Archive for அரசியல்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD

ராஜிவ் காந்தி கொலை வழக்கு – The Human Bomb CD

மே 21, 1991ல் ராஜிவ் காந்தி கொலை செய்யப்படுகிறார். அதன் மறுநாள், இந்த வழக்கு, தமிழக அரசின் வேண்டுகோளுக்கு இணங்க, சிபிஐ வசம் ஒப்படைக்கப்படுகிறது. சிறப்புப் புலனாய்வுக்குழு – சிபிஐ இந்த வழக்கை எடுத்துக்கொண்டதில் இருந்து, விசாரணை முடியும் வரை உள்ள முக்கியமான நிகழ்ச்சிகளை, ஆதாரங்களை மிகச் சுருக்கமாக ‘Human Bomb’ சிடியில் பார்த்தேன். சிறப்புப் புலனாய்வுக்குழுவின் தலைவர் ரஹோத்தமனின் தயாரிப்பில் வந்திருக்கும் இந்த குறுவட்டு, உலகத்தில் மிகவும் சிக்கலான வழக்கு இதுவே எனவும், மிக விரைவாக முடிக்கப்பட்ட வழக்கும் இதுவே என்றும், எவ்வித சந்தேகத்துக்கும் இடமின்றி குற்றவாளிகளை இனம்கண்ட வழக்கும் இதுவே என்றும், விடுதலைப் புலிகளே – விடுதலைப் புலிகள் மட்டுமே ராஜிவ் காந்தியின் கொலைக்குக் காரணம் என்றும் சொல்கிறது.

இந்த ஆவணப் படத்தின் தயாரிப்புத் தரத்தை அதிகம் பாராட்ட முடியாது. அதிலும் இரண்டு நாள்களுக்கு முன் Death of a President பார்த்துவிட்டு, இதனைப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்துக்கும், நிஜ, அதிலும் இந்திய ஆவணப்படத்துக்குமான வேறுபாடு முகத்தில் அறைந்தது. என்றாலும், Death of a Presidentஐ ஒரு திரைப்படம் போலவே காஃபி சாப்பிட்டுக்கொண்டும் சமோசா சாப்பிட்டுக்கொண்டும் பார்க்க முடிந்தது. இந்தத் தரம் குறைந்த இந்திய ஆவணப் படத்தை அப்படிப் பார்க்க இயலவில்லை.

எந்த சூழ்நிலையில் ராஜிவ் காந்தி பிரதமாரானார் என்பது பற்றியும், ஏன் விடுதலைப் புலிகள் அவரைக் கொல்ல முடிவெடுத்தனர் என்பது பற்றியும் மிக மேலோட்டமான விவரணைக்குப் பின்னர், ராஜிவ் காந்தியின் கொலையைப் பற்றிய ஆராய்ச்சியின் போது சிக்கிய தகவல்கள், ஆதாரங்கள் என்ற ஆதார விஷயத்தை நோக்கிப் பயணிக்கிறது இந்தக் குறுவட்டு.

1987ல் பன்னிரண்டு கறும்புலிகள் (சயனைடு தின்று தற்கொலை செய்துகொள்ளும் புலிகள்) இறந்த சம்பவத்திலிருந்து, அவர்களின் இறுதி ஊர்வலம் வரை எல்லாவற்றையும் இந்த குறுவட்டில் பார்க்கமுடிகிறது. கறும்புலிகள் ஏன் சயனைடு தின்று இறக்கவேண்டும் என்று சொல்லும் பிரபாகரனின் பேட்டியும், (பிபிசிக்குக் கொடுத்தது என நினைக்கிறேன்), இரண்டு கறும்புலிகள் தாங்கள் எவ்வித நிர்ப்பந்தமும் இன்றி புனித போருக்காகத் தாங்களாகவே இணைந்ததாகச் சொல்லும் காட்சிகளும் இதில் உள்ளன.

கொலை செய்ய முக்கியமான நபராக இருந்து உதவிய சிவராசன், திலீபனின் இரண்டாவது நினைவுதினத்தில் பேசிய பேச்சின் வீடியோ வடிவம் இந்த குறுவட்டில் உள்ளது. குண்டு வெடிக்கச் செய்து, தானும் இறந்துபோன தனு, விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பங்குகொண்டு, பெற்ற பயிற்சிகளின் காட்சிகள் இந்த வட்டில் உள்ளன.

அத்திரை, மற்ற பெண் விடுதலைப் புலிகளுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் உள்ளது.

வேதாரண்யத்தில் அப்போது புலிகள் எப்படி மறைவிடத்தில் எல்லாவற்றையும் பதுக்கி வைத்தார்கள் என்பது பற்றிய காட்சிகளும், அதைத் தொடர்ந்தே எப்படி தமிழ்நாட்டை புலிகள் தங்கள் களமாகப் பயன்படுத்தினார்கள் என்று காவல்துறை உணர்ந்துகொண்ட செய்திகளும் உள்ளன.

ஹரி பாபு எடுத்த புகைப்படக் கருவி சிக்கியதுதான் வழக்கின் மிக முக்கியத் திருப்பம் என்று சொல்கிறார் ரஹோத்தமன். அதேபோல், முருகனும் நளினியும் கைது செய்யப்பட்டது இன்னொரு முக்கியத் திருப்பம் என்கிறார். புகைப்படக் கருவி தொடக்கத்தில் சிக்கியபோது, அதை அத்தனை முக்கியமான ஆதாரமாக கருத வேண்டிய நிலையில் காவல்துறை இருந்திருக்காது என்றே நினைக்கிறேன். ஆனால் அந்த புகைப்படக் கருவியின் வழியாக சிக்கிய படங்களே இன்றுவரை ராஜிவ் காந்தி வழக்கின் முக்கியத் தடயங்களாக நிற்கின்றன.

ராஜிவ் காந்தியைக் கொல்லும் முன்பாக, ஓர் ஒத்திகைக்காக, சென்னையில் விபி சிங்கின் ஒரு கூட்டத்தில் சிவராசன் பங்கேற்றதின் படக் காட்சியையும் இதில் பார்த்தேன்.

