Archive for அரசியல்

ஓபிஎஸ்ஸின் தியானம் அல்லது திடீர்ப் புரட்சி

அடுத்து என்ன?

எப்படியும் இன்று ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவார். அடுத்த பொதுத் தேர்தலுக்கு நான்கரை வருடங்கள் உள்ள நிலையில், இதே வேகத்தை மக்கள் மத்தியில் நீட்டித்து வைத்திருப்பது சாத்தியமே இல்லாதது. ஓபிஎஸ் பின்னால் ஒரு எம் எல் ஏ கூட வரமாட்டார் என்பதுவே இப்போதைய நிலை. ஒருவேளை ஒரு எம் எல் ஏ கூட வரவில்லை என்றால், ஓபிஎஸ் என்ன செய்வார் என்பதைவிட எதிர்க்கட்சிகள் அவரை எப்படிப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதே முக்கியத்துவம் பெறும். ஏனென்றால் மக்கள் ஆதரவை நிரூபிக்க நான்கரை வருடங்கள் காத்திருக்கவேண்டும். நான்கரை வருடங்கள் என்பது அரசியலில் மிக நீண்ட காலம். ஜெயலலிதா மறைந்து இரண்டு மாதங்களில் என்னவெல்லாம் நடந்திருக்கிறது என்று பாருங்கள். அதுவே ஜெயலலிதா ஆண்ட ஐந்தரை ஆண்டுகளில் (ஜெயலலிதாவின் தனிப்பட்ட வழக்கு விவகாரங்கள் நீங்கலாக) இப்படி பரபரப்பாக பெரும்பாலும் எதுவும் இல்லை என்பதையும் யோசித்துப் பாருங்கள். அரசியல் உறுதித்தன்மை இல்லாதபோது சிறுநிகழ்வு கூட பெரிய உருவம் கொள்ளும். அதைத்தான் கட்சிகள் பயன்படுத்திக்கொள்ளும்.

ஒரு கட்சியின் வளர்ச்சி அக்கட்சியின் உள்ளார்ந்த வளர்ச்சியைப் பொருத்தது என்பதோடு, போட்டிக் கட்சியின் தாழ்விலும் அமையும். இன்னொரு கட்சியின் அழிவுக்கு நாங்கள் எதுவும் செய்யமாட்டோம் என்று வெளியில் பேசிக்கொண்டாலும், உள்ளே குழிப்பறி வேலைகள் நடந்தவண்ணம் இருக்கும். இதில் வெளிப்படைத்தன்மையுடன் உள்ள நேர்மையான செயல்களும், மோசமான நடவடிக்கைகளும் அடங்கும். அரசியல் இப்படித்தான்.

சசிகலா முதல்வராகப் பதவி ஏற்கும் பட்சத்தில், அவர் எப்படியும் ஆறு மாதத்துக்குள் ஒரு தொகுதியில் நின்று எம் எல் ஏவாக வென்றே ஆகவேண்டும். அத்தொகுதியில் ஓபிஎஸ் நிற்கவேண்டும். இது சசிகலாவுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தலாம். ஓபிஎஸ் மனதில் வேறு பெரிய எண்ணங்கள் இருக்குமானால், நல்ல ஒரு வேட்பாளரை நிற்கவைக்கலாம். ஒருவேளை ஓபிஎஸ் நின்று தோற்றுப் போனால், உடனடியாக அவரது அரசியல் வாழ்வு பின்னடைவு கொள்வதை இது தடுக்கலாம். வேறொரு வேட்பாளரை நிறுத்தும்போதோ அல்லது ஓபிஎஸ்ஸே நிற்கும்போதோ, திமுக தன் வேட்பாளரை நிறுத்தாமல், தன் ஆதரவை ஓபிஎஸ்ஸுக்கு அளிப்பதன்மூலம் சசிகலாவின் தோல்வியை உறுதி செய்யலாம். இதை ஸ்டாலின் செய்வது திமுகவுக்கும் ஒரு வகையில் நல்லது.

சசிகலாவின் தோல்வி அவரது முதலமைச்சர் கனவைத் தூளாக்குவதோடு, அதிமுகவின் வளர்ச்சிக்கும் பெரிய அளவில் பின்னடைவை ஏற்படுத்தும். இது ஸ்டாலினின் உடனடி வளர்ச்சிக்கு நல்லது. திமுக வேட்பாளரை ஓபிஎஸ் ஆதரிக்கட்டும் என்று கருணாநிதி பாணியில் யோசிக்காமல், தன் சிறுநலனை விட்டுக்கொடுத்து பெரிய நலனில் அக்கறை கொள்வது ஸ்டாலினுக்கு நல்லது. இதனால் ஏற்படப்போகும் இன்னொரு நன்மை, ஓபிஎஸ்ஸின் திடீர்ப் புரட்சிக்குப் பின்னால் திமுக உள்ளது என்று சொன்னவர்கள் இதைக் கையில் எடுத்துக்கொள்வார்கள். இதனால் ஓபிஎஸ்ஸுக்கு ஒரு தர்ம சங்கடம் ஏற்படும். இன்னுமொரு நன்மை, தொடர்ச்சியாக ஸ்டாலினைச் சுற்றி நிகழும் அரசியல். இவற்றையெல்லாம் மனதில் வைத்து ஸ்டாலின் முடிவெடுக்கவேண்டும்.

இதில் ஒரு பின்னடைவு ஸ்டாலினுக்கு உள்ளது. திமுக போட்டியிடாத நிலையில், ஏதேனும் ஒரு கட்சி கொஞ்சம் அதிகம் செல்வாக்குடன் இரண்டாவது இடத்துக்கு வரும். இடைத்தேர்தல்தான் என்பதாலும் அடுத்து வரும் பொதுத்தேர்தலில் திமுக எளிதாக முதலாவதாகவோ இரண்டாவதாகவோ வரும் என்பதால் திமுக அல்லாத ஒரு கட்சி இரண்டாம் இடத்துக்கு வருவது மிகத் தற்காலிகமே என்பதாலும் இந்தச் சிறிய பின்னடைவை ஸ்டாலின் பொறுத்துக்கொள்ளலாம்.

இந்த உடனடி நன்மையைக் கணக்கில் கொண்டால் மட்டுமே ஓபிஎஸ் மூலம் கொஞ்சம் அறுவடையைத் தமிழ்நாடு பெறும். இல்லையென்றால் இந்தப் புரட்சி ஒருநாள் புரட்சியாக மட்டுமே வரலாற்றில் தேங்கிப் போகும்.

சசிகலா சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்றால், இது எதுவுமே தேவை இல்லை. சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெறாவிட்டால், மேலே உள்ளதைத் தவிர வேறு வாய்ப்புகளை யோசிக்கமுடியவில்லை.

Share

ரஜினியின் அரசியல் பிரவேசம்? (2017)

ரஜினி அரசியலுக்கு வரப்போகிறார் என்றும் அதற்கு ஆலோசனை நடத்தினார் என்றும் தினமலர் செய்தி வெளியிட்டுள்ளது. ரஜினி வருவாரா மாட்டாரா என்பது தெரியவில்லை.
 
ரஜினி அரசியலுக்கு வர நினைத்தால், இதைவிட நல்ல தருணம் கிடைக்காது. 96ல் மிக எளிதாக முதல்வராகும் வாய்ப்பை வேண்டாம் என்று விட்டுவிட்டார். இப்போதுவரை அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இல்லை என்றே நான் நினைக்கிறேன். சோ மறைவுக்கு ரஜினி எழுதிய சிறந்த அஞ்சலியில், 96 சமயத்தில் அரசியலுக்கு வராததற்குக் காரணம் சோ என்ற ரீதியில் ரஜினி எழுதி இருந்தார். அதை கொஞ்சம் யோசித்ததில், அப்போது அரசியலுக்கு வரும் எண்ணம் ரஜினிக்கு இருந்திருக்கும் என்பதாகவே நான் புரிந்துகொண்டேன். அந்த எண்ணத்த்தின் மிச்சம் மீதி இருக்குமானால், இந்த சமயத்தைப் பயன்படுத்திக்கொள்வது நல்லது.
 
