Archive for கல்வி

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம்

நம் சமூகத்தில் ஆசிரியர்களுக்கான மதிப்பு என்பது மிக உயர்ந்தது. தொன்றுதொட்டே அவர்கள் குருவென மதிக்கப்பட்டு தெய்வத்துக்கு இணையாகப் போற்றப்பட்டவர்கள். குரு என்பவர் எத்தகைய ஒருவராகவும் இருக்கமுடியும். நம் இன்றைய சமூகத்தில் நாம் குரு என்று நினைப்பது நம் ஆசிரியர்களையே. ஒவ்வொரு தனி நபரும் தன் வாழ்நாள் முழுமைக்கும் மறக்கமுடியாத ஆசிரியர் என்று குறைந்தபட்சம் ஒருவரையோ அல்லது பலரையோ நிச்சயம் நினைவில் வைத்திருப்பார்கள். நமக்கு எவ்வித பேதங்களும் தெரியாத வயதில் நம்முடன் இணைந்துகொள்ளும் ஆசிரியர்கள் வாழ்நாள் முழுமைக்குமான நினைவாக உருக்கொள்வதில் வியப்பேதுமில்லை. இன்றும் நம் சிறுவயதில் நமக்குக் கற்பித்த குரு ஒருவரை நினைக்கும்போது நமக்கு எழும் எண்ணங்கள் நிகரற்றவை. ஒரு ஒட்டுமொத்த சமூகத்தின் மதிப்பீட்டிலும் ஆசிரியர்கள் குறித்த மதிப்பீடு இதுவாகவே இருக்கிறது. இதனாலேயே ஒரு ஆசிரியரின் தனிப்பட்ட சிறிய வீழ்ச்சி கூட மிகப் பெரிய சமூக வீழ்ச்சியாகவே விவாதிக்கப்படுகிறது.

ஆசிரியர்களின் போராட்டத்தை இந்த மனநிலைக்குப் பின்னே வைத்தே நாம் பார்க்கவேண்டியுள்ளது. அரசுப் பள்ளி ஆசிரியர்களின் வேலை நிறுத்தம், அதிலும் இன்னும் சில நாள்களில் மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவேண்டிய நிலையில் இவர்கள் மேற்கொண்டிருக்கும் வேலை நிறுத்தம், பொது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட முடியாததற்கு, ஆசிரியர்களின் மீதான இந்த ஒட்டுமொத்த மதிப்பீடும் ஒரு காரணம். இந்த மதிப்பீடு சரியா தவறா, தேவைதானா என்பதெல்லாம் தனிப்பட்ட விவாதங்கள். யதார்த்தத்தில் இப்படியான ஒரு பொதுப்புத்தி நிச்சயம் இருக்கவே செய்கிறது.

ஜேக்டோ (பல்வேறு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு) மற்றும் ஜியோ (அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு) இணைந்து சில கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தத்தை அறிவித்தது. இவற்றில் உள்ள ஒன்றிரண்டு கோரிக்கைகள் மிக முக்கியமானவையே. குறிப்பாக, இவர்களது ஓய்வூதியப் பணம் என்ன ஆனது என்பது பொதுவில் கேட்கப்படவேண்டிய கேள்வியே. அரசு இதற்கு ஒரு பதில் அளித்தது. இவர்கள் இப்படிப் போராட்டம் செய்திருக்காவிட்டால் அரசு நிச்சயம் இந்தக் கேள்வியை எதிர்கொண்டிருக்காது என்றே நினைக்கத் தோன்றுகிறது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் இதனைப் பல காலமாகக் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள். அதேசமயம், புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்புமாறு அரசை நிர்ப்பந்திப்பது, நிச்சயம் செயல்படுத்த முடியாத ஒன்று.

பழைய ஓய்வூதியத் திட்டம் என்பது, சுருக்கமாகச் சொன்னால், அரசு ஆசிரியர் பணி ஓய்வு பெறும்போது பெறும் சம்பளத்தில் பாதியை வாழ்நாள் முழுமைக்கும் (அவரது மரணத்துக்குப் பிறகு அவரது மனைவியின் வாழ்நாள் முழுமைக்கும்) மாதா மாதம் பெறுவது. புதிய ஓய்வூதியத் திட்டத்தின்படி (2003ல் இருந்து), அரசு ஆசிரியரின் (அனைத்து அரசு ஊழியர்களின்) சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை (12%) அரசும் ஊழியரும் ஓய்வூதியப் பணமாக செலுத்துவது; அதைப் பங்குச் சந்தையில் அரசே முதலீடு செய்வது; ஓய்வின்போது ஒட்டுமொத்த பணமாக அரசு ஊழியர் பெற்றுக்கொள்வது. மாதாமாதம் ஓய்வூதியமெல்லாம் இல்லை.

2003 முதல் வேலைக்குச் சேர்ந்தவர்கள் இதனை ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள். அரசு வேலை கிடைக்கும்வரை அதற்காகப் போராடுவதும், சேர்ந்த பின்பு வேறு வகையில் போராடுவதும் சரியா என்ற கேள்வி எழவே செய்கிறது. ஒப்புக்கொண்டே வேலைக்குச் சேர்ந்திருக்கிறார்கள் என்பது முக்கியமான கேள்விதான். அதேசமயம், இதைத் தவிர்க்கமுடியாது என்பதும் மிக மிக முக்கியமானதே. எனவே வேலைக்குச் சேர்ந்த பின்பு எப்படிப் போராடலாம் என்பதை விட்டுவிடலாம். அரசுக்கும் இதில் பெரிய பொறுப்பு உள்ளது. பழைய ஓய்வூதியத் திட்டத்தின்படி இருந்த பல சலுகைகள் இப்போது இல்லை; அல்லது பெறுவது கடினமாக இருக்கிறது. உதாரணமாகச் சொல்லவேண்டும் என்றால், ஓய்வூதியப் பணத்தில் இருந்து கடன் (லோன்) பெறுவது. அதுமட்டுமின்றி, புதிய ஓய்வூதியப் பணத்தைப் பெறுவதில் உள்ள சிக்கல் மற்றும் காலதாமதம். இவையெல்லாம் அரசுத் தரப்பில் இருக்கும் எப்போதைக்குமான சிக்கல்கள். ஆனால் அரசு இதையெல்லாம் பொதுவெளியில் சொல்வது இல்லை. அரசு ஊழியர்கள் சொன்னாலும், பொது மக்கள் எப்போதுமே ஒரு எரிச்சலில் அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை அணுகுவதால், இதைக் கவனிப்பதோ ஏற்பதோ இல்லை.

எனவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தை ஒட்டுமொத்தமாகத் தவறு என்றோ தேவையற்றது என்றோ சொல்லிவிட முடியாது.

அதேசமயம், அரசு ஊழியர்களின் போராட்டம் நிச்சயம் அவர்களது பணித் திறமையோடு நிச்சயம் சேர்த்தே பார்க்கப்படும். 30-01-2019 தேதியிட்ட தமிழ் தி ஹிந்து இதழில் முன்னாள் நீதிபதி அரிபரந்தாமன், இந்த வேலை நிறுத்தத்த்தின் போது அரசு ஊழியர்களின் செயல்பாடுகளைச் சொல்வ்வது வேலை நிறுத்தத்தைத் திசை திருப்புவது என்று சொல்லி இருக்கிறார். இதை நிச்சயம் ஏற்கமுடியாது. அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தத்தின்போது அவர்கள் பெறும் சம்பளம், அவர்களுக்குத் தரப்படும் சலுகைகள் இவற்றுக்கு எதிராக அவர்கள் செய்யும் பணி, ஒப்பீட்டளவில் மற்றவர்களது வேலை மற்றும் சம்பளம் என எல்லாமும் விவாதிக்கப்படுவது நிகழவே செய்யும். விவாதிக்கத்தான் வேண்டும். அப்போதுதான் அரசு ஆசிரியர்களும் ஊழியர்களும் தாங்கள் எப்பேற்பட்ட ஒரு வேலையில் இருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ள ஒரு வாய்ப்புக் கிடைக்கும். இதனால் பயன் இல்லாமல் போகலாம் என்பது வேறு விஷயம்.

ஒரு அரசு ஆசிரியர் ஆவேசமாகப் பேசும் வீடியோ ஒன்றை அனைவரும் பார்த்திருக்கலாம். நாங்கள் ஏன் வேறு பணிகளைச் செய்யவேண்டும், நாங்கள் ஏன் வேலைக்குச் சேர்ந்த பின்னரும் தேர்வெழுதி வெல்லவேண்டும் என்றெல்லாம் கேட்டிருக்கிறார். வேறு பணிகளைச் செய்வது அரசுக்கு நிச்சயம் தேவை. இதைத் தவிர்க்கவே முடியாது. ஏனென்றால் அரசு ஆசிரியர்கள் அரசின் ஓர் அங்கம். பொதுத் தேர்வுகளின் போது நீண்ட நாள் விடுப்பு கிடைக்கும் ஒரே துறை அது. அப்படியானால் அவர்கள் பயன்படுத்தப்படவே செய்வார்கள். ஏன் மீண்டும் மீண்டும் தேர்வெழுதவேண்டும் என்பது கொஞ்சம்கூடப் பொருட்படுத்த முடியாத கேள்வி. ஒவ்வொரு ஆசிரியருக்கும் (அரசு ஆசிரியர், தனியார்ப் பள்ளி ஆசிரியர் என்ற பேதமில்லாமல்) தெரியும், ஒட்டுமொத்த ஆசிரியர்களின் எத்தனை சதவீதம் பேர் சராசரிக்கு மேல் தேறுவார்கள் என்று. உண்மையில் ஆசிரியர்களின் தகுதி என்பது ஒட்டுமொத்த இந்தியாவில் மிகவும் கவலைக்கிடமாக இருக்கிறது என்பதே என்னுடைய மனப்பதிவு.

தமிழ்நாட்டுக் கல்வியைக் குறித்த ஆய்வின் படி, கிராமப்புறப் பள்ளிகளின் நிலைமையைக் குறித்த புள்ளிவிவரம்:

  • ஐந்தாம் வகுப்பில் வார்த்தையை வாசிக்கத் தெரியாதவர்கள் தோராயமாக 32% பேர்.
  • ஆறாம் வகுப்பில் 23% பேர், ஏழாம் வகுப்பில் 15%, எட்டாம் வகுப்பில், 9% பேர்.
  • ஐந்தாம் வகுப்பில் கழித்தல் தெரியாதவர்கள் தோராயமாக 39% பேர்.

