Archive for கவிதை

கவிதை

கடவுளர்கள்

பலசரக்குக் கடையில்
கல்லாவில்
சிரிக்கும்
கரிய நிற ஊர்ப்பெண்

இளநீர் சீவும்போது
கண்ணில் விழுந்த தூசிக்காக
வருத்தப்பட்ட
இளநீர்க்கடைக்காரன்

பெட்ரோல் நின்றுபோய்
வண்டியை தள்ளிக்கொண்டு
வேர்க்க விறுவிறுக்க நடக்கும்
முகம்தெரியா மனிதனுக்கு
உதவும் இன்னுமொரு முகமிலி

புன்னகைத்தபடியே
ஸ்டாப் அட்டை காண்பிக்கும்
போக்குவரத்துக் காவல்காரர்

ஒன்றின் மீது
ஒன்றென அமர்ந்து
இறக்கை படபடக்கும்
புறாக்களைப் பார்த்து
வெட்கப்படும் சிறுமி

ஒரே நாளில்
தொடர்ச்சியாக
இத்தனை கடவுளர்களைப் பார்த்து
நெடுநாளாகிவிட்டதில்
இன்றே
உலகம் அழிந்துவிடும்
அச்சத்தில்

ஒரு வசவுக்காக
துரோகத்துக்காக
கேவலத்துக்காக
அதிர்ச்சிக்காக
உள்ளக் கொதிப்புக்காக
ஒரு துளி ரத்தத்துக்காக
காத்திருக்கிறேன்,
எல்லாம்
நொடியில்
இயல்பாகட்டும்.

Share

கவிதை

நம்பாதே

நம்பாதே என்றது அந்தக் குரல்
எப்போதும் என்னுடனே
என் நிழலென வரும் குரல்
நிஜத்தை மீறிய
நிஜமென ஆகும் ஒரு குரல்.
அப்படியே நின்றேன்.

உள்ளமெங்கும் புன்னகை ஒளிர
உதட்டில் ஒரு ஒளியை ஏந்தி
கைகள் இரண்டையும் விரித்தபடி
தழுவ வந்தார்கள்.

எழுதி எழுந்தி ஓய்ந்த கைகளுடன்
உலகம் முழுக்க அமைதியைப் பரப்பியவர்கள்
ஒரு பேனாவுடன் சில காகிதங்களுடன்
என் கை பிடித்து அழைத்துப் போக
அமைதியாகக் காத்திருந்தார்கள்.

உடல் தழுவி
இறுக்கிப் பிணைந்து
பாம்புகளென புரண்டவர்கள்
என் நலனுக்கென
தன்னைக் கொடுத்தவர்கள்
என்னைக் கடைத்தேற்ற
கண்களில் தாபத்தோடு பார்த்திருந்தார்கள்.

கையில் அட்சதையுடன்
கண்களில் நடுக்கம் தெரிய
உடலைத் தேங்கிப் பிடித்தபடி
ஓய்ந்து போய் நின்றிருந்தவர்கள்
எனக்காகவே நின்றிருந்தார்கள்

என்னை அழைத்துப் போவதாகச் சொன்னார்கள்
என்னை சரி செய்வதாகச் சொன்னார்கள்
எனக்கு வழிகாட்டுவதாகச் சொன்னார்கள்
என்னை ஆசிர்வதிப்பதாகச் சொன்னார்கள்
நானின்றிப் பிறிதொன்றில்லை என்றார்கள்.
பிறிதொன்றில்லாமல் நானில்லை என்றார்கள்.
எழுத்தும் தத்துவமும்
அன்பும் காமமும்
கண்களில் ஈரமும்
கைகளில் உறுதியும்
எல்லாம் எனக்காகவே என்றார்கள்.

கருவண்டின் வசீகரமென
புதைகுழியின் ஈர்ப்பென
எரிவிளக்கின் ஒளியென
சிலந்தி வலையின் விரிவென
நெடுஞ்சாலையின் இருளென
விலக்கமுடியாமல் விக்கித்து நின்றேன்.

உள்ளே இருந்து சொன்னது
அந்தக் குரல்,
நம்பாதே.

அக்குரலையும் சேர்த்தே
நம்பவில்லை என்றேன்.

எதைப் பிடித்துக்கொள்வது?
எதைப் பிடித்துக்கொள்வது?

அனைவரும் பார்த்திருந்தார்கள்.
காற்றில் பக்கங்கள் கிழிந்தன.
பேனாக்கள் உலர்ந்தன.
இன்னமும் நின்றுகொண்டிருக்கிறேன்.
அடுத்த அடிக்காகக்
காத்திருக்கிறது நிலம்.

Share

ஒரு கவிதை

அம்மாவுக்கான கவிதை

அம்மா இறந்த பின்பு
கனவில்
அடிக்கடி வருகிறாள்.
எடுத்த எடுப்பில்
எலே சாப்ட்டியா என்கிறாள்.
அவளுக்காக காத்திருக்கும்
ஒரு கவிதைக்கான
அலங்கார வார்த்தைகள்‌
அந்த நொடியே
இல்லாமலாகின்றன.

