Archive for ஹரன் பிரசன்னா

இரவு – சிறுகதை

டி வந்து ரயிலில் ஏறி அமர்ந்து கிட்டத்தட்ட இருபது நிமிடங்கள் கழிந்த பின்பும் நெஞ்சில் படபடப்பும் உடலில் பரவியிருந்த தகிப்பும் குறைந்த மாதிரித் தெரியவில்லை. இந்தப் படபடப்பும் தகிப்பும் உடல் சார்ந்து எழுந்ததல்ல, மனத்தின் போராட்டத்தினால் எழுந்தது. நேற்றிரவு காவேரியின் கரையில் நின்றுகொண்டு நானும் ராஜாவும் பேசிக்கொண்டிருந்தபோது இருந்த அமைதியான, போராட்டமற்ற மனநிலை இப்போதில்லை. ஒரே ஒரு இரவுக்குள் நான் புரட்டிப்போடப்பட்டேன்; இல்லை நான் என்னை புரட்டிப் போட்டுக்கொண்டேன். அதுவரை நானே என்னைப் பற்றி ஏற்றிக்கொண்டிருந்த பீடங்கள் அதன் அடியை இழந்து அதள பாதாளத்தில் வீழ்ந்து கிடந்தன. ஸ்டேஷனுக்கு வரும் வழியில் ஓஷோவின் புத்தகம் ஒன்றை வாங்கியிருந்தேன். அதைப் பிரித்து வம்படியாக வாசிக்கத் தொடங்கினேன். இப்படி நானாக ஏற்படுத்திக்கொள்ளும் லயிப்பிலிருந்து என்னை நான் காப்பாற்றிக்கொள்ளமுடியும் என்று நம்பி வாசித்தேன். இதுபோன்ற குழப்பமான நிலையில் புத்தகம் வாசித்தல் நல்லதொரு பழக்கம் என நினைத்துக்கொண்டேன். அப்போதுதான் புரிந்தது, இப்படியே நினைத்துக்கொண்டிருக்கிறேனே ஒழிய, இன்னும் வாசிக்கத் துவங்கவில்லை என்று. இந்த நினைப்பு எழுந்ததும் ஓஷோவின் மீதும் என் மீதும் இந்த உலகத்தின் மீதும் எல்லாவற்றின் மீதும் வெறுப்பு எழுந்தது. ஜன்னல் வழியே காறித் துப்பினேன். ப்ளாட்பாரத்தில் எனது எச்சில் உலக வரைபடத்தில் ஏதோ ஒரு நாடு போலச் சிதறி விழுந்தது. அப்போதுதான் என் ஜன்னலைக் கடந்தவன், என்னைத் திரும்பிப் பார்த்துச் சலித்துக்கொண்டான். எனக்குக் கொஞ்சம் சந்தோஷம் உண்டானது. இன்னும் ரயில் கிளம்பவில்லை. ப்ளாட்பாரத்தின் மனிதர்களைப் பார்த்துக்கொண்டிருந்தால் நான் கொஞ்சம் என் நினைவுகளைம் மறக்கலாமோ.

எதிரே இருந்த கடையில் ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் ஒரு நடிகை இரண்டு கைகளையும் தலைக்கு மேலே குறுக்கக் கட்டித் தன் மார்பகத்தை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள். எனக்குள் மீண்டும் நினைவுகள் தலைதூக்கத் தொடங்க, அதை மறுத்துப் பார்வையை ஆவின் பால் ஸ்டாலுக்கு மாற்றினேன். சிறுவன் ஒருவன் அவன் அருகில் நிற்கும் மனிதரிடம் ஏதோ வேண்டும் எனக் கேட்டு அடம்பிடித்துக்கொண்டிருந்தான். அவன் அடம் பிடித்தாலும் என்னளவில் அவன் சந்தோஷமாகத்தான் இருக்கிறான். வேணும் என்று கேட்டு அடம்பிடித்தல், வாழ்க்கையின் சுமைகளைப் பற்றிய சிந்தனையின்றி இருத்தல் போன்ற குழந்தைமை விஷயங்கள் ஒரு காலத்திற்குப் பின் மறுக்கப்படுகின்றன. அதை வைத்துப் பார்த்தால் அந்தச் சிறுவன் சந்தோஷமாய்த்தான் இருக்கிறான். ஓடிப்போய் அவனைப் பிடித்துத் தூக்கி முத்தம் கொடுத்து, நீ சந்தோஷமா இருக்கடா பயலே, நீ சந்தோஷமா இருக்கடா, அண்ணாவைப் பார், கெடந்து அலையறேன் எனச் சொல்லலாம் போலத் தோன்றியது. அந்தச் சிறுவன் பக்கத்தில் நின்றிருந்த அந்த ஆள் சிறுவனின் அப்பாவாக இருக்கவேண்டும். சிறுவன் கேட்பதை வாங்கித் தர மறுத்துக்கொண்டிருந்தார். அந்த ஆளைப் பிடித்து உலுக்கி, பசங்க கேட்கிறதையெல்லாம் வாங்கிக்கொடுங்க சார், இந்த வயசு போனால் வராது எனச் சொல்லலாம். மனதில் நினைக்கிறதையெல்லாம் செய்யமுடிகிறதா என்ன? ஆனால் நினைக்காததை செய்ய முடிந்தாகிவிட்டது. காவேரியில் அதிசயமாய் நீர் அதிகம் இருந்தது. நீர் சுழித்துக்கொண்டு ஓடும் அழகைப் பற்றியே சிந்திந்துக்கொண்டிருந்தபோது நேற்றாகிய அந்த நாள் நான் மறக்கமுடியாத நாளாகிப் போய்விடும் எனச் சற்றும் நினைக்கவில்லை. மணற்பரப்பில் நானும் ராஜாவும் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோதுகூடக் கீதாவைப் பற்றிப் பேசவில்லை. நானும் ராஜாவும் பேசாத விஷயங்கள்தான் இருக்கிறதா என்ன? ஆனாலும் நேற்றிரவு என்னைக் கீதா அப்படிச் சுற்றிக்கொள்ளுவாள் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை. கீதா, நீ என்னைப் புரட்டிப் போட்டுவிட்டாய். நேற்றும், இன்றும், இனி என்றுமா?

வண்டி கிளம்புவதற்கான ஆயத்தங்கள் ஏற்பட்டன. ஆவின் பால் ஸ்டாலில் இருந்த சிறுவனும் அவனது அப்பாவும் என் கம்பார்ட்மென்ட்க்கு எதிரே இருந்த கடையில் ஒரு புத்தகமும் ஒரு பிஸ்கட் பாக்கெட்டும் வாங்கிவிட்டு வேக வேகமாக எனது கம்பார்ட்மென்ட்க்குள் ஏறினார்கள். பக்கத்து கம்பார்ட்மென்ட் பிரயாணி ஒருவரை வழியனுப்ப வந்திருந்த ஒரு பெண் கைக்குட்டையை வைத்து வாயை மூடிக்கொண்டு, ரயிலின் ஜன்னல் கம்பிகளைப் பிடித்துக்கொண்டு அழுதாள். அவள் அழுதது அவளது முகம் கோணிக்கொண்டு போவதிலிருந்து தெரிந்தது. நான் யாருக்கும் இப்படி அழுததாக நினைவில்லை. எனக்குள்ளே இந்தப் பாசம், அன்பு போன்ற சமாசாரங்கள் செய்யும் சேட்டைகள் குறைவு என்றே நான் என்னை நம்பி வந்திருக்கிறேன். இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. நான் இப்படித்தான் எனச் சொல்லமுடியாதபடிக்கு, நான் இப்படித்தான் எனச் சொல்லிவந்த ஒரு விஷயத்தில் ஒரு பெரிய இடி நேற்றிரவுதான் இறங்கியிருக்கிறது. அதனால் இனிமேல் கொஞ்சம் பொலிட்டிகல்லி கரெக்டாக, பிற்பாடு என்னிடமிருந்தே நான் தப்பிப்பதற்கு வசதியாக, ‘நான் நம்பி வந்திருக்கிறேன்; நான் இப்படித்தான் இருந்திருக்கவேண்டும் என நினைக்கிறேன்’ என்கிற மாதிரி சொல்லிக்கொள்வது நல்லது. காமம் என்கிற விஷயம் எனக்குள், என் கட்டுக்குள் இருக்கிறது என்று எத்தனை திடமாக என்னைப் பற்றி நானே யோசித்து வைத்திருந்தேன். அத்தனையையும் போட்டு உடைத்தாள் கீதா. எனது பத்தொன்பதாம் வயதில் ஒரு பெண்ணை நான் அனுபவிக்க நேர்ந்திருக்கிறது. அவள் நெருங்கிப் படுத்தபோது விலக்கியிருக்கலாம். அவளது கைகள் என் மேனியெங்கும் மேய்ந்தபோது விலகிப் போயிருந்திருக்கலாம். அவளது மென்மையான உதடுகள் என் உதடுகளைப் ஸ்பரிசித்தபோது விலக்கியிருக்கலாம் – எனக் கூடச் சொல்லமுடியாது. ஏனென்றால் அப்போதே நான் என் வசம் இழந்துவிட்டிருந்தேன். என் நினைவு என்னிடம் இருந்தால்தான் விலகலாம், விலக்கியிருக்கலாம் என்று சொல்வதில் அர்த்தம் இருக்கும். ரயிலின் ஒரு ஜெர்க்கில் கொஞ்சம் முன்னகர்ந்து பின்னகர்ந்தேன். கைக்குட்டையை மூடி அழுத பெண் என் ஜன்னல் வழியே மெல்ல கடந்தாள். பின்னோக்கி நகர்ந்து தலையைப் பின்னுக்குச் சாத்தி, ரிலாக்ஸ்டாகப் படுத்துக்கொண்டேன். அப்போதுதான் கவனித்தேன். எம் கம்பார்ட்மென்ட்டில் என்னைத் தவிர இன்னும் மூன்று பேர் இருந்தார்கள். ஒரு பெண் மருத்துவத் துறை தொடர்பான புத்தகம் ஒன்றைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்தாள். என்ட்ரன்ஸ் பாஸ் செய்து, மெடிக்கலில் சேரப் போகிறாளாயிருக்கும். கரிய நிறம், ரொம்பவும் மெல்லிசாக இருந்தாள். அவளது மேல் நெற்றியில் இருக்கும் கூந்தல் ஜடைக்குள் அடங்காமல் வெளியே பறந்து கொண்டிருந்தது. ஒரு காலை இன்னொரு கால் மீது தூக்கிப் போட்டுக்கொண்டு, வலது கையில் செல்·போனையும் இடது கையில் புத்தகத்தையும் வைத்திருந்தாள். அடிக்கொரு தடவை கம்பார்ட்மென்ட்டை விட்டு வெளியே நோக்கினாள். டிக்கெட் எடுக்காதவன் டி.டி.ஆர்.-இன் வரவை எதிர்பார்ப்பது போல. இவள் டிக்கெட் எடுக்காமல் ஏறியிருக்க வாய்ப்பில்லை. அவளது சுரிதார் கொஞ்சம் மேலேறி, ஹீல்ஸ் அணிந்திருந்த அவளது கால் என் முன் துருத்திக்கொண்டு தெரிந்தது. காலில் மிருதுவான ரோமங்கள் முளைத்திருந்தன. கீதாவின் உடலில் ரோமங்கள் இருந்ததாக நினைவில்லை. அவள் என்னை நெருக்க நெருக்க எல்லாம் சொல்லி வைத்தமாதிரி மிகக் கச்சிதமாக அவள் மீது பரவியது நினைத்து இப்போதும் அதிசயமாக இருந்தது. அந்த நினைவு கூட என்னை இன்னும் சூடேற்றியது. இனி காணும் பெண்களை கீதாவின் உடல் நினைவில்லாமல் பார்க்கமுடியுமா என்பது சந்தேகமாக இருந்தது. இப்போது என் முன்னே அமர்ந்திருக்கும் பெண்ணைக்கூட நான் எந்தவித மேலதிக எண்ணங்கள் இல்லாமல் பார்க்கிறேனா என்பதற்கான உத்தரவாதங்கள் இல்லை. இந்த நேரத்தில் வேறு எண்ணங்கள் எனக்கு இல்லை என்றாலும் அதை உறுதியாகச் சொல்லமுடியாது என்பதையும் உணர்கிறேன்.