இன்னும் கூட்டல், பெருக்கல், வகுத்தல், வட்டிக் கணக்கு, செய்யுள் படித்தல், ஆங்கிலம் அறிவியல் எல்லாம் இருக்கிறது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

அரசுப் பள்ளிகள் தமிழ்நாட்டில் தோராயமாக 37%. அரசு உதவி பெறும் பள்ளிகள் 19%. மீதி தனியார்ப் பள்ளிகள்.

ஜேக்டோ அமைப்பினர் வேலை நிறுத்தத்தின்போது அரசு உதவி பெறும் பள்ளியின் ஆசிரியர்களும் பங்குகொள்ளவேண்டும் என்றாலும், அவர்கள் வேலைக்குச் சென்றிருக்கிறார்கள். அரசு உதவி பெறும் பள்ளியின் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படியோ ஆணையின்படியோ இவர்கள் நடந்துகொள்வார்கள். அதேசமயம் ஜேக்டோ அமைப்புக்கு ஆதரவாகவும் இருப்பார்கள். அப்படியானால் முழுக்க முழுக்கப் பங்கேற்றது அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களே. அதாவது, கிராப்புறங்களில் இருக்கும் மாணவர்களே இப்போராட்டத்தின் பலி.

பொதுவாகவே நம் கல்வி அமைப்பு என்பது, குறிப்பாக கிராமப்புற அரசு பள்ளிகளின் கல்வி அமைப்பு, முழுக்க முழுக்க ஆசிரியர்களைச் சார்ந்தது. பல்வேறு சமூக மற்றும் குடும்பச் சூழலில் இருந்து அரசுப் பள்ளி ஒன்றையே தனது விடுதலைக்கான வழி என்று நம்பி வரும் மாணவர்களே இப்பள்ளிகளில் அதிகம் இருப்பார்கள். இவர்களைக் கையில் எடுத்து நல்ல கல்வி தரவேண்டிய பொறுப்பே அரசு ஆசிரியர்களின் முதன்மையான வேலை. நம் கல்வி அமைப்பின் இன்னொரு பிரச்சினை, தேர்வு நேரங்களில் மட்டுமே பொறுப்பாகப் படிப்பது. இதற்கு ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவருமே காரணம். எனவே இந்தத் தேர்வு நேரத்தில் இப்படியான அரசு ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் எந்த வகையான பாதிப்பை ஏற்படுத்தும் என்று யோசித்துப் பார்க்கவேண்டும். இதனால் பாதிப்படையப் போகும் கிராமப்புற மக்களுக்கு அரசு ஆசிரியர்களின் என்ன பதில் உள்ளது?

இதிலுள்ள நகை முரண் என்னவென்றால், பாதிக்கப்படப் போவது கிராமப்புற மக்கள் என்பதாலேயே அரசு ஊழியர்களுக்குப் பொது மக்களிடம் பெரிய ஆதரவு இல்லை என்பதுதான். இது கொடுமை என்றாலும், பெரும்பாலான நகர்ப்புற மாணவர்கள் தனியார்ப் பள்ளிகளில் படிப்பதால், இவர்களது பெற்றோர்கள் அரசுத் தரப்பையும் சரி, அரசு ஆசிரியர்கள் தரப்பையும் சரி, ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இதனால் யாருக்கும் ஒரு ஆதரவோ எதிர்ப்போ பெரிய அளவில் உருவாகிவரவில்லை. அதேசமயம் அரசு ஊழியர்கள் பெறும் சம்பளம் குறித்த புள்ளிவிவரங்கள், பொது மக்களின் மனதில், இவர்கள் இன்னும் சம்பளம் கூடுதலாகப் பெறவே போராடுகிறார்கள் என்ற எளிய எண்ணத்தை மட்டும் விதைத்துவிட்டது. இது அரசுக்குப் பெரிய வாய்ப்பாக அமைந்துவிட்டது. போராட்டமும் பிசுபிசுத்துவிட்டது.

பத்து வருடம் ஆசிரியர் பணியில் இருக்கும் ஒரு அரசு ஆசிரியரின் தோராயமான சம்பளம் நிச்சயம் 65,000 ரூபாய் இருக்கலாம். தலைமை ஆசிரியரின் சம்பளம் 85 ரூபாய்க்கும் கூடுதலாக இருக்கலாம். எப்போதெல்லாம் மத்திய அரசு பே கமிஷனை நியமிக்கிறதோ அப்பொதெல்லாம் கூடுமான வரையில் தமிழக அரசும் அதை ஒட்டிய சம்பளத்தை அறிவித்துவிடுகிறது. காலதாமதமானாலும் முன்கூட்டிய தேதியிட்டு அறிவித்து ஈடுகட்டுவிடுகிறது. இந்நிலையில் போராட்டத்தில் சம்பள உயர்வையும் (அல்லது வேறுபாடுகளைக் களைவது) சேர்த்துக்கொண்டிருப்பது பொது மக்களுக்கு எரிச்சலையே ஏற்படுத்தி இருக்கிறது.

3000க்கும் அதிகமான பள்ளிகளை மூடுவதைக் கைவிடவேண்டும் என்ற கோரிக்கையும் தேவையற்றதே. இன்றைய நிலையில் அரசுப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் குறைந்துவரும் நிலையில், தமிழ்வழிக் கல்வியின் ஆர்வம் குறைந்துவரும் நிலையில், பள்ளிகளை மூடுவது என்பது தவிர்க்கமுடியாதது. 35% பேருக்கு எழுதப்படிக்கத் தெரியாது என்றால் எப்படி அந்தப் பள்ளிகளில் சேர முன்வருவார்கள்? இந்த புள்ளிவிவரம் தனியார்ப் பள்ளிகளையும் உள்ளடக்கியதுதான் என்றாலும், ஒப்பீட்டளவில் இது அரசுப் பள்ளிகளில்தான் அதிகம் என்பது வெளிப்படை. இந்நிலையில் மாணவர்களே இல்லாத அல்லது மாணவர்கள் குறைந்த பள்ளிகளை மூடுவது, குறைவான அளவில் உள்ள மாணவர்களை இன்னொரு பள்ளியோடு இணைப்பது எல்லாம் நிகழவே செய்யும்.

இதற்கான தீர்வு, அரசுப் பள்ளிகளின் தரத்தை மேம்படுத்துவதிலேயே உள்ளது. அரசு ஆசிரியர்களின் தரத்தை உயர்த்துவதிலேயும் இருக்கிறது. ஆனால் அரசு ஆசிரியர்களோ, எங்களுக்கு ஏன் இன்னொரு தேர்வு என்று அப்பாவியாகக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் அரசுக்கு தன் மாணவர்களின் எதிர்காலம் குறித்த எவ்வித அக்கறையும் இல்லை. பாடத்திட்டத்தை உருவாக்குவதில் உள்ள முனைப்பு, அரசுப் பள்ளிகளை ஆயத்தப்படுத்துவதில் இல்லை. மிக முக்கியமான காரணம், அரசு ஊழியர்களின் வாக்கு வாங்கி என்கிற மாயை.

மாணவர்களின் தரக் குறைப்பாட்டுக்கு அரசும் நிச்சயம் ஒரு காரணமே. ஆனால் தேர்வை எதிர்கொள்ளும் நேரத்தில் மாணவர்கள் இருக்கும்போது இந்த வேலை நிறுத்தம் அராஜகம் என்பதுதான் உண்மை. வேலை நிறுத்தத்தில் பங்கேற்காதவர்களுக்கு இடமாற்றத்தில் முன்னுரிமை தரப்படும் என்று அரசு சொன்னதுமே பிசுபிசுத்துப் போய்விட்டது இந்தப் போராட்டம். தங்கள் வசதி என்று வந்ததும் ஆசிரியர்கள் உடனே வேலைக்கு வந்துவிட்டார்கள். இதில் கிண்டலுக்கு ஒன்றுமில்லை என்றாலும்கூட, மாணவர்களைக் குறித்தும் இவர்கள் யோசித்திருக்கலாமே என்ற எண்ணம் வலுப்பதைத் தவிர்க்கமுடியவில்லை.

இந்தக் கூத்துக்கு இடையில் இன்னொன்றும் நிகழ்ந்தது. எனக்கு (நமக்கு!) அது இன்னமும் முக்கியமானது. ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்துக்கான காரணங்களில் ஒன்று, சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கு ஆதரவு தருகிறது. பள்ளி ஆசிரியர்களுக்கும் சபரிமலைக்குப் பெண்கள் செல்வதற்கும் என்ன தொடர்பு? ஏன் நீதிபதி பரந்தாமன் ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை நீதிமன்றம் பாகுபாடு காட்டாமல் அணுகவேண்டும் என்று மட்டும் சொல்லி, இப்போராட்டத்தில் சபரிமலை விவகாரம் தேவையற்றது என்று சொல்லவில்லை? கம்யூனிஸம். அரசு ஆசிரியர் சங்கங்களில் ஒன்று முற்போக்காளர்களின் சங்கம் என்ற பெயரில் இந்தக் கோரிக்கையை நுழைத்துள்ளது. ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கை அல்ல இது. எங்கே இருந்தாலும் தங்கள் கோரிக்கையை நுழைத்துவிடுவதில் இவர்கள் சாமர்த்தியசாலிகள். அனுபவம் மிக்கவர்கள். நல்லவேளையாக ஹிந்து ஆதரவு ஆசிரியர் சங்கம் ஒன்று இதற்கு பதிலடி கொடுத்தது. ஒருவழியாக சபரிமலைக்குப் பெண்கள் செல்லும் விஷயத்திலான கோரிக்கையைப் பொதுவில் பெரிய அளவில் ஜேக்டோ கொண்டு செல்லவில்லை என்பது ஆறுதல்.

