சாவர்க்கரின் ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’

சாவர்க்கரைப் போல தமிழ்நாட்டில் மிகக் குறைவாக மதிப்பிடப்பட்ட, வேண்டுமென்றே மட்டம்தட்டிச் சித்திரிக்கப்பட்ட வேறொரு தலைவர் இருக்கமுடியாது. எந்த அளவுக்கென்றால், கருணாநிதியைத் தவிர வேறு எதையுமே அறிந்துகொள்ளாத திமுகவினர் கூட சர்வசாதாரணமாக சாவர்க்கரை பிரிட்டிஷாரின் கால் நக்கிப் பிழைத்தவர் என்றும், பிரிட்டிஷாரிடம் மன்னிப்புக் கேட்டவர் என்றும் சொல்லும் அளவுக்கு. உண்மையில் எதையும் தீவிரமாக அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் அறிந்துகொள்ளும் நோக்கற்றவர்களின் செயலே, இந்த மன்னிப்பு என்கிற வார்த்தையை மட்டும் கொண்டு சாவர்க்கரை அணுகுவது. சாவர்க்கரின் வாழ்க்கையை அணுகிப் பார்த்தால் தெரியும், இந்தியாவின் மிகச் சிறந்த தேச பக்தர்களில், தீவிரமான சுதந்திரப் போராட்ட வீரர்களில் சாவர்க்கர் எத்தனை முக்கியமானவர் என்று.

அவரது வாழ்க்கை முழுக்கவே போராட்டம் நிறைந்தது. எந்த நிலையிலும் தன்னம்பிக்கையைக் கைவிடாமல், ‘இதெல்லாம் எதற்காக’ என்ற எதிர்மறைச் சிந்தனைக்குத் தன்னை இழந்துவிடாமல், பாரத அன்னைக்கு சுதந்திர மலரை அணிவிப்பது ஒன்றே குறிக்கோள் என்று வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரால் இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட ஒரே தலைவர். அதாவது 50 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படுகிறது. தன் மனைவியை, குடும்பத்தைப் பிரிந்து அந்தமான் சிறையில் வாடியவர். இவர் மட்டுமல்ல, இவரது சகோதரர்களும் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு சிறை சென்றார்கள்.

மெர்சிலி தீவில் அவர் தப்பிக்க முயன்றதெல்லாம் நம்ப முடியாத அளவுக்கான சாகசம். அந்தமான் சிறைத் தண்டனை குறித்து அவர் எழுதிய புத்தகம் ‘Transportation for life’ தற்போது தமிழில் வெளியாகி இருக்கிறது. (மொழிபெயர்ப்பு: எஸ்.ஜி. சூர்யா, கிழக்கு பதிப்பக வெளியீடு, விலை 650 ரூ). இந்தப் புத்தகம் 1927ல் மராட்டியில் முதலில் வெளியானது. இது தொடராக வெளிவரவே பல இன்னல்களைச் சந்திக்கவேண்டி இருந்தது. பெரும் போராட்டத்துக்குப் பிறகே ஆங்கிலத்தில் வெளியானது. 90 வருடங்கள் கழித்து முழுமையாகத் தமிழில் வெளியாகிறது. இவரது நண்பரான வ.வெ.சு. ஐயர் இதன் தமிழ் மொழிபெயர்ப்பை அந்தக் காலகட்டங்களில் வெளியிட்டதாகத் தெரிகிறது. முழுமையாக வெளியிட்டாரா, சில பகுதிகளை மட்டும் வெளியிட்டாரா என்பது தெரியவில்லை.

சாவர்க்கரின் வாழ்க்கை அல்ல, அவரது புத்தகங்கள் கூட இப்படித்தான் வெளியாகின. முதல் இந்திய சுதந்திரப் போர் என்று முதன்முதலில் சிப்பாய்க் கலகத்தை விளித்தவர் இவரே. அந்தப் புத்தகம் மிகப் பெரிய சவால்களை எதிர்கொண்டே வெளியானது. அவரது கையெழுத்துப் பிரதி இந்தியாவுக்கு வந்துவிடக்கூடாது என்று பிரிட்டிஷ் அரசு அத்தனை முயன்றது. நாடு நாடாகச் சென்ற அந்தப் பிரதி, மொழிபெயர்க்கப்பட்டு புத்தகமாக வெளி வந்ததை ஒரு சாகசப் பயணம் என்றே சொல்லலாம். (தமிழில் எரிமலை என்கிற தலைப்பில் அல்லயன்ஸ் வெளியீடாகக் கிடைக்கிறது.)

