Archive for ஹரன் பிரசன்னா

காந்தாரா

கடந்த இரண்டு வருடங்களில் நான் பார்க்காத திரைப்படங்களின் பெயர்களைப் பட்டியலிட்டால் பேரதிர்ச்சியாக இருக்கும். குறிப்பாகத் தமிழில் மிக அதிகம். ஆம், நிறைய முக்கியமான திரைப்படங்களைப் பார்க்கவில்லை. என்னவோ ஒரு சலிப்பு, வேலைப்பளுவும் சின்ன காரணம்.

நேற்றுதான் காந்தாரா பார்த்தேன். 🙂

ஹே ராம் திரைப்படத்துக்கு அடுத்து நான் மிகவும் ஆச்சரியத்துடன் ரசித்துப் பார்த்த படம் இதுவே. ஒவ்வொரு ஃப்ரேமிலும் உழைப்பு, பிரம்மாண்டம், எமோஷன் என அசத்திவிட்டார்கள். கதை என்று பார்த்தால், பெரிய புதுமை எல்லாம் இல்லை. ஆனால் அதை கிராம தெய்வ வழிபாட்டுடன் இணைத்ததுதான் பெரிய விஷயம்.

படம் ஓடுமா ஓடாதா, யார் என்ன சொல்வார்கள் என்பதைப் பற்றியெல்லாம் யோசிக்காமல், நாம் நம்பும் கதைக்கு 100% உயிரைக் கொடுக்கவேண்டும் என்பதுதான் திரைப்படத்தின் ஆதார விதி. இயக்குநர், நடிகர் என அனைவரும் இந்தப் புள்ளியில் ஒருங்கிணைய வேண்டும். இந்தப் படத்தில் அது நிகழ்ந்திருக்கிறது.

பஞ்சுர்ளி தெய்வ கடாக்‌ஷம் பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த ஒருவன் பன்றியை வேட்டையாடுகிறான் என்ற இருமைப் புள்ளி மிக அருமை. இதிலேயே எல்லாம் சரியாக அமைந்துவிட்டது.

ரிஷப் ஷெட்டிக்குள் குலிகா தெய்வம் வரவும், வெறி கொண்டது போல் அவர் நடித்த நடிப்பு அசரடித்துவிட்டது. படம் அங்கேயே முடிந்துவிட்டது. ஆனால் அதற்குப் பிறகு பூத கோலா (தெய்வ ஆட்டம்) ஆட்டத்தைப் பொறுமையாகக் காண்பிக்கிறார்கள். அதில் அனைவரின் கைகளையும் இணைத்து ஒன்றாக்கி, ஓ ஓ என்ற சத்தத்தை மட்டும் தரும் காட்சி – புல்லரிக்க வைக்கிறது.

கடலோரக் கிராமக் கன்னட வட்டார வழக்கு வெறி கொள்ள வைத்துவிட்டது. பல வசனங்களை நிறுத்தி நிதானமாகக் கேட்டேன்.

ரிஷப் ஷெட்டி, ராஜ் ஷெட்டி, ரக்‌ஷித் செட்டி மூன்று பேரும் கன்னடத் திரையுலகத்தை எங்கோ கொண்டு போகப் போகிறார்கள். இதில் ரக்‌ஷித்தும் ரிஷப்பும் கடலோரக் கிராமக் கதைகளைக் குத்தகைக்கு எடுத்திருக்கிறார்கள் போல. சப்த சாஹரக்காச்சே எல்லோ – சைட் ஏ படத்தில் கடலையைக் கதாநாயகி கேட்கும் காட்சியும், உலிதவரு கண்டந்தெ (மறக்க முடியாத திரைப்படம்) படத்தில் வரும் கடலலைகளின் சத்தமும் இன்னும் கண்ணில் நிற்கிறது.

Share

விநோதக் கனவுகள்

சில விநோதமான கனவுகள் வந்தபடி இருக்கின்றன. ஏன் வருகின்றன என்பதை யூகிக்கக் கூட முடியவில்லை. பல கனவுகள் காலை எழுந்ததும் மறந்துவிடுகின்றன. அந்தக் கனவு நிகழும்போது மறுநாள் எழுந்ததும் அனைவரிடமும் சொல்லவேண்டும் என நினைத்துக்கொள்வேன். ஆனால் மறுநாள் கனவோ அல்லது நான் அப்படி நினைத்ததோ எதுவுமே ஞாபகம் இருக்காது. ஏதோ ஒரு சமயத்தில் ஒரு மின்னலைப் போல அக்கனவு நினைவுக்கு வரும். நாளாவட்டத்தில் அதுவும் மறந்து போகும்.

இனி இப்படி வரும் கனவுகளைப் பற்றிக் குறித்து வைத்துக்கொண்டால் என்ன என்று தோன்றியது. உண்மையாக வரும் கனவுகளை மட்டுமே குறிக்கப் போகிறேன். என் ஆசைகளை, கற்பனைகளை அல்ல! அடுத்த இருபது வருடங்களில் என்ன என்ன கனவுகள் வருகின்றன என்று பார்க்கலாம்.

நேற்று ஒரு கனவு. (இதை எழுதும்போது அதுவும் சட்டென மறந்துவிட்டது. பக்கென்று ஆகிவிட்டது. ஒருவழியாக அதைக் கண்டடைந்தேன்.) என் அம்மாவின் புத்தகம் ஒன்றை நான் பதிப்பித்திருக்கிறேன். அந்தப் புத்தகம் வெளிவந்து ஒரு வார காலம் ஆகியும் அது என் கைக்கு வரவில்லை. என் அம்மாவுக்குக் கோபம். புத்தகம் வந்து ஒரு வாரம் ஆகியும் கூட அதை என் கண்ல கூட காமிக்க மாட்டியா என்கிறார். உடனே நான் எங்கள் சேல்ஸ் டீமுக்கு போன் செய்கிறேன். எங்கம்மா எழுதின புத்தகத்தைக் கொடுத்து விடுங்க என்கிறேன். இவ்வளவுதான் நினைவிருக்கிறது. இதிலிருக்கும் ஆச்சரியங்கள் என்ன? என் அம்மா ஸ்ரீராமஜெயம் எழுதவே திணறுவார். அவர் ஏன் புத்தகம் எழுத வேண்டும்? அம்மா இறந்து 5 வருடங்கள் ஓடி ஏன் இப்படி ஒரு கனவு? அதைவிட ஆச்சரியம், புத்தகத்தின் பெயர் கொடுங்கோளூர் என்று ஆரம்பிக்கிறது. இந்த வார்த்தை கூட என் அம்மாவுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால் கனவு கண்டது நாந்தானே!