ஜெயலலிதாவின் மறைவு, சசிகலா மீது மக்களுக்கு இருக்கும் ஒவ்வாமை, கருணாநிதியின் அரசியல் மௌனம், ஸ்டாலினின் உத்வேகமின்மை, மற்ற கட்சிகளின் மீது மக்களுக்கு இருக்கும் அவநம்பிக்கை எனப் பல வகைகளில் இது நல்ல சமயம். ஸ்டாலினின் வளர்ச்சி உறுதியானாலும் ஸ்டாலின் எதிர் ரஜினி என்று மாறவும் நல்ல வாய்ப்புள்ளது. அதிமுகவைப் பின்னுக்குத் தள்ளுவது இந்நிலையில் ஓரளவு எளிதானதுதான். ஓபிஎஸ் நல்ல பெயர் எடுக்குமுன் ரஜினி முடிவெடுக்கவேண்டும். இது ஒன்றுதான் இப்போதைக்கு இருக்கும் ஒரே நெருக்கடி.
 
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்தால் எதிர்ப்பு மிகக் கடுமையாக இருக்கும். அந்த எதிர்ப்பின் உள்ளர்த்தம், அவருக்கு வெற்றி கிடைக்க சகல வாய்ப்புகளும் உள்ளது என்பதுதான். ஏனென்றால் அதிகம் எதிர்க்கப்பட்டவர்களே வென்றிருக்கிறார்கள். இவர்கள் ஒட்டுமொத்த அரசியலையும் ரஜினி எதிர் மற்றவர்கள் என்று மாற்றும் வல்லமை கொண்டவர்களாக இருப்பார்கள். இதன் மூலம் மிக எளிதாக வெற்றியை நோக்கிச் செல்ல முடியும்.
 
இத்தனையையும் மீறி ரஜினி அரசியலுக்கு வரமாட்டார் என்றே என் உள்ளுணர்வு சொல்கிறது. வந்தால் நிச்சயம் முதல்வராவார் என்றும் அதே உள்ளுணர்வு சொல்கிறது.
 
பின்குறிப்பு: போட்டி போடாமல் வரிசையாக என்னையும் ரஜினியையும் திட்டவும். அனைவருக்கும் திட்ட சமமான வாய்ப்பு வழங்கப்படும்.
Share

குடியரசு தினம் – 2017

தமிழ்நாட்டுப் பிரிவினையை ஏற்காத 99.99% தமிழர்களுக்கும் குடியரசு தின வாழ்த்துகள்.
 
தனித் தமிழ்நாடு என்ற உயிரிழந்த கோஷத்தை மெல்ல உயிர்கொடுக்கப் பார்க்கும் ப்ரீ பெய்ட் போராட்டக்காரர்களுக்கு மிக நன்றாகவே தெரியும், இது ஒரு நாளும் எடுபடாத கோரிக்கை என்று. தங்கள் அரசியலுக்காக மட்டுமே இதைக் கையில் எடுக்கிறார்கள். இத்தனை பிரச்சினைக்குப் பின்னும் காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாகவே உள்ளது. எந்தக் கட்சி ஆண்டாலும் இந்திய அரசு, காஷ்மிர் தன் ஒருங்கிணைந்த பகுதி என்ற நிலையில் இருந்து பின்வாங்கியதே இல்லை. இதில் தனித்தமிழ்நாடு கோரிக்கையெல்லாம் மிக லேசாக வலுப்பெற்றால்கூட இந்திய அரசு அதை எப்படிக் கையாளும் என்பதை ஒரு குழந்தை கூடப் புரிந்துகொள்ளமுடியும்.
 
இந்தியாவில் குஜராத் வேகமாக முன்னேறுகிறது என்றபோது, போட்டி போட்டுக்கொண்டு பொருளாதார சமூகப் புலிகள் எல்லாம் எப்படி தமிழ்நாடு இந்தியாவில் எப்போதுமே முன்னேறிய மாநிலமாக இருந்துவந்துள்ளது என்பதை புள்ளிவிவரத்துடன் எடுத்துக்காட்டினார்கள். அன்று இதே தமிழ்ப் பிரிவினைவாதிகள் அதனை ஏற்றுக்கொண்டு குஜராத்துக்கு எதிராகக் களமாடினார்கள். இதன் பொருள், எந்நாளும் தமிழ்நாடு இந்திய அரசால் வஞ்சிக்கப்பட்டதில்லை என்பதே. மாநிலங்களுக்க்குத் தேவையான அதிகாரங்கள் இன்னும் அதிகமாக்கப்படவேண்டும் என்ற கோரிக்கையும், அதை மையமாக வைத்து தமிழ்ப் பிரிவினைவாதிகள் தனித்தமிழ்நாடு கோருவதும் ஒன்றல்ல.
 
எத்தனையோ பேர் போராடிப் பெற்றுக்கொடுத்த சுதந்திரத்தின் நோக்கம் இந்தியத் திருநாடு ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்பதே. தனித்தமிழ்நாடு என்னும் கோஷத்துடன் கூட்டம் சேர்த்துப் பார்த்தால் 300 பேர் கூடக் கூடமாட்டார்கள் என்று தெரிந்தவர்கள்தான் மூன்று லட்சம் பேர் கூடிய கூட்டத்தை தங்கள் கூட்டமாக மாற்றப் பார்த்தார்கள். இந்த சக்திகள் முன்னெடுத்தால் தமிழக அரசியலில் குழப்பமும் கூச்சலும் அமைதியின்மையுமே எஞ்சும் என்பதற்கு கடந்த வாரக் காட்சிகளே உதாரணம். இந்திய அரசும் தமிழக அரசும் ஈவு இரக்கமின்றி இந்த பிரிவினை சக்திகளை ஒடுக்கவேண்டும் என்பதே இந்த இந்தியக் குடியரசு தினத்தன்று மேற்கொள்ளவேண்டிய உறுதிமொழியாக இருக்கவேண்டும்.
 
அனைவருக்கும் இந்தியத் திருநாட்டின் குடியரசு தின வாழ்த்துகள்.
Share

ஜல்லிக்கட்டு மாணவர்கள் போராட்டம்

மாணவர்களின் ஜல்லிக்கட்டு போராட்டம் இதுவரை மிகவும் அமைதியாக நடந்துகொண்டிருப்பது நல்ல விஷயம்தான். பாராட்டப்படவேண்டியது. ஆனால் ஜல்லிக்கட்டுக்கு இந்தத் தொடர் போராட்டங்கள் எந்த அளவுக்கு உதவும் என்பது தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக உணர்வு ரீதியாக தங்கள் ஆதரவைத் தெரிவிக்க மாணவர்கள் ஒருநாள் போராட்டத்தையும் ஊர்வலத்தையும் நடத்தினால் அதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் ஜல்லிக்கட்டு நடத்த உத்தரவு தரப்படும்வரை போராட்டம் என்பதெல்லாம் நடைமுறையில் சாத்தியமா என்று தெரியவில்லை. அரசியல்வாதிகள் நடத்தும் திடீர் தொடர் உண்ணாவிரதங்கள் போல இது தோற்றமளிக்கிறது. இதுவரை மாணவர்களின் போராட்டம் அமைதியாக எவ்விதப் பிரச்சினையும் இன்றி நடந்தாலும், இதில் சில விஷமிகள் கலந்துகொண்டு போராட்டத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் வாய்ப்பிருக்கிறது. அப்படி ஏதேனும் நடந்தால் அது மாணவர்கள் தலையில்தான் விடியும். எனவே மாணவர்கள் அமைப்புகள் மிகக் கவனத்துடன் இருக்கவேண்டியது அவசியம். இது தன்னெழுச்சியான போராட்டம் என்பதையெல்லாம் நம்பமுடியவில்லை. உள்ளடியாக நிச்சயம் சில அரசியல் நோக்கம் கொண்ட அமைப்புகள் இருந்தே ஆகவேண்டும். இப்படி இருப்பது தவறல்ல, இயல்பானதுதான். ஆனால் மாணவர்களின் முதல் வேலை படிப்பில் கவனம் செலுத்துவது. அரசியல் ஆர்வமும் அரசியல் பங்கெடுப்பும் இரண்டாவது வேலையாக இருக்கலாம். எனவே தொடர் போராட்டங்கள் எல்லாம் சரியானதுதானா என்ற கேள்வி இருந்துகொண்டே இருக்கிறது அரசியல்வாதிகள் தங்கள் தேவைக்கு மாணவர்களைப் பயன்படுத்திக் கொள்வது புதிதுமல்ல.

இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், 1967ல் மாணவர் போராட்டம் திமுகவை ஆட்சிக்குக் கொண்டு வந்தது. இந்த சம்பவத்திலிருந்தே, மாணவர்கள் போராட்டம் பெரிய பிரச்சினையை மட்டுமே கொண்டுவரும் என என் மனதில் பதிந்துவிட்டது. இதை மனதில் வைத்தாவது மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு, ஜல்லிக்கட்டுக்கு உணர்வு ரீதியாக தீவிரமான ஆதரவைத் தந்தது போதும் என்று முடிவெடுத்து படிப்புக்குத் திரும்பவேண்டும். நானெல்லாம் படிக்கும்போது ஒருநாள் விடுமுறை கிடைப்பதுதான் ஸ்ட்ரைக்கின் நோக்கம் என்ற புரிதலோடு கல்லூரியில் படித்தவன். இன்று மாணவர்கள் உணர்வோடு தொடர்போராட்டம் நடத்துவது பெரிய ஆச்சரியம் என்பதையும் சொல்லி வைக்கிறேன்.

இந்தப் போராட்டத்தின் பின்னணி தனித்தமிழ்நாடு என்பதுதான் முக்கியக் காரணமாக இருந்தால், போராட்டக்காரர்கள் ஏமாந்து போவார்கள் என்பதை மகிழ்ச்சியோடு சொல்லிக்கொள்கிறேன். ஃபேஸ்புக்கிலும் மாய ஊடகத்திலும் இருக்கும் தமிழகத்தில் மட்டுமே ஜல்லிக்கட்டு இத்தனை முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஊருக்குள் பெரும்பாலும் இதைப் பற்றிய பேச்சே இல்லை. எனவே தமிழ்நாட்டை மையமாக வைத்து இந்தியாவை எதிர்ப்பவர்கள் வேறு விஷயத்தைத் தேடுவது நல்லது. காவிரி நீர்ப் பிரச்சினை போன்ற மிக ஆதாரமான விஷயத்தில்கூட, வடிவேலு போல ‘லைட்டா வலிக்குது’ என்று தாண்டிப் போனவர்கள் நம் மக்கள். போராட்டம் நடப்பது இவர்களை நம்பியே என்பதுதான் வரமும் சாபமும்!

Share

அதிமுக இன்று (10-12-2016)

அதிமுக தற்போதைக்கு உடையாது என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. எதிர்பார்த்ததுதான். அடுத்த நான்கரை வருடங்களை யாரும் வீணாக்க விரும்பமாட்டார்கள். எம்ஜியார் இறந்தபோது ஜெயலலிதா இருந்த நிலையைவிட ஒப்பீட்டளவில் கம்பீரமான நிலையிலேயே இருக்கிறார் சசிகலா. ஜெயலலிதாவுக்கு அன்றைக்கு இருந்த மிகப்பெரிய ப்ளஸ் பாய்ண்ட் – கரிஷ்மா. சினிமா புகழ். இது இன்று சசிகலாவுக்குக் கிடையாது. அன்று ஜெயலலிதாவுக்கு மிகப்பெரிய மைனஸ் என்று எதுவும் கிடையாது. இன்று சசிகலாவுக்கு ஏகப்பட்ட சுமைகள். இதையும் மீறி அவரை மக்கள் ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்பதே சசிகலாவின் முன்னே உள்ள மிகப்பெரிய சவால். ஆனால் மக்கள் இதையெல்லாம் எளிதில் கடந்து செல்வார்கள் என்பதே எரிச்சலூட்டும் முகத்திலறையும் உண்மை. அடுத்த தேர்தல் வரை சசிகலாவுக்குப் பிரச்சினை இல்லை. உள்ளாட்சி தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தலில் மிக மோசமாகத் தோற்றாலும் பெரிய கவலை இல்லை. சட்டமன்றத் தேர்தலே முதல் இலக்கு. எம்ஜியார் இறந்தபோது அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் அனைவருக்குமே ஜெயலலிதா ஒரு பொருட்டில்லை. தானே தலைமையேற்க சரியான ஆள் என்று எண்ண பலர் இருந்தார்கள். இன்று சசிகலாவுக்கு இப்பிரச்சினை இல்லவே இல்லை. அடிமையில் மோகம் கொண்ட அமைச்சர்கள் அடுத்த தலைமைக்குத் தயாராக இருக்கிறார்களே ஒழிய, தானே தலைவர் என்றறிவிக்கும் அளவுக்கு தைரியமாக இல்லை. கட்சியை உடைத்துக்கொண்டு போனாலும் சில வருடங்களில் அரசியலில் காலி ஆகிவிடுவோம் என்று தெரிந்திருக்கிறது. அதையும் மீறி கட்சியை உடைக்கும் தேவை திமுகவுக்கு இருக்கிறது.

நம் மக்களின் இன்னொரு பிரச்சினை, ஒரு தடவை ஓர் அரசியல்வாதிக்கு எதிராக ஒரு தேர்தலில் வாக்களித்துவிட்டால், அவருக்குத் தண்டனை வழங்கிவிட்டதாக மானசீகமாக முடிவெடுத்துவிடுவார்கள். சசிகலா கட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொள்வதை விரும்பாத மக்கள் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் அதிமுகவை மிக மோசமாகத் தோற்கடித்துவிட்டால், அதற்கடுத்த சட்டமன்றத் தேர்தலில் அந்தக் கோபத்தை மறந்துவிடுவார்கள். இது சசிகலாவுக்கு இருக்கும் இன்னுமொரு சாதகம்.

இதையும் மீறி எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் சசிகலா தலைமையில் அதிமுக தேர்தலைச் சந்தித்தால் தோற்கும் வாய்ப்புகளே அதிகம். தோற்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். நான்கரை ஆண்டுகள் என்பது மிக நீண்ட காலம். அரசியல் அதிகாரமும் பணமும் இந்த நான்கரை ஆண்டுகளில் எப்படி வேண்டுமானாலும் செயல்படச் சொல்லும். இதை மீறி, தொடர்ச்சியாக இரண்டு முறை ஏற்கெனவே அதிமுக வென்றிருக்கும் வேளையில், மூன்றாவது முறையாக வெல்வது அத்தனை எளிதல்ல. ஜெயலலிதாவின் கரிஷ்மா என்றும் சசிகலாவுக்குக் கைக்கூடப் போவதுமில்லை. ஜெயலலிதா இருந்தபோது தள்ளி வைத்திருந்த நிலையிலேயே சசிகலாவின் குடும்பத்தினர் உருவாக்கிய பிரச்சினைகள் நமக்குத் தெரியும். இன்று ஜெயலலிதா இல்லாத நிலையில், சசிகலாவின் தலைமை உருவாகி வரும் சூழலில், இவர்கள் மிக வெளிப்படையாகவே அதிகார வட்டங்களை உருவாக்குவார்கள். இது 1996 அளவுக்குக் கூட அதிமுகவைக் கொண்டு செல்லும் வாய்ப்பு உண்டு. கூடவே தமிழ்த் தேசியவாதிகளின் பங்களிப்பும் சேர்ந்துகொண்டால், நிலைமையை நினைக்கவே கஷ்டமாக இருக்கிறது.