இப்படி வாழ்க்கை முழுக்க எதிர்ப்புகளிடையேயும் போராட்டங்களிடையேயும் வாழ்ந்தவர் சாவர்க்கர். பிரிட்டிஷாரிடம் மன்னிப்பை அவர் சிறைக்குச் சென்ற உடனே கேட்கவில்லை. 12 ஆண்டுகள் கடும் சிறைத் தண்டனை. எப்படிப்பட்ட சிறைத் தண்டனை? ‘அந்தமான் சிறை அனுபவங்கள்’ புத்தகம் அதனை விவரிக்கிறது. ஆறு மாதங்கள் கைகளிலும் கால்களிலும் சங்கிலி மாட்டப்பட்டு கொடுமைப்படுத்தப்படுகிறார். செக்கிழுக்க வைக்கப்படுகிறார். பாரிஸ்டர் படிப்பு படித்தவர் கயிறு திரிக்க வைக்கப்படுகிறார். தனிமைச் சிறையில் அடைக்கப்படுகிறார். தூக்குமேடைக்கு எதிரே இவருக்கு அறை தரப்படுகிறது. தினம் தினம் தூக்குமேடைக்கு அழைத்துச் செல்லப்படும் கைதிகளின் துன்பம் இவருக்குத் தரும் பயம் மற்றும் வேதனையின் மூலம் இவரது மனச்சிதைவைத் துரிதப்படுத்த பிரிட்டிஷ் அரசு முயல்கிறது. தினம் தினம் யாரோ ஒரு கைதி தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்ள முயல்கிறார் அல்லது தூக்குப் போட்டுத் தற்கொலை செய்துகொள்கிறார். சில கைதிகளுக்குத் தனிமைச் சிறையின் தாள முடியாத துன்பம் மனநலச் சிதைவைக் கொண்டு வருகிறது. இத்தனைக்கும் மத்தியில் தன் வாழ்க்கை குறித்த சிந்தனைகளுடன் நிச்சயமற்ற எதிர்காலத்தையும் இந்தியாவில் இருக்கும் தன் குடும்பத்தையும் எண்ணி சாவர்க்கர் தவிக்கிறார். ஏன் இந்த வாழ்க்கை என்கிற எண்ணம் தலையெடுக்கிறது. ஆனால் மிகப் பெரிய போராட்டத்துடன் அதிலிருந்து மீள்கிறார். தற்கொலை என்பது தீர்வல்ல என்று அனைவரிடம் விவரிக்கிறார்.

சிறையில் இருக்கும் ஒவ்வொருவரின் எண்ணமும் எப்பாடுபட்டாவது சிறையில் இருந்து தப்பிப்பது என்பதை நோக்கியே இருக்கவேண்டும் என்று மிகத் தீர்மானமாகச் சொல்கிறார் சாவர்க்கர். ஏன்? வெளியில் சென்று, தங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் தேச சேவை செய்யலாம் என்பதே அவரது எண்ணம்.

இந்தப் புத்தகத்தில் என்னை அசர வைத்த ஒரு விஷயம். சாவர்க்கரின் எந்த ஒரு எண்ணமும் எல்லாக் காலத்திலும் தேச சேவை என்ற ஒன்றை நோக்கியே உள்ளது. பின்பு சாவர்க்கர் கேட்டதாகச் சொல்லப்படும் மன்னிப்பும் கூட இதன் பின்னணியிலேயே உள்ளது. விடுதலை கிடைத்து வீட்டுக்கு வந்து சுக வாழ்க்கை வாழவில்லை சாவர்க்கர். நிபந்தனையின் பேரில் வெளிவரும் சாவர்க்கர், இன்னும் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பிரிட்டிஷ் அரசின் கண்காணிப்பில் (ரத்னகிரிக்குள் மட்டும் நடமாடும் அனுமதியோடு) வைக்கப்படுகிறார். பின்னரும் சுதந்திரப் போராட்டத்துக்குத் தேவையான, தன்னால் இயன்ற அனைத்து வேலைகளையும் செய்கிறார். எந்த நேரத்திலும் பிரிட்டிஷ் அரசு தன்னைக் கைது செய்து மீண்டும் அந்தமான் இருட்டுச் சிறைக்குள் தள்ளும் என்று தெரிந்திருந்தும் இதனைச் செய்கிறார்.

