Archive for ஹரன் பிரசன்னா

களியாட்டம் – மலையாளத் திரைப்படம் (சில இந்தியத் திரைப்படங்கள் – 04)

கேரளாவின் வடக்குப் பகுதியில் மரபாக வரும் களியாட்டம் என்பது தெய்வத்தின் ஆட்டம் (தெய்யம் அல்லது தெய்யாட்டம்) என்று நம்பப்படுகிறது. கண்ணகி போன்ற, உயிருடன் வாழ்ந்த மனிதர்களை தெய்யங்களாக வரித்து ஆடும் ஆட்டம் இது. சமூகத்தையும் தாங்கள் வாழும் கூட்டத்தையும் இந்தக் களியாட்டம் காக்கும் என்று நம்பினார்கள் இதை ஆடுபவர்கள். வேலன், மலையன், பெருவண்ணன் போன்ற சாதிகளைச் சேர்ந்தவர்களே களியாட்டத்தின் தெய்யங்களாக ஆடுகிறார்கள். இந்த மூன்று சாதிகளுமே ஒரே சாதியின் பல்வேறு பிரிவுகள்தான் என்று சொல்கிறார்கள். தெய்யத்தின் ஒரு பிரிவாகச் சொல்லப்படும் களியாட்டமே பின்னாளில் கதகளியாக மாறியது. இந்த வேர்களை நாம் தமிழில் காணலாம் என்றும் வேலன் வெறியாடலே கிட்டத்தட்ட ஆயிரத்து ஐநூறு வருடங்களில் களியாட்டமாக உருமாறியது என்றும் சொல்கிறார்கள். பெருங்களியாட்டம் என்பது பல்வேறு தெய்யங்களின் வேடத்தையும் புனைந்து ஒருவரே ஆடும் ஆட்டம். இது கிட்டத்தட்ட 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கிறது.

ஜெயராஜ் இயக்கி சுரேஷ்கோபி, மஞ்சு வாரியர், பிஜூ மேனோன், லால் நடிப்பில் 1997ல் வெளியானது களியாட்டம் திரைப்படம். சேக்ஸ்பியரின் ஒதெல்லோவைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கும் படம். தமிழ்ப்படங்களைப் போல் மறைக்காமல் இதை படத்தின் ஆரம்பித்திலேயே காண்பித்துவிடுகிறார்கள். தெய்ய ஆட்டக்காரனான கண்ணன் பெருமலையன் தாமரையின் மீது காதல் கொண்டு அவளை மணக்கிறான். உயர்ந்த சாதியைச் சேர்ந்த தாமரை தன் சாதியையும் தன் தந்தையையும் மறுத்துவிட்டு கண்ணன் பெருமலையனை மணம் செய்துகொள்கிறாள். அப்போது தாமரையின் தந்தை சபையில் எல்லார் முன்னிலும் தன்னை வஞ்சித்ததுபோலவே ஒருநாள் தன் கணவனையும் தன் பெண் வஞ்சிக்கமாட்டாள் என்பது நிச்சயமில்லை என்று சொல்லி, சந்தேகத்தின் விதையை விதைத்து வைக்கிறான். பனியன் தெய்யங்களில் நகைச்சுவை வேடமேற்பவன். கண்ணன் பெருமலையன் மீது இருக்கும் பொறாமையாலும் தெய்யத்தின் முக்கிய ஆட்டக்காரனாக மாறி, கண்ணன் பெருமலையனின் இடத்தைப் பிடிக்கும் எண்ணத்திலும், மலையன் மனைவிக்கும் காந்தனுக்கும் தவறான உறவிருப்பதாக மலையனிடம் சொல்கிறான். சந்தர்ப்பங்கள் இதை உறுதிப்படுத்த, அதை நம்பி தன் மனைவி தாமரையை, பெருங்களியாட்டம் நடக்கும் அன்று கொல்கிறான் கண்ணன் பெருமலையன். அவள் இறந்தபின்பே தன் மனைவி குற்றமற்றவள் என்றும் பனியனின் சதி இது என்றும் தெரிகிறது. பனியனின் கையையும் காலையும் முறித்துவிட்டு, தனக்கு அடுத்த தலைமை தெய்ய ஆட்டக்காரனாக காந்தனை நியமித்துவிட்டு, பெருங்களியாட்டத்தில் தெய்யமாகவே அவன் எரியும் சிதையில் விழுந்து உயிர் துறக்கிறான்.

ஒதெல்லோ போன்ற கதைகளை நம் சூழலுக்குப் படம் எடுக்கும்போது எப்படி அதை மாற்றவேண்டும் என்பதற்கு இப்படத்தை ஒரு மாதிரியாக வைக்கலாம் என்கிற அளவிற்கு மிகச் சிறப்பான திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. தெய்ய ஆட்டக்காரர்கள் தங்கள் உடலெங்கும் வண்ணத்தை வரைந்துகொண்டு, அலங்காரமாக ஆழ்நிற வண்ணங்களுடன் அமைக்கப்பட்ட கிரீடங்களையும் கவசங்களையும் அணிந்துகொண்டு, கண்களைச் சுழற்றும் அழகும் புருவங்களை உயர்த்தும் அழகும் சிறப்பாக இருக்கும். இந்த அலங்காரங்களைச் செய்யவே கிட்டத்தட்ட பத்து மணிநேரம் வரை ஆகும் என்கிறார்கள். இரவில் தீப்பந்தங்களைக் கையில் கொண்டு தெய்யங்கள் ஆடும் காட்சியில் வண்ணங்களும் தீயின் பல்வேறு நிறங்களும் தங்கள் ஆளுமையை தீவிரமாகப் பறை சாற்றுபவை. இவற்றை எந்தவிதக் குறையுமில்லாமல் அப்படியே திரையில் கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர். படமெங்கும் இழையும் வண்ணங்கள் படத்திற்கு ஒரு தொடர்ச்சியைத் தருகின்றன. கண்ணன் பெருமலையனும் தாமரையும் வண்ணங்களோடு உடலுறவு கொள்கிறார்கள். தரையில் குங்குமம் மஞ்சளும் தங்கள் தீவிர நிறத்துடன் கலந்து சிந்துகின்றன. வண்ணமயமான பட்டின் மேல் உறவுகொள்கிறார்கள். பின்னர் அந்தப்பட்டே உறவுக்கான முன்னறிவிப்பாகிறது. கண்ணன் பெருமலையன் தாமரை காந்தனுடன் உறவுகொள்வதாக நினைக்கும் காட்சிகளைக்கூட அதே நிறங்களுடன் காண்கிறான். படமெங்கும் வண்ணம் பிரிக்கமுடியாமல் அழகாகக் கலந்துகிடக்கிறது.


அதேபோல் படமெங்கும் வரும் கேரளத்தின் மரபிசை. செண்டையும் தாளமும் படத்தில் எல்லாக் காட்சிகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. சில சாதாரண காட்சிகளில்கூட இந்த மரபிசை தேவையற்றுப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றாலும், படம் உக்கிரம் கொள்ளும் காட்சிகளில் அதே உக்கிரத்தை இசையும் கொள்கிறது. இசையமைப்பாளர் கைதப்பரம் விஸ்வநாதன் பாடல்களையும் இதே மரபின் தன்மையோடு இசையமைத்துள்ளார். கண்ணாடிப் புழையொடு தீரத்து பாடலும் கதிவனூரு வீரனே பாடலும் இந்த வகையைச் சேர்ந்தவை. அதிகம் அறியப்பட்ட சிறப்பான பாடல் ‘என்னோடெந்தினா பிணக்கம்’ பாடல் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று. கடைசி காட்சியில் தெய்ய ஒப்பனையோடு பெருமலையன் தாமரையைக் கொல்லும் காட்சியின் பின்னணி இசை உக்கிரம் கொள்ளவும் நெகிழ வைக்கவும் செய்கிறது.

மஞ்சு வாரியர் தாமரையாக நடித்திருக்கிறார். படத்தில் இவரது நடிப்பு வெகு இயல்பாகவும் ஆர்பாட்டம் இல்லாததாகவும் அமைதியானதாகவும் இருக்கிறது. அழகும் அமைதியும் கூடி விளங்கும் தாமரையைக் காணும்போது, தன் லட்சணமற்ற முகம் இவளுக்குத் தகுதியானதல்ல என்கிற எண்ணம் கண்ணன் பெருமலையனுக்கு ஏற்படுவது இயல்பே என்று பார்வையாளர்களே நினைக்கத் தொடங்கிவிடுவார்கள். அழவேண்டிய காட்சிகளில் சட்டெனக் கண்ணீர் விடுவதும், தன்னைக் கொல்ல கணவன் நெருங்கும் நேரத்தில் பயத்தில் மிரள்வதும் அவனையே கட்டிக்கொண்டு கெஞ்சுவதுமென மஞ்சு வாரியர் மிகச் சிறப்பாக நடித்திருக்கிறார்.

‘ஏடா புல்லே’ புகழ் மாஸ் ஹீரோவான சுரேஷ் கோபி கண்ணன் பெருமலையனாக நடித்திருக்கிறார். முதலில் ஒரு மாஸ் ஹீரோவுக்குள் இதுபோன்ற ஒரு திரைப்படத்தைப் பற்றிய தேடல் இருப்பது மிகவும் சந்தோஷமான விஷயம். இப்படத்தை தயாரித்ததும் சுரேஷ் கோபி என்னும்போது ஏற்படும் ஆச்சரியம் பலமடங்காகிறது. த்வீபா என்னும் கன்னடப்படத்தின் தயாரிப்பாளர் சௌந்தர்யா என்ற போது இதே ஆச்சரியத்தை நான் அடைந்தேன். கண்ணன் பெருமலையனாக சுரேஷ்கோபி சிறப்பாகச் செய்திருக்கிறார். ஆரம்ப காட்சிகளில் மிக மெதுவாகவும் ஆர்பாட்டமில்லாமலும் வரும் அவரது கதாபாத்திரம், தன் மனைவியின் மீதான சந்தேகம் வலுக்கொள்ள கொள்ள கடும் சீற்றம் கொண்டதாகவும் குழப்பம் கொண்டதாகவும் மாறுகிறது. அத்தனையையும் தன் முகபாவத்திலேயே வெளிப்படுத்துகிறார். பனியன் பெருமலையனிடம், பொது இடத்தில் காந்தன் எப்படியெல்லாம் தாமரையை தான் அனுபவித்ததைப் பற்றிச் சொன்னான் என்று சொல்லும்போது, சுரேஷ்கோபி வெளிப்படுத்தும் ஆத்திரம், அச்சம், அசிங்கம் என எல்லா பாவங்களும் அருமையாக இருக்கின்றன. அதன் வேகத்திலேயே அவருக்கு வலிப்பு வருகிறது. வலிப்பு வருபவனின் மூளை அடையும் சலனத்தை அவரது முகத்திலேயே நாம் பார்த்துவிடமுடிகிறது. அத்தனை கோபமும் சந்தேகமும் தாமரையைப் பார்த்ததும் அவருக்கு அடங்கிப் போகிறது. தன் மனைவி குற்றமற்றவளாகவே இருக்கவேண்டும் என்கிற எண்ணம் தலைதூக்க பெரும் குழப்பத்திலும் அமைதியிலும் அவர் ஆழ்வது சரியான இயக்கம். கடைசியில் தன் மனைவியைக் கொல்ல, பெருங்களியாட்டத் தெய்யத்தின் ஒப்பனையோடு அவர் வந்து கவிதைத்துவமாகப் பேசும் காட்சியும், தாமரை தான் குற்றமற்றவள் என்று கதறி அழுது அவனைக் கட்டிக்கொள்ளும்போது ஒரு கணம் கனிவு பொங்க மறுகணம் ருத்ரம் கொண்டு கொல்லும் காட்சியும் சுரேஷ்கோபியின் நடிப்பின் உச்சம் என்று சொல்லவேண்டும்.

