Archive for அரசியல்

எரடனே சலா – கன்னடம் – குசும்பு

எரடனே சலா என்றொரு கன்னடப்படம். இன்னும் பார்க்கவில்லை. தொடக்கத்தில் புகை பிடிப்பது தீங்கானது என்று போடுவார்களே, அப்படியான ஸ்லைடில் இடம்பெற்ற படங்கள் ஆர்வத்தை வரவைத்தன. எனக்குக் கன்னடம் தெரியாது என்பதால் நண்பர் ஒருவரிடம் கேட்டேன். அவர் அவருக்குத் தெரிந்த கன்னடம் வரையில் படித்துச் சொன்னவை:

நித்யானந்தா உள்ள படம் சொல்வது: புகை மட்டுமல்ல, பெண் தொடர்பும் சில சமயங்களில் தீங்கானது என்னும் அர்த்தத்தில்.

நேரு உள்ள படம் சொல்வது: புகை பிடிப்பது உடலுக்கும் நாட்டுக்கும் தீங்கானது, சாமானியர்களாக இருந்தாலும் பெரிய மனிதராக இருந்தாலும் என்னும் பொருளில்.

தில்லுதான். இதை எப்படி சென்சாரில் அனுமதித்தார்கள்?

இதில் உள்ள சுவாரஸ்யம், நித்யானந்தாவின் முகத்தை மறைத்ததுதான்!

Share

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை

வலம் ஜனவரி 2018 இதழில் வெளியாகிய கட்டுரை: ‘தொண்டன்’ – முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை.

இந்தக் கட்டுரையில் அரவிந்தன் நீலகண்டன், தொண்டன் பத்திரிகையை சந்திரஹாஸ வாளுடன் ஒப்பிடுகிறார். பொதுவாகவே அரவிந்தனின் இது போன்ற ஒப்பீடுகள் மிக ஆழமான ஒன்றாக இருக்கும். வரலாற்றில், புராணத்தில், இந்திய/ஹிந்து மரபில் இருக்கும் ஒன்றுடன் வரலாற்றைப் பிணைப்பது அவரது பாணி. இதன் மூலம் அவர் வெளிக்கொண்டு வர நினைக்கும் வரலாற்றுடனான மரபில் உரையாடலை அவர் தொடர்ந்து தரப்போகும் உதாரணங்களில் நிலைநிறுத்துவார். எனவே இது வெறும் ஒப்பிடுதல் என்கிற வாள் சுழற்றலைத் தாண்டிச் சென்றுவிடும். இந்தக் கட்டுரையும் இப்படியே.

தொண்டன் இதழ் முதல் ஹிந்துத்துவப் பத்திரிகை என்பதுவே அரவிந்தன் சொல்லித்தான் நான் அறிந்துகொண்டேன். தொண்டனின் தேவையையும் அருமையையும் திருவிக போன்றவர்களின் கூற்று மூலம் முன்வைப்பதும் நல்ல சாதுர்யமான பாணி. தமிழர் மதம் வேறு ஹிந்து மதம் வேறு என்னும் சமீபக் கூச்சல்களுக்கெல்லாம் முன்பே பதில் சொல்லி வைத்தது போல் அமைகின்றன இக்குறிப்புகள்.

ஹிந்து மதமும் தமிழும் இப்போதுதான் முற்போக்காளர்களாலும் திராவிட அரசியல்காரர்களும் பிரிக்கப்படுகின்றன. சமீப பத்தாண்டுகளுக்கு முன்னர் கூட இரண்டும் ஒன்றாகக் கலந்தே கிடந்தன. கே ஆறுமுக நாவலர் (யாழ்ப்பாண நாவலர் அல்ல) நடத்தி இருக்கும் இப்பத்திரிகை இதை உரக்கச் சொல்லும் ஆவணமாகத் திகழ்கிறது.

நாம் இந்துக்கள் அல்ல, திராவிடர்கள் என்பவர்களுக்கு தொண்டன் பத்திரிகையில் வந்திருக்கும் ஒரு கட்டுரையை ஹிந்துத்துவத்தின் சாசனம் என்றே அரவிந்தன் நீலகண்டன் குறிக்கிறார். மிக முக்கியமான கட்டுரை அது.

உண்மையில் இன்று வலம் பத்திரிகை செய்ய நினைக்கும் ஒன்றை பல மடங்கு வீரியமாக அன்றே செய்திருக்கிறது தொண்டன் பத்திரிகை. இதனால்தான் வலம் இதழ் மிகவும் பேலன்ஸிங்காக இருப்பதாகப் பலர் சொல்கிறார்கள் போலும். திராவிடர்களே அன்றி ஹிந்துக்கள் அல்ல என்பவர்களை தொண்டன் இதழ் இப்படிச் சொல்கிறது – “இனவேற்றுமையைவிட இந்து மத அழிப்பே அவர்கள் ஆர்வம்”. ஆலயப் பிரவேச சட்டத்துக்கு இந்த இதழ் துணை நின்றிருக்கிறது. தலையங்கத்தில் ஆறுமுகநாவலர், ”ஆலயப் பிரவேசத்தைத் தடுக்க முற்படுவோரின் செயல், கொந்தளிப்போடு வரும் கடலை தன் கைத்துடப்பத்தால் பெருக்கித் தள்ளத் துணிந்த கிழவியில் செயலை ஒத்திருப்பதாக” எழுதுகிறார்.