அந்தமான் சிறையில் இவருடன் அடைக்கப்பட்டிருக்கும் பல தேச பக்தர்கள் பற்றிய குறிப்புகளை எல்லாம் நினைவில் வைத்திருந்து இப்புத்தகத்தில் பதிவு செய்கிறார். சாவர்க்கரின் நினைவாற்றலும் நன்றி உணர்ச்சியும் அபாரமானவை. இப்புத்தகத்தின் ஒவ்வொரு வரியிலும் அதனை உணரலாம். அதேபோல் சாவர்க்கரின் வாதத்திறமை உலகப் பிரசித்தி பெற்றது. இந்த நூல் முழுக்க சாவர்க்கர் தனது கருத்துகளை அதன் பின்னணியோடும் தர்க்க ஆதாரத்தோடும் மிகத் தெளிவாக முன்வைக்கிறார். அதுமட்டுமல்ல, தன் கருத்துக்கான எதிர்க்கருத்தைச் சொல்லி அது ஏன் சரியாக இருக்கமுடியாது என்பதை விவரிக்கிறார். மகாத்மா காந்தி ஜி கொலை வழக்கில் அவர் தந்த எழுத்துபூர்வமான சாட்சியத்திலும் இதே போன்ற விவரணைகளைக் காணலாம். எந்தக் காலத்திலும் அவர் தன் கருத்துகளை இப்படியான தர்க்க நியாயம் இல்லாமல் உதிர்த்ததே இல்லை.

அந்தமான் சிறைக்குச் செல்லும்போது சாவர்க்கரின் முன்பு பல சவால்கள் இருந்தன. முதலில் தன்னை மீட்டுக்கொள்வது, பின்பு அங்கிருக்கும் கைதிகளுக்கு நம்பிக்கை ஊட்டுவது, கைதிகளின் தற்கொலைகளை நிறுத்துவது, ஹிந்துக் கைதிகள் முஸ்லிம் கைதிகளால் நடத்தப்படும் விதத்தை மாற்றுவது, பிரிட்டிஷ் அரசின் சூழ்ச்சிகளை முறியடிப்பது, அங்கிருக்கும் கைதிகளுக்கு எழுத்தறிவிப்பது, அந்தமான் தீவில் சுதந்திரக் கனலைப் பரப்புவது, கட்டாயப்படுத்தி அல்லது வேறு வழியின்றி அல்லது ஆசை காட்டி மதமாற்றம் செய்யப்பட்ட ஹிந்துக் கைதிகளை தாய்மதம் திரும்ப வைப்பது, ஹிந்துக் கைதிகளிடையே அநியாயமாகப் புகுந்துவிட்ட சாதியக் கொடுமைகளை அகற்றுவது, அந்தமான் சிறையின் நிலையை இந்தியாவில் இருக்கும் அரசுக்கும் காங்கிரஸ் தலைவர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் தெரிவித்து சிறையின் நிலையை முன்னேற்ற உதவுவது, இந்தியாவில் நடக்கும் சுதந்திரப் போராட்டங்களுக்குத் தன்னால் இயன்ற கருத்துகளைச் சொல்வது, எப்படியாவது இந்தச் சிறையில் இருந்து தப்பித்து இந்தியா சென்று இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் போராடுவது – இத்தனை எண்ணங்களுடன் அலைக்கழிகிறார் சாவர்க்கர்.

உங்களால் நம்பமுடிகிறதா? இவை அனைத்தையும் செய்து முடிக்கிறார். ஒருவர் ஏன் தலைவர் என்று கொண்டாடப்படவேண்டும் என்பதற்கான காரணங்கள் இவற்றில் உள்ளன. இந்தப் புத்தகம் ஒரு பொக்கிஷம். இதனைத் தமிழில் கொண்டு வந்த ஒவ்வொருவரும், அதற்கு உதவிய ஒவ்வொருவரும் பாராட்டுக்குரியவர்கள். பல ஆண்டுகள் நீடித்து நிற்கப் போகும் ஆவணம் இது.