முந்தாநாள் ஒரு கனவு. ஒரு ஊர். நடுவில் தங்கக் கோபுரம். எந்தத் தெருவில் சென்றாலும் அந்தக் கோபுரத்தைப் பார்க்கலாம். அப்போது அந்தத் தெருவில் ஒரு வீட்டில் இருந்து ஒரு பாடல் ஒலிக்கிறது. அசந்து போய் கேட்கிறேன். இளையராஜாவின் இசையில் உருவான பாடல். பாடியது புஷ்பவனம் குப்புசாமி. இந்தப் பாடலைப் பற்றி ஏன் யாரும் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள் என்று எரிச்சலாகிறேன். இப்போதுதான் உங்களிடம் சொல்கிறேன்!

சில மாதங்களுக்கு முன்பு ஒரு கனவு. மறைந்து போன ஒருவர் என் கனவில் வந்து சோகமாகவும் பின்பு அதிர்ச்சியாகவும் பேசிக்கொண்டிருந்தார். இதை மறக்க நினைக்கிறேன் என்பதால் மேற்கொண்டு எழுதப் போவதில்லை.

என் அம்மாவின் மறைவை அடுத்த ஆறு மாதங்களில் தினம் தினம் அம்மாவின் கனவுதான். அதில் ஒரு கனவு வித்தியாசமானது. நானும் அம்மாவும் கல்லுப்பட்டியில் இருக்கிறோம். அங்கே ஊர்ச்சாத்திரை. நான் சின்ன பையனாக இருக்கிறேன். சாத்திரையில் திரை கட்டிப் படம் போடுகிறார்கள். நான் படம் பார்த்தே ஆகவேண்டும் என்கிறேன். கோவிலுக்குப் போகணும் என்கிறார் அம்மா. திடீரென்று அங்கே சாப்பாடு போடுகிறார்கள். நான் சாப்பாட்டை வாங்கிக்கொண்டு திரைக்கு முன்னால் படம் பார்க்க உட்கார, எழுத்து ஓடுகிறது. படம் பெயர் மூவர்! (இப்படி ஒரு படம் வந்ததாகக் கூட தெரியவில்லை!) ஒன்னு படம் பாரு, இல்லைன்னா சாப்பிடப் போ என்று யாரோ சொல்ல, என் அம்மா கோபமாகி, சின்ன பையன் படம் பாத்துக்கிட்டே சாப்பிட்டா என்ன என்று அவர்களைத் திட்டிவிட்டு, என்னை அழைத்துக்கொண்டு கோபமாக நடக்கிறார். கட் செய்தால், நெல்லையப்பர் கோவிலின் வளாகத்தில் நடந்து வருகிறோம். நான் அதே சின்னப் பையன். ஆனால் அம்மா அவர் சாகும் தறுவாயில் இருந்த தோற்றம். வெளிறிய உள்பாவாடையை நெஞ்சுக்கு மேல் ஏற்றிக்கட்டி நடக்க முடியாமல் நடக்கிறார். படம் பாத்துட்டு வந்துருக்கலாம் என்கிறேன் நான். அம்மா முச்சு வாங்க நடந்து வந்து, பிரகாரத்தில் இருக்கும் படிகளில் இறங்கச் சிரமப்பட்டு அங்கே இருக்கும் கைப்பிடிச் சறுக்கில் சறுக்கியபடி வருகிறார். நான் அம்மா என்னாச்சு உனக்கு என்று அலறுகிறேன். இக்கனவு வந்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டன.

இனி இது போன்ற கனவுகள் அடிக்கடி வரலாம். என்னைத் தூங்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

Share

துபாய் பாபா

பாபா 2002 ஆகஸ்ட் 15ல் இந்தியாவில் வெளியானது. அந்த மே மாதத்தில் நான் துபாயில் இருந்து இந்தியாவுக்கு விடுமுறைக்கு வந்திருந்தேன். பாபா பாடல்கள் வெளியானதும் பாபாவின் பாடல்களை மனப்பாடம் ஆகும் அளவுக்குக் கேட்டேன். அப்போதுதான் எனக்கு ஒரு பெண்ணைப் பார்த்து நிச்சயம் மாதிரி செய்து வைத்திருந்தார்கள். அங்கே இருந்த ஐம்பது நாள்களும் ஒரு நாள் விடாமல் அவளுடதான் ஊர் சுற்றல். மீண்டும் துபாய் திரும்ப வேண்டும். திருவனந்தபுரம் விமான நிலையத்துக்குக் காரில் போனோம். ரிபீட் மோடில் பாபா பாடல்கள். மாயா மாயா பாடலும், பாபா ஒரு கிச்சு தா பாடலும் ராஜ்யமா பாடலும் எனக்கு மிகவும் பிடித்துப் போயின.

துபாயில் ஆகஸ்ட் 22 வாக்கில்தான் பாபா வெளியானது. திருவோணத்துக்கு. முதல் நாள் முதல் ஷோ பார்க்க வாய்ப்பில்லை. வேலைக்குப் போயாக வேண்டும். மாலைக் காட்சிக்குப் போக வேண்டும் என்றால் கொஞ்சம் சீக்கிரமே கிளம்பினால்தான் டிக்கட் கிடைக்கும். எப்போதும் என்னுடன் படம் பார்க்க வரும் மலையாளி நண்பன் சந்தோஷ் திருவோணம் என்பதால் படத்துக்கு வரவில்லை என்று சொல்லிவிட்டான். எப்படியாவது சரியான நேரத்துக்குப் போகவேண்டும், டிக்கட் கிடைக்கவேண்டும் என்கிற என் பரிதவிப்பைப் பார்த்த டாக்டர் கருண் (தமிழர்) என்னை சரியான நேரத்தில் அவரது காரிலேயே தியேட்டரில் டிராப் செய்வதாக வாக்களித்தார். செய்யவும் செய்தார்.

டிக்கட் கிடைத்தது. படம் பார்க்க தியேட்டருக்குள் நுழைந்தால் பாதிக்கு மேல் மலையாளிகள். திருவோணம் என்பதால் கொண்டாட்டத்திற்கு வேறு படங்கள் இல்லை என்பதால் இப்படத்துக்கு வந்ததாகப் புலம்பினார்கள் சிலர். படத்தில் சினிமா சினிமா பாடலுக்கு தியேட்டரே அதிர்ந்தது. பல மலையாளிகள் எரிச்சலுடன் அமர்ந்திருந்தார்கள். நான் இந்தியாவில் வாழ முடியாத ஏக்கத்தை இந்தப் படத்தில் வந்த கை தட்டல்கள் கொஞ்சம் குறைத்தன. எங்கேயோ ரத்னா அல்லது பார்வதி தியேட்டரில் பார்க்கும் ஒரு உணர்வு. இப்போது நினைத்தாலும் இந்த நினைவு ஒரு சுக அனுபவம்தான்.

இடைவேளை வரை படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இடைவேளைக்குப் பிறகு அலை பாய்ந்தது. படம் முடிந்து போகும்போது பல இஸ்லாமியர்கள் மிகவும் ஆச்சரியமாக, இத்தனை மாய தந்திரம் உள்ள ஒரு படத்தை எப்படி வளைகுடாவில் அனுமதித்தார்கள் என்று பேசியபடி போனார்கள்.