ஒரு வழக்கை எடுத்துக்கொண்டு அதன் வேர் வரை சென்று, எல்லா ஆதாரங்களையும் திரட்டிய காவல்துறையின் பணி அசர வைத்தது என்றே சொல்லவேண்டும். இன்று ஒரு வரியில் இதனைச் சொல்லமுடிந்தாலும், இதைச் செய்து முடிப்பதற்கு முன்பாக அவர்கள் எதிர்கொண்டிருக்கவேண்டிய சவால்கள், உயர் இடக் குறுக்கீடுகள், பத்திரிகைகளின் கேள்விகள் எல்லாம் எதிர்கொள்ள சாதாரணமானவையாக இருந்திருக்காது என்பது மட்டும் நிச்சயம்.

தனுவும் சுபாவும், அகிலாவும் விடுதலைப் புலித் தலைவர்களுள் ஒருவரான பொட்டு அம்மானுக்கு எழுதிய கடிதங்களின் நகல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் அவர்கள் இக்காரியத்தை வெற்றிகரமாக நிறைவேற்றுவோம் என்ற ரீதியிலும், இதே போன்ற ஒரு சந்தர்ப்பத்தில் சிங்கின் (விபி சிங்காக இருக்கவேண்டும்) அருகில் சென்றோம் என்கிற ரீதியிலும் எழுதியிருக்கிறார்கள். பாக்கியநாதன், பேபி சுப்பிரமணியத்துக்கு எழுதிய கடிதம் ஒன்றும், கொலைக்கு முன்பான கடிதங்களுள் முக்கியமான ஒன்று. திருச்சி சாந்தன் செப்டெம்பர் 1991ல் பிராபகரனுக்கு எழுதிய கடிதத்தில், சாந்தன் (சின்ன சாந்தனாக இருக்கலாம் என நினைக்கிறேன்) பிடிபட்டது பெரும் ஆபத்தாய் முடிந்துவிட்டது என்றும், சிபிஐ-யின் சித்திரவதைகள் வர்ணிக்க முடியாதவை என்றும், விசாரணைகளில் சிபிஐ தம்மைப் பற்றிய செய்திகளை முழுமையாகவே அறிந்துவிட்டனர் என்றும் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதமும் இக்குறுவட்டில் உள்ளது.

கோடியக்கரையில் 9 பேர் அடங்கிய குழு – இவர்களே ராஜிவ் காந்தி கொலைக்கு எல்லா வகையிலும் பங்காற்றியவர்கள் – வந்திறங்கிய நாள் முதல் அவர்களின் எல்லா செயல்படுகளையும் கிட்டத்தட்ட இந்த சிறப்புப் புலனாய்வுக் குழு ஆராய்ந்திருக்கின்றது.

மே 21, 1991ல் ராஜிவ் காந்தி சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியதிலிருந்து, அவர் கொடுத்த பேட்டிகள், வழியில் அவர் எதிர்கொண்ட பூமாலைகள், பூந்தமல்லி கூட்டம் என எல்லாவற்றையும் பார்த்தேன். ராஜிவ் காந்திக்கு பூமாலையும் செண்டும் கொடுக்க மூன்று பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று ஒரு குரல் மைக்கில் ஒலிக்கிறது. மற்றவர்களை மேடைக்கு இடது பக்கம் வரிசையில் நிற்கச் சொல்கிறது அக்குரல். அடுத்த சில நிமிடங்களில் ராஜிவ் காந்தி தனது இறுதிக் கணத்தின் புகைப்படமாகிறார்.

இத்தனை சவால்களை எதிர்கொண்டு இத்தனை விஷயங்களைக் கண்டுபிடித்திருக்கும் காவல்துறை, இந்த சாவல்கள், கடின செயல்பாடுகளைக் கணக்கில் கொள்ளும்போது ஒன்றுமே இல்லை என்று சொல்லிவிடக்கூடிய போதிய பாதுகாப்பு முன்னேற்பாடுகளைச் செய்திருந்தால் ஒரு இந்தியத் தலைகுனிவைத் தடுத்திருக்கலாம் என்னும் ஆற்றாமையைத் தவிர்க்கவே முடியவில்லை.

இந்தக் குறுவட்டில் ஒரு பேட்டியில் பிரபாகரன், ‘ராஜிவ் காந்தி கொலைக்கு நீங்கள்தான் பொறுப்பாளியா’ என்னும் கேள்விக்கு இப்படிச் சொல்கிறார்.

“நாங்கள் ஆரம்பத்திலேயே எங்கள் கருத்தைத் தெரிவித்திருக்கிறோம். எங்களைப் பொருத்த வரைக்கும் இந்தக் கொலை எங்கள் மீது சுமத்தப்பட்ட ஒரு அபாண்டமான குற்றச்சாட்டாகவே நாங்கள் கருதுகிறோம்.”

The Human Bomb,
Script, Compiled & Produced by: K. Raghothaman
Supdt. Of Police – CBI (Retd),
Consultant and Investigator,
214, 42nd Street, 8th Sector,
K.K. Nagar, Chennai – 600 078.
Email: krmmcoin2@gmail.com
விலை: 199 ரூபாய்.
ஆன்லைனில் வாங்க: https://www.nhm.in/shop/Human-Bomb-DVD.html

Share

M.A – Mokkai Thoughts

சென்னைப் பல்கலைக் கழக துணை வேந்தர் தனது முதல் பத்திரிகையாளர் சந்திப்பிலேயே பவுண்டரி அடித்திருக்கிறார். நடப்பட்ட மரத்துக்கு நீரூற்றலா அல்லது புதிய தென்னங்காலா என்பது போகப் போகத்தான் தெரியும். திருவாசகத்துக்கு உருகார் ஒரு வாசகத்துக்கும் உருகார் என்னும் பழமொழியின் நுண்ணர்த்தம் கருணாநிதிக்கும் இந்நேரம் விளங்கியிருக்கும். எம். ஏ. – கலைஞர் எண்ணங்கள். இதை ஏற்படுத்தும் கையோடு, எம். ஏ. காந்திய எண்ணங்களை நீக்கவும் துணை வேந்தர் அவர்கள் பெருமனது செய்து முயற்சி எடுக்கவேண்டும்.