ஆசிரியர்களின் வேலை நிறுத்தம் தொடர்பான நியாயமான கோரிக்கைகளை அரசு ஆராயவேண்டும். தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ப்ரீகேஜி வகுப்புகளுக்குச் செல்வதை மரியாதைக் குறைவாக நினைக்கிறார்கள். இதை அரசு புரிந்துகொள்ளவேண்டும். தனிப்பட்ட அளவில் இது எனக்குப் பெரிய விஷயமில்லை என்பதையும் சொல்கிறேன். ஆனால் ஆசிரியர்களின் உணர்வுக்கு மரியாதை அளிக்கவேண்டும். ப்ரீ கேஜி வகுப்புகளுக்கு மாண்டிசோரி தேர்ச்சி போதுமானது என்று மத்திய அரசின் வழிகாட்டும் குழு சொல்லி இருக்கிறது. இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி தேர்வு பெற்ற ஆசிரியர்கள் இந்த வகுப்புகளுக்குச் செல்வதை ஏற்காதது நியாயமே. இந்த வருடம்தான் இது தொடங்கி இருக்கிறது என்பதால், எதிர்வரும் வருடங்களில் அரசு இப்பிரச்சினையைச் சரி செய்யும் என்றே தோன்றுகிறது. இது போன்ற விஷயங்களில் அரசு ஆசிரியர்களுக்கு ஆதரவாகச் செயல்படுவதே சரியானது. அப்போதுதான் அடுத்த நகர்வாக அரசு ஆசிரியர்களின் தர மேம்படுத்துதலை மேற்கொள்ள முடியும்.

பொதுவாகவே அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தம் மிகவும் அரிதான காலங்களில் நடப்பது நல்லது. அதாவது வேலை நிறுத்தமே கூடாது என்ற வகையில் இருந்துவிடுவது இனி அவர்களுக்கு நல்லது. காலம் மாறி இருக்கிறது. வேலை நிறுத்தத்தை பொதுமக்கள் கொண்டாடின அல்லது ஏற்றுக்கொண்ட காலம் போய்விட்டது. நீதிமன்றமும் சரி, மக்களும் சரி, எந்த ஒரு அரசுத் தரப்பின் போராட்டத்தையும் இனி சட்டென ஏற்றுக்கொள்ளப் போவதில்லை. இதனடிப்படையில் தங்கள் தேவையை அரசுத் தரப்போடு பேசியோ, நீதிமன்றத்தை அணுகியோ அரசு ஊழியர்கள் பெற்றுக்கொள்வது நல்லது. நீதிமன்றத்தின் தலையீடு என்பது அரசு நிகழ்வதற்கு சில பிரச்சினைகளை உருவாக்கலாம். ஆனால் அது குறித்துக் கவலை கொள்ளவேண்டியது அரசுதானே ஒழிய, அரசு ஊழியர்கள் அல்ல.

நன்றி: வலம் மாத இதழ்

Share

நீட்

நீட் தேர்வில் தமிழில் எழுதிய மாணவர்கள் அனைவருக்கும் 196 மதிப்பெண்களை வழங்கச் சொல்லி உயர்நீதி மன்றம் அதிரடித் தீர்ப்பு வழங்கி உள்ளது. நீதிபதிகள் செல்வம் மற்றும் பஷீர் அஹம்த் அடங்கிய பென்ச், தற்போது நடக்க இருக்கும் கலந்தாய்வையும் நிறுத்தச் சொல்லி உத்தரவிட்டுள்ளது. சிபிஎஸ்இ இரண்டு வாரங்களுக்குள் இந்த புதிய மதிப்பெண்களிடன்படி தரவரிசையை உருவாக்கவும் அறிவுறுத்தி உள்ளது. இதை எதிர்த்து சிபிஎஸ்இ உச்சநீதிமன்றம் செல்கிறது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு பல கேள்விகளையும் குழப்பங்களையும் தோற்றுவித்துள்ளது.

தமிழில் தேர்வு நடந்த உடனேயே, பல கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டிருப்பதாகப் புகார்கள் எழுந்தன. டெக் ஃபார் ஆல் என்னும் அமைப்பு, இக்கேள்விகளில் உள்ள தவறுகளைப் பட்டியலிட்டு, குறைந்தது 196 மதிப்பெண்களுக்குக் கேள்விகள் தவறாகக் கேட்கப்பட்டுள்ளன என்றது. சிபிஎம்மின் டி.கே.ரங்கராஜன் இதை நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்றார். இதை ஒட்டிய தீர்ப்பே இப்போது வெளியாகியுள்ளது.

ஏற்கெனவே மாணவர்களுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், இத்தீர்ப்பின்படி தேர்வுபெற்ற புதிய மாணவர்களின் பட்டியல் வெளியிடப்பட்டால், ஏற்கெனவே தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்ட மாணவர்களின் நிலை என்ன? அவர்களை அப்படியே வைத்துக்கொண்டு, கூடுதலாக புதிய மாணவர்களையும் சேர்த்துக்கொள்ளப் போகிறார்கள் என்றால், கூடுதல் இடங்களை அரசு உருவாக்குமா? இப்படியான சிக்கலை உருவாக்கி இருக்கிறது இத்தீர்ப்பு.

இப்பிரச்சினைக்கு அடிப்படைக் காரணம் சிபிஎஸ்இயின் பொறுப்பற்ற தன்மைதான். நீட் பிரச்சினையில் தொடக்கம் முதலே சிபிஎஸ்இ அலட்சியமாகவே நடந்துகொண்டுள்ளது. நீட் தேர்வுக்கான மையம் ஒதுக்குதலில் சிபிஎஸ்இயின் எதிர்பாராத பிரச்சினைகளைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் மாணவர்களின் எதிர்காலத்தையே நிர்ணயிக்கும் கேள்வித் தாள் பிரச்சினையில் சிபிஎஸ்இ நடந்துகொண்ட விதம் நிச்சயம் பொறுப்பற்றதனமே. நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ, தாங்கள் சிறப்பான மொழிபெயர்ப்பாளர்களையே நியமனம் செய்ததாகவும், அதற்குமேல் அதில் பிரச்சினை இருந்தால் தங்களால் ஒன்றும் செய்யமுடியாது என்றும் கூறி இருக்கிறது. இது இத்தனை எளிதாகக் கடந்து செல்லவேண்டிய விஷயம் அல்ல.

சிபிஎஸ்இயின் பாடத்திட்டப்படியான புத்தகங்கள் தமிழில் இல்லை என்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்துக்கு இணையான தமிழ் வார்த்தைகள் தொடர்ச்சியாகத் தமிழ்ப்பாடத்திட்டப்படியான அரசுப் பாடப் புத்தகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த விஷயத்தில் தமிழக அரசுகள் தொடர்ச்சியாகப் பல காலங்களாக மிகக் கவனமாகவே செயல்பட்டு வருகின்றன. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே தேர்வு எழுதப்போவதில்லை என்னும் நிலையில், தமிழில் தேர்வை எதிர்கொள்ளப் போகிறவர்கள் அரசுப் பள்ளியைச் சேர்ந்தவர்கள் என்னும் நிலையில், மொழிபெயர்ப்புக்கான சரியான அறிவியல் வார்த்தைகளை அரசுப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் உள்ளவற்றை ஒப்புநோக்கித் தேர்ந்தெடுத்திருக்கவேண்டும். மிகச் சிறிய விஷயம் இது. இதைச் செய்திருந்தால் இந்தியா முழுமைக்குமான தலைக்குனிவை சிபிஎஸ்இ சந்திக்க நேர்ந்திருக்காது.

ஆங்கிலம் மற்றும் மண்டல மொழிகளில் கேள்விகள் தரப்பட்டிருக்கின்றன என்றாலும் இறுதியான முடிவு ஆங்கிலக் கேள்வியே என்ற ஒரு பொறுப்புத் துறப்பை ((Disclaimer) சிபிஎஸ்இ செய்திருக்கிறது. “மொழிபெயர்ப்பில் சந்தேகமான வார்த்தைகள் இருப்பின், அந்தக் கேள்விகளின் பதில்களை ஏற்பதில் ஆங்கில வினாக்களின் பொருள்தான் முடிவில் ஏற்றுக்கொள்ளப்படும். தமிழில் தேர்வை எழுதும் மாணவர்கள், இதை உணர்ந்துகொள்ள வேண்டும்” என்கிறது `பொறுப்புத்துறப்பு!’ இதையும் ஏற்பதற்கில்லை. ஒன்றிரண்டு கேள்விகள் என்றால் சமாதானம் கொள்ளலாம். 49 கேள்விகள் என்றால் அதை எப்படி எடுத்துக்கொள்வது. மொத்தம் 180 கேள்விகள், 720 மதிப்பெண்கள். இதில் 49 கேள்விகள், 196 மதிப்பெண்களில் குழப்பம் என்றால் அதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்.

49 கேள்விகளில் என்ன என்ன தவறுகள் நேர்ந்தன என்பதைச் சரியாக அறியமுடியவில்லை. டெக் ஃபார் ஆல் இக்கேள்விகளின் பட்டியலை வெளியிட்டதாகச் செய்திகளில் பார்க்கமுடிந்தது. ஆனால் ஒட்டுமொத்த கேள்விகளின் பட்டியலும் கைக்குக் கிடைக்கவில்லை. டெக் ஃபார் ஆல் அமைப்புக்குத் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டேன். மடல் அனுப்பினேன். என்ன தேவைக்காக என்றும் என்னைப் பற்றிச் சொல்லுமாறும் கேட்டார்கள். என் ஜாதகத்தைத் தவிர அனைத்தையும் அவர்களுக்குச் சொன்னேன். இதை அறிந்துகொள்ளவேண்டும் ஒரு முனைப்பில் கேட்பதாகச் சொன்னேன். ஆனால் அவர்களிடம் இருந்து பதிலே இல்லை.

