Archive for ஹரன் பிரசன்னா

அப்பாவின் நண்பர்-சிறுகதை

ரண்டு பக்கமும் பூவரச மரங்களும் மருத மரங்களும் நின்றிருக்கும் செம்மண் சாலை. தாமிரபரணியின் வாசத்தைச் சுமந்துவந்து என்னைத் தழுவி ஆசுவாசப்படுத்திச் செல்கிறது காற்று. இரவு கவியத் தொடங்கும் மாலையின் பின்பொழுதில் அந்தச் சாலையில் வந்துபோன நாள்கள் மனதுள் படுவேகமாகத் தோன்றி மறைகிறது. சாலைக்குக் குறுக்காக ஓடும் ஓடையைக் கடக்க உதவும் சிறிய பாலத்தில் நின்று கொண்டு தூரத்தில் ஓடும் ஆறை மானசீகமாகப் பார்க்கிறேன். தூரத்தில் ஆற்றில் குளித்துவிட்டு வரும் ஒன்றிரண்டு மனிதர்களில் சீனிவாசராவின் உருவம் தெரிகிறது. சீனிவாசராவ் என்னைப் பார்த்திருப்பார் என்றே நினைக்கிறேன். அவரின் நடையில் வேகம் கூடியது போன்று தோன்றியது. சீனிவாசராவைத் தவிர்க்க முடியாது. ஒரு வார்த்தையாவது பேசியே ஆகவேண்டும்.

அவர் சீனிவாசராவா வேறு யாரோவா?

அந்தச் சிறிய வெள்ளைப் பாலத்தின் மீது காகங்களும் குருவிகளும் எச்சங்கள் இட்டிருக்கின்றன. எச்சமில்லாத ஓரிடம் பார்த்து அமர்கிறேன்.

காகங்கள் பித்ருக்கள். நேற்று அப்பாவின் திதிக்கு வந்திருந்த ஆச்சார் அப்படித்தான் சொன்னார்.

அப்பாவின் நினைவை நான் மேலெழும்ப விடுவதேயில்லை. அப்பாவுக்கும் எனக்கும் பின்னப்பட்டிருந்த இழை என்றோ அறுந்துவிட்டது. அப்படி ஒரு இழை இருந்ததாகக் கூட நினைவில்லை. அப்பாவின் சிரித்த கோலத்தை நினைவில் கொண்டுவர முயன்றதில் ஒருமுறைகூட வென்றதில்லை. அவருக்கு எதற்கு வேண்டுமானாலும் கோபம் வரும். யாரிடம் வேண்டுமானாலும் கோபம் வரும். அம்மாவும் அப்பாவும் பேசிக்கொள்வது வெகு அபூர்வம். அதற்காக அம்மா அதிகம் அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. அப்பா இறந்த அன்று அம்மா ஒரே ஒரு தடவை அழுதாள். அப்பாவைத் தூக்கிக்கொண்டு போகும்போது அழாதவள் எல்லாக் காரியமும் முடிந்து நான் திரும்பி வீட்டிற்கு வந்தபோது என்னைப் பார்த்து அழுதாள்.

சத்தமேயில்லாத அழுகை. அவளை நேருக்கு நேராகப் பார்ப்பவர்களுக்கு மட்டுமே அவள் அழுகிறாள் என்று தெரியும் வகையான அழுகை. அந்த அழுகைக்குப்பின் அப்பாவிற்காக அம்மா அழவேயில்லை.

ஆனால் சீனிவாசராவ் எனக்கும் அப்பாவிற்குமிடையே பலமான ஒரு இழை இருந்ததாகப் பாவித்துக்கொண்டு அதை மேலும் மேலும் பலமுள்ளதாக்குவார். மிகுந்த பிரயாசைப்பட்டே நான் தப்பிக்கவேண்டியிருக்கும்.

நீரில்லாமல் கருத்துப்போய் சாக்கடையாகத் தேங்கிக் கிடக்கும் ஓடையில் வீசப்பட்டிருந்த இலைகளுக்காகப் பன்றிகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன. என் கையிலிருந்த தர்ப்பைப் புல்லையும் காய்ந்துபோன பூ ஆரத்தையும் தூக்கி வீசி எறிந்தேன். ஆற்றில்தான் எறியவேண்டும் என்ற அம்மாவின் பிடிவாதமும் எனது சோம்பேறித்தனும் ஓடையில் முடிந்தன.

எனக்குக் கல்யாணம் ஆகும்வரை அப்பாவுடன் கோபம் வரும்போதெல்லாம் என் மனதளவில் நான் தோற்பேன். அப்போதெல்லாம் வெட்கம் பிடுங்கித் தின்னும். வெளியில் உரக்க ஜம்பம் பேசினாலும் ஒரு எல்லைக்கு மேல் அப்பாவை எதிர்த்து ஒன்றும் செய்யமுடியாத கையாலாகாத்தனம் என்னை உந்தும். எங்கேயாவது ஆளில்லாத ஒரு தனிமைக்குள் ஓடி ஒளிந்துகொள்ளத்தோன்றும். அப்போது என் கால்கள் இந்தச் செம்மண் சாலையைத் தேடி நடக்கும்.

இந்தப் பாலம்தான் என் சுமைதாங்கி. இங்கிருந்தபடி என் மூர்க்கமான மனதை அலையவிடுவேன். பல இடங்களில் சென்று மோதும். எகிறிக் குதிக்கும். பின் சாந்தமடையும். சாந்தமடையாமல் மேலும் தோற்கும் தருவாயில் அதற்குத் தூக்கு மாட்டி தற்கொலை செய்துவைப்பேன்.

தாமிரபரணியில் சென்று சிறிது நேரம் உட்கார்ந்து ஆற்றின் சலனத்துடன் கூடிய அமைதியை உள்வாங்கிக்கொண்டிருப்பேன். ஓடும் ஆறு என் மன உளைச்சல்களை, நிச்சலனங்களைக் கரைத்துக்கொண்டு ஓடும். ஆற்றில் மூழ்கி எழுந்திருக்கும்போது அப்போதைக்கு ஒரு புது உலகம் எனக்காகக் காத்துக்கொண்டிருக்கும்.

என் கல்யாணத்திற்குப்பின் தாமிரபரணியின் தேவை குறைந்தது. வெகு சில அசந்தர்ப்பங்களில் மட்டுமே இந்தச் சாலையும் இந்தப் பாலமும் ஆறும் எனக்குத் தேவைப்பட்டிருக்கின்றன. நேற்று அப்பாவின் திதி தந்த அவரது நினைவு இன்று என்னை இங்கு விரட்டியிருக்கலாம் அப்பாவிடமிருந்து நான் எத்தனை வேகமாக விலகுகிறேனோ அத்தனை வேகமாக ஏதோ ஒன்று என்னை அவரை நோக்கித் தள்ளுகிறது.

காகம் ஒன்று படபடத்துப் பறக்கிறது. அது அப்பாவாக இருக்கலாம் என்று எண்ணும்போது சீனிவாசராவ் மிகச் சமீபத்துவிட்டிருந்தார்.

“என்னடா இங்க உட்கார்ந்துக்கிட்டு இருக்க?”

சீனிவாசராவும் நானும் தமிழில்தான் பேசிக்கொள்வோம். மற்ற ராவுஜிக்களைப் போல வலிய வலிய கன்னடம் பேசமாட்டார். அவரின் பேச்சை நான் அதிகம் சிரத்தையோடு கவனிப்பதில்லை என்பதை அவரும் ஓரளவிற்கு அறிவார். ஆனாலும் காணும்போதெல்லாம் ஒருவார்த்தையாவது பேசாமல் போகமாட்டார்.

“அப்பா திதி முடிஞ்சிருச்சா”

“ம். நீங்க நல்லா இருக்கீங்களா”

“ஏதோ இருக்கேன். வாயேன் நடந்துக்கிட்டே பேசலாம். நீயும் வீட்டுக்குத்தானே போகப்போற?”

சீனிவாசராவுடன் போவதில் எனக்கு அதிக இஷ்டமில்லை. இன்னும் சிறுதுநேரம் காகங்களையும் காற்றில் ஆடும் மரங்களையும் நன்கு கவிந்துவிட்ட இருளையும் பழக விரும்பினேன். அவரைப் போகச் சொல்லிப் பார்த்தேன். அவர் விடுவதாக இல்லை. வேறுவழியில்லாமல் நானும் கிளம்பினேன். அவரும் என்னுடன் பாலத்தில் அமர்ந்துவிட்டால் சுலபத்தில் தப்பிக்கவே முடியாது என்கிற பயமும் ஒரு காரணம்.

வழியெங்கும் நொங்கின் மேல் பாகம் வெட்டப்பட்டுச் சிதறிக் கிடக்கிறது. பதனீர் குடித்துவிட்டு தூக்கி எறியப்பட்ட பனை ஓலைகள் சாலையெங்கும் பரவிக்கிடக்கின்றன. சீனிவாசராவின் தொடர் பேச்சுக்கு அவ்வப்போது காது கொடுத்துக்கொள்கிறேன். என்னையறியாமல் ஒருபுறம் கேட்கவும் இன்னொருபுறம் சுற்றுப்புறத்தை உற்று நோக்கவும் இரண்டிற்கும் இடைப்பட்ட ஓரிடத்தில் சஞ்சரித்து மீள்கிறேன்.

“உங்க அப்பாவுக்குப் பதனீர்னா அப்படி ஒரு இஷ்டம். எத்தன தடவ இங்க வந்து குடிச்சிருக்கோம். டம்ளர்ல குடிக்கமாட்டான். பனை ஓலைலதான் குடிப்பான். அதுதான் அவனுக்குப் பிடிக்கும்”

முன்பெல்லாம் எனக்கும் பதனீர் இஷ்டமாக இருந்தது. அப்பாவிற்குப் பிடிக்கும் என்று தெரிந்தகணத்தில் பதனீரை வெறுத்துவிட்டிருந்தேன். இவர் அப்பாவிற்குப் பதனீர் மிகப் பிடிக்கும் என்று உறுதிப்படுத்துகிறார். எது எனக்குப் பிடிக்குமென்று என்றாவது அப்பா கேட்டிருக்கிறாரா என்று யோசிக்க ஆரம்பித்தேன்.

