இரண்டு தோட்டாக்கள்

ஒரு இரவு மட்டும் துப்பாக்கி கிடைக்கும். போலிஸின் துப்பாக்கி. குண்டுகள் தனியே தரப்படும். யாரைச் சொல்கிறார்களோ அவர்களைக் கொலை செய்யவேண்டும். மீதி குண்டுகளையும் துப்பாக்கியையும் ஒழுங்காக போலிஸிடம் கொடுத்துவிடவேண்டும். மற்றதை எல்லாம் போலிஸ் பார்த்துக் கொள்ளும். எளிய வேலை. தல குணாதான் நம்பர் 1 ஆள். நம்பகமானவன். அடுத்து டமால் குமார். அன்று ஒரு துப்பாக்கியும் இரண்டு குண்டுகளும் தல குணாவுக்குத் தரப்பட்டன. ஆனால் பட்சி பறந்துவிட்டது. போலிஸுக்குச் சொல்லிவிட்டு துப்பாக்கியுடன் குடிக்கப் போனான். அங்கே டமால் குமார் குடித்துக்கொண்டிருந்தான். இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். பேசத் தொடங்கினார்கள். போதையில் குமார் புலம்பத் தொடங்கினான். ஒரே ஒப்பாரி. கோபம். காறி காறித் துப்பினான்.

‘பொம்பளைங்கள நம்பக்கூடாதுரா குணா. நல்லா தெரியும் குணா, அவளுக்கு இன்னொருத்தன் கூட தொடர்பு இருக்குன்னு. ஒவ்வொரு நாளும் துப்பாக்கியோட அவள போட்ரணும்னுதான் போவேன். ஆனா முடில. நெஜமா லவ் பண்ணேன் குணா அவள. துரோகம் பண்ணிட்டா.. இன்னைக்கி விட மாட்டேன். இன்னையோட முடிஞ்சது அவ கதை. அவ கண்ணை பாத்தாலே எனக்கு பத்திக்கிட்டு எரியுது. ஒண்ணுமே நடக்காத மாதிரி அப்படியே அவ விரலால என் உடம்பெல்லாம் வருடுவா பாரு. ச்சை தூ.. ஒரு மாச போராட்டம் இன்னைக்கு முடியப் போகுது குணா.. இன்னைக்கு போடறேன். உன்கிட்ட பேசினதும் இன்னும் கொஞ்சம் தெம்பு வந்த மாதிரி இருக்கு. ஓத்தா.. நாளைக்கு அவ செத்தா. ஆம்பளைக்கு துரோகம் பண்ற பொம்பளைகிட்ட என்னடா கருணை?’ என்றான்.

குணா அமைதியாக இருந்தான். தன் வீட்டுக்குப் போனான். தன் மனைவியின் கண்ணைப் பார்த்தான். அவனை வருடும் விரல்களைப் பார்த்தான். அவன் உடல் பற்றிக்கொண்டு வந்தது. குமார் சொன்னது காதில் ஒலித்தது. ‘சாவுடி.’ கையில் இருந்த துப்பாக்கியால் சுட்டான். ஒரு குண்டில் அவள் பொத்தெனச் சரிந்தாள். அப்படியே அடங்கிப் போனாள். அவள் அருகே உட்கார்ந்து கொண்டு அழுதான். ‘எப்படி லவ் பண்ணேண்டி உன்ன.. ஙொம்மாள..’ துப்பாக்கியுடன் குமாரைப் பார்க்க ஓடினான்.

குணாவைப் பார்த்ததும் குமார் சொன்னான், “முடில தல. ரொம்ப லவ் பண்ட்டேனா.. நாம மட்டும் என்ன ஒழுங்கா சொல்லு? ஏரியால எவள‌ விட்டுவெச்சோம் சொல்லு? என்னவோ நேரம் தப்பு பண்ணிட்டா.. சொன்னா கேட்டுக்கப் போறா… ஏன் அவள போடணும்? அவனை போட்டுட்டா? என்னன்ற? எனக்காக அவனை நீயே போடு குணா. நீதான் தல போட்ற” என்றான்.

அதற்குப் பின் டமால் குமார் பேசவே இல்லை. போலிஸிடம் வெற்றுத் துப்பாக்கியை மட்டும் குணா கொடுத்தான்.

இரட்டைத் தோட்டாக்கள் கதைச் சுருக்கத்தைப் படித்து முடித்தார் தரணீதரன். சாராய பிஸினஸ். அரசியல் செல்வாக்கு. ஆள் பலம். சுற்றி எப்போதும் ரௌடிகள். திரைப்படத் தயாரிப்பாளர். தன் மேஜை ட்ராயரில் இருந்து துப்பாக்கியை எடுத்து அதில் இருக்கும் குண்டுகளை எல்லாம் அன்லோட் செய்து குப்பைக் கூடையில் போட்டார். ‘தாயோளிங்க, வீட்டுக்குள்ள இருந்து பாத்த மாதிரியே ஸ்க்ரிப்ட் எழுதுறானுங்க.. மொதல்ல இவனுங்களை போடணும்’ என்றார்.

Share

Comments Closed