இரண்டு கவிதைகள்

கனவுகளின் விளையாட்டு

கனவுகளின் சிக்கலான வரைபடம் ஒன்றை
நானே வரைந்து
உள்ளே சென்றேன்
வரைபடத்தின் புள்ளிகளில் சிக்கித்
தொலைந்து போகுமாறு
விதித்துக்கொண்டிருந்தேன்.
சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது.
சிறிது நேரத்தில்
வெளியேறத் தெரியாமல்
விக்கித்து நின்றபோது
எதிரே தோன்றியவன் சொன்னான்,
இன்னொரு கனவிலிருந்து வந்தவன் என.
தன் கனவுக்குள் அழைத்துச் சென்றான்.
என் கனவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டான்.
இரண்டு கனவுகளில்
எது யாருடையது என்ற குழப்பம் வந்த பொழுதில்
அவன் கனவுகளிலிருந்து வெளியேறியபோது
தூங்கிக் கொண்டிருந்த நான்
கண்விழிந்த்துச் சிரித்தான்.

2

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

Comments Closed