கருணாநிதியையும் காந்தியையும் ஒரே இடத்தில் வைக்கும் எண்ணத்தை கருணாநிதி பெருமனம் செய்து பொறுத்துக்கொண்டாலும், அவரது தொண்டரடிகள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள் என்பதையும் நாம் பொறுத்துக்கொண்டாலும், கருணாநிதி எண்ணங்களையும் காந்தி எண்ணங்களையும் படிக்கும் மாணவர்கள் ஒரு சேர சந்திக்கும்போது, இந்த காந்தி என்ன செய்தார் என்று இவரைப் பற்றிய எண்ணங்களைப் படித்து பட்டம் வாங்க வேண்டி கிடக்கிறது என்று கலைஞர் எண்ணக்காரர்கள் கேட்டால், காந்திய மாணவர்கள் திருதிருவென்று முழிக்க நேரிடும். இதே கதியே காந்திய எண்ணங்களைக் கற்பிக்கும் பேராசிரியர்களுக்கும் ஏற்படும். இத்தகைய அவமானங்களைக் காந்திய மாணவர்கள் பெறக்கூடாது என்ற பொதுநல நோக்கை மனதில் கொண்டு, துணைவேந்தர் அவர்கள் காந்திய எண்ணங்களை நீக்கிவிட்டால் நல்லது. பிழைத்துப் போகட்டும் காந்தி.

சோ தனது கருத்தை டிவியில் இப்படி சொன்னார். எம்.ஏ. ஸ்டாலின் எண்ணங்கள், எம்.ஏ. அழகிரி எண்ணங்கள், எம்.ஏ. கனிமொழி எண்ணங்கள் என்றெல்லாம் ஏற்படுத்தவேண்டும் என்றார்.

கூடவே எம்.ஏ. மொக்கை எண்ணங்களையும் ஏற்படுத்தலாம். என்னைப் போன்ற வலைப்பதிவாளர்களுக்கு முன்னுரிமை கொடுக்கலாம். ஜோக்கர்களின் பூமியான நம் தமிழ்நாட்டில் எம்.ஏ. மொக்கை எண்ணங்கள் என்கிற படிப்பு இத்தனை நாள் இல்லாததே தவறு என்பதை திருவாசகம் அவர்கள் கவனத்தில் கொள்ளவேண்டும்.

இதற்கு முன்பு இருந்த துணை வேந்தர்கள் சென்னைப் பல்கலைக்கழகத்தில் செய்யவேண்டிய எல்லா வேலைகளையும் முடித்துவிட்டார்கள் என்பதில் ஐயமில்லை. உலகின் முன்மாதிரி பல்கலைக்கழகங்களில் சென்னையே முதலிடம் வகிக்கிறது. இத்தனை நடந்த பிறகு திருவாசகம் அவர்கள் இப்பதவிக்கு வந்திருப்பதால், எல்லா வகையிலும் தன்னிறைவுக்கும் மேலாக நிறைவு பெற்றுவிட்ட சென்னைப் பல்கலைக்கழகத்துக்கென, புதிய ஒன்றை யோசித்துச் செய்யவேண்டிய கடும்பணி அவருக்கு இருக்கிறது. அதற்காகவே யோசித்து இந்த அரிய கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். எம்.ஏ. கலைஞர் எண்ணங்கள் என்று ஓர் அறிவிப்பைக் கண்டபின்பு கருணாநிதியின் பொறுப்புணர்வும் கூடியிருக்கும். திருவாசகம் அவர்களின் புதிய முயற்சிகள் இப்படி தமிழக அரசியலைப் பாதித்து, அதன் வழியாக இந்திய அரசியலையும், அதனால் உலக அரசியலையும் கருணாநிதியின் வழியாகப் பாதிக்கவிருக்கிறது என்பதைத் துணைவேந்தரே அறிந்திருக்கமாட்டார்.

எம்.ஏ. களையெடுப்பு என்ற ஓர் பட்டப்படிப்பையும் திருவாசகம் அவர்கள் யோசிக்கவேண்டும். பிற்காலத்தில் இதுவே அதிகம் பயன்படும் என்பதால் இதனை உடனடியாகக் கொண்டுவருவதில் திருவாசகம் அவர்கள் சிறிது நேரம் செலவிட்டால் தேவலை.

Share

பந்த் என்னும் ஒருநாள் நாடகம்

கருணாநிதிக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தமிழினத் தலைவராக அவரை எப்போது ஏற்றுக்கொள்ளாதவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். இதுவரை அவரே முத்தமிழ் அறிஞர் என்று புகழ்பாடிக்கொண்டிருந்தவர்கள், இலங்கைப் பிரச்சினையை முன்வைத்து அவரைத் தமிழினத் துரோகி ஆக்கியிருக்கிறார்கள். வலைப்பதிவுகளில் தொடர்ந்து அவரது முகமூடியைப் பதிவர்கள் கிழித்துக்கொண்டே இருக்கிறார்கள். ஜராசந்தனின் பிளக்கப்பட்ட தொடைகள் மீண்டும் மீண்டும் ஒட்டுவதுபோல, அவரும் ஏதேனும் ஒரு முகமூடியுடன் வந்துகொண்டே இருக்கிறார். ஒருமுறை பிரபாகரன் இஸ் மை பிரண்டாக. இன்னொருதடவை பிரபாகரன் தீவிரவாதி அல்ல, அவரது இயக்கத்தில் சில தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டிருக்கலாம் என. முகமூடிளையெல்லாம் யாரோ கிழித்துவிடுவதாலும், தானே கிழித்துக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுவிடுவதாலும், எக்காலத்துக்கும் பொருத்தமான, கிழியாத, தேர்ந்த முகமூடி ஒன்றையும் தேடிக்கொண்டிருக்கிறார்.

இந்நிலையில் இந்த பந்த் என்னும் முகமூடி. ஒருநாள் தொடருக்கான வேடம். சென்ற முறை யோசிக்காமல், பந்த் என்று அறிவித்துவிட்டு, கோட்டைக்கு ஓடோடிச் சென்று கையெழுத்துப் போட்டது போலில்லாமல், கொஞ்சம் யோசனை செய்த பின் அறிவித்திருக்கிறார். இஷ்டப்பட்டவங்க வேலைக்கு வாங்கடே என்னும் ரீதியான அறிவிப்பு. சென்றமுறை பந்த் அறிவிப்பை அரசே வெளியிட்டது, பேருந்துகள் ஓடாது என்றெல்லாம் செய்திகள் நாளிதழ்களில் வந்தவண்ணம் இருந்தன. ஆனால் எப்படியோ நீதிமன்றத்தில் மாற்றிப் பேசி தப்பித்துவிட்டார்கள். கண்களையும் காதுகளையும் பொத்திக்கொண்டு நீதிமன்றம் தீர்ப்பளித்ததா எனத் தெரியவில்லை. இந்தமுறையும் நீதிமன்றம் அப்படிச் செயல்படுமா எனத் தெரியாது என்பதனால், கருணாநிதியே கொஞ்சம் கவனம் எடுத்துக்கொண்டுவிட்டார்.