இன்னொரு பக்கம் இரண்டாவது பலம் பொருந்திய கட்சியான திமுகவின் நிலையையும் பார்க்கவேண்டும். கருணாநிதியில் அதிகாரம் இல்லாத அரசியல் அந்நேரம் உருவாகி இருக்கும். வாரிசுச் சண்டைகள் எல்லாம் ஓய்ந்து ஸ்டாலின் நிச்சயம் முக்கியத்துவம் பெற்றிருப்பார். இப்போதே கிட்டத்தட்ட அப்படித்தான். சரியான கூட்டணியுடன் ஸ்டாலின் வெல்லும் வாய்ப்புகளே அதிகம். அந்த வாய்ப்பை உறுதி செய்யவேண்டியதே இன்றைய திமுகவின் முக்கிய வேலையாக இருக்கவேண்டும். பாஜக புழைக்கடை வழியாக வருகிறது, நூலேணியில் இறங்கி வருகிறது என்றெல்லாம் கதை பேசிக்கொண்டிருந்தால், சசிகலாவிடமும் தோற்க வேண்டிய அவல நிலை உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அதிமுகவை உடைப்பது குறித்து அதிமுகவினரை விட திமுகவினர் பதற்றமடைகிறார்கள். அதிமுகவை பாஜக உடைக்கக்கூடாது என்று திமுகவினர் பதறுவதைப் புரிந்துகொள்ளமுடிகிறது. திமுககூட அதிமுகவை உடைக்கக்கூடாது என்று நினைக்கமாட்டார்கள் என்று நம்புகிறேன். வாய்ப்புக் கிடைக்கும்போது எதிரணியை உடைப்பதையும் உள்ளடக்கியதுதான் அரசியல். மற்ற கட்சிகளைவிட நல்லாட்சியைத் தருவோம் என்பதே ஒரு முக்கியக் கட்சியின் முதன்மை நோக்கமாக இருக்கும். இதன் பின்னணியில் நல்லது செய்வதை என்பதை அடிப்படையாகக் கொண்டு ஒரு கட்சியை உடைப்பதும் அந்த வெற்றிடத்தில் ஆட்சியைப் பிடிப்பதும் அரசியல்தான். இந்த அரசியலை எத்தனை வெளிப்படையாக மேற்கொள்கிறார்கள் என்பதே முக்கியமானது. பணத்தின் மூலம் இதைச் செய்வதுதான் பிரச்சினைக்குரியதே ஒழிய, அரசியல் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு செய்வது பெரிய பாவமல்ல. இதற்காக திமுகவினர் பதறுவதை விட்டுவிட்டு யதார்த்தத்தைப் பற்றி யோசிப்பது நல்லது. இதைச் சொல்வது ஏனென்றால் இது பாஜகவுக்கும் பொருந்தும். 🙂 ஆனால், பொன் இராதாகிருஷ்ணனும் தமிழிசையும் எத்தனை நல்லவர்கள் என்றால், ஒரு ஃபோன் போட்டு, இப்படி அதிமுக தத்தளிக்கும்போது அதை உடைக்கும் அரசியல் செய்யாதீர்கள் என்று கேட்டுக்கொண்டால், அதில் உள்ள நியாயத்தைப் புரிந்துகொண்டு உடனே ஏற்றுக்கொண்டு இன்னும் அமைதியாகிவிடுவார்கள். அத்தனை நல்லவர்களைப் பார்த்து பின்வாசல் அவதூறுகளைப் பரப்பாதீர்கள். மீறினால் நரகம் நிச்சயம். 🙂

Share

புரியாத பேச்சு – விஜய்காந்த்

விஜய்காந்தின் பேச்சு புரியவே இல்லை என்பதை நான் கிண்டலாகச் சொல்லவில்லை. ஆனால் நிஜமாகவே புரியவில்லை என்பதை சொல்லித்தான் ஆகவேண்டி இருக்கிறது. இதை வைத்துக் கிண்டல் செய்பவர்களை நான் ஏற்கவில்லை. (ஆனால் சில மீம்கள், வீடியோக்கள் கடுமையான சிரிப்பை வரவழைக்கின்றன. அதைச் செய்தவர்களின் வெற்றியாக மட்டும் இதை எடுத்துக்கொள்ளவேண்டும்!) ஆனால் இதைத் தவிர்க்கமுடியாது. ஜெயலலிதாவையும் இப்படி கிண்டல் செய்திருக்கிறார்கள். இது தலைவிதி, இதிலிருந்து தப்ப முடியாது.

ஆனால் விஜய்காந்த் பேசுவது நிஜமாகவே புரியவில்லை. பக்கத்து வீட்டில் இருக்கும் ஒருவர் பேசுவது புரியவில்லை என்றால் நான் அவருக்காகப் பரிதாபப்படுவேன். ஆனால் நாளைய முதல்வராகப் போகிறேன் என்று சொல்பவர் பேசுவது புரியவில்லை என்றால், கேள்வி கேட்கத்தான் செய்வேன். விஜய்காந்த் தரப்பிலிருந்து மிகத் தெளிவான விளக்கம் இதற்குத் தரப்படவில்லை என்பதுதான் விஷயம். இப்போதுதான் தொண்டைப் புண் என்று சொல்லி இருக்கிறார்கள். இதுவரை அவரது குடிப்பழக்கமே காரணம் என்று திரைமறைவில் சொல்லப்பட்டது. எது காரணமாக இருந்தாலும் அவர் பேசுவது புரியவில்லை என்பது புரியவில்லைதான்.

எம்ஜியாருக்கு சுடப்பட்டு பேச்சு போனபோது இதே சமூகம் பதறியது. பின்பு கிண்டலும் செய்தது. ஆனால் விஜய்காந்துக்கு அப்படி அல்ல. ஜெயலலிதா பற்றியும் பல கதைகள். ஏன் இத்தலைவர்கள் தங்களுக்கு என்ன பிரச்சினை என்பதை பொதுவில் வைக்க இப்படி தயங்குகிறார்கள்? எல்லா மனிதர்களுக்கும் வரும் பிரச்சினைதானே? ஏன் மூடி மறைக்கவேண்டும்? சர்க்கரை நோய் பிரச்சினை என்று வெளியே தெரிந்துவிட்டால் என்ன ஆகிவிடும்?

இன்றைய நவீன உலகத்துக்கேற்ப தலைவர்கள் உருவாகி வரவில்லை. ‘என் பிரச்சினை இதுதான், இதைத்தான் நான் எதிர்கொண்டு போராடிக்கொண்டிருக்கிறேன், என் பலவீனம் இது’ என்று வெளிப்படையாகச் சொல்லும் தலைவர்களே மக்கள் மனத்தில், ஆயிரம் கிண்டலையும் மீறி, இடம் பிடிக்கப் போகிறார்கள். இந்த எளிய சூத்திரம் கூடத் தெரியாமல் இல்லாத இமேஜைக் கட்டிக் காக்க இவர்கள் போடும் நாடகம், மக்களை முட்டாளாக்கிக்கொண்டிருக்கிறது. இதனால் தேவையற்ற கதைகள் உலவிக்கொண்டிருக்கின்றன. இதையே பெருமையாகக் கருதிக்கொள்வார்களோ என்னவோ.