எண்ணெய் போடாத சைக்கிள் ஒன்றில் சத்தம் எழுப்பியபடி ஒருவன் கடந்து போகிறான். அந்தச் சத்தம் எனக்குப் புல்லரிப்பை ஏற்படுத்துகின்றது. பல்லைக் கடித்து உள்ளங்கைகளை முறுக்கிபுல்லரிப்பைக் கட்டுப்படுத்துகிறேன். அப்பாவிற்கும் இதுபோலவே சில சத்தங்கள் விரும்பத்தகாத புல்லரிப்பை ஏற்படுத்தியிருக்குமோ என்கிற எண்ணம் பெரும் பீதி தருவதாக இருந்தது.

சீனிவாசராவ் பேசிக்கொண்டிருக்கிறார்.

“உங்க அப்பனுக்கு சைக்கிள் ஓட்டவே தெரியாது. ஓட்டப் பழகும்போது ஒரு தடவ கீழ விழுந்து கால்ல நல்ல அடி. அதுலேர்ந்து சைக்கிள் பக்கத்துலயே வரல அவன். ஆளும் கொஞ்சம் குள்ளமா! உன் உயரம்தான் இருப்பான். கால் சரியா எட்டலை. அதுலேர்ந்து சைக்கிளே ஓட்டமாட்டான்”

எனக்கு சைக்கிள் நன்றாக ஓட்டவரும் என்பது ஆசுவாசம் தந்தது. என் உயரமும் என் அப்பாவின் உயரமும் ஒரே அளவு என்று சீனிவாசராவ் சொல்வது எரிச்சல் ஏற்படுத்தியது. சீனிவாசராவ் அப்பாவை விட்டுவிட்டு வேறு எதாவது பேசினால் நல்லது. சொல்லிவிடலாமா?

அருணகிரி தியேட்டரைக் கடந்து தெற்குபுதுத் தெருவுக்குள் நுழைகிறோம். தியேட்டருக்குச் சிலர் வேகவேகமாக நடக்கிறார்கள். எனக்கென்னவோ படங்கள் பார்ப்பதில் அதிக ஆர்வமிருக்கவில்லை.

“உங்க அப்பாவுக்குப் படம்னாலே ஆகாது. தியேட்டர்ல எத்தனை படம் பார்த்திருப்பான்னு நினைக்கிறே?”

அப்பாவிற்குப் படம் பிடிக்காது என்று சொல்லாத அம்மாவை நினைத்துக் கோபம் கொண்டேன். அப்பாவின் குணநலன்கள் என்னுள் இருப்பதை என்னால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்தச் சீனிவாசராவின் வீடு எங்கே இருக்கிறது? எப்போது போவார்?

“மாமா உங்க வீடு எங்க இருக்கு?”

“மறந்துட்டியா? ஒருதடவை வந்திருக்கியே. சுடலைமாடன் கோவில் தெருவில.. ஜெராக்ஸ் கடைக்குப் பக்கத்துல.. மறந்துட்டியா? இட்லி மாவு விற்கப்படும்னு ஒரு போர்டு போட்டிருக்குமே.. இப்ப வேணா வாயேன்”

“வந்திருக்கேனோ.. சரியா ஞாபகமில்லை”

“உங்கப்பாவும் இப்படித்தான். எதை மறக்கிறதுன்னு கணக்கே இல்லை. எதை வேணா மறப்பான்” சொல்லிவிட்டு வெகுவாகச் சிரித்தார். எனக்குள் கோபம் சூழ்ந்தது. ஆனாலும் தன்னை மறந்து சிரிக்கும் அவரது இரசனையான சிரிப்பை நிறுத்த மனம் வரவில்லை. சீனிவாசராவ் சிரிக்கும்போதே அவரது குழந்தைத்தனம் வெளிவந்துவிடும்.

வாகையடிமுக்கு வந்துவிட்டிருந்தோம். திருவள்ளுவர் சிலை அழுக்கப்பி தூசி படித்து கிடக்கிறது. இப்படிக் கவனிப்பாரற்ற சிலைகளைக் காணும்போதெல்லாம் வருத்தம் வரும்.

“சிலையைப் பார்க்கும்போது ஞாபகம் வருது. உங்கப்பாவுக்குச் சிலைன்னாலே இஷ்டமில்லை. சிலை அகற்றும் போராட்டம்னு தனியாளா கூத்தடிச்சான். போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போனான். போலீஸ்ல மிரட்டி விட்டுட்டாங்க”

சீனிவாசராவ் என் பொறுமைக் கோட்டைக் கடக்கச் செய்யாமல் போகமாட்டார் என்று நினைத்துக்கொண்டேன். இனியும் எதையாவது சொல்லிக்கொண்டிருந்தால் என்னால் சும்மாயிருக்கமுடியாது. பொறுமை இழந்து அவரைப் பார்க்கிறேன். பூணூல் தனது நிறத்தை இழந்து கருப்புக்கோடாக மார்பில் கிடக்கிறது. தொங்கிப் போன மார்பிலும் நெற்றியிலும் ஒட்டிப் போன வயிற்றிலும் நாமக்கீற்றுகள் தென்படுகின்றன. அவரது முகம் எப்போதும் லேசான சிரிப்பை ஒட்டிக்கொண்டிருக்கிறது. அதில் நிரம்பியிருக்கும் வாத்சல்யமும் அவரது வயதும் தோற்றமும் எப்போதும் கூடவே ஒட்டிக்கொண்டிருக்கும் சிரிப்பும் என் கோபத்தைப் புறக்கணித்து என்னுள் மரியாதையைத் திணிக்கின்றன.

சந்திப்பிள்ளையார் கோவில்வரை வந்தாகிவிட்டது. டவுண் பஸ்கள் சீறிப் பாய்ந்து எங்களைக் கடந்து செல்கிறது. ஒவ்வொரு பஸ் கடக்கும்போதும் சீனிவாசராவ் நின்று நிதானித்து, பஸ் போனபின் என்னுடன் நடக்கிறார். என் கோபத்தின் சுவடு அவருக்குப் புலப்பட்டிருக்கவேண்டும் என்று நினைக்கிறேன். சிறிதுநேரம் அமைதியாக இருந்தார்.

திடீரென “என்னை நம்பி வீட்டுல பொண்டாட்டியும் நாலும் பொண்ணுங்களும் இருக்கு” என்று சொல்லி வெகுளியாகச் சிரித்தார். அவரால் அமைதியாக இருக்கமுடியாது என்று தோன்றியது. என் மனதுள் அவரைப் பற்றிய ஒரு இரக்கம் சூழ்ந்தது. நானும் லேசாகச் சிரித்தேன்.

“இவ்வளவு வந்தாச்சு. வீட்டுக்கும் வாயேன்”

“இல்ல மாமா இன்னொரு நாள்”

“சரி வா. போத்திக் கடைல ஒரு காபி சாப்பிட்டுட்டுப் போகலாம். வேண்டாம்னு சொல்லாத. எனக்காக வா”

போத்தி கடையில் கூட்டம் அதிகமில்லை. ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். சீனிவாசராவ் இருவருக்கும் காபி சொன்னார்.

“போத்திக் கடை காபின்னா அப்பல்லாம் அவ்வளவு பிரசித்தம். காலேல அஞ்சு மணிக்கெல்லாம் அப்படி ஒரு கூட்டம் வரும். உங்க அப்பாவுக்கு காலேல ஒரு காபியும் உளுந்தவடையும் சாப்பிடலைன்னா பைத்தியம் பிடிச்சிடும்”

நான் சர்வரைக் கூப்பிட்டு காபி வேண்டாம் என்று சொல்லி டீ சொன்னேன். சீனிவாசராவ் ஏதோ ஒரு தெலுங்கு கீர்த்தனையை வாய்க்குள் முனகினார். “உங்க அப்பா நன்னா பாடுவார்” என்று அவர் ஆரம்பிக்காமல் இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். போத்திக்கடை முழுக்க கடவுள் படங்களாக இருந்தது. கதை வைத்த ஆஞ்சநேயரும் ராகவேந்திரரும் ராமர் பட்டாபிஷகமும் மத்வாச்சாரியாரும்…

“உங்க அப்பாவுக்குத் தெய்வ நம்பிக்கையே இல்லை தெரியுமோ”

சீனிவாசராவை உற்றுப் பார்த்தேன். என்னைக் கவனிக்காமல் அவர் டீயை ஆற்றிக்கொண்டே சொன்னார்.

“ஆரம்ப காலத்துல உங்க அப்பாவுக்குத் தெய்வ நம்பிக்கையே கிடையாதுடா. அதுலதான் உங்க அம்மாவுக்கும் அப்பாவுக்கும் நிறைய பிரச்சனை. ஒரு காலத்துல உங்க அப்பா தெய்வ நிந்தனை போராட்டம்லாம் கலந்துக்குவாரன். உங்க அம்மா சொன்னாலும் கேக்கமாட்டான்”

என்னைப் பெரும் கலவரம் பற்றிக்கொண்டது. எனக்கும் அதிகம் கடவுள் நம்பிக்கை இருந்ததில்லை. ஆனால் அப்பா அளவு போராட்டம் என்றெல்லாம் சென்றதில்லை.

“ஒங்கப்பாவுக்கு கண்ணு மண்ணு தெரியாம கோவம் வரும். உங்க அம்மாவை ரெண்டு மூணு தடவை அடிச்சிருக்கான்”

மிக அதிகம் கோபப்பட்ட ஒரு நிலையில் பாருவை அடிக்க கை ஓங்கியிருக்கிறேன். இத்தனை நாள் எனக்கும் அப்பாவுக்கும் சம்பந்தமேயில்லை என நான் நினைத்ததெல்லாம் எனக்கு நானே உருவாக்கிக்கொண்ட பிரமையோ? அப்பாவின் சாயல் என் மீது அப்படியே படிந்து போயிருக்கிறதோ? பார்த்து பார்த்து விலகிக்கொண்டாலும் ஒட்டிக்கொண்டே வருமோ? சீனிவாசராவைப் பார்க்காமல் இருந்திருக்கலாமோ? சுற்றிலும் அப்பாவின் பல பிம்பங்கள் நின்று கொண்டு என்னைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தன.

“உங்க அப்பா முன்னாடி யாரும் வாதம் செய்யமுடியாது. உங்க அப்பா எப்பவாவதுதான் பேசுவான். ஆனா முத்துத் தெறிச்சாப்புல இருக்கும். அதுக்குப் பதில் சொல்றதுக்குள்ளயே எதிராளிக்குத் தாவு தீர்ந்திடும். அதிகம் பேசமாட்டாரன். ஒன்ன மாதிரிதான்” நுரையோடு டீயைச் சூப்பினார்.

