தொலைக்காட்சி சானல்களுக்கு தனித்தனி விலை

ஒவ்வொரு சானல்களுக்கும் தனித்தனி விலை நிர்ணயம் என்பதால் என்ன ஆகும் என்று யோசிக்கமுடியவில்லை. முதலில் கேபிள் வழியே பார்த்தபோது மாதமே 100 ரூ வரைதான் ஆனது. டிஷ் வழி பார்க்க ஆரம்பித்தபோது 170 ரூ முதல் 250 வரை ஆனது. இப்போது இப்படி ஒவ்வொரு சானலுக்கும் ஒரு தனி விலை என்றால் பல சானல்களைக் கை கழுவவேண்டியதுதான். ஏன் இந்த விதி என்பதற்கு ட்ராய் என்ன சொல்கிறது? இப்படிச் செய்வதன் மூலம் போலியான பரப்புரைகளைக் குறைக்கலாம் என்றா? எந்த சானல்களை எடுப்பது, விடுப்பது என்று குழப்பம் நிச்சயம் வாடிக்கையாளருக்கு ஏற்படும்.

நான் வீட்டில் டிவியை இப்படியாகப் பார்க்கிறேன். ஆங்கில செய்தி சானல்கள், தமிழ்ச் செய்தி சானல்கள் எப்போதாவது, மீதி நேரம் பெரும்பாலும் எப்போதும் ஓடிக்கொண்டிருப்பது குழந்தைகளுக்கான சானல். கிரிக்கெட் 50 ஓவர் மேட்ச் இருந்தால் அதைப் பார்ப்பேன். ஆதித்யா மற்றும் சிரிப்பொலி அடிக்கடி கொஞ்சம் நேரம் பார்ப்பேன். மற்றபடி டிவியில் எந்த ஒரு நிகழ்ச்சியையும் ஒருநிமிடம் கூடப் பார்ப்பது இல்லை. ஆனால் இதையே அடிப்படையாக வைத்து எல்லாத் தமிழ் சானல்களையும் சப்ஸ்க்ரைப் செய்யாமல் இருந்துவிட முடியுமா என்று தெரியவில்லை. ஆனால் எல்லா மலையாள சானல்களும் தேவை! அப்படியானால் என்ன செய்வது?

சன் டிவிக்குத் தனியே 25 ரூ என்பதெல்லாம் தண்டம். விஜய் டிவியின் சானலுக்கு 25 ரூ என்பது இன்னொரு தண்டம். சன் டிவியின் சான்லகளில் எதாவது தேவை என்றால் சன் நெக்ஸ்ட்டில் பார்த்துக்கொள்ளலாம். விஜய் டிவியில் எதுவுமே பார்ப்பது இல்லை என்பதால் அது தேவையில்லை.

ஒருவழியாகத் தொகுத்தால்:

* குழந்தைகளுக்கான சானல்கள் எதாவது இரண்டு.
* ஆதித்யா மற்றும் சிரிப்பொலி
* புதிய தலைமுறை, தந்தி டிவி, நியூஸ் 18, நியூஸ் 7, பாலிமர் செய்திகள்.
* என் டி டிவி, டைம்ஸ் நௌ, ரிபப்ளிக், இண்டியா டுடே.
* ஏஸியா நெட், சூர்யா, ஏஸியாநெட் முவீஸ், ஜனம் டிவி.

தலைல துண்டுதான் போடணும் போலயே.

Share

Comments Closed