படம் ஓடவில்லை. இந்தியாவிலும் ஃப்ளாப் என்றே நண்பர்கள் சொன்னார்கள். இருக்கலாம். பாபாவில் ரஜினியின் கெட்டப் பலருக்குப் பிடிக்காது. எனக்குப் பிடித்திருந்தது. பாடல்கள் பலருக்குப் பிடிக்கவில்லை, எனக்குப் பிடித்திருந்தது. முக்கியமாக ஏ.ஆர்.ரஹ்மானின் பின்னணி இசை முன்னேறியது போலத் தோன்றியது இந்தப் படத்தில்தான். காதலி எல்லாம் தேவையில்லை என்று ரஜினி நடித்தது அந்த நேரத்தில் எனக்கு ஆச்சரியமாக இருந்தது. இடைவேளைக்குப் பிறகு வந்த தந்த்ரா காட்சிகளில் இயக்குநர் செய்த பெரிய தவறு, ரஜினி படம்னா என்ன வேணா பாப்பாங்க என்கிற திமிர்தான். ஓம்புரியை ஹிந்தியில் பேச விட்டு அதற்குத் தமிழில் வசனம் பேசி டப்பிங் தெலுங்கு படம் போல ஆக்கி இருந்தார்கள். ஆனாலும் ஒரு நாஸ்டாஜியாவாக துபாய் பாபா எப்போதும் எனக்கு மணக்கத்தான் செய்கிறது. கூடவே, பேசி வைத்த பெண்ணுடன் ஊர் சுற்றிய நினைவுகளும்.

பின்குறிப்பு: இதில் இன்னொரு வரலாற்றுக் குறிப்பும் இருக்கிறது. பாபா திரைப்படம் வருவதற்கு முன்பே இதில் வரும் அசாத்திய ஜாதகம் சம்பந்தப்பட்ட ஒரு கதையை நான் என் கைப்பட அப்போதைய டைரி ஒன்றில் எழுதி இருந்தேன். இதைப் பற்றி நான் மரத்தடி யாஹூ குழுமத்தில் சொன்ன போது, செகண்ட் ஷோ பாத்துட்டு தூக்க கலக்கத்துல அதையே நீ எழுதி வெச்சிருப்ப என்று கேஸை முடித்து வைத்துவிட்டார்கள்!

Share

Swasam Subscription Scheme – SSS

சுவாசம் சந்தா திட்டம் – SSS – Swasam Subscription Scheme

தினந்தோறும் புத்தகத் திருவிழா

எப்போது புத்தகம் வாங்கினாலும் 15 முதல் 20% தள்ளுபடி வேண்டுமா?

இன்றே இணைவீர் – சுவாசம் சந்தா திட்டம் – SSS

மேலதிக விவரங்களுக்கு: 8148066645 (ஜி பே எண்ணும் இதுதான்.)

இத்திட்டத்தில் இணைய கூகிள் ஃபார்ம் லின்க் கமெண்ட்டில் தரப்பட்டுள்ளது.

நிபந்தனைகள்

• இத்திட்டத்தில் சேர நுழைவுக் கட்டணம் ரூ 299. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நீங்கள் இந்தச் சந்தாவைப் புதுப்பிக்கவேண்டும். (இரண்டு ஆண்டுகள் முடிந்ததும் இந்த 299 ரூபாய் மதிப்பிற்கும் நீங்கள் புத்தகம் வாங்கிக் கொள்ளலாம்.)

• நீங்கள் சந்தாதாரர் ஆனதும் உங்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும். இந்த அடையாள அட்டையைப் பயன்படுத்தி நீங்கள் எங்களிடம் தள்ளுபடியுடன் புத்தகம் வாங்கலாம்.

• 500 ரூபாய் வரை புத்தகம் வாங்கினால் 15% தள்ளுபடி. 500 ரூபாய்க்கு மேல் புத்தகம் வாங்கினால் 20% தள்ளுபடி.

• சுவாசம் பதிப்பகம் மட்டுமின்றி வேறு எந்தப் பதிப்பகத்தின் புத்தகத்தை வாங்கினாலும் இந்தத் தள்ளுபடி உங்களுக்குக் கிடைக்கும்.

• 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால், இந்தியன் போஸ்டல் சர்வீஸ் மூலம் இந்தியா முழுமைக்கும் இலவசமாக உங்களுக்குப் புத்தகம் அனுப்பி வைக்கப்படும். கொரியர் மூலம் புத்தகத்தைப் பெற வேண்டுமென்றால் நீங்கள் கொரியருக்கான பணத்தைத் தரவேண்டும்.

• இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி இரண்டு ஆண்டுகளில் நீங்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசம் நேரடியாகப் பங்கேற்கும் புத்தகக் கண்காட்சிகளிலும் நீங்கள் இச்சலுகையைப் பெறலாம்.

• சுவாசத்தின் நேரடிப் புத்தகக் கடைகளிலும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் புத்தகம் வாங்கலாம்.

• சுவாசத்தின் சமூக ஊடகங்கள் அதாவது வாட்ஸப், இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், திரெட், டிவிட்டர் மூலமும் இச்சலுகையைப் பயன்படுத்தி நீங்கள் ஆர்டர் செய்யலாம்.

• வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மற்றும் தமிழர்களும் இத்திட்டத்தில் பங்குபெறலாம். புத்தகம் அனுப்புவதற்கான செலவை நீங்கள் ஏற்கவேண்டும்.

• எங்களிடம் கிடைக்காத புத்தகங்கள் இருந்தால், அவற்றை வாங்கித் தர இயன்ற அளவுக்கு முயல்வோம். அப்படி வாங்க முடியாத பட்சத்தில் உங்களிடம் சொல்லிவிடுவோம்.

• சுவாசம் விற்பனை செய்யாத பதிப்பகமே இல்லை என்பதால், இத்திட்டம் நிச்சயம் உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

• புத்தக வாசிப்பாளர்களுக்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பள்ளிகளுக்கும் ஏற்ற அருமையான திட்டம் இது. (**பள்ளிப் புத்தகங்களுக்கும் கைடுகளுக்கும் இத்திட்டம் பொருந்தாது**.)

• எங்களிடம் கிடைக்கும் ஆங்கிலப் புத்தகங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும் என்பது உங்களுக்குக் கூடுதல் சலுகை.

• எங்களிடம் கிடைக்கும் புத்தகங்களை எங்கள் வலைத்தளம் www.SwasamBookart.comல் பார்க்கலாம். இதில் பட்டியலிடப்பட்டிருக்கும் அனைத்துப் புத்தகங்களும் ஸ்டாக்கில் இருக்கும் என்று சொலல முடியாது. ஆனால் இப்புத்தகங்கள் பதிப்பாளரிடம் ஸ்டாக்கில் இருக்குமானால் நாங்கள் நிச்சயம் உங்களுக்கு வாங்கித் தருவோம்.

