தர்ம பிரபு – இயக்குநருக்கு ஸ்தோத்திரம்

மிக மோசமான, அடிப்படையற்ற ஒரு படம். லாஜிக்கே இல்லாமல் இப்படிப் படம் எடுப்பது தமிழில் புதிதல்ல. ஆனால் இதில் ஒரு புதிய சாதனை செய்திருக்கிறார்கள். ஒரு படம் முழுக்க ஹிந்து மதத்தை, ஹிந்து மதத்தின் கடவுளர்களைக் கேவலப்படுத்தி இருக்கிறார்கள். தமிழில் இதுபோன்ற சாதனை இதுவரை வந்ததில்லை. கூடவே ஈவெராவையும் (இன்னும் 3 தலைவர்களையும்) கிறித்துவ மதத்தையும் தெரஸாவையும் புகழ்ந்திருக்கிறார்கள். தொலைக்காட்சித் தொடர்களையும்விட மோசமான உருவாக்கத்தில் வந்திருக்கும் இப்படத்தைப் பார்ப்பதே ஒரு தியாகம்தான். இந்தப் படத்தைப் பற்றி எழுத ஒரு அவசியமுல்லை. ஆனால் தமிழ்த் திரையுலகம் எந்த அளவுக்கு ஹிந்து மத வெறுப்பையும் அதன் ஒட்டாக கிறித்துவத்தைத் தூக்கிப் பிடிக்கிறது என்பதையும் பதிவு செய்து வைத்துக்கொள்ளவேண்டும் என்பதற்காகவே பார்த்தேன், எழுதுகிறேன்.

இந்தப் படத்தின் இயக்குநர் முத்துக்குமரன். இவருக்குப் படம் எடுக்கத் தெரியுமா என்பதையும் தாண்டி, இவர் ஒரு நல்ல படத்தையாவது பார்த்திருப்பாரா என்பதே சந்தேகமாக இருக்கிறது. இதில் பெயர் மட்டும் முத்துக்குமரன். உண்மையில் இவர் ஹிந்து மதத்துக்குச் செய்யும் பெரிய சேவை ஒன்று இருக்குமானால், தன் பெயரை உடனே மாற்றிக்கொண்டு விடுவது. திரையுலகத்துக்குச் செய்யும் சேவை என்று ஒன்று இருக்குமானால், இனி படங்களையே எடுக்காமல் இருப்பது. இப்படத்தில் கதையே இல்லை என்பதோடு, திரைக்கதையும் இல்லை, லாஜிக்கும் இல்லை, ஒன்றுமே இல்லை. ஆனால் பிரசாரம் மட்டும் பலமாக இருக்கிறது.

தமிழ்த் திரையுலகம் மிகப்பெரிய மாயவலையில் சிக்கி இருக்கிறது என்பதை எத்தனையோ முறை எத்தனையோ பேர் சொல்லி இருக்கிறார்கள். அதன் இன்னொரு நிரூபணம் இத்திரைப்படம்.

* படத்தின் முதல்  காட்சியே இரட்டை அர்த்த வசனத்தில் தொடங்குகிறது. பேசுபவர் யமன்.

* யமனின் மகனாக வரும் யோகி பாபு புதிய யமனாகிறார். இவர் வாயைத் திறந்தாலே யாரையாவது எதற்காகவாவது திட்டிக்கொண்டே இருக்கிறார்.

* நடனம் என்பதை சிவன் கொச்சைப்படுத்திப் பேசி, முருகன் பிள்ளையாருடன் குத்தாட்டம் போடுகிறார்.

* சிவன் போடா வெண்ண என்றெல்லாம் வசனம் பேசுகிறார்.

* நரகத்துக்கு அழைத்துச் செல்ல கருப்பான மனிதர்கள் அரக்கர்கள் வருகிறார்கள். அவர்கள் அரக்கர்கள் என்றழைக்கப்படுகிறார்கள். ஆனால் சொர்க்கத்துக்குச் செல்ல வெண்ணிற தேவதைகள், கிறித்துவ பாணியில் இறக்கைகளுடன் வருகிறார்கள். அதாவது கெட்டவர்கள் என்றால் கருப்பாக ஹிந்து அடையாளங்களுடன் இருப்பார்கள். உங்களை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் நல்லவர்கள் எல்லாம் கிறித்துவ அடையாளங்களுடன் வெள்ளையாக இருப்பார்கள்.

* பாம்புக்குப் பால் ஊற்றினால் பாம்புக் குட்டிகள் செத்துப் போகும் என்று படத்தில் சொல்கிறார்கள். யார் சொன்னது? பாம்பே சொன்னது!

* யானையைப் பிச்சை எடுக்க வைத்தால் யானை பாகனைக் கொல்லும். ஆனால் யமன் அந்த யானையை மீண்டும் திருவண்ணாமலைக்கு அனுப்புகிறார். திருவண்ணாமலைக்குப் போய் அந்த யானை என்ன செய்யும்? இவ்வளவுதான் இயக்குநர் முத்துக்குமரனின் மூளை!

