Archive for கவிதை

கோடுகளால் ஓர் ஓவியம் – கவிதை

நடைபாதையில்

நேர் கோடுகளால் அடைபட்டிருக்கிறது

ஓர் ஓவியம்

முக்கோணமாய் கழுத்து

அழுகிறதா சிரிக்கிறதா என

இனம் பிரிக்க முடியாதபடி

மூன்று கோடுகள் முட்டிக்கொள்ள

எத்தனித்துக்கொண்டு

கண்களும் மூக்கும்

சரிவகமாய் கழுத்து

இணைகோடுகளால் உடல்

குச்சி குச்சியாய் கைகால்கள்

ஐந்து கோடுகளால் விரல்கள்

பக்கவாட்டிலும் நீளவாக்கிலும்

குறுக்கும் நெடுக்கும்

கோடுகள் ஓடி உருவாக்கிய வலை

இதயத்தைக் குறித்ததையும்

நெற்றிச் சுருக்கத்தில் துளிகளுடன்

காசு விழும் சத்தத்திற்காகக்

காதைத் திறந்து காத்திருக்கும் ஓவியனையும்

காணவில்லை என்பதாக செய்துகொண்ட பாவனைகளில்

என்னைப் பொருத்திக்கொள்கிறது அவ்வோவியம்.

Share

சூழற்கல்வி – கவிதை

 

தண்டவாளச் சரிவில்

மழையில் நமநமத்துச் சிதைந்த

மரக்கட்டைக்கூழில்

முளைத்திருக்கும்

பழுப்பு நிற நாய்க்குடைக்காளான்

புகைவண்டி கடக்கையில்

அதிர்ந்தடங்கி

அடுத்த அதிர்வுக்கு

வெளிர்மெலிக்காம்புடன் தயாராகிறது.

நாத்திகக்கேள்வி கேட்கும் விளம்பரச்சுவர்களில்

ஒட்டிக்காய்ந்த வராட்டியின் கைரேகை பார்க்க

ஜோதிடன் வேண்டியதில்லை.

“மலையும் மலை சார்ந்த இடமும்” பாடத்தில்

மஞ்சள் பூச்சுச் சுவருக்குள்

கனத்த புத்தகம் கையிலிருக்க

இரயிலும் இரயில் சார்ந்த இடமும் மறந்து

அதிர்காளான் அறியாமல்

கைரேகைக்கிழவியின் நிகழ்வாழ்வறியாமல்

தேர்வை எதிர்பார்த்து

நாள்கள் நகர்ந்துகொண்டிருந்தாலும்

மோசமொன்றுமில்லை,

அறியும் பின்னொரு நாளில்

அறியாததை அறிந்தமாதிரி

கவிதை எழுதுவார்கள்.

Share

கவனிப்பாரற்ற மூலை – கவிதை

எல்லா வீடுகளிலும் ஏதோ ஒரு மூலை

அதிகம் கவனிக்கப்படாமல்தான் இருக்கிறது

எந்தவிதக்காரணமுமில்லால்

எப்படியோ நிகழ்ந்துவிடுகிறது

சில புறக்கணிப்புகள்

வீட்டிற்குள் வரும் வண்ணத்துப்பூச்சி

மூலையில் ஒட்டிக்கொண்டபோது

வண்ணத்துப்பூச்சியைத் தொடர்ந்த மனம்

மூலையை மறந்துவிட்டதை உணர்கிறேன்

மூலையில் சிக்கும் காற்று

வீடு முழுதும் நிறையும்போதும்

மூலையைப் பற்றிய பிரக்ஞையில்லாமல்

காற்றைச் சிலாகித்தலோடு அடங்கிப்போகிறேன்

முன்பெல்லாமிருந்த ஒட்டடையும் சிலந்திக்கூடும்

இல்லாமல் ஒழிந்ததின் பின்விளைவு

இந்தக் கைவிடப்பட்ட மூலையென யூகிக்கிறேன்

இப்படியே விடுவதற்கில்லை

     கடிகாரம் மாட்டி வைத்து

     கவனிப்பைக் கூட்டலாம்

     (மூலை பெறும் கவனம் திணிக்கப்பட்டதாய் இல்லாமல்

     இயல்பானதாய் இருக்க விரும்புகிறேன்)

     நெடுநாளாய் முத்தம் தர மறுக்கும்

     பெண்ணை அம்மூலைக்குத் துரத்தி

     கைகளால் அணையிட்டு முத்தம் கொடுக்கலாம்

     (முத்த நினைவைத் தொடர்ந்து நீளும்

     நினைவுச் சுழியுள் மூலை முடங்கிப்போகும்)