49 கேள்விகள் அனைத்துக்குமே ஏன் மதிப்பெண் தரவேண்டும் என்பதும் கேட்கப்படவேண்டிய கேள்வியே. இந்த 49 கேள்விகளில் எவையெல்லாம் மாணவர்களைக் குழப்பும் கேள்விகள் என்பதைத் தெரிந்துகொண்டு அதற்கு மட்டும் மதிப்பெண்கள் வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கலாம். ஆனால் நீதிமன்றத்தின் நோக்கம், இது போன்ற ஒரு பொறுப்பற்ற செயலைச் செய்த சிபிஎஸ்இஐப் பதற வைப்பது என்றே தெரிகிறது. அப்படி ஒன்று நடந்தால்தான் இனி எல்லாம் சரியாகச் செயல்படும் என்று நீதிமன்றம் யோசித்திருக்கிறது. இனி வரும் காலங்களில் சிபிஎஸ்இ இத்தேர்வுகளை நடத்தாது என்றும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸி நடத்தும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

49 கேள்விகளின் பட்டியலில் உள்ள சில கேள்விகள் மட்டும் எனக்குக் கிடைத்தன. இவற்றைப் பார்ப்பதற்கு முன்னர், என் தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியைப் பார்ப்பது, மேலதிகப் புரிதலைத் தர உதவலாம். நான் தமிழ் வழிக் கல்வியில் பயின்றவன். அரசுப் பள்ளியில் படித்தவன். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் நல்ல மதிப்பெண்கள் பெறும் கனவில் தேர்வில் பங்கெடுத்தேன். உயிரியல் தேர்வின் கேள்வித் தாளின் முதல் பக்கத்திலேயே ம்யூட்டேஷன் என்றால் என்ன என்றொரு கேள்வி இருந்தது. நான் உயிரியலில் மிக நல்ல மதிப்பெண்கள் வாங்க நினைத்திருந்தவன். இந்தக் கேள்வி எனக்குப் பெரிய பதற்றத்தைத் தந்தது. ஏனென்றால் ம்யூட்டேஷன் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது. மரபணு மாற்றம் என்றோ மரபணுப் பிறழ்வு என்றோ தூண்டப்பட்ட மரபணு மாற்றம் என்றோ படித்தேன். (இப்போது நினைவில்லை.) இன்னும் சில கேள்விகள் இப்படி இருந்த நினைவு. தேர்வு முடிந்ததும் மாணவர்கள் அனைவரும் பேசிகொண்டது, தவறாக இருந்த கேள்விகளைப் பற்றிய வருத்தத்தைத்தான். இதில் நீட் தேர்வில் பங்குகொள்ளும் மாணவர்களின் வருத்தமும் பதற்றமும் எப்படி இருக்கும் என்று யூகிக்கலாம். எல்லாருமே தேர்வு பெறப்போவதில்லை என்றாலும், இக்கேள்விகளால் பாதிக்கப்பட்டிருக்கக்கூடிய மாணவர்களை நாம் புறக்கணிக்கமுடியாது.

இதன் அடிப்படையில் 49 கேள்விகளின் மொழிமாற்றப் பிரச்சினையை அணுகவேண்டும். கொஞ்சம் மாற்றி மொழிபெயர்த்திருந்தாலும் ஏன் மாணவர்களால் அதைப் புரிந்துகொள்ளமுடியவில்லை என்பது, நம் பாடத்திட்டம் உருவாக்கும் மாணவர்களைப் பற்றிய வேறொரு பிரச்சினை. ஏன் சிபிஎஸ்இ சரியான மொழிபெயர்ப்பை உருவாக்க முயற்சி எடுக்கவில்லை என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

தமிழ் அல்லாமல் பிறமொழிகளில் எப்படி இக்கேள்விகள் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன, அங்குள்ள மாணவர்கள் எப்படி இதை எதிர்கொண்டார்கள், அங்குள்ளவர்கள் சார்பாக ஏன் வழக்குகள் பதிவாகவில்லை என்பதெல்லாம் கூட நாம் யோசிக்க வேண்டியவையே.

என் பார்வைக்குக் கிடைத்த தவறான தமிழ்க் கேள்விகளை மட்டும் இப்போது பார்க்கலாம். இவை இணையத்தில் கிடைத்த செய்திகளில் இருந்து சேகரிக்கப்பட்டவை.

செங்குத்து என்பது நேர்குத்து என்று கேட்கப்பட்டுள்ளது. செங்குத்து என்றே நான் பள்ளிகளில் படிக்கும் காலம் தொட்டு 25 வருடங்களுக்கும் மேலாக இருந்து வருகிறது. இதை நேர்குத்து என்று சொன்னால் மாணவர்களுக்குப் புரியும் என்று எதிர்பார்க்கமுடியாது. சிறுத்தை என்பதற்குப் பதிலாக அதன் ஆங்கிலப் பெயரை அப்படியே தமிழில் சீத்தா என்று எழுதி இருக்கிறார்கள். சிறுநீர் நாளம் என்று கேட்காமல் யூரேட்டர் என்று கேட்கப்பட்டிருக்கிறதாம். இயல்பு மாற்றம் என்பது இயல் மாற்றம் என்றும், தாவரங்கள் என்பது ப்ளாண்டே என்றும் கேட்கப்பட்டுள்ளன. இறுதி நிலை என்பது கடை நிலை என்றாகியுள்ளது. புதிய அரிசி ரகம் என்பது புதிய அரிசி நகம் என்று கேட்கப்பட்டுள்ளது. வவ்வால் என்பது வவ்னவால் என்று அச்சிடப்பட்டுள்ளது. பலகூட்டு அல்லீல்கள் என்பது பல குட்டு அல்லீல்கள் என்றாகி உள்ளது. ஆக்டோபஸ் ஆதடபஸ் என்றாகி இருக்கிறது. நீள  பரிமாணங்கள் என்பது நீள  அலகுகள் என்று வந்திருக்கிறது. விதை வங்கி வதை வங்கி ஆகி இருக்கிறது.

இப்படியாகப் பல கேள்விகள் தவறாகவே கேட்கப்பட்டுள்ளன. டெக் ஃபார் ஆல் 49 கேள்விகள் தவறு என்று பட்டியலிட்டாலும், 18 கேள்விகளை ஓரளவுக்குப் புரிந்துகொள்ளலாம் என்கிறார்கள் சிலர். ஆனால் உயர்நீதிமன்றம் கேள்விகளின் தவறுகள் எத்தகையவை என்பதற்குள் போகவே இல்லை. உயர்நீதிமன்றத்தின் நிலைப்பாடு சரியான ஒன்றே.

புதிய தலைமுறை தொலைக்காட்சியின் விவாதம் ஒன்றில் பங்கேற்ற கோகுல ஸ்ரீனிவாஸ் இது தொடர்பான முக்கியான கருத்து ஒன்றை வெளியிட்டார். “இத்தீர்ப்பு சரியான ஒன்றே. ஆனால் ஏன் நீதிமன்றம் இத்தீர்ப்பை முன்பே வெளியிட்டிருக்கக்கூடாது” என்பதுதான் அவரது நிலைப்பாடு. உண்மையில் இத்தீர்ப்பு முன்பே வந்திருக்குமானால் பல குழப்பங்களைத் தவிர்க்க அது உதவியிருக்கக்கூடும். ஆனால் ஏன் சிபிஎஸ்இ உயர்நீதிமன்றத் தீர்ப்பு வரும்வரை தரவரிசைப் பட்டியலை வெளியிடாமல் காத்திருக்கக்கூடாது என்னும் கேள்வியும் நியாயமானதுதான். சிபிஎஸ்இ தான் தவறு செய்ததாகவே நினைக்கவில்லை என்பதுதான் இதற்கான வருத்தத்துக்குரிய பதில்.

நீட் தொடர்பாக ஏற்கெனவே பல பிரச்சினைகள் நிலவி வரும் சூழலில் இப்பிரச்சினை இன்னும் சிக்கலைத் தீவிரப்படுத்தி இருக்கிறது. ஏற்கெனவே மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் சேர்க்கை குறைந்து சிபிஎஸ்இ செல்லும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கத் துவங்கி இருக்கிறது. மெட்ரிகுலேஷன் பள்ளிகள் எல்லாமே தங்கள் வசம் சிபிஎஸ்இ பள்ளிகள் இருக்கவேண்டிய அவசியத்தை உணர்ந்து அவற்றைத் துவங்கத் தேவையான முயற்சிகளை எடுக்கத் தொடங்கிவிட்டன. நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலான புதிய பாடத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்நிலையில் தமிழில் கேள்விகள் இப்படித்தான் இருக்கும் என்பது நீட் எதிர்ப்பாளர்களுக்கும், மத்திய அரசின் எதிர்ப்பாளர்களுக்கும் பெரிய வசதியாகப் போயிருக்கிறது.

நீட் தேர்வின் குழப்படிகளைக் களைவதில் ஆர்வம் காட்டுவதைவிடக் கூடுதலாக, நீட் தேர்வு ஒழிப்பில் காட்டுகிறார்கள். இனி அது சாத்தியமில்லை என்னும் நிலையையும் அவர்கள் புரிந்துகொண்டிருக்கிறார்கள். எனவே மத்திய அரசு தமிழ்நாட்டுக்கு வேண்டுமென்றே வஞ்சனை செய்கிறது என்கிற பிரசாரத்தைத் துவங்கி இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நீட் தேர்வெழுத மாணவர்களுக்கு வேறு மாநிலங்கள் ஒதுக்கப்பட்டன என்ற பிரச்சினையிலும் இவர்கள் இதையே முன்வைத்தார்கள். தமிழ்நாட்டை ஒழிக்க ஏன் மத்திய அரசு நீட் தேர்வில் பங்குபெறும் ஆயிரம் மாணவர்களை மட்டும் குறி வைக்கவேண்டும் என்று இவர்கள் யோசிக்கவே இல்லை. இதன்மூலம் தமிழ்நாட்டை என்ன செய்துவிடமுடியும்? தமிழில் தேர்வுக்கேள்விகள் இப்படி வந்திருப்பது பெரிய துரதிர்ஷ்டம், அநியாயம். ஆனால் இதன் பின்னணியில் அலட்சியம் மட்டுமே இருக்கிறதே ஒழிய தமிழ்நாட்டை ஒழிக்கவேண்டும் என்கிற எந்த ஒரு எண்ணமும் இருக்க வாய்ப்பில்லை.