மூப்பனார் பேசும்போது கீழே சப்டைட்டில் போட்டது சன் டிவி. அதற்குப் பலர் கொதித்தார்கள். ஆனால் சன் டிவி சப்டைட்டில் போட்டதில் தவறே இல்லை. விஜய்காந்த்துக்கும் சப்டைட்டில் போட்டால் நல்லது. உடல் நலம் சரியாகி அவர் நன்றாகப் பேசும் வரை இது தொடரவேண்டியது அவசியம். கிண்டலாக இல்லை, சீரியஸாகத்தான் இதைச் சொல்கிறேன்.

Share

தமிழக பாஜக – எங்கே செல்லும் இந்தப் பாதை – தேர்தல் களம் 2016 – தினமலர்

நான் பத்தாம்வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது திருச்சியின் கிராமம் ஒன்றான முத்தரச நல்லூருக்குச் சென்றிருந்தேன். அந்த கிராமத்தின் தெருக்களின் பாஜகவின் விளம்பரத் தட்டிகளையும் சுவரோட்டிகளில் அத்வானி மற்றும் வாஜ்பேயியின் முகங்களையும் பார்த்தேன். அன்றுதான் எனக்கு பாஜக என்னும் கட்சி மிகவும் நெருக்கமாக அறிமுகமாகியது. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டின் மற்ற எந்த ஊர்களிலும் பாஜகவுக்கு இத்தனை விளம்பரங்களை நான் பார்த்ததில்லை. அத்வானி முத்தரசநல்லூருக்கு அருகில் இருந்த இன்னொரு கிராமத்துக்கு வருகை தந்திருந்தார் என்று நினைவு.

அன்று இருந்த அதே நிலையில் இன்றும் தமிழ்நாட்டு பாஜக கிட்டத்தட்ட அப்படியே இருக்கிறது. இடைப்பட்ட 25 ஆண்டுகளில் இந்தியாவெங்கும் பாஜகவின் முகம் பல்வேறு வகையில் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க தமிழ்நாட்டில் மிக மிக மெதுவான வளர்ச்சியை மட்டுமே பாஜகவால் சாதிக்கமுடிகிறது.

இதன் காரணங்கள் என்ன? 1998 வரை பாஜகவினர் தொலைக்காட்சியின் எந்த நேர்காணல்களிலோ அல்லது விவாதங்களிலோ பங்கேற்றால், எதிர்த்தரப்புக்காரர்கள் அப்படியே பம்முவார்கள். ஏனென்றால் எந்தவித சுமையும் இல்லாத ஒரு கட்சியாக பாஜக இருந்ததனால் தமிழகத்தின் கழகங்களை மிக எளிதாக பாஜகவால் எதிர்கொள்ளமுடிந்தது. 1998ல் அதிமுகவுடனும் 2001ல் திமுகவுடன் கூட்டணி வைத்தது. இதனால் பாஜகவுக்கு சில எம்பி/எம்.எல்.ஏ சீட்டுகள் கிடைத்தாலும், தமிழகத்தில் முதன்மைக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்கென்றே நேர்ந்துவிடப்பட்ட சிறிய கட்சிகளின் அந்தஸ்தை அடைந்துவிட்டது. இப்படி ஒரு நிலையை விருப்பப்பட்டு தமிழ்நாட்டு பாஜகவே ஏற்படுத்திக்கொண்டது. பாஜகவினருடன் விவாதத்தில் ஈடுபடவே யோசித்த காலம் போய், இவர்களும் மாறி மாறி கூட்டணி வைப்பவர்கள்தான் என்ற எண்ணம் வந்துவிட்டது.

2014 பாராளுமன்றத் தேர்தலில் மோடி அலை இந்தியாவெங்கும் வீசியபோதும் தமிழ்நாட்டில் இலையின் அலையில் முடங்கிப் போனது தமிழ்நாட்டு பாஜக. 2014ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் ஓரளவு வலிமையான மூன்றாவது கூட்டணியை உருவாக்கியது ஒரு முக்கியமான சாதனைதான். ஆனால் அதைத் தொடரமுடியாமல் போனது. இதற்கு முதன்மையான காரணம் பாஜக அல்ல என்றாலும், ஒரு பிரதமரைக் கொண்டிருக்கும் கட்சி இவை போன்ற சிக்கல்களையெல்லாம் தெளிவாகச் சமாளித்திருக்கவேண்டும். ஆனால் தமிநாட்டு பாஜகவுக்கு அத்தகைய சாமர்த்தியங்கள் எல்லாம் இருக்கவில்லை.

இந்தியாவிலேயே உட்கட்சி ஜனநாயகம் மிக நன்றாக வேரூன்றியிருக்கும் மிகச் சில கட்சிகளில் ஒன்று பாஜக. இப்படி இருக்கும் கட்சிகள் சந்திக்கும் பிரச்சினைதான் பாஜகவின் முதல் பிரச்சினையும். ஏகப்பட்ட தலைவர்களைக் கொண்ட கட்சி ஏகப்பட்ட முகங்களுடன் உலா வரும்போது எது நம் முகம் என்ற குழப்பம் வாக்காளர்களிடையே ஏற்படும். காங்கிரஸுக்கும் தமிழக பாஜகவுக்கும் உள்ள ஒரு பொதுவான பிரச்சினை இது.

மத்தியத் தலைவர்கள் ஒன்றைப் பேசிக்கொண்டிருக்க மாநிலத் தலைவர்கள் இன்னொன்றைப் பேசிக்கொண்டிருக்க இரண்டுக்கும் தொடர்பற்ற வகையில் தொண்டர்கள் செயலாற்றிக்கொண்டிருப்பார்கள். அதோடு திடீர் திடீர் என்று ஹெ.ராஜா, சுப்ரமணியம் சுவாமி போன்ற தலைவர்கள் எழுப்பும் சலசலப்புகள் வேறு. இதுபோன்ற பிரச்சினைகளிலிருந்து தமிழக பாஜக வெளிவரவேண்டும். அதற்குத் தேவை வலிமையான ஒரு மாநிலத் தலைமை.

மாநிலத் தலைமை வலிமையாக இருப்பதுதான் பாஜகவின் வெற்றிக்கான முதல் படியும் முதன்மையான படியும். இன்றைய தமிழகத் தேர்தல் என்பது ஆர்ப்பாட்டம் நிறைந்ததும் ஆடம்பரம் நிறைந்ததும் என்றாகிவிட்டது. இந்நிலையில் பாஜக இப்படி இந்த நீரோட்டத்தில் இருந்து முற்றிலும் விலகி நிற்குமானால் மக்களின் பரிதாபத்தை மட்டுமே பெறமுடியும், வெற்றியைப் பெறமுடியாது. அதற்காக கழக பாணி அரசியலைக் கைக்கொள்ளத் தேவையில்லை. இந்த ஆடம்பர அரசியலிலிருந்து விலகவேண்டியதும் புதிய அரசியல் களத்தை உருவாக்கவேண்டியதும் ஒவ்வொரு கட்சியின் கடமையும்தான். ஆனால் இரண்டுக்கும் மத்தியிலான, பொதுமக்களைக் கவரும் வகையிலான அரசியலையும் மேற்கொள்ளவேண்டும். இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்துக்கு வருவதற்காகவாவது இவற்றையெல்லாம் தமிழக பாஜக மேற்கொள்ளவேண்டும். தன்னை நிலைப்படுத்திக்கொண்டுவிட்டபின்புதான் அரசியல் தூய்மையில் இறங்கவேண்டும். இன்று மோடி இந்திய அளவில் செய்துகொண்டிருப்பது போல.

