Archive for ஹரன் பிரசன்னா

சிகை

சிகை திரைப்படம் – நல்ல முயற்சி. இன்னும் மிகச் சிறப்பாக வந்திருக்கவேண்டியது ஏன் சறுக்கியது என்று யோசித்ததில்:

* நல்ல படங்களுக்கு ஏற்படும் லாஜிக் சிக்கல் மிக முக்கியமான பிரச்சினையாக உருவெத்துவிடும். பாலியல் புரோக்கராக வருபவர் இத்தனை கருணை கொண்டவராகவும் அறத்தைப் பார்ப்பவராகவும் நியாயமானவராகவும் இருக்கிறார். இத்தனை நல்லியல்புகள் கொண்டவர் ஏன் புரோக்கராக இருக்கவேண்டும் என்று பிடிபடவே இல்லை. இது இப்படித்தான் என்றோ, இது இப்படியும் இருக்கலாமே என்றோ கடந்துபோகமுடியவில்லை.

* என்னதான் புரோக்கர் நல்லவராக இருந்தாலும் ஒரு கொலையைக் கண்ட பின்பும் ஒரு பாலியல் தொழிலாளியைத் தேடிச் செல்வதெல்லாம் ஒட்டவே இல்லை. இதையும் மீறி நாம் நம்புவதன் காரணம், அந்த புரோக்கராக வரும் நடிகரின் அமைதியான யதார்த்தமான நடிப்பும், படமாக்கப்பட்ட விதமும்தான்.

* சிகை படம் பற்றிய ஆர்வம் வந்ததே கதிர் பெண் போன்ற வேடத்தில் இருந்த புகைப்படம் மூலமாகத்தான். அசரடிக்கும் வகையிலான மேக்கப்புடன் அந்தப் புகைப்படம் வெளியாகியிருந்தது. ஆனால் படத்தில் அந்தக் கதாபாத்திரம் வருவதோ மிகச் சொற்ப நேரம்தான். அதனால் மனம் அந்தக் கதாபாத்திரத்தையே எதிர்நோக்கி இருந்தது.

* கதிரின் பாத்திரம் தொடர்பான காட்சிகளைவிட, முதல் பாதி காட்சிகள் உயிரோட்டமாக இருந்தன. நம்பகத்தன்மை என்ற ஒன்றைத்தாண்டி, காட்சிகளின் படமாக்கம் நன்றாக இருந்தது.

* ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ள முயல்வதும் ஆண்மையவாதத்தைக் கேள்வி கேட்பதும் கணவன் கொலை செய்ய முயன்றான் என்று சொல்வதுமான காட்சிகள் தேவையற்றவை, வலிந்து திணிக்க முற்பட்டவை போன்ற தோற்றம் தருகின்றன. அதுவரை கதை செல்லும் பார்வையிலிருந்து ஒரு மாற்றம் திடீரென்று வருகிறது.

* ஒரே இரவில் இரண்டு கொலைகளை கதிர் செய்துவிடுவதையெல்லாம் இன்னும் கொஞ்சம் சிறப்பாக யோசித்திருக்கலாம்.

* கதிரின் திருநங்கை பாத்திரம் அத்தனை சிறிய இடைவெளியில் முடிந்துபோவதைத் தவிர்த்திருக்கலாம்.

* இந்தப் படத்தை ஒரு திரில்லர் போல யோசித்தது ஏன் என்று புரியவில்லை. அப்படி யோசிக்காமல் இருந்திருந்தால் மிக நல்ல படம் என்றாகி இருக்கும். ஆனால் முதல்பாதியில் இருந்த விறுவிறுப்பு இல்லாமல் போயிருக்கும். இப்போது படம் இரண்டும் இல்லாமல் வந்துவிட்டது.

கொஞ்சம் யோசித்து மெனக்கெட்டிருந்தால், எத்தனையோ மொக்கையான கேவலமான படங்களுக்கு மத்தியில் ஒரு டீசண்டான படம் என்ற இமேஜைத் தாண்டி வேறு ஒரு தளத்துக்குப் போயிருக்கும்.

Share

சில உணவனுபவங்கள்

* முதன்முதலில் அந்த உணவின் பெயரைக் கேள்விப்பட்டபோது ச்சை என்றிருந்தது. புழுக்கு. இன்னைக்கு எங்காத்துல புழுக்காக்கும் என்று கேட்டபோது, காதில் சரியாகத்தான் விழுந்ததா என்றிருந்தது. எல்கேஏ மலம் ரேஞ்சுக்கு அந்த இருபது வயதில் திரும்ப திரும்பக் கேட்டேன். சிரிப்பு ஒரு பக்கம், அருவருப்பு ஒரு பக்கம். பாலக்காட்டு பிராமணர்களின் உணவு போல. அதைக் கொண்டு வந்து அந்த நண்பர் தந்தபோது அதைத் தொடவே இல்லை. அடுத்த முறை பெயரை மாற்றிச் சொல்லிக் கொடுத்தார். உண்ட பின்பு சொன்னார், அதுதான் புழுக்கு என்று.

* கடந்த வாரம் அப்பாவின் திதியின்போது மடிப்பாக்கம் நவபிருந்தாவன மடத்துக்குச் சென்றிருந்தோம். அங்கே நிவேதனம் வித்தியாசமாகவும் சுவையானதாகவும் இருந்தது. மக்காச்சோளம், மாதுளம் பழம், தேங்காய், ஜீனி கலந்த பிரசாதம். அவர்கள் பரிமாறும்போது அசுவாரஸ்யமாகக் கொஞ்சம் போதும் என்று சொல்லிவிட்டேன். சுவைத்தால் அட்டகாசமாக இருந்தது. மீண்டும் கேட்கவும் முடியவில்லை. மறுநாளே வீட்டில் செய்து உண்டோம்.

* சீராளன் கறி என்றொரு நண்பர் சொன்னார். என்னது அது என்று கேட்டபோது, அதன் கதையைச் சொன்னார். வெள்ளாளர்களின் சிறப்புக் கறி போல. அதன் கதையைச் சொன்னார். கதையைக் கேட்டதும் அந்தப் பெயரை என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. பிள்ளைக் கறி கேட்ட நினைவில் அந்தப் பெயரை வைத்திருக்கிறார்கள் போல. புழுக்கு ச்சை என்றிருந்தது என்றால், சீராளன் கறி என்ற பெயர் பதற வைத்துவிட்டது. இப்போதும்.

* எத்தனையோ ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்கும். ஆனால் எதுவுமே எனக்குப் பிடித்ததில்லை. அந்த கம்பெனி பெட்டர், இது பெட்டர் என்பார்கள். அதிலிருக்கும் வினிகர் மனம் எனக்குச் சுத்தமாக ஆகாது. வினிகர் இல்லாத ஊறுகாய்கள் கடைகளில் கிடைக்காது. திருநெல்வேலியில் குரு ஊறுகாய் என்று ஒன்று உண்டு. அதில் கடாரங்காய் மற்றும் நார்த்தங்காய் ஊறுகாய் அட்டகாசமாக இருக்கும். இதே கம்பெனியின் மற்ற ஊறுகாய்கள் அத்தனை சுவையாக இருக்காது. இந்த இரண்டு மட்டும் நன்றாக இருக்கும். இந்த ஊறுகாய் சென்னையில் கிடைப்பதில்லை. மதுரை, திருச்சியில் கிடைக்குமா என்றும் தெரியவில்லை. திருநெல்வேலியிலிருந்து யாராவது வாங்கி வந்தால்தான் உண்டு.