அரவிந்தன் நீலகண்டனின் முக்கியமான கட்டுரை.

எனவே… இதுபோன்ற நல்ல கட்டுரைகளை வாசிக்க வலம் இதழுக்கு சந்தா செலுத்துங்கள். நல்ல இதழ்களை ஆதரியுங்கள்.

Share

சரவெடி

ஒரு பண்டிகையைக் கூட நிம்மதியாகக் கொண்டாட விடக்கூடாது என்பதில் குறியாக இருக்கிறார்கள் ஒரு பிரிவினர். சித்திரையில் புத்தாண்டு கொண்டாடினால் அதில் ஒரு குழப்பத்தை உருவாக்குவது. புத்தாண்டு சித்திரையிலா தையிலா என்று சாதாரண மனிதன் குழம்பும் அளவுக்கு எதையாவது சொல்வது. ஒரு பிரிவினர் பூணூல் போட்டுக்கொண்டால் பன்றிகளுக்குப் பூணூல் அணிவிக்கிறேன் என்று அதற்கும் கீழான கூட்டம் கிளம்புவது. தீபாவளி கொண்டாடினால் வெடிக்காதே என்று பிரச்சினை பண்ணுவது. இப்படி ஒரு கூட்டம்.
 
தீபாவளியில் வெடி வெடித்தால் சுற்றுப் புறச் சூழல் பாதிக்கப்படுகிறது என்று அறிவியல் காரணங்களை முன்வைக்கிறார்கள். இப்படி அறிவியல் காரணங்களை முன்வைப்பவரெல்லாம் எப்படியோ திக கும்பலுக்கும் கம்யூனிஸக் கும்பலுக்கும் நண்பர்களாக தற்செயலாக அமைந்து தொலைக்கிறார்கள். இப்படித்தான் ஊரெல்லாம் சுற்றுப்புறச் சூழல் குறித்து விழிப்புணர்வு பேசியதாகப் போற்றப்பட்ட ஒருவரின் வீடியோவைப் பார்த்தபோது அவர் பிராமணர்களைத் திட்டிகொண்டிருந்தார். இவரைப் போன்றவர்களுக்கு ஹிந்து மதப் பண்டிகைகளில் மட்டுமே இந்த சுற்றுப்புறச் சூழலெல்லாம் நினைவுக்கு வரும். பண்டிகைகளில் இருக்கும் முக்கிய அம்சத்தை உடைப்பதன்மூலம் பண்டிகையையே இல்லாமல் ஆக்கி ஹிந்து மதத்துக்குப் பின்னடைவை ஏற்படுத்த முயல்வதுதான் இவர்களின் முக்கிய நோக்கம். இதற்குத் துணையாக அறிவியல், சுற்றுப்புறச் சூழல், முற்போக்கு என எல்லாவற்றையும் சமயத்துக்குத் தகுந்தாற்போல் கலந்துகொள்வார்கள்.
 
கிறிஸ்துமஸ் நேரத்தில் ஒரு மாதம் முழுக்க ஸ்டார் எரிய விட்டால் அதிகம் மின்சாரம் செலவாகுமே என்று மறந்தும் பேசிவிடமாட்டார்கள். (கிறித்துவர்கள் வருடம் முழுக்க ஸ்டார் எரியவிட்டாலும் எனக்குப் பிரச்சினை இல்லை.) இஸ்லாமியர்களைப் பற்றி யோசிக்கவே அஞ்சி நடுங்குவார்கள். கிடைத்து ஹிந்து இளிச்சவாயக் கூட்டம்தான்.
 
இதில் உள்ள நிஜமான பிரச்சினை, ஹிந்துக்களும் இதற்குக் காவடி தூக்குவதுதான். சில ஹிந்துக்கள் உண்மையில் நல்ல இதயத்தோடு, இதன் பின்னே இருக்கும் வலையையும் உண்மையையும் புரிந்துகொள்ளாமல், சுற்றுப் புறச் சூழல் குறித்து நிஜமான அக்கறையில் சொல்கிறார்கள் என்பது உண்மைதான். ஆனால் இந்த பிரச்சினை எல்லாம் ஏன் ஹிந்துக்களுக்கு மட்டுமே வருகிறது என்பதையாவது அவர்கள் யோசிக்கவேண்டும்.
 
பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்.
 