தமிழக பாஜக மக்களோடு தொடர்புடைய பிரச்சினைகளை எதிர்கொள்ள வீதிகளுக்கு வருவதில்லை என்பது அடுத்த பிரச்சினை. தமிழக பாஜகவின் போராட்டங்கள் எல்லாம் யாருக்காக யாரோ மேற்கொள்ளும் போராட்டங்கள் என்ற வடிவிலேயே நிகழ்கின்றன. ஒன்று தமிழக பாஜக தலைவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள் அல்லது தொலைக்காட்சிகளில் பேசிக்கொண்டிருக்கிறார்கள். உணர்வு பிரச்சினைகளுக்கான போராட்டத்தைவிட முக்கியமானவை மக்களின் அன்றாடத் தேவைகளுக்கான போராட்டங்கள். அதுவும் மக்களின் கண்முன் நடக்கும் போராட்டங்கள். இவற்றையெல்லாம் பாஜக மேற்கொண்டதா அல்லது பத்திரிகைகள் மறைக்கின்றனவா என்பதெல்லாம் புரிபடாத மர்மங்களாகவே இருக்கின்றன.

இன்று புதியதாகத் தொடங்கும் கட்சிகூட உடனே ஒரு பத்திரிகையையும் தொலைக்காட்சியையும் உருவாக்கும்போது தமிழக பாஜகவால் இதையெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. தொடர்ந்து பாஜகவின் கருத்துகள் திட்டமிட்டு மறைக்கப்படுகின்றன என்று பாஜக எப்போது கருதுகிறதோ, அப்போது அதன் அடுத்தகட்ட நடவடிக்கை என்பது இப்படி ஊடகத்தைத் தொடங்குவதாகத்தானே இருக்கவேண்டும்? ஆனால் அப்படி எந்த ஒரு முயற்சியிலும் பாஜக இறங்கியதாகத் தெரியவில்லை. மத்திய அரசின் பல சாதனைகள், ஊழலற்ற ஆட்சி போன்றவையெல்லாம் தமிழகக் கிராமங்களை அடையவே இல்லை. இன்று தமிழ்நாட்டின் சாதனைகள் எனச் சொல்லப்படும் மிகை மின்சாரம், வெள்ள நிவாரணம் போன்றவற்றில் மத்திய அரசின் உதவிகள், மத்திய அரசின் பல புதிய திட்டங்களெல்லாம் அதிமுகவின் சாதனை போலவே மக்கள் மத்தியில் பரப்பப்படுகின்றன. இவற்றையெல்லாம் விளக்கி மக்களுக்குக் கொண்டுபோய்ச் சேர்க்கும் பெரிய நெட்வொர்க் பாஜகவிடம் இல்லை.

தமிழக பாஜக காற்றில் வாள் சுழற்றிக்கொண்டு உள்ளது. அதிமுக மற்றும் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுகள் இன்று கணிசமாகத் திரண்டு வரும் வேளையில் அதை தன்வசப்படுத்திக்கொள்ள தமிழக பாஜக எந்நிலையிலும் ஆயத்தமாக இல்லை. ஒரு தேர்தலின் கடைசி நொடி வரை அதிமுகவிலிருந்து அழைப்பு வராதா என்ற ஏக்கத்திலேயே தமிழக பாஜக காத்துக் கிடக்கிறது. தமிழக பாஜவை ஏற்றுக்கொண்டால் உடனடியாக சிறுபான்மை ஓட்டுக்களை இழக்கவேண்டியிருக்கும் என்பது உலகில் எல்லாருக்கும் தெரிந்திருக்கிறது, ஆனால் தமிழக பாஜகவுக்கு மட்டும் தெரியவில்லை. எப்படியும் அதிமுக தன்னை ஏற்றுக்கொள்ளும் என்று நம்பிக் காத்துக் கிடந்தது. அதிமுக இல்லை என்றானபின்பு தேமுதிகவுக்குக் காத்துக் கிடந்தது.

தேமுதிக விஷயத்தில் பாஜக செயல்பட்ட விதம் ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. தமிழக பாஜக திமுகவுடனோ அதிமுகவுடனோ கூட்டணி வைத்தால் அதை திமுக கூட்டணி என்றோ அல்லது அதிமுக கூட்டணி என்றோ அழைக்கிறார்கள். கருணாநிதியையோ அல்லது ஜெயலலிதாவையோ முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தேமுதிகவுடன் கூட்டணி என்று வரும்போது அதை பாஜக கூட்டணி என்றழைக்கப் பார்க்கிறார்கள். இதிலெல்லாம் பாஜக விட்டுக்கொடுத்துப் போயிருக்கவேண்டும். விஜய்காந்தின் கவனம் முதல்வர் பதவியின் மீது இருக்கும்போது, அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக, விஜய்காந்தின் அந்த ஆசையை தமிழக பாஜக பயன்படுத்திக்கொண்டிருக்கவேண்டும். தேமுக நினைப்பதிலும் தவறில்லை. ஆனால் பாஜக இதையெல்லாம் யோசிக்காமல் பாஜக கூட்டணியில் தேமுக வரட்டும் என்று காத்துக் கிடந்தது. இதனால் பாஜக ஆதரவாளர்களே ‘முதலில் கட்சி முடிவெடுக்கட்டும், பின்பு பார்த்துக்கொள்ளலாம்’ என்ற நிலைக்குப் போய்விட்டார்கள். இப்போது ஒரு வழியாக தனித்துப் போட்டி என்று பாஜக அறிவித்திருக்கிறது. இது முதல்படிதான். அதிமுக மற்றும் திமுகவின் வெறுப்பு ஓட்டுக்களைப் பெற தனித்து நின்றால் மட்டும் போதாது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே நிலையில் வைத்து விமர்சிக்கவேண்டும். அதிமுகவை விமர்சிப்பதா என்று நினைத்தாலே தமிழக பாஜகவுக்கு வேர்க்க ஆரம்பித்துவிடுவது என்னவிதமான நோய் என்பதை முதலில் கண்டுபிடிக்கவேண்டும். டெல்லியில் இருந்தே குனியத் தொடங்கிவிடுகிறார்கள்.

திமுகவை கடுமையாக விமர்சிப்பது, அதிமுகவை செல்லமாகத் திட்டுவது போன்ற அணுகுமுறைகள் ஒரு காலத்திலும் பாஜகவின் வாக்கு சதவீதத்தை அதிகரிக்கப்போவதில்லை. இன்றைய தேர்தலின் ஒரே முக்கிய அம்சம், அதிமுக ஆட்சியின் வெறுப்பு ஓட்டுகள் என்றாகிவிட்ட நிலையில், பாஜகவின் முக்கிய இலக்கு அதிமுகவாக இருக்கவேண்டுமே ஒழிய, திமுகவாக இருக்கக்கூடாது.

உண்மையில் தமிழகத்தின் ஹிந்துக்கள் கட்சி அதிமுக என்ற பிம்பமே இங்கே நிலவுகிறது. எனவே மத்தியில் பாஜகவை ஆதரிப்பவர்கள்கூட மாநிலத்தில் அதிமுகவை ஆதரித்துவிடுகிறார்கள். போதாக்குறைக்கு இல.கணேசன் போன்றவர்கள், ‘சில விதிவிலக்கான அம்சங்களைத் தவிர, அதிமுகவும் பாஜகவும் ஒரே கருத்துகளைக் கொண்ட கட்சிதான்’ என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். (ஆதாரம்: 6.4.16 தேதியிட்ட துக்ளக்.)