* சென்னையில் மாரிஸ் ஹோட்டல் என்று ஒன்று உண்டு. இந்தக் கடையைப் போல் காய்கறி பரிமாறி நான் இதுவரை பார்த்ததில்லை. எப்போதும் நான்கு காய்கறிகள் உண்டு. அதனுடன் வெங்காய சம்பலும் தனியாகத் தருவார்கள். சில சமயம் கீரைக் கூட்டும் இருக்கும். தமிழ்நாடு முழுக்க எந்தக் கடையிலும் இந்தக் கடை போலப் பரிமாறி நான் பார்த்ததில்லை. முதல்முறை வைக்கும்போதே நிறைய வைப்பார்கள். நிறைய என்றால் நிறைய. இன்றும் சென்னையில் பல கடைகளில் ஸ்பூனில் பரிமாறுவார்கள். சரவண பவன் பார்சலில் காய்கறி எல்லாம் ஸ்பூன் அளவுக்குத்தான் இருக்கும். அதிகம் காய்கறி சாப்பிடுபவர்களுக்கு அது உத்திரிணி அளவுக்கே தெரியும். மாரிஸ் கடையில் அப்படியெல்லாம் இல்லை. இரண்டாவது முறை கேட்டால் முதல்முறையைவிட அதிகம் பரிமாறுவார்கள். பேலியோ பற்றித் தெரிந்துகொண்டு அதிகம் காய் உண்ண ஆரம்பித்தபின்பு ஒவ்வொரு முறை கடைக்குச் செல்லும்போதும் பொரியல் கூட்டு கூடுதலாகக் கேட்க அவமானமாக இருக்கும். எத்தனை முறை கேட்டாலும் அவர்களும் சளைக்காமல் ஒரு சொட்டு மட்டுமே பரிமாறுவார்கள். ஆனால் சாதம் மட்டும் கொட்டுவார்கள். எனக்குத் தெரிந்து இத்தனை விதமான காய்கறிகளை இந்த அளவுக்குப் பரிமாறும் ஒரே கடை சென்னையின் மாரிஸ் கடைதான். ராயப்பேட்டையில் விஐபி கடை என்று ஒன்று. ஒப்பீட்டளவில் இங்கேயும் காய்கறி நிறையவே பரிமாறுவார்கள். ஆனால் சுவையிலும் அளவிலும் மாரிஸுக்குப் பக்கத்தில்கூட வரமுடியாது. மாரிஸின் சுவை அதீத சுவையல்ல. எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுக்காத மாதிரியான சுவை. நினைக்கும்போதே சென்று உண்ண ஆசையைத் தரும் இடம் மாரிஸ்.

Share

செண்பகப் பெருமாளின் நேர்காணல் – யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவும்

செண்பகப் பெருமாள் எழுதிய ‘யூதர்களின் ஏசுவும் பவுலின் கிறிஸ்துவம்’ புத்தகம் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றதோடு, விமர்சனத்தையும் பெற்றது. என்னளவில் இந்தப் புத்தகம் கிறித்துவம் தொடர்பான பல விஷயங்களை மிகவும் எளிதாகவும் புரிந்துகொள்ளும்படியும் சொன்னது. கிறித்துவம் பற்றி அதிகம் தெரியாதவர்கள்கூட இந்தப் புத்தகத்தைப் புரிந்துகொண்டு, செண்பகப் பெருமாள் என்ன குற்றச்சாட்டை வைக்க வருகிறார் என்பதை உணரமுடியும். இதுவே புத்தகத்தின் பலம். ஒரு ஆசிரியர் கையைப் பிடித்து எழுதச் சொல்லிக் கொடுப்பது போல இப்புத்தகம் மெல்ல மெல்லப் படிப்படியாக பவுலின் கிறித்துவம் தொடர்பான கேள்விகளை முன்வைக்கிறது. புறஜாதியாருக்குமான கிறிஸ்துவாக ஏசு எப்போது மாற்றப்பட்டார் என்பதை செண்பகப் பெருமாள் மிகத் தெளிவாகச் சொல்கிறார்.

இப்புத்தகம் வந்தபோது யார் இதைப் படிக்கப் போகிறார்கள் என்பதே என் எண்ணமாக இருந்தது. ஆனால் புத்தகத்துக்கு இருந்த வரவேற்பு ஆச்சரியமானது.


மேலே உள்ள நேர்காணலில், இப்புத்தகத்தில் உள்ள விஷயங்களைத் தொட்டுப் பேசுகிறார் செண்பகப் பெருமாள். இப்புத்தகத்தை மேலும் புரிந்துகொள்ள இந்தப் பேட்டி உதவும். பத்ரி சேஷாத்ரியின் கேள்விகளுக்கு எவ்வித முன்தயாரிப்பும் இல்லாமல் செண்பகப் பெருமாள் பதில் சொல்லும் விதம், இத்துறையில் அவருக்குள்ள ஞானத்தையும் ஆர்வத்தையும் காட்டுகிறது.

செண்பகப் பெருமாள் ஹிந்துத்துவ ஆதரவாளர். ஒரு ஹிந்துத்துவ ஆதரவாளர் தனது எதிர்த்தரப்பை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கு இந்தப் பேட்டி ஒரு முன்மாதிரி. ஹிந்துத்துவத் தரப்பு மட்டுமல்ல, தன் எதிர்த்தரப்பை எதிர்கொள்ளும் யாருக்குமேதான்.

Share

தினமலர் தேர்தல் களம்

தினமலர் தேர்தல் களத்தில் வெளியான கட்டுரைகள்:

நிரம்பாத வெற்றிடம் (கட்டுரை 1)

2019க்கான நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்ட நிலையில் ஒட்டுமொத்த களமும் பரபரப்படைந்துள்ளது. முன்பெல்லாம் தேர்தல் நடக்கும் காலத்தில் மட்டுமே ஒருவிதப் படபடப்பு நிலவும். ஆனால், சமூக ஊடகங்கள் கோலோச்சும் காலம் இது. செய்தி மற்றும் தொலைக்காட்சி ஊடகங்கள் முன்னெப்போதையுவிட மிகத் துரிதமாகச் செய்திகளைக் கொண்டு போகவேண்டிய கட்டாயத்தில் நிலவும் சூழல் இது. அதனால், தேர்தல் நடக்காதபோதும்கூட, எல்லா நாளுமே பரபரப்பாகவே கழிகிறது. தேர்தல் அறிவிக்கப்பட்டுவிட்டால் அது ஒரு திருவிழா மனப்பான்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. இப்போக்கினால் பலமும் உள்ளது, பலவீனமும் உள்ளது. பரபரப்பையும் கண்ணை மறைக்கும் செய்திக் குவியல்களையும் வெறுப்புச் செய்திகளையும் புறம் தள்ளிவைத்துவிட்டே தேர்தல் செய்திகளை அணுகவேண்டி உள்ளது. அதீதச் செய்திகளே சாபமாகிவிட்ட ஒரு சூழலில் நாம் வாழ்கிறோம்.

தமிழகத் தேர்தல் வரலாற்றில் இத்தேர்தல் மிகப் வித்தியாசமானது. கடந்த 30 வருடங்களாக தமிழக அரசியலின் போக்கைத் தீர்மானித்த கருணாநிதியும் ஜெயலலிதாவும் இல்லாத நிலையில் இத்தேர்தல் நடைபெறுகிறது. ஒரே நேரத்தில் கருணாநிதியும் ஜெயலலிதாவும் மௌனமானது ஆகப்பெரிய ஆச்சரியமே. இதனாலேயே மிகப்பெரிய ஒரு வெற்றிடம் நிலவியது. தமிழகத்தின் அரசியல் போக்கை மிக மோசமாக்கியவை இந்த இருபெரும் கட்சிகளே என்று நினைப்பவர்கள், இந்த வெற்றிடம் ஒரு ஆக்கபூர்வமான அரசியலைக் கொண்டு வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. அதே வெற்றிடம் இப்போதும் நிலவுகிறது.