பட்டாசு வெடிப்பதால் பறவைகள், நாய்கள் அஞ்சும் என்பது இன்னொரு வாதம். ஒரு நாளில் ஒன்றும் குடிமூழ்கிப் போய்விடாது என்பது குழந்தைக்குக் கூடத் தெரியும். இவர்களது கருணையை நினைத்தால் நமக்கே தொண்டை விக்கிக்கொள்ளும். தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. பிஸ்கட் போட்டிருந்தாலும் ஹிந்துக்களின் பட்டாசால் நாய்க்குடியே அழிந்துவிடும் என்பதை ஏற்றுக்கொள்ளமுடியாது என்பது வேறு விஷயம்.
 
மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள், கண்ணில் படும் மிருகங்களையெல்லாம் எண்ணெய்யில் வதக்கி உண்டால் அவையெல்லாம் இல்லாமல் போய்விடுமே என்று யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது ஹிந்துப் பண்டிகை என்பதால் மட்டுமே.
 
நூறு கோடிப் பேரும் என்னவோ வெடி வெடிக்காமல் உறங்கமாட்டார்கள் என்கிற அளவுக்கு இங்கு பிரசாரம் நடக்கிறது. உண்மையில் 30 வயதுக்கு மேற்பட்டவர்கள் வெடி வெடிப்பது குறைவே. பத்து வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் வெடி வெடிப்பதுவும் குறைவே. இதில் பெண்கள் வெடிப்பதும் குறைவு. இதில் சராசரியாக ஆயிரம் ரூபாய்க்கு வெடி வாங்குபவர்களே மிக அதிகம் இருப்பார்கள். ஆயிரம் ரூபாய்க்கு கொசு வெடிதான் இன்றைக்கு வெடிக்கமுடியும் (டெங்குவை ஒழிப்போம்!). இந்த நிலையில் இந்த வெடியால் சுற்றுப் புறச் சூழல் ஒழிந்துவிடும் என்பது வீம்புப் பிரசாரம்.
 
வெடி வெடிக்கும்போது சிறுநீர் கழிப்பேன் என்ற அச்சுறுத்தல் எல்லாம் சிறுநீர் அளவுக்கே மதிக்கப்படவேண்டியது. அந்நேரத்தில் வெடி வெடிக்காமல் அல்லது ராக்கெட் வைக்காமல் இருப்பதும் நம் பெருந்தன்மைதான். 🙂
 
இந்த வீம்புப் பிரசாரங்களை முறியடிப்பதற்காகவாவது எப்போதும் வெடி வாங்கும் அளவுக்கு 200 ரூபாய்க்கு மேலாக வெடி வாங்கி ஆசை தீர வெடிக்கவும். ஒவ்வொரு வெடியிலும் ஹிந்து மதத்தைச் சூழ்ந்துள்ள இந்த இரட்டைவேடக்காரர்களின் மாய்மாலங்கள் பொசுங்குக என்று நினைத்துக்கொண்டு வெடிக்கவும். சுற்றியுள்ள, வெடி வாங்க முடியாத ஏழைச் சிறுவர்களை உடன் சேர்த்துக்கொண்டு அவர்களைக் கொண்டு வெடிக்கச் செய்து தீபாவளியை வெடியுடன் கொண்டாடவும். வெடி வெடிக்கும்போது தேவையான பாதுகாப்பு அம்சங்களை மறக்காமல் நினைவில் வைத்துக்கொண்டு கடைப்பிடித்து, பாதுகாப்பான தீபாவளியை, ஹிந்துக்களின் வண்ணமயமான பண்டிகையை வெடியுடன் கொண்டாடவும். தீபாவளி வெடி வாழ்த்துகள்.
 
பின்குறிப்பு: ஒவ்வொரு வருஷமும் இதைச் சொல்ல வெச்சதுதான் இரட்டைநாக்குக்காரர்களின் சாதனை.
Share

கமலின் தொடர் – இரண்டாவது வாரம்

கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.கமற்றொடரின் இரண்டாவாது வாரம், கமல் தொடராக வந்திருக்கிறது. எந்த எடிட்டரோ உயிரைக் கொடுத்து உழைத்திருக்கிறார். மொழியில் ருத்ர தாண்டவம். அதுவும் புரியவும் செய்கிறது என்பது இன்னும் முக்கியம்.

மிக நீண்ட கட்டுரை. ஆனந்த விகடனில் இத்தனை நீண்ட கட்டுரைகள் வருவது மகிழ்ச்சி.

ரஜினிக்கு பதில் சொல்வதாக ஆரம்பிக்கிறார் கமல். சாரு ஹாஸன் தன் பேட்டியிலேயே கமல் மற்றும் ரஜினியின் நட்பைப் பற்றிச் சொல்லி இருந்தார். மகிழ்வான விஷயம் அது. அதை கமலும் சொல்லி இருக்கிறார். ஆனால் கமல் ரஜினியின் கேள்விக்குச் சொல்லி இருக்கும் பதில், வழக்கான ஜல்லி.

இந்த வழக்கமான ஜல்லிகளோடு பல ஜல்லிகள் உள்ளன. முக்கியமாக “இந்து மதம் இந்த நாட்டைக் கெடுக்கும் அளவுக்கு மற்ற மதங்கள் கெடுப்பதில்லை.” கொஞ்சமாவது மனசாட்சி இருந்தால் இப்படி பேசத் தோன்றாது..

