Archive for கவிதை

நாகலிங்கமரம் – கவிதை

பறிக்கப்படாமல்

உதிர்ந்து

தரையெங்கும் பரவி

வாடிக்கிடக்கும் நாகலிங்கப்பூக்கள்

முனங்கி நிறைக்கின்றன

தினம் பூப்பறிக்கவரும் கிழவனின்

மூச்சுக்காற்றின் வெற்றிடத்தை.

இருந்த இடத்தில் படுத்துக்கொண்டு

கடனெனக் குரைக்கும்

செவலைநாய்க்கு

இனி உறக்கத்தடை இருக்காது.

பாம்புகள் புழங்கும்

மரப்பொந்தினுள்ளிருக்கும்

கிளிக்குஞ்சுகள்

விடலைப்பசங்களுக்குக் கைக்கெட்டும்

எந்தவொரு திட்டுமில்லாமல்.

அந்நாகலிங்கப்பூமரத்தில் சாய்ந்திருக்கும்

ஏணியின் படிகளில்

இப்போதிருக்கும் கிழவனின் கால்தடம்

மெல்ல காற்றில் கலக்கும்.

தொண்டர் நயினார் கோவில் பூசாரி

ரெண்டு நாள் தேடுவான்

நாகலிங்கப்பூவுக்காக கிழவனை.

அக்கிழவன்

அப்பூமரத்தை

இரவுகளில் சுற்றுகிறான் என்று

ஒரு கதை கிளப்பி வைப்பேன்,

ஏதோ என்னாலானது.

Share

சுவர்கள் : சில குறிப்புகள் – கவிதை

[முன்குறிப்பு:

ஒரே சுவர் பிரித்தாலும்

எம் வீட்டின் சுவர் ஆகாது உம் வீட்டின் சுவர்]

எதிர்வீட்டின் வெளிச்சுவரில் பம்பரம் சின்னம்

முனியம்மா வீட்டுச் சுவர் காரைகள் உதிர்ந்து

என் வீட்டுச் சுவரில்

கண்ணீர் விட்டுக்கொண்டு படபடக்கும் போஸ்டர்

(குணசேகர பாண்டியன் செத்துப்போனது பற்றி பிறிதொரு சமயம்)

சில சுவர்களில் கோலியின் புள்ளித் தடங்கள்

இன்னும் சில சுவர்கள்

மழை வெயிலில் பட்டு நீலம் வெளுத்துப்போய்

பாம்புகளும் பல்லிகளும் ஊர்ந்த தடங்களை

சுவர்கள் மறைத்துவிடுகின்றன

வீட்டுக்குள் நடப்பதை உலகிலிருந்து பிரிப்பது போலவே

தெருக்களின் ரேகைகளாக நிற்கும் சுவர்கள்

ஒருவகையில் நம்மை மட்டுப்படுத்துகின்றன

கொஞ்சம் உற்று நோக்குங்கள்,

உங்கள் தெருவில் கிடக்கும் சுவர்கள்

ஒரு கணத்தில் முகிழும் முப்பரிமாணப் பிம்பம் போல

நவீன ஓவியங்களாய் கிடக்கலாம்

எம் தெருக்கள்

சில சமயம்

ஆகலாம் உம் தெருக்கள்

Share

சின்னச் சின்னக் கவிதைகள் – 2

[6]

உன் பேச்சில்

நிதானமிழந்துவிட்ட ஒரு வார்த்தைக்காக

குமுறிக்கொண்டிருக்கிறேன்,

எச்சிற் தெறிப்பைக்

கவனிக்காதது போலிருந்து

இருப்பைக் கேள்விக்குள்ளாக்கும்போது

ஒடுங்குகிறது என் சுயம்

[7]

கூடையிலிருந்து சிதறி ஓடும்

ஆரஞ்சுப்பழத்தை விரட்டிப் பிடிக்காதீர்கள்,

திக்குகளறுத்து

எல்லையறுத்து

மானுடம் வெல்லும் அது.