மற்ற அரசுகளுக்கும் தற்போதைய மத்திய அரசுக்கும் உள்ள ஒரே வித்தியாசம், தவறுகள் நேரும்போது அதைத் திருத்திக்கொள்ள எடுக்கும் நடவடிக்கைதான். இதைப் பற்றி ஏன் மத்திய அரசு பேசுவதில்லை என்ற கேள்விகள் பொருளற்றவை. பேச்சைக் காட்டிலும் செயல்பாடும் தீர்வுமே முக்கியம். இனி சிபிஎஸ்இ நடத்தப்போவதில்லை, நேஷனல் டெஸ்டிங் ஏஜென்ஸிதான் நடத்தும் என்பது, இப்பிரச்சினைகளை ஒட்டி மத்திய அரசு எடுத்திருக்கும் முடிவு ஒரு முன்னகர்வு. அது எப்படி இயங்கும், அது சிபிஎஸ்இயில் இருந்து எப்படி வேறுபட்டிருக்கும் என்பதெல்லாம் இனிதான் நாம் பார்க்கவேண்டியது. ஆனால் நிச்சயம் காங்கிரஸ் அரசைப் போல ஒரு கண் துடைப்பு அறிவிப்பாக இது இருக்காது என்று நம்பலாம். சிபிஎஸ்இ எதிர்ப்பு மற்றும் மத்திய அரசு எதிர்ப்பு இரண்டையும் ஒன்றாக்கி, வெகுஜன மக்கள் மத்தியில் மத்திய அரசு எதிர்ப்புக்கான விதையை ஊன்றுவதுதான் சிலரின் நோக்கம். இதிலிருந்து விடுபட்டு தமிழக மாணவர்களுக்கு எது தேவை என்பதை மட்டும் யோசிப்பதுதான் சரியான நிலைப்பாடு.

உச்சநீதி மன்றத்தில் வரும் தீர்ப்பு இவ்விஷயத்தில் ஒரு முடிவைக் கொண்டு வரலாம். அதை ஒட்டி இன்னும் குழப்பங்கள் தமிழ்நாட்டில் அரங்கேறலாம். ஆனால் இனி வரும் தேர்வுகளில் இப்படியான ஒரு அலட்சியத்தை எந்த அமைப்பும் கைக்கொள்ளாது என்பதை இப்பிரச்சினை உறுதி செய்திருக்கிறது என்றே நம்புகிறேன்.

நன்றி: வலம் ஆகஸ்ட் 2018

Share

வந்தார்கள் வென்றார்கள்

சின்ன வயதில் அதாவது 21 வயதில்! நான் விரும்பி வாசித்த முதல் அ-புனைவு புத்தகம் வந்தார்கள் வென்றார்கள் என நினைக்கிறேன். அதற்கு முன்பெல்லாம் அங்கொன்றும் இங்கொன்றுமாக சில புத்தகங்களை வாசித்திருக்கிறேன். திருநெல்வேலி டவுன் நூலகத்தில் ஹிட்லர் வாழ்க்கை வரலாறு வாசித்தேன். அதிலுள்ள படங்கள் ரொம்பவும் பிடித்துப்போய் அவற்றை மட்டும் கிழித்து எடுத்து வைத்துக்கொண்டேன். சில மாந்திரிகப் புத்தகங்களைப் படித்து பயந்து போய் இருந்ததும் நினைவுக்கு வருகிறது. கட்டை விரலை சூரியன் முன்னர் காண்பித்து சூரியனுடன் கட்டைவிரலைப் பார்த்து கண்ணை மூடினால் கட்டை விரல் நிழல் கண்ணுக்குள் தெரியும் விதத்தில் உங்கள் மரணத்தை நிர்ணயிக்கலாம் என்ற ரீதியில் என்னவோ படித்து சூரியனைப் பார்த்து கண்ணை மூடி சட்டெனத் திறந்து – நினைத்தாலே சிரிப்பாக வருகிறது.
 
பாடங்கள் படிக்கும் காலத்தில் ஒரு புத்தகத்தைக்கூடப் படிக்க விடமாட்டார்கள் வீட்டில். ஆனந்தவிகடன் குமுதம் என்று எதுவும் படிக்கக்கூடாது. பின்னர்தானே நாவலெல்லாம். 6ம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்பு விடுமுறையில் சில புத்தகங்கள் வாசித்தேன். கே.பாலசந்திரின் மூன்று முடிச்சு நாவல், சாண்டில்யனின் ஒரே சமூக நாவல் (புயல் வீசிய இரவில்?) என்று சிலவற்றைப் படித்தேன். பள்ளி திறந்ததும் பாடப் புத்தகத்தைத் தவிர எதையும் தொடக்கூடாது. கல்லூரி செல்லவும் கொஞ்சம் தைரியமாக நிறைய வாசிக்க ஆரம்பித்தேன். அப்படியே நெல்லை நூலகம் வழி, பாலகுமாரனின் பல புத்தகங்கள் என்று விரிந்தது.
 
வேலை கிடைத்ததும் வந்தார்கள் வென்றார்கள் வாங்கினேன். மிரள வைத்த புத்தகம் அது. இத்தனை நாள் இப்புத்தகத்தைப் படிக்காமல் இருந்துவிட்டோமோ என்கிற எரிச்சல் ஒரு பக்கம். பள்ளியில் இதே முகலாயர்களை ஏன் இப்படி அறிமுகப்படுத்தவில்லை என்ற கடுப்பு இன்னொரு பக்கம். சரி, பாடப்புத்தகத்தில்தான் ஏமாற்றினார்கள் என்றால், ஒரு ஆசிரியர்கூடவா இவர்களைப் பற்றிய உண்மையான சித்திரத்தைச் சொல்லமாட்டார்கள் என்ற கோபம் ஒரு பக்கம்.
 
பள்ளிகளில் படிக்கும்போதே பாடப்புத்தகங்கள் நீங்கலாக மற்ற புத்தகங்களையும் மாணவர்களைப் படிக்கச் சொன்னால்தால் அவர்களது அறிவு துலங்கும். இல்லையென்றால் பாடங்களிலும் தேங்கவே செய்வார்கள். இதைப் பெரும்பாலான பெற்றோர்கள் புரிந்துகொள்வதே இல்லை.
 
என் மகன் படிக்கும் பள்ளியில் மிக நன்றாகச் சொல்லித் தருகிறார்கள். நான் என்னவெல்லாம் சொல்லித் தர நினைக்கிறேனோ அதை அவர்களே நடத்திவிடுகிறார்கள். பெரிய ஆச்சரியம் இது. தமிழ், அறிவியல், சமூக அறிவியல் என எல்லாப் பாடங்களையும் அவர்கள் நடத்தும் விதத்தைப் பெரிய அளவில் பாராட்டவேண்டும். 8ம் வகுப்பு பாடத்தில் முகலாயர்கள் பற்றிய பாடம் உள்ளது. நாங்கள் படிக்கும்போது எப்படி இருந்ததோ அதே போலத்தான் இப்போதும் இருக்கிறது. அக்பர், பாபர் போன்ற அரசர்களைப் பற்றி நல்ல விதமான எண்ணம் வரும்படியே புத்தகம் உள்ளது. மாணவர்களுக்கு இது போதும் என்று நினைத்திருக்கலாம். என்னைப் பொருத்தவரை, இந்தியாவின் மீது படையெடுத்த அனைத்து படையெடுப்புகளின் உண்மையான செயல்பாடுகளைக் கொஞ்சமாவது சொல்லவேண்டும் என்பதே. கோயில்கள் அழிப்பு, ஹிந்துக்கள் அழிப்பு போன்றவையெல்லாம் தேவையில்லை. அவை மாணவர்கள் மத்தியில் இந்நாளைய மனிதர்கள் மீது தேவையற்ற தவறான கருத்துகளைக் கொண்டு வரலாம். ஆனால் வெளிநாட்டுப் படையெடுப்பாளர்கள் கருணையானவர்கள், அக்பர், பாபர் எல்லாம் நல்லவர்கள் என்கிற பிம்பத்தைக் கொண்டுவராமல் இருந்திருக்கவேண்டும். இன்றும் இப்புத்தகங்கள் இச்செயலைச் செய்யவில்லை.
 
ஆனால் பள்ளியில் மிகத் தெளிவாகப் பாடத்தை நடத்தி இருக்கிறார்கள். முகலாயர்களுக்குள் இருந்த உள்நாட்டுச் சண்டைகள், அரச பதவிக்கான போட்டி, அதில் செய்யப்படும் கொலைகள் என எல்லாவற்றையும் மேலோட்டமாகச் சொல்லி இருக்கிறார்கள். அதே சமயம் மத விஷயங்களுக்குள் போகவில்லை. இது பெரிய விஷயம்.
 
என்னிடம் இருந்த ‘வந்தார்கள் வென்றார்கள்’ ஆடியோ சிடியை என் மகனிடம் கொடுத்துக் கேட்கச் சொன்னேன். நேற்று ஒரே நாளில் 3 மணி நேரம் கேட்டுவிட்டான். மொத்தம் 12 மணி நேரம். பொன்னியின் செல்வன் புத்தகத்தை முடித்ததும் இதைப் படிக்கச் சொல்ல நினைத்திருந்தேன். ஆனால் பள்ளியில் முகலாயர்கள் பாடம் வரும்போது இதைக் கேட்பது நல்லது என்பதால் இப்போதே கேட்கச் சொன்னேன். அதில் உள்ள பலவற்றை பள்ளியில் இருக்கும் சமூக அறிவியல் ஆசிரியர் சொன்னார் என்று சொல்லி இன்ப அதிர்ச்சி தந்தான்.
 