பேருந்துகள் ஓடாது என்கிற அறிவிப்பெல்லாம் இல்லை. ஆனால் இன்று சென்னையில் (மற்ற இடங்களில் எப்படி என்று தெரியவில்லை) எந்தப் பேருந்தும் ஓடவில்லை. சன் தொலைக்காட்சியிலும், கலைஞர் தொலைக்காட்சியிலும், மக்கள் யாரும் பயணத்துக்கு வராததால், பேருந்து ஓடவில்லை என்று செய்தி ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள். அதாவது ஓர் அரசு நினைத்தால், ஓர் அரசியல் கட்சி நினைத்தால், நீதி என்பது அதன் கையிலிருக்கும் சப்பாத்தி மாவு மட்டுமே. அதை எப்படியும் பிணைந்துவிடலாம். பேருந்துக்கு மக்கள் வரவில்லை என்கிற செய்தியை ஒளிபரப்பும் படித்தவனெல்லாம் ‘ஐயோ ஐயோ என்று போவானா’ எனத் தெரியவில்லை. மற்ற கட்சியினர் சென்னையில் திமுகவினர் மட்டுமே உண்டு என்கிற உண்மையைக் கண்டுகொண்டிருப்பார்கள்.

ஓர் ஆளும்கட்சி எக்காரணம் கொண்டும் பந்த் அறிவிக்கக்கூடாது என்று தெளிவான சட்டத்தை அரசு இயற்றவேண்டும். ஒரு தனிப்பட்ட கட்சித் தலைவராக பந்தை ஆதரிப்பேன் என்றெல்லாம் ஓர் ஆளும் கட்சித் தலைவர் ஜல்லி அடிக்கக்கூடாது. பொது மக்கள் எவ்வித சிக்கலுமின்றி பயணம் செய்வதை உறுதிப்படுத்துவது ஆளும்கட்சியின் கடமை என்பதை ஆளும் கட்சி உணரவேண்டும். எதிர்க்கட்சிகள் பந்த் நடத்த உரிமை உண்டு. ஆனால் ஆளும்கட்சி அந்த பந்த்தைத் தோற்கடிப்பதையே தனது முதல் நோக்கமாகக் கொள்ளவேண்டும்.

ஒரு பந்தினால் மக்கள் அடையும் இன்னலுக்கு யார் பதில் சொல்வார்கள்? பந்த் அறிவித்த தினம் ஒரு முகூர்த்த தினமாக இருந்து, அன்று திருமணம் போன்ற நிகழ்ச்சிகள் இருந்திருந்தால், அந்தக் குடும்பங்கள் அதை எப்படி சமாளிக்கும்? திடீரென்று ஒரு நாள் முன்பு பந்த் அறிவித்தால், அலுவலகங்கள் அதை எப்படி எதிர்கொள்ளமுடியும் என்கிற அடிப்படை அறிவுகூட ஓர் அரசுக்கு இருக்காதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிப்பது என்பது அரசியல்வாதிகளின் வேலை. கருணாநிதி தான் குழம்பிப் போய் எதையாவது பிடிக்கவேண்டுமே என்று அலைந்துகொண்டிருக்கிறார்.

இதே வேலை நிறுத்தம் ஒரு மாதத்துக்கு முன்பு வந்திருந்தால் வைகோவும் ராமதாஸும் பச்சை விளக்கு காண்பித்திருப்பார்கள். இன்று எல்லா எதிர்க்கட்சிகளும் ஒட்டுமொத்தமாக கருணாநிதியின் பந்த் அறிவிப்பைப் புறக்கணித்துவிட்டார்கள். எல்லாவற்றுக்கும் காரணம் அரசியலே அன்றி, ஈழத் தமிழர் பிரச்சினையின் மீதான உண்மையான அக்கறை அல்ல. ஜெயலலிதா போராளி என்கிறார். பிரபாகரனுக்கே நெஞ்சு வலி வந்திருக்கும். பாரதம் என்றும், இந்தியத்துவம் என்றும் இறையாண்மை என்றும் பேசி வந்த பிஜேபி, தமிழர்கள் ஹிந்துக்கள் என்கிற அதிபயங்கர உண்மையைக் கண்டுபிடித்திருக்கிறது. இனிமேல் என்ன என்ன ஜாதி எனக் கண்டுபிடிப்பார்களா எனத் தெரியவில்லை. வைகோவும் ராமதாஸும் கூட்டணி என்றால் கொள்கை வேறுபாடு இருப்பது இயல்பு என்கிற, இதுவரை வேறு யாரும் முன்வைக்காத புதிய சிந்தாத்தத்தை விளக்கிக்கொண்டிருக்கிறார்கள். காங்கிரஸுக்கு தான் ஏன் கருணாநிதிக்கு ஓட்டு கேட்கிறோம் என்று இன்னும் புரிபடவில்லை. கூட்டத்தில் பக்கத்தில் ஆடும் குழந்தையைப் பார்த்து, கையையும் காலையும் தானே ஆட்டும் குழந்தை போல, கூட்டத்தோடு ஓட்டுக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

ஈழத் தமிழர் பிரச்சினையில் தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் போல அலசு அலசென்று அலசியவர்கள் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். ஏதேனும் ஓர் ஈழத் தமிழன் நினைக்கக்கூடும், இவங்க கூத்துக்கு சாகறதே மேல் என்று. அவருக்கு என் அனுதாபங்கள்.

Share

பொது நூலகத்துறை – அகமும் புறமும்

காலச்சுவடு ஜனவரி 2009 இதழில் கண்ணன் பொது நூலகத்துறையில் நிலவும் அக்கறையின்மையைக் குறிப்பிட்டு ஒரு பத்தி எழுதியுள்ளார். கனிமொழி காலச்சுவடு விவகாரம் வெடிக்கவில்லை என்றால் இந்தப் பத்தி சாத்தியமாயிருக்குமா என்பது ’கண்ணனுக்கே’ வெளிச்சம். எது எப்படி இருந்தாலும், கண்ணன் சொல்லியிருக்கும் விஷயங்கள் உண்மையானவை. ஆயிரம் புத்தகங்கள் நூலகத்துறைக்கு எடுக்கிறோம் என்கிற அறிவிப்பெல்லாம் வந்துவிடுகிறது. வாக்கு வாங்க மக்களை ஏமாற்றுவதுபோல பதிப்பாளர்களையும் இந்த அரசு ஏமாற்ற நினைக்கிறதோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. இந்த அரசு என்பது கருணாநிதி தலைமையிலான திமுக அரசு என்றாலும், எந்த அரசு ஆண்டாலும் இக்கதியே நிலவுகிறது. ஜெயலலிதாவிற்கு பொது நூலகத்துறை என்று ஒன்று இருக்கிறது என்பது தெரியும் என்று நம்பியே தொடர்ந்து எழுதுகிறேன்!