பக்கத்து இருக்கையில் ஒரு மாமாவும் மாமியும் இருந்தார்கள். வண்டி கிளம்பிய பத்து நிமிடத்திற்கெல்லாம் தனது பர்த்தில் படுக்க ஆயத்தப்பட்டுக்கொண்டார்கள். எனக்கு அப்பர் பர்த். அவர்களுக்கு வழி விட்டு, நான் எனது பர்த்தில் மேலேறிப் படுத்துக்கொண்டேன். மாமி லோயர் பர்த்திலும் மாமா மிடில் பர்த்திலும் படுத்துக்கொண்டார்கள். அந்தப் பெண் எதிர் வரிசையில் உள்ள லோயர் பர்த்தில் அவள் ஏற்கனவே அமர்ந்திருந்த அதே நிலையில் அமர்ந்து அதே புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தாள். நான் என் கண்களை மூடித் தூக்கத்தை எதிர்நோக்கத் தொடங்கினேன். தூக்கத்தைத் தவிர மற்ற விஷயங்கள் எல்லாம் மனதுள் அலையாடின. மனதை இழுத்துப் பிடித்து நிறுத்துவது சிரமாமாயிருந்தது. இப்படிச் சிரமமாய் இல்லாமலிருந்திருந்தால் நேற்றே அதை நிறுத்திக் கொஞ்சம் தப்பித்திருக்கலாம். எதுவும் நம் கையில் இல்லை என்கிற சால்ஜாப்புகள் உதவாமல் போனது குறித்துத் துக்கம் தொண்டையை அடைத்தது. இந்தக் காமம் என்கிற பாம்பு எப்போதும் என்னைச் சுற்றியே இருந்திருக்கிறது. எட்டாம் வயதிலேயே காமத்திற்குட்ட காலங்கள் இருந்ததாக என் நினைவு சொல்லியது. எட்டு வயதில் காமம் இருந்திருக்க முடியுமா என்று ஏதேனும் டாக்டரிடம் கேட்கவேண்டும். பதிமூன்றாம் வயதில் சுந்தர் அவனது பள்ளியிலிருந்து கிழித்துக்கொண்டு வந்திருந்த இரண்டு பக்கங்களைக் காண்பித்தபோது உடம்பு சில்லிட்டது. உடம்பின் அத்தனை ரத்தமும் ஒரே இடத்தில் குவிய நான் நிலை கொள்ள இயலாமல் கால் தள்ளாடி அந்த மின் கம்பத்தின் கீழே நின்றிருந்த காட்சிப் படிமம் இப்போதும் என்னுள் அப்படியே அடங்கிக் கிடக்கிறது. அந்த மூன்று பக்கங்கள் மிகவும் கொச்சையான மொழியில் ஆண் பெண் உடலுறவைச் சொல்லிக்கொண்டே போனது. அதில் சொல்லப்படும் கதை போன்ற ஒன்று கூட இன்னும் நினைவிருக்கிறது. முதலிரவுக்குக் காத்திருக்கும் ஒரு கணவனின் எண்ணங்களும் அவனை ஏமாற்றி விட்டு அந்தப் பெண் இன்னொருவனும் உறவு கொள்ளப்போவதும்… இது இப்போது தேவையா? கண் விழித்துப் பார்த்தேன். அரைத் தூக்கத்தில் இருந்திருக்கிறேன். கண் எரிந்தது. கம்பார்ட்மென்ட்டின் விளக்கை யார் எப்போது அணைத்தார்கள் எனத் தெரியவில்லை. தலை கடுமையாக வலித்தது. நேற்றிரவும் தூக்கமில்லாமல் கழிந்தது. அந்த இரவின் சம்பவம் உடலுக்கும் மனதுக்கும் ஏற்றிய அசதியும் வெம்மையும் ஒரே போக்காகத் தலைக்குள் புகுந்துகொண்டது போல. ஒருக்களித்துப் படுத்தேன். கம்பார்ட்மென்ட்டின் இருக்கைகள் கண்ணுக்குப் புலப்படத் தொடங்கியது.

மருத்துவப் புத்தகத்தைக் கையில் வைத்துப் படித்துக்கொண்டிருந்த பெண் லோயர் பர்த்தில் படுத்திருந்தாள். அவளின் அருகில் அவளை ஒட்டினாற் போல் இன்னொரு பையன் படுத்திருந்தான். அவனுக்கு வயது இருபது அல்லது இருபத்தி ஒன்று இருக்கலாம். எனக்குப் பக்கென்று இருந்தது. அவன் எப்போது வந்தான், எப்படி வந்தான்? இருவரும் மெல்ல கிசு கிசுவெனப் பேசிக்கொண்டார்கள். அவன் கிசு கிசுவென பேசும் வாக்கில் அவன் உதட்டால் அவளின் செவியையும் அங்கு சூழ்ந்திருந்த அவளது கூந்தலையும் ஒதுக்கித் தள்ளினான். அவனது ஒவ்வொரு உசுப்பலுக்கும் அவள் இடங்கொடுத்து அவனை வெறி கொள்ளச் செய்தாள். எனக்குள் அடங்கிப் போயிருந்த காமம் மீண்டும் தலைதூக்குவதை உணர்ந்தேன். நேற்று இதே போல் ஒரு நிலையில் நான் இருந்தது நினைவுக்கு வந்தது. ஆனால் கீதாவை நான் உசுப்பேற்றத் தேவையில்லாமல் இருந்தது. மிகவும் தீர்க்கமான முடிவுடனேயே அவள் என்னை அணுகியிருக்கிறாள் என்பது எனக்கு இப்போது புரிந்தது. அப்படியானால் அவள் மனக்கண்ணில் இத்தனை நாள் நான் இப்படி ஒரு பிம்பத்தைப் பெற்றிருந்திருக்கிறேன் என நினைத்தபோது என்னுள் ஏதோ விட்டுப்போனது. கீதா எனக்கென ஒரு சுதாரிப்பு நேரத்தைக் கூடக் கொடுக்கவில்லை. பரபரவென என் மீது பரவினாள். தூக்கத்தில் இருந்த எனக்கு என்ன நடக்கிறது எனப் புரிவதற்குள் நிலைமை கட்டுக்குள் இல்லாமல் போயிருந்தது. இது ஒரு அத்துமீறல்தான். இதுவே வேறொரு விஷயத்தில் இருந்திருந்தால் எனது ஈகோ, எனது சுய கௌரவம் போன்ற விஷயங்களை எல்லாம் சம்பந்தப்படுத்தி ஏதேதோ யோசித்து, ராஜாவுடன் தர்க்கித்து ஒரு பெரிய இருப்பை ஏற்படுத்தியிருப்பேன். ஆனால் இந்த முறை காலையில் கிளம்பும்போது, போயிட்டு வர்றேன் கீதா என்றுதான் சொல்லிவிட்டு வரமுடிந்தது.