     மூலையிலமர்ந்து

     வம்படியாய் ஒரு கவிதை எழுதலாம்

     (கிறுக்கல்களில் கவிதை சிக்கலாம்,

     மூலை சிக்குமென உறுதியில்லை)

தான் கண்டுகொள்ளப்படாததாக

இம்மூலை தானே உரக்கச் சொல்லும்வரை

திணிக்கப்படும் கவனிப்பைக் காட்டிலும்

இயல்பான புறக்கணிப்பே உசிதம்,

அதனால்தானோ என்னவோ

எல்லாவீட்டிலும் ஏதோ ஒரு மூலை

அதிகம் கவனிக்கப்படாமலிருக்கிறது

இயல்பாகவே.

Share

ரொட்டித்துண்டும் இட்லிப்பானையும் – கவிதை

 

உபயோகப்படுத்தாத பழைய இட்லிப்பானை

என் கற்பனையையும்

கவிதைப் பிரயத்தனங்களையும்

ரொப்பி வைக்கும் நெளிந்த சேமிப்புக்கிடங்காக இருந்த காலத்தில்

குடியேறின எலிகள் இரண்டு, இளமையானதும்

பெட்டையொன்றும் ஆணொன்றும் என்றறிந்தேன்

குஞ்சுகள் ஜனிக்கவும்.

பானையில் பரவிக்கிடந்த

வெற்றுக்கற்பனைகளை வெளித்தள்ளி

வெற்றிடத்தை ஸ்தாபித்து

சிரிப்பும் கும்மாளமுமாய்

சண்டையும் சச்சரவுமுமாய்

தன்னிடத்தை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டது எலிக்குடும்பம்

பொழுதுபோகாத ஒருநாளில்

நானே எதிர்பாராத இரக்க உணர்வு

பானையின்மீது படர்ந்த நிமிடத்தில்

இரண்டு ரொட்டித்துண்டுகளைப் போட்டுவைத்தேன்,

மறுநாள்

மீண்டும் என் கற்பனைகளை எதிர்பார்த்து

காலியாகக் கிடந்தது இட்லிப்பானை.

Share

தொகுப்பு – கவிதை

காற்றில் ஆடும் சிறிய வேப்பஞ்செடியின் பாத்தியில்

மீந்திருக்கும் சிறுநீர் வாடை

காற்றோடு கலந்தடிக்கும்போது

வேப்பஞ்செடிக்காக விசனப்பட்டு

அம்மா சத்தமாய் வெய்வாள், என்

மௌனச்சிரிப்பு காற்றில் கலக்கும்

தொடர் ஏச்சுக்குப் பயந்து

ஓடும் என் கால் சத்தம் கேட்டுப்

பரபரப்படையும் அணில்

திசை தெரியாமல் மரம்தேடி

செடிகளில் மோதிச் செல்ல, கோபிக்காமல்

சிரித்து ஆடிய செடிகள்

என்னைப்போலவே குழந்தைமை தொலைத்து இன்று மரங்களாய்.

வெள்ளையை மறைத்துக் கரும்புகை பீடித்துச்

சவாலாய் நிற்கும் வீட்டின் சமையலறைப் பின்சுவரில்

மாங்காய்க்கொட்டைக் கிறுக்கல்களில்

ஒருவன் கெட்டவார்த்தை சொல்ல

மற்றவன் கலவிப் படம் வரைய

பெயர் சொல்லாமல் என் காதல் சொன்னேன்

பதிலாய் எவனோ வக்கிரம் சொன்னான்

மறுபதில் இப்போதெழுத

பள்ளியில்லை; சுவரில்லை

படிக்க அவனில்லை; புரிய அவளில்லை

மேலும், அந்த நான் இல்லை

ஞாபகங்கள் உந்தித்தள்ள

வழியில் வீழ்ந்துகிடக்கும் காய்ந்த சருகுகளில் கண்கள் குத்தி

மெல்ல நடக்கின்றேன்

கைவிட்டுப் போன என் வீடு

வெளிச்சுவரில் புதிய கரிக்குச்சிப் படங்களோடும்

உட்புறச்சுவர்களில் மோதும் அந்தரங்க நினைவுகளோடும்

இன்னும் அங்கே இருக்கிறதாம்

இந்தக் கவிதை அமீரக அண்டுவிழா மலரிலும் வெளியாகியிருக்கிறது. ஆசிஃப்மீரானுக்கு நன்றி பல.