அடுத்து அண்ணாயிசம் பற்றி. அண்ணாயிசத்தைக் கிண்டல் செய்தவர்களில் சோவும் ஒருவர் என்கிறார் கமல். சொல்லிவிட்டு அண்ணாயிசத்தில் இருந்து ஒரு பாராவைத் தருகிறார். எம் எல் ஏ தன் பொறுப்புகளில் இருந்து வழுவும்போது அவரைத் திரும்ப அழைத்துக்கொள்ளும் வசதியைப் பற்றிய அண்ணாத்துரையின் ஜல்லி. அந்த ஜல்லியை விதந்தோதுகிறார் கமல். கொடுமை. கருணாநிதியும் ஜெயலலிதாவும் இந்திய அளவில் இவர்களைப் போன்ற அரசியல்வாதிகளும் இந்த சட்டத்தின் மூலம் என்னவெல்லாம் ஆட்டம் ஆடி இருப்பார்கள் என்று யோசித்தாலே போதும், இந்த ஜல்லியின் இன்னொரு முகத்தைப் புரிந்துகொள்ள. ஆனால் கமல் மிக விவரமாக (பேசுவதாக எண்ணிக்கொண்டு) அண்ணாயிசத்தை அடிப்படையாக வைத்து அதிமுகவினர் ஆட்சியை விட்டு வெளியேற வேண்டும் என்கிறார். ஆம், இப்படியாப்பட்ட பனைமரத்தில் அப்படியாப்பட்ட பசுவைக் கட்டிவிட்டார். சோ பற்றி ஒரு வரியில் சொல்லிவிட்டு, சோ சொன்னது தவறு என்கிற எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் கமல். இந்த விஷயத்தில் சோ தவறாகப் போக வாய்ப்பே இல்லை.

பாஜகவின் கையாள் என்பதற்கு கமல் மறுப்பைச் சொல்லி இருக்கிறார். நாத்திகம் பேசுவதால் பத்து பைசா லாபம் உண்டா என்று கேட்கிறார் கமல். உலகில் அனைவருக்கும் தெரியும், இதில்தான் லாபம் என்று. கமலுக்கு மட்டும் தெரியவில்லை போலும். ஹிந்து மத எதிர்ப்பு, நாத்திகம், கம்யூனிஸ ஆதரவு, ஈவெரா ஆதரவு – இவை எல்லாம் ஒன்றாகப் போட்டுச் சமைத்த சாப்பாட்டுக்குத்தான் இன்று கிராக்கி. கமல் வசதியான பாதையிலேயே போய்க்கொண்டு இருக்கிறார். இந்த வசதிதான் இந்து மதத்தைப் போல் மற்ற மதங்கள் இந்தியாவைக் கெடுப்பதில்லை என்று சொல்ல வைக்கிறது. ஆனால் வெளியே மட்டும் இதனால் லாபமில்லை என்று சொல்லிக்கொள்கிறார் கமல். இந்தப் பயணம் எத்தனை தூரம் போகிறதென்று பார்ப்போம்.

Share

சாரு ஹாஸன்: கமல் ஹாசனின் அனுகூலச் சத்ரு

சாருஹாசனின் ‘கேள்விக்கு என்ன பதில்’ பேட்டியைப் பார்த்தேன். அனுகூலச் சத்ரு என்று கமல் ரசிகைகள் அலறியதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. 🙂

சாருஹாஸன் ஃபேஸ்புக்கில் எழுத ஆரம்பித்ததும் முதல் சில இடுகைகளைப் பார்த்து, இவர் கொஞ்சம் நல்லா எழுதுறாரே என்று மதி மயங்கி அவரைப் பின்தொடர்ந்தேன். பெரிய தவறுதான், ஒன்றிரண்டு வருடங்களுக்கு முன்பு என்பதால் அப்போது வயது இரண்டு எனக்குக் குறைவு என்பதால் நேர்ந்துவிட்ட பிழை என யூகிக்கிறேன். போகப் போகத்தான் புரிந்தது, கமல் எழுதும் பத்து வார்த்தைகளில் பத்து புரியாது என்றால், சாருஹாசன் எழுதும் பத்து வார்த்தைகளில் பதினொன்று புரியாதென்பது. அப்படியே ஒரு கும்பிடு போட்டுவிட்டு அவரைப் பின்தொடர்வதை நிறுத்தினேன். பின்னர் ஒரு வார இதழில் (குங்குமமா குமுதமா?!) சாரு ஹாஸன் தொடர் எழுதினார். கொஞ்சம் மிரண்டு போய் சில வாரங்கள் படித்தேன். எடிட்டர்களின் கைவண்ணத்தில் அப்பத்திகள் மிக அழகாகவே வெளிவந்தன. ஹாசன்களின்தமிழ்த்தனம் அதில் இல்லை. சட்டெனப் புரிந்தது.