மருத்துவம் படிக்கும் பெண்ணும் அந்தப் பையனும் இன்னும் நெருக்கமாகப் படுத்துக்கொண்டார்கள். நான் அவர்களைக் கவனிக்கிறேன் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ரயில் எதுவுமே நடக்காதது மாதிரி கருமமே கண்ணாகப் போய்க்கொண்டிருந்தது. இந்த ரயிலைப் போன்ற மனநிலை ஒரு மனிதனுக்கு வாய்த்திருந்தால் அவனே நிச்சயம் பெரிய ஞானியாக இருந்திருப்பான். ஒவ்வொரு நாளும் ரயிலுக்குள் நடக்கும் சம்பவங்கள், பேச்சுகள், சண்டைகள், கலவிகள் போன்றவற்றை யாரோ ஒருவன் தினமும் பார்த்து அதையெல்லாம் பதிந்து வைத்திருந்தால் அதுவே மனித குலத்தின் மகா காப்பியமாக இருந்திருக்கும். அந்தப் பெண் தன் இடையை அவனுக்கு ஏற்றவாறு அவன் அருகில் வைத்துப் படுத்துக்கொண்டாள். அவளின் காலின் மீது அவனது கால்களைப் போட்டுக்கொண்டு, இடது கையை அவளின் வயிற்றின் மீது போட்டுக்கொண்டு, அவளை அணைத்து ஒருக்களித்துப் படுத்துகொண்டான் அவன். அவள் கண்களைத் திறக்கவே இல்லை. அவனும் அவன் கண்களைத் திறக்கவே இல்லை. இரண்டு பேரும் ஏதேதோ முனகிக் கொண்டார்கள். மற்ற பர்த்களில் இருந்த மாமாவும் மாமியும் விட்ட குறட்டையை மீறி அவர்கள் என்ன பேசிக்கொள்கிறார்கள் என்பது கேட்கவே இல்லை. அவன் அவளைத் தன் கால் கொண்டு இறுக்கிக்கொண்டான். அவள் இலேசாக ஒருக்களித்துப் படுத்துக்கொண்டாள். அவன் அவளை மெல்ல முத்தமிட்டான். நான் பெற்ற முத்ததின் வெறியே இன்னும் அடங்காத நிலையில் இந்த முத்தம் இன்னும் என்னை வெறிகொள்ளச் செய்தது. அடுத்த நிறுத்ததில் இறங்கி மீண்டும் திருச்சி சென்று, கீதா அறியாதவாறு அவள் அருகில் படுத்துகொள்ளலாம் என்று தோன்றியது. இந்த எண்ணம் தோன்றவுமே கீதாவைப் பற்றி இப்படித்தான் இத்தனை நாள் நினைத்திருக்கிறேன் போல என்ற எண்ணமும் எழுந்தது. என் உள் மனதில் அடங்கிக் கிடந்த எண்ணம்தான் அவள் என் மீது பரவும்போது எதுவும் சொல்லாமல் அமைதியாக இருக்க வைத்ததோ. மீண்டும் மீண்டும் இந்தக் களியாட்டங்களில் என் மனம் சுழல்வதை நினைத்து வெறுத்து, இனி அவர்களைப் பார்க்கக்கூடாது என முடிவு கட்டி, கண்ணை இறுக்க மூடிக்கொண்டு படுத்தேன். ரயில் மதுரையைக் கடந்திருக்கும். இன்னும் மூன்று மணிநேரத்தில் திருநெல்வேலியில் இறங்கிக் காலையிலேயே அம்மாவின் முகத்தைப் பார்த்துவிடலாம். அம்மாவின் முகம்தான் எத்தனை சாந்தமானது. இதுவரை நான் பார்த்தது போல் அம்மாவின் முகத்தை என்னால் களங்கமில்லாமல் பார்க்கமுடியுமா? இந்தச் சந்தேகம் பரவவும் எனக்குள் ஒரு பீதி எழுந்தது. இனி அம்மாவின் மடியில் தலை வைத்து என்னால் தூங்க முடியுமா? மருத்துவம் படிக்கும் பெண்ணின் சிரிப்பொலி கேட்டது. நான் பார்த்தபோது அவள் அவன் கையை இரண்டு முறை செல்லமாகத் தட்டினாள்; பின்னர் மீண்டும் சிரித்தாள். கீதாவின் சிரிப்பொலி ஒரு மாதிரியாகக் கொணட்டிச் சிரிக்கும் சிரிப்பொலி. அவளைப் பலமுறை கொணட்டி என்று கேலி செய்திருக்கிறேன். காவேரியின் கரைகளில் பதினெட்டாம் பெருக்கு அன்று உணவு உண்ட ஒரு சமயத்தில் அவளைக் கொணட்டி எனச் சொல்லப்போக அவளின் அத்தை பையன் என்னைக் கடுமையாகத் திட்டினான். மறுநாள் கீதா என்னிடம் அவனைக் கண்டுக்காத, அவன் யாரு, நீ சொல்லு என்று சொன்னாள். அப்போது எனக்குச் சந்தோஷமாக இருந்தது. அந்தச் சந்தோஷம்தான் வித்தாகி மரமாகி அவளாலேயே வீழ்த்தப்பட்டிருக்கிறது. பேசாமல் கீதாவைத் திருமணம் செய்துகொண்டுவிட்டு இந்தக் குற்ற உணர்ச்சியில் இருந்து தப்பித்துவிடலாம் என்றாலும் அதற்கும் வழி இல்லை. அவளுக்கும் எனக்கும் ஒரே வயது. இதெல்லாம் சரிப்படாது என்று எனக்கே புரிந்தது. அதுமட்டுமில்லாமல் உண்மையிலேயே நான் குற்ற உணர்ச்சியில் இருக்கிறேனா என்பது பற்றி எனக்கே சந்தேகம் இருந்தது. இல்லையென்றால் மீண்டும் கீதா அருகில் சென்று படுத்துக்கொள்ளலாம் என எப்படித் தோன்றும்? அவளும் நானும் கலந்து கிடந்தபோது அடுத்த கட்டில் கீதாவின் அம்மா மடக் மடக்கென தண்ணீர் குடிக்கும் சத்தம் கேட்டது. அந்தச் சத்தம் என் தவறையும் என் நிலையையும் உணர்த்த அவளை விட்டு நான் விலக முற்பட்டபோது, அவள் என்னை விடவில்லை. விடவே இல்லை. இப்போது அந்தப் பெண் விடுபட நினைக்கிறாள். அவன் விடவில்லை. அவனின் ஆள்காட்டி விரல் அவளின் வயிற்றுக்கு மேலே வட்டங்களாக இட்டுக்கொண்டிருக்கிறது. அந்த வட்டங்கள் அவளை மெல்ல மெல்ல சூழ்கின்றன. அவளால் அந்த வட்டத்தை விட்டு வெளியே வர இயலாது என்பது எனக்கு அனுபவபூர்வமாய்த் தெரியும். கீதாவின் அம்மா போல யாரேனும் தண்ணீர் குடிக்கவேண்டும். யாரேனும் எதையேனும் மடார் என்று கீழே போடவேண்டும். அப்போதுதான் கொஞ்சம் தெளியும் அப்பெண்ணுக்கு. அந்த யாரோ நானேவாக இருக்கலாம். சத்தமாக இருமினேன். அந்த இருமல் அவர்களைக் கவனம் கொள்ளச் செய்தது. அதைவிட என் மேல் அப்பிக்கிடந்த கீதாவும் அவளின் எண்ணங்களும் கொஞ்சம் தெறித்து விழ எனக்கே உதவியது. இதை அறிந்ததும் மீண்டும் மீண்டும் இருமினேன். மாமாவின் குறட்டை நின்றது. நான் தட தடவெனச் சத்தம் வரும்படியாக அப்பர் பர்த்தில் எழுந்து உட்கார்ந்தேன். லோயர் பர்த்தைப் பார்த்தேன். அந்தப் பையனைக் காணவில்லை. எப்போது எப்படி ஓடினான் எனத் தெரியவில்லை. அந்தப் பெண் ஒன்றுமே நடக்காத மாதிரி போர்வையைப் போர்த்திக்கொண்டு ‘தூங்கிக்’கொண்டிருந்தாள். அவளின் சீரான குறட்டை ஒலி என்னைக் கலவரப்படுத்தியது. இப்படியும் பெண்கள் இருக்கிறார்கள் என்று. அடுத்த நொடியே ‘போயிட்டு வர்றேன் கீதா’ என்று சொன்ன என்னை மாதிரியே எனத் தோன்றியது.

பர்த்தில் இருந்து இறங்கி மூத்திரம் கழித்துவிட்டு மீண்டும் பர்த்தில் ஏறிப் படுத்தேன். தூக்கம் வருவது போன்று இருந்தது. இனி கீதா இல்லை, அந்தப் பெண்ணும் அந்தப் பையனும் இல்லை, கனவுலகம் என்னை மெல்ல மெல்ல இழுத்துக்கொண்டு செல்லும். கனவுலகம் நினைவுலகத்தை விட சுமாராக இருந்தது. அங்குச் சிவப்பு நிற மலர்கள் பூத்திருந்தன. தாமிரபரணி பெருக்கெடுத்து ஓடியது. வெயில் குறைவாக அடித்தது. மாரியம்மன் கோவிலில் கொடி ஏற்றியிருந்தார்கள். என் அம்மா வீட்டில் பாயாசம் செய்து வைத்திருந்தாள். பூனைக்குட்டி குதித்தாடியது. வேறோர் இடத்தில் பெரும் மழை பெய்தது. மழையில் கருப்புச் சேலை அணிந்த ஒரு பெண் வெற்றிச் சிரிப்புடன் வந்தாள். அவள் கீதாவாக இருக்குமோ? சட்டென கண் விழித்தேன். ரயில் சீரான ஜதியில் ஓடிக்கொண்டிருந்தது. மாமாவும் மாமியும் எழுந்து உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் நிஜமாகவே தூங்கிவிட்டிருந்தாள். கங்கை கொண்டானை நெருங்கியிருக்கவேண்டும் என்று உள்மனது சொல்லியது. நானும் எழுந்து உட்கார்ந்தேன். என்னுடைய மொபைலை சுவிட்ச் ஆன் செய்தேன். வரிசையாக ஏழெட்டு மெசேஜ்கள் வந்து விழுந்தன. அத்தனையும் அம்மா அனுப்பியது. ஆறு மெசேஜ்கள் where are you? என்று இருந்தது. ஏழாவது மெசேஜ் Happy Birth Day என்று இருந்தது. இரண்டு நாள்களுக்கு முன்பிருந்தவை எல்லாம் ஒரு நாள் இரவில் மாறிப்போன ஞாபகம் வந்தது. அந்த மெசேஜைப் பார்த்துக்கொண்டிருந்தபோதே அம்மா அழைத்தாள்.