ஒவ்வொரு ஆண்டும் பொது நூலகத்துறைக்குப் புத்தகங்களைத் தேர்வு செய்வார்கள். அதற்கென ஒரு குழு அமைக்கப்படும். அவர்கள் எந்தப் புத்தகங்களை நூலகங்களுக்குத் தேர்வு செய்வது என்று முடிவு செய்து தேர்ந்தெடுப்பார்கள். முதலில் 600 புத்தகங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். 2007 முதல் 1000 புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார்கள். மிக எளிமையானதாகவும், தேவையானதாகவும் தோன்றும் இத்திட்டத்தை இந்த அரசுகள் எப்படி வைத்திருக்கின்றன என்று பார்க்கலாம்.

பொதுவாக ஒவ்வொரு வருடத்தின் பிப்ரவரி மாதம் 28ம் தேதிக்குள் பதிப்பாளர்கள் புத்தகங்களை தேர்வுக்கு வேண்டி சமர்ப்பிக்கவேண்டும் என்று அறிவிப்பு வரும். வருடத்தில் பத்து நாள்கள் மட்டும் விழித்திருந்தால் போதும் என நினைக்கும் பபாஸி இதைப் பற்றி செய்தி எல்லாம் எல்லா பதிப்பாளர்களுக்கும் அனுப்பாது. பதிப்பாளர்தான் கவனமாக இருந்து இதைத் தெரிந்துகொண்டு, புத்தகங்களைச் சமர்ப்பிக்கவேண்டும். ஒரு புத்தகத்தைப் பதிவு செய்ய 50 ரூபாய் டிடி எடுக்கவேண்டும். ஒரு புத்தகத்தின் இரண்டு படிகளையும் தரவேண்டும். பரிசீலனைக்குப் பின்னர் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படும்.

320 பக்கங்கள் வரைக்குமான புத்தகங்கள் ஆயிரமும், அதற்கு மேல் பக்கங்கள் உள்ள புத்தகங்களை ஒரு குத்துமதிப்பாகவும் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு புத்தகத்திற்கு என்ன விலை கொடுப்பது என்பதை அரசே தீர்மானிக்கும். எனக்குத் தெரிந்து பல ஆண்டுகளுக்கு முன்பு நிர்ணயிக்கப்பட்ட விலை இது. 16 பக்கங்கள் கொண்ட ஒரு டெமி சைஸ் புத்தகத்திற்கு ரூபாய் 3.90 என நினைக்கிறேன். இதில் என்ன கொடுமை என்றால், பதிப்பாளர் எந்த விதமான தாளை அச்சுக்குப் பயன்படுத்தி இருக்கிறார், எந்த விதமான அட்டையை அவர் பயன்படுத்தியிருக்கிறார் என்பதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. நல்ல தாளில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும், நியூஸ் ரீலில் அச்சிடப்பட்ட 16 பக்கத்திற்கும் ஒரே விலை 3.90தான். இதனால் சில பதிப்பாளர்கள் நூலக ஆர்டர் கிடைத்ததும் அச்சிடும் புத்தகங்களை சாதாரண தாளில் அச்சடித்து செலவைக் குறைத்துக்கொள்கிறார்கள்.

பொதுவாக, ஒரு பதிப்பாளர் எந்த நூலை சமர்ப்பிக்கிறாரோ அதே நூலின் தரத்தில் நூலகத்திற்கான புத்தகங்களின் தரத்தையும் வைத்திருக்கவேண்டும். ஆனால் இப்படி நிகழ்கிறதா என்று நூலகத்துறை சோதனை செய்வதாக எனக்குத் தெரியவில்லை. பத்தாண்டுகளாக ஒரே விலையை வைத்திருக்கும் அரசு, அதில் என்ன செய்து செலவைக் குறைக்கலாம் என பதிப்பாளர்கள்.

நூல்களை சமர்ப்பித்துவிட்டால், உடனே நூலகத்துறை சுறுசுறுப்பாகச் செயல்பட்டு நூல்களைத் தேர்ந்தெடுத்துவிடாது. 2007ல் வந்த புத்தகங்களை 2008 பிப்ரவரியில் தேர்வுக்குச் சமர்ப்பித்தார்கள் பதிப்பாளர்கள். இதுவரை புத்தகங்களின் தேர்வு வெளியிடப்படவில்லை! இதுவாவது பரவாயில்லை. 2006ல் வெளியான புத்தகங்களின் தேர்வு 2008ன் பாதியில்தான் வெளியானது. இதுபோக, 2004 அல்லது 2005ல் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படவே இல்லை. அடுத்த வருடம் சேர்ந்து தேர்ந்தெடுத்தார்களாம். இப்படிப்பட்ட கூத்தெல்லாம் நடக்கும்.

இந்தக் கூத்து முடிந்தால் அடுத்த கூத்து தொடங்கும். ஆயிரம் புத்தகங்களை அரசு தேர்ந்தெடுக்கும். அதை எல்லா நூலகங்களுக்கும் (தமிழகம் முழுவதும் 30 நூலகங்களுக்கு அனுப்பச் சொல்லுவார்கள்) அனுப்ப ஒரு மாத கால அவகாசம் மட்டுமே கொடுக்கப்படும். எல்லா பதிப்பாளர்களும் ஒரே நேரத்தில் அச்சுக்கூடங்களை நெருக்க, ஒரு மாதத்துக்குள் அனுப்ப முடியுமா முடியாதா என்ற நெருக்குதலில்தான் புத்தகத்தை அனுப்பி வைப்பார்கள். இந்த கால அவகாசத்தை மூன்று மாத காலம் ஆக்கவேண்டும் என்கிற கோரிக்கை நியாயமானதே. ஒரு நூலகத்திற்கு நான்கு புத்தகங்கள் (ஒவ்வொரு புத்தகமும் அதிகபட்சமாக 40 பிரதிகள்) கொண்ட ஒரு பார்சலை அனுப்ப கிட்டத்தட்ட 400 ரூபாய் செலவாகும் என்று வைத்துக்கொள்ளலாம். இப்படி 30 நூலகங்களுக்கு அனுப்பவேண்டும். இந்தச் செலவை அரசு கணக்கில் எடுத்துக்கொள்கிறதா என்பது யாருக்குமே தெரியாது. இதுபோக வண்டிச் செலவு, பேக்கிங் செலவு என பல உண்டு. இவை எல்லாமே அந்த 3.90ல் அடங்கவேண்டும்.