* யமன் கிறித்துவ தேவாலயத்துக்குள் போய் படுத்து உறங்குகிறார். ஏசுவை யமனே ஆஹா ஓஹோ என்று புகழ்கிறார். ஏசுவிடம் மன்னிப்பு கேட்கச் சொல்கிறார் சித்திரகுப்தனை!

* இரண்டு குழந்தைகள் கொல்லப்பட்டு யமலோகம் வருகிறார்கள். அவர்களை வளர்க்க யமன் அவர்களை யாரிடம் ஒப்படைக்கிறார்? தெரஸாவிடம்! தெரஸா புகழ் வேறு உண்டு. மறந்தும் ஹிந்து சன்னியாசிகள் அனாதைக் குழந்தைகளை வளர்ப்பதாகக் காண்பிக்கமாட்டார்கள். இப்படியான பொதுப்புத்தியை வளர்ப்பதே இயக்குநர் முத்துக்குமரன்களின் நோக்கம்..

* சமூகத்தில் நடக்கும் விஷயங்களையெல்லாம் பேப்பர் கட்டிங் எடுத்து வைத்துக்கொண்டு படமெடுத்திருக்கிறார் இயக்குநர் முத்துக்குமரன். அதில் ஒன்று, ஸ்கூட்டரில் செல்லும் தம்பதிகளை ஒரு போலிஸ் காலால் உதைத்துத் தள்ள, அதில் இறந்து போகும் ஒரு பெண்ணைப் பற்றியது. அதில் அப்படி உதைத்துத் தள்ளும் போலிஸ் நெற்றி நிறைய பட்டை போட்டு சந்தனம் குங்குமம் வைத்துக்கொண்டு, ஐயப்பனுக்கு மாலை போட்டுக்கொண்ட பக்தர்! ஐயப்ப பக்தர்களைக் கேவலப்படுத்தும் காட்சி அடுத்து அரங்கேறுகிறது.

* ஹிந்துக் கடவுள்கள் என்றால், ஹிந்துக்களின் இயற்கையோடு ஒட்டிய வழிபாடு முதற்கொண்டு கிண்டல் செய்து பகுத்தறிவு பேசுவது, கிறித்துவம் என்று வந்துவிட்டால் புகழ்வது. இதற்கு எதற்கு ஒரு படம்? பேசாமல் ‘எழுப்புதல் கூட்டம்’ ஒன்றில் பேசி வீடியோவாக்கி வெளியிட்டிருக்கலாம்.

* சித்திரகுப்தன் நெற்றியில் பட்டை போட்டிருக்கிறார். அவர் மனிதனாக வரும்போது நாமம் போட்டிருக்கிறார். தெளிவாக பிராமணர் என்று காண்பிக்கிறார்கள். ஏனென்று பார்த்தால் அடுத்த காட்சியிலேயே யமன் ஈவெராவைப் புகழ்கிறார். இந்த பிராமணர் அதை மறுக்கிறார். ஆம், மறுக்கிறார், மரியாதையுடன் மறுக்கிறார், திட்டவில்லை! யமனின் சந்தேகத்தைப் போக்க அதே சித்திரகுப்தன் ஈவெராவின் பெருமைகளை அவிழ்த்துவிடுகிறார். இப்படிப்பட்டவர்களை தன் தந்தையான முதலாம் யமன் ஏன் கொல்கிறார் என்று இந்தப் புதிய யமனே நொந்துகொள்கிறார்.

* அடுத்து அம்பேத்கரைப் பாராட்டுகிறார்கள். அடுத்து சுபாஷ் சந்திர போஸின் சிலையைப் பார்த்துப் புகழ்கிறார்கள். எத்தனை விவரம் பாருங்கள். சுபாஷ் சந்திர போஸைப் புகழும்போது ஒரு வசனம், இவர்தானே உண்மையான தேசத் தந்தை என்று. அதில் உண்மையான என்ற வசனம் ம்யூட் செய்யப்பட்டிருக்கிறது.

* அடுத்து காந்தி சிலையைப் பார்த்து ஜஸ்ட் ஒரு வார்த்தை பாராட்டிச் சொல்லிவிட்டுப் போகிறார்கள்.

* பாஸ்கி என்றொரு நடிகர், சோ-வாக நடிக்கிறார். பாஸ்கிக்கு மண்டைக்கு வெளியே மட்டுமில்லை, உள்ளேயும் ஒன்றும் கிடையாது என்று தெரிகிறது. இவர் இத்தனை நாள் சொல்லிக்கொண்டிருந்தவை எல்லாமே பொய்தானோ என்றும் தோன்றுகிறது. இத்தனைக்கும் இவர் திரைப்படங்களின் விமர்சகர் வேறு. ஒரு படத்தில் யாரை எப்படிக் காண்பிக்கிறார்கள், அதில் நாம் ஏன் நடிக்கிறோம் என்கிற அடிப்படை அறிவுகூட இவருக்கு இல்லை.