இத்திட்டத்தைப் பற்றி உங்கள் நண்பர்களுக்கும் சொல்லுங்கள். இன்றே இதில் இணைவீர்.

கூகிள் ஃபார்ம் லின்க்: https://forms.gle/3RvHUbZ8YVixGhey9

Share

மாமன்னன் – சாதா மன்னன்

மாமன்னன் – தீவிரமான வெளிப்படையான குறியீடுகளுடன் ஒரு படம். பட்டியலின ஆதரவுத் தரப்பு என்பதை திராவிட அரசியல் நிலைப்பாட்டுடன் வெளிப்படுத்தும் தீவிரமான கலைத்தன்மையுடன் கூடிய திரைப்படங்களைப் போல இன்னும் அதன் எதிர்த்தரப்பிலிருந்து அதே பட்டியலின ஆதரவுடன் வராமல் இருப்பது நம் துரதிஷ்டம் என்றே சொல்லவேண்டும். மாரி செல்வராஜ், பா.ரஞ்சித் போன்றவர்கள் திராவிட தலித் ஆதரவைத் தீவிரமாக முன்னெடுத்து வருகிறார்கள்.

இத்திரைப்படத்தை எவ்விதச் சார்பும் இன்றி ஆராய்ந்து பார்த்தால்,

• முதல் நாற்பது நிமிடங்கள் படம் எதையுமே சொல்லவில்லை. தாமிரபரணியில் ஆளும்கட்சி / போலிஸால் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் மீது நிகழ்த்தப்பட்ட வன்முறையை இத்திரைப்படம் சாதிய மோதலாக உருவகிக்கிறது. ஆனால் இந்த முக்கியமான சம்பவம் படத்தின் மையச் சரடோடு பயணிக்காததால் வெறும் ஒரு காட்சியாகத் தனித்து நின்றுவிடுகிறது. எப்படியாவது பதற்றத்தைப் பார்வையாளர்களின் மனதில் உருவாக்கிவிடவேண்டும் என்ற இயக்குநரின் ஆசையைத் தாண்டி எதுவுமில்லை.

• அதற்கடுத்த ஒரு மணி நேரம், பரபரப்பின் உச்சம். அதுவும் மாமன்னன் நாற்காலியில் உட்காரும் காட்சி மிக அருமை.

• அதன் பின் படத்தில் பொருட்படுத்தத்தக்க கோர்வையான காட்சிகளே இல்லை என்று சொல்லிவிடலாம். அதுவரை மிகத் துல்லியமாகச் சொல்லப்பட்ட வசனங்கள் நீர்த்துப் போகத் தொடங்குகின்றன. மீண்டும் மீண்டும் ஒரே விதமான காட்சிகள், ஒரே விதமான வசனம். இவையெல்லாம் வெறும் தனித்தனிக் காட்சிகளாகத் திரையில் தோன்றி மறைகின்றன. அவை எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்கவில்லை. சாவுக்கு வரும் காட்சி, திடீரென இளைஞர்கள் திரண்டு வந்து நிற்கும் காட்சி, ரத்னவேலு காலில் விழும் காட்சி, காரில் மாமன்னன் துப்பாக்கியால் மிரட்டும் காட்சி, கீர்த்தி சுரேஷிடம் அதிவீரன் கோபமாகப் பேசும் காட்சி என எதுவுமே ஒட்டவில்லை. எல்லாம் திடீர் திடீர்க் காட்சிகள். அதிலும் ஒரே ஒரு வீடியோவில் மாமன்னன் வெல்வதெல்லாம் கொடுமை. அதிலும் அந்த வீடியோவில் மாமன்னன் பேசுவதெல்லாம் எவ்வித ஆழமும் இன்றி மேம்போக்காக இருக்கிறது.

• உச்சகட்டக் காட்சியில் மாமன்னன் சபாநாயகராகப் பதவி ஏற்பது அருமை. அதற்கு முந்தைய சண்டை எல்லாம் பொறுமையைச் சோதிக்கிறது.

• கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் மாமன்னன் அதிமுகவாகத்தான் இருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. முன்னாள் சபாநாயகர் தனபாலை மனதில் வைத்து மட்டும் சொல்லவில்லை. ரத்னவேலு கட்சி மாறியதும் அக்கட்சித் தலைவரின் படம் தினகரனில் முதல் பக்கத்தில் வருகிறது. தினகரனில் முதல் பக்கத்தில் விளம்பரம் வந்தால் நிச்சயம் அது அதிமுகவாக இருக்கமுடியாது. எனவே மாமன்னன் அதிமுகதான் என்பது நிரூபணமாகிறது. (நானே யோசிச்சேன்!)

• இத்தனை முக்கியமான படத்துக்கு இத்தனை சப்பையான பாடல்களைப் போட்டிருக்கவேண்டாம். இன்னும் கதைக்களத்துடன் பயணப்பட ஏ.ஆர்.ரகுமானால் முடியவில்லை. ஆனால் பின்னணி இசையில் சமாளிக்கிறார்.

• ரத்னவேலுவின் மனைவியாக வரும் நடிகையும் சரி, கீர்த்தி சுரேஷும் சரி – வீண்.

• பன்றி நாய் குறியீடெல்லாம் சுத்த அறுவை.

• வடிவேலுவின் நடிப்பு பிரமாதம். அதேபோல் ஃபகத்தின் நடிப்பும். இருவருக்கும் ஈடுகொடுக்க முடியாமல் உதயநிதி ஏதோ சமாளிக்கிறார்.

பரியேறும் பெருமாள் > கர்ணன் > மாமன்னன்.

Share

மணிப்பூர்ப் பிரச்சினை

மணிப்பூரில் நடந்திருப்பது அராஜகம். கொடுமை. மாநில மத்திய அரசுகள் இக்கொடுமைக்கான சரியான நியாயத்தையும் தீர்வையும் கொடூரங்களைச் செய்தவர்களுக்குச் சரியான தண்டனையையும் வழங்கவேண்டும்.

இக்கொடுமையைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், ஹிந்து ஹிந்துத்துவ இஸ்லாமிய கிறித்துவ இன்னும் யாராக இருந்தாலும் அதிகபட்ச தண்டனை வழங்கப்படவேண்டும்.

இந்தியா முழுக்கப் பற்றி எரியும் இப்பிரச்சினையைத் தீர்ப்பதையே மத்திய அரசு முதன்மை நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

மணிப்பூர் பிரச்சினை உலகளாவிய பிரச்சினையாகிறது. ஆனால் இதே போன்ற கொடூரங்கள் சில மாதங்களுக்கு முன்பு மேற்கு வங்கத்தில் நிகழ்ந்தபோது அது ஹிந்துத்துவவாதிகளுக்கு நிகழ்ந்த பிரச்சினையாக மட்டும் தேங்கிப் போனது. இன்று சங்கிகள் வாயில் என்ன இருக்கிறது என்று கேட்பவர்களுக்கு அன்று வாயில் என்ன இருந்தது என்பதே பதில்.