“இன்னொன்னும் சொல்லணும். சில விஷயங்கள்ல அப்படியே உன் ரூபத்துல ஒங்க அப்பாவைப் பார்க்கிறேன். எதிராளி பேசும்போது அவன் கவனம் வேற எங்கயாவது இருக்கும். அதனால பேச்சைக் கவனிக்கிலைன்னு இல்லை. அதையும் கவனிப்பான்”

வெகுவேகமாக என் அப்பா சிரித்துக்கொண்டே, என் எதிர்ப்பையும் மீறி, வெறியான அத்துமீறலுடன் என்னுள்ளே நுழைந்துகொண்டார். மிகுந்த பிரயாசைப்பட்டு என் அப்பாவைப் பிய்த்து வெளிய எறிய முயல்கிறேன். அப்பாவின் குரூரமான சிரிப்பு மட்டுமே எங்கும் எதிரொலிக்கிறது.

என் அப்பாவை என்னால் அடக்கமுடியவில்லை.

சீனிவாசராவ் டீயைக் குடித்துவிட்டு டம்ளரைக் கீழே வைத்துவிட்டு கவுண்ட்டருக்குச் சென்றார். காசை அவரே கொடுத்தார். போத்தியிடமிருந்து ஒரு மஞ்சள் பையை எடுத்துக்கொண்டு வந்தார்.

“ஆத்துக்குக் குளிக்கப் போகும்போது போத்திகிட்ட கொடுத்துட்டுப் போயிருந்தேன். வர்ற வழில ஒன்னைப் பார்த்தேன். நல்லதாப் போச்சுன்னு நினைச்சுக்கிட்டேன். உங்கப்பாவுக்கு கடைசி காலத்துல சாமிமேல நம்பிக்கை வந்திருச்சு தெரியுமோ”, என்றவர், “ஏன்னு நினைக்கிறே?” என்று கேட்டுக்கொண்டே மஞ்சள் பையைப் பிரித்து உள்ளிருந்து ஒரு சிறிய பிள்ளையார் சிலையன்றை எடுத்தார். அதன் மேலே நிறைய அருகம்புல் ஒட்டியிருந்தது.

“இந்த மூலிகைப் பிள்ளையார்தான் காரணம். இது சாதாரண பிள்ளையார் இல்ல. மூலிகையிலயே செஞ்சது. இதை அவன் கும்பிட ஆரம்பிச்சதும்தான் அவன் நினைச்சது நிறைய நடந்ததுன்னு சொல்லியிருக்கான். நீயும் ஒண்ணு வாங்கிப் பாரேன். நாப்பது ரூபா. எனக்குக் கமிஷன் அதனால சொல்றேன்னு நினைச்சிடாத. ஒங்கப்பன் அப்படித்தான் சொல்வான். அதுக்காகவே என்கிட்ட வாங்காம வேற யார் கிட்டயோ வாங்கினான். ஒனக்கு தெய்வ நம்பிக்கையுண்டு, அதனால சொல்றேன். காசு இப்ப கைல இல்லைன்னா பரவாயில்லை. வீட்டுக்கு வந்து வாங்கிக்கறேன்”

எனக்குள் இருந்த அப்பா “சீனிவாசராவ் கமிஷனுக்காகச் சொல்கிறான் வாங்காதே” என்றார்.

என் அப்பாவைத் தூரத் தள்ளி, அந்தப் பிள்ளையார் சிலையை வாங்கிக்கொண்டேன்.

சீனிவாசராவ் சொன்னார், “இந்த விஷயத்துல ஒங்கப்பன் மாதிரியில்லை. ஒனக்கு யோசிக்கத் தெரிஞ்சிருக்கு”.

அப்பா “துரோகி” எனக் கத்திக்கொண்டே இரண்டு கைகளால் என் நெஞ்சில் ஓங்கி ஓங்கிக் குத்தினார்.

(முடிந்தது)

Share

தோட்டத்து வெளியில் ஒரு பூ – கவிதை

தோட்டத்து வெளியிலும் சில பூக்கள் என்கிற வண்ணதாசனின்

சிறுகதைத் தலைப்பை எங்கேயோ பார்த்தேன். அந்த வரி தந்த

பாதிப்பில் வந்த கவிதை இது.

தோட்டத்து வெளியில் ஒரு பூ

கண்ணெதிரே பூத்துக்குலுங்கும்

மலர்களையொதுக்கி

பிறவொன்றைத் தேடும் என் பிறவிக்குணம்

பெரும் சம்மட்டியடி வாங்கியிருக்கிறது

வழியெங்கும் என்னுடன் நடந்துவரும்

பருவகாலங்களை விலக்கி வைத்து

எங்கோ அலைந்துகொண்டிருக்கும்

வசந்த காலத்தைத் தேடும் நிமிடங்கள்

கடந்த காலங்களாக

நிகழ்கால வேர்வை நெஞ்சுக்குழிக்குள்

கொஞ்சம் இதமாயும்

ஜீவனற்றுப் போயிருந்ததாக

நானே உருவாக்கிக்கொண்ட நிலத்தில்

என் கவனத்திலிருந்து தப்பியிருக்கிறது

வெய்யில் சூட்டில்

நிறைய பளபளப்பு

தோட்டத்திற்குச் சொந்தமான,

தோட்டத்து வெளியில் ஒரு பூ

Share

ஒரு இறப்பின் இரண்டு மூலங்கள் – சிறுகதை

வாக்கிங் போய்விட்டு, விசாகபவன் முன்னே சூடாக உளுந்த வடை சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது தலையில் காய்கறிக்கூடையைச் சுமந்து போய்க்கொண்டிருந்த வயதான கிழவி கல் தடுக்கிக் கீழே விழுந்தாள். நானும், வாக்கிங் வராமல் வடை மட்டும் சாப்பிட வரும் மாலியும், கிழவியைத் தூக்கிவிட ஓடினோம். வெறிச்சோடிப் போய் காலையின் பரபரப்புக்காத் தயாராகிக்கொண்டிருக்கும் தெரு சட்டென ஒரு பரிதாபத்தை வரவழைத்துக்கொண்டு அந்தக் கிழவியைச் சூழ்ந்து கொண்டது. மாலி கிழவியின் அருகே குனிந்து “ஆச்சி.. ஆச்சி..” என்றான். கிழவியிடமிருந்து எந்தவொரு எதிர்வினையும் இல்லை. நான் குனிந்து கிழவியைத் தொட்டு உசுப்பினேன். உடல் சில்லிட்டிருப்பதாகப்பட்டது.

பத்து கடை தள்ளியிருக்கும் முடிவெட்டும் கடையிலிருந்து ஒருவன் கைலியை மடித்துக் கட்டிக்கொண்டே ஓடிவந்தான். அவன் முடிவெட்டிக்கொண்டு இரண்டு மாதத்திற்கு மேல் ஆகியிருக்குமோ என்னவோ. கருகருவென நிறைய முடி இருந்தது அவனுக்கு. இப்படி எந்த ஆணுக்காவது நிறைய முடி இருப்பதைப் பார்த்துவிட்டால் ஒவ்வொரு முறையும் என் பாட்டி, ‘இப்படி ஒரு பொட்டச்சிக்கு வளரமாட்டேங்கு” என்று அங்கலாய்த்துக்கொள்வாள். வந்தவன் கிழவியைப் பார்த்த கணத்தில் ‘உசுரு போயிட்டு’ என்றான். “ஆஸ்பத்திரிக்குத் தூக்கிட்டுப் போலாம்” என்றேன். மாலி கண் காட்டினான். ‘எனக்குத் தெரிஞ்ச கிழவிதான். நா போய் ஆளக்கூட்டியாரேன்” என்று சொல்லிவிட்டு, முடியை இரண்டு தரம் கோதிவிட்டுக்கொண்டு நடையைக் கட்டினான் கடைக்காரன். நாங்கள் நாலு பேர் சேர்ந்து கிழவியை நடைபாதையை விட்டு ஓரமாகக் கிடத்தினோம். மாலி இரண்டாவது முறை கண்ணைக் காட்டினான். நான் கூட்டத்திலிருந்து வெளியில் வந்தேன். யாரோ ஒரு பெண், “இப்படியும் உண்டுமா” என்றாள். வழியில் உருளைக்கிழங்கு, தக்காளி, கொஞ்சம் பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி எனப் பலவும் சிறிய கருப்பு நிற பர்ஸ் ஒன்றும் சிதறிக் கிடந்தன.

மாலி, “வேல இருக்குல்ல?”

“ம்”

“கெளம்பு. அவன் வந்து பாத்துக்கிடுவான். நானும் போவணும். எஸ்.ஆர்.எம். வாரேன்றுக்கான். நீ போய் ஆ·பிஸ¤க்குக் கிளம்புற வேலயப் பாரு” என்று சொல்லிவிட்டு, நான் அந்த இடத்தை விட்டு நகர்கிறேன் என்று அவனுக்குத் திருப்தி ஏற்பட்ட பின்பு, தன் ஸ்ப்லெண்டரை இரண்டு முறை உறுமச் செய்து, ஒன்றுமே நடக்காத மாதிரி ஏதோ ஒரு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே போனான்.

நடந்து விட்டுக்கு வந்து, மேம்போக்காகத் தினமலரை மேய்ந்துவிட்டு, தலைக்குத் தண்ணீர் ஊற்றிக்கொண்டு, சாப்பிடும்போது “எப்படிச் செத்துருப்பா?” என்றேன். “யாரைக் கேக்குறீங்க?” என்றாள் மனைவி. “ஒண்ணுமில்லை” என்றேன்.