வெற்றிடத்தைப் போக்க, உறுதியான தலைவருடன் கூடிய வலுவான கட்சி ஒன்று வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு தமிழகமெங்கும் நிறைந்துள்ளது. பழைய கட்சிகளின் புதிய பதிப்புகளை மக்கள் ஏற்கவில்லை. ஒரே கட்சி இரண்டாக நான்காக உடைந்து புதிய கட்சியாக மலரும்போது மக்கள் சலிப்பில் அவற்றை நிராகரிக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அனைத்துப் பழைய கட்சிகளையும் உறுதியோடு எதிர்க்கும் வலிமையான கட்சி இன்று வரை முகிழவில்லை. இதனால் இத்தேர்தலில் தமிழர்களின் வாக்குகள் எப்படிச் சிதறும் என்பதைத் துல்லியமாகக் கணிக்கமுடியவில்லை.

இதுவரை தமிழகத் தேர்தல்களில் கட்சிகள் வாங்கிய வாக்குகளின் அடிப்படையில் ஓர் ஆய்வைச் செய்து எத்தனை இடங்களில் எந்த எந்தக் கட்சிகள் வெல்லக்கூடும் என்று சொல்வதே பொதுவான நடைமுறை. இதை ஒட்டியே வெற்றி தோல்வி அமையும் என்பது நம்பிக்கை. ஆனால் இத்தேர்தலில் அந்தக் கணக்குகள் எடுபட வாய்ப்பில்லை.

ஜெயலலிதா இல்லாத நிலையில் அதிமுகவின் உண்மையான பலம் என்ன என்று தெரியாது. அக்கட்சியின் மரபான வாக்குகளில் எத்தனை சதவீதத்தை தினகரன் பிரிப்பார் என்பதைக் கணிக்கமுடியாது. ஆர்.கே நகர் தேர்தலைப் போலவே தமிழகம் முழுக்க நடக்க வாய்ப்பே இல்லை. அதேசமயம் ஆர்.கே நகர் தேர்தல் தந்த அதிர்ச்சியையும் மொத்தமாகப் புறக்கணிக்க முடியாது. ஜெயலலிதாவின் ஒன்றிணைந்த அதிமுக பெற்ற வாக்குகளை, இன்றைய அதிமுகவும் தினகரனின் அமமுகவும் எப்படிப் பிரிக்கும் என்பதே இந்த இரண்டு கட்சிகளின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறது. இடையில் அங்கும் இங்கும் நடந்துகொண்டிருந்த தீபாவை மக்கள் மறந்துவிட்டார்கள் என்பதால் அவரை விட்டுவிடலாம்.

அதிமுக இப்படி இருக்கும்போது, திமுக மிகவும் பலமாக இருந்திருந்தால் தேர்தலில் அக்கட்சி பெரிய வெற்றியைச் சுலபமாகப் பெற்றிருக்கும். தொடக்கத்தில் அப்படி ஒரு நிலை இருக்கத்தான் செய்தது. ஆனால் ரஜினியின் வரவு அதைக் கொஞ்சம் முதலில் அசைத்துப் பார்த்தது. ஸ்டாலினிக்கு நிம்மதி தரும்படியாக, ரஜினி எப்போது தேர்தலில் பங்கெடுக்கப் போகிறார் என்பது ரஜினிகே கூட தெரியாத நிலையில், திமுக வெல்லும் வாய்ப்பு அப்படியே தொடர்ந்தது. தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் பரப்பப்படும் செய்திகளே ஸ்டாலினிக்குப் பெரிய பின்னடைவைத் தருகின்றன. ஒருவகையில் திமுகவினர் பிறருக்குச் செய்தவை அவர்களுக்கே திரும்ப வருகின்றன என்றே சொல்லவேண்டும். எப்படியோ ஸ்டாலின் வலிமையற்ற ஒரு தலைவர் என்ற கருத்து திமுக அல்லாதவர்களிடம் வெற்றிகரமாகப் பரப்பப்பட்டுவிட்டது. இந்நிலையில் கருணாநிதி இருந்தபோது திமுக பெற்ற வாக்குகளைத் திரும்பப் பெற்றாலே பெரிய விஷயம். அப்படிக் கிடைக்கும் வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது போதாது. கூடுதல் வாக்குகளை அதிமுகவிடம் இருந்து பிரிக்காமல் வெல்லமுடியாது. திமுகவின் வாக்குகள் குறைந்தாலும் குறையலாம் என்ற கணிப்பையும் ஒதுக்கிவிடமுடியாது. இப்படியான சிக்கலில் உள்ளது திமுக.

கூட்டணி மூலம் இப்பிரச்சினையைச் சமாளிக்கமுடியும் என்று இரண்டு கட்சிகளுமே புரிந்துகொண்டுள்ளன. அதனால்தான் கூட்டணிக்கு இத்தனை முயற்சி. இதுவரை கருணாநிதியும் ஜெயலலிதாவும் இறங்காத அளவுக்குக் கூட்டணிக்காக இரண்டு கட்சிகளும் இறங்கிப் போய்ப் பேசின. அதிலும் அதிமுக இனி இழக்க ஒன்றுமில்லை என்ற முடிவோடு விடாமல் சென்று கூட்டணிக்காகப் பேசியது. எப்போதும் கூட்டணிப் பேரத்தை முதலில் துவங்கும் திமுக, அதைச் சரியாகக் கோட்டை விட்டுவிடும். இம்முறையும் அதுவே நடந்தது. பழம் நழுவிப் பக்கத்து டம்ளர் பாலில் விழுந்துவிட்டது. இந்த ஏமாற்றத்தையும் எரிச்சலையும் தாங்கிக்கொள்ள முடியாத ஸ்டாலின், அதுவரை பாமகவிடம் திமுகவும் கூட்டணி பேசியது என்பதையெல்லாம் மறந்து, மிகக் கடுமையாக ராமதாஸைத் தாக்கிப் பேசினார். ஒரு அரசியல் தலைமை செய்யக்கூடாத தவறு இது. இதையே ஒரு படி மேலே போய், தேமுதிகவுக்கு துரைமுருகன் செய்ய, பிரேமலதா இன்னும் ஒரு பங்கு மேலே போய் தவறு செய்தார். கூட்டணித் தலைவர்களை எந்த எல்லையில் நிறுத்தவேண்டும் என்பதை ஜெயலலிதாவிடமிருந்து ஒவ்வொரு கட்சித் தலைமையும் பாடம் கற்றுக்கொள்வது நல்லது. கூட்டணிக்காக அதீதமாக ஒட்டிக்கொள்வது பிறகு வெட்டிக்கொள்வதும் எல்லாம் பழைய காலத்து வழி. கூட்டணி என்பதுகூட தன் கட்சியை வளர்க்கத்தான் என்ற நிதர்சனத்தை வெளிப்படையாகவே சொல்வதுதான் இன்றைய வழி. ஜெயலலிதா கூட்டணித் தலைவர்களை முடிந்தவரை அலட்சியம் செய்தார். அலட்சியம் செய்வதே ஜெயலலிதாவின் அணுகுமுறை. ஆனால் அவர்களோ மீண்டும் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி வைத்தார்கள். ஜெயலலிதா அளவுக்கு அலட்சியமும் இன்றி, கருணாநிதி போல அளவுக்கு மீறிய நட்பாகவும் இன்றி, இரண்டுக்கும் இடையில் இருக்கமுடியும் என்பதை உணர்வது அனைத்துக் கட்சிகளுக்கும் நல்லது. கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கருணாநிதிக்குச் செய்தது என்ன என்பதை நினைத்துப் பார்த்தால் இதை உணரலாம்.

விஜய்காந்த்தின் உடல்நிலை இன்றிருக்கும் நிலையில் அக்கட்சியின் செல்வாக்கு, முன்பு அக்கட்சி பெற்ற வாக்குகளுக்கு இணையாக இருக்கமுடியும் என்று சொல்லமுடியாது. குறைந்துவரும் தன் கட்சியின் செல்வாக்கை அக்கட்சி புரிந்துகொண்டாலும், விட்டுக்கொடுத்துப் போக அக்கட்சியின் செயல்தலைமையால் முடியவில்லை. இதனால் அக்கட்சிக்குப் பின்னடைவுதான் ஏற்படும். ஜெயலலிதா போல இருக்க நீங்கள் ஜெயலலிதாவாக இருக்கவேண்டும் என்பதை பிரேமலதா புரிந்துகொள்வது அக்கட்சியின் எதிர்காலத்துக்கு, அப்படி ஒன்று இருந்தால், நல்லது.