இந்த மணிப்பூர்ப் பிரச்சினையில் மட்டும் வாய் திறக்கும் போலி முற்போக்காளர்கள், இன்று மணிப்பூர்ப் பிரச்சினையை மதத்துக்காக, கட்சிக்காக அமைதியாகக் கடந்து போகிறவர்களைப் போலவே, மனிதர்களே அல்ல.

29-5-2021 அன்று ஒரு ஸூம் கலந்துரையாடலுக்காக நான் எழுதி வைத்துக்கொண்ட குறிப்புகள் – மேற்கு வங்கத்தில் நிகழ்ந்த வன்முறை குறித்து. இது பேசுவதற்காக எழுதிய குறிப்புகள் என்பதால், கட்டுரை போல இல்லாமல், தொடர்பற்று இருக்கும். நேரமிருப்பவர்கள் வாசியுங்கள். ஏன் மணிப்பூர்க் கலவரம் முக்கியம், ஏன் மேற்கு வங்கக் கலவரம் முக்கியமல்ல என்பதுவிளங்கலாம். எல்லாக் கலவரங்களுமே அராஜகமானவையே. அமைதியான இந்தியாவுக்கு எதிரானவையே. ஒன்றைக் கண்டித்து இன்னொன்றைக் கடந்து செல்பவர்களுக்குப் பேச வாயே வரக் கூடாது.

உண்மையாகவும் நியாயமாகவும் இருக்கவேண்டிய இந்தியா தன் பலத்தை இழந்து நிற்கும்படி நீங்களும் உங்களைப் போன்றவர்களும் செய்திருக்கிறீர்கள். யாராவது நியாயமாக இருக்க நினைத்தால் அவர்கள் மதச்சார்பானவர்கள் என்று முத்திரை குத்தப்படுகிறார்கள். காஷ்மீர் பண்டிட்டுகள் விவகாரம் தொடர்பாக ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தில் இப்படி உள்ளது.

அரசியல் அதிகாரம் கைமாறும்போது ஆள்பவர்கள் நியாய உணர்வுடன் இல்லாவிட்டால் என்ன ஆகும் என்பதற்கு மேற்குவங்கம் ஒரு உதாரணம்.

அரசியல் அதிகாரம் மமதையாகவும் வெறியாகவும் மாறும்போது எப்படி நடக்கும் என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது.

மூலகாரணம் என்ன?

தொடர்ந்து பழக்கப்படுத்தப்படுவது. இதை சிஸ்டம் என்று சொல்லலாம். சிஸ்டத்தை மாற்றுவது மிகவும் கடினமானது. முப்பது ஆண்டுகாலம் தொடர்ந்து மார்க்ஸியத்தின் பிடியில் மேற்கு வங்கம் இருந்தபோதும் அங்கே இப்படி தொடர்ந்து அரசியல்படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. வரலாறு காணாத படுகொலைகள். ஆனால் அவை எல்லாம் இங்கே ஊடகங்களில் மறைக்கப்பட்டன. மார்க்ஸியம் மங்கிப் போய் மம்தாவின் அரசியல் அங்கே மேல் எழுந்தபோதும் இதே கலவரங்கள் மார்க்ஸியர்களால் முன்வைக்கப்பட்டன. இன்று மம்தா அரசு பாஜகவுக்கு அதைச் செய்கிறது.

அதுமட்டுமல்ல. 1960லும் இதே போன்ற கலவரங்கள் நிகழ்ந்தன. இன்றைய கலவரத்துக்கான விதை முன்பு பல காலங்களில் விதைக்கப்பட்டிருக்கிறது.

1967ல் முதன்முதலாக கம்யூனிஸம் அங்கே ஆட்சியைப் பிடித்தது. அதுவரை இருந்த காங்கிரஸ் தன் பிடியை இழந்தது. அப்போதும் இதே போன்ற கலவரங்கள் அங்கே நிகழ்ந்தன. கிராமம் குறி வைத்துத் தாக்கப்பட்டது.

ஆட்சி மாற்றத்தை ஏற்க மறுத்தவர்கள் கம்யூனிஸ்ட்டுகளால் அன்று கொல்லப்பட்டார்கள்.

இதற்கு இன்னொரு காரணம், மார்க்ஸிய புரட்சியாளர்களின் வேர்கள் நக்ஸல்பாரி இயக்கத்தினரிடம் இருந்து வந்ததுதான்.

1972 மற்றும் 77ல் காங்கிரஸ் வந்தபோது இடதுசாரியினர் மீது வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டது.

1977ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த மார்க்சிஸ்ட் கட்சி 34 ஆண்டுகள் தொடர்ந்து ஆண்டது. ஜோதி பாசுவின் ஆட்சியின் போது கொல்லப்பட்ட நிலமற்ற 11 முஸ்லிம்களின் கதி இந்தியாவையே உலுக்கியது. பின்பு நந்திகிராமில் நடைபெற்ற காங்கிரஸ் மார்க்ஸிஸ்ட் மோதல், இடதுசாரிகளின் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

இன்று நடந்திருக்கும் படுகொலைகளுக்கும் மேலே சொன்ன கொலைகளுக்கும் ஒரே வேர்தான். அதிகார மமதை. நக்சல் வேர்.

வாக்களிக்கப் போகும்போது கூட மக்கள் அங்கே துப்பாக்கிளால் மிரட்டப்படுவார்கள். பயந்து போய் வாக்களிக்காமல் இருக்கும் மக்கள் அநேகம். மார்க்ஸிய ஆட்சியிலும் பின்னர் மம்தாவின் ஆட்சியிலும் இது நடந்தது.

இன்று பாஜக அங்கே பெற்றிருக்கும் கவனமும், வென்றிருக்கும் இடங்களும் மம்தாவின் கட்சியினருக்கு பெரிய எரிச்சலை தந்திருக்கிறது.

ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் வாய் வார்த்தைக்கு மட்டுமே என்று அவர்கள் இன்று நிரூபித்திருக்கிறார்கள்.

பாஜக ஆதரவாளர்களின் படுகொலை, பெண்கள் மானபங்கம் என்று, ஒரு இன அழிப்பின்போது என்னவெல்லாம் நடக்குமோ அதையெல்லாம், இன்று நாம் மேற்கு வங்கத்தில் பார்த்திருக்கிறோம்.