“சொல்லும்மா’

“ஹாப்பி பர்த்டேடா செல்லம்”

அம்மாவின் கொஞ்சல் என்றுமில்லாமல் அந்நியமாகப்பட்டது.

“தேங்க்ஸ்.”

“ஏண்டா டல்லா இருக்க? டயர்டா இருக்கா? எங்கே இருக்க? ஏன் மொபைலை ஆ·ப் பண்ண? எத்தனைத் தடவை சொல்லியிருக்கேன், மொபைலை ஆ·ப் பண்ணாதேன்னு. சரியான தூங்கு மூஞ்சி. சீக்கிரம் வாடா செல்லம். பார்த்து ரெண்டு நாளானதே என்னமோ மாதிரி இருக்கு”

“ம்”

“நா இவ்ளோ பேசறேன், வெறும் ம் தானா? சரி சீக்கிரம் வா, கோயிலுக்குப் போகணும், அப்பா காத்துக்கிட்டு இருக்கார்”

போனை வைத்துவிட்டாள். மணியைப் பார்த்தேன் ஐந்து காட்டியது. நான் வீட்டிற்குப் போகுமுன்பு அம்மா குளித்துவிட்டு தயாராகக் காத்திருப்பாள். அம்மாவின் குரலைக் கேட்டதும் என் கஷ்டங்கள் எல்லாம் கரைந்து போனது போலத் தோன்றியது. அம்மாவின் உற்சாகம் என்னையும் பற்றிக்கொண்டதோ. கனவில் வந்த பெண்ணை கனவோடு மறந்துவிடுகிற மாதிரி கீதாவைக் கனவாக மறந்துவிட வேண்டும் என உறுதி எடுத்துக்கொண்டேன். அம்மாவின் செல்லம் என்கிற வார்த்தை நான் எங்கோ ஓரிடத்தில் இன்னும் சின்னப் பையனாக இருக்கிறேன் என்று சொல்லியது. அந்த எண்ணம் என்னை ஒரு சிறு பையனாக மாற்றியது. சிறு பையனின் மூளைக்குள் ஏறிக்கிடந்த தேவையற்ற எண்ணங்களைத் தூக்கி எறிய நான் முயன்றேன். இப்படியே இன்னும் கொஞ்சம் முயன்றால், அம்மாவை நேரில் பார்க்கும்போது அவள் கண்ணில் தெரியும் அந்தச் சிறுவனில் இன்னும் கொஞ்சம் கரையலாம் என்ற நம்பிக்கை பிறந்தது.

ரயில் திருநெல்வேலியில் நின்றது. எனது பதின்ம வயதின் உச்ச நிகழ்ச்சியை, என் வாழ்நாள் முழுதும் நான் சுமக்கவேண்டிய அந்த நினைவை மட்டும் எடுத்துக்கொண்டு, என் குற்ற உணர்ச்சியை ரயிலிலேயே விட்டு விட்டுக் கீழிறிங்கினேன். ஜன்னல் வழியாக அந்தப் பெண் எட்டி என்னைப் பார்த்தாள். “பை பை” என்றேன். திடுக்கிட்டுத் தலையை உள்ளிழுத்துக்கொண்டாள். திருச்சி ரயில் நிலையத்தில் ஒட்டியிருந்த அதே போஸ்டர் திருநெல்வேலியிலும் படபடத்தது. கையைத் தலைக்கு மேலே குறுக்கே கட்டித் தன் மார்பை எடுப்பாகக் காட்டிக்கொண்டிருந்தாள் ஒரு நடிகை. ஒரு நிமிடம் நின்று இரசித்துவிட்டுத் தொடர்ந்து நடந்தேன்.

-oOo-

தமிழோவியம் – தேன் கூடு போட்டிக்கான (வளர்சிதை மாற்றம்) படைப்பு.

Share

அவளின் படம் – கவிதை

எப்படி இத்தனை நாள் அந்தப் புகைப்படத்தை
நினைக்காமல் இருந்தேன் எனத் தெரியவில்லை.
இப்படித்தான் நிறைய மறந்துவிடுகின்றது.
சேது வீட்டில் ஆல்பம் பார்த்துக்கொண்டிருந்தபோது
கண்ணில் பட்டது அந்த ஃபோட்டோ
வெகு கம்பீரமாய்
கால் மேல் கால் போட்டு
முகத்தில் புன்னகை கொப்பளிக்க
வயதுக்குரிய கொணட்டல்களுடன்
அவள் வீற்றிருக்க, பயந்த முகத்துடன்
நான் பின்னின்றிருக்கிறேன்.

நேற்றிரவு எழுந்த கனவில் கூடப்
பின்னின்றிருந்தாள்
இப்போது
உறக்கத்தில் கூட
நான் வலப்புறமாய்ப் படுத்திருக்க
என் முதுகு நோக்கி அவள்.
எப்போதும் எனக்குப் பின்னாலே
இருந்த நினைவுதான் தேங்குகிறது.
ஏழாம் வகுப்பில்
மஞ்சள் பை சுற்றிக்
காற்றில் பறந்த போதும்
பின்னின்றிருந்தாளாம்,
கேட்டபோது கலக்கமாயிருந்தது.
தாலி ஒன்றைக் கட்டிவிட
வீட்டில் கலகங்களில்
தெருவின் குரைப்புகளில்
ஆகாசக் கோட்டைகளில்
கற்பனைகளில்
எப்போதும்
எல்லா இடங்களிலிலும்
பின்னால்தான்.

அந்த ஃபோட்டோவைக்
கேட்டு வாங்கிப் பத்திரப்படுத்திக்கொண்டேன்.

Share

தவறுகளின் கோட்டை – கவிதை

நானறியாத ஒரு பொழுதில்
தவறுகளின் கோட்டைக்குள் விழுந்தேன்.
கதவோவியம் கேலி பேசியது
நான் மறந்ததாக நினைத்துக்கொண்டிருந்த
நொடிப்பொழுதின் பிரதியாக நின்று.
வாசல் கடந்த அறைகளின்
பக்கச் சுவர்களில் பலப்பல ஓவியங்கள்
என் முகச்சாயலுடன்.
சிலவற்றின் குரூரப்பார்வை
மனத்தின் மூலைகளில் சவுக்கடித்தது.
சிலவற்றை அமைதியின் உறைவிடமென
யாரும் கூறக்கூடும் (யார் உள்நுழைந்துவிட
முடியும் என்னைத் தவிர)- ஆனால்
அவற்றின் உள்ளோடும் நினைவுகள்
எனக்கு மட்டுமே அத்துப்பிடி.
பற்பல அறைகளில் மேலும் பல
நிறையப் பேசி
என்னைப் பிய்த்து எறிந்தன.

என் நிர்வாணம்
எனக்கெதிரே
சரிந்து கிடந்தபோது
திடீரென்று திறந்துகொண்டது
பெருங்கதவு.
உள்ளே
கடவுளாக அறியப்படும்
ஆன்மாவின் சிலையொன்று.

Share

தெருக்கள் – கவிதை

தெருக்கள்
இப்படியில்லாமல்
‘ப’ – வாகவோ
‘ட’ – வாகவோ இருந்திருக்கலாம்
ஒரு தொடக்கத்துடனும்
ஒரு முடிவுடனும்
மனிதர்கள்
இப்படி அப்படி எப்படியும்
நடந்து நடந்து
அவர்களைப் போலவே
மாறிவிட்டதோ என்னவோ
ஒரு தெருவிலிருந்து
எந்த வித முகமுமில்லாமல்
திடீரென வளைகிற
இன்னொரு தெருவின்
தோற்றவாயிலில்
கலங்கி நின்றிருக்கிறேன்,
இரண்டு தெருக்களும்
அப்புள்ளியில்
தம்மை இழந்து விட்ட
சோகத்தை நினைத்து.

Share

ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை

அந்திமழையில் ஜீவனாம்சம் – புத்தகப் பார்வை வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

புத்தகத் திருவிழாவில் காலச்சுவடு கடையில் வெளி ரங்கராஜன் சி.சு.செல்லப்பாவின் ‘ஜீவனாம்சம்’ நாவலை வெளியிட்டு அதைப் பற்றிப் பேசினார். அன்றே ஜீவனாம்சம் வாங்கினேன்.

பிராமண விதவைப் பெண் சாவித்திரியின் உலகம் புத்தகம் முழுதும் சுழல்கிறது; நம்மைச் சுழன்றடிக்கிறது. சாவித்திரியின் எண்ண ஓட்டத்தில் எழுதப்பட்டுள்ள கதையில் சாவித்திரியின் நினைவுகள் எழுப்பும் கேள்விகள், கேவல்கள், ஆசைகள் அனைத்தும் சிறப்பான முறையில் கட்டமைக்கப்பட்டிருக்கின்றன. ஒரு விதவைப் பெண்ணின் உலகம் தீவிரமாகவும் ஆழமாகவும் சிருஷ்டிக்கப்பட்டுள்ளது. அதிலும் இந்த சாவித்திரி சமையல் கூடத்தைத் தாண்டாதவள். அவளின் உலகம் என்பது வெளி நபர்கள் மூலம் ஏற்படுத்தப்படுகிற ஒன்று. ஒவ்வொரு வெளி நபர் வரும்போதும் சாவித்திரி நினைவுச் சுழலுக்குள் ஆள்வதும், அவர்களின் மூலம் அறிகிற விஷயங்களில் இருந்து நிகழ்கால உலகத்தை யூகத்தில் உருவாக்கிக்கொள்வதும் விதவைப் பெண்ணின் கட்டுப்பெட்டி வாழ்க்கையை வெளி எளிதாகத் தெரிவித்துவிடுகின்றன.