[8]

நான் வீசிய சோழிகளெல்லாம்

குப்புற விழுந்தன

நீ வீசிய சோழிகளெல்லாம்

வானம் பார்த்து

இந்தத் தலைகீழ் விகிதங்களுக்கு இடையில்தான்

எப்போதும் அலைகிறது வாழ்க்கை

[9]

அந்நியப்பட்டு வீட்டுள் நுழைந்துவிட்ட

றெக்கைகள் படபடக்கும் தட்டான்

தனிமையை விரட்டி

மீட்டெடுக்கிறது

மழையின் குதூகலத்தை

மண்வாசத்தை

வீடெங்கும் பச்சைத் துளிர்ப்பை.

[10]

என் டயரியின் பக்கங்களில்

சில குறிப்புகள் எழுதியிருக்கிறேன்

இரு புறாக்கள் புணர்ந்ததைக் கண்டது முதல்

என் ஆழ்மனதில்

கேட்கும் சங்கொலிக் குறிப்பைத் தவிர.

Share

சின்னச் சின்னக் கவிதைகள் – 1

[1]

கட்டுகளின்றி எழுதப்போகிறேன்

கவிதையாக இல்லாமல்

கட்டுரையாகவோ கதையாகவோ இல்லாமல்

யாருக்கேனும் பதில்களாய் இல்லாமல்

சுவரில் கிறுக்கும் சிறுகுழந்தைபோல

மருதாணி, கருநாவல்பழம்

புல்லாங்குழல், சிப்பி என

ஒன்றுக்கொண்டு தொடர்பில்லாத

வார்த்தைகளாய்.

[2]

காற்றுவெளியில்

வெயிலில் மழையில் நனைந்தபடி

அலைந்துகொண்டிருக்கிறது

இன்னும்

புரிந்துகொள்ளப்படாத

என் அன்பு

என்னைப் போலவே தனிமையாய்

எதிர்நிற்க முடியாத அகங்காரத்துடன்

தீச்சுவாலையென எரியும் ஆணவத்துடன்

மிகுந்து ஒலிக்கும் தன் ஆகிருதியுடன்.

[3]

இரண்டு கூழாங்கற்கள்

உரசி உண்டாகும் நெருப்புப்பொறியின்

சந்தோஷத்தைத் தருவதில்லை

அரற்றி எரியும் தீப்பந்தம்

ஒரு மின்மினிக்கு ஈடாவதில்லை

சூரியன்

சோப்புக்குமிழி

மறையுமுன்

சொக்க வைத்துவிடுகிறது

இப்படியாக

இவ்வுலகில்

என் சிறிய ஆளுமை

அதற்கான மகோன்னதத்துடன்.

[4]

பிஞ்சுக்குழந்தையின் உள்ளங்கைச் சூட்டை

சேமித்துவைத்து

பின்னொருநாளில் வழங்கமுடிந்தால்

அப்போது புரியும்

தொலைத்தவற்றின் பட்டியல்

தொலைத்தவற்றின் தொன்மை

-oOo-

Share

குறும்பா முயற்சி

ஈழத்து மகாகவி உருத்திரமூர்த்தியின் குறும்பாக்கள் தமிழின் கவிதைப் பரப்பை அதிகப்படுத்தியது என்றால் மிகையில்லை. அவரின் குறும்பாக்கள் நகைச்சுவையுணர்வை அடிப்படையாகக் கொண்டிருந்ததாகவே நான் காண்கிறேன். அதேசமயம் தீவிரமான சிந்தனயைத் தூண்டுவதாகவும் இருந்தது என்பதை மறுப்பதற்கில்லை.

அ.யேசுராஜாவின் பத்திகளின் தொகுப்பான “தூவானம்”-ல் மகாகவியைப் பற்றியும் அவரின் குறும்பாக்கள் பற்றியும் அப்புத்தகத்தில் எஸ்.பொன்னுத்துரை எழுதிய முன்னுரையில் சில வரிகளையும் குறித்துள்ளார். அதைப்பற்றி பின்னொரு சமயம். (புத்தகத்தை எனக்கு அனுப்பி வைத்தவர் லண்டன் பத்மநாப ஐயர். அவருக்கு நன்றி பல.)