மூலம்-1

தினமும் வயிற்றுப்பிழைப்புக்காக காய்கறி வாங்கி, கொஞ்சம் இலாபம் வைத்து, தெருத் தெருவாக விற்பாள் போல. தலையில் காய்கறிக்கூடை இருந்தது. அப்படித்தானிருக்கவேண்டும். கருத்த தேகம். சுருக்கங்கள் நிறைந்த உடல். பொட்டில்லை. தாலியில்லை. அரசு இனாமாகத் தரும் சேலையை உடுத்தியிருந்தாளோ? இரவிக்கை இல்லை. எவளோ ஒருத்தி, “இப்படியும் உண்டுமோ” என்று சொன்னது சரிதான். இப்படியும் உண்டுமா? கல் தடுக்கிக் கீழே விழுந்தவள், சிறு இரத்தக் காயம் கூட இல்லாமல், செத்துப் போவாளா? அவளைத் தொட்டுக் கூடப் பார்க்காமல், “உசுரு போயிட்டு” என்றவனை எந்த வகையில் சேர்க்கலாம்? ஒருவேளை அந்தக் கிழவி செத்துப் போவதற்காகவே காத்திருந்தானோ? அப்படிச் சொல்ல முடியாது. அவனுக்குத் தெரிந்த கிழவி என்றுதான் சொன்னான். அவளது மரணம் அவனுக்கு எந்த வகையிலும் தேவையானதாய் இருக்காது. “பாத்த ஒடனே கண்டுக்கிட்டேன் கிழவி போயிட்டுன்னு” என்று பிற்பாடு பிரஸ்தாபிப்பதற்காக அப்படிச் சொல்லியிருக்கலாம். அப்படி இல்லாமலும் இருக்கலாம். நிஜமாகவே கிழவி இறந்துவிட்டாள் என்பதைப் பார்த்த நொடியிலேயே கண்டுகொண்டு சொல்லியிருக்கலாம். என்னால் அப்படி கண்டுபிடிக்க முடியவில்லை. எனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். மாலியும் அப்படிச் சொல்லவில்லை. எனக்குத் தெரிந்தது கூட மாலிக்குத் தெரிந்திருக்காது என்பதே காரணமாய் இருக்கவேண்டும். அவனுக்கு அவள் செத்தது சட்டென பிடிபட்டிருக்கலாம்.

எத்தனை மகன்களோ மகள்களோ? மகன் நல்ல வேலையில் இருந்திருக்க வாய்ப்பிருக்காது. இருந்திருந்தால், தெருத் தெருவாய்க் காய் விற்று, அரசு தரும் இனாம் சேலையை உடுத்திக்கொண்டு வாழ்ந்திருக்கமாட்டாள். மகனுக்கும் அவளுக்குமான உறவு எப்படி இருந்திருக்கும்? அம்மா இறந்ததைக் கேட்டு மகன் ரொம்பத் துடித்துப் போயிருப்பானோ? கிழவிக்கு அதிகம் வயசானதாகத் தெரிந்தது. மகனுக்குக் கல்யாணம் ஆகி, அவனுக்கும் வயதாகிப் போயிருக்கலாம். அப்படி இருந்தால் ரொம்ப அழுவான் என்று எப்படி எதிர்பார்க்கமுடியும்? ஒருவேளை அதிகம் அழுதிருக்கவும் செய்யலாம்.

கிழவி கன்னங்கள் ஒட்டிப்போய், வயிறு ஒட்டிப்போய்க் கிடந்தாள். மருமகள் கொடுமைக்காரியோ என்னவோ. சூதுவாது தெரியாத இந்தக் கிழவியை என்ன பாடு படுத்தினாளோ. நல்ல சாப்பாடு போட்டு, நறுவிசாக வைத்திருந்தால் கிழவி கன்னம் ஒட்டிப்போய், வயிறு ஒட்டிப்போய், சாகப் போகிற காலத்தில் தெருத் தெருவாய்க் காய் விற்கப்போவாளா? மருமகள் அடாவடிக்காரியாய் இருந்திருப்பாள். அதை மகனும் பார்த்துக் கொண்டிருந்திருப்பான். கிழவி மனம் வெறுத்துப்போய் அதிலேயே பாதி செத்துப்போயிருப்பாள். அதுதான் கீழே விழுந்ததும் மீதி இருந்த பாதி உயிரும் பிரிந்திருக்கிறது. இப்படியும் உண்டுமா? மகனும் மருமகளும் சேர்ந்தே அவளைக் கொன்று விட்டார்களே!

ஒருவேளை மகனோ மகளோ இல்லாத அனாதையாக இருக்குமோ? இருக்கலாம். அனாதைக் கிழவிகளுக்குத்தானே தானே அரசு இனாம் சேலை தருகிறது? மகனில்லாத, கலியாணம் ஆகிவிட்ட மகள் மட்டுமே இருந்தாலும் அரசு இனாம் சேலை தரும். மகனிருந்தாலும் தருமோ? மகள் நல்லவளாகத்தான் இருக்கவேண்டும். மாப்பிள்ளைக்குப் பயந்து, கடைசிக் காலத்தில் தன் தாயைக் கவனிக்க முடியாத நிலைமை அவளுக்கு வந்திருக்கவேண்டும். ஐயோ பாவம் அந்தக் கிழவியின் மகள். அவளின் மாப்பிள்ளை என்ன மனிதன்? அவனுக்கும் ஒரு வயோதிகம் காத்திருக்கிறது என்பதை எப்படி மறந்தான்? இப்படித்தான் பலரும் அவரவர்களின் எதிர்கால வயோதிகத்தை மறந்துவிடுகிறார்கள்.

அன்று காலை அந்தக் கிழவி என்னென்ன நினைத்திருப்பாள்? மகனின் காலில் விழுந்து, “வயசான காலத்துல என்ன நல்லா வெச்சிக்கடா” என்று கேட்டுக்கொண்டு, தனக்கொரு வழியமைத்துக்கொள்ள நினைத்திருக்கலாம். அல்லது மகளிடம் தன்னைப் பார்த்துக்கொள்ளச் சொல்லி மன்றாட நினைத்திருக்கலாம். அல்லது யார் துணையுமில்லாமல் கடைசி வரை காய் விற்றே பிழைத்துக்கொள்ள தீர்மானித்திருக்கலாம். எப்படியோ அவளின் கடைசி வந்தேவிட்டது. ஒரு கல் தடுக்கிக் கீழே விழுந்து, காய்களும் பழங்களும் சிதறிப்போக, அவள் அமைதியாக அடங்கிப்போனாள்.

“ஸார்! ஏதோ யோசனையிலயே இருக்கீங்க. கமிஷனர் ஊர்ல இல்லை. ·ப்ரீயா இருக்கும். படத்துக்குப் போலாம்னீங்க. பம்பாய் தியேட்டர் சீனிவாசன்கிட்ட டிக்கெட்டுக்குச் சொல்லியிருக்கேன். போலாமா?”

“அதில்லை. காலேல வாக்கிங் போனப்ப ஒரு கிழவி கல் தடுக்கிக் கீழ விழுந்தா. அந்த ஸ்பாட்லயே செத்துட்டா. இப்படியும் நடக்குமா? என்ன கஷ்டமோ என்னவோ”

“ஓ! கேக்கவே கஷ்டமாயிருக்கு. அதிருக்கட்டும். படத்துக்கு நேரமாயிட்டு. போலாமா?”

“வயசானவங்களுக்கு கவர்மெண்ட்ல இனாம் சேலை தர்றாங்களே.. மகன் இருந்தாலும் தருவாங்களா?”

“என்ன சார்?”

“இல்ல. கவர்மெண்ட்டுல வயசானவங்களுக்கு ·ப்ரீயா சேலை தர்றாங்களே.. மகன் இருந்தாலும் தருவாங்களான்னு கேட்டேன்”

‘ஏன் சார்? வீட்டுல கேக்க சொன்னாங்களா?”

“நாம படத்துக்குப் போவோம்”

மூலம் -2

அன்றைய தினம் முழுதும் தியேட்டரிலும் மதிய உறக்கத்திலும் மாலை கொஞ்சம் ஆ·பிஸிலும் கழிந்தது. ·பைலை எல்லாம் அடுக்கி வைத்துவிட்டு, நாளை கமிஷனருக்குத் தயாராக இருக்கவேண்டிய ·பைல்களையெல்லாம் ஒரு பிக்ஷாப்பரில் எடுத்துக்கொண்டு வீட்டுக்குக் கிளம்பினேன். வீட்டிலும் வேலை பார்த்தால் மட்டுமே ·பைல்களையெல்லாம் முடித்துத் தயாராக வைக்க முடியும். இல்லையென்றால் கமிஷனர் வாயில் விழவேண்டியிருக்கும்.

சுசுகியில் விசாகபவனைக் கடந்தபோது காலையில் கிழவி கீழே விழுந்து இறந்த சம்பவம் மனதுள் திரையிட்டது. அந்தக் கிழவியை யார் கொண்டு போயிருப்பார்கள் என்று யோசனை பரவியது. வண்டியை நிறுத்திவிட்டு விசாகபவனுக்குள் சென்று கா·பி ஆர்டர் செய்தேன்.

“இன்னைக்குக் காலேல ஒரு கிழவி செத்துப் போச்சே… யார் கொண்டு போனாங்க?” – சர்வர் திருதிருவென விழித்தான். “சரி. பில் கொடுங்க” என்று கேட்டு காசைக் கொடுத்துவிட்டு வெளியே வந்தேன். தூரத்தில் சலூன் கடையில், காலையில் வந்தவன் சுறுசுறுப்பாக முடிவெட்டிக்கொண்டிருந்தான். இப்போதெல்லாம் இரவுகளில் முடிவெட்டிக்கொள்ளுவது சகஜமாகிப்போய்விட்டது. மீண்டும் மீண்டும் கிழவியின் சாவைப் பற்றிய எண்ணமே வந்துகொண்டிருந்தது.

மாலியை ·போனில் அழைத்தேன். திட்டினான்.

“ஒனக்குத் தேவையா அந்த எளவெல்லாம்? எதாவது பிரச்சனைன்னா கூடவே நீ போவியா? ஒளுங்கா வீட்டுக்குப் போய்த் தூங்கு” என்றான். “உனக்கு ழ-வே வரமாட்டேங்கு” என்று சொல்லி ·போனைத் துண்டித்தேன்.

அடுத்தடுத்த இரண்டு மூன்று தினங்களில் கிழவியும் அவள் சாவும் என்னைக் கடந்து போய்விட்டன. சரத் சென்னையிலிருந்து எந்தவொரு அவசியமுமில்லாமல் அவன் வீட்டிற்கு வந்திருந்தான். “அப்பா அம்மாவ பாத்துட்டுப் போலாம்னு” என்று அவன் சொல்லியதைக் கேட்டு அவர்கள் சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்கும்போது, யாருக்கும் தெரியாமல் பக்கத்துத் தெரு மஹா(லெக்ஷ்மி)வைப் பார்க்கப் போவான்.