சாவித்திரியின் புகுந்த வீடு வாழ்க்கை அவளுக்குத் தந்திருந்த சுதந்திரம் மீதும் உரிமை மீதும் அவளுக்குப் பெரிய கர்வம் இருக்கிறது. அவள் சமைத்த உணவின் ருசியின் மீது நடத்தப்படும் இயல்பான விவாதங்கள் யார் வீட்டிலும் நிகழக்கூடியதே; அதை வைத்து ஒவ்வொரு கதாபாத்திரத்தின் தன்மையையும் மறைமுகமாகச் சொல்லிவிட முடிகிறது செல்லப்பாவிற்கு. சாவித்திரி எப்பேற்பட்ட வாழ்க்கை வாழ்ந்தாள் என்று வாசிக்கிற வாசகரை ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் நினைக்க வைத்துவிடுகிறார் ஆசிரியர். செல்லப்பாவின் வரிகளில் பூடகம் இல்லை. ஆனால் அவை ஒரு மனிதனின் மன ஆழத்தில் இருந்து வெளிப்படும் சொற்பமான வார்த்தைகள் தரும் அதிக பட்ச விளைவை ஏற்படுத்தும் வல்லமை பெற்றவை. நாவலில் வரும் மிகக்குறைந்த கதாபாத்திரங்கள் இத்தகைய வலிமையான உணர்வுகளால் பின்னப்பட்ட வசனங்களினால் முக்கியத்துவம் பெற்றுவிடுகின்றன. மிகச் சில இடங்களில் மட்டுமே நேரடியாக இடம்பெறும் கணபதி, சாவித்திரியின் எண்ண ஓட்டங்களின் மூலமாகிறான். சாவித்திரியின் எண்ண ஓட்டங்கள் ஒன்று கணபதியிலிருந்து தொடங்குகின்றன; அல்லது கணபதியில் -நேரடியாகவோ மறைமுகமாகவோ – முடிகின்றன. கணபதி குழந்தை என்பதன் மூலம் சாவித்திரியின் எண்ணத்தில் அவளுக்குக் குழந்தை இல்லாதது எங்கோ புதைந்து எரிந்து கொண்டிருக்கிறதோ என்று நம்மை யோசிக்க வைக்கிறது. சாவித்திரி சுமங்கலியாய் இருந்தபோது அவளது பிறந்த வீட்டில் அண்ணனோடும் மன்னியோடும் அவளுக்கிருக்கிற சிநேகபாவம் வெளிப்படும் இடங்கள் மிகவும் கிண்டலும் கேலியுமாக வெளிப்பட்டுப் போகிறது. பின்னாளில் விதவையாக அவ்வீட்டில் இருக்க நேரிடுகிற சாவித்திரிக்கு அத்தகைய சுதந்திரங்கள் அப்போது தானாகவே விலகிக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. அது சாவித்திரியாக உருவாக்கிக்கொள்வதில்லை. அல்லது அவளது அண்ணனோ மன்னியோ உருவாக்கிவிடுவதில்லை. எந்தவொரு விதவைப் பெண்ணுக்கும் எளிதாக ஏற்பட்டுவிடுகிற தனிமை.

சாவித்திரியின் நினைவுகள் ஒரு பெண்ணின் மன ஆழங்களை வெளிப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. அதிலும் விதவைப் பெண்ணாகிவிட்ட சாவித்திரிக்குத் தன் நினைவும் தன் கற்பனையும் தன் யூகமும் மட்டுமே துணை என்றாகிவிடுகிறபோது, எப்போதோ நடந்த விஷயங்களை அசை போடுவதும், அதைப் பற்றியே மீண்டும் மீண்டும் யோசிப்பதும், ஒவ்வொரு முறையும் அதைப் புதிய கோணத்தில் அணுகுவதும் சில சமயம் சரியாக அதை அடைவதும், சில சமயம் தனக்குத் தோதான கருத்தை அடைந்துகொள்வதும் நாவல் முழுவதும் நிகழ்கிறது. சாவித்திரியின் அண்ணனோ மன்னியோ சாவித்திரியைத் துன்புறுத்துகிறவர்கள் அல்ல. ஆனால் ஒரு நிலையில் தன் தொடர்ச்சியான யோசனைகளின் மூலம் சாவித்திரி அப்படி ஒரு நிலைக்கு வாசகர்களைக் கொண்டு வந்து விடுகிறாள். ஏனென்றால் அவளது மனதில் புகுந்தவீடு தந்த சுதந்திரம் மீதும், சாவித்திரி என்கிற ஈகோவிற்கு அவ்வீடு தந்த மரியாதையின் மீதும் பெரிய இஷ்டமும் அதைப் பறிகொடுத்துவிட்ட அவலமும் கலந்து கிடக்கிறது. பிறந்த வீடு சிறையில்லை என்ற நிலை இருந்தபோதும் புகுந்த வீட்டின் பிரேமையும் கணபதியின் வாத்சல்யமும் அவளை அப்படி ஒரு நிலைக்குக் கொண்டு செல்கின்றன.

அண்ணன் ஒவ்வொரு முறை கேட்கும்போதும் அவன் நினைக்குமாறே செய்துகொள்ளலாம் என்கிற சாவித்திரி, அதன் பின் அதைப் பின்தொடர்ந்து யோசிக்கும்போது அவளுக்கு அவளே முன்வைத்துக்கொள்ளும் கேள்விகள் வாசகனைப் பதட்டமடையச் செய்கின்றன. சாவித்திரி அவளது அடுத்த முறையில் அவள் மனத்திலிருக்கும் கேள்விகளை, ஆசைகளைத் தெளிவாக அண்ணன் முன் சொல்லிடவேண்டும் என்று ஒவ்வொரு வாசகனும் பதட்டமடைகிறான். மீண்டும் மீண்டும் சாவித்திரியின் நினைவுகளாலேயே சுழன்றடிக்கப்படும் வாசகன் ஒரு கட்டத்தில் சாவித்திரியாகி, அச்சுழலில் இருந்து வெளியேறத் துடிக்கிறான். சாவித்திரி சீக்கிரம் கணபதியைக் கைகளில் ஏந்திக்கொள்வது பற்றிய ஒரு பிம்பத்தை வாசகன் உருவாக்கிக்கொண்டு, அதை மனதில் வைத்தே அந்நாவலை வாசிக்கிறான். இப்படி ஒரு விஷயத்தை வாசகன் மனதில் சாவித்திரியின் நினைவுகள் மூலம் சொல்லி, சாவித்திரி பிறந்த வீட்டிலிருந்து வெளியேறிவிடவேண்டுமென்கிற பதட்டத்தை உருவாக்குவதில் சி.சு.செல்லப்பா மிகப்பெரிய வெற்றி கண்டிருக்கிறார். ஒரு விதவைப் பெண்ணுக்கு, அதிலும் தன் வீடு மட்டுமே உலகம் என்று வாழ்ந்துவிட்ட பெண்ணுக்கு எண்ணங்களே துணை. எனவே இந்நாவலுக்கு நினைவோடை உத்தியைத் தவிர வேறு ஏதும் உசிதமில்லை என்ற முடிவெடுத்துவிட்ட தருணத்திலேயே செல்லப்பா பெரும்பாலான நாவலை உருவாக்கிவிட்டார் எனலாம்.

ஜீவனாம்சம் கேட்கலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு சாவித்திரியிடம் நேரடியான பதிலில்லை. பல சமயங்களில் புகுந்த வீட்டின் பெருமையைக் கணக்கில் எடுத்துக்கொண்டு அவர்கள் சார்பாகவே யோசிக்கிறாள் சாவித்திரி. ஆனாலும் சாவித்திரியின் அண்ணனின் நேரடியான கேள்விகளுக்கு சாவித்திரியிடம் பதிலில்லை. அவளது பதில்கள் எல்லாமே அவள் மனதுள் பெரும் போராட்டமாக மட்டுமே நடந்து அங்கேயே முடிந்துவிடுகின்றன. மிக நீண்ட போராட்டத்திற்குப் பின்னரே ஒவ்வொரு வார்த்தையாக வெளிப்படத் தொடங்குகின்றன. வார்த்தைகள் என்றால் சாதாரண வார்த்தைகள் அல்ல. அவ்வார்த்தைகள் சாவித்திரியின் மாற்றத்தை, அவளது சிந்தனைகளின் கோணங்களை வெளிப்படுத்தும் ஆழமான வார்த்தைகள். இந்நாவலில் ஒவ்வொரு கதாபாத்திரமும் சொல்லும் வசனங்களில் இருக்கும் வார்த்தைகளின் வலிமை முக்கியமாகப் பார்க்கவேண்டியது. சாவித்திரியின் நினைவோட்டம் பெரும்பாலும் ஏதோ ஒரு வார்த்தையிலிருந்தே தொடங்குகிறது. அவளது முடிவும், அவளது மாற்றமும் மிகப் பெரிய வரியிலிருக்கும் ஏதோ ஒரு வார்த்தையில் குடியிருக்கிறது. வார்த்தையின் பலத்தைப் புரிந்துகொண்ட சி.சு.செல்லப்பா, அவற்றை பிராமணக் குடும்பத்து நடவடிக்கைகளில் கையாளுவதில் வெற்றி பெற்றிருக்கிறார்.

நாவலில் தொடர்ச்சியாக வரும் நினைவுகள் ஒரு சமயத்தில் அலுப்புத் தட்ட தொடங்குகின்றன. ஆனால் இந்த அலுப்பே வாசகனின் பதட்டத்திற்குக் காரணமாகவும் அமைகிறது. எப்போது சாவித்திரி இந்த அலுப்பு நிறைந்த நினைவுகளாலான உலகத்திலிருந்து வெளியேறுவாள் என்று ஒவ்வொரு வாசகனும் சிந்திக்கத் தொடங்கிவிடுகிறான். சாவித்திரியின் மாமனார் இறந்துவிடுகிறபோது, அவளுக்கு அதில் அதிகம் தீட்டில்லை என்ற விஷயத்தைத் தொடர்ந்து சாவித்திரியின் நினைவுகள் செல்லுகிறது. அவளுக்கான உலகம் எது, அவளுக்கான வீடு எது என்பதை சாவித்திரி கண்டடைந்துவிடுகிறாள் என்று வாசகன் முடிவுக்கு வரும்போது, “துக்கத்துக்குப் போன காலோடு அங்கு தங்கவா?” என்று கேட்டு வாசகனைக் குழப்பத்துக்குள் ஆழ்த்துகிறார் சி.சு.செல்லப்பா. ஒரு நேரடியான திறந்த முடிவு ஏனில்லை என்ற கேள்வி சாவித்திரியோடு தொக்கி நிற்கிறது. அதுவரை சாவித்திரியின் நினைவுச்சுழலுக்குள் சுழன்றடித்த அலை வாசகன் மனதில் இடம் பெயர்ந்துகொள்கிறது.