இந்தப் பின்னணியில் சாரு ஹாஸன் பேட்டி அப்படி இருக்குமோ இப்படி இருக்குமோ என்ற அச்சத்தில் பார்த்தேன், மிக எளிமையாக தன் மனதுக்குப் பட்டதை மிக நேரடியாகப் பேசினார். சில அதிர்ச்சி தந்தார். மோடியைப் பற்றி அவர் சொன்னவை, நான் கொஞ்சமும் எதிர்பாராதவை. திராவிடக் கட்சிகளுக்கு அவர் தந்த அறை, மோடியைப் பற்றி அவர் சொன்னதுக்கும் மேலே! பிராமணர் என்பதால் கமல் முதல்வராக முடியாது என்றதும், கமலும் ரஜினியும் சேர்ந்தாலே 10% வாக்குதான் கிடைக்கும் என்றதும் இன்னொரு அதிர்ச்சி. ரஜினி தனியாக வந்தால் முதல்வர் ஆகிவிடுவார், கமலுடன் சேர்ந்தால் 10% வாக்கு மட்டுமே மொத்தமாகக் கிடைக்கும் என்று அவர் சொல்வதாக எனக்குத் தோதாகப் புரிந்துகொண்டேன். 🙂 விஜய்காந்த் அதிமுகவில் சேர்ந்து அதிமுகவைக் கைப்பற்றவேண்டும் என்றதெல்லாம் அரசியல் திரைப்பட வகை.

ரஜினி எதிர் கமல் என்ற கேள்விக்கு, ரஜினியை வணங்குகிறார்கள் மக்கள் என்றார். மிகத் தெளிவாக இரண்டு மூன்று முறை சொன்னார். இதற்கு யாரும் எதிர்பார்க்காத அர்த்தம் ஒன்றை பாண்டே உருவாக்கி, “கமல் அரசியலுக்கு வரணும்னு மக்கள் நினைக்கிறாங்கன்னு நீங்க சொல்றதா புரிஞ்சிக்கலாமா?” என்று கேட்டார். இந்த அர்த்தம் எப்படி பாண்டேவுக்கு வந்தது என்று எனக்கு இன்னும் புரியவில்லை.

கமலா ரஜினியா என்ற கேள்விக்கு கமலின் அண்ணனால் கூட உறுதியாக கமல் என்று சொல்லமுடியவில்லை. இத்தனைக்கும் ஒரே கொள்கை, ஒரே நோக்கம். அப்படியானால் கமலுக்குக் கிடைக்கப்போகும் ஓட்டுகளை எண்ணிக்கொள்ளலாம். 🙂

ரஜினிக்கான ஆதரவு என்பது, ‘திரைப்படம் பார்க்கும் முப்பது சதவீதப் பெண்கள் கமலை விரும்புவதால் அதில் எரிச்சல் படும் 70% ஆண்கள் தந்த ஆதரவு’ என்பது கொஞ்சம் புதிய கருத்துதான் என்றாலும், என்னமோ ரஜினியை நேரடியாக யாருக்கும் பிடிக்காது என்பதாகவும், கமலை விரும்பும் பெண்களை வெறுக்கும் ஆண்களுக்கு மட்டுமே பிடிக்கும் என்ற எண்ணத்தைத் தருவதாகவும் இருந்தது. இதெல்லாம் கமல் இளைஞனாக மேலே எழுந்த காலத்தில் கொஞ்சூண்டுகொஞ்சம் உண்மையாக இருந்திருக்கலாம். கமல் பெரிய நடிகர் என்ற பெயர் பெற்ற காலத்தில் அவரைப் பிடிக்காத, அவர் திரைப்படத்தைக் கண்டாலே அலறி ஓடிய பெண்களே அதிகம். அருகிருந்து கண்ட உண்மை இது. #வெரிஃபைட். 🙂

பிராமணக் குலத்தில் பிறந்ததால் கமலுக்கு வாய்ப்புக் கிடைக்காது என்று சாரு ஹாஸன் சொன்னது உண்மைதான். இதுவும் கமலின் பின்னடைவுக்கு ஒரு காரணம், ஆனால் மிகச்சிறிய காரணம் மட்டுமே. கருணாநிதி ஒருவேளை மோடியை ஆதரித்தால் சகித்துக்கொள்பவர்கள், கமல் மோடியை ஒருவேளை ஆதரித்தால் சரியாக நூலுக்குப் போய்த்தான் நிற்பார்கள். தமிழ்நாட்டின் மரபு அப்படி. அதையே சாரு ஹாஸன் சொன்னார்.

சுவாரஸ்யமான பேட்டி. கமல் அரசியலுக்கு வந்தால் வெல்வார் என்பதை அவர் குடும்பமும் நம்பவில்லை என்பது நல்ல விஷயம். அப்படியே ஆகட்டும்.

பின்குறிப்பு 1: திமுக போராளிகள் இன்னுமா சாரு ஹாஸனை விட்டு வைத்திருக்கிறார்கள்?