அடுத்த கூத்து தொடங்கும். புத்தகம் கிடைத்ததும் பணம் கிடைக்காது. நினைத்த நேரத்தில் நூலகங்கள் பணம் அனுப்பும். ஏன் அனுப்பவில்லை என்று கேட்கமுடியாது. கேட்டால் அனுப்புவோம் என்பார்கள். இப்படியாக 2007ல் பதிப்பாளர் அச்சடித்த புத்தகங்கள், 2009ல் தேர்ந்தெடுக்கப்பட்டு (இது விரைவு என்று பொருள்!) 2010ல் பணம் வந்துவிடும்.

திடீரென்று ஒரு நூலகர் பதிப்பாளரை அழைப்பார். அவர் அனுப்பியதில் சில பிரதிகள் இல்லை என்றும் உடனே அனுப்பவும் என்று சொல்லி தொலைபேசியை வைத்துவிடுவார். பதிப்பாளர் சிரமேற்கொண்டு இதை அனுப்பிவைக்கவேண்டும். அப்படி மிஸ்ஸாக சான்ஸே இல்லையே என்று பதிப்பாளர் யோசித்தால், அவர் புத்தகம் அனுப்பாத வரை பணம் வராது.

இதெல்லாம் நடைமுறை கஷ்டங்கள் என்றால், அரசு அமைக்கும் குழு எப்படி புத்தகங்களை தேர்ந்தெடுக்கிறது என்பது யாருக்குமே புரியாத புதிர். குழு புத்தகத்தைப் படித்து அதைத் தேர்வு செய்யவேண்டும் என்பது விதி. குழு உறுப்பினர்கள் இந்த விதியையாவது படித்திருப்பார்களா என்பது தெரியவில்லை. பெரும்பாலும் முன்னட்டையைப் பார்த்து தேர்ந்தெடுப்பார்கள் என்பதுதான் நடைமுறை என்கிறார்கள். அட்டைப்படத்தில் ஏதேனும் கடவுளின் படமோ, மத சம்பந்தமான படமோ இருந்துவிட்டால் தேர்ந்தெடுக்கமாட்டார்கள். இப்படிப்பட்ட அறிவுஜீவிகளின் வழியே நூலகத்திற்கான அறிவுக்கண்கள் திறக்கவேண்டும்!

நூலகம் என்பதையும் அதன் வழியே நிகழவேண்டிய அறிவுப் புரட்சியையும் பற்றிக் கொஞ்சமாவது உணர்ந்தவர்கள் இருந்தால், நூலகத்திற்கான புத்தகத் தேர்வு பற்றி சிந்திப்பார்கள். எல்லாவற்றையும் வாக்கு அரசியலாகவும், சிபாரிசு அரசியலாகவும் நினைக்கும் இந்த அரசுகள் நூலகத்துறையையும் குட்டிச்சுவராக்கி வைத்திருக்கின்றன. ஒரு பதிப்பாளர் அவரது புத்தகங்களைத் தேர்ந்தெடுக்க, பணம் கொடுக்கவேண்டி வந்ததாகச் சொன்னார். உண்மையா பொய்யா எனத் தெரியாது.

பாரதியின் எழுத்துகளைத் தேடி, அதைக் காலவரிசையாகத் தொகுப்பதையே தன் வாழ்நாள் கடமையாக நினைத்துச் செயல்படும் சீனி விசுவநாதனின் புத்தகம், காலவரிசைப்படுத்தப்பட்ட பாரதி படைப்புகள் பாகம் 6 என நினைக்கிறேன், அரசால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. அந்தக் கிழவர் பேருந்தைப் பிடித்து, அலையாய் அலைந்து, மனு கொடுத்து….

மதிமுகவைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன் ’நிமிர வைக்கும் நெல்லை’ என்ற ஒரு புத்தகத்தை வெளியிட்டார். இந்தப் புத்தகம் நூலகத்திற்குத் தேர்வு செய்யப்படவில்லை. அவர் அரசுக்கெதிராக வழக்கு தொடர்ந்தார். ஏன் தன் புத்தகம் தேர்வு செய்யப்படவில்லை என்று காரணம் கேட்டும், எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதன் விளக்கம் கேட்டும் வழக்கு தொடர்ந்தார். வழக்கு என்ன ஆனது என்பது தெரியாது. ஆனால் கே.எஸ். ராதாகிருஷ்ணனின் ‘நிமிர வைக்கும் நெல்லை’ புத்தகத்திற்கு நூலக ஆர்டர் கிடைத்தது. அப்போது அரசு சார்பில் வாய்மொழியாக ‘இப்படி ஏன் தன் புத்தகத்திற்கு ஆர்டர் கிடைக்கவில்லை என்று கேட்டுவரும் பதிப்பாளர்களின் புத்தகங்க்ளுக்கு ஆர்டர் கொடுத்து பிரச்சினையைத் தீர்த்துவிடுங்கள்’ என்று சொல்லப்பட்டதாகக் கேள்விப்பட்டேன்.

இந்தப் புண்ணியத்தில், பாரதியின் காலவரிசைப்படுத்தபட்ட புத்தகத்திற்கு லைப்ரரி ஆர்டர் கிடைத்தது! (இந்தப் பிரச்சினையெல்லாம் அதி சின்னப் பயல் பாரதி போன்ற ஒரு மண்ணும் பெறாத கவிஞனுக்குத்தான். மகாகவி (இனி இப்பட்டம் வாலிக்குத்தான், யாராவது பாரதிக்கென்று வந்தால் என்ன நடக்கும் என்றே எனக்குத் தெரியாது) வாலி, கவிப்பேரரசு வைரமுத்து, பெருங்கவி அப்துல் ரகுமான், கவிக்கோ மேத்தா, வித்தகக் கவிஞர் பா. விஜய் போன்ற மேதைகளுக்கெல்லாம் பொருந்தாது என்றறியட்டும் தமிழ்க்குலம்!)