படத்தில் வண்ணங்களையும் ஒப்பனையையும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் விதம் பாராட்டுக்குரியது. ஒப்பனை கலைத்தபின்பும்கூட சுரேஷ் கோபியின் கண்களில் தெரியும் கருவளையமும் கரும்பொட்டும் வெகு அழகு. அதேபோல் குழப்பத்தின் உச்சியில் மலையுச்சி நோக்கி ஓடி கதறும் பெருமலையன் முன்பு அவனது மூதாதையர்கள் மானசீகமாகத் தோன்றுவதும், அவன் நிகழுலகிற்குள் வரும்போது அங்கு பணியன் நிற்பதும் சிறப்பான காட்சிப்படுத்தல். பணியனாக வரும் லாலும் காந்தனாக வரும் பிஜூ மேனோனும் பணியனின் மனைவியாக வரும் பிந்து பணிக்கரும் சிறப்பாக நடித்திருக்கிறார்கள். தானும் மலையன் கூட்டத்தில் ஒருவனென்றாலும் தனக்கு தெய்யம் கட்ட முடியவில்லை என்னும் கோபத்தை ஒரு சாதாராண மனிதனுக்குரிய வகையில் லால் வெளிப்படுத்தியிருக்கிறார்.

படத்தில் வண்ணங்களைப் போலவே தீயும் அதன் நாவுகளும் தீப்பொறிகளும் தொடர்ச்சியான ஒரு பிம்பத்தை உருவாக்குகின்றன. பெருமலையன் முதலில் தாமரையைச் சந்த்திப்பது தீமிதிக்கும்போது ஏற்பட்ட காயத்துக்கு பின். தெய்ய ஆட்டத்தில் ஒப்பனையுடன் தீ மிதிக்கும் காட்சிகள் முக்கியமானவை. தீப்பொறிகள் சிதறி விழுவதை ஒளிப்பதிவு செய்திருக்கும் விதமும் எரியும் பெருந்தீயின் செந்நிறத்தில் தென்படும் எல்லா கதாபாத்திரங்களும் செம்மை கொள்வதை படத்தில் கொண்டு வந்திருக்கும் விதமும் சிறப்பாக உள்ளது. தாமரையை பெருமலையன் கொல்லும் காட்சிகளில் வீடெங்கும் ஒளிரும் விளக்குகள். நெருப்பில் தொடங்கும் படம், கண்ணன் பெருமலையன் தன் தவறை உணர்ந்து இனி வாழ்வதில் அர்த்தமில்லை என்கிற எண்ணத்தில் நெருப்பில் அமிழ, நெருப்பின் கோரப் பசி அவனை விழுங்கி மேலும் கொளுந்துவிட்டு எரிய, நெருப்பிலேயே முடிகிறது. ஜெயராஜின் வண்ணங்களின் மீதான மோகத்தை கண்ணகி திரைப்படத்திலும் பார்க்கமுடியும். அப்படத்தில் வரும் சேவலின் நிறமும் அதன் உக்கிரமும் கடைசியில் லாலுக்கும் நந்திதா போஸ¤க்கும் மாற்றப்படும்.

இப்படத்தில் கதிவனூரு வீரன் என்கிற தெய்யத்தின் ஆட்டத்தையே கண்ணன் பெருமலையன் ஏற்கிறான். கதிவனூரு வீரன் பற்றிய கதை எங்கும் கிடைத்தால் எனக்கு அறியத் தரவும். நிச்சயம் மரபில் வந்த கதை ஒன்றிருக்கும். அதை அறிந்துகொள்ளவேண்டும்.

இந்தத் திரைப்படத்தை maebag.com என்கிற வலைத்தளத்தில் இருந்து வாங்கினேன். விருப்பப்பட்டவர்கள் வாங்கிக்கொள்ளவும். முக்கியமான விஷயம், எனக்கு இந்நிறுவனத்தைப் பற்றித் தெரியாது. கூகிளில் தேடி, நான் ஆர்டர் செய்தேன், எனக்கு சரியாக படத்தை அனுப்பிவிட்டார்கள். அதனால் இதை ஒரு தகவல் என்கிற அளவில் மட்டும் எடுத்துக்கொள்ளவும்

.

Share

உயிர்மை ஏழு நாவல்கள் வெளியீட்டமர்வு – டிசம்பர் 2007

* மனுஷய புத்திரன் வரவேற்புரை கூற விழா தொடங்கியது.

* இந்திரா பார்த்தசாரதி தலைமையேற்றார். தமிழனவனின் ‘வார்ஸாவில் ஒரு கடவுள்’ புத்தகத்தை வெளியிட்டு, அதைப் பற்றிப் பேசினார். தான் வார்ஸாவில் வாழ்ந்த காலத்தில் பார்த்த மனிதர்களுக்கும் தற்போது தமிழவன் தன் நாவல் வழியாகக் கண்டடைந்த மனிதர்களுக்குமிடையே உள்ள வேறுபாட்டை விளக்கினார். தான் வாழ்ந்த காலத்தில் ராணுவத்தின் தீவிரக் கட்டுப்பாட்டில் இருந்த நிலம், தற்போது சுதந்திரத்திற்குப் பின்னான மனநிலையை எப்படி எதிர்கொள்கிறது என்பதையும் தொட்டுப் பேசினார்.

* ஜீ.முருகனின் மரம் என்கிற நாவலை வெளியிட்டு திலீப்குமார் பேசினார். இயல்பாகவே திலீப்குமாரின் குரல் மிக மென்மையானது. அதனால் அவர் பேசியது பலருக்கும் கேட்கவில்லை. மரம் நாவலில் வரும் மனிதர்கள் எப்படி பாலிச்சை மிகுந்தவர்களாக தீவிரமாக உள்ளார்கள் என்பதைப் பற்றிப் பேசினார் திலீப்.

* புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் ‘கண்யாவனங்கள்’ என்கிற மொழிபெயர்ப்பு நூலை வெளியிட்டு பேசினார் யுவன் சந்திரசேகர். எப்போதும் சிரிப்பும் நட்புமாக இருக்கும் யுவன் மேடையை பேச ஆரம்பித்த ஐந்தே நிமிடங்கள் வளைத்துக்கொண்டார். நாவல் பற்றிப் பேசப்போவதில்லை என்று சொன்ன யுவன் தமிழின் மொழிபெயர்ப்பு சார்ந்த கருத்துகளைப் பற்றிப் பேசினார். அழகான இயல்பான தமிழில் அவரது பேச்சு மிகச்சிறப்பாக இருந்தது. மொழிபெயர்ப்பை இரண்டாகப் பிரித்துக்கொண்டு (பொதுநீரோட்ட மொழிபெயர்ப்பு, சிற்றிதழ் சார்ந்த மொழிபெயர்ப்பு) அதன் சாதக பாதக அம்சங்களை விரிவாக எடுத்துரைத்தார். இந்நாவல் எப்படி சிறப்பாக, மூல நூல் சொல்ல நினைக்கும் கருத்துகளைச் சிதைக்காமல் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது என்பதையும் வலியுறுத்தினார். புனத்தில் குஞ்ஞப்துல்லாவின் நாவலை வாசிக்க விரும்புவர்கள் கன்யாவனத்தில் தொடங்கி, அதன் வழியாக மீஸான் கற்கள், அதன் பின்னர் மஹ்சர் பெருவெளி எனச் செல்லலாம் என்றும் ஆலோசனை சொன்னார். வெளிநாட்டில் வாழும் மனிதர்களின் வாழ்க்கையைச் சித்தரிப்பதில் ஆபிதினின் இடம் ஒரு முக்கிய நாவல் என்றும் அது கீழ்த்தட்டு மக்களைப் பேசுகிறது என்றும் சொல்லிய யுவன், இந்நாவல் அதற்கு மாறாக ஒரு அராபிய முதலாளி பற்றிப் பேசுகிறது என்றும் சொன்னார். நாவலில் வெக்கையும் தகிப்பும் எப்படி உள்ளும் புறமும் மையச்சரடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

* சி.வி.பாலகிருஷ்ணனின் ‘திசை’ மொழிபெயர்ப்பு நாவலை வெளியிட்டு தமிழவன் பேசினார். 1995க்குப் பின் வந்த தமிழ் நாவலைப் படிக்க வாய்ப்பிருக்கவில்லை என்று ஆரம்பித்த தமிழவன், நாவலின் கட்டுமானம் பற்றிப் பேசினார். கடந்த பத்து வருடங்களில் தமிழர்களின் சிந்தனை, வெளிப்பாடு வரைபடம் நேர் குத்துக்கோடுகளாக ஆகிவிட்டது என்றும் அதற்கு முன்னர் கிடைமட்டமாக இருந்தது என்றும் சொன்னார். கைகளால் காற்றில் வரைந்து காட்டினார்! இந்நாவலில் வரும் திடீர் திடீர் பாத்திரங்கள் அதே மாதிரி காணாமல் போகின்றன, ஆனால் இவையே ஒரு சுவையான விஷயமாக நாவல் நெடுகிலும் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்றும் சொன்னார். மொழிபெயர்ப்பின் கச்சிதம் பற்றியும் பேசினார்.


* எஸ். செந்தில்குமாரின் ஜீ.சௌந்தர ராஜனின் கதை என்னும் நூலைப் பற்றிப் பேசினார் நாஞ்சில் நாடன். நூலில் தெற்றுப் பார்க்கப் போவதில்லை என்று தொடங்கிய அவர், இந்நூல் இன்னும் பெரியதாக எழுதப்பட்டிருக்கலாம் என்றும் அதற்கான தேவையும் அவகாசமும் இருக்கிறது என்றும் சொன்னார். செந்தில் குமார் புதிய எழுத்தாளர் என்ற போதிலும் அவர் எடுத்துக்கொண்டிருக்கும் பிரச்சினை இன்றைய நிலையில் கண்டிப்பாக விவாதிக்கப்படவேண்டியது என்பதால் நாவல் முக்கியத்துவம் பெறுகிறது என்றும் சொன்னார்.

* வாமு.கோமுவின் கள்ளி நாவலை வெளியிட்டுப் பேச வந்தார் சாரு நிவேதிதா. ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் கடைசி பத்து ஓவர்கள் இங்கிருந்துதான் தொடங்கியது! தமிழவனுடன் 1978 முதல் 1985 வரை தனக்கிருந்த ஆழமான நட்பு, தினம் தினம் கடிதம் என்று தொடங்கிய சாரு, அதை இப்படி முடித்தார். தமிழவன் எழுதிய நாவல் (பெயர் மறந்துவிட்டது, சாவு என்று எதோ வரும்!) ஒன்றைப் பற்றி சாரு கடுமையாக விமர்சிக்க அன்றோடு முடிவுக்கு வந்ததாம் தமிழவனுடனான நட்பு. இதேபோல் யுவன் சந்திரசேகரைப் பற்றியும் பேசினார். ய்வனுடன் மிக ஆழமான நட்பு இருந்ததாகவும் ஒரு நாள் பார்க்காவிட்டால் கூட தலை வெடித்துவிடும் என்கிற அளவிற்கு நட்பு இருந்ததாகவும் கோடம்பாக்கம் ரயில்வே ஸ்டேஷனில் இருக்கும் நடைபாதையின் படிகளில் அமர்ந்து இலக்கியம் பற்றிப் பேசியதாகவும் சொன்ன சாரு, அன்றைக்கு யுவனின் சிறுகதைகளின் கையெழுத்துப் பிரதியைப் படித்துவிட்டு யுவனை கொண்டாடுவாராம். இந்நிலையில் யுவன் இன்னொரு கையெழுத்துப் பிரதியைத் தந்தாராம். ‘குள்ளச் சித்தன் சரித்திரம்.’ அதைப் படித்துவிட்டு மறுநாள் 15 நிமிடம் காரசாரமாக சாரு யுவனை விமர்சிக்க, அன்றோடு முடிவுக்கு வந்ததாம் யுவனின் நட்பு! அதன் பின்பு டிசம்பருக்கு டிசம்பர் உயிர்மை விழாவில்தான் பார்க்கமுடிகிறதாம். அதேபோல் வாமு கோமுவின் அறிமுகத்தையும் அவரது சிறுகதைகளை தான் கொண்டாடியதையும் சொன்ன சாரு, இந்நாவல் மீண்டும் இயல்புவாதம் என்கிற மூடப்பட்ட பிரதிக்குள் விழுந்துவிட்டது என்றும் சொன்னார். பின் நவீனத்துவமே திறந்த எழுத்து என்றும் அதுவே இன்றைக்குத் தேவை என்றும் பின்நவீனத்துவ மாணவன் என்கிற முறையில் தன்னால் இதுபோன்ற எழுத்துகளைப் படிக்கமுடிவதில்லை என்றும் சொன்ன சாரு, பின் நவீனத்துவத்தைப் பற்றியும் கொஞ்சம் விளக்கினார். கடைசியில், வாமு. கோமு இன்றோடு பேச்சை நிறுத்திவிடக்கூடாது என்றும் சொல்லி, let us be friends என்று சொல்லி உரையை நிறைவு செய்தார்.