ஒவ்வொரு அத்தியாய முடிவில் வரும் வார்த்தைகள் மற்றும் நிகழ்ச்சிகள் அடுத்த அத்தியாய தொடக்கத்தில் பயன்படுத்தப்படுவது, உணர்வு ரீதியான கடத்தலுக்கு உதவினாலும், அடுத்த அத்தியாயத் தொடக்கம் இப்படித்தானிருக்கும் என்ற முன்னேற்பாடு வாசகன் மனதில் ஏற்பட்டுவிடுவது, அத்தியாயத்தின் தொடக்கத்திற்கு, வலிந்து திணித்தது போன்ற செயற்கைத்தனத்தைத் தந்துவிடுகிறது. உணர்வுத் தொடர்ச்சியின் பலம் வார்த்தைத் தொடர்ச்சியில் சிதைந்துபோய்விடுகிறது போலத் தோன்றுகிறது.

விதவைப் பெண்ணின் உடல் இச்சை சார்ந்த பிரச்சினைகள் பற்றிச் சி.சு.செல்லப்பா எங்கேயும் சிந்தித்ததாகத் தெரியவில்லை. சாவித்திரியின் சிந்தனைகள் மீண்டும் மீண்டும் உறவு வட்டத்தில் பல்வேறு கோணங்களில் விரிகிறதேயன்றி, திருமணம் ஆன சில காலங்களில் கணவன் இறந்துவிட விதவையாகும் அவளின் உடல் சார்ந்த மோகம் பற்றி அவள் அதிகம் சிந்திப்பதில்லை. நாவலின் ஓட்டம் அதை எதிர்பார்க்கவில்லை என்றாலும் சாவித்திரியின் எண்ணங்களுக்குள் காமம் என்கிற ஒன்றே இல்லாமல் போவது சாத்தியமா என்று யோசிக்கத் தோன்றுகிறது.

நினைவு மடிப்புகளுள் உள்ளடைந்துகிடக்கும் உணர்வுகளின் வெளிப்பாடே இந்நாவலை நடத்திச் செல்கிறது. ஒரு நிகழ்வின் எல்லாக் கோணங்களையும் படம்பிடிக்கிறது செல்லப்பாவின் எழுத்து. சொல்லப்படாத விஷயங்கள் குறித்துச் சிந்திக்க வைக்கும் கூர்மையான வசனங்கள் இந்நாவலின் பலம்.

[ஜீவனாம்சம் – சி.சு.செல்லப்பா – காலச்சுவடு – 70.00 ரூபாய்]

Share

(என்) நிழல் வெளிக் கதைகள் – புத்தகப் பார்வை

அந்திமழையில் என் நிழல் வெளிக் கதைகள் (புத்தகப் பார்வை) வெளியாகியுள்ளது. வாசிக்க இங்கே சுட்டவும்.

பயத்தையும் பீதியையும் கிளப்பும் வாய்மொழிக் கதைகளை நான் அதிகம் கேட்கத் துவங்கியது கல்லுப்பட்டியில் வாழ்ந்த காலங்களில்தான். அதுவரை இருந்துவந்த சூழலுக்கும் (சேரன்மகாதேவி) கல்லுப்பட்டியின் சூழலுக்கும் பெரிய வித்தியாசத்தை உணர்ந்தேன் என்றே சொல்லவேண்டும். மூளைக்குப் பொருந்தாத, ஆனால் நினைத்த மாத்திரத்தில் பயத்தைக் கிளப்புகிற பல கதைகளை யாரேனும் எப்போதும் சொல்லிக்கொண்டே இருந்தார்கள். மூன்றாவது வீட்டில் வசித்து வந்த குட்டி அண்ணன் இது போன்ற கதைகளைத் தினமும் இரவு அவிழ்த்துவிடுவார். “அவன் ராத்திரி பயந்துக்குவான்” என்கிற என் அம்மாவின் பேச்சை மீறி, நானும் விஜயகுமாரும் வாய் திறக்காமல் கேட்டுக்கொண்டிருப்போம். ஒரு நாள் குட்டி அண்ணனின் அப்பா சொன்னார். “ராத்திரி கிட்டத்தட்ட ஒரு மணி இருக்கும். ஒண்ணுக்கு முட்டிக்கிட்டு வந்துச்சு. சரி, எதுத்தாப்புல இருக்கிற ஓடைல உட்காருவோம்னு உட்காந்து ஒண்ணுக்குப் போய்க்கிட்டு இருந்தேன். ணங்குன்னு யாரோ மண்டைல அடிச்ச மாதிரி. தலை முச்சூடும் வலி. பின்னாடி திரும்பி பார்த்தேன். ஒரு பயலையும் காணலை. கொஞ்சம் மயக்கமா இருந்தது. தட்டி முட்டி வீட்டுக்கு வந்து அப்படியே தூங்கிட்டேன். காலேல எந்திரிச்சு தலையை பின்னாடி தடவிப் பாத்தா, அருதலி, ரத்தமா இருக்கு. ஒடம்பெல்லாம் ஆடிப்போச்சு. ஒண்ணுக்கு இருந்துட்டு விழுந்த இடத்துல போய் பாத்தேன். அங்க ஒரு ஓணான் செத்துக் கிடந்தது.” ஆர்வமும் பயமும் ஒரு சேர நான், “ஓணான் இருந்தா?” என்றேன். குட்டி அண்ணன் சட்டென்று, “கருப்பு அப்படி எதாவது உருவம் எடுத்துதான் வருமாம். இல்லப்பா?” என்றார். அப்போது எனக்கு வயது 14.

இரவு முழுவதும் உறக்கத்திலும் விழிப்பிலும் அந்தக் கதைகள் என்னைச் சுழன்றடிக்கும்.

பண்டாரங்குளம் என்றொரு குளம் உண்டு. காலைக் கடன்கள் கழிக்க கழிப்பறைகளெல்லாம் கிடையாது. போய்க்கொண்டிருக்கும்போது பன்றிகள் பின்னால் காத்து நிற்கும். சில பன்றிகள் சிறுவர்களை முட்டித் தள்ளக் கூடத் தயாராய் இருக்கும். அப்படி பண்டாரங்குளத்தின் வரப்புகளில் ஒதுங்கியிருந்த சமயத்தில் இன்னொரு கதை காதில் விழுந்தது. பண்டாரங்குளத்தில் ஒரு புளியமரம் உண்டு. அந்தப் புளியமரத்தில் ஆணி அடித்திருந்தார்கள். ‘ஊரெல்லாம் கருப்பு சுத்தி பொண்ணுங்களையும் புள்ளைங்களையும் புடிச்சுப் போடுதுன்னு சொல்லி ஆணில அடிச்சு கட்டி வெச்சிட்டான் மந்திரவாதி’ என்ற கதை அது. அதை நம்பாமல் அந்த ஆணியைத் தொட்டவன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து செத்தான் என்ற கூடுதல் தகவலும் கிடைத்தது. அதன் பின்பு அந்தப் புளிய மரத்தைக் கடக்கும்போதெல்லாம் என் கண் அந்த ஆணியிலேயே குத்தி நிற்கும். சில நாள்கள் கழித்துப் பார்த்தபோது அந்த ஆணியைக் காணவில்லை. நான் அந்த வயதில், அந்த ஆணியைப் பிடுங்கி எறிந்த வீரனைப் பார்க்க ஆசைப்பட்டேன்.