பாஜக ஆளும் மாநிலத்தில், யாரோ ஒருவர், பெயற்ற ஒருவர், மாட்டுக்கறி விவகாரத்தில் எதாவது சொன்னாலோ செய்தாலோ, அது இந்தியா முழுக்க செய்தியாக்கப்படும். தொடர்ந்து விவாதிக்கப்படும். ஆனால் மேற்கு வங்கமே பற்றி எரிந்தபோது, யாரும் இதைப் பற்றி விவாதிக்கவில்லை.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த துன்பங்களை தாங்களே வந்து பொது வெளியில் சொன்னதால்தான் இத்தனையாவது நமக்குத் தெரிந்தது. இல்லாவிட்டால்?

பொது ஊடகம் ஒன்று இல்லாதபோது இவர்கள் எப்படி செய்திகளை வடிகட்டி மக்களுக்கு அளித்திருப்பார்கள் என்று யோசித்துப் பாருங்கள். இவர்கள் சொன்னதுதான் செய்தி.

இதில் எத்தனை பேர் பயந்து போய் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை வெளியே சொல்லாமல் இருந்தார்கள் என்பதும் தெரியாது.

டிவிட்டரில் போய் தேடிப் பார்த்தால், நம்மை உறைய வைக்கும் அளவுக்குச் செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. தமிழ்நாட்டில் இதைப் பற்றி யாரும் கண்டுகொள்ளவே இல்லை.

கிராமப் பஞ்சாயத்தின் பாஜக தலைவர், உப தலைவர்களைக் குறி வைத்துத் தாக்கி இருக்கிறார்கள். அனுப்ராத்தா மோண்டல் என்னும் த்ரிணாமூல் காங்கிரஸ் தலைவரின் பெயரைக் குறிப்பிட்டு, அவர்தான் அடித்தார் என்று சொல்லி, அடிபட்டவரின் படத்தையும் போட்டிருக்கிறார்கள்.

ஆர்ட்டிகிள் 355 என்ன சொல்கிறது? மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கடைப்பிடிக்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுக்கும் உள்ளது என்று சொல்கிறது.

கவர்னர் ஜக்தீப் தங்கர் ஒரு பேட்டியில் சொல்கிறார். மேற்கு வங்கத்தில் நடந்த தாக்குதல், இதற்கு முன் நடக்காத ஒன்று. ஜனநாயகத்துக்கு விடப்பட்ட சவால். யாரை கொல்ல வேண்டும் என்று குறி வைத்து கொன்றிருக்கிறார்கள். வீட்டை சூறையாடி இருக்கிறார்கள். இதற்கு அரசு இயந்திரத்தின் உதவியும் இருந்திருக்கிறது. அவர்கள் கண்டும் காணாமலும் இருந்திருக்கிறார்கள். இப்படி மோசமான ஒரு நிலைமை வரும் என கனவிலும் நினைக்கவில்லை. நாங்கள் மதத்தைக் கூட மாற்றிக் கொள்கிறோம், எங்களை விட்டுவிடுங்கள் என்று மக்கள் கெஞ்சுகிறார்கள். சட்டத்தின் மாட்சியே குலைக்கப்பட்டிருக்கிறது.

ஏன் ஆளுங்கட்சியே இதைச் செய்யவேண்டும்? கவர்னர் சொல்கிறார்: ஆளும்கட்சிக்கு எதிராக வாக்களிக்கத் தயாரானவர்களுக்கு ஒரு அச்சத்தை உருவாக்கவேண்டும் என்பதற்காக. ஜனநாயகத்துக்கு நேர்ந்த அசிங்கம் இது. மம்தா பானர்ஜி மக்களின் கதறலைக் கண்டுகொள்ளவே இல்லை.

ஆனால் கவர்னரைக் குற்றம் சொல்கிறார் மம்தா. கவர்னர் சொன்ன ஒரே பதில், ‘என் கண்ணெதிரே என் மாநிலத்து மக்கள் இப்படி சாகும்போது என்னால் சும்மா இருக்கமுடியாது’. ஒரு கவர்னர் சொன்னது இது. யோசித்துப் பாருங்கள். ஜக்மோகன் ராஜிவுக்கு எழுதிய கடிதத்தின் அடிநாதமும் இதுதான்.

இந்த வன்முறையில் மம்தா பானர்ஜியின் பங்கு குறித்து தனிப்பட்ட ஆணையம் ஒன்று விசாரிக்கவேண்டும் என்று ஒரு ரிட் மனு உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

மக்கள் தங்களுக்கு நேர்ந்த வன்முறை குறித்து தெரிவிக்க ஒரு இமெயில் ஐடி உருவாக்கி அதை பொதுவில் பகிர உயர்நீதிமன்றம் காவல் துறைக்கு ஆணையிட்டிருக்கிறது. (25-மே-2021)

உச்சந்தீமன்ற நீதிபதி என்.வி.ரமனாவுக்கு 2093 பெண் வழக்கறிஞர்கள் கையெழுத்து இட்டு ஒரு மனு அளித்திருக்கிறார்கள். மேற்குவங்கத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் குலைந்து போய்விட்டது என்று அறிவிக்குமாறு அந்த மனுவில் சொல்லி இருக்கிறார்கள். போலிஸ் கலவரக்காரர்களுடன் சேர்ந்துகொண்டு இந்த வன்முறைகளை நிகழ்த்தியது என்று அதில் சொல்லி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் எந்த தொலைக்காட்சியாவது இதைப் பற்றிப் பேசியதா?

கவனர் ஜக்தீப் தங்கர் சொன்ன ஒரு வரி மிக முக்கியமானது: ‘உங்கள் ஒரு ஓட்டு உங்கள் மரணத்தை உறுதி செய்யுமானால், அங்கே ஜனநாயகம் செத்துவிட்டது என்றே அர்த்தம்!’ எத்தனை உண்மையான வரி? இந்த ஒரு வரி ஒட்டுமொத்த மேற்கு வங்கத்தின் பிரச்சினையையும் சொல்லிவிட்டது அல்லவா?

கமிஷ்னரிடம் கவர்னர் சட்டம் ஒழுங்கு பற்றி கேட்ட அறிக்கையை மம்தா அனுப்பவேண்டாம் என்று சொன்னதாக கமிஷ்னரே கவர்னரிடம் சொல்லி இருக்கிறார்.

இதனால்தான் கவர்னர் மம்தாவின் பதவி ஏற்பின்போதே இதைப் பற்றிக் கடுமையாகப் பேசினார். இது மரபுக்கு எதிரானது என்று ஆரம்பித்தார்கள். உண்மையில், கவர்னர் விரும்பினால் பேசலாம் என்று சொன்னதே மம்தாதான். அதைப் பயன்படுத்திக்கொண்ட கவர்னர் சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசி, மக்கள் நலனுக்காக, நாம் கட்சி அரசியலைத் தாண்டி சிந்திக்கவேண்டும் என்று சொன்னார். ஆனால், இதை திட்டமிட்டுச் செய்த அரசியல்வாதிகளுக்கு இது ஏன் புரியப் போகிறது.