Share

ததும்பும் குவளை (கவிதை)

ததும்பும் குவளை

கால் நீட்டி பின்சாய்ந்து
சோபாவில் அமர்ந்திருக்கிறேன்
முன்னிருக்கும் டீப்பாயிலுள்ள
குவளையில்
ததும்பிக்கிடக்கிறது நீர்
அலை வரும், மீன் உழலும்
அருகில் அமர்ந்து பார்த்திருக்கிறான் அவன்.
அம்மா தன் பங்குக்கும்
மனைவி ஆசையுடனும்
மகனும் மகளும் 
உறவினர்கள் நண்பர்கள்
தொடர்ந்து குவளையில் நீரூற்ற
நிறைந்தும் நிறையாமல்
ததும்பிக்கொண்டே இருக்கிறது குவளை.
நீங்களா என்று கேட்டேன்.
சூழ நின்றொலிக்கும்
சத்தங்கள் நின்று
சட்டென நிசப்தமாக
நானும்தான் என்றவன்
தன் முறைக்காகக் 
காத்திருப்பதாகவும் சொன்னான்.

Share

பேருரு (கவிதை)

பேருரு

பாட்டி பேரனுக்குக் கதை சொல்லத் துவங்கும்போது
சட்டெனத் துளிர்க்கும் ஒரு வனமும்
அதில் சில தும்பிகளும்
அவற்றின் பின்னே ஓடும் பால்ய நானும்
கையில் சோற்றுண்டையுடன் துரத்தும் அம்மாவும்
இப்போதெல்லாம் வருவதே இல்லை

எப்போது சொட்டுமெனக்
காத்திருக்கும் நீரின் துளியோ
காற்றில் ஆடக் காத்திருக்கும்
மரத்து இலையோ
உடல் விதிர்க்கச் செய்யும் வனப்போ
எல்லாமே நானறியாமல்
என்னைக் கடந்திருக்கத்தான் வேண்டும்

கொந்தளிப்பிலோ
மகிழ்ச்சியிலோ
சோகத்திலோ
சிரிப்பிலோ
பெரும் கடல் அலையிலோ
நிசப்ததிலோ
ஒரு கணமும் நிலைக்கமுடிவதில்லை

எங்கோ ஏனோ காரணமின்றி
ஊர்ந்துகொண்டிருக்கும் எறும்புகள்
அடிக்கடி நினைவுக்கு வர
மனிதர்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறார்கள்
சிற்றுருவாய் மிகச் சிற்றுருவாய்.

Share

இரண்டு கவிதைகள்

கனவுகளின் விளையாட்டு

கனவுகளின் சிக்கலான வரைபடம் ஒன்றை
நானே வரைந்து
உள்ளே சென்றேன்
வரைபடத்தின் புள்ளிகளில் சிக்கித்
தொலைந்து போகுமாறு
விதித்துக்கொண்டிருந்தேன்.
சுவாரஸ்யமான விளையாட்டாக இருந்தது.
சிறிது நேரத்தில்
வெளியேறத் தெரியாமல்
விக்கித்து நின்றபோது
எதிரே தோன்றியவன் சொன்னான்,
இன்னொரு கனவிலிருந்து வந்தவன் என.
தன் கனவுக்குள் அழைத்துச் சென்றான்.
என் கனவுகளில் கொஞ்சம் எடுத்துக்கொண்டான்.
இரண்டு கனவுகளில்
எது யாருடையது என்ற குழப்பம் வந்த பொழுதில்
அவன் கனவுகளிலிருந்து வெளியேறியபோது
தூங்கிக் கொண்டிருந்த நான்
கண்விழிந்த்துச் சிரித்தான்.

2

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

கவிதை

இரவின் நீளத்தில்
எங்கெங்கோ செல்லும் நினைவுகளில்
ஒரு வாளேந்தி விரட்ட
முட்டுச் சந்தில் மாட்டிக்கொள்கிறான்.
கண்களில் கைகளில் உடலெங்கும் பயம் பரவ
ஒரு கணம் மின்னி மறைகிறது
துரோகங்களும்
வஞ்சகங்களும்
கேலிகளும்
அவமானங்களும்.
புரண்டு படுக்கும்
பிஞ்சுக் குழந்தையின்
உள்ளங்கை முகத்தில் பட
சிறு சூட்டில் அடங்கிப் போய்
வான் விட்டு மண் வீழ்கிறேன்
ஒரு மழைத் துளியென.

Share

கவிதை

தூக்கம் வராத கண்களின் வழியே
மலைகள் பெருகின
தாவரங்கள் செழித்தன
என்றோ எங்கோ பார்த்த முகமொன்றின்
துல்லிய நினைவில்
அப்பெண் சிரித்தாள்
நம்பிக்கைக்கும் துரோகத்துக்குமான
ஒத்திசைவுப் புள்ளியில் நின்றபடி
எல்லாவற்றையும் கலைத்துப்போடும்
அவனும் நகைத்து நின்றான்
ஒரு செல் உயிரினம் ஒன்று
குரங்காகி மனிதனாகியது
யுகங்கள் கடந்தோடின
ஏதோ ஒரு மழைக்காலம் பொய்த்தது
கடும் வெய்யிலில்
கருகி நின்றன வாழை மரங்கள்
உயிர்த்தெழும் ஒரு விதையொன்றில்
மெல்லக் கண்மூட
உலகம் இருண்டது.

Share