பின்குறிப்பு 2: முதல் வாரத்திலேயே தான் எழுத நினைத்திருக்கும் அத்தனையையும் சொல்ல முயன்று, கமல் ஆனந்த விகடனில் எழுதத் தொடங்கியிருக்கும் தொடரை தொடர்ச்சியாக வாசகர்கள் வாசித்தால், கமலுக்குக் கிடைக்கப்போகும் பத்து சதவீத வாக்குகளிலும் பத்து சதவீதம் மட்டுமே கமலுக்குக் கிடைக்கும் என்று யாராவது அவருக்கு எடுத்துச் சொல்வது நல்லது.

Share

கமல் 10

01. ஹிந்து எதிர்ப்பு அரசியல் இந்த மோடிமஸ்தான் நாட்டில் எடுபடாது. எல்லாம் அவாளின் இந்தியா. இந்த இந்தியாவை அவாள் மட்டுமே ஆளவேண்டும், கருப்புச் சட்டைக்காரன் ஆளமுடியாது. இது முன்பே தெரிந்ததுதான்.
 
02. கமலின் அரசியல் ப்ளாட்டோவின், ஷியோதகோவின்(இனிமேல்தான் இவர் பிறக்கவேண்டும்) கருத்துகளோடு ஒப்பு நோக்கத்தக்கது. நம் மக்கள் அதற்குத் தகுதியானவர்கள் அல்ல. இவர்களுக்கு ஊழல்வாதிகளே சரியானவர்களே அன்றி கமல் போன்ற தத்துவம்சார் அரசியல் அறிஞர்கள் அல்ல.
 
03. கமலின் திரைப்படங்களையே புரிந்துகொள்ளாதவர்கள் கமலின் அரசியலையா புரிந்துகொள்ளப் போகிறார்கள்? பாவம் கமல், இவர்களை நம்பி இறங்கினால்? ஆனால் கமலுக்கு இது புதிதல்ல.
 
04. இயல்பிலேயே மக்கள் ஊழல்காரர்கள்தான். இவர்களுக்குத் தலைமையாக இன்னொரு ஊழல்வாதியே வரமுடியும். எக்கேடும் கெட்டுப் போகட்டும் இத்தேசம். இந்தியா ஒருநாளும் உருப்படாது. தனித்தமிழ்த்தேசமே தீர்வு. தோற்றது தமிழ்நாட்டில்தானே என்று கேட்டு வந்தால் செருப்பால் அடிப்பேன். யோசித்துப் பார் முட்டாள்களே.
 
05. கமலுக்குக் கிடைத்திருக்கும் ஒவ்வொரு ஓட்டும் நேர்மைக்கானது. இதிலிருந்து தொடங்குவோம். அடுத்த பத்து வருடத்தில் கமலே முதல்வர். இத்தோல்வியே வித்து.
 
06. கமல் திரைப்படம் எடுக்கும்போது செய்யும் தவறை அரசியலிலும் செய்துவிட்டார். பத்து வருடங்களுக்கு முன்பே ஒரு படத்தை எடுத்துவிட்டு அப்படம் தோல்வி அடைந்தாலும் திரைக்களத்தை அடுத்த கட்டத்துக்கு அசராமல் நகர்த்துபவர் கமல். அரசியலில் நூறு வருடங்களுக்கு முன்பான அரசியலை முன்னெடுத்துவிட்டார். அரசியலை அடுத்த பல கட்டங்களுக்கு கொண்டு போய்விட்டார். இனி கமலுக்கு முன் கமலுக்குப் பின் என்றே அரசியல் பேசப்படும். வெற்றி தோல்வி எல்லாம் ஒரு பொருட்டே அல்ல
 
07. மக்களைத் தயார் படுத்துவது அரசியலில் முக்கியம். மக்களை தயார் படுத்துபவர்கள் ஒருபோதும் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதில்லை. உலக வரலாற்றில் நாம் இதைப் பார்க்கலாம். மக்கள் கமலைத் தோற்கடித்ததற்கான காரணம் புரிந்ததா?
 
08. எலக்ட்ரானிக் வோட்டிங் மெஷினில் இதுவரை இந்தியாவில் எவ்விதப் புரட்சிகரமான மாற்றமும் வந்ததில்லை. மோடியின் வெற்றி நினைவு வருகிறதா?
 
09. கருணாநிதி மக்களை சோற்றால் அடித்த பிண்டங்கள் என்றார். கமலின் தோல்வி என்ன சொல்கிறதென்றால், மக்கள் சோற்றாலும் சேற்றாலும் அடிக்கப்பட்ட பிண்டங்கள் என்பதையே. எங்கே போகிறது இத்தேசம்.
 
10. கமலின் தோல்வி கமலின் தோல்வி அல்ல. மக்களின் தோல்வி, நேர்மையின் தோல்வி. இதனால் கமலுக்கு ஒரு இழப்பும் இல்லை. இலவசத்தை எதிர்பார்த்து பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போட்டவர்களுக்கு இந்த தியாகமெல்லாம் புரியாது. டாட்.
 