இத்தனை நிகழும்போது, மத்திய அரசின் பங்கு என்ன?

பாஜக கட்சி மேற்கு வங்கத்தில் பெரும்பான்மை பெறுவோம் என்று சொல்லி போட்டி இட்டார்கள். ஆனால் 80க்கும் குறைவான இடங்களில் வென்றார்கள். தேர்தல் நடக்கும்போது மம்தாவின் த்ருணாமுள் தோற்றுவிடுமோ என்ற அச்சம் அவர்களுக்குள் விதைக்கப்பட்டது. ஆனால் அசுர வெற்றி பெறவும், வெற்றி மமதையும் தோற்றுவிடுவோமோ என்ற அச்சமும் இந்த வன்முறைக்கு வித்திட்டுவிட்டது. இது நாளையும் நடக்கலாம். எங்கும் நடக்கலாம்.

மத்திய அரசு, இந்தக் கலவரக் காரர்களை நிச்சயம் சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை தரவேண்டும், இன்றில்லாவிட்டாலும் நாளையாவது இதைச் செய்யவேண்டும். தவறு செய்தவர்களுக்கு தண்டனை உறுதி என்பதை நிலைகொள்ள செய்யவேண்டும்.

தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்போது, பதட்டம் மிகுந்த இடங்களில் துணை ராணுவப் படைகளைக் குவிக்கவேண்டும். தேவைப்பட்டால், கவர்னரே நேரடியாக தன் கட்டுப்பாட்டுக்குள் மாநிலத்தை எடுத்துக்கொண்டு செயல்படவேண்டும்.

கலவரங்கள் கட்டுப்படாதவரை யாரையும் முதல்வர் பதவி ஏற்க அழைக்கக்கூடாது.

ஐந்து மாநிலங்களில் ஒரே நாளில் முடிவுகள் வருவதால், துணை ராணுவப்படையைக் கொண்டு நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வருவதில் சிக்கல் இருந்தால், அதையும் யோசித்துச் செயல்படவேண்டும்.

இன்னொரு தேர்தலில், இன்னொரு ஓட்டு ஒரு மரணத்தைக் கொண்டு வருமானால், அது எந்த ஒரு மத்திய அரசுக்கும் அவமானமே.

தமிழ்நாட்டுக்கு இதில் கிடைக்கும் செய்தி என்ன? தமிழ்நாட்டில் இந்தியா முழுமைக்கும் நடக்கும் செய்திகள் பரப்பப்படுவதே இல்லை. எந்த ஊடகங்களும் கண்டுகொள்வதில்லை. இதை உடைப்பதை பாஜக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டும். ஒவ்வொரு தொலைக்காட்சியையும் இதைப்பற்றி விவாதிக்குமாறு நிர்ப்பந்திக்கவேண்டும். இல்லையென்றால் அவர்களது ஊடகங்களில் கலந்துகொள்ள மாட்டோம் என்று சொல்லவேண்டும்.

ஒட்டுமொத்த இந்தியாவிலும் இது போன்ற வன்முறைகள் நிகழாமல் இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை மோதியின் மத்திய அரசு கண்டறிந்தே ஆகவேண்டும்.

***

Share

அண்ணாமலை வெளியிட்ட திமுகவினரின் சொத்துக் குவிப்பு பற்றிய செய்திகள்

ஊடகங்களின் இருட்டடிப்பு இது. முதல் பக்கத்தில் செய்தியை வெளியிடக் கூட இவர்களால் முடியவில்லை. ஆளுங்கட்சிக்கு ஜால்ரா அடிப்பதில் உள்ள மோகம். பணமே அரசியலை நிர்ணயிக்கிறது.

கேஜ்ரிவால் செய்தியை முதல் பக்கத்தில் போட்டுவிட்டு, அண்ணாமலை சொன்னதை 2ம் பக்கத்தில் போட்டிருக்கிறது தமிழ்த்திசை. அனைத்து நீதிமன்றங்களிலும் முகக்கவசம் கட்டாயம் என்னும் முக்கியச் செய்தியை தமிழ்த்திசை முதல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறது.

மற்ற செய்தித்தாள்களின் உட்பக்கங்களை நான் பார்க்கவில்லை.

தந்தியும் தினகரனும் ஒரே குரலில் முதல் பக்கத்தில் பேசுகின்றன.

தினமலர் ஒன்றே தைரியமாக, முதல் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்ட குற்றச்சாட்டு பற்றிய செய்தியை வெளியிட்டிருக்கிறது.

தினமணியின் முதல் பக்கத்தை இணையத்தில் இருந்து ஸ்க்ரீன்ஷாட்டாக எடுத்தேன். கொடுமை. இதற்கு எதற்கு தினமணி?

பத்திரிகைகள் எல்லாம் எப்படி வெட்கமே இல்லாமல் நேர்மை, உண்மை என்றெல்லாம் பேசுகின்றன? அசிங்கமாகவே இருக்காதா? செய்தியைச் சொல்லிவிட்டு, அதை எதிர்த்து பல கட்டுரைகளைக் கூட வெளியிடட்டும். அது அவர்களின் கொள்கைச் சாய்வு. அதில் தவறில்லை. ஆனால் செய்தியையே சொல்லாமல் சாய்ஸில் விடுவதெல்லாம் எவ்வளவு அசிங்கம்!

***

நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்தும், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்த அறிவிப்பும் வெளியிட்டிருக்கிறார். டிவிட்டரிலும் இதுவே.

வானதி ஶ்ரீனிவாசன் எம்.எல்.ஏ ஃபேஸ்புக் பக்கத்தில் அவரது செயல்பாடுகளைப் பற்றிய பதிவுகள் மட்டுமே உள்ளன. டிவிட்டரில் விஷு ஆஷாம்ஷகள் என்று மலையாளத்திலும் வாழ்த்து வெளியிட்டிருக்கிறார் வானதி.

எம்.ஆர்.காந்தி எம்.எல்.ஏ ஃபேஸ்புக்கில் ஆக்டிவாக இல்லை.

சரஸ்வதி எம்.எல்.ஏ சட்டசபையில் இன்று என்ற செய்திகளையும், அனைவருக்கும் இனிய தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் என்ற முக்கியமான செய்தியையும் வெளியிட்டிருக்கிறார்.

இந்நிலையில் ஹெச்.ராஜா பற்றிச் சொல்லவேண்டும். எஸ்.வி.சேகருக்கான விருதில் ராஜா கலந்துகொண்டது எனக்கு தனிப்பட்ட அளவில் பெரிய வருத்தம். ஆனால்,  ஹெச்.ராஜா ஒருவரே அண்ணாமலையின் சொத்துப்பட்டியல் பற்றிய குறிப்பை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டு வாழ்த்தவும் செய்திருக்கிறார். ஹெச்.ராஜா மதிப்பிற்குரியவர்.

