கவிதை

தூக்கம் வராத கண்களின் வழியே
மலைகள் பெருகின
தாவரங்கள் செழித்தன
என்றோ எங்கோ பார்த்த முகமொன்றின்
துல்லிய நினைவில்
அப்பெண் சிரித்தாள்
நம்பிக்கைக்கும் துரோகத்துக்குமான
ஒத்திசைவுப் புள்ளியில் நின்றபடி
எல்லாவற்றையும் கலைத்துப்போடும்
அவனும் நகைத்து நின்றான்
ஒரு செல் உயிரினம் ஒன்று
குரங்காகி மனிதனாகியது
யுகங்கள் கடந்தோடின
ஏதோ ஒரு மழைக்காலம் பொய்த்தது
கடும் வெய்யிலில்
கருகி நின்றன வாழை மரங்கள்
உயிர்த்தெழும் ஒரு விதையொன்றில்
மெல்லக் கண்மூட
உலகம் இருண்டது.

Share

Comments Closed