* எஸ். ராமகிருஷ்ணனின் ‘யாமம்’ நாவலை வெளியிட்டு பேசினார் ஜெயமோகன். தொடங்கும்போதே சாருவிற்கான பதிலாகத் தொடங்கினார். சாருவின் எழுத்தை தான் பொருட்படுத்தியது கிடையாது என்றும் எல்லாரும் எழுதுகிறார்கள், சாருவும் எழுதுகிறார் என்ற அளவில் மட்டுமே நினைத்திருந்ததாகவும் சொன்ன ஜெயமோகன், ‘ஸீரோ டிகிரி’ நாவலைப் படித்த பின்புதான் அதில் ஒரு நாவல் இருக்கிறது என்று அறிந்து, அதை சாருவிற்குக் கடிதமாகவும் அனுப்பியதாகச் சொன்னார். அதன்பின்புதான் சாரு தன்னை நண்பன்¡க நினைத்தார் என்று சொன்னார்! அதேபோல் எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்தில், நடையில் தனக்கு கடுமையான விமர்சனம் இருந்தது என்றும் அதை சொல்லியும் இருக்கிறேன் என்றும் சொன்ன ஜெயமோகன், உப பாண்டவம் படித்தபோது, எஸ். ராமகிருஷ்ணனில் சிறந்த நாவலாசிரியர் இருப்பதை அறிந்தேன் என்றும் சொன்னார். உப பாண்டவம் முக்கியமான நாவல் என்றும் நெடுங்குருதி தமிழின் நல்ல படைப்புகளுள் ஒன்று என்று நம்புவதாகவும் சொன்னார் ஜெயமோகன். அதன்பின் எஸ்.ராமகிருஷ்ணனின் நட்பும் கிடைத்தது என்றும் சொல்லி, இது இயல்பானது என்றார். ஒரு சமயம் ஜெயமோகனை யுவன் சந்திரசேகர் தொலைபேசியில் அழைத்து, அவருடன் சாரு பேசுவதே இல்லை என்றும் ஜெயமோகன் சாருவை அழைத்து இது பற்றிச் சொல்லவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டாராம். ஜெயமோகன் என்ன நடந்தது என்று கேட்டதற்கு, சாரு கோணல் பக்கங்கள் புத்தகத்தைத் தந்தார், அதைப் படித்துவிட்டு கருத்து சொன்னேன், அன்றிலிருந்து சாரு பேசுவதில்லை என்றாராம் யுவன் சந்திரசேகர்! பின்பு எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் பற்றிப் பேசினார் ஜெயமோகன். யாமம் நாவல் அத்தர் தயாரிக்கும் இஸ்லாமிய குடும்பத்தின் கதை என்றும் அது ஷாஜஹானின் அரண்மனையில் தொடங்கி, கிழக்கிந்தியக் கம்பெனிக்காரர்கள், அதன் பின்பு வந்த சென்னை பட்டினம், அது சந்தித்த போர்கள் வழி நீள்கிறது என்றார். Metaphor மூலம் கட்டமைக்கப்படும் metaphysics எனப்படும் மீப்பொருண்மை வாதம் பற்றிய விளக்கிய ஜெயமோகன், அதை இந்நாவல் எப்படி வெற்றிகரமாக கையாண்டிருக்கிறது என்றும் விளக்கினார். இப்பிரபஞ்சத்திற்கு இணையான இன்னொரு பிரபஞ்சத்தை முன்வைக்கிறது இந்நாவல் என்றார். போர்ஹேயின் எழுத்தைப் பின்பற்றியிருக்கும் எஸ்.ராமகிருஷ்ணன், அவரது நடையை அப்படியே பின்பற்றாமல் எழுதியிருப்பது தனக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப்படுகிறது என்று சொன்ன ஜெயமோகன், இந்நாவலைப் படிக்க சிறந்த வழி, வாசனை மூலம் கண்டடைவது என்றார்.

* விழா இனிதே முடிவடைந்தது.

(குறிப்பு 1: இதிலிருக்கும் விஷயங்கள் அத்தனையும் என் நினைவிலிருந்து எழுதியது. குறிப்புகளும் எடுக்கவில்லை. அதனால் எந்த எழுத்தாளர்களாவது இப்படி பேசவில்லை என்றோ, இந்த வார்த்தையைச் சொல்லவில்லை என்றோ சொல்வார்களானால், அதுவே சரி.

குறிப்பு 2: விழாவில் பார்த்த வலைப்பதிவுலக, இணைய நண்பர்கள் – மதுமிதா, சாபு, அப்துல் ஜப்பார், நிர்மலா. எல்லாருடனும் ஹாய் சொல்ல மட்டுமே நேரம் இருந்தது.)

வெளியீட்டமர்வு நடந்த நாள்: 15.12.007 மாலை 6 மணி
இடம்: புக் பாயிண்ட், (ஸ்பென்ஸர் பிளாசா எதிரில்),சென்னை.

Share

5 கவிதைகள்

01. வழி

நிர்ணயிக்கப்பட்ட
சாலைகளில்
பயணம்
அலுப்பாயிருந்தது
வழி தப்பிய தட்டான்
பேருந்துக்குள்
நுழையும்வரை

02. கவிதையைக் கற்பித்தல்

“குழலினிது”
“குழலினிது”
“யாழினிது”
“யாழினிது”
“என்பர்தம்”
“என்பர்தம்”
“மக்கள்”
“மக்கள்”
“மழலைச்சொல்”
“மழலைச்சொல்”
“கேளா”
“கேளா”
“தவர்”
“தவர்”

03. எதிர்பாராத கவிதை

சூரியனருகே
சுற்றிக் கொண்டிருக்கும் பறவை
கீழே நதியோடும்
பாலமொன்றில்
காற்றிலாடும்
கூந்தல் முகம்
சாரல் போல் தெறிக்கும்
நதிநீர்த் திவலைகள்
பேரிருளுக்குள்
கனன்று கொண்டிருக்கும்
கங்கு…
பெரும்பட்டியலில்
தன்னிடத்திற்குக்
காத்திருக்கவில்லை
திடீர் முற்றத்துச் சத்தம்
படபடக்கும் தாளில்
சின்ன சின்ன நீர்த்துளிகள்

04. அமைதி

குழந்தைகள்
காடுகளைப் பற்றி
படித்துக்கொண்டிருந்தார்கள்
அங்கு வந்தன மரங்கள்
கொடிகள் செடிகள்
புதர்கள் விலங்குகள்
பறவைகள் இன்ன பிற
சீறிக்கொண்டோடியது
வேகப் பேருந்து
குழந்தைகள் திடுக்கிட

05. வீடுவிட்டு விளையாட்டு

வீட்டிலிருந்து வெளியேற
உடன் வாங்கிக்கொண்டது
உலகம்
ஆயிரம் பாம்புகள்
கனவெங்கும் துரத்த
மீண்டு
வீடு வந்த போது
புன்னகையுடன்
காத்திருந்தது
கடவுள்

Share

கல்லூரி திரைப்படம் – சில குறிப்புகள்

கல்லூரி படம் பார்த்தேன். (சுரேஷ்கண்ணன் படம் பார்த்து எழுதிவிடுவதற்குள் அந்தப் படத்தைப் பார்த்து எழுதுவது என்பது பெரிய விஷயமாகத்தான் போய்விட்டது எனக்கு!)

முடிவின் கனத்தில் முன்னோக்கி நகரும் இன்னொரு படம். நடிகர்களின் தேர்வு வெகு யதார்த்தம். எல்லாருமே நன்றாக நடிக்கிறார்கள். அதிலும் கதாநாயகியாக வரும் நடிகையின் முக பாவங்கள் என்னை ஆச்சரியப்படுத்தின. காதல், நட்பு, ஏக்கம், கோபம், பொஸஸிவ்நெஸ் என எல்லாவற்றையும் முக அசைப்பிலேயே காண்பிக்கிறார். கதாநாயகியுடன் நடிக்கும் பெண், கயல், சிறப்பாக நடித்திருக்கிறார். அவரின் பாத்திரப் படைப்பும் அருமை. எப்படியும் நட்பு வட்டத்துள், இப்படி மரபு பேசி, குற்ற உணர்ச்சியை அதிகமாக்கிக்கொண்டிருக்கும் ஒரு நண்பர் இருந்தே தீருவார். அதேபோல் இன்னொரு நடிகர், எப்போதும் கமெண்ட் அடித்துக்கொண்டு, பரதநாட்டியம் ஆடும் நடிகர். வெகு யதார்த்தம். இப்படியும் ஒரு நண்பர் உங்கள் நட்பு வட்டத்துள் இருந்தே தீருவார்.

செழியனின் கேமராவில் கல்குவாரி காட்சிகள் அழகு. மழையில் வரும் ஒரு பாடலும் வெகு அழகு.

யதார்த்தமான காட்சிகளே படத்தின் பலம். தொடர்ச்சியான கலாய்த்தல் மூலம், மாறி மாறிப் பேசிக்கொள்வதன் மூலமும் பாலாஜி சக்திவேல் நட்பை அதிக பிணைப்பு கொள்ளச் செய்கிறார். ஒரு கட்டத்தில் இது அளவுக்கு மீறி எனக்கு சலிப்பை ஏற்படுத்திவிட்டது. படத்தின் முடிவு தரவேண்டிய கடுமையான மன உளைச்சலுக்கு – நானும் மன உளைச்சலுக்கு ஆளானேன் – இந்த சலிப்பு தேவை என்று இயக்குநர் உணர்ந்தே செய்தாரோ என்னவோ.

கதாநாயகி கதாநாயகன் மீது நெருக்கம் கொள்ள ஆரம்பிக்கும் தருணங்கள் மீண்டும் மீண்டும் காட்டப்படுவதும் ஒரு வகையில் எனக்கு சலிப்பை ஏற்படுத்தியது என்றே சொல்லவேண்டும். குறிப்பாக, நணபர்கள் மதுரைக்குச் சென்று பங்குகொள்ளும் இணடர் மீட் காட்சிகள். இதன் மூலம் இயக்குநர் சொல்ல நினைப்பது நாயகியின் பொஸ்ஸஸிவ்நெஸ்ஸை. அதற்கு இந்தக் காட்சிகளின் நீளம் அதிகம். ஏனென்றால் இதற்கு அடுத்து வரப்போகும் (மகாபலிபுரம் காட்சியில் கயல் முத்துவின் தலையை தடவிக்கொடுப்பது) காட்சியும் இதையே முன்வைக்கப்போகிறது.