அந்தமான் சிறையில் சாவர்க்கர் அடைக்கப்பட்டபோது பிரிட்டிஷாரின் ஒரே நோக்கம், எக்காரணம் கொண்டும் சாவர்க்கர் உயிருடன் இந்தியா மீண்டுவிடக்கூடாது என்பதாகவே இருந்தது. அஹிம்சைப் போராட்டங்களை எப்படியும் எதிர்கொண்டுவிடலாம் என்று நம்பிய பிரிட்டிஷ் அரசு, புரட்சிப் போராட்டத்தை எதிர்கொள்ள அஞ்சியது. அதை ஒடுக்குவதே ஒரே வழி என்று புரிந்துகொண்டது. அதுவும் வெறும் வாய் வார்த்தை பேசி அரசை மிரட்ட மட்டுமே செய்பவர் அல்ல சாவர்க்கர், செயலையும் நிகழ்த்திக் காட்டுபவர் என்பது புரிந்தபோது, அவரை இந்தியாவுடனான அனைத்துத் தொடர்புகளில் இருந்தும் விலக்கி வைப்பது நல்லது என்ற முடிவுக்கு வருகிறது.

ஆனால் அந்தமான் சிறை அனுபவம் சாவர்க்கரை அவரளவில் பெரிய தலைவராக உயர்த்துகிறது. (அதேசமயம் மக்கள் தலைவர் என்னும் சிந்தனையிலிருந்து முற்றிலுமாக விலகவும் செய்துவிட்டது என்பது சோகமான வரலாற்று நிகழ்வு.) பிரிட்டிஷ் அதிகாரிகள்கூட அந்தமானுக்கு வந்தால் சாவர்க்கரைச் சந்திக்காமல் செல்வதில்லை. எல்லோருடனும் உரையாடத் தயாராக இருக்கும் சாவர்க்கர், அனைவரிடமும் இந்திய சுதந்திரத்தைப் பற்றி விவாதிக்கிறார். சாவர்க்கரின் பரந்துபட்ட அறிவும், இலக்கியப் பரிட்சயமும், உலக நாடுகள் பற்றிய வரலாற்று ஞானமும், அவரால் எத்தகைய எதிர்க்கேள்விகளையும் எதிர்கொள்ள வைக்கின்றன. இந்த நூலில் அவை அனைத்தும் மிக விரிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன.

மதமாற்றம் செய்யப்படும் ஹிந்துக் கைதிகள் பற்றிப் பேசும்போது மிகத் தெளிவாக தன் கருத்துகளைப் பதிவு செய்கிறார். தானாக மனம் உணர்ந்து மதம் மாறுபவர்களைப் பற்றி சாவர்க்கருக்கு எந்தப் புகாரும் இல்லை. அது அவர்களது சுதந்திரம். ஆனால், கைதிகள் முஸ்லீமாக மதம் மாறினால் அவர்களுக்குச் சிறையில் சில சுதந்திரங்கள் தரப்படும், ஜமேதாராகலாம் என்பன போன்ற சலுகைகள் தரப்படுகின்றன. சிறையில் படும் கஷ்டங்கள் தாங்காமல் பலர் மதம் மாறுகிறார்கள். இது ஒரு பக்கம். இன்னொரு பக்கம் ஹிந்துக்களிடையே உள்ள சாதி வேற்றுமை மற்றும் சில மூட நம்பிக்கை. ஒருவன் ஒரு தடவை முஸ்லீம்களிடையே இருந்து உணவருந்தினாலும் அவன் ஹிந்து அல்ல என்று முடிவு செய்து அவனை விலக்கி வைக்கிறார்கள். இதனால் அவன் தாய் மதம் திரும்பும் வாய்ப்பே இல்லாமல் போய், முஸ்லீமாகவே ஆகிவிடுகிறான். அதுவும் ஒரு சக ஹிந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக இருந்தால் இது இன்னும் எந்த அளவுக்குப் போகும் என்று சொல்வதற்கில்லை. சாவர்க்கர் இதையெல்லாம் எதிர்க்கிறார். முஸ்லீம்களுடன் உணவருந்திய ஒருவருடன் இவரே அமர்ந்து உணவு உண்கிறார். பிறகு மெல்ல நான்கைந்து பேர் இவர்களுடன் சேர்ந்து உணவு உண்கிறார்கள். பிறகு வேறு வழியின்றி அனைவரும் சேர்ந்து உணவு உண்கிறார்கள். இப்படியாக ஒவ்வொரு செயலையும் தானே முன் நின்று செய்கிறார்.