பாஜகவுக்கு எப்படியும் சிறுபான்மையினர் ஓட்டளிக்கப் போவதில்லை. குஜராத் போல பாஜக ஆட்சி அமைந்து அதை நேரடியாக உணராதவரை சிறுபான்மையினர் பாஜகவுக்கு எதிராகவே வாக்களிக்கப் போகிறார்கள். அப்படியானால் பாஜகவுக்கு வாக்களிக்க வேண்டியவர்கள் ஹிந்துக்களே. அவர்களைக் கவரும் வகையிலாவது பாஜக செயல்படவேண்டும். அதுவும் சிறுபான்மையினருக்கு எவ்வித உறுத்தலும் ஏற்படாத வகையில், பெரும்பான்மை மக்கள் ஹிந்து ஆதரவு என்பதை பிரச்சினைக்குரிய ஒன்று என நினைக்காத வகையில் அந்தச் செயல்பாடு இருந்தாகவேண்டும். தமிழ்நாடு ஈவெரா வழி வந்த, பொதுவாக ஹிந்து எதிர்ப்பு அரசியலிலேயே ஊறிக்கிடக்கும் ஒரு மாநிலம். அப்படியானால் தமிழ்நாட்டு பாஜகவின் செயல்பாடு என்பது கத்தி மேல் நடப்பது. முதலில் ஹிந்து ஓட்டுக்களைக் கவரவேண்டும். அந்த ஹிந்து ஓட்டுக்களோ அதிமுக வசம் உள்ளது.

இன்று பல முனைத் தேர்தல் நடக்கிறது. இது அதிமுகவுக்கே பல வகைகளில் சாதகம். அதிமுகவின் வெற்றி வாய்ப்பைப் பறிக்க அல்லது குறைக்க சாத்தியமுள்ள ஒரே கட்சி இன்றைய நிலையில் தமிழக பாஜகதான். இன்னும் 30க்கும் மேற்பட்ட நாள்கள் உள்ளன. அதிமுகவுக்குச் செல்லும் ஹிந்து ஓட்டுகளைக் குறிவைத்து அரசியல் செய்தாலே போதும், அதிமுக பல தொகுதிகளில் தோற்கும் நிலை ஏற்படலாம்.

சென்னை வெள்ளம் வந்து தமிழக அரசு ஸ்தம்பித்து நின்று மக்களைக் கைவிட்ட சமயத்தில் தமிழிசை சௌந்தரராஜன் கொஞ்சம் அதிமுகவுக்கு எதிராகப் பேசினார். ஆனால் தொடர்ந்த சில நாள்களில் மத்தியத் தலைமை இவ்விஷயத்தை மென்மையாகக் கையாளும்படி அறிவுறுத்தியதாக செய்தி வெளியானது. அதன்பின்பு தமிழிசையும் அமைதியாகிவிட்டார். தமிழக பாஜகவின் இப்படியான பரிதாபமான நிலைக்கு மத்தியத் தலைமைகளும் ஒரு காரணம். ஏனோ ஜெயலலிதாவின் ஆதரவை மிக முக்கியமானதாகக் கருதுகிறார்கள்.

தமிழகத்தின் பிற கட்சிகள் எதைப் பற்றியும் கவலைப்படுவதில்லை. தேவை ஏற்படும்போது தாறுமாறாக அதிமுகவையும் திமுகவையும் தாக்குகிறார்கள். பின்பு இவற்றையெல்லாம் மறந்து கூட்டணியும் வைத்துக்கொள்கிறார்கள். ஜெயலலிதாவும் கருணாநிதியும் ஒன்றுமே நடக்காதது போல் ஏற்றுக்கொள்கிறார்கள். ஆனால் தமிழக பாஜக மட்டுமே இதில் தடுமாறுகிறது.

இன்றைய நிலையில் தமிழக பாஜக செய்யவேண்டியவை என்ன? முதலில் ஒருவரை முதல்வர் வேட்பாளராக அறிவிப்பது. என் தேர்வு: நிர்மலா சீதாராமன், அடுத்ததாக பொன்.ராதாகிருஷ்ணன். இன்னும் ஐந்தாண்டுகளில் தமிழ்நாட்டில் நிலவப் போகும் வெற்றிடத்தை முழுமையாகக் கைப்பற்ற எல்லா வகையிலும் ஆயத்தமாக இருப்பது. ஜாதிக் கட்சிகளை ஒருங்கிணைத்து பாஜகவின் வாக்குவங்கியை அதிகரிப்பது. தனக்கென புதிய வாய்ப்புகளை உருவாக்கி அதில் கவனம்செலுத்துவது. எதிர்க்கட்சிகள் செய்யும் தவறுகள் தரும் வாய்ப்புகளைத் தவறாமல் பயன்படுத்திக்கொள்வது. கொள்கை அளவிலான போராட்டங்களையும் மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்கான போராட்டங்களையும் ஒருங்கிணைத்துச் செயல்படுவது. அவை ஊடகங்களில் வருமாறு பார்த்துக்கொள்வது. அதிமுகவையும் திமுகவையும் ஒரே தூரத்தில் வைப்பது, விமர்சிப்பது. தமிழ்நாட்டின் ஹிந்துக்கள் கட்சி பாஜகதான் என்று பாஜகவின் ஆதரவாளர்களையாவது முதலில் நம்ப வைப்பது. தொடக்கமாக, வெற்றிவாய்ப்புள்ள 50 தொகுதிகளை மட்டும் தேர்ந்தெடுத்து, அதில் கவனம் செலுத்தி, அந்த இடங்களில் கட்சியை பலப்படுத்தி, வெற்றி வாய்ப்பை உறுதி செய்வது. பாஜகவுக்கென ஊடகங்களை உருவாக்குவது. இவை எதிலுமே இன்னும் தமிழக பாஜக பெரிய சாதனைகளை நிகழ்த்திவிடவில்லை என்பதுதான் உண்மை. இவற்றைச் செய்தால் இன்னும் ஐந்தாண்டுகளில் அதிமுக மற்றும் திமுகவுக்கு மாற்றாக உருவாகும் கட்சிகளில் முதன்மைக் கட்சியாகவோ அல்லது இரண்டாவது கட்சியாகவோ வரலாம். அப்படிச் செய்யாத வரை தமிழ்நாட்டில் மூன்று சதவீத வாக்கு வங்கிக்கு மேல் வாங்க இயலாமலேயே போகலாம்.

வரலாறு வாய்ப்புகளை மீண்டும் மீண்டும் தராது. ஆளும் கட்சி செய்யும் தவறுகளே மற்ற கட்சிகளின் மீட்சிக்கான வாய்ப்புகள். அதைப் பயன்படுத்திக்கொள்ளாத வரை எந்த ஒரு கட்சியும் மேலெழ வாய்ப்பில்லை. இதைப் புரிந்துகொண்டு அதிமுகவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொள்ளாதவரை தமிழக பாஜக இத்தேர்தலில் எதையும் சாதிக்கப்போவதில்லை. மத்தியில் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சி தமிழகத்தில் இன்னொரு காங்கிரஸாகத்தான் இருக்கிறது. இந்த அவல நிலையிலிருந்து மீள ஒரே வழி, தமிழக பாஜக தமிழ்நாட்டின் கட்சிதான் என்ற எண்ணத்தை மக்களிடம் உருவாக்குவதுதான். அதை நோக்கியே தமிழக பாஜகவின் ஒவ்வொரு நகர்தலும் இருக்கவேண்டும். இல்லையென்றால் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்சி எப்படி இருந்ததோ அதே நிலையில்தான் இனியும் இருக்கும்.