கல்லுப்பட்டிக்குப் பக்கத்து ஊர் காரைக்கேணி. கல்லுப்பட்டியைக் காட்டிலும் இது மாதிரியான பேய்க்கதைகள் உலவும் பட்டிக்காடு. அங்குப் படுகளம் என்றொரு விழா நடக்கும். அந்த விழாவுக்கு ஒரு முறை சென்றிருந்தேன். கண்ணாக்குட்டி எங்களை எல்லா இடத்திற்கும் அழைத்துச் சென்றான். அங்கிருந்த இடங்கள் என்னவோ ஒன்றிரண்டுதான். ஆனால் அவற்றையெல்லாம் விடாமல் துரத்தித் துரத்திக் காட்டினான் கண்ணாக்குட்டி. இலைகளே இல்லாத முள்மரங்கள் நிறைந்த காடு ஒன்று இப்போதும் என் மனதில் நிறைந்து கிடக்கிறது. பாரதிராஜா ஏன் இன்னும் அந்த முள்மரங்களுக்குக் கீழே ஒரு ஷாட் கூட எடுக்கவில்லை என்பது எனது அந்நாளைய கேள்வியாக இருந்தது. கண்ணாக்குட்டி பாதாள பைரவி என்றொரு அம்மனைக் காண்பிப்பதாகச் சொன்னான். அதைக் காண்பிக்கப் போவதற்கு முன்பாகப் பாதாள பைரவியைப் பற்றிப் பெரிய பெரிய கதைகளைச் சொன்னான். ஒரு காலத்தில் அந்த அம்மன் சாலையை மறித்த படி படுத்துக் கிடந்தாள். இதனால் காரைக்கேணியிலிருந்து மற்ற ஊர்களுக்குச் செல்பவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளானார்கள். அந்த அம்மனை அந்த இடத்தை விட்டு வேறு இடத்திற்கு மாற்றிப் பிரதிஷ்டை செய்ய யாரும் முன்வரவில்லை. எல்லாரும் பயந்தார்கள். ஒரே ஒரு பூசாரி மட்டும் தைரியத்துடன் அந்த அம்மனின் இடத்தைச் சாலையை விட்டுக் கண்மாய்க்கு நடுவில் மாற்றினார். அம்மனையும் கண்மாயின் நடுவே அமர்த்தினார். மறுநாள் காலை அந்தப் பூசாரி இரத்தம் கக்கிச் செத்துக் கிடந்தாராம். அதுமட்டுமல்லாமல் வேறு சில கதைகளும் சொன்னான். அந்த அம்மன் மிகவும் உக்கிரமானது என்றும் அவள் முன் நின்று பொய் சொன்னாலே மறுநாள் சாவு உறுதி என்றும் கண்ணாக்குட்டி சொல்ல, அந்த அம்மனைப் பார்த்துத்தான் ஆகவேண்டுமா என்கிற பயம் தொற்றிக் கொண்டது. ஏதோ ஒரு வெளிநாட்டுக்காரன் ஊர்மக்கள் சொல்வதை மதிக்காமல் அந்த அம்மனைப் புகைப்படம் பிடித்ததாகவும் ஆனால் அன்றே அவன் ஒரு விபத்தில் இறந்துபோனதாகவும் சொன்னான். மிகுந்த பயத்துடன் அந்த அம்மனைப் பார்க்கப்போனேன். சிமிண்ட்டில் செதுக்கப்பட்ட சிலையுடன் பலவித வண்ணங்களைக் கொண்டு பாதாள பைரவி நீரற்ற கண்மாயில் கையையும் காலையும் விரித்துப் படுத்துக் கிடந்தாள். அதன் காலோரத்தில் ஒரு புகைப்படம் ஒன்று கிடந்தது. யாரோ ஒருவனின் புகைப்படம் அது. அதைப் பற்றிக் கண்ணாக்குட்டியிடம் கேட்கவில்லை. நான் கேட்டு, அவன் இன்னொரு புதுக்கதையை ஆரம்பித்தால் அதைக் கேட்கிற தைரியம் எனக்கு இல்லை. மறுநாள் மாமாவிடம் (கண்ணாக்குட்டியின் அப்பா) பேசிக்கொண்டிருந்தபோது கண்ணாக்குட்டி சொன்ன கதையெல்லாம் பொய் என்றார்! அவர் ஒரு வரலாற்றைச் சொன்னார். அக்காலத்தில் ஏகாளி (வண்ணான்) வர்ணத்தைச் சேர்ந்தவர் அந்த அம்மனை கண்மாயில் வைத்தாராம். அப்படிக் கண்மாயில் வைத்துத் தன்னை வழிபடவேண்டுமென்று அந்த ஏகாளியைப் பாதாள பைரவியே சொன்னாளாம். கண்மாயில் துவைத்துக்கொண்டு, தன்னை வழிபட்டுக்கொண்டிருக்குமாறு பாதாள பைரவி அந்த ஏகாளியைப் பணித்தாளாம். அவரும் அது போலவே செய்துவந்தார். வருடத்திற்கு ஒரு முறை பாதாள பைரவிக்கு விழா எடுக்க நினைத்த அவர், நிறையப் பேருக்குத் தேவையான உணவைச் சமைத்து பிற சாதியைச் சேர்ந்த (தேவர்) பெரியவர்களைச் சாப்பிட அழைத்தாராம். அதை ஏற்க மறுத்த அச்சாதியினர் அவர் உணவை உண்ண வரவில்லை. மனம் சோர்ந்து போன ஏகாளி, அந்த உணவையெல்லாம் பாதாள பைரவியின் முன்னே ஒரு குழியைத் தோண்டி அதிலிட்டு மூடி வைத்துவிட்டார். மறு வருடம் மீண்டும் விழா நாளில் அக்குழியைப் பறித்துப் பார்த்தபோது, அந்த உணவு கெடாமல், மண் விழாமல் அப்படியே இருந்ததாம். இதைப் பார்த்துப் பாதாள பைரவியின் சக்தியை உணர்ந்து கொண்டு அனைவரும் அவ்விழாவில் கலந்துகொண்டு சிறப்புச் செய்தார்களாம். சாலையை அம்மன் மறித்தது எல்லாம் திருநெல்வேலி பக்கத்தில் வேறொரு அம்மன் (வண்டி மறிச்ச அம்மன்) என்றும் அக்கதையைப் பாதாள பைரவிக்குப் பொருத்தி அளந்துவிட்டான் கண்ணாக்குட்டி என்றும் மாமா விளக்கினார்.

மறுநாள் படுகளம் தொடங்கியது. படுகளத்தின் வரலாற்றை நினைவில் இருந்து சொல்கிறேன். தென்னமனூர் மற்றும் கவசக்கோட்டை என்ற இரண்டு ஊர்கள் உண்டு. கவசக்கோட்டையில் இருந்து ஒரு வள்ளத்தான் குருவி தென்னமனூருக்கு வந்துவிட்டது. தென்னமனூரைச் சேர்ந்த ராஜா அந்தக் குருவியைத் தர மறுத்துவிட்டான். கவசக்கோட்டை ராஜா அந்தக் குருவி தனக்குச் சொந்தமானது என்றும் அது தனக்கு வேண்டுமென்றும் கேட்டான். ஆனால் அதை மறுத்த தென்னமனூர் ராஜா, வேண்டுமென்றால் நாள் குறித்துச் சண்டையிட்டு, வென்றால் அதைக் கொண்டு போ என்று சொல்லிவிட்டானாம். நாள் குறிக்கப்பட்டது. தென்னமனூருக்கும் கவசக்கோட்டைக்கும் இடையில் காரைக்கேணியில் சண்டை. தென்னமனூர் ராஜா கவசக்கோட்டை ராஜாவுக்கு ஒரு நிபந்தனை விதித்தான். சண்டைக்கு வருபவர்கள் இரு தரப்பிலும் ஒருவர் ஒருவராக மட்டுமே வரவேண்டும் என்பதே அது. கவசக்கோட்டை ராஜா சத்தியத்திற்குக் கட்டுப்பட்டவன். அதை ஏற்றுக்கொண்டு ஒவ்வொரு ஆளாக சண்டைக்கு அனுப்பினான். ஆனால் தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக ஆளை அனுப்பி, கவசக்கோட்டை சண்டைக்காரர்களைத் தோற்கடித்துக் கொன்றுவிட்டான். சென்றவர்கள் யாருமே திரும்பவில்லை என்பதை நினைத்த கவசக்கோட்டை ராஜா தங்களின் பரம்பரைச் சாமிகளைக் காவலுக்கு வைத்தான். தென்னமனூர் ராஜா ஐந்தாறு பேர்களாக அனுப்பிக் கொன்று விட்டுப் போனது தெரியாமல் கசவக்கோட்டை ராஜா சாமிகளை வேண்டிக்கொண்டான். ஒரு சேவலை அறுத்து ஒரு ஈட்டியில் குத்தி நட்டான். ஒரு ஆட்டின் குடலை உருவிவிட்டு, அந்த ஆட்டைத் தன் தலையில் மாலையாகப் போட்டுக்கொண்டாள் ஒரு கிழவி. அந்தச் சேவலும் அந்த ஆடும் சாகாமல் உயிரோடு இருந்தன. அவை சாமிகளின் சக்தி. அவற்றை வணங்கிவிட்டுக் தானே தனியாகச் சண்டைக்குச் சென்றான் கவசக்கோட்டை ராஜா. அவனும் சதிக்குப் பலியானான். அவன் பலியான போது, கழுத்தறுபட்ட சேவலும், குடலற்ற ஆடும் உயிர் துறந்தன. அதைப் பார்த்து அவர்களது ராஜா தோற்றுப்போனதை அவ்வூர் மக்கள் அறிந்துகொண்டார்களாம். இக்கதை அப்படியே படுகளத்தில் நடத்திக் காட்டப்பட்டது. ‘சேவல் ஈட்டியில உயிரோட இருக்கும்டி’ எனச் சொல்லி என்னை அசத்தி வைத்திருந்தான் கண்ணாக்குட்டி. ஆட்டைக் கழுத்தில் போட்டுக்கொண்டு ஒரு கிழவி சாமியாடிக்கொண்டிருந்தாள். மாலை ஐந்து மணி வாக்கில் அச்சேவல் மூன்று முறை தலையைத் தூக்கி உயிரை விட்டதைத் தூரத்திலிருந்து காண்பித்தான் கண்ணாக்குட்டி. முதல் நாள் இரவில் எல்லா விளக்குகளும் அணைக்கப்பட்ட நிலையில், தென்னமனூர்க்காரர்களாக வேடமிட்டவர்கள் ஐந்து பேரும் கவசக்கோட்டை ராஜாவாக வேடமிட்ட ஒருவரும் சேவலின் பச்சை இரத்தத்தையும் ஆட்டு இரத்தத்தையும் குடித்துக்கொண்டு கூச்சலிட்டு ஓடிவந்தார்கள். நான் என் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு ஊரோரத்தில் வெளியில் திரையிடப்பட்ட ஆண்டவன் கட்டளையையும் பூம்புகாரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஜெயமோகனின் நிழல் வெளிக் கதைகள் இப்படி காலம் காலமாகத் தொடர்ந்து சொல்லப்பட்டு வரும் கதைகளைப் பிடித்துக்கொண்டுள்ளது. இப்படி மரபு ரீதியான கதைகளையும் வாய்மொழிக் கதைகளையும் அறிவுக்கு ஒவ்வாதவை என விலக்கி வைத்துவிடலாம். ஆனால் அவை தரும் பழக்க ரீதியான தொடர்ச்சியையும் அக்கதைகளில் நிலவும் நிஜம் கலந்த கற்பனைகளையும் இரசிக்கத் தொடங்கினோமானால் மூதாதயர்களைப் பக்கத்தில் வைத்துப் பார்த்த கிளர்ச்சி உண்டாவதை உணரலாம். என்றோ இளம்பருவத்தில் கன்னி கழியாமல் செத்துப் போன ஒரு பெண்ணை இன்னும் கன்னித்தெய்வமாக வழிபடும் குடும்பத்தின் வேர்கள் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வருவதைப் புரிந்துகொள்ளலாம். உலகின் எல்லாக் கேள்விகளுக்கும் அறிவுப்பூர்வமான பதில் இல்லை, அப்படியே இருந்தாலும், அவை தேவையுமில்லை. சில விஷயங்கள் மனதைப் பொருத்தும் உணர்ச்சி சார்ந்தும் சந்ததிகளுக்குள்ளே பரிமாறிக்கொள்ளப்பட்டு வேர் பிடித்துக்கொள்கின்றன. ஜெயமோகனின் நிழல்வெளிக் கதைகளும் இத்தகையப் பரம்பரை ரீதியிலான கதைகளே.