முஸ்லிம் கைதிகள், குறிப்பாக பதான் – சிந்தி – பலூச்சி முஸ்லீம்கள் (தமிழகம் மகாராஷ்ட்ரம் போன்ற இடங்களில் இருந்து வந்த முஸ்லிம்கள் இத்தனை கொடூரமானவர்கள் அல்ல என்கிறார்) அடாவடி செய்யும்போது அதே போக்கில் ஹிந்துக் கைதிகளை அடாவடி செய்யத் தூண்டுகிறார். இதனால் சிறையில் பெரிய பிரச்சினைகள் எழுகின்றன. மேலதிகாரிகளின் விசாரணையின்போது எல்லாம் வெளிச்சத்துக்கு வர, இரு தரப்பு இந்த அடாவடிகளைச் செய்யக்கூடாது என்று முடிவாகிறது. இதை ஒரு போராட்ட வடிவமாகவே சிறையில் செய்கிறார் சாவர்க்கர். ஹிந்துக் கைதிகளின் உணவை வேண்டுமென்றே முஸ்லிம் கைதிகள் தொட்டுவிட்டு, அது தீட்டு என்பதால் ஹிந்துக் கைதிகள் உணவை உண்ணாமல் இருக்க, அந்த உணவையும் முஸ்லிம்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அதே பாணியை ஹிந்துக் கைதிகளை வைத்துச் செய்ய வைக்கிறார். வேறு வழியின்றி முஸ்லீம் கைதிகள் அமைதியாகிறார்கள். அதிகாலை நேரத்தில் தொழுகையால் வரும் பிரச்சினையையும் இப்படியே எதிர்கொள்கிறார். சங்கநாதம் எழுப்பச் சொல்லி ஹிந்துக் கைதிகளைத் தூண்டுகிறார். முதல் உலகப் போரின்போது கெய்சர் இஸ்லாமியராக மதம் மாறிவிட்டார் என்ற செய்தியை முஸ்லீம் கைதிகள் பரப்ப, இவர் பதிலுக்கு அவர் ஆர்யசமாஜி ஆகிவிட்டார் என்கிற செய்தியைப் பரப்பச் சொல்கிறார். உருதுவில் எழுதுவதே மேன்மையானது என்கிற எண்ணத்தை உடைத்து, ஹிந்தியில் எழுதச் சொல்கிறார். இவையெல்லாம் சிறைக்குள் அத்தனை இன்னல்களுக்குள் சாவர்க்கரால் செய்யப்பட்டவை என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

சிறையிலும் சிறைக்கு வெளியே அந்தமான் தீவிலும் தாய்மதம் திரும்புவதை ஒரு சடங்காகவே செய்ய ஆரம்பித்தார் சாவர்க்கர். இதனால் திணறிப் போன பிரிட்டிஷ் அரசு, சிறைக்குள் எந்த ஒரு மதத்தில் இருந்தும் இன்னொரு மதத்துக்கு மதம் மாற்றுவதைத் தடை செய்கிறது. இதுதான் சாவர்க்கர் எதிர்பார்த்ததும்கூட!

மதமாற்றம் என்பது ஒரு தனிமனிதரோடு முடியக்கூடியதல்ல, அடுத்தடுத்த தலைமுறைகளில் ஒரு மதத்துக்கான அடித்தளமாக மாறும் இயல்புடையது என்கிறார். குற்றவாளியாகவே இருந்தாலும் ஒருவர் ஹிந்து மதத்தில் தொடரவேண்டிய அவசியத்தை, அதன் அடுத்தடுத்த தலைமுறைகளை மனதில் வைத்துச் சொல்கிறார். இதற்காக உலக வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை முன்வைக்கிறார். நூல் முழுக்க இப்படித்தான், எதிர்காலத்தில் என்ன நடக்கும், அதற்கான உலக வரலாற்று ஆதாரங்கள் என்ன என்பதோடு நம் புராணங்களின் ஆதாரங்கள் என்று அடுக்கிக்கொண்டே போகிறார்.