வந்தார்கள் வென்றார்கள் ஆடியோ அபிராமை அசைத்துப் பார்க்கிறது. எனக்கு ஏற்பட்ட அதே அனுபவம். கூடவே நான் சொன்னது – முகலாயர்கள் வேறு, இந்திய முஸ்லிம்கள் வேறு. (இந்த எண்ணத்தினால்தான் பாடத்திட்டமும் பெரும்பாலும் நல்லவற்றை மட்டுமே எழுதுகிறது என்பது புரிகிறது.) இதை அழுத்தம் திருத்தமாகச் சொன்னதன் காரணம், இப்போதே இந்தியர்கள் குறித்த வேற்றுமை கலந்த ஒற்றுமை அவன் மனத்தில் பதிய வேண்டும் என்பதாலும் நான் அதை உண்மையாக நம்புகிறேன் என்பதாலும். இவற்றையெல்லாம் விட, ஒரு குறிப்பிட்ட சமூகம் மீது மட்டும் திணிக்கப்படும் வெறுப்பைக் குறித்தும் அதன் அநியாயம் குறித்தும் இந்த திராவிடக் கட்சியின் ஆட்சி நடந்த/நடக்கும் நாட்டில் நான் இன்றுவரை உணர்ந்துகொண்டிருக்கிறேன் என்பதாலும்தான். எந்த ஒன்றையும் மீறி நம்மை இணைக்கவேண்டியது இந்தியன் என்கிற எண்ணமும் இந்தியா என்கிற கருத்தாக்கமும்தான். இதை இப்போதே விதைக்கவேண்டும். இதுவே சரியான நேரம்.
Share

no more blue print for Tamilnadu text books

அரசுத் தேர்வுகளில் ப்ளூ ப்ரிண்ட் என்ற ஒன்று இனி இருக்காது என்பது ஒரு தொடக்கம். ஆனால் இதுவே பெரிய தீர்வு அல்ல. ப்ளூ பிரிண்ட் என்பது, படிப்பில் மிகவும் பின் தங்கும் மாணவர்களுக்கு பெரிய அளவில் உதவிய ஒன்று. ஐந்து மதிப்பெண்கள் கேள்வி, முதல் பாடத்தில் இருந்தும் அல்லது இரண்டாம் பாடத்தில் இருந்து வரும் என்று தெரியவந்தால், ஏதேனும் ஒரு பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்களையும் படிப்பதன்மூலம், இரண்டாவது பாடத்தில் வரும் எல்லா ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளையும் படிக்காமல் விட்டுவிடலாம். ஏற்கெனவே படிக்கத் திணறும் மாணவர்களுக்கு இது கொஞ்சம் உதவும்.
 
ஆனால் இது எங்கெல்லாம் பிரச்சினைகளை ஏற்படுத்தியது? ப்ளூ பிரிண்ட் படி ஆசிரியர்கள் பாடம் நடத்தத் துவங்கினார்கள். இரண்டாம் பாடத்தின் ஐந்து மதிப்பெண்கள் கேள்விகளை நடத்துவது கடினம் என்றால், ப்ளூ பிரிண்ட்டைக் காரணம் காட்டி அதை நடத்தாமல் விட்டார்கள். இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் பிரச்சினை உண்டானது.
 
பதினோராம் வகுப்பின் ப்ளூ பிரிண்ட்டைப் பயன்படுத்தி, எவையெல்லாம் பன்னிரண்டாம் வகுப்பில் வருமோ அந்தப் பாடங்களை மட்டும் பதினோராம் வகுப்பில் எடுத்தார்கள். மற்றவற்றை எடுக்காமல் விட்டார்கள். இதனால் சில குறிப்பிட்ட பாடங்களை பன்னிரண்டாம் வகுப்பு முடிக்கும் மாணவர்கள் முற்றிலும் இழக்கும் நிலை உருவானது. இப்பாடங்களில் இருந்து கேள்விகள் போட்டித் தேர்வுகளில் கொஞ்சம் சுற்றி வளைத்துக் கேட்கப்பட்டால் பதில் சொல்லமுடியாமல் திணறும் நிலை உருவானது.
 
ப்ளூ பிரிண்ட் இனி இல்லை என்பது நல்ல சிறிய தொடக்கம். ஆனால் முழுமையாகச் செய்யவேண்டியவை – ஆசிரியர்களுக்கான பயிற்சி, ஒரு பாடத்தின் தேவையை ஆசிரியர்கள் புரிந்துகொள்ளவேண்டிய விதமும் அவசியமும், புத்தகத்தில் அச்சில் இருப்பது அல்ல ஒரு பாடம்; அது எப்படிப் புரிந்துகொள்ளப்படவேண்டும் என்பதை ஆசிரியகளுக்கு விளக்கவேண்டிய அவசியம், பாடத்தை மனனம் செய்வதை விட்டுவிட்டு (அல்லது குறைந்த அளவில் மனனம் செய்து) புரிந்துகொண்டு படித்து பதில் அளிக்கவேண்டிய அவசியத்தை; இது இயலக்கூடிய ஒரு செயலே என்பதை ஆசிரியர்களுக்கு முதலில் உணர்த்தவேண்டியது – இவைதான் முக்கியம். மாணவர்களின் வீழ்ச்சிக்கு ஆசிரியர்களே காரணம். ஆசிரியர்களை மேம்படுத்துவதன் மூலமாகவும், போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும்படியாக மாணவர்களை உருவாக்கும் தேவையை அவர்களுக்குச் சொல்வதன் மூலமாகவுமே அடுத்த இடத்துக்கு நகரமுடியும்.
 
அதிகமாகப் படிக்கக் கொடுப்பது, நெட்டுரு போட்டு எழுதச் சொல்லி மார்க் வாங்க வைப்பது, அதிகமாக எழுதி வரச்சொல்லி வீட்டுப்பாடங்கள் கொடுப்பது, அதிக நேரம் பள்ளிகளிலேயே தங்க வைத்து படிக்க வைத்து மதிப்பெண்கள் வாங்க வைப்பது, பதினோராம் வகுப்பின் பாதியிலேயே பன்னிரண்டாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, ஒன்பதாம் வகுப்பின் பாதிலேயே பத்தாம் வகுப்புப் பாடங்கள் எடுப்பது, முழு ஆண்டுத் தேர்வு விடுமுறையை முற்றிலும் ரத்து செய்துவிட்டுப் பாடங்கள் நடத்தி முடித்துவிட்டு அதிகமாக தொடர்ச்சியாகப் பரீட்சைகள் நடத்துவது – இந்த முறைகளில் மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெற வைக்கும் யுக்தியில் கிட்டத்தட்ட அனைத்துப் பள்ளிகளும் நிபுணத்துவம் பெற்றுவிட்டன. இதனால் நன்றாகப் படிக்கும் மாணவர்களுக்கும் ஆட்டுமந்தை ஆக்கப்பட்டார்கள். பல பள்ளிகளில் பல நல்ல ஆசிரியர்கள் உள்ளார்கள். மேலே சொன்ன பள்ளியின் நடவடிக்கைகளில் அவர்களுக்கும் உடன்பாடு இருக்காது. ஆனால் அவர்களும்கூட மதிப்பெண் நெருக்கடிக்கு ஆளாகி ஒரு பள்ளி என்ன செய்யவேண்டும் என நினைக்கிறதோ அதை மட்டும் செய்யவேண்டிய அழுத்தம் உள்ளது. இதிலிருந்து ஆசிரியர்களை வெளியே கொண்டு வர அரசு பல வகைகளில் முயலவேண்டும். மதிப்பெண்கள் பின்னால் அலையும் மனப்போக்கைத் தவிர்த்துவிட்டு, ஆசிரியர்கள் தாங்கள் புரிந்துகொண்டு மாணவர்களையும் புரிந்துகொள்ளச் சொல்லிப் பாடம் நடத்தும் முறை வராமல் நமக்கு விடிவுகாலம் இல்லை.
Share

6th standard Tamilnadu stateboad Tamil book

ஆறாம் வகுப்புக்குரிய தமிழ்ப் பாட நூலை இன்று தரவிறக்கிப் பார்த்தேன். முழுமையாக ஆனால் மேலோட்டமாக ஓட்டிப் பார்த்ததில் –
 
* புத்தகம் நன்றாக வந்துள்ளது. பாராட்டப்படவேண்டிய விஷயம். பழமை புதுமை என்பதை ஓரளவுக்குச் சரியாக பகுத்து நிரவி இருக்கிறார்கள்.
 
* கடவுள் வணக்கம் இல்லை. தமிழ் வணக்கம் உள்ளது. புத்தகம் முழுக்க கடவுள் இன்றி இருக்க தனிக்கவனம் செலுத்தப்பட்டது போன்ற பிரமை. புத்தர் பற்றி உள்ளது. வள்ளலார் பற்றி வரும்போது அவரது கருணையைச் சொல்கிறார்கள். தெரசாவைப் பற்றிச் சொல்லும்போதும் கருணையை மட்டுமே சொல்கிறார்கள். பொங்கல் பற்றிய பாடத்தில்கூட கதிவரனுக்கு நன்றி சொல்கிறார்கள், இயற்கையை வழிபடுகிறார்கள் என்று வருகிறதே ஒழிய, மறந்தும் பொங்கல் அன்று கடவுளை வழிபடுவார்கள் என்று சொல்லிவிடவில்லை. பராபரக் கண்ணியைக்கூட செக்யூலராகச் சொல்லி இருக்கிறார்கள். தாயுமானவரின் படம் பட்டையின்றி வெற்றுடலாக உள்ளது.
 
* காணி நிலம் வேண்டும் என்ற பாடல் உள்ளது. பாடலில் பராசக்தி என்று வருகிறது. பாடலின் பொருளில் பராசக்தி என்ற பெயர் இல்லை. 🙂
 
* சிலப்பதிகாரம், மணிமேகலை (நாடகவடிவில்) உண்டு.
 
* சிறகின் ஓசை – சிட்டுக்குருவி பற்றிய பாடம் இனிய அதிர்ச்சி. மகிழ்ச்சி. சலீம் அலியைப் பற்றிய குறிப்பும் உண்டு.
 
* கிழவனும் கடலும் புதினத்தின் ஒரு சிறிய பகுதி – காமிக்ஸ் வடிவில். அட்டகாசம்.
 
* முதல் எழுத்தும் சார்பெழுத்தும் – இதற்குத் தரப்பட்டிருக்கும் குறிப்புப் படம் (யானையும் பின் தொடரும் குட்டி யானைகளும்) நல்ல கற்பனை. அதேபோல் மொழி முதல் எழுத்துகள், இறுதி எழுத்துக்களுக்கான படமான புகைவண்டியின் படமும்.
 
* மூதுரைக்குப் பின்னே உள்ள நூல்வெளி பகுதில் இருக்கும் ஔவையார் நல்லவேளை பட்டை போட்டிருக்கிறார்.
 
* அண்ணா நூற்றாண்டு நூலகம் பற்றி ஒரு பாடம் உள்ளது.
 
* புத்தகத்தில் வரும் பெயர்கள் எல்லாம் ‘தூய்மையாக’ உள்ளன. இனியா, கணியன், கயல், முகிலன், செல்வன், வளவன், அமுதா, எழிலன், கரிகாலன்(!), மலர்க்கொடி, கவிதா, மாதவி. என்ன, பாத்திமா, பீட்டரும் உண்டு. ராமன், சிவனைத்தான் காணவில்லை.
 
* புதுமைகள் செய்த தேசமிது கவிதையில் இந்திய ஒருமைப்பாடு பேசப்பட்டுள்ளது.
 