“சரத் வந்திருக்கான்னாங்க? நீங்க எப்படி இருக்கீங்க?”

சரத்தின் அம்மா வாய் ஓயாமல் பேசினாள். அந்தத் தெருவில் யார் யாரை வைத்துக்கொண்டிருக்கிறார்கள், அவர்களுக்குள் என்ன என்ன பிரச்சனைகள் வந்தது, இப்போது ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் எந்தப் படம் நல்ல படம், இடையில் சுனாமியில் இறந்துபோன ஒன்றுவிட்ட மாமாவின் மகளைக் கட்டியவருக்காக ஒரு அழுகை என்று எல்லாம் ஒரே நேரத்தில் செய்தாள். நான் உச்சுக்கொட்டிக்கொண்டிருந்தேன்.

“அம்புட்டுதாண்டே வாழ்க்கை. நேத்து இருந்தவக இன்னைக்கில்லை. நோக்காடு கெடந்தே போகக்கூடாது. சாவு வருதுன்னே தெரியாம போயிரணும்”

சரத் சீக்கிரம் வரவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். சரத்தின் ஆச்சி அதற்குமேல் வாயை அடக்கமுடியாமல் – யார் வந்தாலும் அவள் லொட லொடவென்று பேசக்கூடாது என அவளுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது – “செத்தா அந்தக் கெழவி செத்தால்லா.. அவள மாதிரி சாவணும்” என்றாள்.

சரத்தின் அம்மா, “ஆமாடே.. அத்த சொல்றது சரிதான். கல் தடுக்கிக் கீழ விழுந்தா செத்துட்டா. சாவுன்னா இப்படித்தாண்டே வரணும்” என்றாள். தனக்குக் கிடைத்த ஆமோதிப்பில் சரத்தின் ஆச்சி அடுத்து ஏதோ சொல்ல வாயெடுத்தாள். “சரி போதும், வந்தவன பேசியே கொன்னுறாதீய” என்றவள் என்னைப் பார்த்து, “காப்பி சாப்பிடுதயாடே?” என்றாள். நான் அவசரமாக “எந்தக் கிழவி? எப்படிச் செத்தா?” என்றேன். சரத்தின் அம்மா கா·பி எடுக்க சமையலறைக்குள்ளே சென்றாள். அங்கிருந்தபடியே, “இங்க ஒரு கிழவி தெனம் காய் விக்கும். நம்ம தெரு முக்குல காய் விக்கும்லா.. நீ பாத்திருப்ப. ஒனக்கு ஞாபகமில்லியோ? வயசுப் பசங்க எங்க அக்கம் பக்கம் பாக்கீய? அது ரெண்டு நா முன்னாடி காலேல, விக்கதுக்கு காய் வாங்கிட்டு வந்திருக்கு. கல்தடுக்கிக் கீழ விழுந்திருக்கு. அங்கனயே செத்துட்டு” என்றாள்.

சரத்தின் ஆச்சி, “அங்கனயே ஒண்ணும் சாகலத்தா. இழுத்துக்கிட்டு கிடந்திருக்கா. அங்க இருக்கிறவனுவோ எவனும் தண்ணி கூட ஊத்தல. நாசமா போறவனுவோ” என்றாள்.

எனக்குப் பகீரென்றது. “பதினஞ்சு நிமிசம் இழுத்துக்கிட்டு கிடந்தவளைத் தூக்கி ஓரமாப் போட்டுட்டு, நம்ம பொன்னுராசுதான் டீ வாங்கி ஊத்திருக்கான். ஒரு வாய் குடிச்சிருக்கா. ரெண்டாவது வாய் குடிக்கவே இல்லை. அப்படியே சீவன் போயிட்டு. பொன்னுராசு புண்ணியம் பண்ணிருக்கான்”

“யாரு பொன்னுராசு?”

“நாவிதன் இருக்காம்லா. அவந்தான். சொக்காரந்தான் செத்த கெழவிக்கு!”

“ஓ! அந்தக் கிழவிக்கு பையன் இல்லியா?”

“இருக்கான். மெட்ராஸ்ல வேல பாக்கான். மருமகளும் வேல பாக்கா. கிழவி திமிரெடுத்தவ. மகன் கூடத்தான் வெச்சிருந்தான் கிழவிய. கிழவி அட்டூழியம் தாங்காம போயிட்டுவா தாயின்னுட்டான். கிழவிக்கு பென்சன் வருது. ஒரு காசு தரமாட்டா பையனுக்கு. மருமவ சும்மா விடுவாளா? கிழவி புருசன் கவர்மெண்ட்டு உத்தியோகத்துல இருந்தான். காக்காசுன்னாலும் கவர்மெண்ட்டுக் காசுன்னு இவ பண்ண பவுசு, அது ஒரு தனிக்கதத்தா. அவனயும் நிம்மதியா இருக்க விட்டாளா? இவ தொல்லை தாங்காமத்தான் செத்தான். வெஷம் குடிச்சுச் செத்தான்னு ஊர்ல பேசிக்கிடுதாக. நமக்குத் தெரியாதப்பா. தெரியாதத நம்ம வாயால பேசக்கூடாது பாரு. பிராமணன் பரலோகம் போனானாம்; மவராசி முடிபோச்சேன்னு அழுதாளாம்ன்ற கதயா, புருசன் செத்தன்னிக்கு, அத்தக்காரி போட்ட சாப்ப்பாடு ருசியா இல்லன்னு ஊரயே நாறடிச்சா. பென்சன் வருது. கவர்மெண்ட்ல மாசா மாசம் அரிசி, வருஷம் ரெண்டு சேலைன்னு வாங்குதா. கையக் கால வெச்சிக்கிட்டு வீட்ல கெடக்கலாம்லா? இருக்கமாட்டா. காசப் பாத்துப் பாத்துச் சேத்தா. என்னத்துக்காச்சு? திடீர்னு கீழ விழுந்து செத்துட்டா. போவும்போது கொண்டா போனா? ரெண்டு கத்திரிக்கா கூடப் போடமாட்டா கிழவி” என்றாள் சரத்தின் ஆச்சி.

நான் செய்துவைத்திருந்த கிழவி மண்கோபுரத்தை கடலின் பேரலைகள் மூர்க்கமாக அடித்துக்கொண்டு போயின.

இப்படியும் உண்டுமா?

(முற்றும்)

Share

காதல் – திரைப்படம்

காதல் (திரைப்படம்) – இயக்கம்: பாலாஜி சக்திவேல், இசை: ஸ்ரீதர் ஜோஷ்வா, ஒளிப்பதிவு: விஜய் மில்டன்

நிறையத் தடவை தமிழ்த்திரைப்படங்கள் பல்வேறு வடிவங்களில் பார்த்துவிட்ட கதையை யதார்த்தத்துடனும் கலைநேர்த்தியுடனும் தரத்துடனும் தந்திருக்கிறார் இயக்குநர். மெக்கானிக்கும் பணக்கார வீட்டுப்பெண்ணுக்கும் ஏற்படும் காதலும் அதைத் தொடர்ந்த விளைவுமே கதை. ஒளிப்பதிவின் உயர்ந்த தரமும் யதார்த்தமும் கதையின் முக்கிய கதாபாத்திரங்கள் எனலாம். படத்தில் கிட்டத்தட்ட எல்லாக் காட்சிகளும் க்ளோஸ்-அப் காட்சிகளே. நடிகர்களில் பலர் அறிமுகங்கள்; அவர்கள் மிகவும் இயல்பாக நடிக்கிறார்கள் என்பதால் படத்துடன் எளிதில் ஒன்ற முடிகிறது. படத்தின் முதல் பாதி முழுவதும் மதுரையிலும் இரண்டாம் பாதி முழுவதும் சென்னையிலும் சுழல்கிறது. படத்தின் கதாபாத்திரங்கள் பேசும் மதுரைத்தமிழ், அதிலும் குறிப்பாக கதாநாயகன் பரத் பேசும் மதுரைத்தமிழ் வெகு கச்சிதம். பரத்தின் நடிப்பு கொஞ்சம் கூட எல்லை மீறாமல் ஒரு டூ வீலர் மெக்கானிக்கை அப்படியே கண் முன் கொண்டுவருகிறது. ரிப்பேருக்கு வரும் வண்டியை ஒரு மெக்கானிக் எப்படி ஓட்டுவாரோ அப்படியே ஓட்டுகிறார். மெக்கானிக்கை ஒரு பணக்காரப் பெண் காதலித்தால் வரும் உணர்வுகளை அப்படியே சித்தரிக்கிறார். கதாநாயகி சந்த்யா அறிமுகம் என்கிற சுவடேயில்லை. யதார்த்தமான காட்சிகளில் வெகு இயல்பாகவும் உச்சகட்ட காட்சிகளில் வெகு அழுத்தமாகவும் நடித்து வியப்பில் ஆழ்த்துகிறார். பள்ளி சீருடையில் சிறுமியாகவும் சுடிதார் வகையறாக்களில் பெண்ணாகவும் தெரிகிறார். படத்தில் வரும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் அவற்றின் தன்மையையும் தேவையையும் உணர்ந்து நடித்திருக்கின்றன. அனைவரும் புதுமுகங்கள் என்பது ஆச்சரியமான விஷயம். பரத்தின் எடுபிடியாக வரும் சின்னப்பயல் அடிக்கும் கமெண்ட்டுகள் அழகு.