சிறைக்குள் எழுத்தறிவிக்க சாவர்க்கர் எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பற்றிச் சொல்லவேண்டுமானால், எழுத்தறிவிப்பவன் இறைவன் என்றால் இப்படி எழுத்தறிவித்தவன் அதற்கு மேல் என்றே சொல்லவேண்டும். மூன்று ஆர் (Reading, wRiting, aRithmetic) என்பதை ஒருவன் எப்பாடுபட்டாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்பதில் குறியாக இருக்கிறார்.

தான் தொடர்ந்து எழுதவேண்டும் என்பதில் சாவர்க்கருக்கு இருந்த ஆர்வம் அளப்பரியது. சிறையின் சுவர்களையே காகிதமாக்கி, சிறையில் கிடைக்கும் ஒரு ஆணியை மறைத்து வைத்து அதிலேயே தன் கருத்துகளை எழுதுகிறார். புத்தகங்கள் பற்றிய குறிப்புகள், புதிய கவிதை என்று எழுதுகிறார். வேறு அறைக்கு மாற்றப்பட்டால், இந்த அறை மற்ற கைதிகளுக்கு ஒரு புத்தகமாகிறது. மாற்றப்பட்ட சிறையிலும் இப்படி வேறு ஒன்றை எழுதுகிறார்.

சிறைக் கைதிகளுக்குள்ளே ரகசிய முறையில் செய்திகளைப் பரிமாற சாவர்க்கர் செய்யும் விஷயங்கள் எல்லாம் கற்பனைக்குள் அடங்காதவை. code முறையில் பேசிக்கொள்வது, பானைத் துண்டுகளில் செய்திகளைப் பரப்புவது, கிடைக்கும் காகிதங்களில் எழுதி சுருட்டி எரிந்து பரப்புவது என்று என்னவெல்லாமோ செய்கிறார். கைதிகளையும் அதில் பங்கெடுக்க வைக்கிறார்.

முதல் உலகப் போரின்போது சிறைக் கைதிகளுக்கு அரசியல் அறிவைப் புகட்ட வாரம் தோறும் பிரசங்கம் செய்கிறார். அவர்களுடன் விவாதிக்கிறார். உலக அரசியல் அறிவில்லாமல் சுதந்திரப் போராட்டத்தை எதிர்கொள்ள முடியாது என்று விளக்குகிறார். அதே சமயம் ஒரு கனிவான ஆசிரியர் போல அவர்களுக்கு போதிக்கிறார். அவசரப்படுவதில்லை. மெல்ல மெல்ல சொல்லித் தருகிறார். இரண்டு நாடுகளுக்கு இடையேயான போர் என்பது, இரண்டு ராஜா சண்டை போட்டுக்கொள்வது போலத்தான் என்று யோசித்துக்கொண்டிருந்த கைதிகளுக்கு அரசியல் சொல்லித் தருகிறார். இதைத் தொடர்ந்து சிறையில் நூலகம் தொடங்குகிறார். தன் சகோதரர்கள் மூலம் புத்தகங்களைச் சிறைக்குக் கொண்டு வருகிறார். சிறையில் இருக்கும் பிரிட்டிஷ் அதிகாரிகள் இதை எதிர்த்தாலும், கிண்டலாகப் பேசினாலும், உயரதிகாரிகளின் ஆதரவைப் பெற்று, இதை வெற்றிகரமாகச் செய்து காண்பிக்கிறார் சாவர்க்கர்.

முதல் உலகப் போரின்போது கெய்சரின் படையினர் அந்தமான் சிறையைத் தகர்த்து சாவர்க்கரை மீட்கப் போகிறார்கள் என்கிற புரளி வருகிறது. அந்தமான் கடற்கரையில் கிடைக்கும் வெடிகுண்டு ஒன்றை வைத்து இந்த முடிவுக்கு வருகிறார்கள் பிரிட்டிஷ் சிறை அதிகாரிகள். இதையெல்லாம் நம்பவேண்டாம் என்று எத்தனையோ சொன்னாலும், சாவர்க்கரை பெரிய அளவில் கண்காணிக்கிறது பிரிட்டிஷ் அரசு.