* புத்தகம் முழுக்க பல விதங்களில் இடம்பெறுபவர் திருவள்ளுவர்.
 
* இணையச் செயல்பாடு என்று உரலி மூலம் செயலியை (ஆப்) அறிமுகப்படுத்தி உள்ளார்கள். QR code உண்டு. பதினோறாம் வகுப்புப் பாடத்தின் QR codeஐ க்ளிக்கியபோது வீடியோ வந்தது. (அந்தக் கொடுமை பற்றி பின்னர்!) இந்த கோட்-ஐ க்ளிக்கினால் செயலியைத் தரவிறக்கம் செய்துகொள்ளலாம்.
 
* உ.வே.சாமிநாதர் பின்னொட்டின்றி தோழராக இங்கேயும் தொடர்கிறார். ஆனால் நரசிம்மவர்மனை வர்மத்தோடு உலவ விட்டிருக்கிறார்கள். சிவகங்கை மன்னர் முத்துவடுகநாதர் வருகிறார்.
 
* எஸ்.ராமகிருஷ்ணனின் சிறார் சிறுகதை ஒன்று இருக்கிறது.
 
நான் ஆறாம் வகுப்புப் படித்தபோது வந்த முதல் பாடல் – கடவுள் வாழ்த்து – வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி பாடல். இன்றைய நவீன பாடத்திட்டத்தில் ஹிந்து மதக் கடவுள்களின் வாசம் முழு வீச்சில் நீக்கப்பட்டிருக்கிறது. ஒன்று – பாஜக இந்திய அளவில் இதற்கிணையாக இப்படிச் செய்யவேண்டும் அல்லது முற்போக்காளர்கள் இப்படிப் பாடத்திட்டம் இருப்பதை ஒரே அளவுகோலில் இந்தியா முழுமைக்கும் ஏற்கவோ கண்டிக்கவோ வேண்டும்.
Share

A day at IITM

நேற்று ஐ ஐ டி மெட்ராஸில் ஒருநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். 6வது வருடமாக நடக்கும் நிகழ்ச்சி. இந்நிகழ்ச்சியின் நோக்கம் ஐ ஐ டி எப்படி இருக்கும், அங்கே என்ன நடக்கிறது என்பதை அங்கேயே சென்று அறிந்துகொள்ள ஒரு வாய்ப்பை அளிப்பது. குறிப்பாகப் பெற்றோர்களுக்கு உதவும் நோக்கத்தில்.

ஐஐடியைச் சுற்றிக் காண்பித்தார்கள். தேர்ந்தெடுத்த சில இடங்களுக்குக் கூட்டிச் சென்றார்கள். ஒட்டுமொத்த நிகழ்வையும் மாணவர்களே ஒருங்கிணைத்தார்கள் என்பதுதான் பெரிய விஷயம். டீன் மிக முக்கியமான விஷயங்களைத் தொகுத்துப் பேசினார். ஐஐடி சென்னை எப்படி மற்ற ஐ ஐ டிக்களை விட முன்னணியில் இருக்கிறது என்பதையும், ஆசியாவில் 51வது இடத்தில் இருக்கிறது என்பதையும், மற்ற 50 முன்னணி ஐ ஐ டிக்களிடம் இருந்து சென்னை எப்படி ஏன் பின் தங்குகிறது என்பதை ஆராய்ந்து அதை நீக்கும் வழிமுறைகளை நடைமுறைப்படுத்துவதாகவும் சொன்னார்.

ஐ ஐ டியில் முதல் வருடம் படிக்கும் மாணவன், ஐ ஐ டியில் இருந்து இந்த வருடம் டிகிரியுடன் வெளியேறும் மாணவன், ஐ ஐ டியில் படித்து முடித்து புதிய தொழில் தொடங்கி சி இ ஓவாக இருக்கும் மாணவன் என்று மூன்று பேர் பேசினார்கள். ஐ ஐ டியில் நடக்கும் சாரங் மற்றும் சாரல் விழா பற்றிய சிறிய அறிமுக வீடியோவைக் காட்டினார்கள்.

பின்னர் கேள்வி பதில்.

கேள்வி பதில் நிகழ்வு படு லைவாக இருந்தது. ஐ ஐ டியில் பயிலும் ஒவ்வொரு மாணவரும் மறக்காமல் சொன்னது, இப்போது உங்கள் குழந்தைகளை ஐ ஐ டி ஐஐடி என்று படுத்தாதீர்கள் என்பதைத்தான். சிபிஎஸ்இயில் படித்த பிள்ளைகள்தான் அதிகம் வெல்ல முடியுமாமே என்ற கேள்விக்கு பதில் சொன்ன பெண் சட்டென்று தான் ஒரு ஸ்டேட் போர்ட் மாணவி என்றார். கைத்தட்டுச் சத்தம் காதைப் பிளந்தது. சிபிஎஸ் இ மற்றும் ஸ்டேட் போர்ட் பாடத்திட்டத்தில் பெரிய வித்தியாசங்கள் இல்லை என்பதால், ஐஐடிக்குத் தனியே கோச்சிங் செய்தால் போதும் என்றார்கள் ஐஐடி மாணவர்கள். அதிலும் பதினோராம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பில் கோச்சிங் எடுத்துக்கொண்டால் போதும் என்றார்கள். எல்லாவிதமான கோச்சிங் செண்டர்களும் ஒரே போன்றவைதான் என்றும் பாடங்களை ஒழுங்காகப் படித்து ஐஐடி கோச்சிங் மெட்டீரியலை ஒழுங்காகப் போட்டுப் பார்த்தாலே போதும் என்றும் சொன்னார்கள். இரண்டு வருடம் எல்லாவற்றையும் விட்டுவிட்டு ஒழுங்காகப் படித்தால் ஐ ஐடியில் இடம் கிடைக்கும் என்றும் அப்படி இடம் கிடைத்தால் உங்கள் வாழ்க்கையே மாறும் என்றும் எனவே அந்த இரண்டு வருடம் அப்படிப் படிப்பது வொர்த் என்றும் சொன்னார் ஒரு மாணவி.

பல பெற்றோர்களின் கண்களில் தெரிந்த கனவு, எப்படியாவது தன் பிள்ளைகளை ஐஐடியில் சேர்த்துவிடவேண்டும் என்பதுதான். அதிலும் அங்கிருக்கும் சின்ன சின்ன மாணவர்கள் எல்லாம் மிக விவரமாகவும் தெளிவாகவும் பேசுவதைக் கேட்ட பெற்றோர்களுக்கு இந்தக் கனவு ஆயிரம் மடங்கு கூடியிருக்கும் என்றே நினைக்கிறேன். ஐஐடியன் என்று அவர்கள் பெருமிதத்தோடு முதல் வருடத்திலேயே சொல்லப் பழக்கப்பட்டுவிடுகிறார்கள். அலுமினி மற்றும் சூழல் அவர்களை ஐஐடியன் என்னும் சொல்லுக்குத் தகுதி உடையவர்களாகத் தயார்ப்படுத்திவிடுகிறது.

சிபிஎஸ் இ முறையில் படிப்பது நிச்சயம் ஐ ஐ டி நுழைவுத் தேர்வுக்குப் பெரிய அளவில் உதவலாம் என்றே நினைக்கிறேன்.

முக்கியமான விஷயம், ஐஐடியில் ஒருநாள் நிகழ்ச்சியில், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்படவில்லை. ஜனகனமன மற்றும் ஓம் கணபதி சரஸ்வதி என எந்தப் பாடலும் பாடப்படவில்லை. 🙂 நான் தான் வாயில் வந்த எதோ ஒரு பாடலை முனகிக்கொண்டிருந்தேன் என்பதைத் தவிர வேறு எந்த அசம்பாவிதமும் நிகழவில்லை.

பின்குறிப்பு: அங்கேயும் ஒருவர் வந்து பத்ரியின் பதிவைத் தொடர்ந்து படிப்பதாகவும் அதைப் பார்த்துத்தான் இந்த நிகழ்ச்சிக்கே வந்ததாகவும் சொன்னார். 🙂

Share

Byju’s learning app

அபிராம் 7வது படிக்கிறான். யூ ட்யூப் மற்றும் ஆப் மூலம் என்ன ஆக்கபூர்வமாக அவனுக்குச் செய்யலாம் என யோசித்து சில ஆப்களை தரவிறக்கினேன். பல ஆப்களைத் தேடினால் நிச்சயம் பலனுள்ளது கிடைக்கும். அனைத்தும் ஒரே இடத்தில் கிடைக்க வாய்ப்பில்லை. இது குறித்து இன்னும் தேடலில் இருக்கிறேன்.

இந்த சமயத்தில் தினமலர் தீபாவளி மலரில் (ஐயோ வாங்கவில்லையே என்று யாரும் நினைக்கவேண்டாம், வாங்கும் அளவுக்கு இதில் ஒன்றுமில்லை!) ‘நேசமுடன்’ வெங்கடேஷ் பைஜூ ஆப்பினருடன் நடத்திய நேர்காணல் கண்ணில் பட்டது. இம்பரஸ் ஆகி உடனே தரவிறக்கினேன். இன்னும் முழுமையாக அதை எப்படிப் பயன்படுத்துவது என்று நான் பார்க்கவில்லை. அந்த ஆர்வம் இல்லாததற்குக் காரணம், அந்த ஆப்பின் கட்டணங்கள். 7ம் வகுப்புப் பாடங்களுக்கு 23,000 ரூபாய் என்று கண்ணில் பட்டதும் கொஞ்சம் ஷாக் அடித்தது போன்ற உணர்வு. ஒரு வருடப் பள்ளிச் செலவே இதைவிடக் கொஞ்சம் அதிகம் இருக்கும். பள்ளிக்கான கட்டணங்களே அதீதம் என்று சொல்லிக்கொண்டிருக்கதையில் ஒரு ஆப்புக்கான இச்செலவை என்னால் ஏற்கவோ ஜீரணிக்கவோ முடியாது என்பதால் ஆப்பை அப்படியே தள்ளி வைத்துவிட்டேன். இதன் அர்த்தம், அந்த ஆப் கொள்ளை அடிக்கிறது என்பதல்ல, அவர்களுக்கான நியாயங்கள் (!) இருக்கலாம். ஆப்பைப் பயன்படுத்திப் பார்த்தால்தான் தெரியும்.