இப்படி யதார்த்தத்தைத் தோளில் சுமந்து செல்லும் படம் இடைவேளைக்குப் பிறகு இலேசாகத் தடம் புரள்கிறது. சென்னையில் வரும் மேன்சன் காட்சிகளில் படம் தொய்வடைகிறது. மேன்சன் காட்சிகள் இயல்பாக நடக்கக்கூடியவைதான் என்றாலும் அவை படத்தின் தேவையை விட அதிகமாக இடம் பெற்றிருப்பதால் படத்தின் வேகத்தைக் குறைக்கின்றன. ஸ்டீபனாக நடிக்கும் நடிகர் யாரெனத் தெரியவில்லை. அப்படியே வடிவேல் போலவே இருக்கிறார். அவரின் ப்ளாஷ்பேக் காட்சி நகைச்சுவையாக இருந்தாலும் அவசியமற்றது; நாடக ரீதியானது. அதேபோல் கதாநாயகனுக்கும் கதாநாயகிக்கும் அவர் திருமணம் செய்து வைக்க, அதைப் பார்க்கும் மேன்சன் நண்பர் மிக உணர்ச்சிவசப்பட்டு கதாநாயகனையும் நாயகியையும் மேன்சனுக்குக் கூட்டி வந்து, தேவையானதை எல்லாம் செய்து, எல்லோரும் சேர்ந்து ஒரு ஆட்டம் போட்டு, அதில் மேன்சனின் பெருமைகளைப் பட்டியற்படுத்தி….. விக்ரமன் வாசனை. போதாக்குறைக்கு கதாநாயகன் தானும் ஒரு ஆட்டம் போட, அதைப் பார்த்த கதாநாயகி அவரும் ஒரு ஆட்டம் போட்டு, பின் வெட்கப்பட்டு உட்கார்ந்து கொள்கிறார். இரண்டே நிமிடங்கள் வரும் காட்சிதான் என்றாலும் பல படங்களில் பார்த்துப் பார்த்து அலுத்துப்போன, செயற்கையான காட்சியினை, அதுவரை மிக யதார்த்தமாக படத்தை நகர்த்திக்கொண்டிருந்த இயக்குநர் எப்படி அனுமதித்தார் என்ற கேள்வி எழுகிறது.

உச்சகட்ட காட்சிகளில் நிகழும் சம்பவங்கள் சாதாரண வாழ்க்கையில் நாம் காணும் சம்பவங்களே. “சிங்கம்லே” என்று தன் வண்டியில் எழுதி வைத்திருக்கும் ஒரு சாராய வியாபாரியின் மகளை, ஒரு மெக்கானிக் காதலித்தால் என்ன நடக்குமோ அது நடக்கிறது. அந்தக் காட்சியில் ஒளிப்பதிவும் எடிட்டிங்கும் கூட நடித்திருக்கின்றன. “சில வருடங்களுக்குப் பிறகு” திண்டுக்கல்லில் ஒரு போக்குவரத்து நிறுத்தத்தோடு படத்தை முடித்திருந்தால் அது இன்னும் இயல்பாக இருந்திருக்கும் என்பது என் எண்ணம். அதற்குப் பின்னும் ஐந்து நிமிடம் படம் நகர்கிறது. மனிதாபிமானம் மிகுந்த ஒரு மனிதரின் பெருந்தன்மையோடு படம் நிறைவடைகிறது. உண்மைக் கதையை ஆதாரமாகக் கொண்ட கதை என்று இயக்குநர் முதலிலேயே சொல்லிவிடுகிறார். படத்தின் நிறைவுக்காட்சியில் அதே சம்பவத்தை வைத்தே நிறைவு செய்திருக்கிறார்.

படத்தில் எழுத்துப் போடும் காட்சிகளில் ஒவ்வொரு சட்டமாக மதுரையில் இயல்பு வாழ்க்கையைக் காட்டும்போது பரவும் மதுரை வாசம் இறுதிவரை கூடவே வருகிறது. அதிலும் கதாநாயகியின் சடங்குக் கொண்டாட்டங்களில் வரும் மனிதர்களில்தான் எவ்வளவு நிஜம்! இப்படி ஒவ்வொரு காட்சியையும் பார்த்துப் பார்த்துச் செதுக்கியிருக்கும் இயக்குநரை எவ்வளவு பாராட்டினாலும் தகும். ஓடிப்போவதை மட்டுமே, அதுவும் செயற்கையாக நாடக ரீதியில் சொல்லிப் பழகிவிட்ட தமிழ்த்திரைப்படச்சூழலுக்கு மத்தியில், இப்படி ஒரு படத்தின் மூலம் ஓடிப்போவதைத் தாண்டியும் பேசியிருக்கிறார் இயக்குநர். அந்த வகையில் இத்திரைப்படத்தை வெறும் பொழுதுபோக்குக்கான திரைப்படம் என்கிற வட்டத்தையும் மீறி சமூக சிந்தனையுள்ள ஒரு திரைப்படம் என்றும் வகைப்படுத்தலாம்.

மிக சில காட்சிகளில் இயக்குநர் இன்னும் கூடுதல் கவனம் எடுத்திருக்கலாம். பல இடங்களில் கதாபாத்திரங்கள் ஒன்றுமே வாயசைக்காமல் இருக்கும்போது பின்னணியில் வசனம் பேசப்படுகிறது. இன்னும் சில காட்சிகளில் கதாபாத்திரங்கள் ஒன்றைப் பேச, வசனமோ இன்னொன்றாக இருக்கிறது. கதாநாயகி பூப்படையும் காட்சியில் வேண்டுமென்றே தண்ணீர் வரும் டேப்பைத் திறப்பதுபோல இருக்கிறது!

இசை (ஸ்ரீதர் ஜோஷ்வா-அறிமுகம்) மோசமில்லை. பாடல்கள் நா.முத்துகுமார். நிறைய வரிகளில் பளிச்சிடுகிறார்.

தரமான திரைப்படம்.

Share

உயிர்த்தெழும் மரம் – கவிதை

காலையில் கண்விழிக்கிறது மரம்

இரவின் மௌனத்திற்குப் பின்

பறவைகளின் கனவுக்குப் பின்

பூமியிறங்கும் பனியுடன்

அன்றைய நாளின் பலனறியாமல்

மரம் இசைக்கும் மௌனமான சங்கீதம்

பறவைகளின் சத்தத்தில் அமிழ்ந்துவிடுகிறது

பெருங்காற்றில் அசையும்போது

விலகும் தாளம், சுருதி பேதத்தை

அதிகாலையில் மீட்டெடுக்கும் மரம்

வாகனங்களின் சத்தத்தில் மீண்டும் தவறவிடுகிறது

முன்பனியில்

அல்லது பின்னோர் மழைநாளில்

உயிர்த்தெழுகிறது

குழந்தைக்கான உத்வேகத்துடன்

இத்தனையின் போதும்

எப்போதும் ஓய்வதில்லை

மரத்தினூடாக நிகழ்ந்துகொண்டேயிருக்கும்

அதன் பேரமைதிக் கச்சேரி

Share

முதலாம் சந்திப்பு – கவிதை

சாதாரண சம்பாஷணையினிடையே

அந்த மூன்றாம் கேள்வியும் கேட்கப்பட்டுவிட்டது.

முதலிரண்டு கேள்விகளுக்குச் செய்தது போலவே

தெரிந்த ஒன்றை சொல்லப் பிரியப்படாதது போன்ற அசைவுகளுடன்

கேள்விகளைச் சுற்றிச் சுற்றி என் மனம்

கேட்போனில் முடிகிறது

கேட்போன் எப்போதுமே

என் பதிலுக்காகக் காத்திராமல்

என் மௌனத்துக்காகவே கேட்கிறானாய் இருக்கலாம்

இந்த சுவாரஸ்யமான ஒருகை “செவ்வி”யின்

அடுத்த கேள்விக்குப் போகுமுன்

ஒரு கேள்வி நான் கேட்கவேண்டியிருக்கிறது

அவன் என்ன சாதியென.

அதன் பின் அச்செவ்வி

மீவேகம் எய்தலாம்

அல்லது

சிநேகபாவம் கூடலாம்

இரண்டில் எந்தவொன்றையும் சரிசெய்யும் என் அடுத்த கேள்வி

அவனின் அடுத்த கேள்விக்கு முன் தயாராகிவிட்டால்

கைகுலுக்கல், சிகரெட், பீர், இன்னபிற என்பதாக நான்.

என்னை வரையறுக்கும் வேகத்தில் அவன்.

இடையில் கிடக்கின்றன

சில சொற்களும்

அவை நிரப்பாமல் விட்ட ஒரு பெரிய பள்ளமும்

இன்னும் பயன்படுத்தப்படாத சில பிரயோகங்களும்.

Share

தினமணி தீபாவளி மலர் – ஒரு பார்வை

தினமணியின் தீபாவளி மலரில் எனக்குத் தேவையில்லாத மற்றும் ஆர்வமில்லாத விளம்பரங்கள், ஆன்மீகத்தலங்கள் பற்றிய கட்டுரைகள், முகப்பரு வராமல் தடுக்க அலோசனைகள், மாடலிங் ரோஜாக்கள் பற்றிய கட்டுரை, ஸ்நேகா மற்றும் பிரகாஷ்ராஜ் பேட்டி, விவேக்கிற்குப் பிடித்த காமெடிக்காட்சிகள் உள்ளிட்ட பலதை நீக்கியபின்பு, புத்தகத்தின் 20/- ரூபாய் மதிப்பில் ஐந்து ரூபாய் மட்டுமே எஞ்சியது போன்ற தோற்றம். அந்த ஐந்து ரூபாய் மதிப்பையும் மதிப்பிற்குரியதாக்கியவை ஜெயகாந்தனின் பேட்டியும் கணபதி ஸ்தபதியின் (என் கற்பனைக்கு எட்டாத, புரிந்துகொள்ள முடியாத!!!) பேட்டியும் ஆ.ரா.வேங்கடாசலபதியின் “பாரதி எழுதத்தவறிய எட்டையபுரம் வரலாறு” கட்டுரையும்.

ஜெயகாந்தன் 2000-ம் ஆண்டு தினமணியின் தீபாவளி மலருக்காக விரிவாகப் பேசியபின்பு, மீண்டும் 2004-ல் தினமணி தீபாவளி மலருக்காக விரிவாகப் பேசியிருக்கிறார். கறாரான பதில்களும் தீர்க்கமான சிந்தனையும் ஜெயகாந்தன் அடிக்கடி இப்படிப் பேசவேண்டும் என்று எண்ண வைக்கின்றன. சில பதில்கள் மகச்சுருக்கமாக அமைந்து, இன்னும் இது பற்றிப் பேசியிருக்கலாமே என்று யோசிக்க வைக்கின்றன.

அவற்றுள் சில இங்கே.

=============================================================

கேள்வி: வீரப்பனைச் சுட்டுக்கொன்றது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

கூடுதல் டி.ஜி.பி. விஜயகுமாரும் முதல்வர் ஜெயலலிதாவும் பாராட்டுக்குரியவர்கள். ஆனால், இது நிரந்தரத் தீர்வு அல்ல.