கமல்ஹாசன் கட்சி யாருக்கான மாற்று என்பது இதுவரை யாருக்கும் புரியவில்லை. அவரது நடவடிக்கைகளைப் பார்த்தால், தமிழ்நாட்டில் ஒட்டுமொத்தமாக 1% வாங்கு வாங்கும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு மாற்றாக ஒரு கட்சியை நடத்துவதே அவரது நோக்கம் என்று தெரிகிறது. நல்லது செய்வதே நோக்கம், அதுவே கொள்கை என்பதையெல்லாம் திரைப்படங்களில் பார்த்துக் கை தட்டலாம். பொதுவில் அவை ஆழமற்ற பேச்சாகவே பார்க்கப்படும்.

அதிமுக கூட்டணியும் திமுக கூட்டணியும் ஏறக்குறைய உறுதியாகிவிட்ட நிலையில், இத்தேர்தல், ஒட்டுமொத்த இந்தியத் தேர்தலைப் போலவே, இந்திய ஆதரவுக்கும் இந்திய எதிர்ப்புக்கும் இடையே நிகழ்வதாகவே நான் பார்க்கிறேன். திமுக நேரடியான இந்திய எதிர்ப்புக் கட்சி அல்ல. அதேசமயம் அக்கட்சியின் ஒட்டுமொத்த கூட்டணியின் தோற்றம், அது ஒரு இந்திய எதிர்ப்புக் கூட்டணி என்பதாகவே அர்த்தம் தருகிறது. வெகு நீண்ட காலமாகவே திமுக தேசிய நீரோட்டத்தில்தான் இருக்கிறது. என்றாலும், தொடர்ச்சியாக அது இந்திய எதிர்ப்பு மனோபாவமுள்ள கட்சிகளுடனேயே தன் தோழமையை அமைத்தும் வந்திருக்கிறது. இன்றைய நிலையில், காங்கிரஸ் கட்சிகூட, பாஜகவை எதிர்க்கும் வேகத்தில், இந்திய எதிர்ப்புக் கருத்துகளுக்கு ஆதரவு தருவது போலப் பேசுகிறது. இதனால், இக்கூட்டணியின் இந்த நிறத்தைத் தவிர்க்க முடியாது. உண்மையில் இகட்சிகள் இந்திய எதிர்ப்பில் நம்பிக்கை இல்லாதவையாக இருக்கலாம். ஆனால் மக்களின் பார்வை இருமைக்குள் சிக்கும்போது, ஒரு பக்கம் தேசிய நோக்கத்தை ஆதரிக்கும் கூட்டணியாக பாஜக கூட்டணியையும், அதை எதிர்க்கும் கூட்டணியாக காங்கிரஸ் கூட்டணியையும் பார்ப்பதைத் தவிர்க்க முடியாது.

தமிழ்நாட்டுத் தேர்தலைப் பொருத்தவரை, இதுவரை நடந்த விஷயங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் அரசியல் வெற்றிடம் இன்னும் அப்படியே உள்ளது என்பதையே காட்டுகிறது. இருபெரும் திராவிடக் கட்சிகளின் அதீத ஆதிக்கம் குறைவதும் ஒருவகையில் நல்லதுதான். ஏதேனும் ஒரு தேசியக் கட்சி இங்கே பலம் பெறவேண்டியதும் முக்கியம். அது பாஜகவாக இருப்பது நல்லது என்பது என் பார்வை. இத்தேர்தலின் முடிவு தெரிந்த பின்னர்தான், எதிர்காலத்திலாவது இது சாத்தியப்படுமா என்பது தெரியும்.

கூட்டணியை ஏற்பது (கட்டுரை 2)

ஜெயலலிதாவின் காலத்துக்கு முன்புவரை கூட்டணி என்பது, கூட்டணித் தலைவர்களுடனான நட்பை அடிப்படையாகக் கொண்டிருந்தது. திமுக காங்கிரஸ் கூட்டணி முதலில் ஏற்பட்டபோது, பிறகு ஏற்பட்டபோதும்கூட, அது பொருந்தக் கூட்டணி என்றே சொல்லப்பட்டது. அதிமுக – காங்கிரஸ் கூட்டணி அமைந்தபோது அது இயல்பான கூட்டணி என்று நம்பப்பட்டது. இன்று நிலைமை அப்படியே தலைகீழாக உள்ளது.

கூட்டணிகள் மாறுவதும், கூட்டணி குறித்த கருத்துகள் மாறுவதும், மாநில சிறு கட்சிகள் ஓரளவுக்கு வாக்குகள் வாங்கத் தொடங்கியதில் இருந்து இயல்பாகிப் போகின. பாட்டாளி மக்கள் கட்சி ஒவ்வொரு தேர்தலில் ஒவ்வொரு பிரதான கட்சியுடன் மாறி மாறி கூட்டணி வைத்தது. தொடர்ந்து வெற்றி முகத்திலும் இருந்தது. கூட்டணி மாறும்போது ஏற்படும் குரல் மாறுபாடுகளை மிக எளிதில் பாமக கடந்தது. என்ன காரணம்? வெற்றிக் கூட்டணியாக அவை அமைந்ததுதான்.

தோல்விக் கூட்டணியாக அமைந்தபோதெல்லாம், கூட்டணி மாறும்போது, மிகக் கடுமையான காரணங்களைத் தேடி தேடி பாமக சொல்ல வேண்டி வந்தது. மீண்டும் அடுத்த கூட்டணியின்போது அதைவிடக் கடுமையான சாடல்களை, காரணங்களைக் கண்டுபிடிக்கவேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதனாலேயே பதில் சொல்லமுடியாத சிக்கலிலும் மாட்டிக்கொண்டது. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இதனை வேறு வகையில் கையாண்டார்கள்.

கருணாநிதி இதயத்தைப் பிழியும் வண்ணம் கட்டுரை எழுதுவார். கூட்டணி முறிந்தாலும், கொள்கை ரீதியாக அவர்களது நட்பு தேவை என்பதை கவனத்தில் வைத்திருப்பார். மீண்டும் தேர்தலில் அவர்களுடன் கூட்டணி எந்நேரத்திலும் ஏற்படக்கூடும் என்பது குறித்து அவருக்குச் சந்தேகமே இருந்தது இல்லை.

ஜெயலலிதா கையாண்டது இதற்கு முற்றிலும் எதிரான வகையில். கூட்டணிக்கும் முன்பும் பின்பும் கூட்டணியின் போதும் கூட்டணிக் கட்சிகளைப் பற்றி எதுவும் பேசமாட்டார். பாராட்டியோ திட்டியோ எதுவும் செய்யமாட்டார். அப்படி அவர் பாராட்டினால் அது கூட்டணிக் கட்சிகளுக்கு இனிய அதிர்ச்சி என்ற வகையில் மிக அபூர்வமாகவே இருக்கும். அதேபோல் கூட்டணிக் கட்சித் தலைவர்களுடன் நட்பு என்ற ஒன்றே கிடையாது. கூட்டணி என்பது தேர்தலுக்கானது மட்டுமே என்பதை ஒவ்வொரு நொடியிலும் நிரூபித்தவண்ணம் இருப்பார். கூட்டணிக்கு வரும் கட்சிகளைப் பொதுவில் துதிபாடுவது, புகழுரைப்பது என்ற எதுவும் இருக்காது. கூட்டணிப் பேச்சுவார்த்தைகளின்போதே அதிமுகவின் தொகுதிப் பட்டியலை வெளியிடுவார். இதற்குப் பின்னும் கூட்டணிக் கட்சிகள் அவரிடம் கூட்டணி வைத்ததன் காரணம், வெற்றி என்ற ஒற்றைச் சொல்லுக்காத்தான்.