உருத்திரமூர்த்தியின் குறும்பா இலக்கணத்தை அடிப்படையாகக்கொண்டு நானும் சில குறும்பாக்கள் முயன்றேன். அவை இங்கே.

-oOo-

ஓடிப்போய்த் தாலிகட்டிக் கொண்டு

ஓயாமல் புலம்பியபெண் மண்டு

வாடிப்போய் வந்தாள்;

கைபிடித்துச் சொன்னார்

“நாடியிலும் பொட்டயேதான்” எண்டு.

-oOo-

மஞ்சசட்டைப் போட்டிருந்த மாக்கான்

திறந்தவாய் மூடாமல் பாக்கான்

பஞ்சுவெச்சு செஞ்ச

பேரழகி மூக்காள்

தஞ்சமென்றால் முத்தமிடக் கேப்பான்

-oOo-

ஊசியிட்டார் டாக்டரவர் வாலி

பின்னறிந்தார் வந்தோன்பர்ஸ் காலி

காசில்லாக் கோபமதை

மறந்துடனே மீண்டாரே;

மாசில்லை வாலியவர் போலி!

-oOo-

கடும்பூட்டைத் தேர்வானக் கள்ளன்

தேறுமார்க்கம் கேட்டாலோ சொல்லன்

படம்காணும் நேரம்தன்

சாவிவிட, கிடந்தானே

மடத்தினில், வேறுவழி யில்லன்

-oOo-

காவியமென்(று) உரைத்தாரப் புலவர்

எதிராய்வாய் திறந்தோரோ சிலவர்

பூவோடு பணம்பழமும்

எடுத்துச்சென்று பார்த்தபின்,இப்

பூவுலகில் எதிர்ப்போரே இலவர்!

-oOo-

கற்கடையில் கூட்டமோ கூட்டம்

அவனுக்கோ கள்ளிலிலை நாட்டம்

சொற்சுருக்கி இடுப்பசைத்து

சிரித்துவந்தாள் சிங்காரி;

பல்தெரிய பின்னெடுத்தான் ஓட்டம்!

-oOo-

முதல்வகுப்பில் சந்தைபோல் சத்தம்

இன்றல்ல நேற்றல்ல நித்தம்

புதிதில்லை நெடுநாளாய்

ஆசிரியர் அவருக்குண்டு

கதியில்லாப் பெண்ணோடு பித்தம்

-oOo-

Share

காற்றுத்தோழமை – கவிதை

வானம் நோக்கிக் குவிந்திருக்கும்

மொக்கின் இதழ்கள் ஒவ்வொன்றாய்

தன்னை அறுத்துக் காற்றில் பரவுகிறது

காற்றின் உக்கிரம் தாளாமல்.

     -காற்று

      தொடர்ந்து நிரம்பும் வண்ணக்கனவுகள்

      உச்சந்தொட்டு வண்ணப்பிரிகைகளாய் பிரியும் கணத்தில்

      வேர்வையை ஆசுவாசப்படுத்தி

      தொலையும் என்னை மீட்டெடுக்கும்

      நட்புத் தொடக்க காலத்தில்.

     -எஸ்.எஸ்.எல்.சி.யில் நானூற்றிச் சொச்சமெடுத்த தினமுழுதும்

      கூடவிருந்து சாமரம் வீசி

      சிரித்துத் தோளிற் கைவைத்து

      சந்தோஷம் பகிர்ந்துகொண்டது

      தலைவாராமல் பரட்டைத் தலையுடன்

      சிக்கிற் சிக்குண்ட தாடியுடன்

      ஒரு கூலிங்-கிளாஸ¤ம் அணிந்து

      மிக வேடிக்கையாய் இருந்தது அதனுருவம்.