Share

வெல்லும் கட்சி – தேர்தல் களம் 2016 – தினமலர்

முன்பெல்லாம் என் தாத்தாவிடம் கேட்பேன், எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறீர்கள் என்று. அவர் சிரித்துக்கொண்டே ‘சோத்துக் கட்சிக்கு’ என்பார். எத்தனை முறை எப்படி மாற்றிக் கேட்டாலும் பதில் சோத்துக் கட்சி என்பதாகவே இருக்கும். தான் அளிக்கும் வாக்கை வெளியில் சொல்லக்கூடாது என்பதில் அவருக்கு இருக்கும் உறுதி என்று ஒருவகையில் எடுத்துக்கொண்டாலும், இன்னொரு வகையில் தன் வாக்கு வெல்லும் கட்சிக்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமும் அவர் சொன்னதில் மறைந்திருப்பதைப் பார்க்கலாம்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் என் நண்பரிடம் பாரதிய ஜனதாவுக்கு வாக்களிக்கச் சொன்னேன். எப்போதும் அதிமுகவுக்கு வாக்களிப்பதையே விரும்பும் அவர் அந்த ஒருமுறை மட்டும் பாஜகவுக்கு வாக்களிக்க ஒப்புக்கொண்டார். தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்டன. என் நண்பர் வாக்களித்த தொகுதியில் பாஜக மூன்றாவது இடத்துக்கு வந்தது. அதிமுக வெற்றி கண்டது. என் நண்பர் மீண்டும் மீண்டும் சொன்னது, ‘ஒழுங்கா அதிமுகவுக்கு போட்டிருந்தா, ஜெயிச்ச கட்சிக்கு ஓட்டு போட்ட மாதிரி இருந்திருக்கும்’ என்பதையே.

இந்த ஒரு மனநிலை தமிழ்நாடெங்கும் உள்ளதை நீங்கள் பார்க்கலாம். வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்னும் மனநிலை. ஆனால் இந் எண்ணம் தேவையற்றது என்றே நான் நினைக்கிறேன். வெல்லும் கட்சி அல்லது இரண்டாவதாக வரும் கட்சியைத் தவிர மற்ற கட்சிகளுக்கு அளிக்கப்படும் வாக்குகளை கிட்டத்தட்ட செல்லாத வாக்கைப் போல சித்திரிக்கும் போக்கு இங்கே உள்ளது. இந்த மனநிலையை மாற்றவேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை.

ஒரு நாட்டில் நிலவும் பன்முகத் தன்மை என்பது மிகவும் முக்கியமானது, அவசியமானது. எல்லாத் தரப்பு மக்களின் எல்லாக் கோரிக்கைகளையும் ஒரு சில கட்சிளால் முழுமையாகக் கவனப்படுத்திவிடமுடியாது. அதோடு சில தனிப்பட்ட சமூகத்தின் அல்லது குழுவின் பிரச்சினைகள் என்ன என்ன என்பதெல்லாம், இரண்டு முதன்மைக் கட்சிகளுக்கு தெரியாமல் இருக்கக்கூட வாய்ப்பிருக்கிறது. அல்லது பெரிய அளவில் வாக்கு இல்லை என்பதால் முதன்மைக் கட்சிகள் இப்பிரச்சினைகளைக் கண்டும் காணாமல் ஒதுங்கிச் செல்லும் வாய்ப்பும் இருக்கிறது. இங்கேதான் சிறிய கட்சிகளின் இருப்பும் பங்களிப்பும் முக்கியமானதாகிறது.

ஜாதிக் கட்சி என்ற சொல் இன்று மிகவும் மோசமான ஒன்றாகவும் ஒதுக்கித் தள்ளவேண்டிய ஒன்றாகவும் ஆகிவிட்டது. ஆனால் இந்தியா போன்ற ஜாதி அமைப்பு மிக வலுவாக வேரூன்றிய நாட்டில் இந்த ஜாதிக் கட்சிகளின் தேவை மிக அவசியமானது. இந்த ஜாதிக் கட்சிகளினால் ஏற்படும் பாதிப்புகள், இவை மேற்கொள்ளும் மிரட்டல் அரசியல், அதனால் விளையும் பிரச்சினைகள் – இவையெல்லாம் ஏற்கத்தக்கவை அல்ல. ஆனால் இதன் இன்னொரு பக்கமாக, இந்த ஜாதிக் கட்சிகளே தங்கள் ஜாதிக்குரிய தேவைகளை, பிரச்சினைகளை மிகத் தீவிரமாக முன்வைக்கின்றன. இவை இல்லாவிட்டால் இப்பிரச்சினைகளெல்லாம் மக்கள் மன்றத்தின் முன் வராமலேயே போயிருக்கக்கூடும்.

அதிலும் இந்தியாவில், மிக நுணுக்கமான கலாசாரத்தைப் பின்னணியாகக் கொண்ட மீச்சிறிய ஜாதிகளின் பெயர்கள்கூட பெரும்பாலானவர்களுக்குத் தெரியாது. எனவே இது போன்ற ஜாதிகளின் தேவைகளை முன்வைக்கும் கட்சிகளின் அரசியல் ஒட்டுமொத்த நோக்கில் மிக முக்கியமானது.

இதே கருத்தை சில அமைப்புகளுக்கும் சில குழுக்களுக்கும் விரிவுபடுத்தலாம். மூன்றாம் பாலினத்தவர்கள் தங்கள் குரலை ஒட்டுமொத்தமாக ஒரு குழுவாக முன்வைக்காமல் நாம் அவர்களை ஒருநாளும் புரிந்துகொண்டிருக்கமுடியாது. முதன்மைக் கட்சிகள் இத்தரப்பின் பக்கம் தங்கள் பார்வையைத் திருப்பவேண்டுமானால் இக்குழுக்களின் அழுத்தமும் தொடர் போராட்டமும் மிகவும் அவசியம்.

எனவே நாம் மீண்டும் மீண்டும் வெல்லும் கட்சிக்கு வாக்களிக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தால், சிறிய கட்சிகளின் நிலைப்பாட்டுக்கான மக்களின் பதில் என்ன என்பதை தெரிந்துகொள்ளமுடியாமலேயே போய்விடும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, சில ஊடகங்கள், சிறிய கட்சிகளுக்கு வாக்களிப்பதை, கிட்டத்தட்ட செல்லாத வாக்குகளாகவே சித்திரிக்கப் பார்க்கின்றன. ஏற்கெனவே முதன்மைக் கட்சிகளுக்கு மட்டுமே வாக்களிக்கவேண்டும் என்ற எண்ணத்தில் உள்ள வாக்காளர்கள், வேறு எதையும் சிந்திக்காமல் வெல்லும் இரண்டு கட்சிகளில் ஒன்றுக்கு வாக்களிக்கத் தயாராகிவிடுகிறார்கள்.

இது மக்களை அதிகம் சிந்திக்கவிடாமல் செய்யும் ஒரு பிரச்சினை. இதைக் கவனமாகக் கையாளவேண்டும். ஜாதிக் கட்சிகள் உள்ளிட்ட சில அமைப்புகள் முன்வைக்கும் அரசியலில் நமக்கு ஒவ்வாமை இருக்கலாம். அவர்கள் செயல்பாடுகளில் அராஜகங்கள் இருக்கலாம். இந்தப் பிரச்சினைகளை மீறி அவர்கள் முன்வைக்கும் ஒரு தரப்பின் குரல் மிகவும் இன்றியமையாதது. அக்குரல் நமக்கு ஏற்புடையது என்றால், மற்ற எல்லாப் பிரச்சினைகளையும்விட இப்பிரச்சினை நமக்கு முக்கியமானது என்று தோன்றினால், எக்கட்சி வெல்லும் எக்கட்சி தோற்கும் என்றெல்லாம் யோசிக்காமல், நம் கருத்தை ஒட்டிப் பேசும் கட்சி எத்தனை சிறியதாக இருந்தாலும் அதற்கு வாக்களிப்பதே நியாயமானது. அப்போதுதான் பல்வேறு குரல்கள் ஒலிக்கும் ஒரு வெளியாக தேர்தல் அரங்கம் மாறும். அதுவே ஜனநாயகத்துக்குத் தேவையானது. இனியாவது அதை நோக்கிப் பயணிப்போம்.

Share