ரீச் ஃபௌண்டேஷனின் விருது வழங்கும் விழா நேற்று (29-ஏப்ரல்-2018) அன்று தமிழ் இணையப் பல்கலைக்கழக அரங்கில் நடைபெற்றது. விழாவின் சிறப்பு அழைப்பாளர்கள் ஜி.கே.வாசன் மற்றும் அரவிந்தன் நீலகண்டன்.
* விழா மிகச் சரியாக 9.30க்குத் துவங்கியது.
* மெல்ல நடந்து வந்த மெலிந்த 85 வயது முதியவர் நாற்காலியில் அமர்ந்து இறை வணக்கப் பாடல்களைத் துவங்கினார். 85 வயதுக்குள்ளிருந்து வெளிவந்த கணீரென்ற குரல் என்னைக் கலங்கடித்துவிட்டது. மிகச் சிறப்பாக திருமுறை பாடல்களைப் பாடினார். அழுத்தம் திருத்தமாக வித்வான் குடந்தை லக்ஷ்மணன் அவர்கள் பாடியதைக் கேட்ட தமிழே மெய்மறந்து நின்றிருக்கும். அப்பெரியவருக்கு மீண்டும் ஒரு நமஸ்காரம்.
* மிக முக்கியமான ஆளுமைகளுக்கு, நம் கலாசாரத்தைப் பேணும் மனிதர்களுக்குத் தேடித் தேடி விருது கொடுத்தார்கள். மாணவர்களுக்கு நம் கலாசாரத்தைப் பேண கற்றுத் தரும் ஆசிரியர் ராஜகுரு, சென்னை தினத்தின் முதுகெலும்பாக விளங்கிய ராஜா சீதாராமன் போன்றவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
* ராஜா சீதாராமன் ஐந்தாறு வருடங்களுக்கு முன்பே இறந்துவிட்டதால் அவரது 81 வயது தாயார் வந்து விருதைப் பெற்றுக்கொண்டது நெகிழ்வான தருணம்.
* ஜிகே வாசன் ரீச் ஃபௌண்டேஷனின் தேவையை, அவர்களது சேவையைப் பாராட்டிப் பேசினார்.
* அரவிந்தன் நீலகண்டன், நேரம் குறைவாகவே இருந்தால் சிறிய உரையை ஆற்றினார். இவரது உரை பலத்த வரவேற்பைப் பெற்றது. விழா முடிந்ததும் பலர், இவர் இன்னும் நிறைய நேரம் பேசி இருக்கவேண்டும் என்று சொன்னார்கள்.
* விருது பெற்றவர்கள் அனைவரும் சிற்றுரை ஆற்றினார்கள். இது முக்கியமான விஷயம். ராஜகுரு கொஞ்சம் நீண்ட உரையை ஆற்றினார். எப்படி மாணவர்களை ஒருங்கிணத்துச் செயல்பட்டார் என்பதை விளக்கினார்.
* கல்வெட்டாய்வாளர்/ஆய்வாளர் ராமசந்திரன் பலருக்கும் கல்வெட்டுகளைப் படிப்பது பற்றிப் பாடங்கள் எடுக்கிறார். அவரது 9 வது பாட்ச் மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. அடுத்த பாட்ச் ஜூன் இறுதியில் தொடங்குகிறது. விருப்பப்படுபவர்கள் ரீச் ஃபௌண்டேஷனை அணுகவும்.
* விழாவின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும் இறுதியில் நாட்டுப் பண்ணும் பாடினார்கள். தப்பித்தார்கள்.
* மதிய உணவுடன் விழா இனிதே முடிவடைந்தது. விழா மிக ரிச்சாக இருந்தது. ரீச் ஃபௌண்டேஷனுக்கும் விழாவுக்கு உழைத்தவர்களுக்கும் பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
* விருது பெற்றவர்கள் ஒவ்வொருவரைப் பற்றியும் சிறிய ஆவணப் படம் ஒன்று தயாரிக்கப்பட்டிருந்தது. வழக்கம்போல ஆடியோ வரவில்லை. போராடிப் பார்த்தார்கள். ஆடியோ முடியாது என்று சொல்லிவிட்டது. ஒவ்வொரு விழாவிலும் இதே போன்ற பிரச்சினைகளைப் பார்க்கிறேன். இதை எத்தனை சரி செய்துகொண்டு போனாலும் விழாவில் கழுத்தறுத்துவிடுகிறது. இந்த ஆவணப் படங்கள் திரையிடலும் நடைபெற்றிருந்தால் விழாவின் தரம் இன்னும் ஒரு படி மேலே போயிருக்கும். இப்போதும் தாழ்வில்லை என்பது வேறு விஷயம். இந்த ஆவணப் படங்கள் ரீச் ஃபௌண்டேஷனின் தளத்தில் வெளியிடப்படும் என்று சொல்லி இருக்கிறார்கள். விருப்பப்படுபவர்கள் பார்த்துக்கொள்ளலாம்.
* ரீச் ஃபௌண்டேஷனின் சார்பில் முன்பு யாளி ஒன்று இதழ் வந்துகொண்டிருந்தது. இப்போது அது வருவதில்லை என நினைக்கிறேன்.
* மனதுக்கு நிறைவான விழா. ரீச் ஃபௌண்டேஷனின் வலைப்பக்கம்: http://conserveheritage.org/
Thanks haran prasanna for the nice write uo