     -கையில் ஒற்றைப் பூவுடன்

      எச்சில் இலைகளில் மாடுகள் மேயும் தேரடி முடுக்கில்

      காத்திருந்தபோது, வேகம் குறைத்து

      மெலிந்து வீசி

      சுற்றுப்புறத்தில்வீணையை மீட்டிப் போனது

     -இறுகிப் பிணைந்து கிடந்த காலத்தில்

      முதுகில் வருடி மீச்சிலிர்ப்பைத் தந்து

      எப்போதும் உடனிருந்தது.

பிளாஸ்டிக் மக்கில் நீரூற்றவரும் சிறுமி

நேற்றிருந்த மொக்கு இன்றில்லாத காரணமறியாமல்

கண்ணைப் பணிக்கும்போது

இசையற்ற பேரோசையை நான் உணர்வேன்

பின்னர் விடையென்னவோ

நம் தோழமையின் முற்றுப்புள்ளிதான்.

(02.07.2004, நிஸ்வா, மஸ்கட், அதிகம் காற்றடித்த ஓர் இரவு.)

Share

நிறம் – கவிதை

காலையில் தொடங்கி

வெள்ளை நிறங்கொண்ட வார்த்தையைக்

கருத்துக்குமிழிகள்

நுரைத்துத் துப்புகின்றன

மிகக்கவனமெடுத்து

தேர்ந்தெடுத்த வண்ணம் பூசுவேன்

இரண்டாம் முறை நிதானித்து

பச்சைக் கலப்பில் முக்கியெடுத்து

வெளியனுப்பிவைத்தேன்

என் நுரையீரல் காற்றறைகள்

மூச்சை இழுத்துப்பிடித்துக்கொள்ளும்

அடுத்த வார்த்தையொன்றை வெளித்துப்ப

இரண்டாமதன் பிறவி நிறம் கருப்பு

பெரிய யோசனைக்குப் பின்

வெள்ளிமுலாம் பூசி

வீதியனுப்பி வைத்தேன்

பெரும்பாலும்

நீல நிற வார்த்தைகளை

வெளிர் நீலமாக்கி மென்மையாக்குவேன்

அன்றைய என் தினம்

என் நிறத் தேர்ந்தெடுப்பைத் தீர்மானிக்கும்

கணந்தோறும் கருத்துக்குமிழிகள் கர்ப்பந்தரிக்கவும்

குழந்தை பிறக்கவும்

நிறம் பூசி நான் அனுப்பி வைக்கவும்

வளரும் என் கர்வம்

சிற்றறைகளின் வீரியம் குறைய

பெரும்பாலும் இரவாகும்

இப்போதுதான் கவனிக்கிறேன்

எனக்குத் தெரியாமல்

எவனோ என் வெள்ளைச்சட்டையின் பின்னே

சிவப்பு நிற மையைத் தெளித்திருக்கிறான்

நாளைக்கான கர்ப்பந்தரித்தலுக்கு

புணரத் தொடங்குகின்றன கருத்துக்குமிழிகள்

நான்

சிவப்பு நிற மையைத் தெளித்தவனைப் பற்றிய

பிம்பத்திற்காக யோசிக்கத் துவங்குகிறேன்

-oOo-

Share

உன் மதமா என் மதமா?

மரத்தடியில் இடப்பட்ட ரூமியின் கவிதையொன்று மதரீதியான கேள்விகளை முன் வைக்கச் செய்திருக்கிறது.

கவிஞர்களுக்கு கருத்துச் சுதந்திரம் இருக்கவேண்டும். அவர் எப்படி விஷ்ணுவை அப்படிச் சொல்லலாம் என்கிற கேள்வியையே நான் முற்றாகப் புறக்கணிக்கிறேன். எனக்குக் கடவுள் நம்பிக்கையுண்டு, ஹிந்து மத நம்பிக்கையுண்டு என்றாலும், கவிதையளவில் அதைச் சொல்லும் கவிஞனின் மீது கேள்வி கேட்கமாட்டேன். இந்த நேரத்தில், மற்ற மதங்களையல்லாது ஹிந்து மதத்தை மட்டுமே சாடும் அரசியல்-வோட்டுச்சிந்தை கவிஞர்களுக்கு இருக்காது என்று நம்புகிறேன், என்பதையும் சொல்லிக்கொள்ள நினைக்கிறேன்.