Share

பரணிக் கவிதை – 2

செவி வழி நிலம்

இது ஐ ஆர் எட்டுடே

அது ஐ ஆர் இருபதுடே

நல்ல சம்சாரிக்கு

புல்ல பாத்தாலே வித்தியாசம் தெரியுமுல்லா

அங் ங் ங் ங்க ஓடுதுல்லா…

அது பொது ஓட

ஓடைக்கடுத்தாப்ல உங்கப்பன் வயலு

கொழுந்துனா மலையடில

கோவணத்தக் கட்டிட்டு

கல்லுப்பொறுக்கி வெளயாண்டோம்

பஞ்சம் தாங்காம போயிட்டான்

மறுமாசமே வித்துட்டேல்லா?

பாத்துவாடே.. நெருஞ்சி கெடக்கும்

இன்னைக்கு நம்ம வரப்பு பச்சயா நிக்கி

ஆளப் பாத்துச் சிரிக்கி

காத்துள்ளபோதே தூத்துக்கோன்னான்

இப்பமே பாத்துக்கடே

பரணிக் கவிதை – 1

Share

பரணிக் கவிதை – 1

ஏட்டி

ஏட்டி!

நிம்மதியாக் கெடந்து நாளாச்சுட்டி

மனசத் தொறந்து சொல்ல

மறுகுதேன் முடியல

களத்துமேட்டுல சொல்லலாம்னா

கௌவிங்க இருக்குறாளுவோ

கெணத்துமேட்டுல சொல்லலாம்னா

கொமரிங்க குளிக்குறாளுவோ

நடுசாமத்துலச் சொல்ல வந்தா

நாய் கெடந்து கொலைக்குதுட்டி

ஆத்தாக்காரி முழிச்சிக்குறா

எழவெடுத்தவ

ஆயிரத்தெட்டு கேக்கா

கருக்கலில சொல்லவந்தா

அண்ணங்காரன்

மானமே வெளுக்கல

மசுரப்புடுங்கப் போறியாலங்கான்

கிராமத்துல பொறந்தவன் நா

கவிதயா சொல்ல முடியும்?

தேனெடுக்கேன் தெனமும்

தேனீக்க கொட்டுதுட்டி

வலிக்கல

ஓன் நெனப்பு நெதமும்

நெஞ்சில கொட்டுதுட்டி

தாங்கல

கேக்காம வெதச்சிட்டேன்

மரமா ஒசந்துட்டு

தூரப் போட முடியல

உசுரோட ஒட்டிகிட்டு

ஆத்துக்குள்ள குளிக்கயில

அயிர மீனு கடிக்கயில

கால் ஒதற மனசு வல்ல

ஒன்ன கடிச்ச மீனோ?

தொறந்து சொன்னாத்தானா?

சிரிக்கி

என் கண்ணப்பாத்தா புரியல?

இங்கிட்டு இம்புட்டுக் கிடக்கு

மனசுல அம்புட்டு இருக்கு

அங்கிட்டு எப்படியோ?

நெசமா சொல்லுதேன்ட்டி

நிம்மதியா கிடந்து நாளாச்சு

Share

CuSO4 கவிதை


தாதுகள் நீக்கப்பட்ட

மீத்தூய் நீரால் நன்கு கழுவி

நன்கு உலர்த்தப்பட்ட

ஒரு கண்ணாடிக் குடுவையை எடுத்துக்கொள்ளுங்கள்

10 கிராம் தாமிரசல்பேட்டை

துல்லியமாக நிறையிட்டு

குடுவைக்குள் இடுங்கள்.

1000 மில்லி லிட்டர் மீத்தூய்நீரைச் சேர்த்து

தூய கண்ணாடிக்குச்சியால் கலக்குங்கள்

இப்போது நீங்கள்

1% தாமிரசல்பேட் கரைசல் தயாரிப்பதில்

நிபுணனாகி இருக்கிறீர்கள்

ஊடுருவிச் செல்லும் ஒளியில்

நீல நிறத்தடம் மனதைக் கொள்ளை கொள்ளும் நேரத்தில்

குடுவைக்குள் செயற்கை கடல்

துள்ளும் மீன்கள், உயிருடன் சிப்பி

நீல மேற்பரப்பில் சூரிய எதிரொளி, அதில்

தரையிறங்கும் இறக்கை விரித்த கரும்பறவையென

பிணை நினைவுகளில் உங்களைத் தொலைக்காதிருந்தால்

பெருமை பட்டுக்கொள்ளுங்கள்…

நீங்கள் வேதியியல் உலகக்காரர்.


 
Share