கலாசாரத்தை நிஜமாகவே ஒழிக்கவேண்டும். பேனரே வைக்காமல் இருக்கமுடியாது என்றால், எத்தனை பேனர்கள் மாநகராட்சியிடம் அனுமதி பெற்று வைக்கப்படுகிறது என்பதை ஒழுங்காகப் பின்பற்றவாவது செய்யவேண்டும். இதை நடைமுறையிலும் சாத்தியப்படுத்தவேண்டும். வழி முழுக்க பேனர் வைப்பதால் எரிச்சலே மிஞ்சுகிறது. இப்படி பேனர் வைக்காவிட்டால் எழுச்சியே இல்லை என்று ஊடகங்கள் சொல்லும் என கராத்தே தியாகராஜன் நேற்று ஒரு தொலைக்காட்சியில் பேசினார். இதுவும் உண்மைதான். ஊடகங்களே இத்தகைய கருத்துகளைப் பரப்பவே செய்கின்றன. வழிநெடுக பேனர்களே இல்லை என்பதைப் பாராட்டாகச் சொல்லாத வரை பேனர் மோகம் ஒழியாது. மாற்று அரசியலிலாவது பேனர்கள் ஒழிந்த அல்லது பேனர்கள் குறைந்த தமிழகம் வருவது நல்லது. (யாராவது ஒருவர் பேனர் தொழிலில் புரளும் பணம், அதில் பயன்பெறும் தொழிலாளர்கல், அவர்களது வாழ்வாதாரம் என்று வருவார். அதையும் எதிர்கொள்ளவேண்டும்!)

சாதாரண ஒரு நிகழ்ச்சியில் பேசியதற்கே இத்தனை பரபரப்பு. கட்சி தொடங்கி அறிவித்து முதல் கூட்டம் போடும் நாளில் தமிழ்நாடே அதிரும் என்று நிச்சயம் நம்புகிறேன். ஹிந்து எதிர்ப்பற்ற போலி மதச்சார்பின்மை நடிப்பற்ற ஒரு கட்சியை நடத்தி வெல்ல வாழ்த்துகள்.

Share

Comments Closed