* மாமா வேலை பார்த்தே சோ அரசியல் பணி ஆற்றினார் என்றே படத்தில் காட்டுகிறார்கள். தன் வாழ்நாள் முழுக்க திராவிட வெறி அரசியலுக்கு எதிராகப் பேசியவருக்கான மரியாதை இவ்வளவுதான். இதை பாஸ்கியும் அப்படியே நடித்திருக்கிறார் என்பது நமக்குச் சொல்லும் செய்திகள் ஏராளம். இங்கே எல்லாவற்றையும் நிர்ணயிப்பது வாய்ப்பரசியல்தான். உண்மையோ தர்மமோ அல்ல.

* யமன் மாமா வேலை பார்க்கிறார் என்றெல்லாம் வசனம் வருகிறது.

* இதற்கிடையில் இயக்குநர் முத்துக்குமரனுக்கு அரசியல் பகடி செய்ய ஆசையும் வருகிறது. ‘ஒருத்தனுக்கு எந்திரிச்சே நிக்க முடியலையாம், அவனுக்கு ஒம்போது பொண்டாட்டி  கேக்குதாம்’ என்ற வசனம் எனக்கு மட்டும் கேட்டது.

* எவ்வித அறிவும் இன்றி அரசியல் பகடியை எடுப்பது என்பது நம் தமிழ் இயக்குநர்களுக்கே வந்த கலை. மேம்போக்கான வசனம் ஒன்றை ஒற்றைத் தெறிப்பில் சொல்லிவிட்டு, அசப்பில் ஒரு அரசியல்வாதியைப் போன்ற ஒருவரைக் காட்டிவிட்டு, என்னவோ பகடித் திரைப்பட வரிசையில் பெரிய சாதனை செய்துவிட்டது போல இருப்பதே நம் இயக்குநர்களின் பணி. சத்யராஜின் ‘மகா நடிகன்’ தொடங்கி இன்று வரை இதுதான் இவர்களுக்குப் பழக்கம். மிக அரிதாக சில படங்கள் (அமைதிப்படை, புதுப்பேட்டை போன்றவை) வரும். இந்தப் படத்தில் நம் இயக்குநருக்கு எதுவுமே வரவில்லை என்பதால், இந்தப் பகடியும் வரவில்லை என்பதைத் தனியே சொல்லவேண்டியதில்லை.

* ஓ பி எஸ் வருகிறார். மோடியைப் பெயர் சொல்லாமல், அதுவும் ஒரு பொய்ச் செய்தியைச் சொல்லிக் கிண்டல் செய்கிறார்கள். செல்லூர் ராஜுவைக் கிண்டல் செய்கிறார்கள். தமிழக அதிமுக அமைச்சர்களைக் கிண்டல் செய்கிறார்கள். ஒன்றிலும் ஒரு விஷயஞானமும் இல்லை. ஆனால் மிக விவரமாக இயக்குநர் ஜெயலலிதாவும் கருணாநிதியும் சொர்க்கத்தில் இருப்பதாகச் சொல்லி வைக்கிறார்!

* அடுத்து ஆணவக் கொலைக்குள் போகிறார் இயக்குநர்.

* இறுதியில் ஈவெரா, காந்தி, அம்பேத்கர், சுபாஷ் சந்திர போஸ் என நால்வரையும் யமன் மீண்டும் உயிர்ப்பித்து அனுப்பும்போது, என்னடா இது தமிழ்நாட்டுக்கு மட்டும் இத்தனை பெரிய தண்டனை என்கிற எண்ணம் நமக்கு எழுகிறது.

இத்தனையிலும் நாம் கவனிக்கவேண்டியது, இத்தனை ஹிந்துக் கடவுள்கள் கிண்டல் செய்யப்பட்டபோதும் ஒரே ஒரு கிறித்துவக் கடவுள் கொண்டாடப்பட்டிருப்பதையும், மறந்தும் இஸ்லாம் என்கிற ஒரு வார்த்தைகூடப் படத்தில் வரவில்லை என்பதையுமே. தமிழில் யமனைப் பற்றிய கேவலமான முதல் படம் இதுதான் என்றில்லை. யமனுக்கு யமன் தொடங்கி லக்கிமேன் வரை பல படங்கள். அவை அனைத்திலும் இயக்குநர்களின் முட்டாள்தனம் மட்டுமே வெளிப்பட்டது. யமன் குத்தாட்டத்தை ரசிப்பதாகக் காட்சிகள் வைப்பார்கள். யமனுக்கு மூளையே கிடையாது, முட்டாள் என்று காண்பிப்பார்கள். யமனை நாடகத்தின் ஒரு நகைச்சுவை நடிகரைப் போலக் காண்பிப்பார்கள். இந்தப் படம் அதே அடிப்படையில் ஹிந்து வெறுப்பையும் கிறித்துவ ஈவெரா பிரசாரத்தையும் இணைத்து அடுத்த தளத்துக்குச் சென்றிருக்கிறது. முட்டாள்கள் இயக்குநரோ பாஸ்கியோ யோகி பாபுவோ அல்ல.

நன்றி: ஒரே இந்தியா

Share

Comments Closed