இந்நிலையில் பைஜூ ஆப்பும் தி ஹிந்து குழுவினரும் அனைத்துப் பள்ளிகளிலும் (சென்னை மட்டுமாகக் கூட இருக்கலாம்) ஒரு தேர்வு வைத்ததாக என் பையன் சொன்னான். கேள்வித்தாளையும் கையில் கொண்டு வந்திருந்தான். நேஷனல் டேலண்ட் ஹண்ட் என்ற பெயரில் இருந்தது. இதில் வென்றவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதெல்லாம் தெரியவில்லை. பள்ளிகளிலும் அதிகம் ஆர்வம் காட்டியதைப் போலத் தெரியவில்லை. பள்ளி மாணவர்களுக்குத் தெளிவான விளக்கம் எதுவும் தரப்படவில்லை போல.

கேள்வித் தாளைப் பார்த்தேன். அபிராம் ஏழாம் வகுப்பில் இரண்டாவது டெர்ம் படிக்கிறான். கேள்வித் தாளில் ஒரு கேள்வியைக் கூட ஏழாம் வகுப்பு மெட்ரிகுலேஷன் மாணவர்கள் சரியாகப் போட்டுவிடுவார்கள் என்று சொல்லமுடியாது. அத்தனை கடினம். அதைவிட, அவர்களுக்கு இதுவரை அறிமுகம்கூட ஆகியிராத பாடப்பகுதிகளில் இருந்து கேள்விகள். செட் 2 தேர்வு என்று கேள்வித் தாளில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இவர்களின் நோக்கம் என்ன என்றே தெரியவில்லை. அபிராம் உள்ளிட்ட அனைத்து மாணவர்களும் இங்கிபிங்கிபாங்கி போட்டுத்தான் விடையைத் தேர்வு செய்திருக்கிறார்கள். தங்கள் பெயரை எழுத்துக்கிரமமாக உச்சரித்து அது முடியும் விரலையெல்லாம் பதிலாகக் குறித்திருக்கிறார்கள் சில விஷமக்காரர்கள்.

நான் இதிலுள்ள 20 கேள்விகளைப் போட்டுப் பார்த்தேன். அரை மணி நேரம் ஆனது. ஓரளவுக்கு எல்லா கேள்விகளுக்குமே பதில் தெரிந்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அபிராம் அதிகபட்சம் 2 கேள்விகளுக்குச் சரியாக பதில் சொல்லி இருக்கலாம். அதிர்ஷடத்தில் எத்தனை சரியாகத் தேர்வு செய்திருப்பான் என்பது தெரியாது.

பைஜுவின் நோக்கம் என்ன? அவர்கள் நேஷனல் டேலண்ட் ஹண்ட்டில் யாரைத் தேர்ந்தெடுக்கப் போகிறார்கள்? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

கேள்வித்தாளை இணைத்திருக்கிறேன்.

பைஜு வலைத்தளத்தில் பாடங்களுக்கான விலை: https://byjus.com/products/all-products/cbse-icse/?orderby=price

Share

ப்ரவீண் – ஹிந்தி

என் மகன் அபிராம் ப்ரவீன் தேர்ச்சி பெற்றுவிட்டான் என்று பதிவிட்டதில் சில நண்பர்கள், இதனால் என்ன பயன் என்றும் இது ஒரு மாணவனுக்கு அதீத அழுத்தத்தை ஏற்படுத்தாதா என்றும் கேட்டிருந்தார்கள். இது தொடர்பான என் எண்ணங்கள் இங்கே:
 
01. ஹிந்தியைத் தனியே படிப்பது என்பது அவசியத் தேவை அல்ல. தமிழும் ஆங்கிலமுமே முழுமுதல் அவசியத் தேவை. இதைத் தாண்டி ஹிந்தி படிப்பது என்பது, ஒரு மாணவனின் திறமையைப் பொருத்தது. இது அவனுக்கு எந்த வகையிலும் எவ்வித அழுத்தத்தையும் தரமுடியாது என்ற நிலையில் மட்டும் ஹிந்தி படித்தால் போதும்.
 
02. பள்ளிகளில் தமிழைக் கைவிட்டுவிட்டு ஹிந்தியைப் படிப்பது அநியாயம், அக்கிரமம்.
 
03. தனியாக ஹிந்தி படித்து தேர்வு எழுதி வெற்றி பெறுவது மிகப்பெரிய பலனை நிச்சயம் தராது. இதனால் ஹிந்தியைப் பேசவோ தடையின்றி வாசிக்கவோ முடியவே முடியாது. அப்படியானால் இப்படி படித்து ப்ரவீண் வெல்வது தரக்கூடிய பயன்கள்தான் என்ன? என் நோக்கில், ஒன்று இது மற்ற மொழி மீதான வெறுப்பை முதலில் தகர்க்கிறது. அதுவும் தமிழ்நாட்டில் ஹிந்தி மீது ஏற்றி வைக்கப்பட்டிருக்கும் வெறுப்பு கொஞ்சம் நஞ்சமல்ல. அது இதனால் மாறும். இரண்டு, எந்த ஒரு கூடுதல் மொழியைக் கற்க முடிந்தாலும் அது நல்லதே. அது ஹிந்தியாக இருக்கும்பட்சத்தில், பின்னாளில் அதிகம் உதவலாம். சுத்தமாக ஹிந்தியே தெரியாமல், ஹிந்தி பேசும் மாநிலங்களுக்குச் சென்று சமாளிப்பதைவிட இந்த ஹிந்தியைத் தெரிந்துகொண்டு சமாளிப்பது கொஞ்சம் கொஞ்சமேகொஞ்சம் சுலபம். ஒப்பீட்டளவில் சீக்கிரமே ஹிந்தி பேச வரலாம். மூன்று, ஹிந்தி வார்த்தைகள் பல நம் வசமாகும். பின்னாளில் ஹிந்தி பேசத் தேவை ஏற்பட்டுப் பேசத் தொடங்கும்போது இந்த அடிப்படை பெரிய அளவில் உதவும். இவற்றைத் தவிர பெரிய பலன்கள் இல்லை. (ஒரு மொழியைப் பேச மட்டும் செய்யவேண்டும் என்றால், நீங்கள் அந்த சூழலில் இருந்தாலே போதும். தேவை உங்களைப் பேச வைக்கும். ஆனால் எழுதப்படிக்க நீங்கள் உழைத்தே ஆகவேண்டும்.)
 
04. மாணவர்களுக்கு அதீத அழுத்தத்தைக் கொடுக்கிறோமா என்றால், ஓரளவுக்கு அது உண்மை என்றே சொல்லவேண்டும். ஏற்கெனவே பள்ளிகளில் தரப்படும் வீட்டுப்பாடத் தொல்லைகள், ஆக்டிவிட்டி, அசைன்மெண்ட். இந்த நெருக்கடியில் ஒரு மாணவன் மனம்விட்டுப் பேச சிரிக்க விளையாட ஏகப்பட்ட தடைகள். இதற்கிடையில், ஹிந்தி தனிப்பயிற்சி ஒரு கூடுதல் சுமைதான். அதுவும் எப்படியாவது தன் பிள்ளை ஹிந்தி படித்துவிடவேண்டும் என்று, தன் பிள்ளையின் தகுதியைப் புரிந்துகொள்ளாது கொடுமைக்குள்ளாக்கும் பெற்றோர்களே இங்கே அதிகம். இதை வைத்துப் பார்த்தால் ஹிந்தி தரும் அழுத்தம் அதிகமானதுதான். (தனிப்பட்ட முறையில் நான் அபிராமைப் படிக்க வைத்தது மூன்று காரணங்களுக்காக. ஒன்று, வீட்டிலேயே ஹிந்தி ஆசிரியை. இரண்டு, நான் முதலில் அபிராமைப் பள்ளிக்குச் சேர்க்கும்போதே, எவ்வித கெடுபிடியும் இல்லாத, வீட்டுப்பாடம் அதிகம் தராத, மதிப்பெண் அதிகம் வாங்கவில்லை என்றாலும் தொல்லை தராத, சனி மற்றும் ஞாயிறு நிச்சயம் விடுமுறை அளிக்கக்கூடிய பள்ளியாக இருக்கவேண்டும் என்று நினைத்தே சேர்த்தேன். எனவே அபிராமுக்கு அதிக அழுத்தம் எப்போதும் இல்லை. மூன்று, அபிராம் இயல்பிலேயே கொஞ்சம் கெட்டி. எனவே இதைப் படித்துவிடுவான் என்று உறுதியாகத் தெரியும். இத்தனைக்கும் மீறி, ஹிந்தி படிக்கும்போது அபிராமின் மற்ற தேடல்கள் நிச்சயம் குறைந்தன என்பதை ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். உண்மையில் அபிராம் ஹிந்தி படிப்பதில் தொடக்கத்தில் இருந்தே எனக்கு அத்தனை விருப்பமில்லை. இன்று மகிழ்ச்சி என்பது வேறு விஷயம்.)
 
05. இப்படித் தனியாக ஹிந்தியைப் படித்துவிட்டு, கொஞ்சம் விட்டுவிட்டால், இதைப் படித்ததற்கான பலனே இல்லாமல் போய்விடும். பலர் இப்போதும், ‘நான் அந்தக் காலத்திலேயே ராஷ்ட்ரபாஷா’ என்று சொல்வதைப் பார்க்கலாம். ஆனால் ஒன்றும் அவர்களுக்கு நினைவிருக்காது. எனவே தொடர்ச்சியான செயல்பாடு இல்லையென்றால், இதை எத்தனை படித்தாலும் வேஸ்ட் என்பது உண்மைதான்.
 
06. எந்த ஒரு படிப்பும் வேஸ்ட் அல்ல என்பது உண்மைதான். ஆனால் இப்படிச் சொல்லும்போதே அதன் முக்கியத்துவம் நமக்குத் தெரிந்துவிடுகிறது. ஏன் படிக்கிறோம், எதற்காகப் படிக்கிறோம், யாரால் முடியும் முடியாது என்றெல்லாம் தெரிந்து படித்தால் மட்டுமே ஹிந்தி (எதுவாக இருந்தாலும்) நமக்கு நல்லது. இல்லையென்றால், இது ஜஸ்ட் இன்னுமொரு சான்றிதழ் மட்டுமே.
Share