வெற்றி கிடைக்காத சமயத்தில் கூட்டணிக் கட்சிகள் விலகும்போது ஜெயலலிதாவிடம் இருந்து அது குறித்த, மனதைப் பிசையும் அறிக்கைகள் எதுவும் இருக்காது. மறந்தும் கூட்டணித் தலைவர்களின் பெயரைக்கூட உச்சரித்துவிடமாட்டார். இந்த வகையில், மாநில சிறு கட்சிகளின் இடத்தை அவர்களுக்குக் காண்பித்தது ஜெயலலிதான். இது திமுகவுக்கும் சேர்ந்தே உதவியது என்றே சொல்லவேண்டும். அப்படிக் கூட்டணி இல்லாமலும் அதிமுக வென்றதில், ஜெயலலிதாவின் அதிர்ஷ்டத்துக்கும் ஒரு பங்கு இருந்தது.

முன்பெல்லாம் கூட்டணி என்ற ஒன்று அமைந்தால், அனைத்துக் கூட்டணித் தலைவர்களும் ஒரே மேடையில் பேசுவது முக்கியமான ஒன்றாக அமையும். ஜெயலலிதா இதையும் புறக்கணித்தார். வெற்றிக் கூட்டணியாக அமைந்துவிடும்போது, இதெல்லாம் மறக்கப்பட்டுவிடும். தோல்விக் கூட்டணியாக அமைந்தால், இது முக்கியக் காரணமாக இருக்கும்.

கூட்டணி அமைப்பது போலவே முக்கியமானது அதனை எடுத்துச் செல்வது. ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது அதனை ஏற்றுக்கொள்வது. 2004ல் ரஜினி, அதிமுக – பாஜக கூட்டணிக்கு ஆதரவளித்தார். எந்த ஒரு இடத்திலும் ஜெயலலிதா இதைக் குறிப்பிடவே இல்லை. அதிமுகவினரும் அதிகம் இதைப் பற்றிப் பேசவில்லை. ரஜினியும் ஆதரவுக்குப் பின்பு அமைதியானார். அந்தத் தேர்தலில் இக்கூட்டணி தோல்வியுற்றது.

அப்போது சோ சொன்ன கருத்து முக்கியமானது. ஆதரவைப் பெற்றுக்கொள்வதும், அதனைப் பரப்புவதும், ஆதரவு தருவதைப் போலவே முக்கியமானது என்றார். இது நடக்காமல் ஆதரவின் அடுத்த கட்டம் நடக்காது. ரஜினியைக் காப்பாற்ற சோ இக்கருத்தைச் சொல்லி இருக்கலாம். ஆனாலும் அதனளவில் இக்கருத்து முக்கியமானது.

இன்று திமுக எதிர்பார்த்த கூட்டணி அமையவில்லை. பாமக, தேமுதிக அதிமுக கூட்டணி அமைந்துவிட்டது. திமுக கூட்டணி கொள்கை ரீதியாக, ஹிந்து மதத்தை எதிர்க்கும் கூட்டணி என்றாகிவிட்டது. திருமாவளவன் தெளிவாகவே சனாதனத்தை எதிர்க்கும் கூட்டணி என்று சொல்லிவிட்டார். சனாதனம் என்பது ஹிந்து தர்மம்தான். எனவே இவர்களுக்குக் கூட்டணித் தலைவர்களுடன் பேசுவதில் சிக்கல் இல்லை.

அதிமுக கூட்டணிக்கு அந்தச் சிக்கல் இருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நிலையில் இந்தச் சிக்கலை இவர்கள் எளிதாகக் கடந்துவிடமுடியும். அனைத்துத் தலைவர்களும் ஒரே மேடையில் தோன்றி, எவ்வித ஈகோவும் இன்றிப் பேசுவதால், கூட்டணி மாயம் நிகழும் வாய்ப்பு உண்டு. அதிமுக கூட்டணியின் தலைவர்கள் மாநில அளவில் முக்கியத்துவம் பெற்றவர்கள் என்பது, திமுகவுக்கு இல்லாத ஒரு வாய்ப்பு. இதனை அதிமுக பயன்படுத்திக்கொள்ள, கூட்டணியைப் பெற்றுக்கொள்வதில், பரப்புவதில் முனையவேண்டும். அதுதான் முக்கியமானது. முதல் ஒன்றிரண்டு கூட்டங்களில் இந்த மாயம் நிகழத் துவங்கிவிடும். பழைய சாடல்கள் மறக்கப்பட்டுவிடும். தொடர்ந்து ஒரே மேடையில் கூட்டணித் தலைவர்கள் பேசும்போது, அது வெற்றிக் கூட்டணியாக இருக்கும். இல்லையென்றால் பெரிய அபாயத்தையே சந்திக்கும்.

நன்றி: தினமலர்

Share

ஏன் திமுக ஒழிக்கப்படவேண்டும் – மாரிதாஸ்

கீழே உள்ளவை மாரிதாஸ் சொல்பவை. நான் சொல்பவையல்ல. நான் அப்பாவி. அனைத்துத் திட்டுகளும் அவருக்கே செல்லட்டும் என்று நியாயமாக ஒதுங்கிக்கொள்கிறேன். மாரிதாஸ் பொரிந்து தள்ளும் வீடியோவைப் பார்க்க: https://www.youtube.com/watch?v=-hH4qcsIO4E&feature=youtu.be

திமுக ஏன் அழிக்கப்படவேண்டும் என்பதற்கு மாரிதாஸ் சொல்லும் காரணங்கள்:

  • அரசு ஊழியர்களுக்கு அநியாயத்துக்கு சம்பள உயர்வு தருவதால்.
  • தாசில்தார்கள், வி ஏ ஓ உடன் இணைந்து அரசு மற்றும் கோவில் நிலங்களை அபகரித்ததற்காக.
  • திமுக ஒரு ரௌடி கட்சி. நில அபகரிப்பு செய்பவர்களுக்கு, நில மாஃபியாக்களுக்குப் பிடித்த கட்சி திமுக.
  • சபரிமலை விவகாரத்தில் பெண்கள் நுழையலாம் என்ற தீர்ப்பை வரவேற்றது திமுக. ஹிந்துக்கள் புரிந்துகொள்ளவேண்டிய விஷயம், ஹிந்துக்களை திமுக அசிங்கப்படுத்துகிறது. டாவின்சி கோட் படத்தைத் தடை செய்யும் திமுக, உண்மையான தீர்ப்பை ஆதரிக்கிறது!
  • ஹிந்து மதத்தின் திருமண மந்திரங்களை அசிங்கமானவை அருவருப்பானவை என்று சொன்னவர் ஸ்டாலின். ஆனால் இதே வார்த்தைகளை இஸ்லாமியர் மற்றும் கிறித்துவ சடங்குகளைக் குறித்து அவரால் சொல்லமுடியுமா?
  • மின் தடை. 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் மின் தடை இருந்தது திமுகவின் ஆட்சிக்காலத்தில்தான்!
  • திமுகவுக்குக் கொள்ளை அடிக்கத் தெரியுமே ஒழிய, நிர்வாகத் திறமை கிடையாது.
  • திமுக ஒரு குடும்பத்தின் கட்சியாகிவிட்டது.
  • சமச்சீர்க் கல்வியைப் புகுத்தியது. இதனால் கல்வியே நாசமாகிவிட்டது.
  • அரசுக் கல்லூரிகளில் துணைவேந்தர் துவங்கி அனைத்துப் பணிகளிலும் அரசியலை நுழைத்தது திமுகதான்.
  • கச்சத்தீவு, காவிரி வாரியம், ஈழத் தமிழர் படுகொலை விவகாரங்களில் தமிழர்களுக்குத் தீங்கிழைத்தது திமுக. கச்சத்தீவு விவகாரத்தில் திமுக எம்பிக்கள் எதுவுமே பேசவில்லை. இதை எதிர்த்துப் பேசியவர்கள் ஃபார்வர்ட் ப்ளாக்கின் மூக்கையா தேவர் மற்றும் யூனியன் முஸ்லிம் லீக்கின் முஹம்மது ஷரீஃப் மட்டுமே. இவர்களது எதிர்ப்பை ஆதரித்த ஒரே தேசியத் தலைவர் வாஜ்பாய். கச்சத்தீவை இழந்ததற்கு காரணம், திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட்.
  • பொறுப்பற்ற கவர்ச்சித் திட்டங்களை அறிவிப்பது திமுக.
  • திமுக ஒரு கட்சியல்ல, கார்ப்பரேட் நிறுவனம். இவர்களது நோக்கம் கூட்டமாகச் சேர்ந்து கொள்ளையடிப்பதும் அதைப் பிரிப்பதும்தான்.
  • திமுகவைப் போல யாராலும் வசனம் பேசி ஏமாற்றமுடியாது. பொய் பொய் பொய் மட்டுமே இவர்களது கொள்கை. திராவிடம் 2.0 என்பதே பொய்ப் பிரசாரம்.
  • பட்டியல் இனத்தவரின் ஜாதியை ஒழிக்கப் பயன்பட்டது அண்ணல் அம்பேத்கரின் சட்டமே ஒழிய, ஈவெரா அல்ல. திமுக ஜாதியை ஒழித்தோம் என்று சொன்னது பொய். அது பட்டியல் இனத்தவரை ஏமாற்றச் சொல்வதுதான்.
  • கடைசியாக: நான்கு முறை முதல்வராக இருந்த மனோகர் பாரிக்கரின் அண்ணன் மளிகைக்கடை வைத்திருக்கிறார். 5 முறை முதல்வராக இருந்த கருணாநிதியின் உறவினர்கள் முதல் கொள்ளுப்பேரன் வரை பல கோடி சொத்து உள்ளது.
  • நேர்மையானவர்களுக்கு வாக்களிப்போம். திமுகவுக்கு வாக்களித்துவிட்டு தமிழ்நாடு சிங்கப்பூராகும் என்று கனவு காண்பதற்கு உரிமையே கிடையாது. டாட்.
Share

சூப்பர் டீலக்ஸ் – உன்னதத்தை நோக்கி

சூப்பர் டீலக்ஸ் – தியாகராஜன் குமாரராஜாவின் இரண்டாவது திரைப்படம். முதல் திரைப்படமான ஆரண்ய காண்டம் வந்தபொழுது கவனிக்கப்படாமல், பிறகு தமிழின் முக்கியமான படம் என்ற தகுதியை அடைந்தது. மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு வந்திருக்கும் இந்தத் திரைபடம், சந்தேகமே இல்லாமல் தமிழின் முக்கியமான மைல்கல்களுள் ஒன்று. உண்மையில் ஒரு தடவை மட்டுமே பார்த்துவிட்டு இப்படத்துக்கு விமர்சனம் எழுதுவது நியாயமாகாது.

முக்கியமான குறிப்பு, படம் வயது வந்தவர்களுக்கான திரைப்படம். நிஜமாகவே வயதுக்கு வந்த திரைப்படம். எனவே குழந்தைகளுடன் செல்லாதீர்கள்.

இன்னொரு முக்கியமான குறிப்பு, என்னதான் ஸ்பாய்லர்ஸ் இல்லாமல் எழுத நினைத்தாலும் அது சாத்தியமாகாமல் போகலாம். எனவே, ஸ்பாய்லர்ஸ் அஹெட்.

தமிழின் திரையில் இதுபோன்ற மாயங்கள் நிகழ்வது அபூர்வம். அப்படி நிகழும்போது, அதை முதல் காட்சியில் பார்ப்பதெல்லாம் அபூர்வத்திலும் அபூர்வம். இப்படம் அதைச் சாத்தியமாக்கி இருக்கிறது. ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியின் கலை பூர்வமானதாகவும், இயக்குநர் நினைத்து நினைத்து வாழ்ந்து செதுக்கி இருப்பதாகவும் அமைவது இப்படத்தில் மட்டுமே இருக்கமுடியும் என்று சொல்லிவிடலாம். ஒவ்வொரு காட்சியும் அழுத்தமாக மிக அழுத்தமாக நகர்வதோடு, பெரிய அதிர்ச்சியையும் கொண்டு வருகிறது. அதிர்ச்சி என்றால், ஒவ்வொன்று ஒவ்வொரு வகையிலான அதிர்ச்சி. கடைசி அரை மணி நேரம் வரை, இது போன்ற காட்சிகளைத் திரைப்படம் முழுக்க உலவ விட்டிருக்கிறார் இயக்குநர். நினைத்துப் பார்க்கமுடியாத சாதனை இது.

நடிகர்கள் ஒவ்வொருவரும் நடித்திருக்கும் விதம் வியப்பில் ஆழ்த்துகிறது. ஒரு தமிழ்ப் படத்தில், தாம் எப்பேற்படத்த படத்தில் நடிக்கிறோம் என்பதை உணர்ந்துகொண்டு, அனைவரும் சிறப்பாக நடிப்பதெல்லாம் எப்போதாவது நிகழும் ஒன்று. அது இப்படத்தில் சாத்தியமாகி இருக்கிறது.

பின்னணி இசை, உச்சம். யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை, படம் முழுக்க தக்க வைத்திருக்கும் ஒரு மெல்லிய பதற்றம் அசாதாரணமானது. தேவையற்ற இடங்களில் இசை இல்லாமல் இருப்பதும் முக்கியமானது.

படத்தின் ஒவ்வொரு வசனங்களும் மிகக் கூர்மையானவை. எத்தனை முறை யோசித்து இப்படி எழுதி இருப்பார்கள் என்ற மலைப்பை ஏற்படுத்துகிறது. படத்தின் காட்சியாக்கமும் டோனும் ஒன்றுடன் ஒன்று கச்சிதமாகிப் பொருந்திப் போகின்றன.

படம் முழுக்க அசைவ வசனங்கள்தான். முதல் காட்சியிலிருந்து இறுதிக் காட்சி வரை. எனவே இப்படம் பலரை அதிர்ச்சிக்குள்ளாக்கக்கூடும்.

புதிய அலை இயக்குநர்களின் படம் என்பதாலேயே ஹிந்து மதம் என்ன பாடு பட்டிருக்கும் என்ற அச்சத்தோடுதான் போனேன். ஆனால் இந்த முறை சிக்கி இருப்பது கிறித்துவ மதம். மிகத் தெளிவாக எடுத்த எடுப்பிலேயே இதில் வரும் மத ரீதியான காட்சிகள் யாரையும் புண்படுத்த அல்ல, கற்பனையாக மட்டுமே என்று காட்டுகிறார்கள். அடுத்து, ஒரு வசனத்தில் மிகத் தெளிவாக இது கிறித்துவ மதம் இல்லை என்று சொல்லி விடுகிறார்கள். பின்பு கிறித்துவ மதத்தின் மதப்பிரசார முறைகளை, இதுவரை எந்தப் படமும் செய்ய துணியாத அளவுக்கு, நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்குக் காட்டுகிறார்கள். அதிலும் மருத்துவமனையிலும் பிரசாரமா என்ற கேள்வியெல்லாம் கேட்கிறார்கள். கடைசிக் காட்சியில் வரும் வசனம், மிகத் தெளிவாக, ஜீசஸ் பெயரையும் கிறித்துவ மதத்தின் பெயரையும் குறிப்பிடுகிறது. என்ன ஒரு தெளிவு! அனைவரையும் குழப்பி, சென்சாரைக் குழப்பி, இப்படிச் சொல்லியும் வைப்பதெல்லாம், பின்நவீனத்துவத்தின் உச்சம் என்றே சொல்லவேண்டும்.