நோட் பண்ணி வெச்சிக்கோங்கப்பா. கமலின் கட்சி, கமல் நிற்கும் ஒரு தொகுதியைத் தவிர அனைத்துத் தொகுதிகளிலும் டெபாசிட் இழந்து, எதிர்கால மதிமுக/தேமுதிகவாக விழிக்கும்போது, பயன்படுத்திக்கொள்ளலாம். காப்பிரைட் இல்லாத பிரதி. இலவசம். முற்றிலும் இலவசம்.
Share

சசிகலாவைப் பற்றிய மீம்ஸ்கள்

சசிகலாவைப் பற்றிய மிகத் தரக்குறைவான மீம்ஸ்களும் இடுகைகளும் வந்துகொண்டே இருக்கின்றன. அனைத்திலும் உள்ள அடிநாதம், அவர் வேலைக்காரி என்பதுதான். சசிகலாவை எதிர்க்க எத்தனையோ காரணங்கள் உள்ளன. வீட்டு வேலை செய்தவர் என்ற காரணம்தான் சிலருக்கு முக்கியத்துவம் பெறுகிறது. வீட்டு வேலை செய்வது இழிசெயல் அல்ல. வேலைக்காரி என்ற சொல்லில்கூட ஒரு இழிதொனி உள்ளது. சசிகலா எவ்வித ஊழலும் செய்யாதவராக இருந்து அவர் முதல்வராகும் வாய்ப்பும் வந்திருந்தால், வீட்டு வேலை செய்தவர் முதல்வராக முடியும் என்பது பெருமைக்குரியதே. ஒவ்வொருமுறையும் அவரை வேலைக்காரி என்று இழித்துரைப்பதன்மூலம் தங்கள் ஆதிக்கத் திமிரையே ஒவ்வொருவரும் பதிவு செய்கிறார்கள். ஒருவகையில் எல்லாருமே யாருக்கோ வேலைக்காரர்கள்தான். நடிகர் நாடாள்வது, வீட்டு வேலை செய்பவர் நாடாள்வது போன்ற எல்லா விவாதங்களையும் ஒற்றைப் புள்ளியில் குறுக்கி இகழ்வதால் நாம் நம்மை வெளிப்படுத்திக்கொள்கிறோம் என்பது மட்டும்தான் உண்மை.
 
அதேபோல் சசிகலா ஜெயலலிதாவைத் திட்டமிட்டுக் கொன்றுவிட்டார் என்பது. இதை நான் சிறிதளவு கூட நம்பவில்லை. ஏன் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை, ஏன் வீடியோ இல்லை என்பதெல்லாம் ஏற்புடைய கேள்விகள்தான். ஆனால் அதன் பின்னணியில் இருப்பது நிச்சயம் கொலை எண்ணம் அல்ல என்றே நம்புகிறேன். சசிகலாவின் ஆனந்தவிகடன் பேட்டி இதைத் தெளிவாக்கி இருக்கிறது. இதே காரணங்களையே நானும் நினைத்தேன். தன்புகைப்படம் எப்படி வரவேண்டும் என்பதில் ஜெயலலிதா மிகக் கறாராக இருந்தவர். தன்னை இந்நிலையில் யாரும் சந்திக்கக்கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஆளுநர் கூடவா என்ற கேள்வியெல்லாம் ஜெயலலிதாவின் முன் எடுபடவே எடுபடாது. பிரதமரே அழைத்த போதும் தொலைபேசியில் அவர் பேச மறுத்த ஒரு சம்பவம் முன்பு நடந்த நினைவு. கூடவே, எல்லாவற்றையும் தன் பிடிக்குள் வைத்துக்கொள்ளும் சசிகலாவின் மனோபாவமும் சேர்ந்துகொண்டிருக்கலாம். ஜெயலலிதா உயிருடன் வந்துவிட்டால் இத்தனை கேள்விகளும் ஒரே நொடியில் காணாமல் போய்விடும் என்று நம்பி இருக்கவும் வாய்ப்புகள் அதிகம். இவற்றுக்குத்தான் அதிக வாய்ப்புகள் உள்ளன.
 
இப்போதெல்லாம் சாதாரணமாக எந்த முக்கியஸ்தராவது மரணமடைந்தாலும் கூட அதில் சந்தேகங்களைக் கிளப்புவது வாட்ஸப்/ஃபேஸ்புக் ஃபேஷனாகி வருகிறது. எப்போதும் எதிலும் ஏதோ ஒரு த்ரில்லரை எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும் நாம் இதனை உடனே நம்பத் தலைப்படுகிறோம். உண்மையில் எதாவது சந்தேகங்களை நம்பும் மாதிரி யாராவது கேட்டுவிடமாட்டார்களா என்று துடிக்கிறோம். இதன் நீட்சியே இது.
 