கல்லூரியின் மிக முக்கியமான இரண்டு இதில் காட்சிப்படுத்தப்படவில்லை. ஒன்று, என்னதான் ஒரு கூட்டமாக ஆண் பெண் நட்பிரிந்தாலும், அதிலிருந்து பிரிந்து ஆண்களுக்குள்ளே ஏற்படும் நட்பும் அதில் முக்கியப்பொருளாக விவாதம் கொள்ளும் காமமும். பெரும்பாலும் இளைஞர்களுக்கு BF, மேற்படி படங்கள் அறிமுகமாவது கல்லூரியில்தான். இதைப் பற்றிய விஷயமே இந்தக் கல்லூரியில் இல்லை. இரண்டாவது, கல்லூரியின் தேர்தல் மற்றும் சமூகத்தின் ஜாதி தனது முகத்தை அறிமுகப்படுத்தும் காலங்கள். தேர்தல் நேரத்து களைகட்டுதல் இல்லாது கல்லூரிகளே இல்லை. மட்டுமின்றி, ஒரு இளைஞன் மெல்ல ஜாதிகளின் நிழல் அதன் இன்னொரு முகத்தோடு தன் மீது படிவதை ஒரு கல்லூரியில் உணரத் தொடங்குவான். அதிலும் இதுபோன்ற கிராமம் சார்ந்த மனிதர்கள் சென்று படிக்கும் கல்லூரிகளில் இந்த விஷயம் வெகு சாதாரனம். மதுரை இண்டர் மீட்டுக்கு பதில் இதில் எதாவது ஒன்றை இயக்குநர் யோசித்திருக்கலாம் என்று தோன்றியது. இதனால் கல்லூரி படம், கல்லூரியில் நடக்கும் ஆண் பெண் உறவை மட்டுமே முன்வைப்பதாக அமைந்துவிட்டது. இதன் பல்வேறு பிரிவுகள் கவனிக்கப்படவில்லை.

இவ்வளவு யதர்த்தமான படத்தில் வரும் சில நாடகத்தனமான காட்சிகள். முதலில் எல்லா நண்பர்களின் வீட்டைப் பற்றிக் காண்பிக்கும்போது வெளிப்படுத்தப்படும் வறுமை. இதில் உண்மையிருக்கும் அளவிற்கு காட்சிகள் அமைத்த விதத்தில் ஈர்ப்பு இல்லை. தகவல்கள் போல இவர்களின் நிலைமை சொல்லப்படுகிறது. இதனால் அவர்களின் வறுமை பார்வையாளர்களின் வறுமையாக மாறாமல் போகிறது. அடுத்தது, நட்பு அன்பு என்கிற அடிப்படையில் நடக்கும் பாசமிகு காட்சிகள். அதில் முக்கியமானவை இரண்டு. சாப்பிட்டுக்கொண்டிருக்கும்போது ஒரு பெண் சாப்பிடாமல் போனதும் அனைவரும் வருந்துவதும் சாப்பிடாமல் போவதும் நாடகத்தன்மை உள்ள காட்சி. இன்னொரு காட்சி, அவர்கள் அனைவரும் திருச்சிக்கு சென்று முத்துவை வெற்றி பெறச் செய்தார்கள் என்று சொன்னதும், எல்லாத்துக்கும் காரணம் ஷோபனா என்று சொல்லப்படுவதும் தொடர்ந்து முத்து நெகிழ்ச்சி அடைவதுமான காட்சிகள். இவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருக்கலாம். ஏனென்றால், காதல் படத்தில் வரும் செயற்கையான காட்சிகள் வெகு குறைவு. அதேபோல் கல்லூரி முதல்வர் வெகு செயற்கை.

படத்தின் நெடுகில் வரும் இளையராஜாவின் பாடல்கள். வாவ், என்ன ஒரு அற்புதம். உண்மையில் இளையராஜாவை திரையுலகம் எவ்வளவு இழந்திருக்கிறது என்பதை உணர முடிகிறது. பாடல்களில் வரும் வெறுமையை உறுதிப்படுத்துகிறது அங்கங்கு தெறித்து விழும் இளையராஜாவின் பாடல்கள். ஜோஷ்வர் ஸ்ரீதரின் இசையில் ஜூன்மாதம் என்று வரும் பாடல் கொஞ்சம் தரமானதாகத் தோன்றியது. மற்ற பாடல்களைப் பற்றி இன்னும் நிறைய முறை கேட்டால்தான் மேலும் சொல்ல முடியும். பின்னணி இசையில், மௌனம் காத்திருக்கவேண்டிய இடங்களில் நெகிழ்ச்சியை அள்ளி இறைக்கும் இசையை அமைத்துவிட்டார். இதை தவிர்த்திருந்திருக்கலாம்.

படம் கல்லூரியின் மீது படியும், கல்லூரி மாணவர்கள் கொஞ்சமும் நினைத்தே இராத, அரசியலின் கொடுமையைப் பற்றிப் பேசுகிறது. நம்மை யோசிக்க வைக்கிறது. மிரள வைக்கிறது. இந்த வகையில் இது முக்கியமான படமே. ஆனால், மணிரத்தினத்தின் பாணி போல, களத்தை மட்டும் பயன்படுத்திக்கொண்டு, அக்களத்தின் மீதான சமூக, அரசியல் காரணங்களைப் பற்றி ஆராயாமல், எல்லாவற்றையும் பார்வையாளன் மீதே சுமத்திவிடுகிறது இப்படமும். அந்த வகையில் இதை ஒரு குறையாகவும் சொல்லமுடியும். (உள்ளிருந்து பார்ப்பவர்களுக்கு நான் சொல்வதன் இயலாமை புரியக்கூடும். அப்படி அரசியல் சமூகக் காரணங்களை தெளிவாகச் சொல்லிப் படமெடுக்கும் சூழல் இல்லை என்பதை அவர்கள் முன்வைக்கலாம். எரிப்புக்களம் ஆந்திராவுக்குப் போவதும் வெள்ளைக் கொடிகள் மங்கலாக அசைவதும் இதை உறுதி செய்கின்றன. இயக்குநரின் எல்லையைப் பற்றியும் புரிந்துகொள்கிறேன். விசுவின் அரங்கத்திற்கு விவாத அரங்கம் என்று பெயர் வைக்குமளவிற்கு மட்டுமே இங்கு இயக்குநரின் சுதந்திரம் இருக்கிறது என்பதும் புரிகிறது.)

காதல் படத்தில் வரும் சிறு சிறு பிழைகள் இப்படத்திலும் தொடர்கின்றன. கதாநாயகி ஒரு தடவை ‘ஓகே’ என்கிறார். பின்குரல் சரி என்கிறது. உதட்டசைவும் குரலும் ஒன்றுபடவில்லை. மழையில் வரும் பாடலொன்றில் ஒரேமாதிரியான முகபாவங்கள் இரண்டு முறை வருகிறது. இந்த இரண்டும் சிறு விஷயங்களே. படத்தின் கடைசி காட்சியில், முத்துவின் பையிலிருந்து கீழே விழும் கர்சீஃபைத் தொடர்ந்து கதாநாயகியின் ரீயாக்ஷனும் இரண்டு முறை வருகிறது. இதை நிச்சயம் எடிட்டிங்கில் தவிர்த்திருந்திருக்கவேண்டும். மிக முக்கியமான காட்சி அது.

இரண்டு நண்பர்கள் ‘நீங்க சொல்லுங்க நீங்க சொல்லுங்க’ என்று சொல்லும் காட்சிகள் பயன்படுத்தப்படும் விதம் வெகு அருமை. உண்மையிலேயே பல சந்தர்ப்பங்களில் இவை நமக்கு சிரிப்பை வரவழைக்கின்றன. இன்னொருவகையில், இக்கதாபாத்திரங்கள் காடு நாவலில் வரும் இரண்டு ஆண் நண்பர்களை எனக்கு நினைவுக்குக் கொண்டு வந்து, தேவையில்லாமல் நிறைய யோசிக்க வைத்துவிட்டது!

இவ்வளவு அறிமுக நடிகர்களை வைத்துக்கொண்டு, யதார்த்தமான படம் எடுப்பது என்பது பெரிய சவால். அதை வெகு கச்சிதமாக நிறைவு செய்திருக்கிறார் பாலாஜி சக்திவேல். எனக்குத் தெரிந்த நடிகர் யார்தான் வந்தார் என்று யோசித்து யோசித்து பார்க்கிறேன், விசு தவிர ஒருவர் பெயரும் நினைவுக்கு வரவில்லை! அப்படியென்றால் இயக்குநரின் உழைப்பு எத்தகையது என்று புரியலாம்.

காதல் தந்த மயக்கம் தீராத நிலையில், இந்தப் படத்தை காதலோடு ஒப்பீடு செய்வதை நிறுத்தவே முடியாமல் போனால், இப்படம் கொஞ்சம் சுணக்கம் பெறும். ஆனால் பாலாஜி சக்திவேல் முக்கியமான இயக்குநராக அறியப்படுவார்.

மதிப்பெண்: 45/100

Share

நிழற்படங்கள் (PIT டிசம்பர் போட்டிக்கு)

வீட்டின் வெளியில் மண்டிக்கிடக்கும் குப்பையில் இருந்த இரண்டு மலர்களின் நிழற்படங்கள் போட்டிக்கு. எடுத்த நேரம் காலை ஆறு மணி, 09.12.07

தென்னையை விஞ்ச நினைக்கும் எருக்கம்பூக்கள்

பூவே நீ யாருக்காக மலர்கின்றாய்?

Share

எனி இந்தியன் பதிப்பகத்தின் நான்கு புதிய புத்தகங்கள்

உயிர்த்தலம் – ஆபிதீன் – சிறுகதைகள் தொகுப்பு

ஆபிதீன் எழுதிய 13 சிறுகதைகளின் தொகுப்பு.

அங்கதம் கலந்த நகைச்சுவையை தனது எழுத்தின் அடிநாதமாகக் கொண்டிருக்கும் ஆபிதீனின் கதைகள், தனது நகைச்சுவையின் வழியே பெரும் கேள்விக்கும் ஆய்விற்கும் தர்க்கத்திற்கும் உள்ளாகவேண்டிய பெரிய உலகத்தை திறந்து வைக்கின்றன. ஒவ்வொரு வரியிலும் இந்த சமூகத்தின் மீதும் சக மனிதர்கள் மீதும் தனது விமர்சன நிழலைப் பரப்பித் திரியும் இக்கதைகள், வெளி நாட்டில் வாழும் தமிழர்களின் வாழ்க்கையைப் பற்றிச் சொல்லும் களத்திலும் செயல்பட்டு புதிய தேடலை சிருஷ்டித்துக்கொள்கின்றன. தான் இயங்கும், எதிர்கொள்ளும் சமூகத்தையும் சமூகத்தைச் சார்ந்த மனிதர்களையும் வெறுத்தோ அல்லது பதிலிறுக்கமுடியாத கேள்விக்குட்படுத்தியோ அவற்றிலிருந்து விலகாமல் அவற்றிற்குள்ளேயே உயர்ந்த பட்ச தேடலை, புதிய அலையை உருவாக்க முனைகின்றன ஆபிதீனின் எழுத்துகள். கதைகள் என்கிற இலக்கணத்தை உடைத்து கதைகளிலிருந்து கதைகளை நீக்கி, ஏற்கனவே கவனம் கொள்ளத் துவங்கியிருக்கும் புதிய மரபில் நான்கு கால் பாய்ச்சலில் செல்கின்றன இவரது கதைகள். ‘கதைகளுக்கும் கட்டுரைகளுக்கும் அதிக வித்தியாசம் இல்லை’ என்பதன் மூலம் புனைவிற்கான வெளியை விரிவுபடுத்துவதிலும் பொதுமைப்படுத்துவதிலும் முக்கிய இடம் பெறுகின்றன ‘உயிர்த்தலம்’ தொகுப்பின் சிறுகதைகள்.