பல காட்சிகள் உறைய வைப்பவை. தன் கணவனுக்காகக் காத்திருக்கும் பெண்ணின் முன் கணவன் வந்திறங்கும் காட்சி, அந்தப் பையன் தண்ணீரில் தன் கையைத் தேய்த்து தேய்த்துக் கழுவும் காட்சி, தன் குழந்தை முன்பு பெண்ணாகிப் போன ஆண் அழும் காட்சி, அனைத்து காவல்நிலையக் காட்சிகளும், ரம்யா கிருஷ்ணன் மருத்துவமனையில் கதறும் காட்சி, ஃபஹத் ஃபாஸில் சார் சார் என்று சந்தோஷத்துடன் இறுதியில் கத்தும் காட்சி, சம்ந்தாவின் அலட்டல் இல்லாத நடிப்பு, மயக்கம் தெளிந்து உணர்வுபெற்ற பையன் அம்மாவிடம் சொல்லும் முதல் வசனம் – ஒவ்வொன்றும் அட்டகாசம். அதிலும் விஜய் சேதுபதி வழுக்கைத் தலையுடன் காவலதிகாரியைத் தாக்க வரும் காட்சி – தமிழ்த் திரையுலக வரலாற்றிலும் விஜய் சேதுபதியின் திரை வாழ்விலும் என்றென்றும் நினைவுகூரப்படும்.

இத்தனையோடு ஏமாற்றமே இப்படத்தில் இல்லையா என்றால், நிச்சயம் உண்டு. அவை – லாஜிக் தொடர்பானவை. அனைத்துக் கதைகளின் பின்னேயும் ஒரு சிறிய நம்பிக்கையின்மை இருக்கிறது. இப்படி நடக்கமுடியுமா, இப்படிச் செய்வார்களா என்று யோசிக்கிறோம். இது ஒரு பலவீனம். இதை ஏற்றுக்கொண்டு விட்டால் பொக்கிஷத்தின் கதவுகள் திறந்துவிடும். அடுத்த குறை, யதார்த்தங்கள் நிகழ்த்தும் பெரிய விஷயங்கள். பொதுவாகவே புதிய அலை இயக்குநர்களுக்கு இந்தத் தத்துவத்தின் மீது பெரிய ஈர்ப்பு இருப்பதைப் பார்க்கிறேன். இப்படத்திலும் இது உள்ளது. மூன்றாவது குறை, தத்துவ அறிவியல் ரீதியான குழப்பத்தைத் திரைப்படத்தில் காட்ட நினைத்தது. இது குறை என்பது எந்த நோக்கில் என்றால், அதுவரை பறந்த படத்தின் வேகம் தொடர்ச்சியான இந்த இரண்டு காட்சிகளில் எதிர்கொள்ளும் தடையின் காரணமாகச் சொல்கிறேன். மிஷ்கினின் அறிவுக்கண் திறக்கும் காட்சியும், ஏலியன் காட்சிகளும் பெரிய தடையைக் கொடுக்கின்றன. அதேசமயம் தவிர்க்கமுடியாத அளவுக்கு முக்கியத்துவமும் கொண்டவை. இன்னொரு குறை, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத நான்கு பயணங்களின் தொடர் காட்சிகள். இதுபோன்ற படங்கள், ‘நேரம்’ தொடங்கி நிறைய வந்துவிட்டன. 

தமிழில் எப்போதாவது நிகழும் அபூர்வம் இப்படம். இன்னொரு முறை பார்த்தால் மட்டுமே, சாதிவெறி நாட்டுப் பற்று தொடர்பான விஷயங்கள், ஃபஹத் சமந்தா தொடர்பான உறவுச் சிக்கலெல்லாம் புரியும். நியாயமான விமர்சகர் இப்படத்தை இரண்டு முறையாவது பார்க்கவேண்டிய அவசியத்தை, அதிலும் மிகச் சிறந்த திரையரங்கில் பார்க்கவேண்டிய அவசியத்தை உணர்வார். நான் உணர்கிறேன். தவறவிடாதீர்கள். குழந்தைகளுடன் செல்லாமல் தனியாகச் செல்லுங்கள்.

– ஹரன் பிரசன்னா

Share

ஐரா: இரும்புக் கோடரியும் தங்கக் கோடரியும்

மார்ச் மாதத்தில் தேர்வுகள் முடிவடைந்ததுமே குழந்தைகளைத் திரையரங்குக்கு ஈர்க்கும் நோக்கில் பேய்ப்படங்கள் வரத் துவங்கிவிடும். இந்தமுறை வரும் அனைத்துப் பேய்ப்படங்களையும் என்ன ஆனாலும் பார்த்துவிடுவது என்று முடிவெடுத்திருக்கிறேன். ஹே ராம்! முதல் போணி ஐரா. எப்படியாவது ஒரு ஹிட் பேய்ப்படத்தைத் தந்துவிடுவது என்ற வெறியில் இருக்கும் நயந்தாராவிடம் இன்னும் எத்தனை முறை சிக்கிக்கொள்வோம் என்று தெரியவில்லை.

பேய்ப் படம் என்றால் ஒரு காட்சியில் கூடப் பயம் இருக்கக்கூடாது என்பதே தமிழ்ப் பேய்ப்படங்களின் தலைவிதி. காஞ்சனா, அரண்மனை போன்ற கொடுமைகள் பெற்ற வெற்றி, தொடர்ச்சியாக காமெடிப் பேய்ப் படங்களைக் கொண்டு வந்தன. கொஞ்சம் நல்ல முயற்சிகளான, தமிழின் உருப்படியான பேய்ப்படங்களான பீட்ஸா, மாயா மற்றும் டிமாண்டி காலணி போன்றவை வசூலில் ஒப்பீட்டளவில் பின்தங்கிப் போக, அசட்டு காமெடிப் பேய்ப் படங்கள் வசூலைக் குவித்தன. இந்த ஆசையில் வந்த படங்களுக்கு மத்தியில் ஐரா கொஞ்சம் வித்தியாசமானது. ஆம், இதில் அசட்டு காமெடிகூடக் கிடையாது!

கதை என்ற ஒன்று இல்லவே இல்லாமல், ஒரு காட்சி கூடப் பயமே இல்லாமல், ஒரு காட்சி கூடச் சிரிப்பே இல்லாமல் ஒரு படம். அதுவும் பேய்ப் படம். அதற்கு ஒரு ஃப்ளாஷ் பேக். அந்த ஃப்ளாஷ் பேக், 1960களில் ஜெமினி கணேசனும் சாவித்திரியும் அழுது வடிவதைவிடக் கூடுதலாக அழுது வடிகிறது. அதிலும் அந்த க்ளைமாக்ஸ், ஐயகோ.

நயந்தாராவுக்கு வயதாகிக்கொண்டே வருவது தெளிவாகத் தெரிகிறது. உடலைக் கச்சிதமாக வைப்பதன் மூலம் இளமையாகத் தெரிய முயல்கிறார். தெரிகிறார். முகம் காட்டிக்கொடுத்துவிடுகிறது. ஆனாலும் அழகாகவே இருக்கிறார். ஓம் சாந்தி! கருப்பு நயந்தாராவாக அவர் ஓவராக நடிப்பதெல்லாம் கொடுமையின் உச்சம். தாங்கமுடியவில்லை.

யோகி பாபு ஏன் வந்தார், குலப்புள்ளி லீலா ஏன் செத்தார் என்பதெல்லாம் படுபயங்கர சஸ்பென்ஸ் காட்சிகள். அதைவிட அந்தப் வண்ணத்துப் பூச்சி ஏன் வந்தது என்பதை இயக்குநர் இனி வரும் படத்தில் சொன்னால்தான் உண்டு. வண்ணத்துப் பூச்சியே வெறுத்துப் போகும் அளவு அதை கிராஃபிக்ஸில் காண்பிக்கிறார்கள்.