இந்நிலையில், மற்ற பத்திரிகைகள் பாஜகவின் செய்திகளை இருட்டடிப்பு செய்கிறது என்று சொல்ல பாஜகவினருக்குத் தகுதியே இல்லை என்பதுதான் உண்மை.

Share

அரசியல் யூ ட்யூபர்கள்

யூ ட்யூபர்கள் தங்கள் நிலைப்பாட்டை ஒவ்வொன்றாகச் சொல்ல ஆரம்பித்திருக்கிறார்கள். மதன் பாஜகவையும் அண்ணாமலையையும் எக்ஸ்போஸ் செய்ய நினைத்து, அதற்கு மாறாக வேறொன்றைச் செய்திருக்கிறார். ஒட்டுமொத்த கூட்டத்தையும் எக்ஸ்போஸ் செய்து, ஒரு தற்கொலை வெடிகுண்டைப் போல, அவரும் சேர்ந்து காலியாகி இருக்கிறார். அந்த வகையில் இது நல்ல விஷயம்.

யூ ட்யூபர்கள் அத்தனை பேரும் நிச்சயம் இந்த வீடியோவில் லஞ்சம் வாங்கப் போகவில்லை. ஒரு பிசினஸ் மீட் என்ற அளவில் மட்டுமே போயிருக்கிறார்கள். பணத்தையும் மதுவையும் அதற்காகத்தான் வாங்கி இருக்கிறார்கள். ஆனால், இவர்கள் நியாயத்துக்காக எதையுமே வாங்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையையும் குழி தோண்டிப் புதைத்திருக்கிறார்கள். இதுவரையும் பெரிய நம்பிக்கை இல்லை. ஆனால் பணம் கொடுத்தால் எந்தக் கட்சிக்காக வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் பேசுவார்கள் என்பதை வெளிப்படையாக உணர வைத்திருக்கிறார்கள்.

முன்பொரு சமயம், இருபது வருடங்களுக்கு முன்பு, ஒரு பத்திரிகையாளரைப் பார்த்து மது தரவேண்டிய சூழல் வந்தது. அவரைத் தனியே அழைத்து மதுவைத் தந்தபோது, அவர் பதற்றத்துடன் சொன்னார், இதெல்லாம் வேண்டவே வேண்டாம், உள்ள வைங்க என்று. அவரை நினைத்துப் பார்க்கிறேன். அவர் திமுக அனுதாபி. இப்போதும். இந்த முறை புத்தகக் கண்காட்சியில் எனக்கு அவரை இன்னொரு நண்பர் அறிமுகப்படுத்தியபோது, நான் அவரைச் சந்தித்திருப்பதைச் சொன்னேன். மது விஷயத்தைத் தவிர மற்றவற்றைச் சொன்னேன். இவ்ளோ ஞாபகம் வெச்சிருக்கீங்க, எனக்கு எதுவுமே நினைவில்லை என்றார். இன்றும் அவர் இதே நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்பது தெரியாது என்பதால் அவர் பெயரை வெளியிடாமல் தவிர்க்கிறேன். மதுவோ பணமோ எதுவும் வாங்காத உறுதிப்பாடு உள்ள பத்திரிகையாளர்களே முக்கியம். ஆனால் இவர்களால் பொருளாதார ரீதியாக ஜெயிக்க முடியுமா என்று தெரியவில்லை.

யூ ட்யூபர்கள் என்னும் பத்திரிகையாளர்களை அண்ணாமலை இடது கையில் டீல் செய்தது சரிதான். இவர்கள் அதற்குத்தான் லாயக்கு.

ராஜவேல் நாகராஜன், தான் ஒரு ஸ்டிரேடஜிஸ்ட்டாகத்தான் சென்றதாகச் சொல்கிறார். நம்பும்படியாகத்தான் இருக்கிறது. கட்சி அபிமானமே இல்லாமல் வெறும் ஸ்டிரேடஜிஸ்ட்டாக இருப்பது தொழில்முறை சார்ந்த ஒன்று. ஒரு கட்சியின் ஆதரவாளனாகவும் இருப்பேன், இன்னொரு கட்சிக்கு ஸ்டிரேடஜிஸ்ட்டாகவும் இருப்பேன் என்றால் அது சரிப்பட்டு வராது. இதையும் ராஜவேல் நாகராஜன் தெளிவாகவே சொல்கிறார். என்ன ஒன்றென்றால், நேற்று நாம் தமிழர், இன்று பாஜக என்றால், நாளை என்னவாகவும் இருக்கலாம் என்பதும் தொக்கி நிற்கத்தான் செய்கிறது. அங்கேதான் எந்தக் கட்சிக்கு ஸ்டிரேஜிஸ்ட்டாகப் போகலாம் என்னும் திறப்பும் இருக்கிறது.

அரசியல் வீடியோ வெளியிடும் யூ ட்யூபர்கள் வெறும் காற்றில் கம்பு சுத்திக் கொண்டிருக்கவில்லை. பணத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். வ்யூ இருந்தால் பணம் கிடைக்கும் என்று நம்பி இத்தொழிலை ஆரம்பிப்பவர்கள் பாவப்பட்ட ஜீவன்கள். வ்யூ இருந்தால், அரசியல் பணத்தில் செட்டில் ஆகிவிடலாம் என்று ஒரு சானலை ஆரம்பிப்பவர்களே புத்திசாலிகள்.

இந்த யூ ட்யூபர்கள் யாருக்காகவும் நான் சில்லரையை சிதறவிட்டதில்லை என்பதைப் பெருமையுடன் நினைத்துக் கொள்கிறேன். இவர்கள் கேள்வி கேட்ட விதம் பிடித்திருந்திருக்கிறது. இவர்கள் வெளியிட்ட வீடியோ சில பிடித்திருந்திருக்கிறது. அதைத் தாண்டி யாரையும் நான் கொண்டாடவில்லை. தெய்வம் காத்திருக்கிறது.

இந்த வீடியோக்களைப் பார்த்தால், நம்பிப் பேச வைத்து, ஒருவரை டிராப் செய்வது மிக எளிது என்றே தோன்றுகிறது. ஏனென்றால், பொதுவெளியில் வெறும் ஐயாயிரம் ரூபாயை வாங்கினால் கூட அது தவறு என்கிற பொதுப்புத்தி இங்கே விதைக்கப்பட்டிருக்கிறது. ஒரு மது பாட்டிலும் வெறும் பதினைந்தாயிரம் ரூபாயும், அதுவும் ஒரு தொழில்முறை கன்சல்டிங்கிற்காக வாங்கிய ஒன்று, இத்தனை பேரை காலி செய்துவிட்டது என்பதை நினைத்துப் பார்த்தால் சிரிப்பாகத்தான் இருக்கிறது.

அரசியல்வாதிகள் நேர்மையான பொய்யர்கள். இவர்கள் அது கூட இல்லை.

Share