உயிர்த்தலம் (சிறுகதைகள்) – ஆசிரியர்: ஆபிதீன் – பக்கங்கள்: 256 – விலை: 130

வாஸந்தி கட்டுரைகள்

இந்தியா டுடே, துக்ளக், தினகரன் வெள்ளி விழா மலர், பெண்ணே நீ, மங்கையர் மலர் உள்ளிட்ட இதழ்களில் வாஸந்தி எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

1996இல் வாஸந்தி எழுதிய கட்டுரையின் சாரமும் அடிநாதமும் இன்றைய சூழலுக்குப் பொருந்திப் போவதும் இன்றைக்கும் அதே கட்டுரைகளின் தேவை இருப்பதும் இந்நூலின் தேவையை உறுதி செய்கின்றன. எந்தவித பரிவும் கொள்ளாமல் கறாரான மொழியில் நேராகப் பேசிச் செல்லும் வாஸந்தியின் மொழி பெரும் உத்வேகத்தையும் நம்பிக்கை இழந்து கிடக்கும் அரசியலின் மீது புதிய நம்பிக்கை கொள்ளவும் வழி அமைத்துத் தருகிறது. பத்திரிகையாளர்கள் முயன்றால் ஒரு புதிய உலகத்தை திறந்து வைக்கும் திறவுகோல்களாக இருக்கமுடியும் என்கிற எண்ணத்தையும் ஏற்படுத்துகின்றன வாஸந்தியின் கட்டுரைகள். பெண்ணியவாதியாகவும் செயல்படும் வாஸந்தி பெண்ணுலகத்தின் தேவையை, அவ்வுலகத்தின் கட்டுக்கடங்கா சக்தியை “பெண்ணியக் கட்டுரை”களில் தீவிரமாக வெளிப்படுத்துகிறார். “பத்திரிகை தர்மம்” என்கிற கட்டுரைகளில் அவர் தன்னையும் தான் இயங்கும் பத்திரிகை உலகத்தின் செயல்பாடுகளையும் பரிசோதனைக்குட்படுத்திக்கொள்ளத் தயங்குவதில்லை. இந்த சுயசோதனை வாஸந்தியை ஒரு பத்திரிகையாளர் என்கிற முத்திரையிலிருந்து உயர்த்தி ஒரு இலக்கியவாதியாகக் காட்டுகிறது. வாஸந்தியின் எல்லாக் கட்டுரைகளிலும் ஓங்கி ஒலித்துக்கொண்டிருப்பது மனித நேயம் என்கிற, இன்றைய அரசியலும் உலகமும் மறந்துவிட்ட ஒரு பொருளே. அதை தொடர்ந்து எழுதி, சக மனிதர்கள் மீது கொண்டிருக்கும் அன்பையும் பரிவையும் உறுதிபடுத்துகிறார் வாஸந்தி.

வாஸந்தி கட்டுரைகள் – பக்கங்கள்: 240 – விலை: 120

பாவண்ணனின் நதியின் கரையில்:

புதிய பார்வை இதழில் பாவண்ணன் எழுதிய 17 கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

எளிய மொழி, மனிதர்களின் மீதான அன்பு, உயிர்களின் மீதான பரிவு, கவிதை மனம் என எளிமையான, ஆனால் வாழ்க்கையில் ஒவ்வொரு மனிதனும் அடையத் துடிக்கும் அழகான மனநிலைகளை படம் பிடிக்கின்றன பாவண்ணனின் எழுத்துகள். எளிமை என்றுமே இயல்பானது, அதனால் என்றுமே அழகானது என்கிற அடிப்படையில் சுழலும் பாவண்ணனின் உலகம், மனம் விம்மும் பெரும் சோகத்தைக் கூட இதே சூத்திரத்தில் முன்வைக்கிறது. ஒரு எழுத்தாளனுக்கு கைக்கூடும் இந்தப் புள்ளி அவன் எழுத்தின் உச்சம் எனலாம். பாவண்ணன் மிக எளிதாக இந்த உச்சத்தில் சென்று அமர்கிறார். தான் கண்ட காட்சியை விவரித்துக்கொண்டே வரும் பாவண்ணன், ஒரு கட்டத்தில் அதை தான் ரசித்த கவிதைக்கு விளக்கமாகவும் அல்லது விமர்சனமாகவும் மாற்றும் கட்டத்தில், அந்த நிமிடம், அக்கட்டுரை காட்சியை விவரிக்கிற எழுத்து என்கிற தளத்திலிருந்து நகர்ந்து தீவிர இலக்கியத் திறப்புக் கொள்கிறது. இதை இயல்பாகச் செய்துவிடுவதுதான் இக்கட்டுரைகளின் கூடுதல் பலம். அழகியல் மனநிலைகளை படம்பிடிக்கும் இக்கட்டுரைகள் வாழ்வியல் அனுபவமாகவும் விரிகின்றன.

நதியின் கரையில் (கட்டுரைகள்) – ஆசிரியர்: பாவண்ணன் – பக்கங்கள்: 144 – விலை: 70

வெளி நாடக இதழ்த் தொகுப்பு:

இலக்கியத்தன்மையையும் மாற்று உத்திகளையும் யதார்த்தையையும் ஒருங்கே கொண்ட நவீன நாடகங்களின் உலகம் தமிழில் வேர்கொண்டபோது இவற்றிற்குரிய களமாக 1990ல் வெளி வரத்தொடங்கியது வெளி நாடக இதழ். நவீன நாடகங்களின் கூறுகளை நம் பாரம்பரிய நிகழ் மரபிலிருந்தும் தெருக்கூத்துகளிலிருந்தும் இலக்கியங்களிலிருந்தும் உள்வாங்கி புதிய பரிமாணத்தை, புதிய உலகை சிருஷ்டிக்கமுடியும் என்கிற உண்மையை தொடர்ச்சியாக 9 ஆண்டு காலத்திற்கு வெளியான இந்த வெளி இதழ்கள் தமிழ் உலகிற்கு உணர்த்தின. வெளி ரங்கராஜன், சே.ராமானுஜம், ந.முத்துசாமி, கே.வி.ராமசாமி உள்ளிட்ட பல்வேறு நாடகக் கலைஞர்களும் வெங்கட் சாமிநாதன், சாரு நிவேதிதா, எஸ்.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட இலக்கியவாதிகளும் வெளி இதழில் தொடர்ந்து தீவிர பங்காற்றினர். இந்த இதழ்களில் வெளி வந்த சிறப்பான பகுதிகளை கட்டுரைகள், நாடகங்கள், பேட்டிகள் என்கிற மூன்று பிரிவில் வெளி ரங்கராஜன் தொகுத்திருக்கிறார்.

ஆவண முக்கியத்துவம் வாய்ந்ததும் சிறப்பான இலக்கிய வாசிப்பிற்கும் உரியதுமாக சிறப்பாகத் தொகுக்கப்பட்டுள்ளது இந்நூல்.

வெளி இதழ்த்தொகுப்பு (தமிழின் ஒரு அரங்கியல் ஆவணம்) – தொகுத்தவர்: வெளி ரங்கராஜன் – பக்கங்கள்: 320 – விலை: 160

மேலதிக விவரங்களுக்கு: http://anyindianpublication.blogspot.com/

Share

சனி – சிறுகதை

ஸிக்குத் தூக்கமே வரவில்லை. கனவுகளில் சனி பூதாகரமாக வந்து அவன்முன் நின்று பல்லை இளித்துக்காட்டியது. அவன் ஓட ஓட துரத்தினான். சனியைப் பிடிக்கவே முடியவில்லை. அவனுக்கே அதைப் பற்றி நினைத்தபோது கேவலமாக இருந்தது. கனவில் கூட அவனால் சனியைப் பிடிக்க முடியவில்லை. அதன் சாயல் நன்றாக நினைவிலிருந்தது அவனுக்கு. ஆயிரம் எலிகள் அவன் முன்னே வந்து கெக்கலித்தாலும் அவனுக்கு பிரச்சினைக்குரிய சனியைக் கண்டுபிடித்துவிடமுடியும். பரம்பரை பரம்பரையாக வரும் பகையை கூட அவன் மன்னிக்கத் தயாராயிருந்தான். ஆனால் சனியை அவனால் மன்னிக்கமுடியாது.

கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு முன்னால் ஒரு இரவில் டிவி பார்த்துக்கொண்டிருந்தபோது வீட்டிற்குள் அந்த எலி ஓடிவந்தது. அவன் அதை விரட்டுமுன்பு டிவியின் அடியிலுள்ள மேஜையின் கீழே புகுந்துகொண்டது. அவனால் அதை நம்பவேமுடியவில்லை. எப்படி ஒரு எலி ஓடிவந்து வீட்டிற்குள், அதுவும் கண்ணெதிரே இப்படி புகமுடியும்? உடனடியாக மேஜையைப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. அதிசயமாக இருந்தது அவனுக்கு. எலியைத் தேடு தேடென்று தேடினான். வீடெங்கும் தேடியும் எலியைக் காணவில்லை. அந்தத் தோல்வியை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. எப்படி கண்முன் நுழைந்த எலி காணாமல் போகும்? களைத்து தூங்கத் தொடங்கியிருந்தபோது சமையலறையிலிருந்து பாத்திரங்கள் உருளும் சத்தம் கேட்டது. கண்ணாடி டம்ளர் கீழே விழுந்து நொறுங்கிய ஒலியில் அதிர்ச்சி அடைந்தவன் அன்று முழுவதும் உறங்கவே இல்லை. அந்த ஒலி அவனுக்குள் உறங்கிக்கொண்டிருந்த ஏதோ ஒரு பயத்தை கிளப்பிவிட்டிருந்தது. எத்தனை யோசித்தும் அந்தப் பயம் எங்கிருந்து தூண்டப்பட்டது என்பதை அவனால் கண்டடையவே முடியவில்லை. அதன் காரணகர்த்தாவான சனியின் மீது அவன் வெறுப்பு முழுதும் குவிந்தது.

மறுநாள் அலுவலகத்திற்கு விடுப்பு எடுத்துக்கொண்டு வீட்டையே தலைகீழாகப் புரட்டிப் பார்த்தான். எலியைக் காணவில்லை. ஓய்ந்து படுக்கையில் விழுந்தபோது, அப்படுக்கையின் மெத்தையிலிருந்து சில பஞ்சுகளைப் பறக்கவிட்டு எலி பாய்ந்தோடியது. அவனுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. ஒரு முடிவுக்கு வந்தான். வெளியில் சென்று வீரியமிக்க பூனை ஒன்றை வாங்கிவந்தான். வீட்டுக்குள் விட்டான். பூனை புதிய இடத்தைக் கண்டு மிரண்டு அங்குமிங்கும் ஓடியது. கடுமையாகக் கத்தியது. அதன் சத்தம் அவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் அந்த எலியை விடக்கூடாது என்று முடிவு செய்திருந்தான்.