எந்த ஒன்றையும் அதீதமாக்கி அதன் மேல் வெறுப்பு வரவைப்பதே நம் வழக்கம். வாட்ஸப்பும் ஃபேஸ்புக்கும் இதை இன்னும் தீவிரமாக்கி இருக்கிறது. எது கையில் கிடைத்தாலும் அதை உடனே லட்சம் பேருக்கு அனுப்பும் மனநோய் எல்லோரையும் ஒளிவேகத்தில் பீடித்துக்கொண்டிருக்கிறது. இன்று அனுப்பும் நீங்கள் நாளையே உங்களைப் பற்றி இப்படி ஒரு செய்தியைப் பெறலாம். அன்றும் இதே போல் சிரித்துக் கடக்க முடியாது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Share

சுப்ரமணியம் சுவாமியின் சட்ட (சசிகலா) ஆதரவு

எல்லாரும் சுப்ரமணியம் சுவாமி சட்டத்துக்காகத்தான் பேசுகிறார் என்றனர். என் நண்பர் எனக்குச் சொன்ன தகவலை வைத்து, சுவாமி வெளிப்படையாகவே சசிகலாவை ஆதரித்துவிட்டார் என்று நானாகவே தவறாகப் புரிந்துகொண்டுவிட்டேன். சில நண்பர்கள் அப்படி இல்லை என்று சுட்டிக் காட்டியதும்தான் புரிந்தது. ஆனாலும் உள்ளே ஒரு சந்தேகம். இன்னும்.
 
* ஏன் சட்டம் தன் கடமையைச் செய்ய இம்முறை சுவாமி அதிகமாக மெனக்கெடுகிறார்?
 
* சட்டம் கொஞ்சம் தாமதமாகச் செயல்படுவதால் என்ன பெரிய கேடு வந்துவிடப்போகிறது? சசிகலா முதல்வராகப் போவது தள்ளிப் போனால் நல்லதுதானே?
 
* இன்னும் ஒரு வாரத்தில் தீர்ப்பு வரப்போகிறது என்று உச்ச நீதி மன்றம் சொல்லி இருக்கும்போது, சசிகலா மீது வழக்கு தொடர்ந்தவரே ஏன் சட்டம் உடனே செயலாற்றவேண்டும் எனத் துடிக்கிறார்?
 
புரியவில்லை. சரி அமைதியாக இருக்கலாம், எப்படியும் இவ்விஷயம் வெளியே வரும் என நினைத்தேன்.
 
இன்றுவரை என்ன காரணம் என்பது புரியவில்லை என்றாலும், நிச்சயம் இதன் பின்னால் என்னவோ ஒரு மர்மம் உள்ளது. அது பாஜகவுக்கு நல்லது செய்வதாகவும் இருக்கலாம், அல்லது சுவாமிக்கு தனிப்பட்ட நலன் கிடைப்பதாகவும் இருக்கலாம். உறுதியாக இப்போது வரை தெரியவில்லை.
 
இந்தியா டுடே தொலைக்காட்சி விவாதத்தில், சசிகலா ஹிந்து பக்தி உடையவர் என்பதால் அவரை ஆதரிப்பதாக சுவாமி சொன்னதாகத் தெரிகிறது. இந்த காணொளியை நான் இன்னும் பார்க்கவில்லை. இது உண்மையென்றால், பன்னீர் செல்வமும் ஹிந்து பக்தி உடையவரே. ஏன் சசிகலாவுக்கு மட்டும் சுவாமி ஆதரவு தருகிறார் என்பது புரியவில்லை.
 
இப்போது இன்னும் ஒருபடி மேலே போய், சுவாமி ஆளுநரைச் சந்தித்திருக்கிறார். எங்கே ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவு கூடிவிடுமோ, அதற்கு முன்பாக சசிகலாவை ஆளுநர் அழைத்துவிடவேணுமே என்ற பதற்றம் சுவாமிக்கு இருப்பதாக எனக்கு மட்டும்தான் தோன்றுகிறது என்று நினைக்கிறேன். என் சந்தேக புத்தி அப்படி.
 
இவர் பாஜகவில் சேர்ந்த நாள் முதலாகவே, மோதிக்கு தலைவலியாக இருப்பார் என்பதே என் கருத்தாக இருந்தது. இன்று வரை பெரிய குடைச்சல் இல்லை. காரணம், மோடியும் பாஜகவும் இவரை எந்த அளவுக்குப் பயன்படுத்தவேண்டும் என்பதில் தெளிவாக இருப்பதுதான். சுவாமி பாஜகவைப் பயன்படுத்துவதையும் கட்டுக்குள் வைத்திருக்கிறார்கள்.
 
இதனால் சுவாமியின் ஊழலுக்கு எதிரான சாதனைகளை மறுக்கிறேன் என்று அர்த்தமல்ல. அது அசாதரணமான வெற்றி. ஊழலுக்கு எதிரான வெற்றிகளை முன்வைத்து சுவாமியை முழுமையாக நம்புகிறேன் என்பதுமல்ல. ஏனென்றால் சுவாமியின் வரலாறு அப்படி. இன்றைய நிலையில் சுவாமியின் நிலைப்பாட்டில் சந்தேகமே தொடர்கிறது.
Share