கேள்வி: வீரப்பன் கொல்லப்பட்டதற்கு மனித உரிமை அமைப்பைச் சேர்ந்தவர்கள் கண்டனக்குரல் எழுப்பியிருப்பது பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

பதில்: சமூகச் சட்டங்களுக்கு உட்பட்டு வாழ்பவர்களுக்கு அரசாங்கத்தாலும் போலீஸாராலும் சட்டத்தாலும் சகமனிதர்களாலும் இழைக்கப்படும் தீமைகளுக்கு நிவாரணம் காண்பதே மனித உரிமை. இந்த உரிமை, சமூகச் சட்டத்துக்கே அப்பாற்பட்ட வீரப்பனுக்குப் பொருந்தாது.

மனித உரிமை பேசுபவர்கள் முதலில், ஆயுதங்கள் மூலம் வாழ்க்கையை அமைத்துக்கொள்ள முடியும் என்ற சித்தாந்தத்தை ஒழிப்பதற்குத் தயாராக இருக்கவேண்டும். அவர்கள் ஏன் சமூக விரோதிகளுக்கு வக்காலத்து வாங்குகிறார்கள்? இந்தச் சமூகத்தை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவர்கள் எவரும் சமூக விரோதிகள் அல்லர்.

சமூக மாற்றத்துக்கு, முதலில் சமூக விரோதிகளிடமிருந்து சமூகத்தைக் காப்பாற்ற வேண்டும். அதைத்தான் காந்திஜி செய்தார்.

எனக்கு வீரப்பனைக் கொன்று பிடித்ததே சம்மதம். அவனுக்கும் அதுதான் பெருமை. வீரப்பனை உயிரோடு பிடித்துச் ச்சித்திரவதை செய்திருந்தால் அங்கே மனித உரிமை வராது… அப்படித்தானே! அவனை வீர சொர்க்கத்திற்கு அனுப்பியதால் இவர்கள் புலம்புகிறார்கள்.

கேள்வி: தமிழுக்குச் செம்மொழி அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்ததற்கு நீங்கள் யாருக்கு “கிரெடிட்” கொடுப்பீர்கள்?

பதில்: இந்த வீணான காரியத்துக்கு யார் முயற்சி செய்தார்களோ அவர்களுக்கே இந்த வீணான பெருமையும் போய்ச் சேரட்டும். நான் இதற்காக எந்த முயற்சியும் செய்யவில்லை. தமிழ் செம்மொழியாக இருப்பதற்கு என்னாலான காரியங்களைச் செய்திருக்கிறேன். அவ்வளவுதான்.

கேள்வி: தமிழுக்குச் செம்மொழி, சேது சமுத்திரத்திட்டம் போன்ற நெடுங்காலக் கோரிக்கைகள் தில்லியில் தமிழகக் கூட்டணிக் கட்சிகளுக்கு இருந்த செல்வாக்கால்தான் நிறைவேறின என்று கருதுகிறீர்களா?

பதில்: இந்த மாதிரி ஒருமித்த ஒற்றுமை எவர் பேரால் வந்தாலும் அது பலமுடையதாகவே இருக்கும். கருணாநிதிக்குப் பதில் ஜெயலலிதா இருந்தால் இது நடக்காமல் போய்விடுமா என்ன?

இந்தக் கூட்டணி ஒற்றுமை பாதுகாக்கப்படவேண்டும். கூட்டணியின் லட்சியம் தனி ஒரு கட்சியின் குரலாக ஒலிக்குமெனில் கூட்டணி உடைந்துவிடும்.

கேள்வி: தமிழ் சினிமா நாயகர்களிடம் பெருகிவரும் “நாற்காலிக் கனவுகள்” பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பதில்: அரசியலுக்கு எங்கிருந்து வேண்டுமானாலும் யார் வேண்டுமானாலும் வரலாம்.

கேள்வி: மக்களவைத் தேர்தலுக்கு முன்பு “வாய்ஸ்” விட்ட ரஜினியும் தேர்தலுக்குப் பிறகு கள்ளக்குறிச்சியில் “வாய்ஸ்” கிளப்பிய விஜயகாந்தும் தமிழக அரசியலில் ஒரு சக்தியாக இருக்கிறார்களா… இருப்பார்களா?

பதில்: அவர்களெல்லாம் இருக்கவும் முடியாது; இருக்கவும் கூடாது.

கேள்வி: எம்.ஜி.ஆர். அரசியலுக்கு வரவில்லையா.. அதுபோலத்தான் இவர்களும் என்று சிலர் வாதிடுகிறார்களே..?

பதில்: எம்.ஜி.ஆர். மாதிரி அல்ல இவர்கள்.

கேள்வி: இவர்கள் எங்குச் சென்றாலும் கூட்டம் அலைமோதுகிறதே?

பதில்: கூட்டம் ஓட்டு அல்ல.

கேள்வி: பகவத்கீதை சர்ச்சையில் உங்கள் நிலை என்ன?

பதில்: பகவத்கீதையைச் சூழ்ச்சி என்பாரோடு எனக்கு உடன்பாடில்லை.

இந்தியாவில் இருக்கும் எல்லாரும் திருக்குறளை ஏற்றுக்கொண்டார்களா? யார் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் அது உலகப்பொதுநூல். அவ்வாறே பகவத்கீதையும். இது புரியாதவர்களுக்குப் பிறர் மரியாதையும் தெரியாது; சுயமரியாதையும் கிடையாது.

எல்லோரையும் ஒன்றுபடுத்துவதுதான் இயக்கம். பேதப்படுத்துவது இயக்கத்துக்கு எதிரானது.

கேள்வி: ஒரு கூட்டத்தில், “ஜெயமோகன் என் ஆசான்” என்று நீங்கள் ஒரு பொருளில் சொல்ல, அதை வேறு மாதிரி புரிந்துகொண்டு சிலர் “ஜெயமோகனின் லேட்டஸ்ட் சிஷ்யர் ஜெயகாந்தன்” என்று எழுதினார்களே… கவனித்தீர்களா?

பதில்: எனக்கு ஒரு சம்ஸ்கிருத ஸ்லோகத்தின் பொருள் தெரியவில்லை. ஜெயமோகனின் ஒரு புத்தகத்தைப் படிக்கும்போது எனக்கு அந்தப் பொருள் தெரிந்தது. தெரியாததை அவர் மூலம் தெரிந்துகொண்டதால், எனக்கு அவர் ஒரு வகையில் ஆசான் என்று சொன்னேன்.

என் காலத்தில் எவ்வளவோ எழுத்தாளர்கள் வாழ்ந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி எனக்குப் புகழ்ச்சியான கருத்துகளும் உண்டு. ஆனாலும் அவர்களைப் பற்றி எழுதவேண்டும் என்று தோன்றவில்லை. ஜெயமோகன் அந்த வேலையைச் செய்திருக்கிறார். நான் செய்ய விரும்பி, செய்யாத காரியத்தை அவர் செய்திருக்கிறார். அதனால் அவர் மீது ஒரு அபிமானம் வருமல்லவா…? அதனால்தான் அப்படிச் சொன்னேன்.

சில விசயங்களைக் குழந்தைகளிடம் இருந்து கற்றுக்கொண்டால் கூட நான் நன்றியோடு இருப்பேன். இது என் நல்ல குணத்தின் அடையாளமே அன்றி வேறில்லை.

எல்லாரையும் நான் திட்டிதான் கேட்டிருப்பார்கள் போலும். நான் ஒருவரைப் புகழ்ந்து பேசுவது மற்றவர்களுக்குப் பொறாமையாகவும் இருக்கக்கூடும்.

கேள்வி: தமிழில் என்ன படித்தீர்கள்?

பதில்: கி.ரா.வின் முன்னுரைகள் படித்தேன்.

ஜெயமோகன் அவரது “ஏழாம் உலகம்” புத்தகத்தை எனக்கு அர்ப்பணித்திருந்ததால் அனுப்பியிருந்தார். அதையும் படித்தேன்.

கேள்வி: “ஏழாம் உலகம்” எப்படி இருந்தது?

பதில்: நோ கமெண்ட்ஸ்.

கேள்வி: அப்படியென்றால்…?

பதில்: ஒரு பேட்டியில் சொல்வது போலக் கருத்து ஏதும் இல்லை.

==================================================================

[இந்தப் பேட்டியில் இடம்பெற்றிருந்த இன்னும் சில கேள்விகளை இந்தச் சுட்டியில் காணலாம். முழுவதும் படிக்கவேண்டுமானால் தினமணி தீபாவளி மலர் வாங்கவும். 🙂 ]

இன்னும் பல கேள்வி-பதில்களைக் கொண்டிருக்கிறது ஜெயகாந்தனின் பேட்டி. அரசியலுக்கு எங்கிருந்து, யார் வேண்டுமானாலும் வரலாம் என்றவர் உடனே ரஜினியையும் விஜயகாந்தையும் நிராகரித்திருக்கிறார். எம்.ஜி.ஆர் மாதிரி அல்ல அவர்கள் என்று சொல்லியிருக்கிறார். ஆரம்பத்திலிருந்தே அரசியலையும் சேர்த்துச் செய்யும் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை ஆதரிக்கிறார் என்று கொண்டால், இப்போதைய அரசியல் சூழலில், இதுவரை எந்தவொரு கட்சியிலும் நேரடி அரச்¢யல் செய்யாத எவரும், விஜய்காந்த் மற்றும் ரஜினி உட்பட, அரசியலுக்கு வருவதில் பெரிய தவறேதுமில்லை என்பதே என் எண்ணம். 🙂

ஜெயமோகனின் ஏழாம் உலகத்தை முற்றிலும் ஜெயகாந்தன் நிகாரித்திருப்பது ஆச்சரியத்திற்குரியது. ஜெயமோகனின் மற்ற நாவல்களில் உள்ள வீச்சும் ஆழமும் அடர்த்தியும் ஏழாம் உலகத்தில் இல்லையென்றாலும் படித்த முடித்தவுடன் மனதில் ஒரு பாரத்தை ஏற்றி வைக்கும் நாவல் என்கிற வகையிலும் அதன் காட்சி இதுவரை எந்த ஒரு நாவலும் இவ்வளவு விஸ்தாரமாகப் பதிவு செய்யாதது என்கிற வகையிலும் ஏழாம் உலகம் புறக்கணித்தக்கதல்ல என்பது என் எண்ணம்.