பூனைக்கு வகைவகையாக முட்டையும் பிரெட்டும் வாங்கிக்கொண்டு வந்து பழகினான். பூனை முட்டையையும் அவனையும் மிகவும் நேசிக்கத் தொடங்கியது. பகலெங்கும் வீடைச் சுற்றும் பூனை, இரவில் அவன் வந்து தரும் முட்டையையும் பிரட்டையும் தின்றுவிட்டு அவனுக்கு முன்பே உறங்கியது. எலியைப் பிடிக்கவில்லை. அதேசமயம் எலியையும் வெளியில் காணவில்லை. ஆனால் எலி வீட்டை விட்டுப் போயிருக்காது என்று உறுதியாக நம்பினான் கஸி. அத்தனை எளிதான எலி அதுவல்ல என்பது அவனுக்குத் தெரியும். அந்த எலிக்கு பழங்கால மாய தந்திரங்கள் தெரிந்திருக்குமோ என்று கூட யோசித்த தினம் நினைவுக்கு வந்து கொஞ்சம் கூசிப்போனான். பக்கத்துவிட்டு நண்பனொருவன் பூனையைப் பட்டினி போட்டால்தான் எலியைப் பிடிக்கும் என்று சொல்லிக்கொண்டிருந்தபோது, மூன்றாம் வீட்டுக்காரன் “எதுக்கும் போலீஸ்ல சொல்லிடுங்கோ. இந்தக் காலத்து எலிங்கள அப்படி நம்பிடமுடியாதுன்னா” என்றார். அவன் முறைத்த முறையில் கொஞ்சம் பயந்து, “அது ·போன் பண்ணி உங்கள காலிபண்ணினாத்தான் உங்களுக்கு உறைக்கும்” என்று சொல்லி சிரித்துக்கொண்டே கதவைப் பூட்டிக்கொண்டார். அவர் சிரிப்பு கதவை மீறி வெளியில் வந்து அவன் கண்களைச் சிவப்பாக்கியது.

அன்று பூனையைப் பட்டினி போட்டான். ப்ளூ கிராஸ் நண்பர்களுக்குத் தெரிந்தால் அவனை உள்ளே தள்ளிவிடுவார்கள் என்கிற பயம் ஒருபுறமிருக்க, எலியைக் கொல்லவே அவன் அந்த முடிவுக்கு வந்தான். பூனை மட்டும் அந்த எலியைப் பிடித்துவிட்டால் அதற்கு என்னென்ன உபசாரங்கள் செய்யப்போகிறான் என்பது அவனுக்கு மட்டுமே தெரியும்.

அன்றிரவு பூனையைப் பட்டினி போட்டுவிட்டு படத்திற்குச் சென்றான். படத்தில் ஒரு எலி ஓயாமல் பூனையைத் துரத்தியது. ஏந்தான் இந்தப் படத்திற்கு வந்தோமோ என்று நொந்துகொண்டான். இடைவேளையில் பக்கத்திலிருக்கும் ஒருவரிடம் ‘எலியைத் துரத்தும் பூனைப்படம் எந்த தியேட்டர்ல ஓடுது’ என்று கேட்டான். கேட்கக்கூடாத கேள்வியைக் கேட்டுவிட்டதாக முறைத்த அவர் கையிலிருந்த பாப்கார்னைத் திங்கத் தொடங்கினார். அவனுக்கு எரிச்சலாக வரவும் உடனே எழுந்து வீட்டுக்கு வந்துவிட்டான்.

வீட்டின் கதவைத் திறக்கும்போது பூனை அவன் படுக்கையில் நிம்மதியாகத் தூங்கிக்கொண்டிருந்தது. டிவிக்குச் செல்லும் வயர்கள் அனைத்தும் துண்டு துண்டாகக் கிடந்தன. ·பிரிட்ஜுக்குள் அவன் வைத்திருந்த பிரெட் முழுதும் தூள் தூளாகிக் கீழே சிதறிக் கிடந்தது. இவனால் அக்காட்சியை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ஒரு நிமிடம் பூனையின் மீது சந்தேகம் வந்தது. உடனே அப்படி இருக்கமுடியாது என்கிற முடிவுக்கு வந்தான் கைலியிருந்த டிக்கட்டைச் சுருட்டி பூனையின் மண்டையைக் குறிவைத்து எறிந்தான். பூனை அதிர்ச்சி அடைந்து எழுந்து அவனைப் பார்த்தது. அவந்தான் என்று தெரிந்தவுடன் லேசாகச் சிரித்துவிட்டு தூங்கிப் போனது. எப்படி பசியைத் தாங்கும் பூனை? நண்பன் சொன்னான், “நாலு நாளாவது சாப்பிடாம இருக்கும் பூனை. நாலு நாள் அப்படியே விடு, பார்க்கலாம் அது எப்படி எலிய பிடிக்காம இருக்குன்னு.”

இந்த எலியைப் பிடிக்க இன்னும் நாலு நாள் காத்திருக்கவேண்டும் என்பதே அவனுக்கு அவமானம் தரும் விஷயமாக இருந்தது. பூனைக்கு அதிகம் பசியை உண்டாக்கும் மருந்தை தேடி வாங்கிக்கொண்டு வந்தான். அதை பூனைக்குக் கொடுத்தான். அன்றிரவு பூனையை தனியே விட்டுவிட்டு, படத்திற்குச் சென்றான். எந்தப் படத்திற்கும் டிக்கெட் கிடைக்காமல் மீண்டும் முதல் நாள் பார்த்த படத்திற்குத்தான் டிக்கெட் கிடைத்தது. அதைப் பார்ப்பதற்கு சும்மா இருக்கலாம் என்று வீதியில் சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்தான். ஒருவித எதிர்ப்பார்ப்போடு கதவைத் திறந்தான். வீடெங்கும் பூனையில் உடல்துண்டங்கள் சிதறிக்கிடந்தன.

முதன்முறையாக ஒரு எலிக்குப் பயந்தான். மூன்றாம் வீட்டுக்காரர், “நான் தான் சொன்னேனே ஹா ஹா ஹா” என்று கெக்கலிப்பது போல் அவனுக்கு தோன்றியது. ஒரு சாயலில் அந்த எலியின் சாயல் அவர் முகத்தில் தெரிந்தது போல் இருக்கவும் கஸி அவரை முழுமையாக வெறுத்தான். பகக்த்துவீட்டு நண்பன், சில பெருச்சாலிகள் அப்படி துவம்சம் செய்வது உண்டென்றாலும், பூனையை எந்த எலியும் கொன்றதில்லை என்றும் சொன்னான். அவனுக்கு பயமாகவும் தன் மீதே கேவலமாகவும் இருந்தது. அன்றிரவுதான் அவன் கனவில் முதன்முதலாக எலி வந்தது. பக்கத்துவிட்டுக்காரனிடம் பேசும்போது அந்த எலியை சனி சனி என்று திட்டுவான். ஒருவாறாக அந்த எலியின் பெயரே சனி என்று ஆகிப்போனது.

அதன் பிறகு கிட்டத்தட்ட ஏழு நாள்கள். வரிசையாக என்னென்னவோ செய்தான். சிலிண்டரில் ஒரு வாயு விற்கிறது என்றும் அதை பீய்ச்சினால் எலிகள் ஓடி வந்து செத்துவிழும் என்றும் சொன்னார்களென்று அந்த வாயுவை வாங்கிக்கொண்டுவந்து பீய்ச்சினான். கடுமையான செலவு பிடித்தது. தன் கையிலிருக்கும் பணம் முழுதும் செலவழிந்து தான் பிச்சை எடுக்க நேர்ந்தாலும் பரவாயில்லை என்று நினைத்தே அதைச் செய்தான். சரியாக ஒரு மணிநேரம் கழித்து வந்து பார்த்தபோது, எதிர்த்த வீட்டு பகக்த்துவீட்டு எலிகள் எல்லாம் ஓடி வந்து செத்து விழுந்திருந்தன. ஆனால் சனியைக் காணவில்லை. அவனுக்கு சனியின் சாயல் நன்றாகத் தெரியும், சனி சாகவில்லை. சனியைக் காணவில்லை என்று நண்பனிடம் சொன்னான். அவன் சொன்னான், ‘எங்க வீட்டுல இப்ப எலியே இல்லடா. ரொமப் தேங்க்ஸ்டா’ எங்கிருந்தோ சனியின் அகங்காரச் சிரிப்பு வீட்டுக்குள் ஒலித்தது. தலையைப் பிடித்துக்கொண்டு உட்கார்ந்தான்.

தொடர்ந்து கனவுகளில் சனி அழிச்சாட்டியம் செய்தது. பக்கத்து வீட்டு நண்பன் இன்னொரு உபாயம் செய்தான். எங்கிருந்தோ ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வ்ந்து, அதிலுள்ள சில முறைகளைச் சொன்னான். கஸி சிரித்தான். எதை எதையோ துவம்சம் செய்துவிட்ட எலி இதற்கு எப்படி அகப்படும்? நண்பனின் வற்புறுத்தலில் சரியென ஒப்புக்கொண்டான்.

வீதிகளில் அலைந்து ஒரு மரத்தாலான எலிப்பத்தாயத்தையும் ஒரு வெங்காய வடையையும் வாங்கினார்கள். எலிப்பத்தாயம் விற்பவன் ஒரு கேலியோடு அதைக் கொடுத்தான். ‘இன்னும் இதுக்கு மதிப்பிருக்குதுன்றீங்க?’ கஸி அவனை முறைத்துவிட்டு வீட்டுக்கு வந்தான்.

வீட்டுக்குள் நுழைந்ததும் சனியின் ஓட்டத்தை அவனால் உணர முடிந்தது. கையிலிருந்த வெங்காய வடையை முகர்ந்து பார்த்தான். அந்த மணம் சனியை அல்லாட வைக்கிறது என்பது புரிந்ததும் கொஞ்சம் நம்பிக்கை வந்தது. இது மட்டும் சக்ஸஸ் ஆனால் எப்படி இருக்கும்? ஆரம்ப கட்டத்திலேயே இதைப் பயன்படுத்தியிருந்தால் எவ்வ்ளவு மிச்சமாகியிருக்கும்? நிறையப் பணம், ஒரு பூனையின் உயிர், கொஞ்சம் வயர், கொஞ்சம் பஞ்சு, நிறைய பிரட். எல்லாம் இப்போது வீணாகப் போய்விட்டது. என்றாலும் பரவாயில்லை. பிரச்சினை தீர்ந்தால் சரி.

இதுவரை அவன் எலிப்பத்தாயத்தில் வெங்காய வடையை வைத்ததே இல்லை. முதலில் சரியாக வைக்கவரவில்லை. பின்பு கொஞ்சம் மூளையைப் பயன்படுத்தியதும் அதன் எளிமையான சூத்திரம் பிடிபட்டுவிட்டது. லாகவமாக வெங்காய வடையை வைத்தான். பத்தாயத்தின் மேலே இருக்கும் கொக்கியை பத்தாயத்தின் முதுகின் மிக நுனியில் மாட்டி வைத்தான். சனி உள்ளே நுழைந்து வடையைத் தொட்டாலே போதும், சட். பின்பு அதை உண்டு இல்லையென்று ஆக்கிவிடலாம். நிறைய கேள்விகளைத் தயார் செய்துவைத்துக்கொண்டான். இதையெல்லாம் நல்லா நாக்கைப் பிடுங்கிக்கிற மாதிரி கேக்கணும் என்பார்களே, அப்படி கேட்க வேண்டும் என நினைத்துக்கொண்டான்.

இரவு மிகவும் மெல்ல வருவதுபோலத் தோன்றியது. ஏன் பகலில் சனி வ்ந்து வெங்காய வ்டையைத் தின்று தொலைக்கவில்லை?