காந்திஜியைப் பற்றிய இரண்டு அல்லது மூன்று குறிப்புகள் இந்த நூலில் உள்ளன. மகாத்மா என்றே குறிப்பிடுகிறார் சாவர்க்கர். ஆங்கில மொழிபெயர்ப்பில் இப்படி வருகிறதா அல்லது மராட்டியிலேயே இப்படித்தான் இருந்ததா என்பது தெரியவில்லை. மகாத்மா என்று குறிப்பிட்டாலும் காந்தியின் தவறான அகிம்சை போதனைப் புரிதல்களைக் கிண்டலுக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாக்குகிறார் சாவர்க்கர். ஒத்துழையாமை இயக்கத்தைவிட நமக்குத் தேவையானது பொறுப்புள்ள ஒத்துழைப்பு (*Responsive cooperation) என்பதுதான் என்று வாதிடுகிறார்.

ஐந்து ஆண்டுகள் அந்தமான் சிறைத் தண்டனைக்குப் பிறகு சிறைக் கைதிகளுக்குத் தரப்படும் ஒரு உரிமை, அந்தமான் தீவில் குடும்பத்துடன் வசிக்கும் உரிமை. அது யாருக்குத் தரப்பட்டாலும் சாவர்க்கருக்குத் தரப்படக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது பிரிட்டிஷ் அரசு. ஒரு வழியாக அந்த அனுமதி கிடைக்கும்போது அங்கே சென்றும் சுதந்திரப் போராட்டக் கனலைப் பரப்புகிறார். அவற்றையெல்லாம் புல்லரிப்பு இல்லாமல் படிக்கமுடியாது.

சிறைக்குள் வரும் ஒவ்வொரு அறிவிப்பின்போதும் சாவர்க்கருக்கு விடுதலை என்கிற செய்தி வேண்டுமென்றே பரப்பப்படுகிறது. சிறையே இதனால் சந்தோஷம் கொள்கிறது. ஆனால் ஒவ்வொரு முறையும் சாவர்க்கருக்கு மட்டும் விடுதலை தரப்படாது. புத்தகத்தைப் படிக்கும் நமக்கே இது பெரிய அசதியைக் கொண்டு வரும் என்றால் அங்கே வாழ்ந்தவர்களின் நிலையை நினைத்துப் பாருங்கள்.