கருப்பு நிறத் தோல், ராசியற்ற பெண் என்ற கொடுமையையெல்லாம் அப்படியே பொறுமையாக, மெல்ல, நீளமாக, தூக்கம் வருமளவுக்குக் காட்டுகிறார்கள். அந்தக் குழந்தை பிறந்ததும் அப்பா இடி தாக்கி இறப்பதாக எடுக்கவெல்லாம் எதையும் எதிர்கொள்ளும் தைரியமான மனது ஒரு இயக்குநருக்கு இருக்கவேண்டும்.

இதையெல்லாம் தாண்டி சிவப்பு நயந்தாராவை கருப்பு நயந்தாரா ஏன் கொல்ல நினைக்கிறார் என்பதற்குக் காட்டப்படும் காரணம், ஐயையோ ரகம். ஹீரோ கருப்பு நயந்தாராவைக் காதலித்து, இரும்புக் கோடரியைத் தொலைத்தவனுக்கு வனதேவதையின் மூலம் தங்கக் கோடரி கிடைப்பது போல சிவப்பு நயந்தாரா கிடைக்க, ஒரு நிமிடம் பொறாமைப்பட்டுவிட்டேன். ஆனால் இயக்குநர் பொலிடிகல்லி கரெக்நெஸ்ஸைக் கைவிடாமல் இன்னொரு க்ளைமாக்ஸ் வைத்து நம்மை மந்திரித்து அனுப்பிவைக்கிறார்.

மிக சுமாரான படமாக்கம், நாடகம் போன்ற காட்சிகள் என்று எல்லாவிதமான மொக்கைகளும் ஒருங்கே அமைந்த ஒரு திரைப்படம். நயந்தாரா நடிக்காமல் இருந்தால் அழகாக இருக்கிறார். ஆனால் படத்தில் நடிக்கவேண்டிய கட்டாயம் வேறு. நம்மைக் கதறடிக்கிறார். அடுத்த பேய்ப் படமாவது நயந்தாராவுக்குச் சரியாக அமையட்டும்.

இந்தக் கொடுமையையெல்லாம் விஞ்சும் இன்னொரு கொடுமையைச் சொல்லாவிட்டால் முழுமையாகாது. ஐராவதம் என்ற யானையின் நினைவு சக்தியை மையமாக வைத்து இந்தப் படத்துக்கு ஐரா என்று பெயர் வைத்தார்களாம். :சுவரில் முட்டிகொள்ளும் ஜிஃப்:

நன்றி:
https://oreindianews.com/?p=4294

Share

பெயர் சொல்லி அழைத்தல்

ஒருவர் தன்னைப் பெயர் சொல்லி அழைக்கச் சொல்வது நல்ல விஷயமே. ஆனால் யார் யாரிடம் எப்போது எப்படிச் சொல்கிறார்கள் என்பது முக்கியமானது. அதேசமயம் யார் சொல்லவில்லை என்பதுவும் அதன் பின்னணியோடு பார்க்கப்படவேண்டியதே. ராகுல் தன்னை ராகுல் என்று அழைக்கச் சொன்னது மாணவிகளிடம். இதே உரிமை அவரது கட்சிக்காரர்களுக்கு உண்டா என்பதைக் கேட்டால் போதும், பதில் கிடைக்கும். குறைந்தபட்சம் மாணவிகளிடமாவது சொல்கிறாரே என்று பாராட்டுவதும் சரிதான். ஆனால் இதன் எதிர்ப்புள்ளியில் அப்படிச் சொல்லாதவர்களையெல்லாம் திட்டுவது சரியானதல்ல.

ஒருவகையில் எவ்வளவு வயதானவர் என்றாலும் அவர்களைப் பெயர் சொல்லி அழை என்பது மேற்கத்திய மனோபாவம். அதே மனோபாவத்தில் நாம் இந்தியாவிலும் அதை அப்படியே கடைப்பிடிக்கத் தேவையில்லை. குறைந்தபட்சம், அப்படி அழைக்காதவர்களைத் திட்டவாவது தேவையில்லை. நம் தெருவில் இருக்கும் 50 வயதான ஒருவரை 40 வயதான நாம் பெயர் சொல்லி அழைப்போமா? சம வயதே என்றாலும் அழைப்போமா? பெண்களை அழைப்போமா? அது நம் மரபல்ல. அதை வலிந்து நாம் பயன்படுத்தவேண்டிய அவசியமும் இல்லை. அண்ணன், மாமா, சித்தப்பா, அத்தை என்று உறவு சொல்லி அழைப்பதே நம் வழக்கம். மறைந்துவரும் இப்பழக்கத்தைக் கைவிடுவது வருத்தம் தரும் என்பது ஒரு பக்கம், இப்படி அழைப்பவர்களையெல்லாம் பழமைவாதிகள் என்னும் போலி மனப்பான்மை இன்னொரு பக்கம். இதில் அமெரிக்காவைப் பார் ஐரோப்பாவைப் பார் என்று சொல்லிக் கிண்டலும் செய்துகொள்வார்கள்.

இன்று ராகுல் என்று தன்னை அழைக்கச் சொன்னதைக் கொண்டாடுபவர்கள் யார் என்பது இன்னுமொரு நகைமுரண். ஒரு மேடையில் நடிகை மீனா கருணாநிதி ஜி என்று சொன்னதற்கு உடன்பிறப்புகள் கொந்தளித்து அவரைக் கலைஞர் என்று அழைக்கச் சொல்லி கருணாநிதி முன்பே பாடம் எடுத்தார்கள். இவர்கள்தான் இன்று ராகுலை ராகுல் என்றழைப்பது குறித்துப் புளகாங்கிதப்படுகிறார்கள்.

கருணாநிதி பலமுறை தன்னைக் கலைஞர் என்று அழைக்காதது குறித்து வருந்தி இருக்கிறார். நேரடியாகவும் மறைமுகமாவும். அவர் ஜெயலலிதாவை அம்மையார் என்று சொல்வது அவர் விருப்பம். அதேபோல் ஜெயலலிதா அவரைக் கலைஞர் என்று சொல்லாமல் இருப்பது அவரது தேர்வு. ஆனால் இந்த வேற்றுமைகளை கருணாநிதியால் ஏற்றுக்கொள்ளமுடியவில்லை. அதே நேரம் திமுகவினர் கருணாநிதியைக் கலைஞர் என்று அழைப்பதில் எவ்விதத் தவறும் இல்லை. அவர்கள் உரிமை அது, அன்பைச் சொல்லும் விதம் அது. கலைஞர் என்று அழைக்காதவர்களைக் குறிவைக்கும்போதுதான் பிரச்சினை ஆகிறது.

நேரில் பேசும்போது பெயர் சொல்லி அழைப்பது தவறல்ல. ஆனால் அப்படி அழைக்காதவர்கள், அழைக்கச் சொல்லாதவர்கள் எல்லாம் அடிப்படைவாதிகளும் அல்ல. அதேபோல் ஒரு கட்டுரையிலோ பேட்டியிலோ பெயரை மட்டும் சொன்னால் போதும். அம்மா, சூப்பர் ஸ்டார், கலைஞர் என்ற விளிகள் எல்லாம் தேவையற்றவை. அக்கட்சியினராக விரும்பிப் பயன்படுத்திக்கொண்டு தங்கள் அடிமைத்தனத்தை அல்லது விசுவாசத்தைக் காட்டிக்கொள்வது இதில் வராது.

எனவே ராகுல், நீங்கள் அழைக்கச் சொன்னது உங்கள் அளவில், உங்கள் மேல்நாட்டுச் சிந்தனையின்படி, சரி. அதேபோல் மற்ற இந்தியத் தலைவர்கள் அப்படி அழைக்கச் சொல்லாமல் இருப்பது எங்கள் பண்பாட்டின் படி சரி.

நன்றி ராகுல் ஜி!

Share