இரவு வ்ந்த்ததும் சனிப்பத்தாயத்தை சரியான இடத்தில் வைத்துவிட்டு, மனதிற்குள் ‘சீ யூ’ சொல்லிவிட்டு, அறையைப் பூட்டிவிட்டு படத்திற்கு போனான். ஆச்சரியமாக அன்று விசிலடித்தான். அன்றைக்கு பூனை எலியைத் துரத்தும் படம். பூனை எலியைத் துரத்து துரத்தென்று துரத்தியது. திரையில் ஒன்றுமே திரையிடப்படாத நேரத்தில்கூட கைதட்டி ஆரவாரம் செய்தான். பக்கத்திலிருப்பவன் கடுப்பாகி ‘வாட்ஸ் யுவர் ப்ராப்ளம்’ என்றான். கஸி சிரித்துக்கொண்டே ‘சனி’ என்றான்.

சோதனையாக அன்று வீட்டிற்கு பஸ்ஸே கிடைக்கவில்லை. என்னவோ பிரச்சினை என்று போக்குவரத்தை நிறுத்தியிருந்தார்கள். நடந்தே வீட்டுக்கு வந்தான். உண்மையில் நடப்பதே அவனுக்குப் பிடிக்காது. அன்று அவனுக்கு மிகுந்த சந்தோஷமாக இருந்தது. வெங்காய வடை தன்னைக் கைவிடாது என்று உறுதியாக நம்பினான். தனக்குப் பிடித்த பழமையான பாடலைப் பாடிக்கொண்டு நடந்தான். அப்போது பழமையை மிஞ்சக் கூடிய புதுமையென்று எதுவுமே இல்லை என்று தோன்றியது அவனுக்கு. அந்த நிமிடத்தில் பழமையின் மீது தீராத காதல் கொண்டான். பாரதியார் பாடல்களைத் திக்கித் திணறிப் பாடிப் பார்த்தான். நன்றாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான். பழைய காதலி சிலி நினைவுக்கு வந்தாள். பழமையால் நிரம்பிய புது உலகம் என்கிற சொற்றொடர் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்த உலகமே மாறிப்போனது போல் உணர்ந்தான்.

வீட்டிற்குள் சென்று கதவைத் திறந்தான். சனிப்பத்தாயத்தில் சனி மாட்டிக்கொண்டு “லீவ் மீ லீவ் மீ” என்று கத்திக்கொண்டிருந்தது. கற்பனை ரொம்ப இனிமையாக இருந்தது. அந்த இனிமையை கொஞ்சம் அனுபவித்துவிட்டுக் கதவைத் திறந்தான்.

சனிப்பத்தாயம் காலியாக அவன் வைத்திருந்த மூலையில் கிடந்தது. ஓடிச்சென்று அதை எடுத்துப் பார்த்தான். உள்ளே வெங்காய வ்டையைக் காணவில்லை. ஒரு கடிதம் இருந்தது. “பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்” என்று எழுதி, மிகவும் பரத்தலாக என்று கையெழுத்துப் போடப்பட்டிருந்தது.

“Better Luck Next Time”

With Luv,
Sani, The Boss.

-oOo-

(இது நச் போட்டிக்காக எழுதப்பட்டது.)

வகை: அறிவியல் புனைகதை.

Share

சுப்ரமண்ய ராஜு கதைகள் – சுழலில் சிக்கித் தவிக்கும் கதைகள்


இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’வைப் படித்து இப்படி ஒரு எழுத்தாளர் தமிழின் கொடை என ஏங்கிக் கிடந்த காலங்களில் பாலகுமாரன் வழியாக எனக்குத் தெரிந்த பெயர் சுப்ரமண்ய ராஜு.பாலகுமாரன் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிய எழுதிய வரிகளின் மூலமாக சுப்ரமண்ய ராஜுவைப் படிக்கவேண்டும் என்கிற தீவிரமான எண்ணம், கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘சுப்ரமண்ய ராஜு கதைகள்’ மூலம், கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து, நிறைவேறியது. மாலனும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றிக் குறிப்பிட்டிருக்கிறார். இடையில் எனி இந்தியன் பதிப்பகம் வெளியிட்ட ‘ஞானரதம் இதழ்த் தொகுப்பு’ நூலுக்காக படித்துக்கொண்டிருந்தபோது சுப்ரமண்ய ராஜுவின் கதையொன்றையும் கவிதையொன்றையும் வாசித்தேன். இரண்டுமே சிறப்பாக இருந்தது. ஆனால் சோகம் என்னவென்றால் இந்த இரண்டுக்குள்ளாகவே சுப்ரமண்ய ராஜுவின் மொத்த உலகமும் அடங்கிப்போனதுதான்.

வித்தியாசமான உத்தி, சிறுகதையின் எல்லைகளை பரிட்சைக்கு உட்படுத்துதல், நவீன – பின்நவீனத்துவ கதை கூறல் என்கிற எந்தவிதமான யோசிப்புக்கும் இடம் வைக்காத, வாசகனை அதிகம் மெனக்கெட வைக்காத எழுத்து. எவ்விதக் குழப்பத்தையும் வைக்காமல் நேரடியாக, எளிமையாகப் பேசுகிறது. சுஜாதாவின் நாடகங்கள் போல, தொடர்ச்சியான பேச்சு; மறுபடியும் பேச்சின் மூலமாக கதாபாத்திரங்கள் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டு கதையை எடுத்துச் செல்கின்றன. எல்லாக் கதைகளுமே பேச்சின் மூலமாகவே முன்னெடுத்துச் செல்லப்படுகின்றன. சுஜாதாவிற்கு இருக்கும் சாமர்த்தியம் மற்றும் ஹ்யூமரைப் போன்றே சுப்ரமண்ய ராஜுவின் கதைகளிலும் சாமர்த்தியமும் நகைச்சுவையும் கதை நெடுகிலும் பரந்திருக்கின்றன. இது வாசிப்பை சுலபமாக்குகிறது; ஒரு கட்டத்தில் சலிப்படைய வைக்கிறது. அடுத்து என்ன என்கிற எண்ணத்தையும் இப்படித்தான் இருக்கும் என்கிற முன்கூட்டிய தீர்மானத்தையும் இக்கதைகள் வெகு சீக்கிரமே பெற்றுவிடுகின்றன. ஆனால் இதைப் பற்றி சுப்ரமண்ய ராஜு யோசித்ததாகவோ கவலைப்பட்டதாகவோ அலட்டிக்கொண்டதாகவோ தெரியவில்லை. அவர் பாட்டுக்கு, ஒரு மாமி எதிரிலிருக்கும் பொம்மைக்கு மிமிக்ரி கலந்து கதை சொல்லுவதுபோல, ஓயாமல் பேசிக்கொண்டே கதைகளைச் சொல்லிச் செல்கிறார். இதனால் கவனிக்கப்படவேண்டிய கதைகள் எவை என்பதை நாம் மீண்டும் யோசிக்கவேண்டியிருக்கிறது.

சுப்ரமண்ய ராஜுவின் கதைத்தன்மையை மொத்தமாக, மேம்போக்காகப் பார்த்தால், ஆண்களின் பெண்கள் மீதான ஏளனப் பார்வையை முன்வைக்கும் கதைகளாகச் சொல்லலாம். கொஞ்சம் ஆழமாகப் பார்த்தால் அவை ஆண்களின் ஹிபோகிரைசியைத் தோலுரித்து, பெண்களுக்கு மறைமுக ஆதரவும் பாதுகாப்பும் தருவதை அவதானிக்கலாம். சுப்ரமண்ய ராஜுவிற்கு பெண்கள் மீது இருக்கும் ஈர்ப்பு கதை முழுதும் காணக் கிடைக்கிறது. பெண் இல்லாமல், பெண் பற்றிய உடல் ஈர்ப்பில்லாமல் கதைகளே இல்லை. எல்லா கதைகளும் பெண்ணையும் பெண் உடலையும் சுற்றிச் சுற்றியே வருகின்றன. பெண் கதையை நடத்திச் செல்லும்போதுகூட ஆண்களின் ஹிபோகிரைசியை தோலுரித்துவிட்டு, மிக சாதரணமாக அந்த ஹிபோகிரைசியை தான் அடைந்துகொள்கிறாள்.

பெரும்பாலான கதைகள் ஒரு புள்ளியில் ஆரம்பித்து, அதை நிராகரித்து அல்லது அதை கேள்விக்குட்படுத்தி, கடைசியில் அதே புள்ளியிலேயே முடிந்துவிடுகின்றன. இதை ஒரு டெம்ப்ளேட் என்று சொல்லிவிடத்தக்க அளவில் எல்லாக் கதைகளிலும் சுப்ரமண்ய ராஜு பயன்படுத்தி இருக்கிறார். பாலசந்தரின் படங்கள் – பெரும்பாலானவை – இப்படிப்பட்ட ஒரு சுழலுக்குள் சிக்கித் தவிப்பதைப் பார்த்திருக்கிறேன். ஒரு கதாபாத்திரம் கண்டிக்கும் ஒரு விஷயத்திற்குள் அக்கதாபாத்திரமே, சூழ்நிலை காரணமாகவோ விரும்பியோ வேறு வழியின்றியோ விழுந்துவிடுவது என்கிற தொடர் சித்திரம் எனக்கு பெரும் அலுப்பை ஏற்படுத்தும் ஒன்று.

ஆண்களின் உலகை பட்டவர்த்தனமாக படம்போட்டுக் காட்டும் கதைகள், சுப்ரமண்ய ராஜுவின் உலகத்தில் சபலிஸ்டாக இல்லாத ஆண்களுக்கு இடமே இல்லையோ என்கிற தவிர்க்கமுடியாத கேள்வியை எழுப்புகின்றன. ஆண்களுக்கு பெண்கள் போகப் பொருள் மாத்திரமே என்கிற எண்ணத்தைச் சொல்ல நினைக்கும் ராஜு தன் எல்லா கதைகளிலும் இப்படி ஆண்களை ஒவ்வொரு பெண்ணாக ஓட வைக்கிறார். அதையே பெண்களின் விஷயத்தில் சுதந்திரமாக மாற்றி, சிறந்த சிந்தனையுள்ள, ஆணைச் சாராத பெண்ணாகப் படைத்துவிடுகிறார். தூண்டில், வெளிச்சம், உமா, முகமூடி, முதல் கதை போன்ற கதைகள் ஒரு ஆணின் மனத்தில் இருக்கும் வக்கிரத்தைப் பேசுகின்றன. சந்தர்ப்பத்திற்காகக் காத்திருக்கும் ஆணின் மனதைப் படம் பிடிக்கும் இக்கதைகள், மிக மேம்போக்காக, ஆனால் மீண்டும் மீண்டும் ஆண்களின் உலகத்தைச் சொல்வதன் மூலம் ஒரு அழுத்தத்தை உருவாக்க முயல்கின்றன என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் இவை வெறும் வார்த்தைகளாகத் தங்கி விடுகின்றன. அதேசமயம் இக்கதைகளில் வரும் பெண்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். ‘நாளை வரும்’ கதையில் தன் கணவனுக்கு இருக்கும் தொடர்பை மிக எளிதாக துண்டிக்க வைக்கிறாள் ஒரு பெண். கணவனிடம் கேள்வி கேட்டால் தன் வாழ்க்கை போய்விடும் என்கிற பயத்தின் காரணமாக எதார்த்தமாகச் சிந்திக்கிறாள் அப்பெண். இப்படி சுப்ரமண்ய ராஜு ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களைப் பற்றி பெரிய சித்திரம் ஒன்றை வலிந்து கொடுக்க முனையாவிட்டாலும், அவர்களை பெண்ணியம் பேசும் வீர வசனங்களுக்கு உட்படுத்தாவிட்டாலும், பெண்களின் பாத்திரப்படைப்பு என்பது யதார்த்தத்தையும் சமூகச் சூழலையும் கணக்கில் கொண்டு செயல்படுவதாகவே அமைந்து முழுமை பெற்றுவிடுகிறது.