கவிதைகள் அவை எப்படி இருந்தாலும் ஒரு சமுதாயத்தின் குரலாகத்தான் அங்கீகரிக்கப்படுகிறது. ஒரு சமுதாயத்திலிருந்து தொடர்ந்து கவிதைகள் வருவது அந்தச் சமுதாயம் இயங்குகிறது என்பதன் வெளிப்பாடு. அந்த வகையில் கவிதைகள் வருவது நல்லது. ஆனால் எல்லாக் கவிதைகளையும் தேடிப்படிக்கும் நபர்களுக்கு, நாளாவட்டத்தில் இரண்டொரு கருத்தை மட்டும் வைத்து அதை நேரடியாகச் சொல்ல நினைக்கும் மனப்பாங்கைக் கொண்ட கவிதைகள் அசதியைத் தந்துவிடுவது யதார்த்தம். அவர்கள் நல்ல கவிதைகளை மட்டும் எடுத்துக்கொண்டு மற்றவற்றை மௌனமான விலக்கலால் புறந்தள்ளிவிடுவார்கள். நாகூர் ரூமியின் கவிதை அப்படியொரு புறந்தள்ளலுக்கு ஆளாகவேண்டிய கவிதை.

சமுதாயத்தைச் சீர் திருத்த நினைத்தும் கருத்துப்போக்குள்ள தீவிரக் கவிஞர்களாக ஆரம்பிக்க நினைக்கும் கவிஞர்கள் கண்ணில் பட்டதையெல்லாம் சாடுவது போல ஒரு சாடல்தான் நாகூர் ரூமியின் கவிதையும். அதில் விஷ்ணு, சிவனைப் பற்றி அவர் சொன்னது தவறில்லை, கவிதையில் அதை ஒரு குறியீடாகக் கொள்ளலாம். அதைத் தொடர்ந்து சிவனைச் சொன்னவர் அல்லாவைச் சொல்வாரா என்பதும் அவர் எப்படி சிவனைச் சொல்லலாம் என்பதும் பாமரத்தன்மை கொண்ட கேள்விகள்.

என்ன ஆனாலும் அது கவிதையே ஆனாலும் மற்ற மதத்தினரைப் ண்படுத்தக்கூடாது என்பது சிலரது வாதமாக இருக்கலாம். அவர்களுக்கு விஷ்ணு, சிவன் போன்ற பெயர்கள் எரிச்சலை ஏற்படுத்துவது இயல்பே. ஆனால் கவிதையின் கருவை வைத்து விஷ்ணு, சிவன் போன்ற கடவுளர்களின் மீது எழுப்பப்படும் கேள்விகள் எனக்கு எரிச்சலை ஏற்படுத்துவதில்லை. காரணம் அது போன்ற கவிதைகளை எப்போது வாசிக்க முற்படும்போதும் விஷ்ணு, சிவன், அல்லாஹ், ஜீஸச் என்று நீட்டியே வாசிக்க விழைகிறேன்.

எழுதியது ஒரு முஸ்லீம் என்பதால் “அதுவும் பிறமதத்தவர் எப்படி எழுதலாம்” என்கிற கேள்வி அடிப்படையற்றதும் ஆழமான பார்வையில்லாததும். இந்தக் கேள்விகள் எழுப்பும் பிற்கேள்விகள் என்னென்ன? அப்படியானால் ஹிந்துவே ஹிந்து மதக்கடவுளர்களின் மீது கேள்விகளை எழுப்பினால் பிழையில்லையா? அல்லது இதுவரை எந்த ஹிந்துவும் ஹிந்துமதக் கடவுளர்களின் மீது கேள்விகளை எழுப்பியதில்லையா? ரூமி எழுதிய கவிதையின் சாரம் பிடிக்கவில்லை என்பதை எழுதியவர் ரூமி என்பதால் பிடிக்கவில்லை என்றபடியாகக் காட்டுவது ஒரு எழுத்தாளனுக்கு ஏற்படுகிற இன்னொரு தடசம்.

