கவிதை

கடும் புழுக்கத்தில்
சிக்னலில்
வரிசையாக வண்டிகள் காத்திருக்க
பள்ளிக் குழந்தைகளை ஏற்றிச் செல்லும்
வேனிலிருந்து
வந்து விழுகின்றன
இரண்டு சாக்லெட் தாள்கள்
சட்டென
எங்கிருந்தோ பறந்து வரும்
இரண்டு பட்டாம் பூச்சிகளைப் போல.
சிக்னல் திறக்கவும்
வேன் மிதந்து மிதந்து செல்கிறது
ஒரு நத்தையைப் போல.
நெரிசல் தந்த கடுப்பில்
ஹாரன் சத்தத்தில்
புருவம் உயர்த்தி கண்கள் இடுக்கி
நகர்ந்து செல்லும்
கூட்டத்தின் எரிச்சலில்
அந்த வேனுக்குள்
சாரல்
அடிக்கத் தொடங்கி இருந்தது.

Share

Comments Closed