சிறந்த சிறுகதைகளுள் ஒன்றான ‘வழியில் வந்த முட்டாள்கள்’ இப்படி ஒரு பெண்ணின் கதையைச் சொல்கிறது. கதையின் உத்தி, மீண்டும் ஆரம்பத்திற்கே செல்லும் அலுப்பு தரும் உத்தியாக இருந்தாலும் ஒரு பெண்ணின் பார்வையில் சொல்லப்படும் சிறந்த பதின்ம வயதுக் கதையாக இதைக் கொள்ளமுடியும். எதிர்ப்படும் ஆண்களையெல்லாம் தன் அழகைச் சார்ந்து ஏற்படும் அதீத கர்வத்தால் புறந்தள்ளும் ஒரு பெண்ணை, புறந்தள்ளுகிறான் ஒருவன். பெரும் ஏமாற்றத்துக்குள்ளாகி உடைந்து நொறுங்கும் அப்பெண், தன் ஈகோவைத் தொலைத்துவிடாமல் அவனை மறந்து முதலில் தன் வாழ்க்கையில் எதிர்ப்பட்ட ஆணுக்கு மீண்டும் ‘ஹலோ’ சொல்கிறாள். பெண்ணின் பார்வையில் வெளிப்படும் இக்கதை, பெண்ணை ஆணுக்குரிய சாயலில் காட்டப்படுகிறது. ஒரு பெண்ணைப் பற்றிய கதையைச் சொல்லும்போது கூட, சுப்ரமண்ய ராஜுவால் அவரே ஆண்களைப் பற்றி உருவாக்கி வைத்திருக்கும் சுழலிலிருந்து மீள இயலவில்லை என்கிற எண்ணம் வருகிறது. இக்கதையின் பெண், அவரின் மற்ற கதையின் ஆண்களைப் போலவே சிந்திக்கிறாள்.

மல்லிகைப்பூ, உறவு, விலை, நடுவிலே நான், தாகம், இப்படியா சின்னப் பெண்ணை பயமுறுத்துவது போன்றவை ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் எழுதிப்பழகும் கதைகளை ஒத்திருக்கின்றன. ‘செல்லிக்கு படிப்பு வரவில்லை’ மோசமான கதைகளுள் ஒன்று. இது குமுதத்தில் தண்டமாக எடிட் செய்யப்பட்டுவிட்டது என்று முன்னுரையில் சொல்கிறார் தேவகோட்டை மூர்த்தி. புத்தகத்தில் இருக்கும் கதை குமுத்தத்தால் எடிட் செய்யப்பட்டதா அல்லது முழுமையானதா எனத் தெரியவில்லை. ‘கொடி’ சிறுகதையை முக்கியமான சிறுகதையாகக் கருதுகிறார் தேவகோட்டை மூர்த்தி. என்னைப் பொருத்து அது அப்பாவிக்கான கதை. கடைசியில் தன் மாமனார் போலவே அவனும் ஆகும் அதே கதைச் சுழல்!

ஆண்களும் பெண்களும் பதின்ம வயதும் ஏமாற்றலும் களவொழுக்கமும் சலிக்க சலிக்க வரும் கதைகளிலிருந்து கொஞ்சம் விலகி சில கதைகள் (லெவல் கிராஸிங், நாலு பேர்) மேலே செல்ல முயல்கின்றன. லெவெல் கிராஸிங் சக மனிதர் மீதான அன்பைச் சொல்லும் மிகச் சிறிய நிகழ்வொன்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் சாதாரணமான கதை. ‘நாலு பேர்’ அதிலிருந்து கொஞ்சம் உயர்ந்து, ஒரு நண்பனின் சாவை எதிர்கொள்ளும் நான்கு நண்பர்களின் மனநிலையை அலசுகிறது. இக்கதை ஆண்-பெண் ஏமாற்றம்/ஏமாற்றப்படுதலைப் பற்றிப் பேசாமல், அதை மீறிய கதையொன்றைக் கொஞ்சம் யோசனைக்கு இடம் கொடுத்துச் செல்வதாலேயோ என்னவோ எனக்கு பிடித்துவிட்டது. இக்கதையிலும் ஆண்களுடன் உரச பெண்களும், அவர்களுடன் மோகம் கொள்ள ஆண்களும் வருகிறார்கள். ஆனால் அவை நடக்கும் சூழலுக்குப் பின்னே நிறைந்திருக்கும் பெரும் சோகம் இவற்றைத் தாண்டிய யோசனையைத் தருகிறது.

மொத்தமாக சுப்ரமண்ய ராஜுவின் கதைகள் ஆண்கள் பெண்களின் மன நிலையை விவரிக்கும்போது, கூடவே மிடில் கிளாஸ் மக்களின் நிலையையும் அவர்களின் எண்ணங்களையும், நகரத்து மக்களின் மனப்போக்கைப் பற்றிய சித்திரத்தையும் அளிக்கின்றன. சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் இவை ஒரு முக்கிய அம்சம். ஆனால் இவற்றை ஒரு வாசகன் வலிந்து தேடி அடையவேண்டியிருக்கிறது. எவ்விதத் தீவிரத்தன்மையும் இல்லாமல் சொல்லப்படும் கதைகள் இந்த அம்சத்தை மிக மெல்லிய குரலில் சொல்கின்றன. உரத்து மீண்டும் மீண்டும் வலிந்து சொல்லப்படும் ஆணின் உலகம் இதை மறைத்து வைத்துவிடுகிறது என்றும் சொல்லலாம்.

சொல்லத் தோன்றும், ஆனால் அதிகம் பொருட்படுத்தத் தேவையற்ற, இன்னொரு விஷயம், சுப்ரமண்ய ராஜுவின் கதைகளில் வரும் ஆண்களின் பெயர்கள். ராஜாராமன், கணேசன், முத்து – இந்தப் பெயர்கள்தான் பெரும்பாலான கதைகளில் மீண்டும் மீண்டும் வருகின்றன. தீவிர எண்ணமின்றி தோன்றிய உடனே எழுதிக் கொடுத்துவிட்டுப் விடுவதைப் போன்ற சித்திரம் ஒன்று என் மனதுள் எழுகிறது.

சிறுகதைகளோடு இரண்டு குறுநாவல்களும் தொகுப்பட்டுள்ளன. ‘இன்று நிஜம்’ குறுநாவல் பணத்தை படாடோபத்தை சுதந்திரமற்ற வாழ்க்கையை வெறுக்கும் ஒரு இளைஞனின் கதையையும் வறுமையால் அந்த இளைஞனுக்கு சித்தியாகும் ஒரு பெண்ணின் நிலையையும் ஆராய்கிறது. இருவரும் பேசிக்கொள்ளும் வசனங்கள் நன்றாக இருக்கின்றன. இதிலும் மற்ற சிறுகதைகளின் நீட்சியாகவே இந்த இரண்டு கதாபாத்திரங்களும் அமைகின்றன.

அங்கங்கே சட்டென தெறிக்கும் சுப்ரமண்ய ராஜுவின் சாமர்த்தியமும் நகைச்சுவையும் அதிசயிக்க வைக்கின்றன. இப்படி நிறைய இடங்களில் வருவது கதையை வாசிக்கும்போது ஒரு புன்னகையை வரவழைக்கிறது. உப்பு சப்பற்ற கதைகளைக் கூட கொஞ்சமாவது உயிரோட்டத்தோடு வைத்திருப்பது சுப்ரமண்ய ராஜுவின் இந்த சாமர்த்தியமே. ஆனால் வாழ்க்கையில் நாம் சந்திக்கும் ஒரு கண சம்பவங்களும் இந்த சாமர்த்தியமும் மட்டுமே கதைகளாகிவிடுவதில்லை. இதை சுப்ரமண்ய ராஜூ உணர்ந்துகொண்டதாகத் தெரியவில்லை.

தேவகோட்டை மூர்த்தி சுப்ரமண்ய ராஜுவின் கதைகளைப் பற்றிக் கொஞ்சமும் சுப்ரமண்ய ராஜுவைப் பற்றி நிறையவும் முன்னுரையில் எழுதியிருக்கிறார். சுப்ரமண்ய ராஜுவை இவர் சிறந்த இலக்கியவாதியாக நம்புவதாகத் தெரிகிறது. சுஜாதா தான் வெளியிட்ட பட்டியலில் புதுமைப்பித்தனைச் சேர்க்கவில்லை, சுப்ரமண்ய ராஜூவைச் சேர்த்திருந்தாராம். காலத்தின் கொடுமையில் இதுவும் ஒன்று. ஒருவேளை அப்போது சுஜாதாவிற்கு இலக்கியம் பிடிபடாமல் இருந்திருக்கலாம். இப்போது அவர் இப்படி நினைக்கமாட்டார். ஏனென்றால் காலத்தின் கரங்கள் குரூரமானவை.

கிழக்கு பதிப்பகம் வழக்கம்போல சிறப்பாக இப்புத்தகத்தை வெளியிட்டிருக்கிறது. ஆனால் கதைகளைத் தொகுத்தவர் பெயர் இல்லை. சுப்ரமண்ய ராஜுவின் முழுக்கதைத் தொகுப்பு என்னும்போது தொகுத்தவர் பெயர் முக்கியமானதாகிறது. இன்னும் பத்து அல்லது பதினைந்து வருடங்கள் கழித்து தொகுத்தவர் பெயர் என்ன என்ற கேள்வி முக்கியத்துவம் பெறலாம். அதேபோல் கதைகள் வந்த வருடங்கள் குறிக்கப்படவில்லை. இது ராஜுவின் எழுத்து குறித்த வளர்ச்சியைப் பற்றி அறிந்துகொள்ளவிடாமல் செய்துவிட்டது. ஒரு செம்மையான தொகுப்பிற்கு இவையயெல்லாம் முக்கியமானவை.

சுப்ரமண்ய ராஜு 1973ல் ஞானரதம் இதழில் எழுதிய கவிதை:

புலி

எதிரில் நீ வரும்போது
இடப்பக்கம் ஒதுங்கிடுவான்
Peak-hour பஸ்ஸில்
பின் பக்க நெரிசலில்
உன் பக்கப் பார்வையை
ஒதுக்கியே வைத்திருப்பான்
மொட்டை மாடிக் குளிர் நிலவில்
கட்டை போல் படுத்திருப்பான்
தியேட்டரின் இருட்டிலே
கைபடாது படம் பார்ப்பான்
பெண்ணே!
உன்னை உரித்துப் பார்க்கத் துடிக்கும்
கற்கால மனிதனொருவன்
என்னுள் உறங்குகின்றான்
எப்போது எழுப்பட்டும்?

இக்கவிதையில் அடங்கி விடுகிறது சுப்ரமண்ய ராஜுவின் ஒட்டுமொத்த கதைகளும் அவரது உலகமும். கற்கால மனிதன், கற்கால எண்ணம் என்கிற சொல்லாடல் கூட நிறையக் கதைகளில் வருகிறது. பல பரிமாணங்களற்ற, தட்டையான கதைகள் சுப்ரமண்ய ராஜுவின் தோல்வியில் முக்கியப் பங்காற்றும் விஷயமாகும்.

(இக்கவிதை பற்றி: எனக்குப் பிடித்த கவிதை இது. ஆரம்பத்தில் படர்க்கையில் வரும் கவிதை சில வரிகளுக்குப் பின் தன்னை நோக்கித் திரும்பி, அதை முன்வைத்து ஆண்களின் பொதுவான தளத்திற்குச் செல்கிறது.)

சுப்ரமண்ய ராஜு கதைகள், கிழக்கு பதிப்பகம், விலை: 200 ரூபாய்.

இணையத்தில் வாங்க: http://www.anyindian.com/product_info.php?products_id=26120

Share