நாகூர் ரூமியின் கவிதை ஒரு கருத்தை நேரடியாகச் சொல்ல முனைகிறது; கடவுளை நிந்தனை செய்கிறது என்பது மட்டுமே. ஆனால் அடிப்படையில் கடவுள் நம்பிக்கையுடைய நாகூர் ரூமி இக்கவிதையின் மூலம் சொல்ல நினைப்பது என்ன? பூராவும் விஷமான பின்னும் விழிப்பானா கடவுள் என்ற அவர் முன் அவரே எழுப்பிக்கொண்டுள்ள கேள்விக்கு, இறை நம்பிக்கையுடைய அவரே பதில் சொல்லவேண்டிய பொறுப்பு அவருக்கு இருக்கிறது. உலகில் நடக்கும் கொடுமைகளையும் மக்களின் துயர்களையும் கண்ணுற்று நான் இறைநம்பிக்கையைத் துறக்கிறேன் என்ற அறிவிப்போடு இக்கவிதையை அவர் சொல்வாரானால் அந்தக் கவிதையின் உண்மையின்பால் வந்தது; மனக்குமுறலின், கவிஞருக்குச் சமுதாயத்தின் மீதிருக்கும் கோபத்தினால் வந்தது என, கருத்தை நேரடியாகச் சொல்லும் கவிதை என்றளவிலாவது பாராட்டலாம். இல்லாத பட்சத்தில் எதையாவது எழுதி, தனக்கு ஒப்புமையில்லாவிட்டாலும் (தனக்கு ஒப்புமையற்ற விஷயங்களைக் கவிஞன் எழுதக்கூடாதா என்றால் எழுதாமல் இருப்பதே சிறப்பு, அதுவும் இதுபோன்ற ஆழ்நம்பிக்கையுடைய, பிற ஆழ் நம்பிக்கையின்பால் கேள்வி எழுப்பும் கவிதைகளை எழுதாமலிருப்பதே நேர்மையானது என்று நினைக்கிறேன்.) எழுதிக் கவிதையென்று இடும் வேகத்தில் வந்த சப்பையான கவிதை என்றே நான் கொள்வேன்.

அதைத் தொடர்ந்து ரூமியின் பதிலில் முற்றாகக் மரத்தடிக்குழுமம் புறக்கணிக்கப்பட்டிருப்பது அவரைப்போன்ற எழுத்தாளர்களுக்கு அழகா என்ற கேள்வியையும் முன்வைத்திருக்கிறது. ஒரு படைப்பை வைத்துவிட்டு அதற்கான விமர்சனங்களுக்குப் பதில் சொல்வது ஒருவகை. பதில் சொல்லாமல் இருப்பது ஒரு வகை. ரூமி மூன்றாம் வகையாக இனிமேல் மரத்தடியில் எழுதுவதில்லை என்கிறார். இத்தனைக்கும் மரத்தடியில் அந்தக் கவிதையின் பொருளில் தவறில்லை என்று எழுந்த குரல்களே அதிகம்.

ஒல்லி மழை/குண்டு மழை என்று வார்த்தைகளை வைத்து விளையாடியா ஒரு சாதாரணமான கவிதைக்குப் பெரும் விளம்பரமும் மறுமொழிகளும் கொடுத்து மறைமுகமாக இதுபோன்ற முகத்திருப்பலுக்காக எழுதப்படும் ஒன்றிற்கு ஆதரவளித்துவிட்டோமோ என்று தோன்றாமலுமில்லை.

Share