சில கவிதைகளும் பிரசுரமாகியிருக்கின்றன. எப்போதும் நன்றாக இருக்கும் அ.வெண்ணிலாவின்கவிதைகள் இந்தமுறை (நதி) கவனத்தை ஈர்க்காமல் வேகவதி நதியின் அவலத்தைப் பற்றிச் சொல்கிறது. மற்றக் கவிதைகளும் இத்தகையனவே.

அசோகமித்திரன் எழுதியிருக்கும் (“இருமுடிவுகள் கொண்டது”) சிறுகதை, தலைப்பையும் கதை செல்லும் பாதையையும் வைத்து முடிவை யூகிக்கக்கூடியதாகவும், கதை சொல்லும் திறனிலும் அழகான நடையிலும் தன்னைத் தற்காத்துக்கொள்ள முயற்சித்துத் தோற்றுப்போவதாகாவும் இருக்கிறது. வண்ணத்துப்பூச்சிகளின் தேசம் சிறுகதை, சிறுவயதில் வேலைக்குச் செல்லும் ஒரு சிறுவனின் வலியைச் சொல்லும், அநேகம் முறை அரங்கேற்றப்பட்டுவிட்ட கதைக்களந்தான் என்றாலும், அதன் நடையில் தேறுகிறது. “சொல்லாமல் பெய்யும் மழை” ‘அத்தைப்பாட்டி’க்கதை. கசப்புக் குப்புசாமியின் மொழிபெயர்ப்புக் கதையும் (கண்ணீர்ப்பசு) வறுமையை அதீதமாகச் சொல்லி செயற்கைத்தனத்தை மட்டுமே கொண்டுவருகிறது.

தீபாவளி மலரின் கட்டுரைகளில் மிக முக்கியமானதும் ஆழமாக அலசப்பட்டிருப்பதும் ஆ.இரா.வேங்கடசலபதியின் “பாரதி எழுதத்தவறிய எட்டயபுரம் வரலாறு”. பாரதி எட்டயபுரம் ஜமீனுக்கு “வம்சமணி தீபிகை”யைப் (எட்டயபுரம் வரலாற்றைச் சொல்லும் நூல்) புதுக்கித் தர இசைந்து அதற்காக கைம்மாறு வேண்டும் கடிதத்தையும், “வம்சமணி தீபிகை”யும் முன்வைத்து அதைச் சுற்றி ஆராயப்பட்டிருக்கும் கட்டுரை வடிவம் இது. ஆகஸ்ட், 6, 1919-ல் எழுதியிருக்கும் அக்கடிதத்தில், எட்டயபுரம் ஜமீனை “சந்நிதானம்” என்றும் “கைம்மாறு விஷயம் சந்நிதானத்தின் உத்தரவுப்படி” என்றும் “சந்நிதானத்தை” விளிக்கும்போது “ஸ்ரீமான் மகாராஜ ராஜ பூஜித மஹா ராஜ ராஜஸ்ரீ எட்டயபுரம் மஹாராஜா” என்றும் எழுதுகிறான் பாரத்¢. “சின்னச் சங்கரன்” கதையை “வம்சமணி தீபிகை”யின் பகடி நூலாகக் காட்டும் கட்டுரையாசிரியர், பாரதி பின்னாளில், அதே “வம்சமணி தீபிகை”யைப் புதுக்கித் தர இசைந்ததும், அதற்காகக் கைம்மாறு வேண்டியும், “சந்நிதானம்” என்றும் விளித்தும், அரசாங்க பாடசாலைகளில் அதைக் கல்வியாக வைக்கலாம் என்று ஆசை வார்த்தை சொல்லியும் நிற்கும் அவலத்தைச் சுட்டிக்காட்டுகிறார். அதே கடிதத்திலும், அந்தச் சூழலிலும், பாரதியின் “வரவழைத்துக்கொண்ட” பணிவையும் மீறி அவனது நம்பிக்கை வெளிப்படுவதையும் ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். [பாரதி, “தமிழ் மொழிக்கொரு மேன்மையும் பொருந்திய சரித்திர நூலும் சமையும்” என்கிறான்.] “வம்சமணி தீபிகை” பாளையக்காரர்களைக் கொள்ளைக்காரர்களாகச் சித்தரித்து, கும்பினிக்காரர்களால் இந்தியா பெற்ற மேன்மையைப் போற்றும் விதமாகச் “செய்யப்பட்ட” ஒரு வரலாற்று நூல். ஏகப்பட்ட பிழைகளுடன் இருக்கும் அந்நூலைப் புதுக்கித் தரவே பாரதி முன்வந்திருக்கிறான். அதைச் செய்யாமல் போனது பாரதியின் அதிர்ஷ்டமா, அல்லது அவன் சொன்னது போல் தமிழ்மொழிக்கொரு “மேன்மையும் கீர்த்தியும் தரும்” ஒரு வரலாற்று நூல் அவனால் எழுதமுடியாமல் போனது துரதிர்ஷ்டமா என்பது விடைகாணமுடியாத கேள்வி. கட்டபொம்மனைப் பற்றி எங்குமே குறிப்பிடாத பாரதி இந்நூலை எழுதியிருந்தால் அக்குறை நீங்கியிருக்கும் என்றும் சொல்கிறார் கட்டுரையாசிரியர். மிக நல்ல கட்டுரை.

கணபதி ஸ்தபதியின் செவ்வி, வடநாடு என்பது வட இந்தியா இல்லை என்றும் அது தமிழ்நாடே என்றும் சொல்கிறது. வரலாறு என்பது குமரிக்கண்டத்திலிருந்து எழுதப்படவேண்டும் என்றும் அதனால் தமிழ் முதன்மை பெறும் என்றும், வரலாறு “பிரளயத்திற்கு முன், பிரளயத்திற்குப் பின்” என்றே வகைப்படுத்தப்படவேண்டும் என்கிறது. கடவுளைப் படைத்த பெரும் விஞ்ஞானியாக மயன் முன்வைக்கப்படுகிறார். மயனை முன்வைத்தே அவரது வேலைகள் நடைபெறுவதாகவும் மயனுக்கு நினைவுமண்டபம் எழுப்புவதும் பெரியாருக்குச் சிலை வைப்பதும் அடுத்தக்கட்டத் திட்டமாகச் சொல்லும் ஸ்தபதி, அவரது கைவண்ணத்தில் அமைந்த “வள்ளுவர் கோட்டம்”, “திருவள்ளுவர் சிலை”, “பூம்புகார் மணிமண்டபம்” ஆகியவற்றிற்கு ராயல்டி கேட்கிறார்! இது எத்தனைத்தூரம் சரி என்பது புரியவில்லை. கருணாநிதிக்காவும் திருவள்ளுவருக்காகவும் காசு வாங்காமல் வேலை செய்ததாகச் சொல்லும் ஸ்தபதி இப்போது ராயல்டி கேட்பது சட்டரீதியாகச் சரியானதுதானா என்பது தெரியவில்லை.

தீபாவளி மலரில் ஓவியர் பத்மவாசனின் கைவண்ணத்தில் ஹிந்துக்கடவுளர்களின் ஓவியங்கள் இருக்கின்றன. திருமணியின் புகைப்படக்களஞ்சியம் மக்கள் மறந்துபோன, மறந்துகொண்டிருக்கின்ற, கைவிட்டுக்கொண்டிருக்கிற பழங்காலப் பழக்கங்களையும் கருவிகளையும் கண்ணுக்குத் தருகிறது. சில ஓவியங்கள் வெகு அழகு. வண்ணத்தில் பார்க்கக்கிடைத்தால் மிக அற்புதமாக இருந்திருக்ககூடும். இணையத்தில் இப்புகைப்படங்களைத் “தினமணி” வெளியிடுமா எனத் தெரியவில்லை. அடுப்புக்கரியால் பல்துலக்கும் பெண்மணியும், ஒரு பக்கம் மட்டுமே தட்டுகொண்ட தராசும் (தூக்கு), நடப்பட்டிருக்கும் குச்சிகளில் அலுமினியப்பாத்திரங்கள் காயும் அழகும், கல்லால் வடிவமைக்கப்பட்ட திரிகை (துவரை, பச்சைப்பயறு, உளுந்து போன்றவற்றை உடைக்கப் பயன்படும் கருவி)யும் பழைய நினைவுகளை நமக்குள் எழுப்பிவிடுகின்றன.

எல்லாவற்றையும் கலந்து எல்லாத்தரப்பையும் திருப்தி செய்யும் நோக்கில் செயல்பட்டிருப்பது புரிந்தாலும், நடிகர்களுக்குத் தரப்பட்டிருக்கும் அதிகப் பக்கங்களைக் குறைத்து, இன்னும் கொஞ்சம் கூடுதல் பக்கங்களை இலக்கியத்திற்கு ஒதுக்கியிருக்கலாம்.

Share

மௌனம் – கவிதை

நமதே நமதான நம் மௌனம்

படுக்கை அறையின் தடுப்பைத் தாண்டிய போது

தன்னைச் செறிவாக்கிக்கொண்டது

மூன்றாம் கட்டைக் கடந்தபோது

கொஞ்சம் கூர்மையாக்கிக்கொண்டது

சமையலறையைத் தாண்டியபோது

நிறம்கூட்டிக்கொண்டது

செறிவான, கூர்மையான, கடும் நிறத்துடன் கூடிய மௌனம்

பின்வாசலைக் கடக்குமுன்

அதைப்பற்றிய பிரக்ஞையில்லாமல்

நானோ நீயோ

என்னையோ உன்னையோ தொடாமல்

ஜன்னலுக்கு வெளியில் அலையும்

ஒன்றுமில்லாத ஒன்றை ஊன்றிக்கவனித்துக்கொண்டிருக்கிறோம்

அதற்குள் இன்னொரு மௌனம் தலைதூக்கிவிடும் அபாயத்தை அறிந்தும்

தூங்கிக்கொண்டிருக்கிறது

நமதே நமதான ஆசைகளும், வெளிர் நீல வெளிச்சத்தில் நிர்வாணங்களும்;

அப்போது

அங்கே

உருவாகிவிட்டிருந்த, சீக்கிரம் வெடிக்கப்போகிற

பலூனின் வாழ்நாளில் அமிழ்ந்திருக்கிறது

நம் தன்முனைப்பின் ஆழமான அடையாளங்கள்

Share