வடிவத்தைப் பொருத்தவரையில் அனைத்துக் கதைகளும் வெகு சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிறுகதையின் சிறப்பான உயரங்களைத் தொட்டவர்களுள் ஒருவர் ஜெயமோகன். அதைத் தனியே சொல்லவேண்டியதில்லை. நிழல்வெளிக் கதைகளும் ஜெயமோகனுக்குரிய தனித்துவமிக்க மொழியில் சிறப்பான வடிவத்தில் வெளிப்பட்டுள்ளது. உயிர்மை இதழில் வந்த கதைகளும் வேறு சில கதைகளும் இச்சிறுகதைத் தொகுப்பில் தொகுக்கப்பட்டுள்ளன.

இக்கதைகளில் மிகச் சிறப்பான கதைகளாக நான் கருதுவன பாதைகள், ஏழுநிலைப் பந்தல், தம்பி மற்றும் இரண்டாவது பெண். பாதைகள் கதையில் ஜெயமோகனின் எழுத்து வன்மை முக்கியத்துவம் பெறுகிறது. ஒவ்வொரு அறைக்குள்ளும் ஒவ்வொரு அறை திறக்கும் விதமும் மனதை மயக்கும், வசீகரிக்கும், குழப்பும் ஓவியங்களின் விவரிப்பும் ஒரு தேர்ந்த எழுத்தானுக்கு மட்டுமே உரித்தானவை. தம்பி கதையின் உயிர்நாடி ஏற்கனவே பல சந்தர்ப்பங்களில் பேசப்பட்ட விஷயம்தான். என்றாலும் கதை சொல்லப்படும் நேர்த்தியும், ‘ம்ம்ம்பீ’யின் பிம்பமும் நம்முள் புகுந்துகொள்ள, சரவணன் இறப்பதை நேரில் காண்பது போன்ற எண்ணம் உண்டாகிவிடுகிறது. ‘ஏழு நிலைப் பந்தலும்’, ‘இரண்டாவது பெண்ணும்’ வசீகரமான வட்டார வழக்குடன் நெஞ்சில் அறைந்து பீதியை உண்டாக்குகின்றன. குறிப்பாக ‘இரண்டாவது பெண்’ கதையில் வரும் விவரிப்புகள், நம்மைச் சுற்றி இருக்கும் சூழலை மறக்கச் செய்து, இருளில் உறைந்துபோன நிலையை உண்டாக்கிவிடுகின்றன. ஐந்தாவது நபர் கதையில் வரும் தர்க்கங்களைக் கொண்டு கதையின் முடிவை வாசித்தோமானால் அக்கதை வேறொரு இடத்தில் திறப்புக் கொள்கிறது. பிளாஞ்செட்டில் இருக்கும் நான்கு நண்பர்களின் ஒட்டு மொத்த மனநிலை சேர்ந்து உருவாக்கும் எண்ணங்கள் ஐந்தாவது நபராக பிளாஞ்செட்டில் வேலை செய்கிறது என்கிற தர்க்கத்தை ஏற்றோமானால், மாஸ்டர் சரசுவைக் கொன்றார் என்பதை அந்த நான்கு பேரில் ஒருவரோ அல்லது நான்கு பேருமோ (மாஸ்டர் உட்பட) சொல்ல நினைத்திருக்கிறார்கள் என்ற வகையில் யோசிக்கத் தொடங்கலாம். மற்றக் கதைகளும் தத்தம் அளவில் சிறப்பாகவே வந்துள்ளன.

அயர்ச்சி தருகிற விஷயம் என்று பார்த்தால் எல்லாக் கதைகளும் ஒரே போல் தொடங்குவதும் ஒரே போல் முடிவதும் என்பதைக் கூறலாம். பெரும்பாலும் எல்லாக் கதைகளிலிலும் யாரோ ஒருவர் சொல்லத் தொடங்குகிறார்கள். இப்படியில்லாமல் நேரடியான நிகழ்கதைகளைப் போலவே வடிவமைத்திருக்கமுடியும். இவை சொல்லப்பட்டு வந்த கதைகள் என்பதால் ஜெயமோகன் இப்படி அமைத்தாரா என்பது தெரியவில்லை. மிகச் சிறப்பாகச் சொல்லப்படும் இரண்டாவது பெண் சிறுகதை கடைசியில் ஒரு திடும் திருப்பத்தைக் கொண்டுள்ளது போல் தோன்றுவது யதார்த்தமாக – இவை எல்லாமே யதார்த்தத்தை மீறின கதைகள் என்றாலும் – இல்லை.

கதைகளின் முழுக்க வரும் யட்சிகள் நம்மைத் தம் பிடியிலிருந்து விட நேரமாகிறது.

நிழல்வெளிக் கதைகள், உயிர்மை பதிப்பகம், விலை 60.00 INR.

Share

துக்ளக் பிடித்த பதிலும் கார்ட்டூனும்

இந்த வார துக்ளக் படித்ததில் பிடித்த பதிலும் கார்ட்டூனும்.

Image hosting by Photobucket

பதிலுள்ள நகைச்சுவைக்காகப் பிடித்தது. அதிலும் கடைசிவரியில் அதிகம் சிரித்துவிட்டேன்.

-oOo-

Image hosting by Photobucket

கார்டூனுக்காகப் பிடித்தது.

நன்றி: துக்ளக்

Share

மஹரிஷி – அஞ்சலி

நாங்கள் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது மஹரிஷியின் சீடர்களுள் ஒருவர் எங்கள் கல்லூரிக்கு வந்து எங்களுக்கு ஆன்மிகம் பற்றியும் அறிவுத் திருக்கோயில் பணிகள் பற்றியும் சொற்பொழிவாற்றினார். அவர் சொன்ன எளிய உவமைகள் இன்றும் மனதில் அப்படியே இருக்கின்றன. அந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்த ஆசிரியர் செந்தில் பகவதி முருகன் மஹரிஷியின் தீவிரப் பக்தர்களில் ஒருவர். அவர் மஹரிஷியைப் பற்றி நிறைய விஷயங்கள் அடிக்கடிச் சொல்வார்.

Thanks:http://vethathiri.org

மஹரிஷியைப் பற்றி நான் அதிகம் யோசிக்கத் தொடங்கியது எனது 21 – ஆம் வயது வாக்கில். எங்களுக்கு மேலதிகாரியாக இருந்த தண்டவேல் மஹரிஷியின் தீவிர பக்தர். அவர் எங்களுக்கு மஹரிஷியைப் பற்றியும் அவரது ஆன்மிகக் கருத்துகள் பற்றியும் அவரது எளிய குண்டலினிப் பயிற்சி பற்றியும் விடாமல் தினமும் சொல்லி வந்தார். அவரது புத்தகங்கள் சிலவற்றைக் கொடுத்து வாசிக்கச் சொன்னார். அவர் மேல் ஈர்ப்பு ஏற்பட்டிருந்த காலம் அது. வாழ்க்கைப் பயணம் விலகிப் போகவும் மஹரிஷியை மறந்துவிட்டேன். சில நாள்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மோசமடைந்தபோது வருத்தம் ஏற்பட்டது. எனது சில நண்பர்கள் அவரது தீவிரப் பக்தர்கள். அவர்களில் ஒரு நண்பர் யோகா மூலம் அடைய முடியாத சித்திகளே இல்லை என்று சொல்வார். ஏதோ ஒருநாள் அவர் கண்ணாடியில் உற்று நோக்கிக் கொண்டிருந்தாராம். கண்ணாடியில் அவரது முகம் மெல்ல மறைந்து வேறொரு முனிவரின் முகம் தெரிந்ததாம். அவருக்கே பயமாகிவிட்டதாம். பின்னொருநாள் நடந்த ஒரு நிகழ்ச்சியில், தான் கண்ணாடியில் கண்ட அதே முனிவரைக் கண்டதாகக் கூறினார் என் நண்பர். இது போன்ற விஷயங்களை நான் எப்போதும் நம்புவதில்லை. இந்த விஷயமும் அப்படியே. ஆனால் மஹரிஷியின் ஆன்மிகக் கருத்துகள் இதுபோன்றவை அல்ல என்று நான் திடமாக நம்புகிறேன். எனது வேறு சில நண்பர்கள் குண்டலினி சக்தியை நெற்றிக்கு ஏற்றிக்கொண்டு, நெற்றியில் நம் சக்தி துடிப்பதைக் காணலாம் எனச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். நான் அந்தப் பயிற்சிக்குச் செல்லவில்லை. நான் அதிகம் ஈர்க்கப்பட்டது அவரது எண்ணங்களினால்தான். ஆன்மிகத்திற்கும் நிகழ்முறை வாழ்வுக்கும் இடையில் இருக்கும் தொடர்பை விளக்க அவர் சொல்லும் எளிய உவமைகள், சிந்தனைகயைத் தூண்டும் கேள்விகள் பெரிதும் அர்த்தமுள்ளவை, அதிசயத்தில் ஆழ்த்துபவை.

வேதாத்ரி மஹரிஷி மரணமடைந்துவிட்டார். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனைகள்.

Share