ஒவ்வொரு ஆண்டும் தமிழக அரசு சார்பில் சிறந்த புத்தகங்களுக்கு விருது வழங்கப்படும். தமிழினியின் வெளியீடாக வந்த ‘தேவதேவன் கவிதைகள்’ புத்தகத்திற்கு விருது கிடைத்தது. அப்புத்தகம் நூலகத்துறையால் தேர்ந்தெடுக்கப்படவில்லை. தேர்வுக்குழு உறுப்பினர்கள் எந்தப் புத்தகத்திற்கு விருது கிடைத்திருக்கிறது என்றாவது பார்த்தால் நல்லது! மீண்டும் அலைச்சல், மனு. பின்னர் நூலக ஆர்டர். இப்படி இருக்கிறது நூலகத்துறையின் செயல்பாடு.

சில புத்தகங்களின் முதல் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்காது. இரண்டாம் பாகம் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும். நூலக வாசகர்களின் கொடுமையை நினைத்துப் பாருங்கள்.

பதிப்பாளர்கள் நூலக ஆர்டரை நம்பாமல் இருக்க அறிவுறுத்தி, வாசகர்களிடையே புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை அதிகமாக அருளுரை வழங்கலாம். ஆனால் நூலகத்துறைக்குப் புத்தகங்களை எடுப்பது என்பது, பதிப்பாளர்களுக்கு போடப்படும் பிச்சை அல்ல. அது அரசின் கடமை. இதில் ஜனநாயகத்தன்மை என்பது எள்ளளவும் இல்லை என்பது அதைவிடப் பெரிய மோசடி. எந்த எந்த புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றன என்கிற விவரங்கள் பதிப்பக வாரியாக பொதுவில் வெளியிடப்படவேண்டும். எந்த எந்த புத்தகங்கள் ஏன் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்கிற குறிப்பு தயாராக இருக்கவேண்டும். ஏதேனும் பதிப்பாளர் அதை அறிய விரும்பினால், அதுகுறித்து மேல் வழக்கு நடத்த விரும்பினால் அதற்கான வழி தயாராக இருக்கவேண்டும். ஒவ்வொரு பதிப்பகமும் எத்தனை புத்தகங்கள் ஆர்டர் பெறுகின்றன, அவை எத்தனை புத்தகங்களைச் சமர்ப்பித்தன என்பது பொதுவில் வைக்கப்பட்டுவிட்டாலே பாதி பிரச்சினைகள் தீர்ந்துவிடும். இதுவரை இது நிகழவில்லை. ஒரு பதிப்பாளருக்கு இந்த விவரம் வேண்டுமென்றால் தகவலறியும் உரிமைச்சட்டத்தில்தான் இதைத் தெரிந்துகொள்ளமுடியும். கவிதைப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்படுவதே இல்லை என்று லதா ராமகிருஷ்ணன் வார்த்தை இதழில் எழுதினார். அவர் சொல்லாவிட்டால் யாருக்குமே இது தெரிந்திருக்காது. அதனால் எந்தப் புத்தகங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதை பொதுவிலேயே வெளியிட அரசு ஆவன செய்யவேண்டும். அதுமட்டுமின்றி, தேர்ந்தெடுக்கப்படும் புத்தகங்களுக்கான தொகை, அப்புத்தகத்தின் தரத்தின் அடிப்படையில் அமையவேண்டும். என்ன தாள் பயன்படுத்தப்பட்டிருக்கிறது, என்ன அட்டை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதன் அடிப்படையில் புத்தகத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்படவேண்டும். அதேபோல் ஒட்டுமொத்த புத்தகங்களையும் பதிப்பாளர்கள் தங்கள் மாவட்ட தலைமை நூலகத்தில் சமர்ப்பிக்க வழி செய்யப்படவேண்டும். அங்கிருந்து மற்ற நூலகங்களுக்குப் புத்தகங்களை அனுப்புவதை அரசு எடுத்துக்கொள்ளவேண்டும். அரசு என்பது பணம் கொடுத்துவிட்டு சும்மா இருந்துவிடும் அமைப்பு இல்லை என்பதை உணரவேண்டும்.

ஒரு வருடத்திற்கான புத்தகங்களைத் தேர்வுக்குச் சமர்ப்பித்ததும், அடுத்த மூன்று மாதங்களுக்குள் தேர்வு செய்யப்பட்ட புத்தகங்கள் அறிவிக்கப்படவேண்டும். ஒரு வருடத்தில் தோராயமாக 10,000 புத்தகங்கள் சமர்ப்பிக்கப்படலாம். உதவிக்குழு ஒன்று அமைத்து இதில் 3000 புத்தகங்களைத் தேர்ந்தெடுக்கச் சொல்லி, அவற்றில் இருந்து தேர்வுக்குத் தேவையான புத்தகங்களை மேல்மட்டக்குழு தேர்ந்தெடுக்கலாம். (இப்போதும் இப்படித்தான் இருக்கிறது, ஆனால் நடப்பதில்லை!) தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள் நூலகங்களுக்கு அனுப்பப்பட்ட நாளிலிருந்து மூன்று மாதங்களுக்குள் பதிப்பாளருக்குப் பணம் அனுப்ப உத்தரவிடவேண்டும். தவறும் பட்சத்தில் அதற்கான அபராதத் தொகையையும் செலுத்தச் சொல்லி அரசு உத்தரவிடவேண்டும்.

எப்போது ஆர்டர் வரும், எப்போது பணம் வரும் என்று பதிப்பாளர்களைப் பிச்சைக்காரர்களைப் போல் அரசு வைத்திருப்பது மோசமானது. நூலகமும், புத்தகமும் நாட்டிற்கு எவ்வளவு தேவையானது என்பதை உணர்ந்த அரசு இப்படி மெத்தனமாக நடந்துகொள்ளாது.