முதல் உலகப் போரை ஒட்டி பொது மன்னிப்பு என்கிற விஷயம் எழுகிறது. சிறையில் இருக்கும் கைதிகள் ஒவ்வொருவரையும் இந்தப் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்குமாறு சாவர்க்கர் சொல்கிறார். அனைவரையும் விண்ணப்பிக்க வைக்கிறார். அப்படி விண்ணப்பித்தவர்களுள் ஒருவரே சாவர்க்கர். அன்று பிரிட்டிஷ் அரசுக்கு மனு அளிப்பது ஒன்றே வழி. அந்த வழியையே சாவர்க்கர் பின்பற்றினார். அதில் இருக்கும் வரிகளை மேற்கோள் காட்டி, சாவர்க்கர் இந்த அளவுக்குப் போனார் என்பது அடுத்த குற்றச்சாட்டு. The Mighty alone can afford to be merciful and therefore where else can the prodigal son return but to the parental doors of the Government? சாவர்க்கரின் கவிதை தோய்ந்த மொழி எப்போதுமே அப்படியானதுதான். உருவகமும் உலகப் புகழ்பெற்ற காவியங்களின் வரிகளும் முழுக்க இழையோடித்தான் அவரால் எழுதமுடியும். இதில் கவனிக்கவேண்டியவை என்ன? ஒன்று, சாவர்க்கர் எல்லாக் கைதிகளையும் பொதுமன்னிப்புக்கு விண்ணப்பிக்கச் சொல்கிறார். காரணம், சிறையில் உழன்று அழுகிச் சாவதில் பொருளே இல்லை என்றும், ஒரு புரட்சியாளன் எப்படியாவது சிறையில் இருந்து வெளியே போகவேண்டும் என்றே நினைக்கவேண்டும் என்றும், அதற்கான காரணம் அப்படி வெளியே செல்வது பாரத அன்னைக்கு சுதந்திர மலரைச் சூட்டப் போராடுவதற்காகத்தான் என்றும் பல முறை பதிவு செய்திருக்கிறார். அனைவருக்கும் பொது மன்னிப்பு தரப்பட்டாலும் சாவர்க்கர் சகோதர்களுக்கு மட்டும் அந்த நேரத்தில் தரப்படவில்லை! இரண்டாவதாகக் கவனிக்கவேண்டியது, மிகத் தெளிவாக சாவர்க்கர் சொல்கிறார், “என் பொருட்டு ஒருவேளை அனைவருக்கும் பொது மன்னிப்பு மறுக்கப்படும் என்றால், மற்ற அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குங்கள், என்னைச் சிறையிலேயே வையுங்கள், மற்றவர்களுக்குத் தரப்படும் மன்னிப்பு எனக்குத் தரப்படுவதைப் போன்றதே” என்கிறார். இதை வெறும் வாய் வார்த்தையாகச் சொல்லவில்லை. இந்தப் புத்தகத்திலேயே இதைப் பல இடங்களில் பல கட்டங்களில் சொல்கிறார். மூன்றாவதாக, சிறையில் இவரைச் சந்தித்து உரையாடிய பிரிட்டிஷ் அதிகாரி சர் ரெஜினால் க்ரடாக் சொல்வது: “கருணை மனுவுக்குப் பின்னரும்கூட, பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகச் செய்தது குறித்த எவ்வித குற்ற உணர்ச்சியும் இவரிடம் இல்லை” என்பது. நான்காவதாக, அந்தமான் சிறையில் இருந்து 2 மே1921ல் மாற்றப்பட்டு இவர் ரத்னகிரியிலும் எரவாடா சிறையிலும் மூன்று ஆண்டுகளுக்குச் சிறையில் வைக்கப்படுகிறார். பின்னர் ரத்னகிரி மாவட்டத்தை விட்டு வெளியே செல்லக்கூடாது என்கிற நிபந்தனையுடன் ஐந்து ஆண்டுகள் ரத்னகிரியில் கழிக்கிறார். பின்னரும் 1937 வரை தீவிரமாகக் கண்காணிப்பில் வைக்கப்படுகிறார். ஆனாலும் சுதந்திரப் போராட்டத்தில் தனது பங்கைத் தீவிரமாகவே செலுத்துகிறார். எனவே சாவர்க்கர் மன்னிப்புக் கேட்டார் என்பது, ஒற்றை வரி அரசியலைச் செய்பவர்களுக்கான வெற்றரசியல் மட்டுமே. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் அதிக காலம் சிறையில் இருந்தவர் சாவர்க்கரே. அதுவும் கொடும் சிறை, தனிமைச் சிறை. இதைப் புரிந்துகொள்ள தேசம் பற்றிய எண்ணமும், சுதந்திரப் போராட்டம் பற்றிய புரிதலும் வேண்டும்.

அந்தமான் சிறையிலிருந்து ரத்னகிரிக்கு மாற்றப்படும் சாவர்க்கர் சகோதரர்கள் பாரத மண்ணில் கால் பதிக்கும்போது சாவர்க்கரின் வரிகள் பெரும் கவித்துவம் பெறுகின்றன. நாடி நரம்பெல்லாம் தேசபக்தி உள்ளவர்களால் மட்டுமே அப்படி எழுத முடியும், அதைப் புரிந்துகொள்ள முடியும்.

சாவர்க்கர் எப்பேற்பட்ட சிந்தனையாளர், சுயமான தலைவர் என்பதற்கு இந்த நூல் ஒரு ஆதாரம். இந்த நூலை வாசிக்காமல் போவது பெரிய இழப்பு. இன்னும் சொல்வதற்கு எவ்வளவோ இருக்கின்றன. நூலை வாசித்தால் நான் சொல்வது புரியும். நான் இந்த நூலை ஆங்கிலத்திலும் தமிழிலும் வாசித்தேன். எஸ்.ஜி. சூர்யாவின் மொழிபெயர்ப்பில் தமிழில் மிக அற்புதமாக வெளி வந்திருக்கிறது. நண்பர் பாலாவும், நானும் இதை எடிட் செய்தோம். மிக முக்கியமான நூல் இது. தவற விட்டுவிடாதீர்கள். வேறென்ன சொல்வதென்று தெரியவில்லை.

Share

Comments Closed