நம்மை ஆளும் கழக அரசுகளுக்கு தற்போது வரும் தமிழ்ப்புத்தகங்கள் பற்றிய அறிவு கொஞ்சமாவது இருக்குமா என்பது கேள்விக்குறியே. அவர்கள் இன்னும் அண்ணாவிடமிருந்தும், கல்கியிடமிருந்தும், மு.வரதராசனாரிடமிருந்தும், இவை நீங்கலாக நெடுநல்வாடை, பதினென்கீழ்கணக்கு நூல்களின் பிடியில் இருந்து வெளிவந்தபாடில்லை. தனியார் நூலகம் தொடங்க விரும்பும் ஒருவருக்கு அரசு பரிந்துரைத்த புத்தகங்களின் பட்டியல் பார்த்தேன். அவை புத்தகங்களின் பட்டியல் அல்ல. அரசியலின் பட்டியல். எல்லாம் சங்ககால நூல்கள், கண்ணதாசனின் நூல்கள், கல்கியின் நூல்கள், அண்ணாவின் நூல்கள், நெஞ்சுக்கு நீதியின்றி சில நூல்கள். 1970ஐத் தாண்டவில்லையே என நினைத்தால், சரியாகத் தாண்டியிருக்கிறார்கள். வைரமுத்துவின் நூல்கள், கொடுமையிலும் கொடுமையாக பா.விஜய்யின் நூல்கள். எங்கே போனார்கள் மற்றக் கவிஞர்கள்? எங்கே போயின மற்ற நூல்கள்? பார்த்திபனின் கிறுக்கல்கள் நூலகத்திற்கான சிபாரிசு பட்டியலில் நுழைந்தது எப்படி? சிங்கிச் சத்தமே கவிதை என்றால் மேலே உள்ள நூல்களெல்லாம் இருக்கவேண்டியதுதான். சுந்தர ராமசாமி என்றொரு எழுத்தாளர் இருந்தார் என்றும் வெங்கட் சாமிந்தான் என்றொரு விமர்சகர் இருக்கிறார் என்றும் யாரேனும், செவிடன் காதிலும் கேட்க வல்ல சங்காய் எடுத்து ஊதினால் நல்லது. ‘ஓ போடலாம்!’

Share

‘Power Cut’

இன்று தமிழ்நாடெங்கும் பல இடங்களில் அறிவிப்பே இல்லாமல், ஒரு நேர வரைமுறை இல்லாமல் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. (இதுபோல பலதடவை நடந்துகொண்டுதான் இருக்கிறது என்றாலும் இன்று ரொம்ப ஓவர்.)

ராயப்பேட்டை – 3 மணி நேரம்
ராமாபுரம் – 3 மணி நேரம்
தாம்பரம் – 2 மணி நேரம்
திருநெல்வேலி டவுண் – 4 மணி நேரம்
திருச்சி (கேகே நகர் பகுதிகள்) – 2 மணி நேரம்
திருச்சி (முத்தரசநல்லூர் உள்ளிட்ட கிராமப் பகுதிகள்) – 6 மணி நேரம்
மதுரை – 3 மணி நேரம்
தே. கல்லுப்பட்டி – 8 மணி நேரம்
நாகர்கோவில் – 3 மணி நேரம்

இன்னும் கோயமுத்தூர், தாராபுரம், ஈரோடெல்லாம் கேட்டால் தெரியும்.

நமது முதல்வருக்கு, ஜெயலலிதாவிற்குப் பதில் சொல்லவும், தோழர்களுடன் மல்லுக்கு நிற்கவும், யாரேனும் ஏதேனும் படங்கள் எடுத்து அதை வெளியிடும் விழாவிற்கு அழைத்தால் உடனே செல்லவும் நேரம் இருக்கிறது. கலைஞர் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை ஆர்வமுடன் கேட்டறிந்து அதில் ஆலோசனை சொல்ல ஆசையும், தெம்பும் இருக்கிறது. ஆனால் ஆற்காடு வீராஸ்வாமி என்றொரு அமைச்சர் எதற்காக அமைச்சராக இருக்கிறார் என்பதோ, தமிழ்நாட்டில் மின்வெட்டு எவ்வளவு பெரிய தொல்லை தரும் விஷயமாக, எரிச்சல் தரும் விஷயமாக மாறி, பொதுமக்களை அவதிப்படுத்திக்கொண்டிருக்கிறது என்பதை அறிய மட்டும் நேரமில்லை. ஏதேனும் மேம்பாலம் திறந்தால் மின்சாரத்தைத் திருட, மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் வீட்டுக்கு மின்சாரம் இல்லை. ராமன் குடிகாரனா என்று ஆராய்ச்சி செய்ய, மண்டையை உடைத்துக்கொண்டு யோசித்துக் காரணங்கள் கண்டுபிடிக்க திறமை இருக்கிறது. ஆனால் மின்வெட்டைத் தவிர்த்து மக்களை எப்படி காப்பாற்றுவது என்பது குறித்து ஆராய நேரமில்லை. ‘அவாள்’ பற்றிக் கவிதை எழுத நேரமிருக்கிறது. ஆனால் ஆதாரத் தேவையான மின்வெட்டைத் தவிர்ப்பது எப்படி என்று யோசிக்க நேரமில்லை.

இப்படிப்பட்ட முதல்வர் நம் பூர்வஜென்மப் பயன். வேறு வழியே இல்லை, நாமும் பவர் கட் செய்துவிடவேண்டியதுதான்.

Share

துக்ளக்கில் வெளியான கருத்துப்படம் (கார்டூன்)

08.08.2007 இதழில் வெளியான இந்த கார்டூனைப் பார்த்ததும் என்னால் சிரிப்பை அடக்கமுடியவில்லை. கருத்துப்படம் துக்ளக் சத்யாவினுடையது.

Thanks:Thuglak

Share

அறிவிப்பு: "The 13th Presidential Election – Issues in the Selection and Election"

INDIAN LIBERAL GROUP
(an Organization founded by MR Masani Mumbai)
(Chennai Chapter)
12/3, Viswams, Thiruvengadam Street Extension,
Chennai – 600 004.
(Tele: 2493 7046)

cordially invites you and your friends to a meeting
on

“The 13th Presidential Election
– Issues in the Selection and Election”

to be addressed by

Sri Arun Shourie MP
(Eminent Journalist & Former Minister, GOI )

Cho Ramaswamy
(Editor Thuglak)

ERA Chezhian
(Former MP)

Presides
At 6.15 p.m., Friday, 13th July 2007

Venue: Dhakshinamurthy Auditorium
P.S. High School, R.K. Mutt Road
Mylapore Chennai – 600 004.

Share

கருணாநிதியும் தமிழ்க்கையெழுத்தும்

கருணாநிதியின் பேட்டி:

Thanks:Dinamalar.com

காசோலையில் கருணாநிதியின் கையெழுத்து:

Cheque to Bapasi from Mu.Ka.

ஒருவேளை தமிழ்க்கையெழுத்து என்பதும் தமிழுணர்வு என்பதும் அரசாணை வரைக்கும் போதுமோ என்னவோ.

Share